இதழ் 23
நவம்பர் 2010
 

நேர்காணல்: 
“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”
இளங்கோவன்

 
 
 
  நேர்காணல்:

“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”

இளங்கோவன்



இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்:


அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி

இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!
கோ. முனியாண்டி

நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்

FLUSH - வெறுப்பின் குருதி
சு. யுவராஜன்

இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி



த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!
யோகி



அஞ்சலி:


ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்
ம. நவீன்



கட்டுரை:


மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!
ஏ. தேவராஜன்

அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்
சந்தியா கிரிதர்



சிறுகதை:


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கே. பாலமுருகன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...11
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



கவிதை:


இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...13

பா. அ. சிவம்

ரெ. பாண்டியன்

ஏ. தேவராஜன்




அறிவிப்பு:
 
வ‌ல்லின‌ம் ச‌ந்திப்பு 1
     
     
 

பகுதி 1

இளங்கோவனின் 'ஊடாடி' மற்றும் 'தலாக்' நாடகத்தின் காணொளி

ஊடாடி (புலிவேட்டை காட்சி) தலாக் (இறுதிக் காட்சி)

பல வண்ண வெடிகுண்டு கோலிகள் கொண்ட ஜாடியை ஒத்தவர் சிங்கை இளங்கோவன். அவரால் இருமொழிகளில் கவிதை, நாடகம், சிறுகதை எழுத முடியும். இலக்கிய மொழிப்பெயர்ப்பாளர், தொகுப்பாளர், பதிப்பாசிரியர். முக்கியமாக பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய ‘தலாக்’ போன்ற நாடகங்களின் நாடகாசிரியர், இயக்குநர், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், நாடக விரிவுரையாளர் என பல்முகங்களைக் கொண்டவர். மேற்கு ஆஸ்திரேலிய நிகழ்கலை அகாடெமியில், நாடக இயக்கத்தில் இளங்கலையும், லண்டனில் மிடல்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடக இயக்கத்தில் முதுகலையும் பெற்றவர். சிங்கப்பூர் அரசில் பல்வேறு பதவிகளில், குறிப்பாக கலைகள் நிர்வாகியாய் இருந்தவர். தற்போது ‘அக்கினிக்கூத்து’ நாடகக் குழுவின் கலை இயக்குனராக இருக்கிறார்.

1979-ல் ‘விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து’ என்ற கவிதைத் தொகுப்போடு தொடங்கிய அவருடைய கவிப்பயணம், 1984-ல் ‘மெளனவதம்’ தொகுப்பிலும், 1988-ல் ‘டிரான்ஸ்கிரியேஷன்‘ இரு மொழியாக்கத் தொகுப்பிலும் தொடர்ந்து பயணித்தது. பிறகு நாடகங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியவர் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி இயக்கி மேடையேற்றியுள்ளதோடு 11 நாடகத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பல்வேறு தேசியக் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளார். சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ரொமேனியா, வெனிசுவேலா என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய, நாடக மாநாடுகளில் கலந்துகொண்ட நெடிய அனுபவமிக்கவர். 1997-ல் தாய்லாந்தில், தென்கிழக்காசிய இலக்கிய விருது, அவரின் இருமொழி கவிதை, நாடக தொடர் கலைப் பணியைப் பாராட்டி வழங்கப்பட்டது.

இளங்கோவன், தன் முக்கிய கலை முத்திரையை நாடகங்கள் வாயிலாகத்தான் பதித்திருக்கிறார் என்றால் மிகையில்லை. 1991-ல் அவர் தோற்றுவித்த அக்கினிக்கூத்து மூலம் தொடங்கிய அவரது நாடக பிரவேசம் இன்றும் பல தடைகளைத் தாண்டி ‘மியாவ்’ நாடகம் வரை கம்பீரமாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளங்கோவனின் நாடகங்கள் வெறும் கேளிக்கையைத் தூண்டுபவையல்ல. பார்வையாளனைச் சிந்திக்கத் தூண்டுவதோடு, வாழ்வின் சமரசங்களுக்குத் தலைசாய்த்து மரத்துப்போன மனங்களைப் பெரிதும் சங்கடப்படுத்துபவை. மறுபரிசீலனையைக் கோருபவை. மனிதத்தின் தடித்த தோல்களை தயவு தாட்சண்யமில்லாமல் கீறி சிகிச்சைப் பார்ப்பவை. அதிகாரங்களுக்குக் கொஞ்சமும் அடங்காமல் மாற்றங்களுக்காக உரக்க கர்ஜனை எழுப்புபவை. சமரசமின்மையின் சம்பளமாக தூற்றுதல், ஒதுக்கப்படுதல், படைப்புக்குத் தடைவிதிக்கப்படுதல், பொருளாதார இழப்புகள் யாவையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் சிங்கை இளங்கோவனை நேர்காணலுக்காக ‘வல்லினம்’ அணுகிய போது, கொஞ்சம் தயங்கிய பின் ஒப்புக்கொண்டார். கண்ணி வெடிகள் நிறைந்த வெளியில் அவருடைய பயணம் வெப்பம் மிகுந்த வார்த்தைகளுக்கு வழிகோலுகிறது. இனி அவருடைய நேர்காணல்...


கேள்வி: கவிதையில் தொடங்கிய உங்கள் பயணம் நாடகத்துறையில் வீரியம் கண்டுள்ளது. நிச்சயம் இஃது அபூர்வமானது. எழுதுவதற்கும் இயக்குவதற்குமான பரிணாமத்தைப் பற்றி கூறுங்கள்.

பதில்: இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கவிதைக்கும் நாடகத்திற்கும் எப்போதுமே நெருக்கம் அதிகம். மரபுக் கவிதைகளில் தொடங்கி மரபை மீறிய கவிதைகளில் தொடர்ந்து வரும்போதே நான் வானொலிக்கும் மேடைக்கும் நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையையும் புனைகதையையும் கடந்து விடயங்களை அதிக வீச்சுடன், உடனுக்குடன் வெளிப்படுத்தும் ஆற்றல் நாடக வடிவத்துக்கு இருப்பதைக் கண்டுகொண்டேன். அதிலும் நான் ஏற்கெனவே மாணவப் பருவத்தில் சிங்கப்பூர் வானொலியில் பி. கிருஷ்ணனின் (புதுமைதாசன்) தயாரிப்பில் உருவான மாணவர் மேடை நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதைகளையும் கதைப்பாடல்களையும் (Lord Byron, Samuel Taylor Coleridge, Matthew Arnold) தமிழில் நாடகமாக்கி இருந்ததால், அந்த அனுபவம் நல்ல எழுத்துப் பயிற்சியாக அமைந்தது. 1975 செப்டெம்பரில், பழைய டிராமா சென்டரில் (Drama Centre, Fort Canning) ஆங்கிலக் கவிஞன் பைரனின் சில்லோனின் கைதி (Prisoner of Chillon) என்னும் கவிதையை இருபது நிமிட மேடை நாடகமாக்கி, அதை ஒரு மசாலா தமிழ் ஆடல் பாடல் கலைநிழ்ச்சியில் ஓர் அங்கமாக, காலஞ்சென்ற உதுமான் கனியை இயக்கி நடிக்கவைத்தேன். அதுவே என் முதல் மேடை நாடகம். இலக்கிய வரலாற்றைப் பாருங்கள். மிகச்சிறந்த கவிஞர்களே நாடகாசிரியர்களாய்ப் பரிணமித்துள்ளார்கள். சில உதாரணங்கள்: காளிதாசன், ஷேக்ஸ்பியர் (Shakespeare), பிரெக்ட் (Brecht), லோர்கா (Lorca) போன்ற கலைஞர்கள். கவிதைக்கு உயிரூட்டுவதில் உள்ள அர்த்த இறுக்கமும் சொற்சுருக்கமும் சார்ந்த அணுகுமுறைகள் நாடக வசன உருவாக்கத்துக்கு மிகவும் கைக்கொடுக்கின்றன எனலாம். என் அனுபவத்தில், ஒரு கவிதை எழுதுவதைவிட ஒரு நாடகத்தைப் படைப்பதென்பது இன்னும் கொடூரமான கலாவேதனை தரக்கூடியது. பொதுவாக நாடக அரங்கேற்றத்தில் இரு கலைஞர்களின் பங்கு இருக்கும். நாடகத்தை எழுதுபவர் ஒருவராகவும், நாடகத்தை இயக்குபவர் வேறொருவராகவும் இருப்பர். எழுத்தாளரின் நாடகப் பிரதியிலிருந்து (Text) புதிய ஆட்டப் பிரதியை (Performance Text) உருவாக்கும் நாடக இயக்குனர், நாடக ஒத்திகையின்போது எழுத்தாளரை அறவே அனுமதிக்கவேமாட்டார். அப்படி வலிந்து நாடக எழுத்தாளர் உள்ளே அமர்ந்தால், அவரது பிரதி கண்முன்னால் கட்டுடைப்புக்குள்ளாவதைக் காணச் சகிக்காமல் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும்.

மேற்கில், பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நாடக எழுத்தாளரே நாடகத்தின் இயக்கத்தையும் கவனித்துக்கொண்டார். பிறகு, இயக்குனர் என்ற கலைஞரின் வருகையால் உலக நாடக அரங்கின் போக்கே மாறிப்போனது. இயக்குனரின் குரல் ஓங்க, எழுத்தாளர் பேசாமல் ஒதுங்கிக்கொள்ளவேண்டிய சூழல் உருவானது. அதே சமயத்தில், ஒரே நாடகப் பிரதி, பல்வேறு இயக்குனர்களின் பார்வையில் விதவிதமான அவதாரங்கள் எடுக்க ஆரம்பித்தன. எழுத்தாளருக்கும் இயக்குனருக்கும் இடையே நடக்கும் போர் இன்னும் தொடர்கின்றது. சேமுவல் பெக்கெட் (Samuel Becket) , தன் நாடகங்கள் எப்படி எந்த ஒரு சிறு மாற்றமும் இல்லாமல் இயக்கப்படவேண்டும் என்று இயக்குனருக்கான கட்டளைகளை ஒவ்வொரு நாடகப் பிரதியிலும் எழுதிவைத்துச் சென்றுள்ளார். அதை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்சனை எனக்குக் கிடையாது. என் நாடகப் பிரதியை நான் உருவாக்கும்போதே அதன் அனைத்துப் பரிமாணங்களையும் உள்வாங்கி ஆட்டப் பிரதியாகவே தயாரித்துவிடுகிறேன். என் படைப்பாக்கத் திறனையும் மீறி, நான் பெற்றிருக்கும் நாடக இயக்க அனுபவம், ஆஸ்திரேலியாவிலும், இலண்டனிலும், ஸ்பெயினிலும் நாடக இயக்கத்துக்காகப் பெற்ற இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் முறையான பயிற்சிகளும் இதற்கு உதவுகின்றன. நடிகர்களைத் தவிர யாரையும் நம்பி நான் என் நாடகத்தை அரங்கேற்றுவதில்லை. ஒலி ஒளி அமைப்பு, அரங்க அமைப்புச் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பெரும்பாலும் நானே கவனித்துக்கொள்வதால் பணச்செலவும் நேரமும் மிச்சம். என் படைப்புகளை நான் கலை இயக்குனராக இருக்கும் ‘அக்கினிக் கூத்து’ குழுவே அரங்கேற்றுவதால் வேறு எந்த அமைப்பையும் அண்டி வாய்ப்புக்குச் சலாம் போட வேண்டிய அவலமும் இல்லை. என் நடிகர்களில் பெரும்பாலோர் நான் நாடக விரிவுரையாளராக இருந்தபோது என்னால் பயிற்றுவிக்கப்பட்டு ஆங்கில நாடகத்துறையில் டிப்ளோமா வாங்கியவர்கள். ஆகையால், அவர்களை இயக்குவது மிக எளிது. நான் எதிர்பார்ப்பதை மிகச் சுலபமாகக் கிரகித்துக்கொண்டு நடிக்கிறார்கள்.

