கவிஞர் யூமா.வாசுகி மலேசியாவில் இருந்தபோது கோபி கிருஷ்ணா பற்றிய பேச்சு அடிப்பட்டது. அவரது முதலும் கடைசியுமான விரிவான நேர்காணல் ஒன்றை யூமா. வாசுகி முன்பு செய்திருந்தார். முக்கியமான நேர்காணல் அது. அதை வல்லினம் வாசகர்களுக்காக மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்கிறோம். – ஆர்
பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஏதோ மொழிபெயர்ப்பு வேலை தொடர்பாக சி. மோகனுடன் கோபிகிருஷ்ணன் தங்கியிருந்தபோது நான் அங்கே செல்கிற சூழல் அமைந்தது. அந்த மாலைப் பொழுதில் கொஞ்சம் மது அருந்திவிட்டு நானும் கோபியும் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே அவருடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. தியாகராய நகர் ரங்கநாதன் தெரு சாந்தி காம்ப்ளக்சில் ‘ஆர்மன்’ ஆலோசனை மையத்தை கோபியும் சஃபியும் நடத்திய காலத்தில். அவரை நான் பார்ப்பதற்கு முன்பு ‘உனக்கும் உங்களுக்கும்’ என்ற என் சிறு கவிதைத் தொகுப்பைப் படித்திருந்தார். முதல் சந்திப்பிலேயே ‘உங்கள் புத்தகத்திற்கு யாரும் மதிப்புரை எழுதியிருக்கிறார்களா? இல்லையென்றால் நான் எழுதித் தரட்டுமா?’ என்று மிகவும் பணிவுடன் அவர் கேட்டது வித்தியாசமாயிருந்தது. காலவரிசை சரியாக நினைவில்லை.
அதற்கு முன்போ பின்போ, கோபியின் ‘மிகவும் பச்சையான வாழ்க்கை’ சிறுகதையை ‘குதிரை வீரன் பயணம்’ இதழில் வெளி யிட்டிருந்தேன். சென்னையில் அவ்வப்போது எங்கெங்கு வைத்தோ சில சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் நேரிட நேர்ந்து சில வார்த்தைகள் பேசியிருக்கிறோம். இந்த வகையில்தான் தொடர்பு. பாளையங் கோட்டையில்தான் மனதாழ்ந்த முனைப்புடன், அக்கறையுடன், லேசான போதையும், இரவின் ஏகாந்தமும் தந்த சீராட்டலில் ‘நண்பர்கள்’ எனத்தக்க ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். விரிவான பேட்டி எடுக்க வேண்டும் என அப்போது தோன்றிய விருப்பத்தை ‘மழை’க்காக சாதிக்க முயன்றேன். கோபி அனுமதியளித்தார். குறித்த நாளில் அலுவலகத்திற்கு வந்த கோபி பேட்டி தொடங்கும் போதே’ என்னைப் பற்றி நானே சொல்லிவிடுகிறேன் – கேள்விகளைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்’ என்றார் அதனடிப்படையில் ஆரம்பித்தது அவரது விவரணை.
வார்த்தைகளின் மூச்சு முட்டலில் திகைத்து இருவரும் ஸ்தம்பித்த தருணங்களில் அடிக்கடி வெளியே வந்து தேநீர் அருந்தப் போனோம். சிகரெட்டுகளின் துணைகொண்டு மீதுற்ற இறுக்கத்தை சற்றே இளக்கிக்கொள்ள முயன்றோம். தனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்த வாழ்வின் சித்திரத்தை நினைவு கூரும்போது சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார். கேள்விகளுக்கான அர்த்தமோ இடப்பொருத்தமோ கூட இந்த நேர்முகம் சம்பந்தப்பட்டு இல்லை. பேச்சின் பின்னணியாக பக்கத்து வீடுகள் ஒன்றிலிருந்து யாரிடமோ தொடர்ந்து அடி வாங்கி தன் கதறலின் மூர்க்கத்தை மேலும் மேலும் அதிகரித்த ஒரு சிறுமியின் நிராதரவுக் குரல் தாழிட்ட கதவின் இடுக்கு வழியாக கசிந்தபடியிருந்தது. பேச்சு முடிந்து வெகுநேரம் நீடித்த சஞ்சலமான அமைதியில் “நான் சொன்னதெல்லாம் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா” என்று கேட்டார் கோபி.
***
நான் 23 ஆகஸ்ட் 1945இல் மதுரையிலே ஜடாமுனி கோயில் தெரு, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பிறந்தேன். எனக்கு இப்போ வயசு 56. முதல் தம்பி பெயர் நாகராஜன். எம்.எஸ்ஸி., எம்.எட்., படித்திருக்கிறான். அவன் திருவெற்றியூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அடுத்து தங்கை மீரா. தங்கை கணவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் (PARKINSONS DISEASE). கழுத்து, கைகள் ஆடிக்கொண்டே இருக்கும். அதனால் அவர் எந்த வேலைக்கும் போக இயலவில்லை. மீரா தன் மகனிடமிருந்து பண உதவி பெற்று வாழவேண்டியிருக்கிறது. மீராவுக்குப் பிறகு ஹம்ஸா. திருவண்ணாமலையில் எய்ட்ஸ் ப்ராஜக்டில் வேலை செய்கிறாள். அவளுக்கு வயது 50. அடுத்த தங்கை இந்திராவின் குடும்பம்தான் இருப்பதிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். பிளாட்பாரத்தில் கண்ணாடி வளையல் போட்டு வியாபாரம் செய்கிறார். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கிறது அவர்களின் கடை. இந்திராவுக்குப் பிறகு உள்ள தங்கை கீதா பி. எஸ்ஸி ஸுவாலஜி படித்தவர். காஞ்சிபுரத்தில் நல்ல வசதியான நிலையில் வசிக்கிறார்.
அவர் கணவர் உதயகுமார், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தில் வேலை செய்கிறார். கீதாவுக்குப் பின்னுள்ள தம்பி தேவராஜன் பி.டெக்., எம்.எஸ் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். மிகவும் வசதியான குடும்பம் இவர்களுடையதுதான். தேவராஜன் மனைவி அமுதாவும் எம்.எஸ். கம்ப்யூட்டர் படித்தவள்.பள்ளியிறுதி வரையிலும் மதுரை வாசம். படித்தது சௌராஷ்ட்ரா ஹைஸ்கூல். அது 1961ஆம் ஆண்டில். அப்பாவின் பூர்வீகம் பரமக்குடி.
