|
உள்ளூர் படைப்புகளை ஆக்கரமான முறையில் வளர்க்கும் முயற்சியில் சிங்கப்பூர்
தேசிய நூலக வாரியம் செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரின் நான்கு மொழி
எழுத்தாளர்களும் இடம்பெற்றிருக்கும் சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள்
கண்காட்சியை தேசிய நூலக வாரியம் முதலில் அமைத்தது.
அதன் அடுத்த கட்டமாக இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் பற்றிய விவரத்
தொகுப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது. இதில் முதல் முயற்சியாக சிங்கப்பூரின்
மூத்த தமிழ் எழுத்தாளர்களின் ஒருவரான அமரர் நா.கோவிந்தசாமி குறித்த
ஆய்வரங்கை நூலக வாரியம் அண்மையில் நடத்தியது.
படைப்பாளி ஒருவரின் படைப்புகள் பொது மேடையில் அலசி ஆராயப்பட்டு, பின்னர்
அக்கட்டுரைகள் தொகுப்பாக்கப் படுவது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத் துறைக்கு
புதிய முயற்சி. இந்த அரிய முயற்சிக்கு தேசிய நூலக வாரியம் அடித்தளம்
இட்டுள்ளது. “நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி’ என்ற தலைப்பில் சிங்கப்பூர்
தேசிய நூலக வாரியம் கடந்த 15.11.2009 ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கிற்கு
ஏற்பாடு செய்திருந்தது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நடைபெற்ற கருத்தரங்கில்
சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள்ஆய்வாளர்கள் பலர்
கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படைத்தனர். சிங்கப்பூரின் மூத்த தமிழ்
இலக்கியவாதிகளும் படைப்பாளர்களுமான டாக்டர் சுப திண்ணப்பன், திரு இராம
கண்ணபிரான், திரு பி. கிருஷ்ணன், திரு பாலபாஸ்கரன், முனைவர்
எம்.எஸ்.லட்சுமி, முனைவர் சீதாலட்சுமி, கவிஞர் அமலதாசன், திரு எஸ். மணியம்
மற்றும் மலேசியாவைச் சேர்ந்த முனைவர் ரெ. கார்த்திகேசு, முனைவர்
வே.சபாபதி, திரு. முத்து நெடுமாறன், ஆகியோர் அமரர் நா.கோவிந்தசாமியின்
சிறுகதைகள், நாடகங்கள், தொடக்ககால எழுத்துக்கள், ஆய்வுக்கட்டுரைகள்
பற்றியும் தமிழ்க்கணினித் துறை, தமிழ் ஆசிரியர் பயிற்சித் துறை,
எழுத்தாளர் கழகம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்கு குறித்தும் விரிவாக ஆய்வு
செய்தனர்.
திரு அருண் மகிழ்நன் கருத்தரங்க நடுவராக இருந்து வழிநடத்தினார். உள்ளூர்
இலக்கியவாதிகள் கவிஞர் மு. தங்கராசன், பொன். சுந்தராசு ஆகியோர்
நா.கோவிந்தசாமி பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக மூத்த செய்தியாளரும்
ஆய்வாளருமான திரு பால பாஸ்கரன் அவர்கள் வாசித்த "எது முதல் சிறுகதை?"
என்னும் கட்டுரை அமைந்திருந்தது. சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதை குறித்து
தமது கட்டுரைகளில், சிங்கப்பூரில் வெளிவந்த 1887-ஆம் ஆண்டு சிங்கை நேசன்
ஏட்டில் அதன் ஆசிரியர் திரு மகுதூம் சாகிபு எழுதிய ‘விநோத சம்பாஷணை’ என்ற
கதையே தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என அமரர் நா. கோவிந்தசாமி பல முறை
வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் 1924-அம் ஆண்டு
‘பொது ஜனமித்திரன்’ ஏட்டில் வெளிவந்த ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்னும்
கதையே சிங்கபூரில் வெளிவந்த முதல் சிறுகதை என்றும் மூத்த செய்தியாளரும்
ஆய்வாளருமான திரு பாலபாஸ்கரன் கூறினார். நா கோவிந்தசாமி 1994ல் பள்ளிகளில்
மாணவர்கள் பயன்படுத்துவதற்கென்று தனது கனியன் மென்பொருளுக்கு ஓர் அழகிய,
எழுத்தோவிய, தரம் வாய்ந்த தமிழ் எழுத்துருக்களை செய்து கொடுத்தார்
என்றும், முதன் முதலில் தமிழுக்கென்று மேம்படுத்தப்பட்ட தட்டச்சு
விசைப்பலகை நா கோவிந்தசாமியின் உருவாக்கம்தான் என்பதையும், அவர் ஒரு
சிறந்த கணித்தமிழ் தொழில்முனைவர் என்றும் திரு எஸ் மணியன்
வலியுறுத்தினார்.
