பாரியின் ‘சத்து ரிங்கிட்` :வறுமையின் குறியீடு

kemiskinan1என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லாப் பின்னடைவுகளுக்கும் காரணமாக இருந்துவந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக்கல்வி பொருளாதாரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை எந்த நேரத்திலும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தது. 1960 களில் அரசு இடைநிலைப் பள்ளிகள் ஸ்கூல் பீஸ் விதித்திருந்தது. கல்விக் கட்டணத்தை ஸ்கூல் பீஸ் என்று சொல்லும்போதுதான் அதன் கடுமை உறைக்கும். மாதம் பன்னிரண்டு வெள்ளி என்று நினைக்கிறேன்.ஆண்டுதோறும் பாடப் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கியாக வேண்டும். எஸ்டேட்டிலிருந்து பள்ளிப்பேருந்துக்கு மாதம் கட்டணம் கட்டியாக வேண்டும். எனக்கு கைச்செலவுக்குக் காசு, பள்ளிப் பாட ஆசிரியர்கள் பாட வேளைக்கு உபயோகப்படுத்தும் பாட உபப் பொருட்களுக்குக் காசு என எங்கள் சக்திக்கு மீறிய செலவு என அன்றைய கல்வி முறையே சொற்ப வருமானத்தையும் பிடுங்கிக்கொண்டிருந்தது. என் கல்விப் பயணத்தை  இடையிலேயே முடக்க கருணையில்லாமல் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

1960-70களில் இடைநிலைப் பள்ளிக் கல்வியைத் தொடரும் தோட்டப்புற மாணவர் எண்ணிக்கை  மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. முக்கால்வாசிப்பேர் தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு ‘சொக்ரா’ வேலைக்குச் சென்றனர். அவர்களின் எண்ணிக்கை அதிகம். சொக்ரா வேலை சிறார்களுக்கென தோட்ட நிர்வாகம் ‘கரிசனத்தோடு’  ஒதுக்கியிருந்தது. அவர்களுக்கு அரைச் சம்பளம்தான். ஆனால் அவர்களை முன்பகல் இரண்டு மூன்று வரை வெயிலில் வேலை செய்ய வைத்த பிறகே அரைச் சம்பளம் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அதற்கெதிரான ‘சைல்ட் லேபர்’ சட்டம் வந்திருக்கவில்லை. பருவ வயதை அடையக் காத்திருக்கும் ஆண்பிள்ளைகள் வீட்டு வறுமை காரணமாக இவ்வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். வீட்டுச் செலவுக்கு உபரியாக  கூடுதல் வருமானம் கிடைப்பதால் பெற்றோர்களே அவர்களை சொக்ரா வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போதைக்கான வறிய நிலை உதிர்ந்தால் போதும் அவர்களுக்கு. வயிற்றுக்கு உணவு கிடைத்தால் எல்லாம் சம்மதம். முதலாளித்துவம் ஆசை காட்டி விரித்த வலையிலிருந்து தப்பி, இடைநிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தவர்களில் பலர் பொருளாதாரப் பின்புலமற்ற காரணத்தால் இடையில் படிப்பை உதறிவிட்டு நின்றவர்களும் உண்டு. அப்படியே தப்பிப் பிழைத்தவர்கள் மூன்றாம் படிவ அரசாங்கச் சோதனையை LCE (Lower Certificate of Education) எழுதியவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறாமை காரணமாக மீண்டும் தோட்டப்புற வேலைக்கு ஆவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்தத் தடைகளையும் தாண்டி SC/spm (school Cerificate அல்லது Sjil Pelajaran Malaysia சோதனையை எழுதித் தேர்ச்சிபெற்று பட்டணப்புற வேலை கிடைத்தவர்கள், தோட்டப்புற இருண்ட வாழ்க்கையிலிருந்து தப்பித்துப் போனவர்களாகவே இருப்பார்கள். இடைநிலைக்கல்வி கட்டணக் கல்வியாக இருந்த காரணத்தாலும் தோட்ட நிர்வாகம் குறைந்த ஊதியத்துக்கான வேலை வாய்ப்புகளை வழங்கிய காரணங்களுமே மேற்கல்வி வாய்ப்பு நடுத்தர, மேல்தட்டு  மனிதர்களுக்கானதாக மட்டுமே இருந்து வந்தது. ஏழைகளுக்கு அது ஓர் கரிய இருள் மண்டிய காலம்.

