|
|
பெயர்அறியாப்
பறவையொன்றின் சிறகுகளில்
நீயற்ற வனத்தில்
ஏதுமற்ற மழையாய் உதிர்ந்து விழும்
துயரப் பாடலென நான் மிதக்கிறேன்
பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்
உனக்கான இருப்பை பத்திரப்படுத்துவதில்
மும்முறமாய் கவனித்துக் கொண்டிருக்கிறது
எனது பெருங்கோடை
ஒரு கரமைதுனத்தின் கடைசிக் கணமென
உடைபடும் மௌனபலூனின் நாள்
பெருமழையின் முதல் துளியென
இறுகத்தழுவும் கரங்கள்
ராட்சஸப் பாறையாய் வியாபித்திருந்த
பிரிவு அறிந்த தீராக்காதலின்
ஒற்றை வெளிச்சத்திலிருந்து
அழுந்தமுத்தம் ஒன்று மெல்ல கீழிறங்கும்
துயர் பற்றி எரியும் வனம்
திரும்பும்
வேட்கையின் பெருநதி அணைத்து
***
நிகழ்வுகள்
ஒருஊரில்
என்று துவங்கும்
ஒவ்வொரு கதையிலும்
ஒரு கதை
இருந்து கொண்டுதானிருக்கிறது
உண்மைகளை உசுப்பிப் பிடித்தவாறு!
***
மனிதர்கள்
எத்தனைவிதமான மனிதர்கள்
எத்தனைவிதமான வெளிப்பாடுகள்
எத்தனைவிதமான அந்தரங்கங்கள்
எத்தனைவிதமான நம்பிக்கைகள்
எத்தனைவிதமான ஏமாற்றங்கள்
எத்தனைவிதமான நிர்ப்பந்தங்கள்
எனக்கு அசூசையையாக இருக்கிறது
மேலும்
எனக்குப் பயமாக இருக்கிறது
எந்தவிதமான மனிதன் நான்
|
|