|
|
ஒரே மலேசியா இலக்கிய விருது (Anugerah Sastera
1Malaysia)

இந்நாட்டில் தேசிய இலக்கியம் (Sastera Kebangsaan)
வெற்றி பெறுமா? அது பல இன மக்களை ஒன்றுபடுத்துமா? நாட்டு மக்களின்
ஒட்டுமொத்த அடையாளமாக உலக அரங்கில் முன்னிறுத்தப்படுமா? இப்படிப் பல
கேள்விகள் நீண்ட காலமாக என்னை வண்டாகக் குடைந்துகொண்டிருக்கின்றன.
1989-1993ஆம் ஆண்டுகளில் பாங்கி தேசியப் பல்கலைக்கழகத்தில் மலாய்
இலக்கியத்துறையில் நான் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தேன். மலாயாப்
பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சேர்ந்து படிக்கவேண்டும் என்பதுதான் என்
உள்ளார்ந்த நெடுநாளைய ஆசை. ஆனால், அது கைகூடாமல் போய்விட்டது. எனவே, மலாய்
இலக்கியத்தோடு காதலை வளர்த்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தேன். இறுதி
ஆண்டில் (1993), தேசிய இலக்கியம் பற்றிஒரு கட்டுரை எழுத நேர்ந்தபோதுதான்
தேசிய இலக்கியம் குறித்துச் சிந்திக்கவும் அதன் தொடர்பாக மற்றவரின்
கருத்துகளை அறியவும் வாய்ப்புக் கிட்டியது.
பல்கலைக்கழகத்திலேயே முக்கியமான மலாய் எழுத்தாளர்கள் விரிவுரையாளர்களாக
இருந்தனர். அப்புறம் என்ன? ஏடும் எழுதுகோலுமாக ஒஸ்மான் புத்தே, மானா
சிகானா, ரம்லி இஸின் இப்படிச் சிலரை அணுகி தேசிய இலக்கியம் குறித்து
வினவினேன். மாற்றுக் கருத்தில்லாமல் அனைவரும் ஒன்றையே சொன்னார்கள். மொழி,
சமயம், இனம், பண்பாடு என பலவாறாகப் பிரிந்து கிடக்கும் மலேசியர்களை
ஒன்றிணைக்கும் பல வழிகளில் தேசிய இலக்கியம் என்ற கொள்கை மிக முக்கியமானது
என்றார்கள்.
பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட மலாய்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டான்ஸ்ரீ
இஸ்மாயில் ஹ¤சேன் அவர்களையும் சந்தித்தேன். ‘கபேனா’ எனப்படும் மலாய்
எழுத்தாளர் சங்கங்களின் பேரவையின் தலைவரும் அவர்தான். தேசிய இலக்கியம்
குறித்த என் கேள்விகளுக்கு அமைதியாக விடையளித்தார். “சிங்கப்பூரில் மூன்று
இனங்களின் இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறதே. அதுபோல்
இங்கும் சாத்தியமில்லையா?” எனக் கேட்டேன். அவ்வளவுதான். உணர்ச்சிவயப்பட்ட
நிலையில் சற்றுக் கோபமாக, “சிங்கப்பூரைப் பற்றிப் பேச வேண்டாம். அங்கு
நிலைமை வேறு. இங்கு நம் நாட்டுச் சூழல் வேறு” என்றார். ஆறுவதுதானே சினம்.
சீறுவதா சினம்? என என்னையே கேட்டுக்கொண்டு விடைபெற்றேன்.
நம் தமிழ் எழுத்தாளர்கள் எண்ணம் எப்படி என அறிய சிலரிடம் பேசினேன்.
அவர்களில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர், எழுத்தாளர்
ஆறு.நாகப்பன் முக்கியமானவர். அவர் மலாய்மொழியிலும் எழுத வல்லவர். “தமிழில்
எழுதும் நம் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை மலாய் மொழியில் எழுதவேண்டும்
என்பதெல்லாம் சாத்தியமில்லை. அவற்றை மொழி பெயர்ப்பதும் எளிதன்று. மலாய்
மொழியில் எழுதினால்தான் தேசிய இலக்கியமாக அங்கீகரிக்கப்படும் என்ற
விதிமுறையைத் தளர்த்தி மற்ற இனங்களின் தாய்மொழிப் படைப்புகளையும்
ஏற்கவேண்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மலாய் மொழியில் எழுதும் தமிழ்
எழுத்தாளர் எண்ணிக்கை ஐந்தாறு பேர்களையும் தாண்டாது.” என்று அவர் சொல்லி 20
ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் அதுதான் நிலை.