‘பாரி’ என்ற புனைபெயரில் எழுபதுகளில் நல்ல கதைகளை எழுதிவந்தவர் வீரசிங்கம். அவரின் ‘சத்து ரிங்கிட்’ சிறுகதை என் நினைவில் தப்பாமல் நிலைத்திருக்கும் ஒருகதை. என்னைப் போலவே இடைநிலைப்பள்ளி வாழ்க்கைச் சிக்கல்களை எதிர்நோக்கியவர்களுக்கு இக்கதை நெஞ்சில் மிக நெருக்கமான இடத்தைப் பிடித்துவிடும்.

தன் மகனின் பள்ளிப் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் ஒரு ஆயாவின் கதையைச் சொல்கிறது ‘சத்து ரிங்கிட்’. ஆயாக் கொட்டகைக்கு (ரப்பர் காட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் குழந்தை பராமரிப்பு இல்லம்) தமிழில் மொழிபெயர்த்ததால் அது அழகிய இடம்போல கண்முன் கொண்டு வருகிறதே தவிர, உண்மையில் அது ஒரு ஆரோக்கியமற்ற இடம். ஆயாக்கொட்டாய் என்று சொன்னால் அதன் அவலட்சண முகம் கண்முன் விரியத் தொடங்கிவிடும்.  தளர்ந்த, மலம் ஒட்டிய சிலுவாரைப் பிடித்துக் கொண்டு, மூக்குச் சளி ஒழுக, மூத்திர வாடையோடு அழும் எண்ணற்ற குழந்தைகளை அடைத்துவைக்கும் வசதியற்ற லயத்து வீடு அது. காய்ச்சலில், வயிற்றுப்போக்கில் அவதியுறும் குழந்தைகளையும், ரப்பர் காட்டு வேலைக்குப் போகும் பெற்றோரால் அரைநாள் கைவிடப்படும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் ஆயாவிடம் விடப்படும்.

