|
முகிலனும் முருங்கைப் பூவும்
தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள். கல்வியும், நாகரீகமாகிவிட்ட
வாழ்வியல் முறையும், எளிதாகிவிட்ட உலகத் தொடர்புகளும் எந்த வகையிலும்
அவர்களிடம் மாற்றம் கொண்டுவரவில்லை. திராவிட கழகப் பிண்ணனியில் பெரியாரைத்
தவிர்த்து அறிஞர் அண்ணா, கருணாநிதி, போன்றோருடைய அடுக்குமொழியும்
அலங்காரமுமான பேச்சில் உணர்ச்சி தூண்டப்பட்டு கொதித்தெழுந்த பரம்பரையின்
இரத்தத்தொடர்பு, நமது நாட்டிலும் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது.
இந்த மிகையுணர்ச்சிதான் தமிழர்களை வைத்து பணம் பண்ண நினைக்கும்
அரசியல்வாதிகளுக்கும், சினிமாக்காரர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும்
திறவுகோல். ஆழமாகச் சிந்திக்க விடாமல், தட்டையான பார்வையையும்,
கண்ணீரையும், வெற்று கோஷங்களையும் பெற உருவாக்கப்படும் அத்தனை சூழல்களும்
ஏதோ ஒரு வகையில் சுரண்டிப் பிழைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதை அண்மைய
சம்பவங்கள் தொடர்ந்து நமக்கு உணர்த்தியே வருகின்றன.
சின்னத்திரை ரசிகர்கள் தொடங்கி, டிக்கெட்டுக்காகத் தியேட்டர்களில்
விஜயையும், அஜீத்தையும் பார்க்க வரிசையில் நிற்கும் ஒவ்வொரு மலேசியத்
தமிழர்களின் மனங்களிலும் இருப்பது இந்த அதீதமான மிகை உணர்ச்சி போக்குதான்.
இந்த மனோபாவம் ஒன்று போதும் இன்னும் பல ஆண்டுகள் கற்பனையான ஒரு வாழ்வில்
மூழ்கிக் கிடக்க. இத்தகையதொரு சுரணையற்ற சமூகத்தைதான் உலகம் முழுதும் ஆளும்
வர்க்கம் எதிர்ப்பார்க்கிறது. எந்த எதிர்ப்பும் இல்லாத இந்தக் கூட்டத்தை
ஓட்டிச் செல்வது அவர்களுக்கு மிக எளிது.
காலம் காலமாகத் தமிழர்களின் இந்த உணர்ச்சித் தூண்டுதலைத் தவறாகப்
பயன்படுத்தி வந்தவர்களில் அண்மையில் முகிலனும் இணைந்திருக்கிறார். திரு.
சாமிவேலு சமுகத்திற்கு முறையாக பணியாற்றவில்லை என முகிலன் திடீரென
கஷ்டப்பட்டுக் கண்டுப்பிடித்தார். அவருக்கு மலேசிய இந்திய மக்கள் தொடர்ந்து
சுரண்டப்படுவதை நினைத்து இரத்தக் கண்ணீர் பொங்கியது. உடனே மக்களுக்காக
போராடுவதுதான் அரசியல்வாதியான தன் கடமை என உணர்வு வந்தது. மறத் தமிழனாக
பொங்கி எழுந்தார். ‘கேஸ்’ இயக்கம் கண்டார். ஏற்கெனவே நிறைந்துக் கிடக்கும்
அரசியல் கோமாளி கும்பலில் புதியவர் ஒருவர் வந்து விட்டார் என மக்கள்
எப்போதும் போல வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.
அரசியல் ரீதியான பெரிய அறிமுகம் இல்லாவிட்டாலும் அவரால் சில ஆயிரம் பேரைத்
திரட்ட முடிந்ததற்குப் பாராட்டிதான் ஆக வேண்டும். ஆனால் இடைத்தேர்தலில்
தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தில் இந்தக் கூட்டத்தைக் கூட்ட முனைந்த
முகிலன் இதற்கு முன் மலேசியத் தமிழர்களுக்கு அவ்வப்போது இந்நாட்டில்
ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு இத்தகைய முயற்சியில் இறங்கியிருந்தால்
ஆதரித்திருக்கலாம். (கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காது என்ற தயக்காமோ!)
உரிமைக்காகப் போராட்டம் என்பது எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும்.
அடிப்படை தமிழ்க்கல்வி பெறுவதிலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு, அரசு உபகாரச்
சம்பளம் என நமது தமிழ் மாணவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் அதன்
ஆக்கப் பூர்வமான செயல்திட்டங்களுக்கு வழிவகுக்கவும் வக்கில்லாமல் ஒரு தனி
மனிதனைப் பதவியிலிருந்து விலக்க தனது நேரத்தை மட்டுமல்லாது சில ஆயிரம்
பேரின் நேரத்தையும் வீணடித்த அவரிடம் பதவி ஆசையைத் தவிர வேறென்ன தார்மீகம்
இருந்துவிடப்போகிறது? அறச்சீற்றம் என்பது அவ்வப்போது மட்டும் வருவதா என்ன?
ஒருவேளை போராட்ட உணர்வு முகிலனின் இரத்தத்தில் ஊறியதென்றால், நாளையே
மற்றுமொரு இயக்கத்தை அவர் ஆரம்பிக்கலாம். அதற்கு ‘கேஸ்’ என்றோ ‘குசு’ என்றோ
அவர் விருப்பப்படி பெயரிட்டுக் கொள்ளலாம். ‘ஒவ்வொரு தமிழனும் தன்
பிள்ளையைத் தமிழ்ப்பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்’ எனும் அடிப்படை
கருத்திலிருந்து போராட்டத்தைத் தொடங்குவோம். ஒவ்வொரு தேசிய பள்ளிக்குச்
சென்று தமிழ்ப் பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்வோம். தமிழ்ப் படிக்கத்
தெரியாத ஒவ்வொரு தமிழ்த்தலைவரும் தமிழைக் கற்க வேண்டும் என முழக்கமிடுவோம்.
அவரோடு ‘முகவரி’யும் இணைந்து கொள்ளத் தயாராக இருக்கிறது. என்ன முகிலன்
தயாராக இருப்பாரா? (மன்னிக்க வேண்டும்... முகிலனுக்கு முதலில் தமிழ்
தெரியுமா?)
சின்ன வயதில் என் பாட்டியுடன் விளையாடும் ஒரு விளையாட்டு ஞாபகத்திற்கு
வருகிறது. அதில் பாட்டி கையைக் குத்திக்கொண்டே...
குத்து குத்து தாம்பாளம்
கோடாரி தாம்பாளம்
உன் அப்பா பேரு என்ன ? -என்பார்.
நான் என் அப்பாவின் பெயரைச் சொன்னால் பாட்டி இந்த விளையாட்டின்படி ‘அப்பா
பேரு முருங்கப்பூ’ எனக் கூற வேண்டும் என்பார். எனக்கு அப்பாவின் பெயருக்கு
பதிலாக ‘முருங்கப்பூ’ என்று கூற வேடிக்கையாகவும் அருவருப்பாகவும்
இருக்கும். ‘அப்பா’ எனும் கம்பீரமான படிமத்தின் மீது ஒரு
முருங்கைப்பூவெல்லாம் நானும் இருக்கிறேன் என சொந்தம் கொண்டாடுவது அசூயை
உணர்வை ஏற்படுத்தும்.
முகிலன் போன்றவர்களின் செயலும் அறிக்கைகளும் எனக்கு திரும்பவும் முருங்கை
பூவை நினைவு படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
|
|