கேள்வி: இவை அனைத்தும் நாடகத்தின் புறச் செயற்பாடுகள். இவற்றுக்கும் அப்பால் எழுதுவதற்கும் இயக்குவதற்குமான பரிணாமம் குறித்துக் கூறுங்கள்.

பதில்: எங்கோ, என் கண்முன்னோ, என்னைச் சுற்றியோ நிகழ்பவை, நான் உணர்வாலும் அறிவாலும் தெரிந்தும் புரிந்தும் கொள்பவை அனைத்தும் என்னைப் பாதிக்கும்போது என்னுள் ஏற்படும் சலனங்கள், கேள்விகள், தர்க்கங்கள், அறச்சீற்றங்கள் ஒரு தீப்பொறியாய் உருண்டு திரண்டு எரியும். அப்போது அதன் உள்ளடக்கத்தைப் பொருத்து அதன் நாடக உருவத்தைத் தீர்மானித்துக் கொள்வதோடு, காட்சிகளையும் மனத்தில் அசைபோட்டுச் செப்பனிட்டு முழு வடிவமும் தயாரானவுடன் எழுத ஆரம்பிக்கிறேன். ஆற்றொழுக்காகவும் எழுத முடியாது. எழுதும்போதே மனம் இயங்கவும் செய்வதால் அடித்துத் திருத்தி பரமபதம் விளையாடி ஜெயிக்கவேண்டும். உண்மையில் நாடக இயக்கம் என்றால் என்ன என்று யாரும் யாருக்கும் கற்றுத்தர முடியாது. உலக இயக்குனர்களின் அணுகுமுறைகளையும் கோட்பாடுகளையும் பற்றிய விமர்சனக் கருத்துப் பரிமாற்றங்களும், மேற்கத்திய கிழக்கத்திய நாடக ஆய்வுகளும் பல தரிசனங்களைத் தரலாம். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட கலைத் திறனே அவரை இயக்குனராக்குகிறது. அதனால், மூளையைக் கலங்கடிக்கும் நாடக இயக்கத்தைவிட, வெறும் உடல்மொழி ஆக்கத்தில் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய நடிப்புத் துறையையே பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். நாடக இயக்கத்தில் பட்டம் பெற்றும், பலருக்கு அவர்களின் கல்வியறிவும் பயிற்சியும் அரங்கத்தில் உதவாமல் தோற்றுப்போவது வாடிக்கை. லௌகீக வாழ்வின் உரசல்களிலும் நெரிசல்களிலும் தளர்ந்துபோனாலும், எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.

கேள்வி: ஆஸ்திரேலியாவில் இளங்கலை படித்த போது அகஸ்தோ போவாலை (Augusto Boal) சந்தித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: இந்நூற்றாண்டின் மாபெரும் கலைஞர் அகஸ்தோ போவால். நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவர் கடந்த வருடம் மே மாதம் இரண்டாம் தேதி காலமானது மிகப்பெரிய இழப்பு. ஒடுக்கும் அதிகாரவர்க்கத்தினை எதிர்க்க அவர் உருவாக்கிய ஒடுக்கப்பட்டோர்க்கான (Theatre of the Oppressed) அரங்கு இன்று பல நாடுகளில் தீவிரமாக இயங்கிவருகிறது. இன்று பரவலாக அறியப்படும் வீதி நாடகம் (Street Theatre), கல்விசார் நாடகம் (Theatre-in-Education) போன்ற நாடக வகைகள் அவருடைய பயிற்சி முறைகளை அடியொற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கு மார்க்சிச சித்தாந்தத்தில் வேர்கொண்டுள்ளதால் பல நாடுகள் அவருடைய நாடக வடிவத்துக்குத் தடைவிதித்துள்ளன. இதில் ஆசியான் நாடுகள் அனைத்தும் அடக்கம் என்றாலும் சிங்கப்பூரில் தற்போது அரசியல் கலக்காமல், சர்ச்சை இல்லாத சமூகக் குடும்பப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட கருவைக்கொண்ட ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கின் ஒரு முக்கியக் கூறான Forum Theatre வடிவத்துக்கு அனுமதி உண்டு. அனுமதியும் நாடக எழுத்துவடிவத்தின் தணிக்கைக்குப் பின்னரே கிடைக்கும். இது வெட்கக்கேடு. அரசாங்கத்திடம் நிதி வாங்கிக்கொண்டு ஒரு சீன நாடகக் குழுவும், ஓர் ஆங்கில நாடகக் குழுவும் இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன. சத்தியமாக ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கு எழுத்துப்பூர்வமான மரபார்ந்த நாடக அரங்குக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கில் பார்வையாளர்களே நடிகர்களாக மாறி சமூகப் பிரச்சனைகளை விவாதித்து விழிப்புணர்வு பெறுவார்கள். ஜோக்கர் (Joker) என்னும் சூத்ரதாரியின் மேற்பார்வையில் ஒருசில முறையான நடிப்புப் பயிற்சி பெற்ற நடிகர்கள் ஒரு காட்சியை நடித்துக் காட்டுவார்கள். அந்தப் பிரச்சனைக்கான தீர்வைப் பார்வையாளர்களில் யார் வேண்டுமானாலும் முன்வந்து மீண்டும் நடித்துக் காட்டலாம் அல்லது நடிகர்களை நடிக்கச் சொல்லலாம். இந்நிலையில் பிரச்சனையின் பன்முகம் ஆழமாக அலசப்படுகிறது. காட்சிக்குச் சம்பிரதாயமான வசன எழுத்துப்படிவம் எதுவும் கிடையாது. அவர்கள் பிரச்சனையைக் கையாண்டவிதம் சரியில்லை என்று கருதும் பார்வையாளர் முன்வைக்கும் கருத்துக்கேற்ப நடிகர்கள் அதே காட்சியை வேறுவிதமாக நடித்துக் காட்டுவர். இப்படியே அரங்கில் பார்வையாளர்களின் குறுக்கீடுக்கேற்ப பிரச்சனையின் முகம் மாறும். ஜோக்கர் அரங்கின் நிலைமை கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். முடிவில் பார்வையாளர்கள் வெறுமனே நாடகம் பார்த்து இரசித்து மறந்து வீட்டுக்குப் போகாமல் சமூக மாற்றத்தைக் கொண்டுவருபவர்களாய்ச் சக்தி பெற்று மாறுகிறார்கள். இந்தச் சுதந்திரம் எழுத்துப் பிரதி உள்ள நாடகத்தில் கிடையாது. ஒவ்வொரு ஜனநாயக விரோத அரசாங்கமும் அஞ்சும் வடிவம் இது.

அகஸ்தோ போவாலின் கூற்றுப்படி ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கு என்பது புரட்சிக்கான ஒத்திகை ஆகும். 1995-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகஸ்தோ போவால் Brisbane வந்திருந்தார். அவரிடம் நேரடிப் பயிற்சி பெறுவதற்காக ஆஸ்திரேலியா முழுதும் இருந்து வந்த விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது பேர்களில் நானும் ஒருவன், அதிலும் ஒரே தமிழன். பயிற்சி முகாம் கிரிப்பித்ஸ் (Griffiths) பல்கலைக்கழகத்தில் நடந்தது. முழுச் செலவையும் நான் பயின்ற மேற்கு ஆஸ்திரேலியா நிகழ்கலை அகாடமி (Western Australian Academy of Performing Arts) ஏற்றுக்கொண்டது. நான் என் மானசீக குருவிடமே வித்தையைக் கற்றுத் தெளிந்தேன். அந்தக் கலைஞனின் ஆளுமையும் எளிமையும் என்னை ஆட்கொண்டன. பயிற்சி நேரம் போக அவருடன் அளவளாவியது, ஒரு ஞானவேள்வியில் குளித்து எழுந்த அனுபூதியானது. பிரேசிலில் (Brazil), Rio de Janerio -வில் அவர் தோற்றுவித்த ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்குடன் சேர்ந்து, ஒடுக்கப்பட்ட சேரிவாழ் மக்களுடன் பணியாற்ற அழைத்தார். அதற்கு முன் போர்த்துக்கீசிய மொழியைக் கற்றுக்கொள்ளச் சொன்னார். பெர்த்துக்குத் (Perth) திரும்பியதும், போர்த்துக்கீசிய மொழியைக் கற்கத் தொடங்கியபோது, இலண்டன் மிட்டல்செக்ஸ் (Middlesex) பல்கலைக்கழகத்தில் உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துலக இயக்குனர் துறையின் (International Directing Programme) முதுகலைப் பட்டப்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வாழ்க்கை மாறிப் போனது. இலண்டனுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்த எரிச்சலடையவைக்கும், வருத்தமளிக்கும் தமிழ் வெளியை விட்டு எட்டிப் போயிருப்பேன். என்னால் ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூரில் நிலைநிறுத்த முடியாமல் போனாலும், இன்று அகஸ்தோ போவாலின் கையெழுத்தைச் சுமந்த அவரது நூல்களும் அவரோடும் அவர் மனைவியோடும் நான் எடுத்துக்கொண்ட படமும் விலைமதிப்பில்லாப் பொக்கிஷங்களாய் என் நூலகத்தில் வீற்றிருக்கின்றன. ஒவ்வொரு காத்திரமான படைப்பும் எப்பொழுதும் வெடிக்கக் காத்திருக்கும் புரட்சியின் வித்து என்பதை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

கேள்வி: தன்னளவிற்குச் சர்ச்சைக்குரியவரை நினைத்துப் பார்க்கும்போது சாரு நிவேதிதாவிற்கு அகஸ்தோ போவல்தான் ஞாபகத்திற்கு வருகிறார். தென் அமெரிக்காவையே கரைத்துக் குடித்திருக்கும் சாரு உங்களை அறியாமல் இருக்கமாட்டார். இத்தகையத் தமிழகத்து உதாசீனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்?