விடிகாலையிலேயே ஆயாக் கொட்டாய்க்கு கிளம்பிக்கொண்டிருக்கும் கல்யாணி ஆயா, இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தன் மகன் பள்ளிக்குக் கிளம்பாமல் இருப்பதைப் பார்க்கிறார். அவன் ஏன் இன்னும் துயில் எழாமல் இருக்கிறான் என்று வினவ, அவன் சொல்லும் காரணத்தில் கதிகலங்கிப் போகிறாள். பேருந்துக்கு மாதக்கட்டணம் கட்டவில்லை என்றும் அதனால் பஸ் உரிமையாளர், இந்த முறை கண்டிப்பாய் இரக்கம் காட்ட மாட்டார் என்றும் சொல்கிறான். இரண்டு மாத பாக்கி இருப்பதை அவர் எல்லார் முன்னிலையிலும் கேட்டுத் தொல்லை செய்கிறார் என்றும் காரணம் சொல்கிறான். கல்யாணி திடுக்கிட்டு ‘உஸ்கூலுக்குப் போலனா படுப்பு கெட்டுப் போயுருமேயா.. தோ இரு வந்துர்ரேன்” என்று சொல்லி இருள் விழுந்த காலைக் கருக்கலிலேயே கைமாற்று வாங்க ஓடுகிறார். சுற்றிலும் கருமை இருள் கருணையில்லாமல் கவிந்திருக்கிறது. லயத்து வீடுகளில் எரியும் மண்ணெண்ணெய் திரி விளக்குகள் மினுக்கி மினுக்கி கும்மிருட்டுக்குப் போலி ரௌடிபோலச் சவால் விடுகின்றன. இத்தனைக்கும்  பேருந்துக் கட்டணம் ஒரு ரிங்கிட்தான். அதனை யாரிடமாவது கெஞ்சிக் கேட்டு அன்றைக்கு அவனை பள்ளிக்கு அனுப்பிவிடத் துடிக்கிறாள் ஆயா. முக்காடிட்டபடியே பனியிலும் குளிரிலும், சிலர் வீட்டுக் கதவைத்தட்டி வெட்கத்தைவிட்டு ஒரு வெள்ளியைக் கடனாகக் கேட்கிறார். எல்லாருமே சாக்குப் போக்கு சொல்லி கைவிரித்து விடுகிறார்கள். ஆயா கல்யாணி அதிகாலையிலேயே ஆயாக்கொட்டகைக்கும் போயாக வேண்டிய கட்டாயம் வேறு! காலை மஸ்டருக்குப் போய் வேலை செக்ரோலில் பேர் பதியும் முன்னரே பெற்றோர்கள் குழந்தைகளைத்தூக்கிக் கொண்டு ஆயாக் கொட்டகையில் விட வந்து நின்றுவிடுவர் என்ற தவிப்பு கிழவிக்கு. அவள் நேரத்தில் அங்கிருந்தால்தான் குழந்தைகளை வாங்கி பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில் தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இரு முனையிலிருந்தும் பாயும் அம்பிலிருந்து அவள் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய இரண்டும் கெட்டான் நிலை  .

நம்பிப் போனவர் எல்லாருமே கைவிரித்துவிட்ட நிலையில் அவள் சோர்ந்து வீடு திரும்பும் தருணத்தில் ‘கப்பலா’  நினைவு வருகிறது. கப்பாலா என்பவர் எஸ்ட்டேட் வேலை ஒன்றை குத்தகை எடுத்து, அந்த குத்தகை வேலையை முடிக்க தற்காலிகமாக வேலைக்கு ஆள் வைத்திருப்பவர். தனக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தையைப் பாவித்து எஸ்டேட் கப்பலாவிடம் போய் நின்று ஒரு ரிங்கிட்டைப் பெற்று மகனை பேருந்தில் ஏற்றிவிட்டு தன் காலை லட்சியத்தில் வெற்றி பெறுவதே கதை சொல்லிச் செல்கிறது.. ஆனால் ஒரு வெள்ளியை கடன் பெற்றுக்கோண்டு வரும் இருட்டு வேளையில் அவள் கால் பெருவிரல் நகம் செங்கல்லில் இடிபட்டு பிளந்து கொண்டு ரத்தம் கொட்டுவதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மகனை அன்றைக்குப் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும் என்பதே அவளின் சிதறாத குறிக்கோள்.

எழுபதுகளிலிருந்த தோட்டப்புற மக்களின் அறியாமையைத் தன் சிறுகதையின் மூலம் காட்டிச் செல்வதே அவரின் நோக்கம். அதே வேளையில் கதைக்குள் லட்சிய வாதத்தை பிரச்சார தொனி அகற்றி முன்னெடுத்திருக்கிறார். வறிய நிலை காரணமாகத் தன் குழந்தைகளின் கல்வியைத் தொடர முடியாத  மக்களுக்கான கதையாக அதனை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தோட்டப்புறச் சூழலுக்கு இது பொருந்தி வந்தது. பணமில்லையென்றால் படிப்பில்லை என்றாகிவிடும். இருக்கவே இருக்கிறது எஸ்டேட்டு வேலை வாய்ப்புகள். மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பார்கள் அப்போதைக்கான வயிற்றுத் தேவையையா? நாளைய ஒளிமயமான எதிர்காலத்தையா?