சென்னையில் துணிக்கடை ஒன்றில் அப்பாவுக்கு வேலை. தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. மதுரை எம்.எஸ். சுப்பைய்யர். சௌராஷ் டிரர்கள் தங்களை பிராமணர்கள் என்று நினைத்துக்கொண்டு தங்கள் பெயரின் பின்னால் பிராமண ஒட்டுக்களைப் போட்டுக் கொள்கிறார்கள். என் அப்பா பெயர் என்.பி. கிருஷ்ணமாச்சாரி, மாமனார் பெயர் கோபால் ராவ், தாத்தாவின் பெயர் சுப்பையர். சௌராஷ்டிரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். அம்மா வழி தாத்தா இவர். நிலம் நீச்சுடன் மிகவும் வசதியாக வாழ்ந்தவர் தாத்தா. சொந்தமாக கதர்க்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார். கதர்க்கடையை தாத்தா மூடிவிட்ட பிறகு அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய் விட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யுமளவு பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அம்முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டார். பாட்டிக்கு மதுரைதான். அப்பா அம்மா மட்டும்தான் சென்னையோடு தொடர்புடையவர்கள். தாத்தாவின் மனநோயின் பொருட்டு பாட்டி அவரைக் குணசீலத்தில் சேர்த்தாள். ஒரு மண்டலத்திற்கு, தாத்தாவின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு ஆட்கள் அவருடன் இருந்து அப்போது பார்த்துக்கொண்டார்கள். ஒரு மண்டலம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே தாத்தா இறந்து போனார். அவர் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. உடல் வெகுவாக மெலிந்திருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில் பி.ஏ. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். பிரசிடென்சி காலேஜ் பி.ஏ.சைக்காலஜி. 1962 லிருந்து 65 வரை முதலாமாண்டு படிக்கும்போது அம்மா அப்பாவுடன் தான் இருந்தேன். கணக்கில் மிகவும் பின்தங்கியவன் நான். எஸ்.எஸ்.எல்.சி.யில் கணக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது. பால்யத்தில் நான் நன்றாகப் படித்ததனால் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு முன்னேற்றப்பட்டேன். நான்காம் வகுப்பு கணக்குப் பாடம் படிக்க முடியாமல் போய் அந்தப் பிரச்சினை இன்றும் தொடர்கிறது.
பி.ஏ. ஆன்ஸிலரி புள்ளிவிவரவியலும் லாஜிக்கும். புள்ளிவிவரவியல் பாஸ் பண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆரம்பத்தி லிருந்தே, எஸ்.எஸ்.எல்.சி. காலத்திலிருந்தே சைக்காலஜியில் ஆர்வம். தாத்தா இறந்த பிறகு அந்த ஆர்வம் கூடுதலாகியது.
கோ எஜுகேஷன் கல்லூரி அது. இயல்பிலேயே கூச்ச சுபாவ முடையவன் நான். பெண்களிடம் பழகுவதில் கூச்சம் மிக அதிகமா யிருந்தது. இதற்குக் காரணம் என் பாட்டிதான். பாட்டி வீட்டிலேயே பஜனை மண்டலி வைத்திருந்தாள். வீட்டில் சிறு கோயிலும் இருந்தது. எல்லா தெய்வ விக்ரகங்களும் உள்ள கோயில். தினமும் காலையில் பூஜை நடக்கும். பூஜையை நான்தான் செய்யவேண்டும். மாலைகளில் பஜனை நடக்கும். எட்டாம் வகுப்பு வரையிலும் பூஜை செய்வதில் பாட்டிக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பூஜைக்கு, பஜனைக்கு வரும் எல்லாப் பெண்களையும் உறவு முறையில் மாமி, அக்கா, அத்தை என்றுதான் அழைப்பேன். இதனாலெல்லாம் கூச்சம் உருவாகிவிட்டது. பாட்டியினுடையது பெரிய வீடு. சுமார் இருபது பெண்களுக்குமேல் வழிபாட்டிற்கு வருவார்கள்.
அரசு கலைக் கல்லூரியிலிருந்து எகனாமிக்ஸ் படிக்கவும் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலிருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவும் மாநிலக் கல்லூரியில் உளவியலுக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நான் உளவியலையே தேர்வு செய்தேன். சீட் கிடைப்பது அப்போது மிகவும் எளிது. நன்கொடைகளோ சிபாரிசுகளோ தேவையில்லை. மூன்றாம் வருடம் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் மானசீக காதல் ஏற்பட்டது. அந்தப் பெண் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நான் மாலை நேரத்தில் ஹிந்தி டியூசன் எடுத்தேன். அந்தப் பெண்மீது எனக்கு முழு ஈடுபாடு இருந்தது. அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு, காதல், உணர்ச்சி வேகம். இதைத்தான் CALF LOVE என்று சொல்வார்கள்.
என் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு வீடு வறுமையினால் சூழப்பட்டுவிட்டது. என்னை வேலைக்குப் போகச் சொல்லி அப்பா தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டிருந்தார். நான் முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே ‘நீ படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போ. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்’ என்று சொன்னவர்தான் அப்பா. நான் விடாப்பிடியாகப் படித்தேன். படிப்பை முடிப்பதற்கு எனக்கு மூன்று நண்பர்கள் உதவினார்கள். ஹிந்தி டியூசனிலிருந்து எனக்குக் கொஞ்சம் பணம் வந்தது.மெட்ராஸ் எஜுகேஷனல் ரூல்ஸ் (92 எம்.இ.ஆர்) படி ஆஃப் ஃபீஸ் கன்ஸஷன் கொடுத்தார்கள். அதன்படி நான் பாதியளவு பணம் கட்டினாலே போதும். அரிஜன் வெல்ஃபேர் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. என் அம்மாவின் தம்பியாகிய மாமா வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார். 5 ரூபாய் அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. அதை வைத்துச் சமாளித்துப் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு டி ஷர்ட் மட்டும்தான் இருந்தது. மூன்று வருடமும் இதே நிலைதான்.
பி.ஏ. இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த போது என்.எம்.பதி அறையில் தங்கியிருந்தேன். காலையில் 2 இட்லி சாப்பிடுவேன். மதியச் சாப்பாடு பெரும்பாலும் கிடையாது. மாலையில் நான் ஹிந்தி டியூசன் எடுக்கும் பெண் (அவள் பெயர் அனுராதா) வீட்டில் ஒரு கப் காபி கொடுப்பார்கள். அதுதான் சாப்பாடு போல. இரவு திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அரை கிளாஸ் பால் மற்றும் 2 பன்கள். அதோட சரி.
1965இல் மூன்றாமாண்டு படிக்கும்போது சமூக உளவியலாளர் ஒருவரிடத்தில் அவரது ஆராய்ச்சிக்குத் தரவுகள் சேகரித்துத் தரும் வேலையை இரண்டு மாதம் செய்தேன்.
ரிசல்ட் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் ‘மீட்த சேலஞ்ச்’ (இந்திய பாகிஸ்தான் போர் பற்றிய கண்காட்சி)ல் கண்காட்சி விரிவுரையாளராக ஐந்து நாட்கள் வேலை பார்த்தேன். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 5 ரூபாய் சம்பளம்.
பிறகு பாரத் சேவக் சமாஜத்தின் சார்பாக வீடு வீடாகப் போய், வாங்கும் மளிகை சாமான்களின் விலையைப் பற்றி – எவ்வளவு ரூபாய்க்கு என்ன பொருள் வாங்குகிறார்கள் – தகவல் சேகரிக்கும் வேலையை இரண்டு மாதங்கள் செய்தேன். இதில் மாதம் ரூ 100 சம்பளம்.
ஓரியண்டல் ஃபயர் அண்டு ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் – இல் குமாஸ்தா உத்தியோகம் ஒரு வருடம் ஏழரை மாதங்கள் பார்த்தேன். இங்குதான் நான் டேபிள் டென்னிஸ் கற்றுக்கொண்டேன். இரண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன் – அரசு மருத்துவமனை மன மகிழ் மன்றத்தில் SINGLE-ல் RUNNER ஆகவும் DOUBLES-ல் WINNER ஆகவும் டேபிள் டென்னிஸ் ஓர் அற்புதமான விளையாட்டு. எல்லா அலவன்சும் சேர்த்து மாத சம்பளம் 253 ரூபாய். இந்த வேலை தற்காலிகம் தான்.