பதில்: சாரு அகஸ்டோ போவாலைச் சந்தித்திருக்கமாட்டார். நான் நேரடிப் பயிற்சி பெற்றவன். அகஸ்டோ போவால் சாருவின் நினைவிற்கு வருவது அவரது தனி உரிமை. நான் சாருவின் எழுத்துகளை விரும்பிப் படிக்கிறேன்; மிகவும் இரசிக்கிறேன். அவரது பன்னாட்டு இலக்கிய இரசனை குறித்த கருத்துகளோடு ஒத்துப்போகிறேன் (அவ்வப்போது அவர் தெரிந்தோ தெரியாமலோ அடிக்கும் ‘பல்டி’களைத் தவிர). முக்கால்வாசி தமிழ்நாட்டுத் தமிழ் எழுத்தாளனின் சமரசமிக்கத் தொடைநடுங்கி வாழ்க்கைக்கும், அவன் இல்லாத மசிரைத் தூக்கிக்கொண்டு கிறுக்கித்தள்ளி ‘நானே ராஜா, என் குசுவே மந்திரி’ என்று ஸ்கலிதம் அடையும் அவனது எழுத்துக்கும் இடையே உள்ள அருவருக்கத்தக்க அதலபாதாளத்தைப் பற்றிய சாருவின் பார்வையோடும் உடன்பாடுதான். சாருவுக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. முதலில், சாருவுக்கு என்னைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அவர் படைப்புலகம் மட்டுமே பரிச்சயம். தென் அமெரிக்க இலக்கியங்களை மட்டுமல்ல, ஏனைய உலக இலக்கியங்களை நானும் அளவோடு கரைக்காமல் விழுங்கியிருக்கிறேன். ஒருவரின் வாசிப்புக்கு நிறைய உழைப்புத் தேவை. சரியான வாசிப்பு நம் இலக்கியப் பரப்பையும் பார்வையையும் விரிவாக்கும். நாம் இதுநாள்வரை எழுதியது எல்லாம் எழுத்தா என்று நம்மையே குடைந்து கூனிக்குறுகச் செய்யும். தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் அருட்பார்வையில்தான் இலக்கிய மோட்சமே கிடைக்கும் என்று இன்னும் நம்பிக்கொண்டு அவர்களின் எழுத்துகளையும் சொல்லாடல்களையும் நகலெடுத்துக் கவிதை, சிறுகதை என்று வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியக் குதநக்கிகள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் உதாசீனத்தைத் தாங்கமுடியாமல் மலஜலம் கழிக்கமுடியாமல் அவதிப்படக்கூடும்.

ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1989 முதல் சிங்கப்பூர் அரசின் இலக்கிய விருந்தினர்களாய்த் தமிழகத்திலிருந்து வந்த கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி (காலஞ்சென்ற), செ.ரவீந்திரன், அசோகமித்திரன், கா.சிவத்தம்பி, ஞானக்கூத்தன், ஜெயகாந்தன், எஸ். பொன்னுத்துரை, பிரபஞ்சன், அம்பை, நீல பத்மநாபன் ஆகியோர் நண்பர்கள்தான். நல்லவேளையாக நான் இவர்களில் யாருக்கும் தொண்டனாகி என்னைப்பற்றி தமிழ்நாடு இதழ்களில் எழுதுங்கள் என்று சாஷ்டாங்கமாய்க் காலில் விழவில்லை. அப்படி என் தன்மானத்தை அன்றே ஏலம் விட்டிருந்தால், எனக்கும் மானங்கெட்ட மந்திகள் ஆளும் தமிழ்நாட்டில் மாலையும் மரியாதையும் தங்கத்தாலான கெளபீனமும் தாராளமாய்க் கிடைத்திருக்கும். சுந்தர ராமசாமி, சிங்கப்பூர் இலக்கியத்தைப் பற்றி அன்றைய காலச்சுவட்டில் எழுதக்கேட்டும் என்னால் வாய்கூசாமல் திட்டத்தான் முடியும் என்பதால் எழுதவில்லை. நான் அறியாமலேயே என் நாடகங்களைப் பற்றி பல இலக்கிய ஆய்வரங்குகளில் ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர் முனைவர் செ.ரவீந்திரன் என்பது கூட காலங்கடந்தே தெரியவந்தது. கூத்துப்பட்டறை ஒரு தொழில் முறை அமைப்பாகிவிட்டதாலும், அதன் நிர்வாகிகள் சமூகத்தின் பெரியமனிதர்கள் ஆனதாலும், அங்கு என் சர்ச்சைக்குரிய நாடகங்களை அரங்கேற்றுவது பண்பல்ல. 2003-இல் ஊடாடி நூல் வெளியீட்டின் போது, ஒரு நூற்றாண்டு கால மலேசியா சிங்கப்பூர்த் தலித்துகளைப் பற்றிய அந்நூல் தமிழகத் தலித்துகளுக்கு எதிரானது என்று திருமாவளவன், ரவிக்குமார், டாக்டர் குணசேகரன் சார்ந்த கும்பல், அடியாட்கள் அனுப்புவோம் என்று கூத்துப்பட்டறையைத் தொலைபேசியில் மிரட்டியதால், நிகழ்ச்சியைப் பாதுகாவலர்களோடு ஹோட்டலில் நடத்தவேண்டியிருந்தது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் தாரகமந்திரமாயக் கொண்ட தமிழகத்தில், நான் சந்தித்த, பழகிய பல இலக்கியவாதிகள் இன்றும் அரசியல் கழைகூத்தாடிகளின் குறட்டைச் சத்தத்திற்கு கூட ஆடாமல் அசையாமல், கலகக்கார முகமூடியணிந்து கரவொலிக்காக அந்தரநடை நடந்துகொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. ஏப்ரல் 1999 -இல், சிங்கப்பூர் சீன எழுத்தாளர் கழகமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மையமும் இணைந்து ஏற்பாடு செய்த நான்கின இலக்கியப் பயணத்தில் பங்கேற்று சீனாவின் ஐந்து நகரங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை வாசித்த அனுபவத்துக்கு முன் தமிழகத் தரிசனங்கள் துச்சம். எனவே, கீர்த்தனாரம்பத்தில் சொல்லியதுபோல், தமிழ்நாட்டு உதாசீனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது. எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை. ஏமாற்றமும் இல்லை.

கேள்வி: உரத்துச் சிந்திக்கும்போது நாடக அமைப்பில் கலையுணர்வு பாதிக்கப்படும் ஆபத்தை எப்படி எதிர்க்கொள்கிறீர்?

பதில்: இதை ஓர் அதிவேக ஃபெர்ராரி (Ferrari) காரை மலைச்சிகரத்தை நோக்கி வளைந்து செல்லும் சாலையில் ஓட்டுவதற்கு ஒப்பிடலாம். உரத்த சிந்தனை என்பது முரட்டுக் குதிரை போல் திமிறும். அடக்காவிட்டால், கலைப் படைப்புப் பிரச்சார நெடியால் நாறிப்போய்விடும். நாடக அமைப்பில் தேவை இல்லாத சொற்கள், வாக்கியங்கள் வரக்கூடாது. அவை எவ்வளவு அழகாக இருந்தாலும் இரக்கமில்லாமல் நிராகரிக்கப்படவேண்டும். நாடகப் பிரதி, கவிதை புனைகதையைப்போல் வெறும் வாசிப்புக்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அது பன்முகம்கொண்ட சீரிய ஆட்டப் பிரதியாகவும் மாறவேண்டியுள்ளது. அப்போது எவ்வித உரத்த சிந்தனையும், நாடகீயத் தன்மையோடுதான் சொல்லப்படவேண்டும். ஒரு செய்தியையோ தகவலையோ தெரிவிக்கும் நடிகர், வசனத்தை இயக்குனரின் உதவியோடு கட்டுடைத்து ஜீரணித்து, அதற்குத் தன் உடல்மொழியாலும், உச்சரிப்பாலும் உரமேற்றி வெளிப்படுத்தவேண்டி இருக்கின்றது. இதை நடிகர் உணர்வோடு வழங்கும்போது, பின்னணியில் ஓலி, ஒளி அமைப்பு, மேடை வடிவமைப்பு, இசை, உடை முக அலங்காரம், மேடையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கவனத்தில்கொண்டே அசைகிறார், பேசுகிறார், பல்வேறு மனநிலைகளைக் காட்டி அசத்துகிறார். நடிகரின் நடிப்புக்கான தேவை நாடக வடிவத்துக்கேற்பவும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, ஒரு நேரடியான யதார்த்த பாணி நாடகத்தில் நடிப்பதற்கும், பின் நவீனத்துவ நாடகத்தில் நடிப்பதற்கும் வேற்றுமைகள் அதிகம். யதார்த்த பாணி நாடகத்தில் இரு பாத்திரங்கள் உரையாடுவதை நாம் சற்று இலகுவாகப் புரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. இந்த நேர்க்கோட்டு கதைசொல்லும் பாணி பின் நவீனத்துவ அல்லது அபத்த நாடகங்களில் அறவே இல்லாததால், பார்வையாளரின் புரிதலுக்கு அதிக வேலை இருக்கலாம். ஒரு நடிகர் அரங்கில் நம் முன் சுழன்றுகொண்டே இருக்கையில், முன்பே பதிவு செய்யப்பட்ட அவரின் பெரிய முகம் அகன்ற திரையில் தோன்றி நம்மைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கலாம்; திட்டித் தீர்க்கலாம். கண்முன் உயிருள்ள நடிகரும் திரையில் காட்டப்படும் அதே நடிகரின் பிம்பமும் ஒருசேர நம்மை அலைக்கழிக்கும் அனுபவம் வித்தியாசமானது. இன்று நவீன தொழில் நுட்பம் நாடகத்தின் போக்கையே திசை திருப்பி பார்வையாளரை இரசனை மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. இதனால், இயக்குனருக்கு அதிக வேலை இருக்கிறது. என்னுடைய நாடகங்களில் நான் எதையும் பிரச்சாரம் செய்வதில்லை. கனமான விடயங்களைக்கூட கலை நேர்த்தியோடு வெளிப்படுத்துவதில் கவனமாக இருப்பதால், கலையுணர்வு பாதிக்கப்படும் ஆபத்தில்லை. நாடகம் எடுத்துக்கொண்ட பிரச்சினையையோ முரண்பாட்டையோ பார்வையாளர்களின் புரிதலுக்கே விட்டுவிடுகிறேன். நான் என் படைப்பில், எந்தப் பிரச்சினைக்கும் எந்தத் தீர்வும் சொல்வதில்லை. அது என் வேலையுமில்லை. நாடகம் விழிப்புணர்வூட்டலாம். உலகத்தை மாற்றமுடியாது.

கேள்வி: அதிகாரத்திற்கெதிரான சிங்கையில் செயல்படும் மாற்று அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி விளக்கவும்? அவர்களோடு உங்கள் உறவு எத்தகையது?

