நரன் கவிதைகள்

Naran

 

 

 

 

 

 

 

 

தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி

தன் வீட்டைச் சுத்தப்படுத்தி

குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் .

பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .

 

தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி

தன் தெருவைச் சுத்தப்படுத்தி

குப்பைகளை .

நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான்

நகரத்தில் நோய்த் தொற்று அதிகம் .

கொசு மருந்து அடிக்க தன்னிடமே ஒப்புதல் வாங்கிக் கொள்கிறான் .

 

தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி

பின் நகரைச் சுத்தம் செய்து

கப்பலிலேற்றி அருகிருக்கும் நாட்டில் கொண்டு போய்க் கொட்டுகிறான் .

அதற்குத் தானே டெண்டர் விட்டுத் தானே டெண்டர் எடுத்துக் கொள்கிறான்.

 

***

 

ஒரு காட்டு மரம்

அது தன்னைத் தானே விதைக்கும்.

தனக்குத் தானே நீரூற்றித் தன்னைத் தானே வளர்க்கும்.

வேனலில் தனக்குத் தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும் .

கடும் புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை ,சிரசை ,

சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக் கொண்டு சரியும் .

எப்போதாவது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு கருகும் .

 

தனக்குத் தானே நாற்காலி செய்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும் .

இல்லையேல் மேசையாகி கை , கால் ஊன்றிக் குனிந்து கிடக்கும்

 

மரங்கள் நாற்காலிகளை விளைவிக்கிறது.

மரநாற்காலிகளில் அமர்ந்தபடி

மரங்களை விலை பேசும் மரக்கடைக்காரரை என்ன சொல்ல ….

மரக்கடைக்காரா…,

அங்கே கொஞ்சம் பசுமையான என் நினைவுகளின் மீதும் உட்கார் .

அதன் அடியிலும் உட்கார்.

 

***

 

இரவுக்கும் பகலுக்குமிடையே ஒரு சிறு கயிற்று  பாலம்

பூரானை மல்லாக்கக் கவிழ்த்தியபடி

கிட்டத்தட்ட  ஒரு மணி நேர நீளமுடையது அது .

அதன் மேல் பள்ளிச் சிறுவர்கள் கால் பந்து விளையாடுகிறார்கள் .

காதலர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள் .

பணியிடத்திலிருந்து அரசுஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள் .

அதன் ஒரு முனையில்; பகலிருக்கும் திசையிலிருந்து

ஒரு சிறுமி அவளின் முதல் மாதவிடாய் ஒழுக்கோடு

மறுமுனையில் இரவிருக்கும் திசை நோக்கி

ஒரு பேரிளம்பெண் அவளின் இறுதி மாதவிடாய் ஒழுக்கோடு…

அதே நிறம்தான் அந்தக் கயிற்றுப் பாலத்துக்கு.

***

 

ஆட்டுக்காரா…

சமண மலையின் உள்ளே 17ஆயிரம் தேரைகள்

 

நீ யாரை மேய்த்து கொண்டு செல்கிறாய் …

உன் ஆடுகளின் மேல் சிறு சிறு உண்ணிகள்

அதையும்தான் அழைத்துக் கொண்டு செல்கிறாய் மேய்ச்சலுக்கு ….

யாருக்காய் குழலூதுகிறாய் …

உண்ணிகள் மயங்குகின்றன …

 

ஆடுகள் உன் மனைவியையும் , தாயையும் உண்டு விட்டன .

உண்மைதான் .

அதன் கடைவாயில் வெண்ணிற பெண் முடிகள் ….

கடந்த வாரம் அதன் இணை ஆட்டின் கறுத்த முடிகளை

உன் கடை வாயில் பார்த்ததாய் நினைவு .

 

அதன் தகப்பனை விருந்துண்டீர்கள் அல்லவா.

உன் தகப்பனைப் புதைந்த இடம் தெரியும் அதற்கு

 

நேசம் மிகுந்த ஒரு ஆடு

அது  புதைந்த உன் தந்தையின்

திறந்த வாயின் இடையே வளர்ந்த  புற்களை

முத்தமிட்டபடியே உண்டு கொழிக்கும் .

 

கோபம் மிகுந்த ஒரு ஆடு

அது  புதைந்த உன் தந்தையின்

இரு தொடை நடுவே  வளர்ந்த புற்களை

கர முர…கர முரவென்று …

 

****

 

தளபதியாரே  …
உமது கணீர் உலோகக் குரல்கள் துருப்பிடித்து விட்டன.
முகபாடத்தைத் தாண்டி குதிரைகளின் வாய்களில்  நுரை தள்ளுகிறது. .
ஆடைகளில் ஒரு அங்குலத்திற்கு புழுதிகள் .
குதிரைகளின் பிடரி மயிர்களில் விந்துக் கறைகள்.
வேண்டுமென்றே பின்தங்கி வரும் படை வீரர்கள்
மற்றும் வழி தவறுபவர்கள்
தத்தம் போர் கருவிகளை விற்றுத் தீர்த்து  மதுவருந்துகிறார்கள்.
அல்லது  தாசிப் பெண்டிரோடு
கிருஷ்ணா  லாட்ஜ் – ல்  அறை  எடுக்கிறார்கள் .
மூன்றாம் ஜாமத்தில் கூடாரம் திரும்புமவர்கள் .
வேறொருவனின் போர்கருவிகளில் தம் அடையாளத்தைப் பதிகிறார்கள் .
அடுத்த நாளின் காலையில் எழுவர் வெறுங்கையர்.

போர்…போர் …
தூரத்தே களம் கண்டீரா?
வெற்ற்ற்ற்றி வேவேவேல் வீவீவீவீர வேல் ….
உமது குரல் ஏன் இவ்வளவு   தளர்கிறது .
காலையில் bp மாத்திரை போட்டீரா ?
கொஞ்சம் மதுவருந்துகிறீரா?
ஓய்வெடுங்கள் .  “கிருஷ்ணா  லாட்ஜ் ” அருகில்தான் இருக்கிறது .

***
செலவு  பிடிக்குமே?

1. உடை வாள்  –  1 –  உலோகம் – இரும்பு –   எடை – 7 கிலோ 400 கிராம்
2. குறுங்கத்தி   – உலோகம் – ஐம்பொன் (பிடியில் கல் வேலைப்பாடு) எடை –

துல்லியமாய் 350 கிராம்
3. வேல் கம்பு  -1 ( மர பிடிக்கு விலை இல்லை , அது நீங்கலாக எடை 1.2 கிலோ)
4. மற்றும் பொன் ஆபரணங்கள்
கங்கணம்-1 (15 கிராம்) 916 KDM
கடுக்கண் -2, (கல் எடைநீங்கலாக  -7 கிராம்,) 916 KDM
மோதிரம்-3, ( 13.5கிராம் )  916 இல்லை
கழுத்தணி – 1  35 கிராம்)   916 இல்லை ( குறிப்பு : செம்பு அதிகம் கலக்கப்பட்டுள்ளது )
அரைஞாண் – 1 (வெள்ளி எடை-113கிராம் )

 

1 comment for “நரன் கவிதைகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...