அடுத்து ஒரு அரசு வேலை கிடைத்தது. லோயர் டிவிஷன் கிளார்க். ஆல் இந்தியா ஹேண்டிகிராஃப்ட்ஸ் போர்டில். சென்னையில்தான். 67லிருந்து 69 வரையில் ஒரு வருடம் நான்கு மாதங்கள். மாத சம்பளம் ரூ. 300. அப்போது மாலை வகுப்பில் டிப்ளமோ இன் ஆந்த்ரோபாலஜி (மானிடவியல்) மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் சேர்ந்தேன். இது இரண்டு வருடப் படிப்பு. புரபேஷன் பீரியடிலேயே அரசு வேலையை ரிஸைன் செய்துவிட்டேன்.
அரசு பொது மருத்துவமனையில் செயற்கை அவயவங்கள் நிலையம் – புனர்வாழ்வு மையத்தில் அடுத்த வேலை. அது கைகால் இழந்தோருக்கான புனர்வாழ்வு மையம். என்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு வேலையை அங்கே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மார்க்கண்டேயன் என்பவர்தான் இந்த ப்ராஜக்டின் தலைவர். அவர் என் கல்லூரியில் வகுப்புத் தோழராயிருந்தவர். என்னைவிட ஓர் ஆண்டு மேல் வகுப்பில் படித்தவர்.
அரசு வேலையை 11-4-69இல் ரிஸைன் செய்துவிட்டு 12-4-69இல் இந்தப் புது வேலையில் சேர்ந்தேன். 69இல் 23 அல்லது 24 வயது இருக்கும் எனக்கு. இந்த வேலை திருப்திகரமாக இருந்தது.
உளவியல் பரிசோதனை நடத்துதல்தான் வேலை. நோயாளிகளை பேட்டி கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுதவேண்டும். மாதம் 550 ரூபாய் சம்பளம். வேலை முடியும்போது தோராயமாக, 1974 வரையில் 5 வருடங்கள் இந்த வேலையில் இருந்தேன். இந்த வேலைதான் வாழ்க் கையில் பெரிய திருப்புமுனை. எப்படியென்றால் முதலில் ஒன் இயர் ரிஸர்ச் அன்டு டெமான்ஸ்ட்ரேஷன் ப்ராஜெக்ட் ஆக இருந்தது. அதில் ஒரு கிறிஸ்துவப் பெண். என் வயதுதான் இருக்கும். அவள் என்னுடன் நெருங்கிப் பழகினாள். பிரதி ஞாயிறு எங்கள் வீட்டிற்கு வருவாள். அவளுக்கு நான் ஆங்கில இலக்கணம் டியூசன் எடுப்பேன். அவள் ரொம்ப அழகு. என்னைவிட உயரம். அந்தக் காலத்து கே.ஆர். விஜயா சாயல்ல இருப்பா. ஒன் இயர் ப்ராஜக்ட் முடிந்தவுடன் அவள் போய் விட்டாள். நான் தொடர்ந்தேன். அவள் மேல் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருந்தது. அதை காதல் என்று சொல்லமுடியாது. அவள் சென்று வெகுநாட்களான பிறகு அவளிடமிருந்து ஒரே ஒரு லெட்டர் வந்தது. இந்த சமயத்தில் அடுத்த ப்ராஜக்ட் தொடரும்போது என் கல்யாணத்திற்கான ஆயத்தங்களை என் பெற்றோர்கள் 72-இல் செய்தார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தக் கிறிஸ்துவப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தாள். நான் அவளிடம் ‘என் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள்’ என்றேன். அவள் ‘இனி நாம் பழைய மாதிரி பழக முடியாதே’ என்றாள். இதுதான் இண்டிகேஷன். இதன் மூலம் தான் அவளுக்கு என்மீது காதல் இருப்பது எனக்குத் தெரிகிறது. அவள் பெயர் நான்ஸி.
அந்தக் கிறிஸ்தவப் பெண்ணிற்கு ஏற்கெனவே ஒரு காதல் ஏற்பட்டு அதில் அவள் தோற்றிருந்தாள். எனக்கும் ஒரு காதல் தோல்வி முன்பே இருந்தது. நான் வேலை செய்து கொண்டிருந்த அரசு பொது மருத்துவ மனையில் (ஒரு வருட ப்ராக்டிஸ் முடிந்து நான்ஸி சென்ற பிறகு) ஒரு ஃபிஸியோதெரபிஸ்டும் வேலை பார்த்து வந்தாள். அவள் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவள். அவளுக்கு தன் கணவனைத் தவிர வேறு தொடர்பு இருந்ததுதான் விவாகரத்திற்கான காரணம். அவளுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உண்டு. ஃபிஸியோதெரபிஸ்டின் மீது ஆழமான காதல் கொண்டிருந்தேன். என் திருமணத்திற்கு முன்பு நடந்தது இது. காதல் வேகத்தால் உந்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடுத்தேன். அந்தக் கடிதம் பாலுணர்வின் வேகத்தில் எழுதப்பட்டது. மிகவும் கொச்சையானது. அதை அவள் மட்டும் படிக்காமல் சக ஊழியரான ஆண் ஃபிஸியோதெரபிஸ்டிடமும் படிக்கக் கொடுத்துவிட்டாள். அது மட்டுமின்றி அவள்பால் ஏற்பட்ட பாலுணர்வு எழுச்சிக்கான வடிகால் என்ன என்று புரியாமல், நான் ஓர் அருவருப்பானவன் என்று கருதிக்கொண்டு மிகவும் குழம்பிய நிலையிலும் குற்ற உணர்விலும் உருக்குலைந்திருந்தேன். அவளுக்கு என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. இது எனக்கு பெரிய மனப்பிரச்சினையாகிவிட்டது. என் கடிதத்தை எல்லா ஃபிஸியோதெரபிஸ்டுகளும் மற்றவர்களும் படித்துவிட்டது போலவும் எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது போலவும் ஒரு மாய உணர்வால் பீடிக்கப்பட்டேன். முதன் முதலாக மனதளவிலான பாதிப்பு இதுதான். இந்த மாய உணர்வு என் காதுகளில் மாய ஒலியாகக் கேட்க ஆரம்பித்துவிட்டது. ‘நீ மிகவும் மோசமானவன்… நீ மிகவும் பச்சையானவன்… நீ ஒரு காமுகன்… நீ அசிங்கம் பிடித்தவன்…’ என்று என்னை எல்லோரும் திட்டுவதுபோல; கெட்ட வசவுகளால் என்னைத் துன்புறுத்துவதுபோல. என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு சைக்யாட்ரிஸ்டை பார்க்கும்படி அறிவுறுத்தினார்.
டாக்டர். தைரியம் என்பவரைப்போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். என் சீனியரான பால கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் பிரிவில் கிளினிக்கில் சைக்காலஜிஸ்ட் ஆகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் என் பிரச்சினைகளைச் சொன்னபோது, அவர் என்னை டாக்டர் சாரதா மேனனிடம் அழைத்துச் சொன்றார்.
இந்த உளவியல் சிகிச்சையில் முக்கியமானது என்னவென்றால் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இது அவசிய மானது. நல்லபடியாகக் குணமாகிக்கொண்டு வருகிறது என்று தெரிந்தால் மாத்திரைகளின் வீரியத்தைக் குறைத்துக் கொடுப்பார்கள்.
