|
|
தேவதை

காற்று குகையை விட்டு வெளியேறிய நாங்கள் அன்றே அதே
சுற்றுப்புறத்தில் இருக்கும் தேவதை குகையை நோக்கி சென்றோம். அதாவது Fairy
Cave. நேரடி மொழி மாற்று செய்தால் அப்படி தான் அதன் பெயர் வந்தாக வேண்டும்.
செல்லும் வழி நெடுக்க பச்சைப்பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை
வளங்கள். குறிப்பாக மலைப்பகுதி நெல்லை (Padi Huma) பயிரிட்டு இருந்தார்கள்.
பயணத்தின் போதே எங்களுக்குள் தேவதை குகையை பற்றிய உரையாடல் நடந்தது. ஏன்
அதற்கு தேவதை குகை என பெயர் வந்திருக்கும்? தேவதைக்கும் அந்தக் குகைக்கும்
அப்படி என்ன சம்பந்தம்? உண்மையாகவே அந்த குகைக்குள் வான்லோக தேவதைகள் உலா
வருவார்களோ என நாங்களே பல எண்ணங்களில் உலா வந்தோம்.
காற்று
குகைக்கும் தேவதை குகைக்கும் அரை மணி நேர தூர பிரயாணம்தான். வெளியிலிருந்து
பார்த்தால் அக்குகை வெறும் மலைப்பகுதியின் ஒரு தொடர்ச்சியாகவே தெரிந்தது.
அன்னாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். நிஜமாகவே கழுத்து வலித்தது
எனக்கு. அவ்வளவு உயரம். அதை ஏறுவதற்கே அரை மணி நேரம் ஆகும் போலிருந்தது.
இந்தக் குகை காற்று குகையை விட முற்றிலும் மாறுப்பட்டிருந்தது. இந்தக் குகை
செங்குத்தான அமைப்பைக் கொண்டதாக இருந்தது. இக்குகையின் நுழைவாயில்
எல்லாரும் நினைப்பது போல அடிவாரத்தில் இல்லை. அதன் நுழைவாயிலுக்குள் போக
வேண்டும் என்றாலே ஒரு 500 மீட்டர் படியேற வேண்டும். முன்னாட்களில்
மலைச்சுவரில் ஒட்டினாற்போல சின்ன சின்ன மரப்படிகள் அமைக்க பட்டிருந்ததன.
பின்னாளில் அவற்றின் பாதுகாப்பு இன்மையை கருத்தில் கொண்டு கற்சுவரால் ஆன
படி மதில்கள் எழுப்பப்பட்டிருந்தன. அக்காலத்தில் இந்தக் குகைக்குள் ஏற அந்த
சின்ன சின்ன மரப்படிகளைதான் உபயோகபடுத்தி இருக்க வேண்டும். நாட்கள் ஆக ஆக
பல சுற்றுப்பயணிகளின் வருகையால் மரப்படிகள் படிப்படியாய் கற்படிகளாய்
மாறியிருக்க வேண்டும். இப்படிகளை மேல்நோக்கி பார்த்த எனக்கு கொஞ்ச நேரம்
தலையே சுற்றிவிட்டது.
அவ்வளவு தூரம் மேலே ஏற வேண்டுமே என்ற எண்ணத்தை விட அந்தக் குகைக்குள்
அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமே மேலிட்டு
இருந்தது. அவ்வளவு தூரம் காற்று குகையில் நடந்து நடந்து களைத்து
போயிருந்தாலும் அது எல்லாம் எங்களுக்கு அவ்வளவு முக்கியமாக தெரியவில்லை.
அடி மேல் அடி வைத்து மெல்ல ஏறினேன். என்னோடு என் நண்பர்களும் ஏறினர்.
நாங்கள் யாருமே அமைதியாக ஏறவே இல்லை. ஒருவரை ஒருவர் கிண்டலடித்து
கொண்டுதான் இருந்தோம். அப்படியாவது ஏறும்போது களைப்பு தெரியாதல்லவா. ஒரு 15
நிமிடங்கள் படிகளின் மேல் ஏறி கொஞ்ச நேரம் உள்ளே நடந்து சென்ற பிறகுதான்
குகையின் நுழைவாயில் கண்ணுக்குப்பட்டது.
குகையின் நுழைவாயில் ஒரு அகண்ட இடத்தில் இருந்து குறுக்கு சந்து போல போக
துவங்கியது. ஆங்காங்கே ஒளிக்கீற்றுக்கள் குகை சுவர் மேல் பட்டு தெரித்த
வண்ணமே இருந்தன. ஒளிக்கீற்றுகளின் உதவியோடும் கைவிளக்கின் உதவியோடும்
கண்களை கூர்மையாக்கி கொண்டு மெல்ல மெல்ல நடந்து சென்றோம். உள்ளே போக போக
இரும்பு படிகளும் கைப்பிடிகளும் மேல்நோக்கி செங்குத்தாக செல்ல ஆரம்பித்தன.
எப்படியோ நீர்த்துளிகள் மேலிருந்து ஒழுகி கொண்டே இருந்தன. அது ஒரு பக்கம்
எரிச்சலை ஏற்படுதினாலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலேயும் நாங்கள்
கவனமாகத்தான் இருந்தோம். முக்கியமாக நான். காலில் அணிந்திருந்தது கொஞ்சம்
லேசாக தேய்ந்து போன ஜப்பான் சிலிப்பர். தண்ணீரில் நடந்தால் வழுக்கி விட
எவ்வளவு நேரம் பிடிக்கும். அதனாலேயே கொஞ்சம் கவனமாக இருந்தேன். சொல்ல
போனால் மேல்நோக்கிய ஒரு சுரங்க பாதையில்தான் சென்று கொண்டிருந்தோம். ஒரு
ஆள் புகக்கூடிய அளவே தான் இருந்தது அந்தப் படிகள் கொண்ட பாதை. ஒருத்தர்
பின் ஒருத்தராக மெல்ல உட்புகுந்தோம்.