தேசிய இலக்கியம் குறித்த கட்டுரையை எழுதப் பணித்த என் விரிவுரையாளர்
முனைவர் உங்கு மைமுனா ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர்
பட்டம் பெற்றவர். இலக்கியம் பற்றித் திறந்த மனப்பான்மையோடு கருத்துகளைக்
கூறுபவர். அவர்கூட தம் விரிவுரையில் “தேசிய இலக்கியம்தான் எதிர்காலத்தில்
இந்நாட்டில் வெற்றிபெறும். மலாய்மொழியில் எழுதும் சீனர்கள், இந்தியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று உறுதிபடக் கூறினார். என்னுடன் பயின்ற சக
மாணவிகளான இருவரைச் சுட்டிக்காட்டி, “இதோ, இங்கே மலர்விழி, சாந்தி போன்றோர்
இலக்கியம் படைக்க நினைத்தால் மலாய்மொழியில் தான் எழுதுவார்கள்” அவர்
குறிப்பிட்ட இருவரும் தமிழ்க்கல்வி பெறாதவர்கள். “இங்கே, பாலா அதற்கு
விதிவிலக்கு. இவர் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர்” என்று என்னைக்
குறிப்பிட்டார். அவரின் உறுதிமொழி கேட்டபோது தேசிய இலக்கியம் வெற்றிபெற
வாய்ப்புண்டு என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், அவரின் சொற்களும் இன்று
பொய்த்துப் போயின.
இன்று மலாய் மொழியில் இலக்கியம் படைக்கும் தமிழ் எழுத்தாளர்கள் யாவர்?
ஒருவரும் இல்லை என்பதுதான் எதார்த்தம். மலாய் மொழியில் சிறுகதை, நாவல்
எழுதும் உதயசங்கர் மலாய் மொழியில் கல்வி பெற்றவர். அவரைப்போலத்தான் மலாய்
மொழியில் சிறுகதைகள் படைக்கும் சரோஜாதேவி பாலகிருஷ்ணனும். அதுபோல
சீனர்களில் மலாயில் எழுதுவோரும் ஒரு சிலர்தான். தேசிய இலக்கியம் என்பது
மலாய்க்காரர்களின் ஆடுகளமாகவும் மற்ற மொழி எழுத்தாளர்கள் வெறும்
பார்வையாளர்களாகி வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் உள்ளது.
தேசிய இலக்கியம் என்ற கொள்கை ஏன் வகுக்கப்பட்டது? இந்தக் கேள்விக்கு
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கவேண்டும். மே 13 1969ஆம் நாள்
இந்நாட்டு வரலாற்றின் கறுப்பு தினமாகும். அன்று நடந்த இனக்கலவரம் அரசுக்கு
ஒன்றைத் தெளிவாகக் காட்டிவிட்டது. காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து நாடு
1957இல் மீண்டாலும் பல இன, சமய, மொழியைக் கொண்ட மக்கள் ஒற்றுமையின்றி
பிரிந்தே இருந்தார்கள். எனவே, இனக்கலவரத்திற்குப் பிறகு மக்களிடையே
ஒற்றுமையை வலுப்படுத்த சில திட்டங்களை, கொள்கைகளை அரசு செயல்படுத்தியது.
