|
|
5/2/2012 அன்று நடைபெற்ற வல்லினம் கலை,
இலக்கிய விழா 4
குறித்தான நினைவலைகள்
கலை இலக்கிய விழாவின் பரபரப்பு
காலையிலேயே தொற்றிக்கொண்டு விட்டது. இறுதியாக ஒரு தரம் நண்பர்களுக்குக்
குறுந்தகவல் மூலம் நினைவூட்டினேன். மதியம் 12 கெல்லாம் அங்கே இருப்பதாகத்
திட்டம். முதல் நாளே சந்துரு, தயாஜி, சிவா பெரியண்ணன், பாலமுருகன் என
நண்பர்கள் வீட்டிற்கு வந்து வழங்க வேண்டிய புத்தகங்களை அடுக்கி கட்டி
வைத்துவிட்டதோடு அவரவர் வாகனங்களில் ஏற்றிக்கொண்டதால் சுமை குறைந்தது.
முதல் நாள் பள்ளிக்கூட அலுவலாக நான் வெளியேற வேண்டியிருந்தது. நண்பர்களே
இறுதி நேர வேலைகளை முன்னின்று செய்துமுடித்தது பெரிய ஆறுதல்.
காலை 12.30 க்கு அரங்கில் நுழைந்தபோது ஏ.தேவராஜன் எதிர்ப்பட்டார். அவருடன்
மற்றொரு எழுத்தாளரும் நின்றுக் கொண்டிருந்தார். "நாங்கதான் முதல் ஆள்.
10.30 கெல்லாம் வந்துட்டோம்" என்றார். பரபரப்பில் எதையும் நிதானமாக பேச
முடியவில்லை. 1 மணிக்கெல்லாம் வல்லினம் நண்பர்கள் வர மனம் சாவகாசமானது.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் எல்லாம் சரியாக நடந்துகொண்டிருந்தாலும்
எங்கோ எதுவோ விடுபட்டு விட்டது போல ஒரு பதற்றம்.
சோமா மண்டபத்தில் 'கலை இலக்கிய விழா' நடக்கம் பக்கத்து அரங்கில்
பக்திப்பாடல் வெளியீடு நடந்தது. உள்ளூர் இசை கலைஞர்கள் பலர் இருந்தனர்.
எப்போதுமே அவர்கள்தான் ஜீன்ஸ் டி-சட்டை சகிதம் இருப்பார்கள். இம்முறை
அவர்கள் வேட்டி சட்டையுடன் மண்டபத்திற்குள் நுழைந்து, ஜீன்ஸ்,
டி.சட்டையுடன் இருந்த எங்களை ஒருதரம் பார்த்து ஒன்றும் புரியாமல்
வெளியேறினர். கலாசாரம் சேதமுற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம்.
இரண்டு மணிக்குத் தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி சரியாக 2.15க்குத்
தொடங்கியது. அறிவிப்பாளர் தயாஜி. திறமையாகத் தம் பணிகளைச் செய்தார். முதல்
பேச்சாளர் நான். எனக்கும் வழக்கறிஞர் பசுபதிக்குமான உறவு குறித்து பேசியே
உரையைத் தொடக்கினேன். சுமார் 10 வருடங்களாக அவரது நோக்கமும் எண்ணமும்
மாறாமல் சமூகம் நோக்கியே இருப்பதை சுட்டிக்காட்டினேன். தொடர்ந்து, வல்லினம்
பதிப்பகம் குறித்த அறிமுகத்தை செய்தேன். எழுத்தாளன் அரசியல்வாதிகளிடம்
ஒடுங்கிபோகும் நிலை குறித்து விளக்கி, பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு
முறையாக ராயல்டி வழங்க வேண்டிய கடமையை நினைவிருத்தினேன். எழுத்தாளன்
கொண்டாடப்படும் சூழம் சமுதாயத்தில் உருவாக வேண்டும் என்பதை
வலியுறுத்தினேன்.
எனக்குப் பின்பாகப் பேசிய வழக்கறிஞர் பசுபதியும் எங்கள் தொடக்க கால
சந்திப்புகளை நினைவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். வல்லினத்தின்
செயல்பாடுகள் குறித்து பாராட்டிய அவர், தான் எப்போதுமே வல்லினம்
முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் உறுதி கூறினார். அதோடு
சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்த தனது ஆதங்கத்தைக்
கூறிய அவர் அம்மாணவர்களை நோக்கியும் எழுத்தாளர்களின் கவனம் செல்ல வேண்டும்
என கேட்டுக்கொண்டார்.
