உயிர்க்காடு -இறுதி பாகம்

uyir 2திடுமென ஒலித்த ஒரு காரின் ஹார்ன் சத்தம் அவளை எழுப்பியது. ரோட்டைத் தாண்டி ஓடிய, ஒரு சிறுவிலங்கு அந்த வண்டியிலிருந்து தப்பி, அவள் இருக்கும் குகையை நோக்கிப்புகுந்து மறைந்தது.

‘இன்னும் ஏன் சில்வன் வரவில்லை என்று யோசனையுடன் ஆழ்ந்தாள் மெலிசா.

இரவு பத்தரை மணி அளவில், அவளுடைய கைத்தொலைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான் சில்வன். ‘இரவு 4 மணி வரை, உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரில் ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு எனது சைக்கிளில் பத்து நிமிடத்துக்குள், ஆட்மிரால்ட்டி மேற்கு சாலைக்கு வந்துவிடுகிறேன். நாம் எப்போதும் சந்திக்கும் இடத்தில் சந்திப்போம். ஒரு நீண்ட உன் முத்தத்திற்கு, என் உயிரையும் கொடுப்பேன்’ என்று எழுதியிருந்தான். வேலையெல்லாம் முடித்துவிட்டு நள்ளிரவு 11:30 மணிபோல தானும் படுக்கையறைக்குச் சென்று தூங்கும் முன், ’நல்லிரவு. உனது உடல் இறுக்கத்திற்காக நான் காத்திருக்கிறேன்’ என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுத்தான் மெலிசாவும் படுத்தாள். அவனிடமிருந்து ’ஓகே, நானும் காத்திருக்கிறேன், நல்லிரவு’ என்று பதில் செய்தி வந்தது.

அதிகாலை வீட்டிலிருந்து கிளம்பும்போது சில்வனுடைய செல்பேசிக்கு ஒரு செய்தி அனுப்பினாள் மெலிசா. பதிலில்லை. பதினைந்து நிமிடங்கள், அங்கு காத்திருந்தபின்னும் பதில்வராது காத்திருந்த மெலிசா, அவனுடைய கைப்பேசிக்கு அழைத்துப்பார்த்தாள். ஒரு பதிலும் இல்லை.

அரவம் உணர்ந்த அரவம் போல, அவளின் நுண்ணுணர்வு, யாரோ வருவதாய்ச் சொன்னதும், மெலிசா செடிகளை விலக்கி சாலையைப் பார்த்தாள். சாலையின் ஓரத்தில் மிகமெதுவாக, நிற்கப்போகும் வேகத்தில் வந்தது ஒரு கார். அந்தக்காருக்குப் பின்னே இன்னொரு கார் வர, முதலில் வந்த கார் மெதுவாக வேகம் எடுத்து, முன்னால் சென்று கடந்து மறைந்தது.

சிலநிமிடங்களுப் பிறகு, முதலில் மெதுவாக வந்த கார், இப்போது மீண்டும் வந்து, அக்குகைக்கு அருகில், மிக மெதுவாகச் சென்றது. அதிர்ந்தாள் மெலிசா. ’என்னைப் பார்த்துவிட்டார்களா? மீண்டும் வருகிறார்களே? யார் இவர்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? எனது ’ஒர்க் பெர்மிட்டை’ நான் எடுத்துக்கொண்டு வேறு வரவில்லையே? என்ன செய்யப்போகிறார்கள்? போலீஸ் வண்டியா? அப்படித் தெரியவில்லையே’ என்று நடுங்கினாள்.

கார் மிக மெதுவாக அச்சாலையின் இடப்புறமாய்த் தொடர்ந்து நகர்ந்தது. காரின் கண்ணாடி இறக்கப்பட்டு, உள்ளே இடதுபுறம் அமர்ந்திருந்தவன் புகைப்பதும், பேச்சுக்குரலும் கேட்டது.

“ரானே, இந்தப்பகுதியில் நிறைய வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கிறார்கள் போலும், வேறு வழியேயில்லை. எங்கு வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாய் இருக்கிறார்களோ, அங்கே வைத்து ஏதாவது செய்தால்தான் உண்டு. மிக அருமையான இடம் இது, இதைவிட்டால் இனி, இதுபோல் நமக்குக் கிடைக்காது. காரை நிறுத்து” என்றான் வேகமாக.