1970இல் ‘ருக்குன் நெகரா’ எனும் ஐந்து கோட்பாடுகளை அரசு மக்களின் தாரக
மந்திரமாக்கியது. இனப்பாகுபாடின்றி வறுமையை ஒழிக்கவும் பொருளாதார
வேற்றுமையைக் களையவும் 1970இல் புதிய பொருளாதாரக் கொள்கை செயல் வடிவம்
பெற்றது. தேசிய மொழியான மலாய் மொழியைப் கற்பித்தல் மொழியாகக் கொண்ட
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1971இல் நடைபெற்ற தேசிய
பண்பாட்டு மாநாட்டில் தேசிய பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதனையொட்டி
உருவாக்கப்பட்டதுதான் தேசிய இலக்கியக் கொள்கை. மலாய் மொழியில் எழுதும்
படைப்புகள் தேசிய இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற மொழிகளில்
எழுதப்பட்டாலும் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டால் அவையும் தேசிய
இலக்கியத் தகுதியைப் பெறும். ஒற்றுமை எனும் ஒன்றை மையப்படுத்தி இப்படிப் பல
கொள்கைகளை, திட்டங்களைச் செயல்படுத்தியது.
‘தேசிய இலக்கியம்’ என்ற கொள்கையின் நோக்கம் உன்னதமானது. மலேசியா எனும்
நாட்டிற்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தவும் உலக அரங்கில் நமது ஒன்றுபட்ட
குரலை ஒலிக்கச் செய்யும் நோக்கம் சிறந்ததுதான். தேசியச் சின்னம், தேசிய
விலங்கு, தேசியப் பறவை, தேசியக் கொடிபோல தேசிய இலக்கியம் என்பது ஒரு
நாட்டின் தனித்த அடையாளத்தை உருவாக்கும் என்பது உண்மைதான். ஆனால்,
எதார்த்தம் வேறு மாதிரியாக அல்லவா உள்ளது. இங்கே, சீனர், இந்தியர் என மற்ற
இரண்டு முக்கிய இனங்கள் தத்தம் தனித்த சமயம், மொழி, பண்பாடு, இலக்கியம்
ஆகியவற்றோடு இயங்குகிறார்கள். தொடக்கப்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை
தங்கள் தாய்மொழியைக் கற்கவும் இலக்கியம் படைக்கவும் உரிமை பெற்றுள்ளார்கள்.
அவர்களின் தாய்மொழிப்பள்ளிகளைச் சுற்றியே அரசியலும் பின்னப்பட்டுள்ளது.
தாய்மொழிக் கல்வியைப்பெறும் உரிமை அரசியல் சாசனத்தில்
வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, தேசிய இனங்களான சீனர், இந்தியர்களின்
இலக்கியங்களும் அல்லவா தேசிய இலக்கியத்தில் இணைக்கப்பட்டு அங்கீகாரம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தேசிய இலக்கியம் குறித்துத் தொடக்க காலத்திலிருந்தே பல்வேறு கருத்துகள்
முன் வைக்கப்பட்டன. தேசிய இலக்கியம் மிகவும் முக்கியம் என்று ஒரு
தரப்பினரும் மற்ற இன இலக்கியங்களும் ஒதுக்கப்படக்கூடாது என்று ஒரு
தரப்பினரும் வாதங்களை முன் வைத்தனர். அதில் குறிப்பாக, சாலே பென் ஜோன்
என்பவர் எழுதிய ‘Rojak is good for nation building’ (1.7.1992 NST) என்ற
கட்டுரை முக்கியமானது. பலரின் கண்டனத்திற்கு அக்கட்டுரை ஆளானது. 2020
தொலைநோக்குத் திட்டத்தில் ஒன்றுபட்ட மலேசிய இனத்தை உருவாக்கும் முயற்சியில்
மலாய் மொழியோடு மற்ற மொழிகளையும் அரவணைக்கலாம் என்ற சிந்தனையை அவர்
முன்வைத்தார். நாமும் நம் ஆதங்கத்தை அவ்வப்போது பதிவுசெய்து வந்துள்ளோம்.
“எங்கள் இலக்கியம் தேசிய இலக்கியமாகாதா?” என்று ஆவேசமாக மேடையில்
முழங்கிவிட்டது ஒய்ந்துவிடுவோம். அல்லது எழுத்தாளர் அமைப்பின்
ஆண்டுக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கடமை முடிந்ததாய்
நினைத்துவிடுவோம்.