பதில்: நாட்டை ஆளும் நபும்சக (Eunuchs) அதிகார மையம் மாற்றுகுரலை நாசுக்காக நசுக்குவதில் மும்முமரமாய் இருக்கிறது. அப்படி அதிகாரத்திற்கெதிராக உரத்து குரல்கொடுக்க சிங்கையில் செயல்படும் எந்த அமைப்பும் கிடையாது. அப்படி ஓர் அமைப்பைத் தொடங்கினால், அதற்குச் சட்டப்படி பதிவுசெய்யவேண்டு, Registrar of Societies-இல் பதிவு செய்தாலும் அனுமதி கிடைக்காது. சிங்கப்பூரில் அதிகாரத்தை நோக்கி உண்மை பேசவேண்டுமானால் (Speaking truth to power) அரசியல் கட்சி ஆரம்பித்துத் திடீரென வரும் பொது தேர்தலுக்காகக் காத்திருக்கவேண்டும். தேர்தல் வருவதற்குள் தனி தொகுதிகள், குழு தொகுதிகளாக மாற்றியமைக்கப்படும் (gerrymandering), எதிர்கட்சிகள் தேர்தலில் நான்கினத்தையும் பிரதிநிதிக்கும் உறுப்பினர்களை நிறுத்தமுடியாமல் போய்விடும். ஆளுங்கட்சி வாக்களிப்பே இல்லாமல் வெற்றிவாகை சூடிவிடும். இப்படியே சிங்கப்பூரில் ஜனநாயக உரிமையான வாக்களிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் குடிமக்கள் செம்மறியாட்டு மந்தைகள் போல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகைச்சுவை நாடகம் சர்வாதிகாரத்துக்கான மேல்பூச்சு. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பட்டம்பதவி பெற்ற ஒத்து ஊதிகளே வெறும் 66.6 விழுக்காட்டு ஆதரவோடு நாடாளுவது நல்ல தமாஷ்.

மக்களின் நெறிக்கப்பட்ட ஜனநாயக குரல்வளையை நீவிவிட கலை அமைப்புகள் வாயிலாக எதிர்ப்பைத் தெரிவித்தால், தேசியக் கலை மன்றத்தின் கலைப்படைப்புகளுக்கான மானியம் அறவே கிடைக்காது. நாளேடுகள் உங்கள் படைப்பை இருட்டடிப்புச் செய்துவிட, பார்வையாளர்கள் வரமாட்டார்கள். வெறுத்துப்போய் நீங்களே ஒதுங்கி, அப்படி ஒரு கலைஞன் இருந்தானா என்று அரசாங்கத்திடம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து பிச்சை வாங்கிக்கொண்டு அடக்கி வாசித்து வாலாட்டும் ஏனைய கலை நாய்கள் கேலி பேசும். எந்த அமைப்புகளோடும் எனக்கு உறவும் கிடையாது. உறவு வைத்துக்கொள்வதே ஆபத்து. ஹிட்லரின் நாசி ஜெர்மனி, ஸ்டாலினின் ரஷ்யா காலத்தில் காட்டிக்கொடுத்து ஜீவித்த ஒட்டுண்ணிகளுக்கும் சிங்கப்பூர் கலை நிறுவனங்களை நடத்தி வயிற்றைக் கழுவும் philistines-களுக்கும் ஒரேமுகந்தான். சொந்த பணத்தை முதலீடு செய்து ஆளும் அதிகார வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ள விரைகளும் கிடையாது. ‘கொட்டை தூக்கி வாழ்வதைவிட கட்டை தூக்கி சாகலாம்’ என்று அதிகார மையத்தை எதிர்த்தோர் எல்லாம் பொம்மலாட்ட சட்ட நடவடிக்கைகளால் திவாலாகியும், நாட்டை விட்டோடியும் வாழ்வதும் மடிவதும் வரலாறு. அதனால்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே கட்சிக்கு ஓட்டுப்போட்டு அடிமைகளாய்ச் சூடு சொரணையற்று நடைபிணங்களாய் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் எனும் சிவப்புப் புள்ளி, பொருளாதரத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் முதல் உலக நாடு. ஆனால் கருத்துச் சுதந்திரத்திலும், மனித உரிமையிலும், பத்திரிகைச் சுதந்திரத்திலும், ஒரு மிகச் சிறந்த மூன்றாம் உலக நாடு - ஜனநாயக சுடுகாடு. இந்த போலீஸ் ஸ்டேட் (Police State)-ல், எனது படைப்புகளுக்காக நான் கண்காணிக்கப்படுவது எனக்குத் தெரியும். எனக்குப் பின்னால் எந்தக் கும்பலும் கிடையாது. அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. நான் தனி மனிதன். கவிஞன், நாடகக் கலைஞன். என் ஆங்கில, தமிழ்ப் படைப்புகளில் ஒடுக்கப்படும் முகமற்ற குரலற்ற நான்கின விளிம்பு மனிதர்களின் பிரச்சனைகளை முன்வைத்து அதிகாரத்தைப் பகடி செய்கிறேன். அவ்வப்போது அரசாங்கத்தின் மடி நாய்களான உள்நாட்டுப் பத்திரிகைகளுக்குச் சர்ச்சைக்குரிய நாடகங்களை எழுதி அரங்கேற்றுவதால் செய்திக்குத் தீனி தருகிறேன். சிங்கப்பூரில் அரங்கேறும் மற்ற நாடக குழுக்களுக்கு ஆங்கில தேசிய நாளேடுகளில் சுலபமாய்க் கிடைக்கும் அறிமுக செய்தியோ விமர்சனமோ எதுவும் என் நாடகங்களுக்குக் கிடைக்காது. நாடகத்துக்கான படங்களையும் தகவலையும் நானே அனுப்பிவைத்தாலும், எதுவும் வெளிவராது. கருணையுள்ள சிந்திக்கத்தெரிந்த சில கலை நிருபர்கள் என் மேல் உள்ள மதிப்பினால் தொலைபேசியில் பேட்டிகண்டு எழுதினாலும், அதை நிர்வாகம் தடைசெய்துவிடும். பத்திரிகையில் செய்தி வராததால் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் வலைப்பக்கஙகளில்தான் என் நாடகங்கள் விளம்பரம் ஆகின்றன.

இவ்வளவு தண்டனைகளும் போதாதென்று, அரசாங்க தணிக்கைக் குழுவின் வெட்டியான்கள், என் நாடகங்கள் சர்ச்சைக்குரியவை என்பதால், அவற்றில் ஒரு சொல்லைக்கூட வெட்டாமல் அல்லது மாற்றவும் சொல்லாமல் ஒரே அடியாய் நாடகத்தைப்பார்க்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அனுமதி என்னும் விதியையும் சூடுபோட்டுவிடுவார்கள். இதனால் இளையதலைமுறை பார்வையாளர்கள் 19 வயதான பிறகே என் நாடகங்களைப் பார்க்கமுடியும். ஆனால், அவர்கள், என் நாடக நூல்களை (ஏற்கனவே மும்முறை தமிழில் ஒரு தணிக்கை வெட்டுமில்லாமல் அரங்கேறியிருந்தாலும் ஆங்கிலத்திலும் மலாயிலும் அரங்கேறும்போது அக்டோபர் 2000 -இல் தடைசெய்யப்பட்ட தலாக், ஆகஸ்ட் 2006 -இல் ஒரு தணிக்கை வெட்டுமில்லாமல் அனுமதி வழங்கப்பட்டும் நாடகம் அரங்கேறுவதற்கு முதல்நாள் தடைசெய்யப்பட்ட Smegma, பொது நூலகங்கிலும் மூன்றே மூன்று சிறிய ஆங்கில புத்தகக்கடைகளிலும் பார்க்கமுடியும். நாடகத்துக்கு தடை ஆனால் நாடகத்தின் வசனங்களைக் கொண்ட புத்தகத்துக்கு தடை இல்லை. ஏனென்றால், புத்தகத்துக்கு தடை விதிக்க அதை அரசாங்கம் Gazette பண்ணவேண்டும். ஒரு சிறுபான்மையின் படைப்பாளிக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்துப் பிரபலப்படுத்த அதிகார மையத்துக்கு மனமில்லை. சிங்கப்பூரில் இலக்கியப் படைப்புகள் தடைசெய்யப்பட்ட ஒரே எழுத்தாளன் என்றாலும், என் நாடகங்களை பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலத்தில் ஆய்வுசெய்து இளங்கலைப்பட்டம் பெறுகிறார்கள் என்றாலும், இன்னும் தொடர்ந்து இலக்கிய ஏவுகணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும் எனக்கு, அதிகார மையத்துடனான இந்தச் சமர் சுவாரசியமாய் இருக்கிறது.

கேள்வி: தாங்கள் கவிதை எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் தங்கள் கவிதைகள் வீரியம் மிக்கதாகவும் அதிகாரத்துக்கு எதிரான தீவிர குரலாகவும் இருந்துள்ளது. இதைச் சக கவிஞர்களும் வாசகர்களும் எவ்வாறு எதிர்கொண்டனர்?

பதில்: கிண்டலா? என் கவிதைகள் எப்பொழுதுமே வீரியம் மிக்கதாகவும், அதிகாரத்துக்கு எதிரான தீவிர குரலாகவும் இருந்தே வந்துள்ளன. 1988-க்குப் பிறகு நான் கவிதை நூல்கள் எதையும் வெளியிடவில்லையே தவிர கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். தொகுக்கவில்லை; பிரசுரிப்பதிலும் ஆர்வமில்லை. அவ்வப்போது தேசியத் தொகுப்புகளில் கவிதைகள் ஆங்கிலத்திலும் தமிழும் இடம்பெற்றே வந்துள்ளன. ஆனால் 1996-இல் இருந்து வரிசையாகப் பதினொறு நாடகத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இன்னும் இரண்டு தொகுப்புகள் வெளிவர உள்ளன. சக கவிஞர்கள், வாசகர்கள் என்றால் என் கவிதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் சீன, மலாய், தமிழரல்லாத இந்தியப் படைப்பாளிகளைத்தான் சுட்டவேண்டும். அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரே இருமொழிக் கவிஞன் நான். சிங்கப்பூரின் தமிழ் இலக்கியக் மாவறைக்கும் கபோதிகளைப் பற்றி நான் என்றுமே அலட்டிகொள்வதில்லை. அவர்கள் பரமார்த்த குருவின் சீடர்கள் ஆகையால், என் கவிதைகள், அதிலும் குறிப்பாக 1984-ல் வெளிவந்த மௌனவதம் தொகுப்பில் உள்ளவை 1988-ல் தமிழ்ச் சமூகத்தையும் தமிழ் அன்னையையும் கற்பழித்துவிட்டதாகக் கதறிக் கதறி உள்துறை இலாகாவுக்கும் எல்லா அமைச்சுகளுக்கும் மொட்டைக்கடுதாசி போட்டே சுய காயடிப்புக்குள்ளாகி வரிசையாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். மௌனவதமும் தடைசெய்யப்படவில்லை. எனக்கு மௌனவதம் ஒரு பெரிய படைப்பாகத் தெரியவில்லை. காலமும் கடந்துவிட்டது. ஆனால், எனக்கெதிராகக் கையொப்பமிட்ட அனைவரின் பெயரும் நன்றாக ஞாபகமிருக்கிறது. மண்டையைப் போட்டவர்கள் தவிர இன்னும் உயிரோடு இருப்பவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கின்றது. நாறிடும் பீத்தொட்டிகள் / நம்மவர் / நான் நீயென்று முகர்வதில் வல்லவர் (கிஷ்கிந்தை) என்று இருபத்தேழு வருடங்களுக்கு முன் எழுதியது இன்றும் நிஜமாயிருப்பது மட்டுமே அதிசயம். வாழ்க வளர்க.

கேள்வி: மலேசியாவில் தங்கள் இலக்கியம் படைத்தக் காலச்சூழலை நினைவுகூர இயலுமா?