இந்தச் சமயத்தில்தான் அந்தக் கிறிஸ்துவப் பெண் நான்ஸி வந்து என்னை மீட்டாள். சாந்தோம் தமிழ் சர்ச் பாண்டியன் பாதிரியார்தான் எனக்கு ஞான ஸ்னானம் கொடுத்தது. உண்மையில் நான் கடவுள் நம்பிக்கையாளன் அல்ல. என் கிறிஸ்துவப் பெயர் கே. கார்ல் ராஜன் என்றானது.
12-7-72 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட் சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு என் நண்பர்கள் யாரும் வரவில்லை. என் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திடீரென்று நான் புறப்பட்டுப் போய் திருமணம் செய்துகொண்டேன். நான்கு நாட்கள்தான் இதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டேன். மணப்பெண்ணிற்கு மதுரைதான் பூர்வீகம். சென்னை வந்து வீட்டிற்குப் போகாமல் நண்பர்கள் வீட்டில் தங்கினேன். என் தந்தை என்னைத் தேடி வந்து ‘நீ எங்கேயும் போக வேண்டாம். நம் வீட்டிலேயே வந்து இரு’ என்றார்.
மாதம் ஒரு தடவை நான் ராமநாதபுரம் போய் அவளைச் சந்திப்பேன். அல்லது அவள் சென்னைக்கு வருவாள். அவள் இங்கு வரும்போது நண்பர்கள் வீட்டில்தான் சந்தித்துக் கொண்டோம். நான் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதைக் கவனித்த அவள் ‘எதற்கு மாத்திரை சாப்பிடுகிறாய்’ என்று கேட்டாள். நான் ஒன்றுமில்லை என்று மறைத்தேன். இதனால் நான்ஸிக்கும் எனக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆயினும் எப்படியோ உறவு தொடர்ந்தது.
பிறகு அவளுக்கும் எனக்கும் பிரச்சினைகள். ஒருமுறை ராமநாத புரம் சென்று அவள் வீட்டிலேயே 17 மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதீத எரிச்சலினாலும், மாத்திரை சாப்பிடுவது தொடர்பான கேள்விகள் பெரிதும் இரிட்டேட் செய்த தாலும் அப்படிச் செய்தேன். நான் மாத்திரைகள் விழுங்கியிருப்பது தெரியாமல், சினிமாவுக்குப் போகலாம் என்றாள் அவள். மாலை நேரம். சரி என்று கிளம்பிவிட்டேன். அவள் தோழி ஒருத்தி எங்களுடன் வந்தாள்.
மாத்திரை சாப்பிட்டதனால் என்னால் நேராக நடக்க முடிய வில்லை. பக்கவாட்டில் சாய்ந்து தட்டித்தடுமாறி நடந்தேன். ஏதோ சிக்கல் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது போலிருக்கிறது. உடனே ராமநாதபுரம் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்து சிகிச்சையளித்தாள். குணமாக மூன்று நாட்களானது. நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தினால்தான் நாம் சேர்ந்து இருக்கமுடியும் என்றாள் நான்ஸி. சரி என்று ஒத்துக்கொண்டேன்.
உண்மையில் மாத்திரை சாப்பிடுவதை நான் விடவில்லை. விடக்கூடாது. அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்கு ஒன்று எனும்படி எங்களிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. அவள் சென்னை வந்து என்னுடன் தங்குவதற்காக அவளது டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தேன். அவள் சென்னை வருவதில் அக்கறையில் லாமலிருந்தாள். அது எனக்கு உடனே புரிந்தது. ராமநாதபுரத்தில் அவள் பணியிடத்தில் அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். குறிப்பாக ஒரு டாக்டருடன் அவளுக்குமிக நெருங்கிய தொடர்பு இருந்தது. சந்தேகத்திற்குரிய தொடர்பு அது.
இந்த விவகாரத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வெறுமையும் குழப்பமும் வெறுப்புமான அலைக்கழிப்பு. அல்லாட்டம். இனி வாழமுடியாது என்று தோன்றிவிட்டது. திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. ‘நீ சென்னைக்கு வா. நம் முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாடுவோம்’ என்று அவளை அழைத்தேன். அவள் வந்தாள். நான் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினோம். அந்த வீட்டு எண் 13. நான்கு நாட்கள் கழிந்த பிறகு நான் சொன்னேன். ‘நீ யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டு மானாலும் பழகிக்கொள். அதைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதே’ என்றேன்.
என் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை அவள். அடிக்கடி அவள் அந்த டாக்டரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததும் மற்ற ஆண் பணியாளர்களைப் பற்றி மிகவும் நெருக்கமாகப் பேசியதும் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. இதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நிலைமை பொறுக்க முடியாமல் போனது.
திருமண முதல் ஆண்டு நிறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அவள் தூங்கிக்கொண்டிருந்தபோது டாக்ஸி பிடித்து வெளியே சென்று நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வந்தேன். வீட்டினுள் தண்ணீர் குடித்தால் அந்த ஓசையில் அவள் விழித்து சந்தேகிக்கலாம் என்ற யோசனையில் மாத்திரைகளைக் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு விழுங்கினேன். ‘என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவு செய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்’ என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை. நான்ஸி என்னைக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தாள். அங்கே என்னைப் பரிசோதித்த டாக்டர் எனக்கு கிட்னி செயலிழந்துவிட்டதாகவும் உடனடி மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துவிட்டார். தலையிலிருந்து கால் வரை துணியால் மூடிவிட்டார்கள். முற்றும் பிரக்ஞை கெட்டு படுத்திருக்கிறேன் நான். அங்குள்ள வேறு டாக்டர் எனக்கு ஏற்கெனவே நண்பராயிருந்தவர். லேசாக அவருக்கு சந்தேகம் தட்டியிருக்கிறது. மூடிய துணியை விலக்கி என்னைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். சன்னமாக உயிர் இருப்பது தெரிந்தது அவருக்கு. அந்த நண்பர் ® LASIX இன்ஜக்ஷன் கொடுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தேறினேன்.
மருத்துவமனையில் கிடந்தபோது என்னைப் பார்க்க வந்தாள் என் மாமியார். ‘உன்னை சுட்டுக் கொல்லவேண்டும். வெளியே விட்டு வைக்கக்கூடாது. எங்களை மிகவும் அவமானப்படுத்திவிட்டாய். பெருங் கேவலத்தைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டாய். உன் முகத்தில் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது.’ என்று வசவுக் கூச்சல் போட்டு கலங்கடித்தாள் அவள்.
என் மனைவி பார்ப்பதற்கு வருவாள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு சிறப்பாக வருவாள். என்னை உதாசீனம் செய்து மற்ற நோயாளிகளுடன் அரட்டையடிப்பாள். அவளும் அவளது பழைய டாக்டர் சினேகிதனும் நான் படுக்கையில் கிடந்து போராடிக்கொண்டிருக்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என் நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். அவளிடம் ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்’ என்று முடிவாகச் சொல்லிவிட்டேன், அத்துடன் அந்த சாப்டர் முடிந்தது. இந்த தற்கொலை முயற்சிக்குப் பிறகு ‘LARGACTYL’ மாத்திரைகளை உட்கொள்ளுவதை சுத்தமாக நிறுத்திவிட்டேன்.
