இதழ் 9
செப்டம்பர் 2009
  கவிதை
இளங்கோவன்
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
     
 

புத்தரின் கையெறிகுண்டு

ஒரு பௌர்ணமியன்று
போதிமரம் விட்டெழுந்து
புத்தர் வந்தார் நிர்வாணம் நாடி
விளக்கற்ற எங்கள் வீடு தேடி

இராணுவச்சப்பாத்தால்
எட்டியுதைத்து தாழ்ப்பாளற்ற
எம்கதவை மண்டியிடவைத்தவர்
எங்களைத் தரிசித்த அதிர்விலுதிர்ந்த
புருவத்துளிகளைத் துடைத்தொழித்தார்
காட்டுப்பச்சை அங்கியால்

நாங்களென்றால்...

நான்கைப் பெற்றவளை
நாராக்கிக்கொண்டிருந்த
பத்து துப்பாக்கிதாரிகள்

துப்பாக்கிக்கட்டையிடியிடித்து
நசுங்கிய முகத்தில்
ஊதிப்போன உதடுகளால்
எந்தக் கடவுளின் பெயரையோ
சினிமாத்தனமான அற்புதத்துக்கு
ஓதிக்கொண்டிருக்கும் அப்பா

லிங்கயோனி சமர்புரியாமல்
யார் சாமான் பெரிசென்ற
குளியலறைப் போட்டிகளை
மறுஒளிபரப்பு செய்தவாறு
மரக்கட்டைகளான மூன்று தம்பிகள்

வந்தவர் அங்கியில்
காவி ஏன் தங்கவில்லையென
விழித்துக்கொண்டிருக்கும்
நான்

கைகூப்பிக் கதறும்
அப்பாவின் விரல்கள்
பூட்ஸ் கால்களில் கூழாவதை
புத்தர் அவதானித்தார்

மயிரைப் பிடித்துத் தூக்கியெறிந்து
மண்டைகள் சுவர்சித்திரமாவதற்குள்
மூன்று பொடியன்கள்
முண்டியடித்துக்கொண்டு
தன் அங்கிக்குள் பதுங்குவதைத்
தவறாமல் விமர்சித்தார்

மோட்சம் தரும் பாதக்கமலங்களிலிருந்து
பிடுங்கப்பட்டு விரிக்கப்பட்டு
இராணுவ சிகரெட்டுகளின் தீக்கண்கள்
புட்டத்தில் தீய்க்கப்பட்டு
அழுக்கேறிய விரல்கள் என்னுள்
ஆழங்காணத் துழாவுவதை
புத்தர் பதிவுசெய்தார்

அம்மாவின் அலறல்களை
ஆயுதபாணிகளின் குறிகள்
வாயடைத்தன
கல்யாண நாளுக்கு
கட்டிய புடவை
சிறுநீரில் திருநீறானது

தாத்தாவின் தேக்குமர
மேசைமேலிருந்து வேர்விட்ட
தாயின் தொடைகளில் குருதிவரிகள்
மேசைக்காலில் ஒரு பழைய கிறுக்கல்
'நான் உன்னை நேசிக்கிறேன் அம்மா'
என படிக்கச்சொன்னது

குண்டுமழையில் தூக்கிக்கொண்டோடிய
கால்கள் காற்றை உதைத்தன
பல்துலக்காதவர்களின் பற்றுகையில்
இரத்தம்கசியும் முலைக்காம்புகள்
பால்குடிக்கும் பருவத்திலென்
பற்கடிக்குச் சிரித்தவள் இராணுவ
தொடைகளால் பிணைக்கப்பட்டும்
தூர ஓடிவிடு ஓடிவிடு கண்மணியென்று
சைகை காட்டித் துவளும் கைகள்

புத்தர் அவர்களது
ஆண்மை வெடிப்பை ஆராய்ந்தார்:
"எப்படி இருக்கே?"
"சிகரெட்டு இருக்கா?"
"ஒரு புட்டி அரக்கு கிடைக்குமா?"
"சிறுபான்மையைக் கொளுத்த நீயும் ஏறுறியா?"
"ஏய்! எங்கடா உன் துப்பாக்கி?"

புத்தரின் அங்கியைத் தூக்கிப்பார்த்து
பூஜ்யமான அதிகாரச்சமிக்ஞையைப்
புரிந்துகொண்டனர்

தலைவணங்கி
பூஜைக்கு யாசகமிட்டு
வெளியேறும்போது காதில் கிசுகிசுத்தனர்
"நாங்கள் மறுபடியும் வருவோம்
நீ வயசுக்கு வரும்போது..."

புத்தர் பிச்சைபொருளைக்
கையிலெடுத்து அதனுள் சிறைப்பட்ட
போதிசத்துவர்களை ஆசிர்வதித்தார்
விசையை இழுத்து அம்மாவின்
பிறப்புறுப்பில் புதைத்தார்
விரிந்த கால்களை ஒருங்கிணைத்தார்

ஒரு பெண்ணின் புழைக்குள்
கையெறிகுண்டின் கைங்கர்யம்
குறித்து தியானித்த புத்தர்
அமைதி பிரசங்கத்துக்கு நகரும்போது
பெருவெடிப்பில் பளீரிட்டு
அம்மாவின் யோனித்தோல்
அவர் வாயில் ஒட்டிக்கொண்டது

புத்தரின் இராணுவச்சப்பாத்து
சூத்திர உச்சாடனம்
இப்போதும் என் காதுகளில்
அடியெடுத்து வைக்கிறது
இன்னொரு கையெறிகுண்டுவிசை இழுக்க
என் பெயரில்லாப் புதைக்குழித் தேடி
அவர் வந்து கொண்டிருக்கையில்

புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768