மீண்டும், “நிறுத்து!” என்றான் உரத்த குரலில் இடதுபுறம் அமர்ந்தவன்.

“இல்லை எலியாஸ், பின்னால் பார், ஒரு வாகனம் வருகிறது. நாம் திரும்பி வரலாம்” என்றான் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன்.

மெலிசா கலவரமானாள். என்ன நடக்குமோ? இங்கிருந்து எப்படித் தப்பிப்பது? ஓடிவிடலாமா?uyir 3 வெளிநாட்டு ஊழியர்கள் என்று ஏதோ பேசிக்கொண்டார்களே, என்னவாயிருக்கும்? வேண்டாம், எழுந்து கிளம்பி விடுவோம்.’ என்று அவள் எழ முற்பட, மீண்டும் வந்து, அந்தக்குகையின் முன் நின்றது அதே கார், மெலிசா, தன்னை அப்புதருக்குப்பின்னே இடுக்கிக்கொண்டாள். எங்கே பார்த்துவிடுவார்களோ என்று பயந்த அவள், அங்கு நடப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியின் உச்ச்சிக்கே சென்றாள்.

சடசடவென்று கண்ணிமைக்கும் சிலநிமிடங்களுக்குள், காரின் முன்னிருக்கையில் இருந்து இறங்கிய, நல்ல உயரத்துடன், திடகாத்திரமாக இருந்த ஒருவன், காரின் பின்பக்கத்தை திறந்து, குனிந்து, எதையோ ஒன்றைத் தூக்கி, அச்சாலையின் சரிவில், படக்கென்று உருட்டிவிட்டு, வேகவேகமாக ஓடிப்போய், காரின் முன்பகுதியில் ஏறிக்கொள்ள, நகரத்தொடங்கிய காரின் கதவை சிலநிமிடங்கள் கழித்தே அவன் மூடிக்கொள்ள, பறந்தது போல சென்று மறைந்தது கார்.

என்ன நடக்கிறது என்பதை விட, அதிர்ந்த அவளது கண்கள், உருட்டிவிடப்பட்ட அப்பொருளின் மீது ஓடிப் பதிய, வாய்விட்டுக் கதறினாள் மெலிசா.

மனதுக்கு நிம்மதியாக இருந்தது ரானேவுக்கு, “மிக்க நன்றி எலியாஸ்” என்றான், ஆனந்தப்பெருக்குடன்.

”இல்லை ரானே, ஸூஸா. நான் கண்டது உண்மையென்றால், நாம் சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டோம்” என்றான்.

“என்ன்னனன…. சொல்கிறாய்?” நூறு மடங்கு அதிர்ச்சியானான் ரானே.

“ஆமாம், வண்டியைத் திருப்பி, அங்கேயே விடு.”

“ஏன், எலியாஸ்? என்ன சொல்கிறாய்?

“சொன்னதைச் செய். உன்கூட ஒருவேலையையும் ஒழுங்காகச் செய்யமுடியாது. இதுபோன்று, ஒர்க்பெர்மிட் இல்லாமல்,”ஸ்பெஷல் பாஸில் இருக்கும் ஆட்களைவைத்து  வேலைசெய்யாதே என்று பலமுறை உனக்குச் சொன்னேன். நான் சொல்வதைக்கேட்காமல், என்னை மீறியும் நீ வேலைகளைச்செய்தாய். இப்போது, இந்த ஒர்க்கர். ’உட்லண்ட்ஸ் சிவிக் செண்டரின் கூரைப்பகுதியில் சிறுவேலை’ என்று சொல்லி, இவனை அழைத்துச்சென்றிருக்கிறாய். இரண்டு மீட்டர் உயரத்திலிருந்துதான் விழுந்தான், ஆனால் செத்துவிட்டான் என்று சொன்னாய். நானும் நம்பினேன். ஆனால், அவன் உடல் குளிர்ச்சியாய் இல்லை, வியர்த்துக்கிடக்கிறது. இதுபோதாது என்று, இன்னும் ஒரு சிக்கல்..”.

