|
|
தோட்டத் திருவிழா

எங்கள் தோட்டத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது.
(கூலிம் பட்டணத்தில் இருந்து 32 கி.மீ தொலைவில் இருக்கும் பெலாம் தோட்டம்.
அங்கு, ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீஇராமர் ஆலயத் திருவிழா கடந்த 30/7/2012-ல்)
விழாவுக்கு முதல் நாள் என் நண்பர்கள் சிலருடன் இணைந்து உபயம் செய்யும்
காரியத்தை கடந்த மூன்று வருடங்களாகச் செய்து வருகிறோம். பெரிய
பக்தியென்றெல்லாம் ஒன்றும் கிடையாது (நான் என்னைச் சொன்னேன்! நண்பர்கள்
எல்லாம் `சோலிட்`டான பக்தர்கள், ஓகே!). இப்படி ஏதாவது ஒரு 'பிடி'
இருந்தால்தான் எந்த ஒரு வேலையையும் முடிக்க முடிகிறது. எனக்கு கூட்டம்
பிடிக்கும்; விழாகளும், பண்டிகைகளும் மிகவும் பிடித்தமானவை. தோட்டத்
திருவிழா என்றால், என்னைப் போன்ற பழைய ஆட்களுக்கு, ஒரு மீள் பார்வை
மாதிரிதான். ஆகவே, உபயம் என்னும் உபாயத்தைக் கண்டுகொண்டு, நண்பர்கள்,
தெரிந்தவர்கள் எல்லோரையும் சந்தித்து மகிழும் வாய்ப்பாக
பயன்படுத்திக்கொள்கிறேன்.
கூட்டத்தில் இருந்தாலும், தனித்து நின்று (மனதளவிலேனும்), சுற்றிலும்
நடப்பவற்றை பார்த்து, இரசிப்பது ஒரு சுகமான அனுபவம். மனம் வலிக்கும்
அனுபவங்களையும், அறிவுப்பூர்வமாக, அவற்றுக்கான தர்க்க விளக்கங்களுடன்
ஏற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பாகவும் அது அமைகிறது.(புடுராயா பேருந்து
நிலையத்திலும், கோலாலம்பூர் பெரிய இரயில் நிலையத்திலும் மணிக்கணக்கில்
`பிராக்` பார்த்த காலம் ஒரு `பொற்காலம்`)
சரி, திருவிழாவில் கண்டது என்ன?
அ. என் நண்பர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது! வெள்ளை முடியும், அதுவும்
இல்லாமலும். சிலர் சவரம் செய்யாத, கேள்விகளும், விரக்தியும் அப்பிய
முகங்களுடன். ஹரியும், பெரியசாமியும், வசுந்தராவும் தாத்தா / பாட்டி
ஆகிவிட்டிருந்தனர். 40 வருடங்களுக்குப் பின் வசுந்தராவைப் பார்த்தேன். வேறு
யாரையாவது காட்டி 'இது வசுந்தரா' என்று சொல்லியிருந்தாலும் நம்பித்தான்
இருப்பேன்! என்னை பலருக்கு அடையாளம் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் அப்பவே
படிப்பில் ரொம்ப 'பேமஸ்'... அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புள்ள
ஜெயரத்னம் என்ற அம்மாளு, எப்போதும் போலவே கலகல... கால நிர்பந்தங்களையும்,
வாழ்வாதாரத் தேடல்களின் அவஸ்தைகளையும், நிராகரிப்புகளையும், இழப்புகளையும்
ஏற்று, மாறாத புன்னகையுடன் வாழ்வை எதிர்கொள்வது ஒரு பிராப்தம்.
ஆ. தோட்டத்தில் மக்களே இல்லை!! எங்கள் உபயத்தன்று, இரவு 8 வரை
வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுமார் 150 பக்தர்கள்தாம்! உணவு 450
பேருக்குத் தயார் பண்ணியிருந்தோம். 'தோட்ட மக்கள் `லேட்டா'தான் வருவாங்க'
என்று கோயில் காரியதரிசியான நண்பன் சொன்னான். சொன்னது போலவே 9 மணிக்கு
தேரோட்டம் களைகட்டியது; சாப்பாடும் 'அளந்து' போடும்படியாகிவிட்டது.
வெளியூர் பக்தர்கள் (தோட்டத்தில் வாழ்ந்த நினைவுகளை மீட்டெடுக்க
வந்தவர்கள், கூட்டத்தில் குஷியாக மாறிவிடும் என் போன்றவர்கள்,
பிள்ளைகளுக்கு `எஸ்டேட் கால்சரைக்' காட்ட வந்திருக்கும் பழைய தோட்ட, இன்றைய
'சிட்டிஸன்கள்'... இப்படியாக) முகத்தில் தென்பட்ட குதூகலமும், ஆர்வமும்
தோட்டத்து மக்களிடம் கொஞ்சம் குறைவாகவே காணப்பட்டது. பால்மரங்களின் இடத்தை
செம்பனை நிரப்பியபின், பல குடும்பங்கள் பட்டணங்களுக்கு நகர்ந்தபின், வங்காள
தேசத்தவரும், இந்தோனீசியர்களும் தோட்டத்தில் நிறைந்துவிட்டனர். கலாச்சார
காப்பகமாக விளங்கிய தோட்டங்கள், திருவிழாகள் எல்லாம் ஒரு சடங்காக
ஆகிக்கொண்டிருக்கின்றன. கொண்டாட்டம் இல்லாத திருவிழா!
எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், தீக்குழி இறங்குவதைக் காண முடிகிறது.
இருந்த ஒரே ஒரு காவடியைச் சுற்றி கொஞ்சமாக ஆட்டம். அப்புறம், திருவிழா
முடிந்தது. ஆயிரத்தில் நிரம்பும் மக்கள் இல்லை; கூச்சல் இல்லை; முதல் நாள்
மாலை வரை ஒரு திண்பண்டக் கடையோ, பொரிகடலை வியாபாரமோ இல்லை; குழந்தைகள்
எல்லாரும் சட்டென பெரியவர்களாகிவிட்டிருந்தனர். சிட்டி குழந்தைகள்
ஏக்கத்துடன்... கொஞ்சம் எஸ்டேட் 'ஜீன்' அதிகமாகி, என் `பெயரை` நிலைநாட்டும்
என் மகள் மட்டும் முகமெல்லாம் மலர்ந்து, தோட்டத்து தோழியொருத்தியுடன்
சுற்றிக்கொண்டிருந்தாள்.
இவ்வளவு 'அமைதியான' ஒரு திருவிழாவை பார்ப்பது காலக் கொடுமையல்லாமல்
வேறென்ன!
இரவில், காலஞ்சென்ற கோவிந்தசாமி தண்டல் குடும்பத்தினரின் சார்பில்
அன்னதானம் வழங்கப்பட்டது. (அவர் என்ன மறக்கக் கூடிய மனிதரா, எவ்வளவு
உரிமையோடு, அன்போடும் பழகுவார். துவாங்கு பைனூன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
தமிழ்த்துறைத் தலைவர், திரு.சாமிநாதனின் தந்தையார் அவர்)
அப்புறம், `சகுனி' படம் போட்டார்கள். போன ஆண்டு `காஞ்சனா'. மறுநாள்
பள்ளியாதலால், பாதியிலேயே கிளம்பிவிட்டோம். 'அடுத்த வருஷம் கட்டாயம் பாய்
கொண்டுவரணும்பா' என்று மகள் சொன்னாள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
நிறைய இழந்து வருகிறோம் என்பது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
|
|