தாமதிக்காமல் நூல் வெளியீடுகள் தொடங்கின. முதல் நூல் யோகியின்
'துடைக்கப்படாத இரத்தக் கறைகள்'. அதை மருத்துவர் செல்வம் வெளியிட
எழுத்தாளர் பூங்குழலி பெற்றுக்கொண்டார். பூங்குழலி நூல் குறித்த தனது
கருத்துரையை ஆற்றினார். அவருக்கும் யோகிக்குமான நட்பிலிருந்து அந்த உரை
விரிந்து சென்றது.
(முழு உரை
வாசிக்க) தொடர்ந்து யோகி பேசுகையில் தனது வாழ்விலிருந்து திட்டுத்
திட்டான சம்பவங்களை மீட்டுக்கொணர்ந்தார். இவ்வனுபவங்கள் எழுத்தான
விதத்தையும் விவரித்தார். வல்லினம் பதிப்பகத்துக்குத் தனது நன்றியைக்
கூறிக்கொண்டார்.
அடுத்ததாக கே.பாலமுருகனின் 'தீர்ந்து போகாத வெண்கட்டிகள்' எனும் நூலை
வல்லினம் வாசகர் திரு.தேவா வெளியிட காளிதாஸ் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே ஒரு
சில சினிமா விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ள காளிதாஸ் பாலமுருகனின் சினிமா
கட்டுரைகள் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார்.
(முழு உரை
வாசிக்க). 'சினிமா விமர்சனம் என்பது ஒரு பயிற்சி. அது ஒரு பாடமாகவே
கல்லூரியில் நடக்கும். பாலா அப்பயிற்சி இல்லாமலேயே சுயமாக திறமையாக
அத்திறனைக் கையாண்டுள்ளார்' என்றார். தொடர்ந்து பாலமுருகன் பேசுகையில்
தனக்கும் சினிமாவுக்குமான நெருக்கத்தைக் கூறினார். நூலில் இடம்பெற்ற சில
திரைப்படங்கள் குறித்து விளக்கினார். குறிப்பாக குழந்தைகளின் மனநிலை
குறித்த அவரது பார்வை ஆழமாக இருந்தது.
மூன்றாவதாக என் நூல். நண்பர் பூவன் வெளியீடு செய்ய கவிஞர் அகிலன்
பெற்றுக்கொண்டார். அகிலன் என் நூல் குறித்து விரிவாகப் பேசினார். அதன்
பலவீனங்களையும் சுட்டிக்காட்டினார்.
(முழு உரை
வாசிக்க). தொடர்ந்து பேசிய நானும் அகிலன் சுட்டிக்காட்டிய சில
பலவீனங்களை ஏற்றுக்கொண்டு சில பத்திகள் தொடர்பான எனது அனுபவத்தைப்
பகிர்ந்துகொண்டேன். 'கலை என்பது என்ன?' எனும் கேள்வியே இப்பத்திகள்
முழுதும் தொணிக்கின்றன எனக் கூறி அமர்ந்தேன்.
நான்காவது நூலான ரேணுகாவின் 'என்னை நாயென்று கூப்பிடுங்கள்' கவிதை தொகுதியை
நயனம் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன் வெளியிட எழுத்தாளர் மா.சண்முகசிவா
பெற்றுக்கொண்டார். சமூகம் குறித்து பேச ஆரம்பித்தவர் நூலில் புகுந்து
மீண்டும் சமுதாய வெளியிலிருந்தே விடைபெற்றார்.
(முழு உரை
வாசிக்க). நூலாசிரியர் ரேணுகா (சிவா பெரியண்ணன்) தனது கவிதைகள்
குறித்து பேசியப் பின்னர், ஆசிரியர்களின் கலை இலக்கியப் பங்களிப்பு
குறித்து விவரித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயிற்சி ஆசிரியர்களிடம்
தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவரது உரைக்குப் பின்னர் நிகழ்வின் முதல் அங்கம் நிறைவு பெற்றது. சிறிய
உணவு இடைவேளைக்குப் பின் நிகழ்வு மீண்டும் தொடங்கியது. முதலில் அ.மார்க்ஸ்
மற்றும் ஆதவன் தீட்சண்யா பேசுவதென முடிவாகியிருந்தது. தேவாவின் ஆளுமை
புரிந்ததும் அவரையும் பேசப் பணித்தேன். எனவே முறையே தேவா, அ.மார்க்ஸ்
மற்றும் ஆதவன் தீட்சண்யா என உரைகள் தொடர்ந்தன.
நூல் வெளியீட்டுக்குப் பின் குறையும் என நினைத்த கூட்டம் அப்படியே
இருந்தது. சரியாக ஏழு மணிக்கு நிகழ்வு முடிந்தபின்பும் அரங்கில் ஆங்காங்கே
நின்று நண்பர்கள் நிகழ்வு முடியாத மனநிலையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.
நிகழ்வுகள் முடிவதில்லைதான்.
சம்பந்தப்பட்ட பதிவுகள் :
http://bala-balamurugan.blogspot.com/2012/02/4.html
|
|