அப்போதைய கல்வி பெறுவதற்கான தடைக்கற்கள்  எதிர்காலக் கனவை சிதைப்பவை.  எனவே மக்கள் அன்றைய பசியைத் தீர்க்கவே வண்ணக் கனவுகளைப் பலி கொடுத்தார்கள்.

ஆயா என்ற குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் தனித்து வாழும்1f23975a-aa8f-4610-9dbb-fa116cfc9348 ஒரு சாதாரண குடும்ப மாது, கல்விக்கு வழங்கும் முக்கியத்துவமே கதையின் மையச் சரடு. மகனை எப்பாடு பட்டாவது தேற்றிவிட வேண்டும் என்ற ஆயா கல்யாணியின் லட்சியம் கதைக்குள் ஊடுறுத்து நிற்கிறது. காலைக்கருக்கலில் அவள் வெட்கத்தை விட்டு பிறர் வீட்டு வாசலில் நின்று கடனுக்குக் கெஞ்சி நிற்கும் இடங்களும், மலாய் மொழி தெரியாமல் பாதிச் சைகை மொழியில் ‘வெல்பேர் முகத்தோடு’ யாசகம் கேட்டு நிற்கும் இடமும், கால் பெருவிரல் அடிபட்டும் அதனை பொருட்படுத்தாமல் மகனுக்காக ஓடும் இடமும், கதைக்குள் அதன் வலிமை குறையாமல் எழுதப்பட்டுள்ளது.

விடிகாலை வேளையைக் காட்சிப்படுத்துதலும் துல்லியமாய் அமைந்திருக்கிறது. சாமக்காரர் அடிக்கும் தண்டவாள இரும்பு மணியோசை மக்கள் தூக்கத்தை தடாரென கலைக்கும் அதிர்வுகள் நம்மையும் அதிரச் செய்கிறது. சிம்னி விளக்குகள் மினுக்கி மினுக்கி எரிந்து பேரிருளை விரட்ட நினைப்பது, எறும்பு யானையிடம் எதிர்த்து மோதி மிதிபட்டுச் சாகும் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஓட்டமும் நடையுமாக ஆயா அவசரமாக வரும்போது ஒற்றையடிப் பாதையில் கிடந்த செங்கல் அவள் பெருவிரலைப் பதம் பார்த்து வடியும் ரத்தத்தின் சிவப்பையும் காட்டத்தவறவில்லை. அதிகாலை என்பது திரண்டு நின்று அச்சுறுத்தும் நிலையும் எழுத்தின் வழி காட்டும் காட்சியமைப்பு சோடை போகவில்லை

சத்து ரிங்கிட் என்ற கதையின் தலைப்பே படிமமாக விரிந்துவாசகனுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது. வறுமை என்ற சொல்லின் அர்த்தத்தை இதைவிட வேறு ஒரு குறியீட்டை வைத்துச் சொல்லிக் காட்டிவிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வெள்ளி என்பது அல்பத் தொகை. ஆனால் அது அன்றைய சூழலில், ஏன் இன்றைக்கும் ஏழைகளுக்குப் பெரிய காசுதான். மகனைப் பள்ளிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற இக்கட்டில் கையில் ஒரு வெள்ளி கூட இல்லாத அபலைத் தாயின் நிலையை சற்றே பச்சாதாபத்தோடு சிந்திக்க வைக்கிறது. வேளா வேளைக்குக் குறையில்லாமல் விழுங்கி புளித்த ஏப்பம் விடும் பொல்லாத மேல்தட்டுச் சமூகத்தின் மேல் நமக்குக் கோபம் வருகிறது. இப்படிப்பட்ட சமூகக் கட்டமைப்பின் மீது எல்லையற்ற சினம் கொதித்தெழுகிறது. ஒட்டுமொத்த தோட்டப் பாட்டாளிகளின் வறுமைக்குக் காரணகர்த்தாக்களாக இருந்த சுரண்டி வாழும் முதலாளியச் சமூகத்தின் மேல் ஆத்திரம் பொங்குகிறது. அதற்கும் மேலாக முதலாளிய தந்திரத்தைக் கையாண்டு, உழைப்பைச் சுரண்டித்தின்று,  கொழுத்த பணக்காரர்களாகி விட்டவர்களைத் ’தொர’ என்று விளித்து கூனிக் குறுகி நின்ற ஏழை அப்பாவிச் சனங்களின் வெள்ளந்தித்தனத்தை நினைத்துப் பார்க்கும்போது பரிதாப உணர்வும் பொங்குகிறது.