என் மனைவி என்னை விட்டுப் போன நான்கே மாதங்களில் சென்னைக்கு மாற்றலாகி வந்தாள். ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டாள். இவை இரண்டும் அவள் மீதான என் சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தின. ஆனால் மனநல மருத்துவர்கள் இது கற்பனைச் சந்தேகம் என்று schizophrenia paraniod என்ற மனப்பிணிக்கு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறபோது மாலை நேர வகுப்பில் சேர்ந்து போஸ்ட் கிராஜுபேட் டிப்ளமா இன் கிரிமினாலஜியும் ஃபேரன்யிக் சயின்ஸும் ஒரு வருட கோர்ஸில் படித்திருந்தேன். 1974இல் எங்கள் ப்ராஜக்ட் முடிந்துவிட்டது. அது அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ப்ராஜக்ட். நிதியுதவி நின்றவுடன் எல்லோருக்கும் வேலை போய்விட்டது. பி.எல். 480 நிதி என்று பெயர். அமெரிக்காவிலிருந்து வரும். எங்கள் சீஃப் தவிர எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போனோம்.
எனக்கு கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. பல விதங்களிலும் கடன் வாங்கி நான்ஸிக்கு மிக அதிகம் செலவு செய்தது பெருந் தொல்லையாகிவிட்டது கடைசியில். திருமண முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பெண் வந்து தங்கிய நான்கு நாட்களும் செலவு மிக அதிகம். என் நண்பர் சொன்னார். ‘இங்கே இருக்காதே. வேறு எங்காவது சென்றுவிடு. முக்கியமாக சென்னையில் இனிமேலும் நீ இருக்காதே.’ வேலை போன அடுத்த நாளே வடக்கே புறப்பட்டேன். சில புத்தகங்களும் சில சான்றிதழ்களும் எடுத்துக்கொண்டேன். இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கெனவே செய்திருந்தேன். மகாராஷ்டிராவில் உள்ள சேவாக்கிராம் காந்தி மெடிக்கல் காலேஜ்-ல் கிளர்க்காகப் பணி புரிந்தவர் என் உயர்நிலைப் பள்ளி நண்பர். அவரிடம் எழுதிக் கேட்டதற்கு ‘சரி! நீ வா’ என்று பதிலளித்திருந்தார். வார்தாவில் இறங்கி சேவாக்கிராம் சென்று அங்கு ஒரு மாதம் இருந்தேன்.
அந்த நண்பர் போதிய பணவசதி இல்லாதவர். திரும்பத் திரும்ப என்னை சென்னைக்கே சென்றுவிடும்படி கூறிக் கொண்டிருந்தார். பி.ஜி. பிரகாசன் அவர் பெயர். நான் சென்னை செல்லாமல் மகாராஷ்டிரா மாநிலம் புசாவலுக்குச் சென்று அங்கிருந்து பாம்பே சென்றேன். எல்லாமே டிக்கெட் இல்லாத பயணம்தான். பாம்பே ரயிலில் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் அகப்பட்டுக் கொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றி விசாரித்து ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார். பாம்பேயில் இறங்கி டிக்கட்கேட் கடக்கும்போது இன்னொரு பரிசோதகர் பிடித்துக் கொண்டார். ‘நான் இங்கே பிழைப்பதற்காக வந்திருக்கிறேன். எனவே என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்’ என்று நான் அவரைக் கேட்டு கொண்டதன் பேரில் மனமிரங்கி விட்டுவிட்டார். ஏதாவது சாப்பிட்டாக வேண்டியிருந்தது. ஒரு ஹோட்டலுக்குச் சென்று வேலை வேண்டினேன். அந்த ஹோட்டலில் வேலை எதுவும் காலியாக இருக்கவில்லை.
இரவில் எங்கே தங்குவது என்று பிரச்சினையாகிவிட்டது. தாராவிக்குப் போய் அங்கு ஒருவரிடம் என் சிரமங்களை யெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் வீட்டு பரணில் படுத்துக்கொள்ளும்படி அனுமதித்தார். தங்க மட்டுமே இடம். இதற்கு பணம் கொடுக்க வேண்டியது இல்லை. கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. எடுத்து வந்திருந்த சில புத்தகங்களை எடைக்குப் போட்டு ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டேன். மொத்தமாக மூன்று நாட்கள் தான் பாம்பேயில் இருந்திருப்பேன். சோர் பஜாரில் என் துணிகளை விற்றதன் மூலம் கொஞ்சம் சில்லரை தேறியது சாப்பிடுவதற்கு. அடுத்த நாள் வேறு ஒரு ஹோட்டலில் வேலை கேட்டேன். விண்ணப்பம் எழுதித் தரும்படிச் சொன்னார், அங்கு பொறுப்பி லிருந்தவர். நான் எழுத முயற்சித்தேன். கை நடுங்கியது. எழுத்து சரியாக வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வேலை தர இயலாது என்றும் சாப்பிட்டு விட்டுச் செல்லும்படியும் கூறினார். ‘வேலை தந்தால்தான் சாப்பிடுவேன்’ என்றேன் நான். ‘இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். சும்மா சாப்பிடுங்கள்’ என்று அவர் கேட்டுக் கொண்ட பிறகு மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டேன்.
அப்படியே நடந்துகொண்டிருந்தபோது சென்னை திருவல்லிக் கேணி ஜிம்கானா கிளப்பில் டேபிள் டென்னிஸ் விளையாடும் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். இரண்டு இட்லி வாங்கிக் கொடுத்து கையில் கொஞ்சம் காசு கொடுத்து சென்னைக்குப் போய்விடும்படி சொன்னார் அவர்.
பாம்பேயிலிருந்து டிக்கெட் இல்லாமல் ஹைதராபாத் போனேன். அப்போது என்னிடம் ஒரு சட்டையும் பேண்டும் மட்டுமே இருந்தது. ஹைதராபாத்தில் எனக்கு நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட் இருந்தார். அவரிடம் ஊர் திரும்புவதற்கு உதவும்படி கேட்டேன். ‘நீ இங்கிருந்து கடிதம் போட்டு உன் அப்பா அம்மாவிடமிருந்து பணம் வாங்கி புறப்பட்டுப் போ. நான் பணம் தரமாட்டேன்’ என்று கறாராக கூறினார் அவர். இது சிக்கலான ஏற்பாடாகத் தெரிந்தது. ரயில் ஏறிவிட்டேன். இப்போதும் டிக்கட் பரிசோதகரிடம் சிக்கித் தப்பினேன். ஓங்கோல் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்க வேண்டும். கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஏறியபோது எதிர்பட்டார் டிக்கட் பரிசோதகர். நான் என்ன செய்வதென்று நிதானிப்பதற்குள் ரயில் வேகமெடுத்து விட்டது. வேறு வழியின்றி குதித்துவிட்டேன். முழங்காலில் பலமாக அடிபட்டு விட்டது. வலியினால் நகர முடியாமல் விழுந்த இடத்திலேயே வெகுநேரம் கிடந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தேன். யாரோ ஒருவர் பேச்சுக் கொடுத்தார். தெலுங்குக்காரர். தமிழை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு லாரி டிரைவரிடம் என்னைச் சென்னைக்குக் கொண்டு போய் சேர்த்துவிடும்படி சொன்னார்.
லாரி இரவில்தான் கிளம்பும். என்னிடம் பணமில்லாததால் என் சட்டையையும் கைலியையும் வாங்கிக்கொண்டார் டிரைவர். அடுத்த நாள் காலை லாரி போரூர் வந்து சேர்ந்தது. ‘இதுதான் சென்னை. நீ இங்கேயே இறங்கு’ என்றார் டிரைவர். நான் அவர் சொன்னபடி செய்தேன். கையில் கொஞ்சம் சில்லரையும் கொடுத்து இறக்கிவிட்டார் அவர். நான் கொசப்பேட்டையிலிருந்த என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமே என்னை எதிர்கொள்ளவில்லை.
தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதை யெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுதுகொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றி விட்டது. நண்பர் பாலகிருஷ்ணன் மூலமாக (கிளினிகல் சைகாலஜிஸ்ட்) அரசு மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.
1974இல் 45 நாட்கள் அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
அந்த நேரத்தில் அங்கே சூப்பரின்டெண்டெண்ட் ஆக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்து மருத்துவமனை சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது.
போக்கிடமென்று எதுவும் இல்லாமலாகிவிட்டது. பாட்டிக்கு கடிதம் எழுதினேன். பாட்டி கடிதமும் பணமும் அனுப்பியிருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி மதுரைக்கு என் பாட்டியிடம் புறப்பட்டுப் போனேன். வேலை தேடியபடி 9 மாதங்கள் அங்கேயே இருந்தேன்.
அந்தச் சமயத்தில் மதுரை ஆதீனத்தின் மூலம் மறுபடி இந்து மதத்துக்கு மாறி என் இயற்பெயரைப் பெற்றேன்.
மேற்கொண்டு மருத்துவ செலவு செய்ய பாட்டி விரும்பவில்லை. ‘நீ சென்னைக்குப் போ’வென்று பாட்டி சொன்னதால் திரும்பவும் சென்னை வந்தேன். ஒரு நண்பனின் வீட்டுத் திண்ணையில் இரவில் படுக்கை. தெருக் குழாயில் காலைக் குளியல். சமயங்களில் கட்டணக் கழிப்பறையில் வேலை தேடுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் மூலமாக ராமாகாவ் பாலிகிளினிக்கில் 1975இல் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ. 200 அங்கு வேலை பார்த்த காலம் இரண்டரை வருடங்கள். பாலிகிளினிக்கில் ஒரு தோழி கிடைத்ததுதான் சந்தோஷம். அவளோடு தந்தை மகள் மாதிரியான உறவு.
அவளுக்கும் தலைமை மருத்துவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவள் காஞ்சி புரத்திற்குப் போனாள். நான் பாலிகிளினிக்கிலேயே தொடர்ந்தேன். நான் தொடர்ந்து மனநல மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அரசு மனநலக் காப்பகத்தில் இலவசமாக மாத்திரை தருவார்கள். பெரிய ஜாப் எதுவும் என்னால் செய்ய இயலாதபடி மனநிலை பாதிப்படைந்திருந்தது. சில காலத்திற்குப் பிறகு பெரிய வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். எனக்கு வேலை தரும்படி வேண்டினேன். ராமகிருஷ்ணன் IMRB (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ)வில் வேலை வாங்கித் தந்தார். அவர் என் நண்பரின் கல்லூரித் தோழர். இங்கே ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். வீடு வீடாகப் போய் சிகரெட் – பேட்டரி – கார்பெட் இவை பற்றி விவரங்கள் சேகரிக்கவேண்டும்.
மே 1980இல் திரும்பவும் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் மாய ஒலிகள் காதில் கொடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன. ‘நீ எதற்கும் தகுதியில்லாதவன்… நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டாய்… இனிமேலும் நீ உயிருடன் இருக்கமுடியாது…’ இப்படி. அலுவலகம் மூலமாகவே அரசு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன். சேர்ந்து ஐந்தாம் நாளிலேயே சரியாகிவிட்டது. ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் கொடுக்காமல் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். ஒரு வேலைக்குப் போனேன். என்னை உடனே வேலையில் சேர்க்காமல் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி ஒரு மாதச் சம்பளமும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஐஎம்ஆர்பியில் முழுநேரமாகவும், க்ரியாவில் பகுதி நேரமாகவும் வேலை செய்தேன்.
இந்தக் காலத்தில் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக் காரர்கள்’ புத்தகத்தையும், ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை’ (ஹிந்தியிலிருந்து சரோஜா மொழி பெயர்ப்பு செய்தது) எனும் புத்தகத்தையும் க்ரியா ராமகிருஷ்ணன் கொடுத்தார். இதற்கு முன்னால் மு. வரதராசன், ஹேமா ஆனந்ததீர்த்தன், சா. கந்தசாமி இவர்களை மட்டும் படித்திருந்தேன்.மீண்டும் எனக்கு பெண் துணை அவசியப்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா புரோக்கர் மூலம் இப்போதிருக்கிற என் மனைவியைப் பெண் பார்த்தார். திருவொற்றியூர் மண்டபத்தில் 20-10-80இல் திருமணம் நடந்தது. ஐஎம்ஆர்பி நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முன் லாட்ஜில் தங்கியிருந்தேன். பிறகு மைலாப்பூரில் தனிக்குடித்தனம்.
திருமணம் முடிந்து வந்த முதல் சிக்கல் – ஏன் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்று என் மனைவி தொடர்ந்து கேட்ட கேள்விகள். எனக்குத் தலைவலி, தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று ஒருவாறு சமாளித்தேன். வாழ்க்கை தன்போக்கில் நடந்துகொண்டிருந்தது. நீங்கள் அலைந்து திரிய வேண்டாம் க்ரியாவுக்கே வந்துவிடுங்கள் என்று சொன்னார் ராமகிருஷ்ணன். அதை ஏற்று க்ரியாவுக்கே வேலைக்குப் போக ஆரம்பித்தேன். க்ரியா அப்போது ராயப்பேட்டையிலிருந்தது.பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கும் போது ‘ராணி’ எனும் பெயர் பொருத்தமாகத் தெரிந்தது. ‘ராணிஸ்ரீ’ன்னு வச்சிட்டேன். 1983 முடிவில் குழந்தை பிறந்த பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். இதற்கு முன்பு ஒரு முயற்சியாக 73இல் தூயோன் எனும் சிறுகதை எழுதியதைச் சொல்லவேண்டும். அதை ஞானக்கூத்தனிடம் காட்டினேன். நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார் அவர். அந்தக் கதையை பிரசுரிக்கத் தோன்றவில்லை. அதை 86இல் திரும்பவும் எழுதினேன். அது விருட்சம் இதழில் பிரசுரம் ஆனது. 78இல் ராமராவ் பாலிகிளினிக்கில் வேலை செய்தபோது கிடைத்த தோழியைப் பற்றி (அவள் என்னை டாடி என்று அழைப்பாள்) ஒரு கதை எழுதினேன். அது ‘மையம்’ பத்திரிகையில் 84 ஜனவரி – மார்ச் இதழில் வெளியானது. இதுதான் முதல் வெளியீடு. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து எழுதினேன். நிறையக் கதைகள் சேர்ந்தன. கதைகள் நன்றாயிருக்கின்றன என்றார் ஆனந்த். நகுலனிடம் கதைகளைக் காட்டச் சொன்னார். இரு தினங்கள் கழித்து க.நா.சு. தங்கியிருந்த அறைக்கு நகுலன் வந்திருந்தார். ஆனந்தும் நானும் சேர்ந்து என் ஏழு கதைகளை நகுலனிடம் கொடுத்தோம்.