சிங்கப்பூரில் நிலைமை வேறு விதமாக உள்ளது.இதுதான் எங்களின் ஒட்டுமொத்த
இலக்கிய முகம் என்று ஒரு முகத்தைக் காட்டுவதைவிட அங்கு மாறுபட்ட மூன்று
முகங்களைக் காட்டி மற்ற இன இலக்கியங்களையும் அரவணைக்கிறார்கள்.
சிங்கப்பூரின் 25ஆம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் ஒவ்வொரு
மொழியிலும் 25 நூல்களை வெளியிடப்பட்டன. தாய்லாந்து அரசு வழங்கிவரும்
தென்கிழக்காசியா நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான ஆசியான் இலக்கிய
விருது (S.E.A Award) சிங்கப்பூரின் பல மொழி எழுத்தாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து மலாய் மொழியில் எழுதுவோர்கள் மட்டும்
அந்த விருதுக்கு முன்மொழியப்படுகிறார்கள். சிங்கப்பூரில் இதுவரை எட்டுத்
தமிழ் எழுத்தாளர்கள் இந்த இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்கள். மலேசியாவில்
மலாய்மொழியில் எழுதாத காரணத்தால் தமிழ், சீன எழுத்தாளர்கள் உரிய
அங்கீகாரமின்றிப் புறக்கணிக்கப்படும் அவலம் நீண்ட காலமாக நிலவி வருகிறது.
ஆசியான் இலக்கிய விருது பெற்ற சிங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் (1982 -2005):
ஆண்டு
எழுத்தாளர்
1982 மா.இளங்கண்ணன்
1986 பரணன் சி.வேலு
1990 இராம கண்ணபிரான்
1991 கோபால் பரதம்
1994 நா.கோவிந்தசாமி
1997 இளங்கோவன்
2001 முகமட் இக்பால்
2005 பி. கிருஷ்ணன்
மலேசிய வாழ்க்கை பற்றி எழுதினாலும் நடப்பிலுள்ள தேசிய இலக்கியக் கொள்கையில்
தமிழ், சீன இலக்கியத்திற்கு இடம் இல்லை. பிறமொழிப் படைப்புகளை மலாய்
மொழிக்கு மொழிமாற்றம் செய்வதும் சாத்தியமில்லை. அப்படிச் சில முயற்சிகளில்
மலாய்மொழி வளர்ச்சி நிறுவனமான ‘டேவான் பஹாசா டான் புஸ்தாகா’ ஈடுபட்டது.
டாக்டர் மு.வரதராசனின் கள்ளோ? காவியமோ? நாவல் மலாயில்
மொழிபெயர்க்கப்பட்டது. மலாய்க் கவிஞர் உஸ்மான் அவாங்கின் 12 கவிதைகளைத்
தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியை ‘டேவான் பஹசா டான் புஸ்தாகா’ எனக்குத்
தந்தது. அவற்றை மொழிபெயர்த்துத் தந்தேன். அவை ஏனோ இன்னும் நூல் வடிவம்
பெறவில்லை.
பல்லின மக்களை ஒன்றுபடுத்தும் ஊடகமாக இலக்கியம் இந்நாட்டில் இதுவரை
வெற்றிபெறவில்லை. பல்லின எழுத்தாளர்கள் ஒன்றுகூடி ஒரு பொதுஅரங்கில்
சந்தித்துப் பேசவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் தங்கள் இலக்கியத்தை
மற்ற இனத்தினர்க்குப் பந்தி வைக்கவும் ஓர் ஆக்கரமான முயற்சி இதுவரை
இந்நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் சத்தியமான, சோகமான உண்மை.
அவரவரும் தங்கள் இனங்களிடையே தங்கள் இலக்கியம் மட்டும் பற்றி மட்டும்
பேசிக் கொண்டாடும் சூழல் ஆரோக்கியமானதா?
