நெருங்கப்பூத்த மோமதி மலர்களை முத்தமிட்டதுண்டு

மனப் பிணியாளர்களுக்கு காதில் மருந்திடும் சிகிச்சையை

மேற்கொள்ளும் குடும்பத்தில் தனியாகப் பிறந்தேன்srishankar-1

மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில்

இப்போது அந்த ஊர் இல்லையென எனக்குத் தெரியும்

ஆரம்பக் கல்விச்சாலையில்

உடனிருந்தவளோடு சேர்ந்து திருட்டைப் பழகினேன்

பதிமூன்று வயதில்

புகைப்படங்களுக்கு சட்டகமிடும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டேன்

விளையாட்டு மைதானத்தின் கண்களுக்கு நானொரு முடவன்

வேலைகேட்டு அதற்கான கட்டடங்களின்முன் நின்றதில்லை

இளம் அவயங்களின் துணையோடு மணந்துநலுங்கும் பெண்கள்தான்

எனக்குள் ஊதாநிறப்பூ வளர்வதற்கான காரணமென நம்பினேன்

என்னை இணைத்துக்கொண்ட அமைப்புக்கு விசுவாசமாகச் செயல்படவில்லை

நான் புகைப்பதில் அதிக மையல் கொண்டிருக்கிறேன்

கிடாரிக்கன்றின் அம்மண அழகில் கிடந்தபோது அதன்

தொழுவத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதுண்டு

அரசு நூலகங்களிலிருந்தபடி சூரியன்களை நகர்த்தியிருக்கிறேன்

குதிரைவண்டிக்காரர்கள் சகவாசம் என்னைத் தொடர்ந்தது

அரசியல் தலைவர்களை நான் சந்தித்ததில்லைதான்

19 வயதில் பூத்தையலில் தேர்ந்த ஜென்ஸி அக்கா

ஆடையில் புலனாகியிராத மலர்களை தோன்றப்பண்ணி

அவற்றைப் பழக என்னை ஒத்துக்கொள்ளச்செய்தாள்

உறைபனிக்காலங்களில் கூடுதலாக என்னை பெரிஸ்த்ரோய்க்கா பாதித்திருந்தது

நானொரு ஏமாற்றுக்காரன் நிறையப் பெண்களுக்கு

சென்னைப் புறநகரிலிருந்து ஹம்பிக்கு பைக்கில்

ஒன்பது மணி நேரத்தில் சென்றடைந்ததுண்டு

ஒரு வெள்ளாட்டைவிட

ஆயுள் எனக்கு அதிகமென்று புரிந்துவைத்திருக்கிறேன்

தேநீர்க்கலை குறித்ததான ஒரு விவாதத்தின்போது

பாமியான் சிலைகள் சிதைக்கப்படுவதை செவியுறநேர்ந்தது

கரகாட்டத்தை விரும்பிப் பார்த்தேன்

இன்றும் வழிநடத்துகிற கனவுகளைப் பின்தொடர்பவன்தான்

பெளர்ணமியிரவொன்றில் கதம்பம் சூடியிருந்த பெண் சபித்தபோது

எனது குறி அழுகிவிடுமோ என நடுங்கினேன்

என் அன்றாடம்

குற்றஅறிக்கைகள் வாசிக்கப்படும் அரங்கமாக இருக்கிறது

27 வயதில் காதல் சுமைதாளாது கிட்டாரின் வயல்களில் வீழ்ந்துகொண்டிருந்தேன்

கொல்கத்தா நகர டிராமில் பயணித்ததில்லை

சண்டித்தனம்செய்யும் மொழிகள்தான் எனது புரவிகள்

ஜெக்ஜித்சிங் இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறேன்

நெடிய மணற்வனத்தில் அலைபடும் நீர்மையில்

இகானின் கருஞ்சிகப்பு நிற மனிதன் நெளிகிற ஓயா மனக்காட்சிகள் குலைத்தபடியிருக்கின்றன