பதில்: 1973-இல் இருந்தே சுயமாய் யாப்பிலக்கணம் கற்று மரபுக் கவிதைகள் எழுதிகொண்டிருந்தேன். தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் முரசு பத்திரிகைகளுக்கு அனுப்பிய கவிதைகள் எதுவும் பிரசுரமாகவில்லை. 1974-இல் முதல் மரபுக் கவிதை ஜூன் மாத தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் வெளிவந்தது. ஆசிரியப்பாவினம் என்று ஞாபகம். கள்ள சம்சு குடித்து இறந்துகொண்டிருந்த தோட்டப்புறத் தமிழர்களுக்கு உபதேசம். அதுவும் சிங்கப்பூரில் இருந்து அறிவுரை சொல்கிறாயா என்று அப்பாவிடம் வாங்கிய அடி உதைக்குப் பஞ்சமில்லை. தமிழில் கவிதை எழுதக்கூடாது என்ற அப்பாவின் ஆணையையும் மீறி நான் தொடர்ந்து எழுதினேன். நிறைய மரபுக் கவிதைகள், தமிழ் நேசனிலும், தமிழ் மலரிலும், தமிழ் முரசிலும் பிரசுரமாயின. சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த திரை ஒளி என்னும் சினிமா மாத இதழிலும் கவிதைகளும், ‘ஒரு நம்பிக்கை தூக்கில் தொங்குகிறது’ என்னும் சிறுகதையும் அச்சேறின. திரை ஒளி மலேசியாவிலும் விற்பனை ஆனது. திங்கட்கிழமை தோறும் வெளிவந்த தமிழ் முரசின் மாணவர் மணி மன்றப் பகுதிக்கும் கவிதைகள் எழுதியதோடு ஒரு வாராந்திர சிறுவர் மாயாஜாலத் தொடர்கதையும் எழுதிவந்தேன். மாணவர் மணி மன்றத்துக்குக் கோலாலம்பூரில் இருந்து சுகுமார் என்ற தன் இயற்பெயரில் அக்கினியும் மரபுக் கவிதை எழுதிக்கொண்டிருந்தார். இருவரின் கவிதைகளும் பல சமயங்களில் ஒரே வாரத்தில் இடம்பெற்றன. இதற்கிடையில், திடீரெனத் தமிழ் முரசின் கோலாலம்பூர் அலுவலகம் மூடப்பட்டது. என் தொடர்கதையின் வரவேண்டிய பகுதிகள் பின்னர் வரவேயில்லை. சிங்கப்பூர்த் தமிழ் முரசு அலுவலகத்தில் விசாரித்ததில், கையை விரித்துவிட்டார்கள். பிரதி எடுத்து வைக்காததால் பிரசுரமானவற்றைத் தவிர போனது போனதுதான்.

நான் ஆங்கிலத்திலும் கவிதை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டதால், மரபுக் கவிதைகளின் மேல் இருந்த ஈர்ப்புக் குறைய ஆரம்பித்தது. தமிழ்நாட்டு வானம்பாடி வட்டத்தின் கவிதைகளின் பாதிப்பில் புதுக்கவிதைகள் எழுதி அனுப்பினால் எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை. அது மரபுக் கவிஞர்களின் காலம். இலக்கணத்தை மீறி கவிதை கிவிதை என்று எழுதினால் அறம்பாடியே தொலைத்துக்கட்டிவிடுவர்கள். அப்போது தமிழ் மலரில் ஆத்மாவின் சிலிர்ப்பு என்ற தலைப்பில் கலீல் கிப்ரான் வகை வசன கவிதைத் தொடர் ஒன்று அக்கினி என்ற பெயரில் வரத்தொடங்கியது. நானும் எனது புதுக்கவிதைகளை அனுப்பிவைத்தேன். அவை மறுவாரமே பிரசுரமாயின. இக்கரையில் நானும் அக்கரையில் அக்கினியும் பல மரபுக்கவிச் சிங்கங்களின் சாபங்களைப் பெற்றுக்கொண்டோம். நட்புப் பாராட்டி அக்கினியின் முதல் கடிதம் வந்தது. புதுக்கவிதை எழுதியதால் தமிழ் முரசில் என் மரபுக் கவிதைகளையும் ஓரங்கட்டினார்கள். போங்கடா என்று மலருக்கே எழுதினேன். அக்கினியும் நானும் நேருக்குநேர் சந்திக்கவில்லை என்றாலும், வாராவாரம் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்வோம். புதுக்கவிதையை முன்னெடுத்துச் செல்வது பற்றி விவாதிப்போம்; நட்பு வளர்ந்தது. தமிழ் மலர் போராட்டத்தில் இழுத்து மூடப்பட்டது. வானம்பாடி வார இதழ் பிறந்தது.

1978-ல் கோலாலம்பூர் சென்று வானம்பாடி அலுவலகத்தில் அக்கினியைச் சந்தித்தேன். இராஜகுமாரன், ஆதி குமணன், பிரசன்னா என்ற புனைபெயரில் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரான்சிஸ் சில்வன், தம்பின் தியாகு என்று ஒரு புதிய நட்பு வட்டம் உருவானது. அன்று முதல் வானம்பாடி இலக்கியத் தாய்வீடு போலானது. வருடத்தில் மூன்று முறை வானம்பாடியில் இருப்பேன். குறைந்தது ஒரு வாரமாவது அங்கே தங்குவேன். வானம்பாடியில்தான் என் கவிதைகள் அதிகம் வெளிவந்தன. வானம்பாடியில் இன்றைய நயனம் ஆசிரியர் இராஜகுமாரனுடன் உலக இலக்கியம் பற்றிக் கலந்துரையாடிய பொழுதுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. 1979-ல் இராஜகுமாரனின் சாசனம் பகுதியில்தான் என் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. RTM-ல் பைரோஜி நாராயணனைச் சந்தித்து நூலைக் கொடுத்தேன். அவர் மறு வாரம் இளஞ்செல்வனின் புதுக்கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேச இருந்தார். கூலிம் வெளியீட்டு விழாவுக்கு அக்கினியும் நானும் சென்றடைவதற்குள் விழா முடிவடைந்திருந்தது. இளஞ்செல்வனின் இல்லத்தில் சீ.முத்துசாமி அறிமுகமானார். அவரது ‘இரைகள்’ சிறுகதைத் தொகுப்பின் பத்துப் பிரதிகளைச் சிங்கப்பூர் இலக்கியக்கள எழுத்தாளர்களுக்காகப் பெற்றுக்கொண்டேன். நா. கோவிந்தசாமியின் இலக்கியக் கள அமைப்பில் சாணி மாடாயிருந்த சிலருக்கு இரைகளைக் கொடுத்து முத்துசாமியை அவமானப்படுத்த விரும்பாததால், அப்பிரதிகள் என்னிடமே இருக்கின்றன.

வானம்பாடி நிர்வாகம் மாறியதால் அனைவரும் குமணனை ஆசிரியராகக் கொண்ட நாளிதழுக்குச் சென்று விட, என் பங்களிப்பு மெல்ல மெல்ல நின்றுபோனது. 1980/81 என்று நினைக்கிறேன். கோ.முனியாண்டி சிங்கப்பூருக்கு வந்தார். ஓரிரு மாதங்கள் தங்கி இருந்தார். நிறைய பேசினோம். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவர முடிவெடுத்தோம். அது இன்றளவும் நிறைவேறவில்லை. பிறகு அக்கினியின் கனா மகுடங்கள் கவிதைத் தொகுப்புக்குதான் என் உதவிக்கரம் நீண்டது. இறுதியாக 1983-ல் ஆகஸ்ட் மாதம் அக்கினியோடு ஆயர் தாவாருக்கு கோ.முனியாண்டியைக் காண வந்தேன். 1984-க்குப் பின் மலேசியாவுக்கும் எனக்கும் இருந்த இலக்கியத் தொடர்புகள் முற்றிலும் அறுந்து போயின. வாழ்க்கைப் பிரச்சனைகளின் அழுத்தத்தில், இலக்கியம் மரத்துப்போனது. இருந்தும், 1984-ல் மௌனவதம் நூல் வெளிவந்து மறுபடியும் இராஜகுமாரனின் சாசனம் வழி அறிமுகமானது. 1987-ல் நவம்பர் மாதம், நான் அரசாங்கத்தில் இலக்கியம், நாடகம் மற்றும் ஆசியான் கலாசாரப் பரிமாற்றத்துக்காக கலாச்சார அதிகாரியாகப் பதவியேற்ற நேரம், மூன்றாவது தென் கிழக்காசிய எழுத்தாளர் மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்துகொள்ள இளஞ்செல்வன் சிங்கப்பூர் வந்தார். ஒரு வார நிகழ்வில் மிக நெருக்கமானோம். சிறந்த மலேசியத் தமிழ் புதுக்கவிதைகளை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்க்க, அவற்றைத் தமிழிலும், மலாய் மொழியிலும் இணைத்து அவர் வெளியிடுவதென்றும் தீர்மானித்தோம். நான் மீண்டும் இலக்கியத்துக்கு வந்தேன். நயனம் வார இதழுக்கு, யாகம் என்ற தலைப்பில் இலக்கிய அறிமுகத் தொடர் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். சிதைக்கப்பட்டு வெளியான அதன் சாரம் நயனத்துக்கு அனர்த்தமாகப் பட்டதாலோ என்னவோ இராஜகுமாரனும் அமைதிகாக்க நானும் நிறுத்திக்கொண்டேன்.