இப்பொழுது எங்கும் ‘ஒரே மலேசியா’ பற்றியே பேச்சாக இருக்கிறது. பிரதமர்
டத்தோஸ்ரீ நாஜிப் துன் அப்துல் ரசாக் தம் இலட்சியக் கனவாக ஒரே மலேசியா
கொள்கையை அறிமுகப் படுத்திப் பல்லின மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திப்
பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஒரே மலேசியா உதவித் தொகை,
ஒரே மலேசியா மருந்தகம், ஒரே மலேசியா கடை.... இப்படிப் பல திட்டங்களைச்
செயல்படுத்தி வருகிறார். இன்றைய சூழலில் ஒரே மலேசியா கொள்கையின் வழி
இலக்கியத்திற்கும் ஒரு சிறந்த திட்டத்தைப் பிரதமர் செயல்படுத்தலாம்.
மலேசியாவில் மலாய், சீனம், தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை
ஆண்டுதோறும் தேர்வு செய்து பெரும் பரிசுத்தொகையோடு கூடிய ‘ஒரே மலேசியா
இலக்கிய விருது’ (Anugerah Sastera 1Malaysia) என்ற இலக்கிய விருதை
வழங்கிச் சிறப்பிக்கலாம். பல்லின மக்களை ஒன்றுபடுத்த உருவாக்கப்பட்ட தேசிய
இலக்கியம் செய்யாததை இந்த இலக்கிய விருது செம்மையாகச் செய்யும்
சாத்தியமுண்டு. எல்லா இன எழுத்தாளர்களையும் ஒருங்கிணைக்கும் இந்த அரிய
திட்டம் ‘ஒரே மலேசியா’ கொள்கைக்குக் கிடைக்கும் வெற்றியாக அமையும். அதற்கு
முதலில், ‘பல்லின இலக்கிய அமைப்பு’ என்ற ஒன்றினை ஏற்படுத்தவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்தச் சிந்தனையை மையமிட்டு ‘தேசியம்’ எனும்
தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அந்தக் கதையின் முக்கியப் பகுதி
இதோ:
விருது பெறும் மூன்று இலக்கியவாதிகளான நாவலாசிரியர் அஸ்மான் பூத்தே, கவிஞர்
தமிழழகன், எழுத்தாளர் தோ க்யா போங் ¬கிய மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டுப்
பிரதமரால் சிறப்பு செய்யப்பட்டனர். ஒவ்வொருவரும் விருதோடு பத்தாயிரம்
ரிங்கிட்டுகளையும் பரிசாகப் பெற்றனர். மேடையின் அகன்ற திரையில் அவர்கள்
ஒவ்வொருவரின் எழுத்துலகச் சாதனைகள் படமாகக் காட்டப்பட்டன.
நிகழ்வின் முத்தாய்ப்பாக உரையாற்ற பிரதமர் வந்தபொழுது அவரின் முகத்தில்
¬ழ்ந்த பூரிப்பைக் காணமுடிந்தது. “மூன்று இன எழுத்தாளர்கள் ஒரே மேடையில்
இந்நாட்டில் சிறப்பிக்கப்படுவது இதுதான் முதல் முறையென்று நான்
நினைக்கிறேன். இப்படியொரு விழா இதுவரை நாட்டில் ஏன் நடத்தப்படவில்லை என்று
எனக்குத் தெரியவில்லை. அரசு முன் நின்று நடத்தியிருக்கவேண்டிய நிகழ்ச்சி
இது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் முயற்சியில் இந்த விழா நடந்திருப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்குப் பாராட்டுக்கள். இன்று விருது பெற்ற
மூன்று இலக்கியவாதிகளுக்கும் என் பாராட்டுகள். இந்த விழா மூலம் ஒரு முக்கிய
கோரிக்கையை அரசுக்கு நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். இந்நாட்டில் இலக்கியம்
படைக்கிற இலக்கியவாதிகளை இனப்பாகுபாடின்றி அரவணைக்க வேண்டும் என்ற
கோரிக்கையை முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். இது குறித்து
அமைச்சரவையில் விரிவாகப் பேசப்போகிறேன். இன்றைய விழா¨Å என்னைப்
பொறுத்தவரையில் மிக முக்கிய விழாவாக நினைக்கிறேன். இலக்கியம் மூலமாக
இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்றால் அந்தமுயற்சியில் அரசு
ஈடுபடும்......”
“கனவு காணுங்கள்; அது ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் அப்துல் கலாம்.
நான் காணும் கனவு என்று நிறைவேறும்? நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
|
|