“என்ன சொல்கிறாய், எலியாஸ், என்ன சிக்கல்?”

“சொல்கிறேன், வண்டியை அங்கேயே விடு. ஆனால் அந்த இடத்திற்கு அருகில் நிறுத்தாமல், சற்றுத்தள்ளி இருக்கும் சாலையின் வளைவில் நிறுத்து.”

“ஏன்?”

“சொல்கிறேன், வா. சாலையின் ஓரமாக நாம் நடக்கக்கூடாது. காட்டின் உட்புறம் இருந்து, நாம் அந்த இடத்துக்கு வருவோம்.”

“ஏய், யார் நீ, என்ன செய்கிறாய் இங்கு? ட்ரூமேன் அதட்டினான் அவளை.
ரானேக்கு கைகால் நடுங்கியது. ‘இப்பெண் அனைத்தையும் பார்த்திருப்பாளோ? போலீஸில் சொல்லிவிடுவாளோ? என்ன செய்வது? இவளையும் அடித்துக்கொன்று இங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிடுவோமா? என்ன செய்வது, யாரும் வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்?’ மண்டைக்குள் அபாயச்சங்கு அதிரத்தொடங்கியது.

uyir 1ட்ரூமேனுக்கும் உண்மையில் பதட்டமாயிருந்தது. ‘இங்கே ஒருத்தி இந்த அதிகாலை வேளையில் இருப்பாள் என்று அவனும் நினைக்கவில்லை. ‘சரக்கு’ என்று சொல்லப்படும் போகப்பெண்தான் அவள், என்று முதலில் நினைத்தான். அவளது கண்களில் தெரிந்த கலவரமும் பயமும் அவள் அதுபோன்ற பெண்ணில்லை என்பதையும் அவள் அங்கு நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டாள் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. ஏதாவது செய்யவேண்டும். இவளையும் அடித்து இங்கேயே போட்டுவிட்டுப் போய்விடலாமா, இல்லை, இல்லை என்ன செய்வது? என்ன செய்யலாம்?’ பரபரவென்றிருந்தான் ட்ரூமேன்.

“ரானே, இப்பெண், தவறான தொழில் செய்வதற்காக இங்கு காத்திருக்கிறாள் என நினைக்கிறேன். அதுவும் இங்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களிடம். இந்தப்பெண்ணை நான் விசாரித்துவிட்டு வருகிறேன். நீ வெளியே நில். இவள் தப்பித்து ஒடுவதைப்போலவோ அல்லது வேறு ஏதேனும் செய்தால், நான் சைகை செய்கிறேன், உடனே காரில் இருக்கும் வாக்கி டாக்கியில் நமது கன்ட்ரோல் ரூமைத் தொடர்புகொள். யீசூன் நெய்பர்குட் போலீஸ் அதிகாரிகளை உடனே வரச்சொல்!” என்றான்.

ட்ரூமேனை அங்கு விட்டுச்செல்லத் தயங்கிய ரானே, அவனை விட்டால் இப்போது வேறு வழியில்லை என்பதால், வேண்டாவெறுப்பாய் அவனைப் பார்த்துக்கொண்டு நகர்ந்தான்.

மெலிசா, மயங்கிவிழாமல் இருக்க எவ்வளவோ முயன்றாள். சில்வனை இப்படிப் பார்ப்பாள் என்று அவள் நினைக்கவேயில்லை. ‘தூக்கிப்போடுகிறார்களே, என்ன ஆனது அவனுக்கு? கடவுளே? ‘வேலைபார்த்த கம்பெனியில் வேலை இல்லை, அதனால், வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள், ஆறுமாதங்கள்வரை ஸ்பெஷல் பாஸில் இருக்கலாம், அதற்குள் வேறுகம்பெனியில் வேலை தேடவேண்டும்’ என்று சொன்னானே? என்ன ஆனது? கடவுளே?’

“பெண்ணே, எழுந்திரு, உன் பெயர் என்ன? உனது ஒர்க் பெர்மிட்டை நாங்கள் பார்க்கலாமா? நானும் அவரும் கிரைம் பிராஞ்ச் போலீஸ்.”