1988ல் டிசம்பர் மாதம் நவீன இலக்கியச் சிந்தனையின் புதுக்கவிதைப் போட்டிக்கு நீதிபதியாக இருக்கவும், கட்டுரை படிக்கவும் இளஞ்செல்வன் கேட்டுக்கொண்டதால், கூலிம் வந்தேன். போட்டிக்கு வந்த புதுக்கவிதைகளில், ஒரே ஒரு கவிதைக்கு மட்டும் தரம் இருந்ததால் அதற்கு மட்டும் பரிசளிக்கப்பட்டது. புதுக்கவிதைக்குத் தாத்தா மேத்தா என்ற பூஞ்சையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது. கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறு, நீள் முடியுடனும் தாடியுடனும் கட்டுரை சமர்ப்பித்ததோடு, பேசாமல் அடக்கிக்கொண்டு உட்காராமல் இளஞ்செல்வனின் முன் அனுமதியோடு மௌனவதம் தொகுப்பில் உள்ள ‘நீயும் புஜ்ஜீக்கவிஞனா?’ கவிதையை மேடையில் வாசித்ததில் ஏறத்தாழ நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமாக முடிந்தது. இளஞ்செல்வன், இரகசியமாக என் காதுகளில் ‘இதுக்குத் தான்யா உங்களை வரச் சொன்னேன்’, என்று கிசுகிசுத்தவாறே வயிறுவலிக்கச் சிரித்தார். அக்கினி, கோ. முனியாண்டி, பிறை துரை முனியாண்டி, அருள்தாசன், ஸ்ரீரஜினி, ரெ. கார்த்திகேசு போன்றோர் நினைவுக்கு வருகிறார்கள். மறு வாரம் சிங்கப்பூர் ரவுடி என்று மயில் வார இதழில் எனக்குப் பெரிய கார்ட்டூன் போட்டு இலக்கியத் தாதாவாக்கி இருந்தார்கள். நயனத்தில், வெகு நாகரீகமாக நல்ல படங்களைப் போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்த வேடிக்கையான நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் மௌனம். நான் ஆங்கிலக் கவிதைகளிலும் நாடகத் துறையிலும் மும்முரமானேன். பங்களாதேஷ், பிலிப்பின்ஸ், ஆஸ்திரெலியா என்று இலக்கிய மாநாடுகளுக்கும் கவிதை விழாக்களுக்கும் செல்ல ஆரம்பித்ததால், தமிழ் வட்டங்கள் அன்னியமாகிப்போயின. தமிழில் சாணி மிதித்ததுபோதும் என்றும் முடிவுசெய்தேன். 1990-ல் ஜூன் மாதம் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தேவான் பாஹாசா (Dewan Bahasa dan Pustaka) ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது அனைத்துலக கவிதை விழாவில் கலந்துகொள்ள கோலாலம்பூர் வந்தேன். தமிழிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் கவிதை வாசித்தேன். பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தும் ஒரு தமிழ் நிருபர் கூட வரவில்லை. மலாய் எழுத்தாளர் அன்வார் ரிதுவான் (Anwar Ridhwan) கேலியாகச் சிரித்தார். அந்த மாபெரும் கவிதை விழாவோடு மலேசியாவுடனான தமிழ் இலக்கிய உறவுகளைத் துண்டித்துக்கொண்டேன். இளஞ்செல்வனின் அகால மரணம் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவரைச் சந்தித்திருக்கலாமே என்ற வலி இன்னும் இருக்கிறது. எல்லாம் ஒரு கனாக்காலம் போல் பனிமூட்டமாய்த் தழுவுகின்றன. சில சுகானுபவங்கள். சில நம்பிக்கைத் துரோகங்கள். மன்னிக்கலாம், மறக்கவே கூடாது என்று இலக்கியப் போராளியாய் என் பயணம் தொடர்கிறது.

கேள்வி: மலேசியாவிலும் சிங்கையிலும் இலக்கியத் தொடர்பும் கலைத்தொடர்பும் உள்ள தாங்கள், இவ்விரு நாடுகளின் படைப்பாக்கங்களை எவ்வாறு கணிக்கிறீர்கள்?

பதில்: முதலில் மலேசிய இலக்கியத்தைப் பார்வையிட விரும்புகிறேன். 1977 -இல், டிசம்பர் மாதம், 1 - 3, கோலாலம்பூரில் நடந்தேறிய கபேனா (GAPENA) மாநாட்டில், தலைவர் இஸ்மாயில் ஹீசேன் (Tan Sri Ismail Hussein) சொன்னதை மலேசிய எழுத்தாளர்கள் பலர் மறந்திருக்கலாம். பல்லின ஆசியான் எழுத்தாளர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், அவர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். மலேசியாவின் தேசிய மொழியான மலாய் மொழியில் எழுதப்படும் படைப்பே மலேசிய இலக்கியமாய்க் கருதப்படும் என்று ஆங்கில, சீன, தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஆணி அடித்தார். அன்றுமுதல் இன்றுவரை அந்த ஆணி பிடுங்கப்படவேயில்லை. தேவான் பஹாசா பூமி புத்தராக்களின் மலாய் இலக்கிய வளர்ச்சியை மட்டுமே அங்கீகரிக்கும் அதே வேளை, தேசிய மொழியில் இலக்கியம் படைக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் நிறைய சலுகைகளை அள்ளி வழங்கத் தவறுவதில்லை.

மத ரீதியாக முஸ்லிம் அல்லாத, மலாய் மொழியில் எழுதும் தமிழ், சீன எழுத்தாளர்களை அஃது ஒரு சிறப்புப் பிரிவின் கீழ் ஒன்றிணைத்து ஊக்குவித்து வருகின்றது. தேசிய மொழியில் கவிதை, சிறுகதை படைத்துவரும் சீனர் லிம் சுவீ டின் (Lim Siew Tin) படைப்புகளைத் தேவான் பஹாசா 1985 முதல் பதிப்பித்து வருகிறது. 1979 ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்தில் வழங்கப்படும் உயரிய தென்கிழக்காசிய இலக்கிய விருதை மலேசிய மலாய் இலக்கியவாதிகள், அதிலும் மலாய் முஸ்லீம்கள் மட்டுமே பெற முடியும் என்றிருக்கும்போது, 2000 ஆம் ஆண்டின் விருதைப் பெற்றார் சீன வம்சாவளியினரான லிம். இவ்விருது எக்காரணத்தை முன்னிட்டும், மலேசியாவின் மற்ற மொழி எழுத்தாளர்களுக்கு வழந்கப்படமாட்டாது என்பது அரசியல் விதி.

சரி, தமிழ் உதாரணத்திற்கு வருவோம். மலாய் மொழியே தன் தாய்மொழி என்று கூறும் தமிழர், மலாய் மொழியில் எழுதும் மலேசிய இளம் தலைமுறை தமிழர்களுக்காக 1999-இல் தோற்றுவிக்கப்பட்ட ‘காவியன்’ (Kavyan) இலக்கிய அமைப்பின் தலைவர், மலாய் மொழியில் சிறுகதைகள், நாவல்கள், சிறுவர்களுக்கான கதைகள் எழுதி, நூல்கள் வெளியிட்டிருக்கும் மலேசியரான உதய சங்கர். இவர் 2004 -இல், பிப்ரவரி 11 -ஆம் தேதி What Tamil Writers? என்று New Straits Times ஆங்கிலப் பத்திரிக்கையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை விமர்சித்ததும், அதற்கு ரெ.கார்த்திகேசு A Tamil Writer Talks Back என்று 25-ஆம் தேதி பதிலளித்ததும், இரண்டும் தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு தமிழ் நாளேட்டில் வெளிவந்ததும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். உதய சங்கரின் படைப்புகளையும் தேவான் பஹாசா வெளியிட்டிருக்கிறது. நாளை மலாய் மொழி எழுத்தாளராகக் கொண்டாடப்படும் இவருக்கும் தென்கிழக்காசிய இலக்கிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்தோனேசிய, இலக்கியத்தோடு ஒப்பிடும்போது, மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ப்ரூணையிலும், படைக்கப்படும் மலாய் இலக்கியம் மிகச் சராசரித் தன்மை கொண்டது என்பதை ‘மலாய்க்கார பாசிச-தேசிய வெறி’ இல்லாத நடுநிலையான ஆய்வுத்தரவுகள் நிரூபிக்கின்றன என்பது ஒருபுறமிருக்க, சில கேள்விகள் எழுகின்றன.

மலேசியாவில் ‘காபீர்கள்’ பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் சம வாழ்க்கையைப் பற்றி தத்தம் கதைகளில் துணிச்சலாக எதையும் ஆராயமுடியுமா, அல்லது மேலும் கீழும் பொத்திக்கொண்டு மலாய் அதிகாரம் வீசியெறியும் எச்சில் துண்டுகளுக்குச் சாமரம் வீசி முக்காடு போடுகிறார்களா? மலேசியத் தமிழ் வாழ்க்கையின் அவலங்களையும், முடிச்சுகளையும் மலாய்மொழிப் பரண்மேல் ஆரோகணித்திருக்கும் இவர்கள் மெய்யாலுமே ஆழமாகக் காட்டுகிறார்களா அல்லது வரட்டுக் கற்பனாவாத சாயம் அடிக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஆழிப்பேரலையை உருவாக்கினாலும் பரவாயில்லை, சாட்டையைச் சொடுக்கவேண்டிய கடமை, துப்புக்கெட்ட எழுத்தாளர்க் கழகத்தைவிட நேர்மையான மலேசியத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கின்றது. இது மாதிரியான கேள்விகளை நான், 1990 -இல், காலஞ்சென்ற மலேசியத் தேசியக் கவிஞர் உஸ்மான் அவாங்கிடம் (Usman Awang), அவருடைய வீட்டில் கவிதை வாசித்தபோது எழுப்பினேன். அந்த மனிதாபிமானி, புன்முறுவலோடு, நாம் கவிதை பாடுவோம், அரசியல் பேசவேண்டாம் என்றார். அதே கேள்விகளை, எழுத்தாளர் அன்வார் ரித்வானிடம் (Anwar Ridhwan) கேட்டபோது, கொஞ்சம் நெளிந்தார், பின் தரமான மலேசியத் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் அவற்றை மலாய் மொழியில் கொண்டுவரலாம் என்று புன்னகைத்தார். நல்ல மனிதர்தான். ஆனால், அன்வார் இப்ராஹிமின் அரசியல் வீழ்ச்சியோடு தேவான் பஹாசாவில் உயர் பதவிகள் வகித்த என் இலக்கிய நண்பர்கள் அனைவரும் இடம்பெயர்ந்தனர். தேசிய நாடகக் கலைஞர் சக்கரியா அரிப்பின் (Zakkaria Ariffin) மலாயில் மொழிபெயர்த்துத் தேவான் பஹாசா வெளியிடவிருந்த என் சர்ச்சைக்குரிய தலாக் (TALAQ) நாடகப் பிரதி, சிங்கப்பூர் அதிகார மையத்தின் இரகசியக் கூக்குரலினால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்ததையும் மீறி நிறுத்தப்பட்டது. பொதுவாகவே மலாய் எழுத்தாளர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயம். அதனால், உருவாகும் தாழ்வு மனப்பான்மையை மூடிமறைக்க ஆங்கிலத்தில் உரையாட மாட்டார்கள். ஆங்கிலத்தில் பேசினால் ஆமாம் இல்லை என்ற ஒற்றைப்பதங்களோடு ஓடிப்போய்விடுவார்கள். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் உபயோகிக்கும் அத்தனை கலைச்சொற்களும் ஆங்கிலத்தில் இருந்து கடன் வாங்கியவை. எனக்கு மலாய் மொழி தெரியும். அதனால், நான் சந்தித்த மலேசிய மலாய் இலக்கியவாதிகளோடு அவர்களின் மொழியிலேயே உரையாடி வந்துள்ளேன்.

நம் தமிழர்களைப் போலவே அவர்களும் வெள்ளைக்காரன் சொன்னதே வேதவாக்கு என்று சொல்லக் கூச்சப்படுவதே இல்லை. சில மலாய் எழுத்தாளர்கள், இருமொழித் திறனோடு மலாயிலும் ஆங்கிலத்திலும் நல்ல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். நாடறிந்த கவிஞர், கல்வியாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முஹம்மது ஹாஜி சாலே (Muhammad Haji Salleh), இருமொழிகளிலும் எழுதுவதை நிறுத்திவிட்டு, அதிகாரவர்க்கத்தின் பொற்காசுகளுக்காக மலாயில் மட்டுமே தற்போது எழுதுகிறார். நாங்கள் இருவரும் 1997 -இல், தாய்லாந்து பாங்காக்கில் தென்கிழக்காசிய இலக்கிய விருது பெற்றோம். சாலே பென் ஜோநெட் (Salleh Ben Joned) சர்ச்சைக்குரிய இருமொழிக் கவிஞர். மலாய் இலக்கிய ஆஷாட பூதிகளின் கல்வீச்சுக்கு அதிகம் ஆளான இவர், தற்போது ஆங்கிலத்திலேயே கவனம் செலுத்துகிறார். இன்றைய மலாய் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் சர்ச்சைக்குரிய கவிஞர், சிறுகதை நாவலாசிரியர் மலாயில் எழுதும் பைசால் தெஹ்ராணி. அவருடைய படைப்புலகம் இதுவரை நிறுவப்பட்ட மலாய் வரலாறு, மதம், கலாச்சாரம், புராதனம், மாந்திரீகம் என்று அனைத்தையும் நக்கலோடு மீளுருவாக்கம் செய்வதோடு மரபின்மைந்தர்களைச் சஞ்சலப்படுத்துகிறது.