இருளின் திண்மையும், ஏழ்மையின் வன்மையும் கதையின் அழுத்தத்தை நிறுவியிருந்தாலும், கதைக்குள் தாய்மை பொங்கி வழிவதை படிமமாக்கப்பட்டிருக்கிறது,  தன் கால் விரல் அடிபட்டு நகம் கழன்று, குருதி கொட்டும்  நிலையிலும் ஆயாக்கொட்டகைக்கு வேலைக்குப் போயாக வேண்டும் அவள்.  அங்கே அவள் முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பராமரித்தாக வேண்டும். அக்கடா என்று உட்காரக் கூட நேரமில்லாமல், சதா அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்தவண்ணம் இருக்க வேண்டும். அவளின் பணி ஒரு தாயின் பணிக்கு நிகரானது. அத்தனை குழந்தைகளுக்கும்  அந்த ஒரு தாய்தான். அவள் நொண்டி நொண்டி, வலியில் துடித்து வேலையைக் கடமையாகச் செய்யப் போகும் படிமம் கதையை மேலும் வலிமையாக்குகிறது.

இக்கதையின் சில இடங்களில், அழகியல் தன்மை கதையோடு ஒட்டாமல்  வலிந்து திணிக்கப்பட்டதுபோல வெளிப்படுகிறது, கடன் கேட்டு அலையும் ஆயாவின் நிலைமையை மூன்று நான்கு இடங்களில், பாலுக்கு ஏங்கும் குழந்தையைப் போல என்றும், வாளியில் பாலிருந்தும் அழும் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கும்  ஒரு பெண்ணைப்போல என்றும், உடைந்துவிட்ட பால் போத்தலுக்கு மாற்றுப் போத்தல் கிடைத்துவிட்ட தெம்பில் என்றும் ‘பாலை’ மிச்சம் வைக்காமல் கறந்துவிடுகிறார். இந்த உவமைகள் சற்று செயற்கையாக அமைந்திருக்கிறது. கதைச் சூழலுக்கான தகுந்த உவமைகள் இவை என்று அவர் அபிப்பிராயப்பட்டிருக்கலாம். ஆனால் வாசகனுக்கு இந்தத் தேய் வழக்குகள் சோர்வு தட்ட வைக்கிறது. படைப்பாளனின்  எல்லா வகை அழகியல் கூறுகளும் வாசகனையும் மாற்றுக் கருத்தில்லாமல் ஊடுறுத்திச் செல்லவேண்டும்..

எழுபதுகளின் புனைவெழுத்தாளர்கள் சிலரின் சிறுகதைகள் சமூகப் பிரக்ஞையை முன்னெடுத்தாலும் அவை கலையமைதி பிறழாமல் இருந்தன. தன் கருத்தைக் கோடிட்டுக்காட்ட பிரச்சார தொனி காணக்கிடைக்காது. தொடுப்பு வளர்ச்சி முடிப்பு எனக் கச்சிதமான வடிவ நேர்த்தி கொண்டவை. சிறுகதைகளின் முடிவுகள் வாசகனைத் திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்ற பிரயத்தனம் கொண்டவை. அது எழுபதுகள் கதை சொல்லிகளின் மரபான சிந்தனை. தத்துபித்தென்று எழுதி பத்திரிக்கையில் கதை வந்தால் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் இப்போதைய நிலைக்குப் பெரிதும் எதிர்மாறானவை. அதனால்தான் இன்றைக்குக் கதை எழுத வருபவர்கள் பாலபாடமாக இதுபோன்ற கதைகளை வாசித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.