ஒரு
10 நிமிடத்துக்கு பிறகு வெளிச்சம் நன்றாக எங்கள் மேல் விழ ஆரம்பித்தது.
கொஞ்சம் கொஞ்சமா தெரிந்த ஒளி பெரியதாக ஆரம்பித்தது. கூடவே குறுகி இருந்த
என் விழிகள் பெரியதாக விரிய ஆரம்பித்தன. ஓர் உலகத்திலிருந்து இன்னோர்
உலகத்துக்குள் நுழைந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என் உணர்வு.
அவ்வளவு அழகான இயற்கையோவியத்தை நான் அந்நாள் வரை பார்த்ததே இல்லை.
இருட்டிலேயே நடந்து வந்த நாங்கள் அளவுக்கதிகமான ஒளிவெள்ளத்தை ஓரேயடியாக
கண்டதால் நிஜமாகவே கண்கள் கூசின. கண்களை மூடி அங்கே பல தேவதைகள்
பளிச்சிடும் ஒளியோடும் கானம் பாடும் ஒலியோடும் வெள்ளை நிற இறக்கை கட்டி
பாடி கொண்டு திரிவதாக கற்பனை செய்து பார்த்தேன். ஒரு வித பரவசம்
முற்றிலுமாக என்னை ஆட்கொண்டது. ஸிலிப்பிங் பியூட்டி பாடுவது போல நானும்
பாடி பார்த்தேன். ஆ ஆ ஆ.....ஆ.ஆ.ஆ...ஆ.ஆ.ஆ ஆரோகனத்தில் என் குரல் குகையின்
வேற்றுமை நிறைந்த சுவரில் பட்டு எனக்கே எதிரொலிக்க மிகவும் இனிமையாகவே
இருந்தது. இனம் புரியாத சந்தோசம். என் மனதை அங்கேயே தொலைத்து விட்டேன்.
முந்தைய குகையை ஆராய்ச்சி கண்ணோடு பார்த்த என்னால் இந்தக் குகையை அப்படி
பார்க்க முடியவில்லை. காதல் மனிதரோடு மட்டும் வராது. இயற்கையோடும் வரும்.
ஆராய்ச்சி கண்ணோடு பார்த்தால் எந்தக் காலத்திலேயுமே காதல் வராது. இந்தக்
குகையோடு எனக்கு காதல் ஏற்பட்டது என்று சொன்னால் அது முற்றிலும்
மிகையாகாது. அக்குகையின் ஒவ்வொரு பகுதியும் கைத்தேர்ந்த சிற்பியை
தோற்கடிக்கும் அளவுக்கு அவ்வளவு அழகாக பார்த்தவுடன் மனம் கொள்ளை போகும்
உயிரோட்டமான ஒளி ஓவியமாக திகழ்ந்தது. நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே என்
வயதை ஆறாக மாற்றிவிட்டது அக்குகையின் அழகு. நிஜமாகவே சிறு குழந்தையை போல
அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தேன். களைப்பு என்ன மஹா களைப்பு. அது
கால்தூசுக்கு சமம் என்பது போலாகிவிட்டது. பிறர் அங்கு இருப்பதையே நான்
மறந்து விட்டேன். நீர்த்துளி கல்லில் பட்டு சிதறும் காட்சி, அதன் ஓசை
இன்னமும் என் செவிகளில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது. இது கற்பனையல்ல.
நான் அணு அணுவாய் என்னையும் மறந்து ரசித்த ஒரு கணம், அற்புத தருணம். அந்த
நொடியில் உணர்ந்தேன் ஏன் இக்குகையை தேவதை குகை என்றழைக்கிறார்கள் என்று.
ஒரு தேவதையை பார்த்தால் என்ன பரவசம் ஏற்படுமோ அதை இங்கே உள்ளார உணரலாம்.
இது முற்றிலும் உண்மை. இதை சாட்சி பகிர்வு என்றே எடுத்து கொள்ளலாம்.
அதோடு
மட்டுமல்ல அங்கே ஒரு தேவதை சிலையையும் பார்த்தேன். சீன பாரம்பரிய பூஜை
பொருட்களை அங்கே வைத்திருந்தார்கள். என்னை போலவே இவ்விடத்தை பார்த்து
மெய்மறந்த யாரோ ஒரு சீனரின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் இது. அதன்
அடியில் 1982 என்றும் பொறிக்க பட்டிருந்தது. அது வைக்கப்பட்டிருந்த இடம்
சூரிய ஒளியின் உதயத்தை தெள்ள தெளிவாக தரிசிக்ககூடிய திசையை கொண்டிருந்தது.
கிழக்கு முகம் பார்த்து கொண்டிருந்தது அந்த சிலை.
இன்னும் சொல்ல போனால் அக்குகையில் மேலும் பல பாதைகள் இருந்தன. ஆனால் மாலை
மணி மூன்றுக்கே சன்னமாய் இருட்டிவிட்டதால் என் மனசை தொலைத்து விட்டு போக
மனமில்லாமல் வந்தேன். இன்னமும் அக்குகை என் கண்ணுக்குள்ளேயே கூடு கட்டி
இருக்கிறது. எனக்கு மட்டுமா ... என்றால் என் தோழர்களுக்கும் இதுவே நிலை.
சொல்லொண்ணா காதலை தேவதை குகையில் தாரை வார்த்து விட்டு ஜடமாய் வீடு வந்து
சேர்ந்தேன்.
|
|