மலாய் இலக்கியவாதிகள் உதாசீனப்படுத்தும் மலேசிய ஆங்கில இலக்கியத்தைப் பற்றியும் சொல்லவேண்டும். ஆங்கில இலக்கியவாதிகளில் பெரும்பான்மையோர் கோலாலம்பூரையும் அதன் புற நகர்ப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவின் இலக்கியத்தை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிருப்பது ஆங்கில இலக்கியம்தான். தோட்டத் தமிழ் பள்ளியில் படித்து, மலாயாப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய இணைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற கே.எஸ். மணியம் (K.S.Maniam) என்னும் பெயர் தமிழ் வட்டாரங்களுக்கு அன்னியோன்னியமானதல்ல. 1942-இல், பீடோங்கில் பிறந்து, தற்போது சுபாங்கில் வாழும் மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், (The Return, In A Far Country, Between Lines) மலேசியாவுக்கு வெளியே அனைத்துலகப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அவர் படைப்புகளைப் பல வெளிநாட்டினர் முனைவர் பட்டங்களுக்காக ஆய்வு செய்து வருகின்றனர். அவருக்கு, 2000-ஆம் ஆண்டின் ராஜா ராவ் (Raja Rao) விருது வழங்கப்பட்டது. நம்மிடையே, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மகா கலைஞனை, மலேசியாவும் மதிக்கவில்லை, இலக்கியக்கூலிக்கு மாரடிக்கும் மடத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரியவில்லை. அதுபற்றி அவருக்கும் கவலையில்லை.

மலாக்காவில் வறுமையான குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் ஷேர்லி லிம் (Shirley Lim), 1980 -ஆம் ஆண்டு காமன்வெல்த் கவிதைப் பரிசைப் (Commonwealth Poetry Prize) பெற்ற முதல் ஆசியர், முதல் பெண்மணி. கவிதை, புனைகதை, இலக்கிய விமர்சனம் என்று தென்கிழக்காசிய இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த ஷேர்லி லிம், மலேசியக் குடியுரிமையைக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டுத் தற்போது வாழ்வது அமெரிக்காவில். மலேசியாவில் பிறந்து பெட்டாலிங் ஜெயாவில் வளர்ந்த பெத் யாப் (Beth Yap), சிறுகதை, நாவலாசிரியர். அவர் எழுதிய நாவலுக்கு 1993-ஆம் ஆண்டின் விக்டோரியா பிரேமியர் விருது (Victoria Premier Award) ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்டது. தற்போது பெத் யாப் வாழ்வது சிட்னியில். தைவானில் பிறந்து, மலேசியாவில் வளர்ந்து, தற்போது இலண்டனில் வாழும் டாஷ் ஆவ் (Tash Aw) 2005 -ஆம் ஆண்டின் காமன்வெல்த் எழுத்தாளர் விருதைத் தனது முதல் நாவலுக்குப் பெற்றார் (The Harmony Silk Factory). அதே நாவலுக்கு அந்த ஆண்டின் வித்பிரேத் புத்தகப் பரிசையும் (Whitbread Book Award) தட்டிச் சென்றார். மலேசிய இலக்கியத்தை உலகெங்கும் கொண்டு செல்லும் இவர்களின் நிழலைக்கூட மலேசிய மலாய் இலக்கியம் எட்டிப்பார்க்க முடியாது.

கேள்வி : சிங்கையில் இலக்கிய நிலை என்ன?

பதில்: சிங்கப்பூர் இலக்கியம் என்பது ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் எழுதப்படுவது. சிங்கப்பூரின் நிகழ் கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், கலைத்துறை உயர் கல்விக்கும் மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஆண்டுதோறும் பெரிய நிதி வழங்கப்படுகிறது. கலைகளின் மூலம் காசு சேர்ப்பதே பெரும்பான்மை சீன ஆதிக்க அரசின் கொள்கை. ஆதலால், சமூக விழிப்புணர்வு என்னும் சொல் கெட்ட வார்த்தையாகிவிட்டது. மலேசியாவைப்போல் வெளிப்படையான இன மொழிப் பாரபட்சம் கிடையாது என்றாலும், சிறுபான்மை மலாய் தமிழ் எழுத்தாளர்கள் இயல்பாகவே கோழைகள் என்பதால் அவர்களுக்கு அல்வா தர வாய்ப்பும் வசதிகளும் தயங்காமல் செய்துகொடுக்கப்படுகின்றன. சிறந்த கூஜா தூக்கிகள் அரசாங்கத்தின் கலை மேலாண்மைக் குழுக்களில் தீவட்டித் தடியர்களாய் அமர்ந்து கலைகளைக் கண்காணிக்கிறார்கள். நான்கினமும் பலன் பெற்றாலும், மதம், இனம், அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகள் போன்றவற்றை விமர்சிக்கும் படைப்புகளுக்கு ஒரு காசும் கிடைக்காது. அப்படிப்பட்ட படைப்புகள் புனிதமான தணிக்கைக் குழுவால் தடைசெய்யப்படலாம். எனவே, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எல்லோரும், எதுக்கு வம்பென்று நன்றாக உண்டு கொழுத்து, ஜாலியாக உலாத்தி ஒருவரை ஒருவர் சொறிந்துகொண்டு அம்மாடி இது போன்ற அரசாங்கம் உலகத்திலேயே இல்லை என்று, மெய்க்கீர்த்திகளாய் அவதாரமெடுத்து அரசாங்கத்துக்குத் துதிபாடி சகல சௌபாக்கியங்களோடு விருதுகள் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். சிங்கப்பூர் ஒரு நுகர்வுக் கலாச்சார தேசம். மலேசியாவிலாவது மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கிறது, இங்கே மாற்றுக்கருத்து கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறது. எழுத்தாளன் என்ன எழுதவேண்டும் என்று அரசியல்வாதிகளே சொல்லித்தருவார்கள். இதனால், சிங்கப்பூர் இலக்கியம், தென்கிழக்காசியாவில் குதக்காற்றுக்கு இணையாகப் பெருமையாகப் பேசப்படுகிறது.

நான் சொல்வது சுரீரெனச் சுடலாம். நான்கு மொழிகளுக்கும் கலைநிர்வாகியாய் இருந்திருப்பதால் உள்ளேயும் வெளியேயும் பல்லிளிக்கும் காரணிகளை யாமறிவோம். சிங்கப்பூர் எழுத்தாளர்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய விதிவிலக்குகள் உண்டு. ஆங்கில எழுத்தாளர்களில் இலக்கிய முன்னோடியும் கல்வியாளருமான ஆளுங்கட்சியின் ஆஸ்தான கவிஞராகக் கருதப்படும் எட்வின் தம்பு (Emeritus Professor Edwin Thumboo), காலஞ்சென்ற சிறுகதை-நாவலாசிரியர் டாக்டர் கோபால் பரதம் (Dr Gopal Baratham), 1986-இல் ஒடுக்கும் சிங்கப்பூரை உதறி கனடா, வான்கூவரில் குடியேறி இவ்வருடம் ஜனவரியில் காலமான கவிஞர்-நாவலாசிரியர்-நாடகாசிரியர் டாக்டர் கோ போ செங் (Dr Goh Poh Seng), கவிதாயினி டாக்டர் லீ ஸ¥ பெங் (Dr Lee Tzu Pheng), ஆளும் சர்வாதிகாரத்தை விமர்சித்து நாட்டின் முன்னாள் பிரதமரின் மிரட்டலுக்கு உள்ளான பெருமதிப்பிற்குரிய சிறுகதை-நாவலாசிரியர் டாக்டர் கேத்தெரின் லிம் (Dr Catherine Lim), 1997-இல் ஆள்வோரின் ஒடுக்குமுறை அரசியல் பிடிக்காமல் குடியுரிமையை எறிந்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்ட கவிஞர் டாக்டர் போய் கிம் ச்செங் (Dr Boey Kim Cheng), காலஞ்சென்ற அரசியல்வாதி ஜே பி ஜெயரத்னத்தின் (J B Jeyaretnam) மகனான சிறுகதை நாவலாசிரியர் பிலிப் ஜெயரத்னம் (Philip Jeyaretnam), சிங்கப்பூர் கவிதையையும் கவிஞர்களையும் உலகெங்கும் அறிமுகப்படுத்தும் கவிஞர் அல்வின் பாங் (Alvin Pang), ஆங்கிலத்தில் கவிதை, சிறுகதை, நாடகமும், மலாயில் நாடகமும் எழுதி என்னைப் போலவே அதிகார வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் - ‘சிங்கப்பூர், நீ என் நாடல்ல கவிதை புகழ்’ (Singapore, you are not my country) அல்பியான் சாட் (Alfian Sa’at) ஆகியோர் சிங்கப்பூர் இலக்கியத்தை உலக அரங்கில் பதிந்தவர்கள்.