அடுத்தநாள் கடற்கரையில் நகுலனை ஞானக்கூத்தனோடு பார்த்தேம். ‘இந்தக் கதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னிடம் பணம் இருந்தால் புத்தகமாகப் போடுவேன்’ என்றான் நகுலன். நகுலன் சொன்னதை ஜெயதேவன் (வி. ராஜகோபால்) மனதில் வாங்கி அவரே பதிப்பித்தார். “ஒவ்வாத உணர்வுகள்” மார்ச் 86இல் வெளியானது. தொகுப்பு அச்சில் இருந்த நிலையில் மிகத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. என் மனைவி, வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஏதேனும் வேலைக்குப் போகிறேன் என்றாள். நான் இந்த விஷயத்தை திலீப் குமாரிடம் சொன்னேன். ராயப்பேட்டை முத்தமிழ் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை இருப்பதாகப் பரிந்துரைத்தார் திலீப். என் மனைவியின் கல்வித் தகுதி 7ஆம் வகுப்பு. ஒரே மாதத்தில் கம்பாசிடர் வேலையை கற்றுக் கொண்டாள். அவளிடமுள்ள வினோத வழக்கம் என்னவென்றால் கையில் காசில்லை என்றால் முழுக்கவும் அப்செட் ஆகிவிடுவாள்.
அவள் வசதியான வீட்டில் நல்லபடியாக வளர்ந்தவள். என் கையில் காசு தீர்ந்துபோனால் நண்பர்களிடம் கடன் வாங்கியாவது வைத்துக் கொள்வேன். ஒரு தடவை சுத்தமாக காசில்லாமல் போய்விட்டது. நான் இரண்டு பித்தளைப் பாத்திரங்களை எடுத்து அடகு வைக்கப் போனேன். அன்றைக்குப் பார்த்து அடகுக்கடை லீவு. எனக்குத் தெரியாமல் போய் விட்டது. நான் திரும்பவும் பாத்திரங்களை வீட்டில் வைத்துவிட்டு க்ரியாவுக்குப் போய்விட்டேன். நண்பர்கள் சினிமாவுக்குப் போகிற மனநிலையில் இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நானும் சேர்ந்துகொண்டேன்.
நாங்கள் அலங்கார் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன படமென்று இப்போது நினைவில்லை. திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு ‘க்ரியா கோபிகிருஷ்ணன் வான்டட் இம்மீடியட்லி. ஃபிரண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்’ என்று சிலைடு போட்டார்கள். கீழே போனேன். ‘உன் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்து ராயப் பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்’ என்ற தகவல் கிடைத்தது.
உடனடியாக அவளைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஓடினேன். என் மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டிருப்பாளோ என்று எனக்குச் சந்தேகம். வீட்டில் பரிசோதிக்கையில் அதுதான் நடந்திருந்தது. முதலில் மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொள்ள முயன்றிருக்கிறாள். அது இயலாமல் போகவே மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டிருக்கிறாள். குழந்தை கிரஷ்ஷில் இருந்தது. குழந்தையை பக்கத்து வீட்டுப் பாட்டி அழைத்துக்கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.
இந்த மாத்திரைதான் இவள் சாப்பிட்டிருக்கிறாள்; இதற்கு சரியான மாற்று கொடுத்து சரிசெய்து விடுங்கள் என்று நான் டாக்டரிடம் சொன்னேன். போலீஸ் கேஸாகி விட்டது. என்னை உள்ளே வைத்துவிட்டார்கள். லாக்கப்பில் அல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குள். அந்த வளாகத்திற்குள் தான் நான் இருக்கவேண்டும். கேஸ் புக் செய்யப்பட்டது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர், ‘நான் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பதால் அடிக்கமாட்டேன். அடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. உண்மையைச் சொல்லிவிடு’ என்றார்.
நான் எல்லாவற்றையும் அவரிடம் விளக்கிச் சொன்னேன். என் மனைவியின் இயல்பை தெளிவாக எடுத்துக் கூறினேன். போலீஸ்காரர்கள் நம்பவில்லை. அநாகரிகமான அசிங்கமான பல கேள்விகளைக் கேட்டார்கள். ‘உன் நண்பர்கள் எவரிடமாவது உன் மனைவிக்குத் தொடர்பு உண்டா?’ என்றெல்லாம் கேட்டார்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 1986 புத்தாண்டு அன்று அந்த இன்ஸ்பெக்டர் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று எனக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்.
நான் பித்தளைக் குடங்களை எடுத்துக்கொண்டு அடகுக் கடைக்குப் போனதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து என் மனைவியிடம் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. என் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள். என்னைக் கண்டித்துப் பேசி அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவள் மீது கேஸ் ஆகிவிட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு நானும் அவளும் சென்றோம். தற்கொலைக்கான முதல் முயற்சி என்று தண்டனை யில்லாமல் விட்டுவிட்டார்கள். கடைசியாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வரும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் நன்றி சொன்னேன்.
‘நீ நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். உன் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். அதுபோதும்’ என்றார் அவர். எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் இதைப் பற்றி பேசினேன். ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ எனும் புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்த புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
மருத்துவமனை, போலீஸ் முதலான எல்லா செலவுகளையும் க்ரியா ராமகிருஷ்ணன் தான் பார்த்துக்கொண்டார். நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நான்கு நாட்களும் க்ரியா ஸ்தம்பித்துவிட்டது. அதன் பிறகு தனி ரூம் எடுத்துத் தங்கினேன். கொருக்குப் பேட்டையில் இருந்த என் மாமியாரிடம் குழந்தையின் படிப்பு தடைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். 3.30 மணிக்கு குழந்தையை பள்ளியி லிருந்து அழைத்துக் கொண்டு போய் மாமியார் வீட்டில் விடுவேன். குழந்தை ராணிஸ்ரீ எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். ஒரு மாதம் கழித்து என் வீட்டிலிருந்து சாமான்களை மாமியார் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.மார்ச் 86இல் ஒவ்வாத உணர்வுக்கும், க.நா.சு.வின் கவிதைப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா, சிட்டாடல் பதிப்பகம் – மையம் வெளியிட்டிருந்தது.
க்ரியா டிக்ஷனரி ப்ராஜெக்ட் 2-6-86இல் தொடங்கியது. நானும் முனைவர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களும் ஆரம்ப கட்ட வேலை களுக்காக சிதம்பரத்தில் மறைமலை நகரில் இருந்தோம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் என். குமாரசாமி ராஜா அவர்களின் உதவி டிக்ஷனரிக்குத் தேவைப்பட்டதால்தான் சிதம்பரத்தில் இருக்கவேண்டி வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதை நிச்சயமாகக் கூற முடியாது. Policy decisions பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
முனைவர் பா.ரா. சுப்பிரமணியனின் வீடு தஞ்சாவூரில் இருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரத்திலிருந்து அவர் தஞ்சாவூர் புறப்படுவார். நான் சென்னை வருவேன். திங்கட்கிழமை சிதம்பரத்தில் சேர்ந்து கொள்வோம். 87இல் வேலையை சென்னையில் செய்ய இங்கு வந்தேன். சென்னையில் ப்ராஜெக்ட் ஆபீஸ் அண்ணாநகர் (வெஸ்ட்) லிருந்து நான் கொருக்குப் பேட்டையிலிருந்து வருவது சிரமம். எனவே பாடியில் வீடு எடுத்தேன். 86லிருந்து மனைவி ஜனசக்தியில் கம்பாசிடராகப் பணியில் சேர்ந்தாள். சிறிய கருத்து வேற்றுமை காரணமாக 29-7-89இல் நான் க்ரியாவிலிருந்து வெளியேறினேன்.