திரு முத்துநெடுமாறன் 1986இல் தனக்கு நா கோவிந்தசாமியின் அறிமுகம்
கிடைக்கப்பெற்றது என்று கூறி, தங்கள் நட்பு வளர்ந்ததைப்பற்றி, கருத்துப்
பரிமாற்றத்தைப்பற்றி, குறிப்பாக விசைப்பலகை உருவாக்கம் பற்றி விளக்கினார்.
பயிற்சித் தமிழாசிரியர்களுக்கு படைப்பிலக்கியம் பற்றி குறிப்பாக உள்ளூர்
தமிழ் இலக்கியம் பற்றி அறிமுகம் ஏற்படுத்துவதில் நா.கோவிந்தசாமி ஆற்றிய
பங்கை விவரித்தார் முனைவர் சீதாலட்சுமி. தமிழ்ச் சூழலுக்கு அப்பால் தேசிய
நிலையில், எழுத்தாளர் வாரம், நான்கு மொழித் தொகுப்புகள் போன்ற பலவற்றிலும்
நா.கோவின் பணிகளை முனைவர் சுப. திண்ணப்பன் பட்டியல் இட்டார். சிங்கப்பூர்
தமிழ் படைப்பிலக்கியத்தை சிங்கப்பூருக்கு வெளியே, குறிப்பாக தமிழ்
நாட்டில் சிங்கப்பூர் எழுத்துகளுக்கு அறிமுகம் ஏற்படுத்துவதில் முக்கிய
பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி என முனைவர் சுப.திண்ணப்பன் கூறினார்.
“கருத்தரங்கில் பற்றி வாசிக்கப்பட்ட கட்டுரைகள் விரைவில் நூல் வடிவம்
பெறும்,” என்று குறிப்பிட்ட தேசிய நூலகத்தின் மூத்த அதிகாரி திருமதி
புஷ்பலதா கதிரவேலு, “எதிர்காலத்தில் சிங்கப்பூர் இலக்கியம் பற்றியும்
எழுத்தாளர்கள் பற்றியும் ஆய்வு செய்வோர்க்கு மிகவும் உதவியாக அமையும்,”
என்றார். “குணம் நாடி குற்றமும் நாடி தொகுப்பை இரு பக்கக் கருத்துகளுடன்
படைப்புகள் குறித்த ஆய்வை வெளியிடும்போது சமுதாயத்திற்கு சரியான பார்வைக்
கிடைக்கும். பயனுள்ளதாகவும் அமையும்,” என்றார் கருத்தரங்க நடுவராக இருந்த
கொள்கை ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநர் திரு அருண் மகிழ்நன்.
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் முன்னோடி
எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கிலும் இலக்கிய முன்னோடிகள்
பற்றிய கண்காட்சியை தேசிய நூலக வாரியம் அமைத்துள்ளது. தமிழ் இலக்கிய
முன்னோடிகளாக ந. பழநிவேலு, சிங்கை முகிலன், கா.பெருமாள், சே.வெ.சண்முகம்,
பி.கிருஷ்ணன், நா. கோவிந்தசாமி ஆகிய ஆறு எழுத்தாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 
 

அமரர் திரு நா கோவிந்தசாமி
தேசிய கல்விக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அமரர் திரு நா
கோவிந்தசாமி சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். வானொலி
நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். ‘தேடி’ சிறுகதைத் தொகுப்பை
வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு ஒன்றையும்
வெளியிட்டுள்ளார். தேசிய அளவிலான பல தொகுப்புகளுக்கு ஆசிரியராகப் பணி
புரிந்துள்ளார். தென்கிழக்காசிய எழுத்து விருது பெற்ற, நல்ல தமிழ்ப்
படைப்பிலக்கியங்களை சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய ஆர்வலர் குறிப்பாக
இளையர்களுக்குஅறிமுகப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டவர்.பல இளம்
எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர். தமிழ் மொழி, தமிழ் மொழிக் கல்வி,
படைப்பிலக்கியம் குறித்து பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.சிங்கப்பூர் தமிழ்
படைப்பிலக்கியத் துறை, ஆசிரியர் பயிற்சித்துறைகளில் குறிப்பிடத்தக்க
பங்காற்றி உள்ளவர் அமரர் திரு நா கோவிந்தசாமி. கணியன் என்ற மென்பொருளை
உருவாக்கிய இவர், இணையத்தில் தமிழைப் புகுத்திய முன்னோடி முயற்சிகளில்
ஈடுபட்டவர். தமிழ் இணைய மாநாட்டை கூட்டிய முக்கிய முன்னோடிகளில் ஒருவர்.
முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.
|
|