வட்டக்கோட்டை சரித்திரத்தை வாசித்திருக்கிறேன்

தன்பால்புணர்ச்சி நாட்டம் அதிகரித்திருக்கவில்லை

எழுதும் காதல் கடிதங்களில் இன்னும்

இலக்கணப்பிழையிருப்பதாக திட்டு வாங்குகிறேன்

உண்டியல் குலுக்கியவாறு

சாலையில் உந்துகளுக்குக் குறுக்காக பாய்ந்திருக்கிறேன்

வெள்ளிவீதியார் எழுத்துகளை நான் வாசித்ததுண்டு

சிலர் கூடுதலாக அவரைத் தெரிந்துவைத்திருக்கின்றனர்

நிறுவன மீறலுக்காக சிறையில் நான் ஆடையின்றி சோதிக்கப்பட்டபோது

என்னை நிர்வாணப்படுத்தி திளைக்கும் பெண்கள் பிரசன்னமாகினர்

மலைவாசஸ்தல சிறிய ரயில்களில்

கையசைத்துச்செல்லும் குழந்தைகளைக் கண்டு அச்சமடைந்தேன்

இரவு உறக்கவில்லையாக புணர்ச்சியைப் பயன்படுத்தும் பருவம்

என்னைச் சந்தித்திருக்கவில்லை

நானறிவேன்

இங்கே அமரவைக்கப்பட்டிருப்பதில் பெண்ணின் இன்மையைsrishankar-2

போதையின் இரவில்

உறங்கும் சாலையோரவாசிகளை எழுப்பி துப்புக்கொடுப்பதுண்டு

பிறந்த தேதிக்கான ஆவணம் இல்லாததால் பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது

ஒருமுறை எக்ஸ்பிரஸ் அவென்யூ Tobacco Shop-ல்

Guillevic என்ற பெயரை தவறாக உச்சரித்த பேராசிரியருடனான

உரையாடலை விடியும்வரை நீட்டித்திருக்கிறேன்

மச்சுபிச்சுவோ சூரியக்கல்லோ

மொழிக்கசடர்களிடம் சிக்காது தப்பியதில் ஆசுவாசமடைந்ததுண்டு

எதுவும் செய்யவியலாதவனாக

நாட்கணக்கில் படுக்கையில் கிடந்திருக்கிறேன்

எனக்கு இன்ஸ்யூரன்ஸ் கிடையாது

நிழல் உலக வணிகங்களின் அறம் என்னை வசீகரித்திருக்கிறது

சிறுவயதில்

தூக்கிட்டுக்கொண்ட பெண்ணின் கவிழ்ந்த முகத்தைப் பார்த்திருக்கிறேன்

கிளிம்ட்டின் ஓவியங்கள்போல பின் அலங்கரிக்கப்பட்டதையும்

குன்றுகளில் சுவாசிக்கும் பாறைக்கீறல் அல்லது ஓவியங்களுடன்

வரலாற்றுக்குமுன்பு உறங்குவதுண்டு

எனது தாய்மொழியை சரிவரக் கற்றிருக்கவில்லை என்பதை

சந்தேகமின்றி தெரிந்துவைத்திருக்கிறேன்

அதேசமயம்

பெண்களின் அண்மை ஆதாரமானதென்று நம்புபவனாகவும்

வினோத வாசங்களால் அலைக்கழிக்கப்படுகிறவனாகவும்

ஒருக்கால்

இப்படிச் சொல்லத் தோன்றுகிறது

நிகழின் தூண்டிலில் சிக்கும் இறைச்சிக்கென

பசித்த மேய்ச்சல்நில ஓநாய்போல திரிந்தலைகிறேன் என்று

 

(To Nazim Hikmet)

 

 

 

1 comment for “நெருங்கப்பூத்த மோமதி மலர்களை முத்தமிட்டதுண்டு

  1. March 5, 2017 at 10:52 pm

    புதிய சொற்பாடு அலைகள் அலைகளாக நீள்கவிதையாக. ஷங்கர் ஒரு ஆச்சர்யம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...