எழுபதுகளில் தமிழ்நேசன் நடத்திய பவுன் பரிசுக் கதை போட்டிகள் நமக்கு பத்துக்கும் மேற்பட்ட நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது. பாரியும் அந்தப் பிரசித்தி பெற்ற பட்டியலில் இடம் பெறுகிறார். இக்கதை தோட்டப்புறப் பின்னணியில் எழுதப்பட்ட  முத்திரைக் கதைகளில் முக்கியமானது.

மலேசியத் தமிழர்களின் அல்லது தென்னிந்தியர்களின் தோட்டப்புற வாழ்க்கைப் பின்புலம் இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. அதற்கான ஆற்றல்மிக்க தமிழ் எழுத்தாளர் கூட்டம் இங்கே மிகக்கம்மியாக உருவாகி வந்தார்கள். தமிழில் போதிய கல்வி அறிவு கிடைக்காமையும் அல்லது தேடிப் படிக்காமையும், இதற்கு முக்கியக் காரணங்களாக முன்வைக்கலாம். வாசிப்பதற்கான சிறந்த தமிழ் நாட்டு நூல்கள் மலேசியாவில் இல்லாமையும், இருக்கும் நூல்களின் விலை தமிழ் நாட்டைவிட நான்கு ஐந்து மடங்கு அதிகம் வைத்து விற்றமையும் உபரிக் காரணங்களாகச் சொல்லலாம்.

ஒரு புலம்பெயர் சமூகத்தின் இரண்டு நூற்றாண்டு வாழ்க்கையையும் முழுமையாக எழுதி முடிக்க முடியாதுதான். ஆனாலும் எழுதப்பட்ட வரை நிறைவாக இல்லை என்பதே என் கருத்து. தோட்டப்புற வாழ்க்கை என்பது கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. முதல் காலகட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கங்காணி முறையில் தென்னிந்தியர்களை தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்கு ஓட்டிகொண்டு வந்ததிலிருந்து தொடங்குகிறது. அடுத்தது இரண்டாம் உலக யுத்தகாலத்தில் அமெரிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு  ஜப்பானியர்களோடு பொருதிக்கொண்டபோது தென்னிந்தியர்கள் யானைகள் மோதல்களுக்கிடையில் நசுங்கிச் செத்த காலகட்டமாகும். ஜப்பானியர்கள் சயாம் பர்மா மரண ரயில் பாதை அமைக்க தென்னிந்தியர்களை கொத்தடிமைகளாக்கிய காலகட்டமும் இதில் அடங்கும். மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள்  ஒரு கருப்பு அத்தியாயமாக இதனைப் பதிவு செய்கிறது வரலாறு. இரண்டாம் உலக யுத்தததில் ஜப்பானை அடிபணிய வைத்த பின்னர் மீண்டும் பிரிட்டிசார் கெடுபிடியில் சிக்கித் தவித்தது மூன்றாவது காலகட்டமாகும். இவற்றை இன்னும் நம் இலக்கியவாதிகள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.

இக்காலகட்ட எழுத்தாளர்களாவது விடுபட்ட நம் மூதாதையர்களின் வரலாற்றை மீட்டெடுத்து  வெளிக்கொணரவேண்டும்.

1 comment for “பாரியின் ‘சத்து ரிங்கிட்` :வறுமையின் குறியீடு

  1. Kaveri
    March 2, 2017 at 9:12 pm

    அருமையான கதை, தோட்டப்புற நிலை அல்லது அன்றைய வரலாறு. இன்றைய இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள் படிவம் 3&5 சோதனைத்தாளில் அல்லது பயிற்சிகளில் இம்மாதிரியான கதைகளைப் போதித்தால் நம் வரலாற்றை உணர்த்திய, திருப்தி ஏற்படும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...