“இங்கே பார், இங்கே நடந்ததெல்லாம் எங்களுக்கான ஒரு ஒத்திகை. அது உண்மையான உடல் இல்லை, சிறிது நேரத்தில் எங்கள் ஆட்கள் வந்து அதை எடுத்துச்சென்றுவிடுவார்கள். அதை விடு; நீ சொல். உனது ஒர்க் பெர்மிட்டைப் பார்க்கலாமா நான்?

“………………………………………”

அவளைப் பார்த்தான் ட்ரூமேன். காலையும் தொடையையும் இறுக்கமாக்கிய வெளிர்சிகப்பு லெக்கிங்க்ஸ் உடையில், கால்களை குத்துக்காலிட்டு, இறுக்கிவைத்துக்கொண்டு, கைகளை இறுக்கி, மார்புக்கு முன்னே குறுக்கிக்கொண்டு, பிதுங்கிக்கிடந்தாள். இறுக்கிவைத்த கால்களும், அந்த முகபாவனைகளும் எங்கோ தொலைத்திருந்த அவனின் நினைவுக்குறடுகளிலிருந்து ஏதோ ஒரு சீட்டைப்போல ஒன்றை உருவிக்கொண்டு வெளியே வந்திருக்கவேண்டும் ட்ரூமேனுக்கு. உடலளவில் விரிவானான், மனதளவில் குறுங்கினான்.

“உனது ஒர்க் பெர்மிட்டைப் பார்க்கலாமா நான்?

“………………………………………”

“இங்கே பார், உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறேன், எனது உடன் வந்த அதிகாரிவேறு இங்கு இல்லை. நான் மட்டும் தான், நான் சொல்வதைக் கேட்டால் உன்னை விட்டுவிடுகிறேன். இல்லையேல், தவறான தொழில்செய்யக் காத்திருந்தாய் என, சிறைக்குச் செல்லவேண்டியிருக்கும் நீ. என்ன சொல்கிறாய்?”

“………………………………………”

“இந்தா,”

கொடிச்சியாய் மனது, சில்வனை நோக்கிக்கிடக்க, எதிரில் நின்றவனுடைய கைகள் கொடுத்ததைப் பிடித்துக்கொண்டாள் மெலிசா. செந்நாயின் வாலைப்போன்றிருந்த அது, அவளது வாய்க்குள் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவளைத் தின்றது.

நீண்ட மூச்சின் வழியே அங்கு நின்ற அவனைப் ’போ’ என்று படக்கென்று தள்ளிவிட்டு, எழமுயன்றாள் மெலிசா. அவளது தலையை இரு பிளவுகளுக்குள்ளே இடுக்கிக்கொண்டதைப்போல வைத்துக்கொண்டு, அழுத்த முயன்ற அவன், தன் கையில் செல்போனைப் பிடித்தபடி நின்றிருந்தான்.

மயங்கி விழுந்த மெலிசா, சில நாழிகைகளில் விழித்து எழ, அவர்கள் இல்லாததைக் கண்டு, பரபரவென்று கீழே, சரிவை நோக்கி ஓடினாள்.

அவன் ’மருதய்யா செல்வன்’ என்று, அருகினில் சிதறிக்கிடந்த ’வெப்பமூட்டி இணைத்த நெகிழி குறுஞ்சான்றிதழ்’ ஒன்று சொல்வதைக்கூட நோக்காமல், சில்வனை எடுத்துத் தன்மடிக்கருகில் வைத்துக்கொண்டு, அவனுடைய மார்பில் இருகைகளையும் வைத்து ஒன்று, இரண்டு, மூன்று என அழுத்திக்குத்தியும் பிறகு அவனுடைய வாயின் மேல் தன்வாயை வைத்து, உதடுகளைக் குவித்து, வேகமாய் ஊதவும் ஆரம்பித்தாள் மெலிசா.

‘அவளின், அந்த நீண்ட முத்தத்திற்காக எதையும் செய்வதாய்ச் சொன்ன’ செல்வன், எழாமலா போய்விடுவான்?’

1 comment for “உயிர்க்காடு -இறுதி பாகம்

  1. Appu
    June 25, 2023 at 7:51 pm

    அருமை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...