சீன இலக்கியவாதிகள் அமைதியானவர்கள். அவர்களில் போராளிகளைக் காண்பது அரிது. பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தினராய் இருப்பதால், எல்லாச் சலுகைகளையும் முதல் தர குடிமக்களாய்க் சுகிப்பதால் (மலேசிய பூமி புத்ராக்களைப்போல்) நாட்டுக்கே உரித்தான வாழ்வின் நுண்ணரசியலையும், தந்திரமான ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மையினரின் பிரச்சனைகளையும் தொட பயந்து, அவர்கள் பாட்டுக்கு மென்மையான படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் வெளிப்பாட்டுத் தளங்கள், சீனாவிலும், ஹாங்காங்கிலும், தைவானிலும், மலேசியாவிலும் விரிந்து கிடக்கின்றன. 1939 -இல் சீனாவின் ஹெபெய் (Hebei) மாவட்டத்தில் பிறந்து, சிங்கப்பூருக்குத் தன் பத்தாவது வயதில் வந்து, 2002 -இல் செப்டம்பர் மாதம் காலஞ்சென்ற நண்பர்: இருமொழி (சீன-ஆங்கில) நாடகாசிரியர், இயக்குனர், நாடகப் பயிற்சியாளர், சிங்கப்பூர் நாடக முன்னோடி குவோ பாவ் கூன் (Kuo Pao Kun) சீனர்களில் வித்தியாசமானவர்; சர்ச்சைக்குரியவர், அனைத்துச் சிங்கப்பூர்க் கலைஞர்களின் மரியாதைக்குரியவர். நான்கின நான்குமொழி பரீட்சார்த்த நாடக முயற்சிகளுக்கும் ஆதரவு நல்கியவர். 1976-இல் உள்துறை இலாகாவினால் (Internal Security Department) மார்க்சிஸ்ட் (Marxist) புரட்சியாளர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி நான்கு வருடங்கள் ஏழு மாதங்கள் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தவர். அரசாங்கம் 1989 -இல் அவருக்குக் கலாச்சார விருது (Cultural Medallion) கொடுத்துப் பாவத்துக்குக் கழுவாய் தேடிக்கொண்டது. அவரது தலைசிறந்த மூன்று நாடகங்களை நான் தமிழில் மறுஉருவாக்கம் செய்து அரங்கேற்றி இருக்கிறேன். 1990 -இல், அவர் தோற்றுவித்த சப்ஸ்டேஷன் (The Substation) என்னும் சிற்றரங்கில்தான் இன்றுவரை என் தமிழ், ஆங்கில நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. அவரது மறைவுக்குப்பின், அவரிடம் பயிற்சி பெற்றவர்களில் யாரும் இன்னும் அவர் பெயர் சொல்லுமளவுக்கு வளரவில்லை. பிரதானமாக, கோக் ஹெங் லியுன் (Kok Heng Leun) என்ற நாடக இயக்குனரும், லி சி (Li Xie) என்ற பெண் நடிகர்-இயக்குனர்-நாடக எழுத்தாளரும் சில பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நாடக குழு டிராமா பொக்ஸ் (drama box) அரசாங்கத்தின் உதவித் தொகை பெரும் முன்னனிக் குழுக்களில் ஒன்றானதால் இயல்பாக அடக்கியே வாசிக்கிறார்கள்.

சிங்கப்பூரில், மலாய் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்போதுமே இஸ்லாமிய மதக் காப்பாளர்களின் எல்லைக் கோடுகளைத் தாண்டி வளர முடியாது. மலாய்ச் சமூகத்தின் பிரச்சனைகளை அல்பியான் சாட்டும், நானும் படம்பிடித்த கோணங்களைக் கூட அவர்கள் யோசிக்கமாட்டார்கள். காலஞ்சென்ற முன்னோடிக் கவிஞர் மசூரி பின் சாலிக்குன் (Masuri bin Salikun) அரசின் அங்கீகாரத்துக்கென்றே அலைந்தவர். பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை எழுதியவர். (இப்படிப்பட்ட குற்றச்செயல்களைச் சிங்கப்பூரின் தமிழ் மரபுக்கவிஞர்கள் மட்டுமே செய்துவந்தார்கள்.) அவர் இலக்கிய சட்டாம்பிள்ளையாய் அதிகாரம் செலுத்தினார். 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி, தன் வீட்டில், தொலைக்காட்சி நேர்காணலுக்கு இலக்கியப் பிரதாபங்களை அளந்துகொண்டிருந்தபோதே மாரடைப்பில் மறைந்தார். அவருடைய சமகால படைப்பாளி சிறுகதை-நாவலாசிரியர் -கவிஞர் சுராத்மான் மார்க்காசான் (Suratman Markasan), மசூரியைவிட மனோபலமுள்ள படைப்பாளி. மலேசிய இந்தோனேசிய இலக்கியவாதிகளால் மதிக்கப்படுபவர். அரசுக்கோ, செம்மறியாட்டு மலாய் அரசியல்வாதிகளுக்கோ கூழைக்கும்பிடு போடாததாலும் மசூரியின் நயவஞ்சகத்தாலும் நியாயமான வாய்ப்புகளை இழந்தார். இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர்களைவிட இளையவர், கட்டடக் கலைத்துறையில் பட்டம் வாங்கிய சிறுகதை-நாவலாசிரியர் கவிஞர் ஈசா கமாரி (Isa Kamari). தற்சமயம் இவர் காட்டில் விருது மழை. அரசின் செல்லப்பிள்ளை. மூத்த மலாய் எழுத்தாளர்களைவிட இவரிடம் சரக்கிருந்தாலும் மசூரியின் காலி இடத்தை இவர் நிரப்பும் அரசியல் முடிச்சு அவிழ்கின்றது. இவரது இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஒரு நாவல் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் எழுத்துகளை, இவர்களைப்போலவே மலாய்க்காரரான அல்பியான் சாட்டின் எழுத்துகளோடு ஒப்பிடுவது பாவம், பரிதாபம். அல்பியான் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவர். இவர்களோ, சுமாரான, வம்புகளை விரும்பாத, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் இருக்க எழுதும் கண்ணியமானவர்கள். அல்பியான் சாட்டை அடியொற்றி, இருமொழித் திறனுள்ள ஒரு புதிய மலாய் இளைய தலைமுறை கவிதை, புனைகதை, நாடகம் எழுத வந்திருப்பது மலாய்ச் சமூகத்தின் மேய்ப்பர்களை பீதியுறச் செய்துள்ளது. இளரத்தம் கலகக்கார எழுத்தென்று அறைகூவினாலும் மலாய் மொழி இலக்கியத்தை மதவல்லுனர்களும் உள்துறை அதிகாரிகளும் விசனத்தோடு மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றி முரசறைய பெரிதாய் ஒன்றுமில்லை. தொண்ணூற்றைந்து விழுக்காடு மரபார்ந்த, காலாவதியான, பாடாவதியான, அறநெறி தைலம் தடவி ஒழுக்கம் ஓம்புவதை பிரச்சாரம் பண்ணும் உலகளாவிய உருவ உள்ளடக்க முதிர்ச்சியோ கலை நயமோ அற்ற படைப்புகள். அவற்றை, அட்சரசுத்தமாக மொண்ணைத்தனத்துக்காகவே முனைவர் பட்டம் வாங்கிய கரப்பான்கள் அடிமசுரு துடிக்க தூசிதட்டி எடுத்து ஆய்ந்து இலக்கியம் இருக்கின்றது என்று ஆண்டாண்டு கரமைதுனம் செய்துகொண்டு மோட்சமடைவது வெள்ளிடைமலை. தமிழ்நாட்டில் இருந்து வந்து இறங்கி இருக்கும் பொருளாதாரக் கூலிகளின் கழிவுகளைச் சிங்கப்பூர் இலக்கியம் என்ற தாளிகைக்குச் சேர்க்கமுடியாது. காசு சேர்ந்ததும் மூட்டைமுடிச்சுகளோடு ஓடிப்போகும் இந்த அகதிகளையும் அவர்களின் கக்கல்களையும் சிங்கப்பூர்க் கக்கூஸ் எழுத்தாளர் அமைப்புகள் கூட்டம் சேர்க்கப் பயன்படுத்திக்கொள்வது இயல்பே. குறைந்துவரும் சீன பிறப்புவிகிதத்தை மறைமுகமாய் உயர்த்துவதற்காய், உயரும் மலாய்க் குடிமக்களின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காய்ச் சிங்கப்பூர்ப் பிரஜைகளுக்குப் பாதகமாய்ப் பின்கதவுகளைத் திறந்துவிட்டுச் சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் படித்த படிக்காத மூன்றாந்தர அடிமாட்டுக் கூலிகளை இறக்குமதி செய்துவரும் கேடுகெட்ட அரசு, நாளையே புதிய குடியேறிகளின் வாரிசுகள் கட்டாய இராணுவத் தேசியச் சேவை செய்தால்தான் குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டதிருத்தம் செய்தால், அனைத்துச் சுரண்டல் சொறி நாய்களும் ஓடிவிடும். தேசியச் சேவைக்குப் பயந்து மலேசியாவிலும் வெளிநாட்டிலும் தம் குஞ்சுகளைப் படிக்க வைத்திருக்கும் கழுதைகளுந்தான்.

சிங்கப்பூரில் பிறந்து, வாழ்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு இரண்டாண்டுகளைத் தியாகம் செய்து மேலும் பத்தாண்டுகளை சேமப்படைச் சேவைக்காக அர்ப்பணிக்கும் சிங்கப்பூர்க் குடிமக்களுக்கு முறையாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளுக்கு (இலக்கியம் உட்பட) இந்தக் கழிசடைகளும் போட்டிபோடுவது துர்நாற்றம் வீசும் தொழுநோய்க் கைகள் ஆரத் தழுவ வருவதுபோல் இருக்கின்றது. இந்த ஜென்மங்களுக்கு இலக்கிய மாமாவேலை பார்க்கும் சிங்கப்பூரர்கள் இருக்கும்வரை சிங்கப்பூர்த் தீவு தென்கிழக்காசியாவில் விபச்சாரத் தெருவாகவே அடையாளம் காணப்படும். மிச்சமிருக்கும் ஐந்து விழுக்காட்டுக்குள் வரும் சிங்கப்பூர் எழுத்தாளர்களில், மூத்த தலைமுறையினரான புனைகதையாசிரியர்கள் புதுமைதாசன், மா.இளங்கண்ணன், இராம கண்ணபிரான், (காலஞ்சென்ற நா.கோவிந்தசாமி) முதலியோர் அடங்குவர். இவர்கள் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் ஒரு தொடர்ச்சியான மரபை அடியொற்றி எழுதுபவர்கள். தற்போது முதுமை இவர்களின் பங்களிப்பைக் குறைத்துவிட்டது. மொரிசீயஸ் தீவு, தமிழ் நாட்டு கிராமம் ,இரண்டாம் உலகப் போருக்கு முந்தய சிங்கப்பூர், அன்றைய சிராங்கூன் தமிழ் வட்டார வாழ்க்கை, தமிழ் புத்தகக் கடை, என்ற பல்வேறு அனுபவ தரிட்சனங்களை உள்ளடக்கிய நாவல் தவத்தை, இலக்கியக் கட்டுரைகளையே அதிகம் தந்து கொண்டிருக்கும் இராம கண்ணபிரான் இனியாவது கலைத்தால் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு துளி மோட்சம் கிடைக்கலாம். இவர்களுக்கப்பால், நம்பிக்கையூட்டும் அடுத்த தலைமுறைப் படைப்பாளி, தற்கால உலக இலக்கியப்போக்குகள் அறிந்து வித்தியாசமாய்க் கவிதை சிறுகதை எழுதிவரும் கவிதாயினி லதா. கடந்த இருபது வருடங்களில் எத்தனையோ இலக்கியப் பயிலரங்குகளும், போட்டிகளும், எழுத்தாளர் விழாக்களும் நடந்து முடிந்துவிட்டன. ஆனால், மலேசிய இளந்தலைமுறை இலக்கியவாதிகளைப்போல், இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழில் எழுத ஒரு தமிழ் படைப்பாளி இன்னும் உருவாகவில்லை. தமிழை வெறுப்போடு மட்டமாகப் பார்க்கும் ஒரு தலைமுறை மட்டும் நம் தமிழாசிரியர்களின் (கடந்த 15 வருடங்களாய் வந்துபோகும் தமிழ்நாட்டு இறக்குமதிகளும் சேர்த்து) சேவையால் உருவாகிவிட்டது என்று கூறினால் அது தவறோ? சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் உருகுதையா. ஹா... ஹா... ஹா...

>>> தொடர்ச்சி - பகுதி 2

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768