1992இல் டிக்ஷனரி வெளியான பிறகு நான் மீண்டும் க்ரியாவின் நண்பனானேன். ஒன்றே ஒன்று இங்கு சொல்லத் தோன்றுகிறது. ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலகவேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு தார்மீகமான செயல் என்றே கருதுகிறேன். அப்பொழுதுதான் சூழலுக்கு வெளியேயாவது நட்பு நிலைக்கும். எனக்கு நட்பு மிக மிக முக்கியம்.
வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டாக இருந்த 3000 ரூபாயில் செலவுகளைப் பார்த்துக்கொண்டேன். இரண்டு மாதங்கள் கழித்து வேலை கிடைத்தது. டாக்டர் சாரதா மேனனிடம் வேலை. இவர் மனச் சிதைவு ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்தார். சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க்கர் பணி எனக்கு. அவருடைய மாலை நேரத் தனியார் மருத்துவ மனையில் நோயாளிகளை நேர் கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குதலும், குழு சிகிச்சையும் செய்யவேண்டும். அது பகுதி நேரப் பணி.
அங்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே Guild of Service – இல் நண்பர் ஒருவரின் சிபாரிசினால் உதவி சமூகப் பணியாளர் வேலை கிடைத்தது. இந்த வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அங்கு முக்கியமான நெருக்கமான ஒரு தோழி இருந்தாள். ‘ஓட்டம்’ கதையில் வருபவள். என்னுடன் எட்டு மாதங்கள் வேலை செய்துவிட்டு ஹாங்காங் போய் விட்டாள். அவளிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அங்கேயே அவளுக்குத் திருமணம் முடிந்தது. ஒரு வருடம் கழித்து வந்தாள். வருடத்தில் மூன்று முறை அவளைப் பார்க்கப் போவேன். எனக்கு மனநலப் பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை. எழுதிக் கொண்டிருந்தேன்.
ஆனந்த், நகுலன், க.நா.சு., ஜெயதேவன், சுந்தரராமசாமி முதலானோர் நண்பர்களானார்கள். வெங்கட் சாமிநாதன் இண்டியன் எக்ஸ்பிரஸில் என் கதைகளைப் பற்றி Curving Downwards என்று மதிப்புரை எழுதினார். பிறகு Economic Time லும் குறிப்பிட்டிருந்தார். ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபால், ரா. ஸ்ரீனிவாசன், அழகிய சிங்கர் ஆகியோருடனும் நெருக்கமான தொடர்பிருந்தது. நான் பார்த்ததிலேயே மிகவும் நல்ல வேலை இது (Guild). ஒரு சொர்க்கம் போல. சகல சுதந்திரங்களும் உண்டு. 2500 ரூபாய் மாத சம்பளம். பதவி உயர்வு கிடையாது. நான் M.A. படிக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். M.A. படித்தால்தான் பிரமோஷன் எனும் நிலையில், தபால் வழியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் M.A. சோஷியாலஜி சேர்ந்து அதை முடித்தேன். சான்றிதழ் வந்த உடனே பணி உயர்வு கேட்டதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அலுவலக சூழ்நிலை அடியோடு மாறியது.
படிப்பிற்காக 5000 ரூபாயாவது செலவழித்திருப்பேன். 60 நாட்களாவது இதற்காக விடுப்பு எடுத்திருப்பேன். நான் இழப்பீடு கேட்டேன். யாரும் உதவி செய்யவில்லை. அந்தச் சமயம் பார்த்து எனக்கு மூச்சிரைப்பு நோய் ஏற்பட்டது. என் உடல்நிலை பெரிதும் மோசமடைந்தது. மூச்சுவிட இயலவில்லை. மருத்துவச் செலவு பூதாகரமாய் நின்று அச்சுறுத்தியது. வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தேன். இதன்மூலம் கிடைத்த 28,000 ரூபாயில் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டேன். ‘கில்டி’ல் ஏழரை வருட காலம் வேலை பார்த்திருந்தேன்.
‘கில்ட்’ல் இருக்கும்போது 93இல் நானும் சஃபி மற்றும் லதா ராமகிருஷ்ணனும் ‘ஆத்மன் ஆலோசனை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதன் முக்கியமான செயல்பாடு மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது. மையம் மூன்றரை வருடங்கள் இயங்கியது. ஆரம்பக் கட்டத்தில் நிறைய கிளையன்ட்ஸ் வந்தார்கள். என்னுடைய மனநல பாதிப்பினாலும், பிரமோஷனுக்காக ஆ.ஹ. படித்துக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து அதில் செயல்பட முடியவில்லை.
கில்ட் ஆப் சர்வீஸில் ஒரு ஃபால்ஸ் ரிப்போர்ட் எழுதப் பணித்தார்கள். ஒவ்வொரு சோஷியஸ் ஒர்க்கருக்கும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி வசதி, மருத்துவ வசதி, வீட்டின் – வீட்டுக் கூரையின் நிலை என்ன என்பது பற்றி யெல்லாம் கண்காணிக்க வேண்டும். வீட்டுக் கூரை பிரிந்தோ சேதமுற்றோ இருந்தால் அதைச் சரிசெய்ய உதவவேண்டும். லண்டன் ப்ராஜக்ட் இது. நாங்கள் டெல்லி கில்ட் ஆப் சர்வீஸ் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.
ஒரு சமூகப் பணியாளர் சுமார் 250 குடும்பங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே பணியாளர்கள் ஆய்வு செய்யாமலேயே அலுவலகத்தில் இருந்தபடி அறிக்கைகளைத் தயார் செய்தார்கள். நானும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப் பட்டேன். பார்க்காமல் ஆராயாமல் பொய்யாக என்னால் அறிக்கை
எழுத முடியவில்லை. ஆனால் இதை நான் செய்தே தீரவேண்டியிருந்தது. அப்படிச் செய்யாமல் பணியில் நீடிக்க இயலாது. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காது.
இந்த பீதியினால் 3250 மில்லிகிராம் வீரியம் கொண்ட மாத்திரை களை சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். தடயங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. கதவைத் தாழ் போடாததால் திறந்து பார்த்த
என் மனைவி உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து கே.எம்.சி.க்குக் கொண்டு சென்றாள். அங்கே என்னை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள மறுத்தார்கள். ஆட்டோ டிரைவரும் என் மனைவியும் வற்புறுத்தி கெஞ்சியதன் பேரில் சேர்த்துக்கொண்டார்கள். ஏழு நாட்கள் சுத்த மயக்க நிலையில் கிடந்தேன். இதனாலும் என்னால் ஆத்மனை
கவனிக்க இயலவில்லை. முழுதுமாக சஃபிதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில குறிப்பிட்ட கேஸ்களை லதா ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டார். இதனால் கில்ட் ஆப் சர்வீஸ் வேலைக்கு பாதகம் ஏற்படவில்லை. டாக்டர் சாரதா மேனன்தான் சிகிச்சை கொடுத்தது. போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக்கொண்டார்கள். டிஸ்சார்ஜ் ஆன நாளன்று மாலையில் டாக்டர் சாரதா மேனனைப் பார்த்தேன். மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள். இந்த விஷயம் நிறைய நண்பர் களுக்குத் தெரிந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
எழுத்து தொடர்புடையது, அல்லாதது என்று பல இடங்களில் சிறிய சிறிய ஃப்ரீலான்ஸ் வேலைகள் பார்த்தேன். மனநிலை குன்றிய பையனை அழைத்துச் சென்று கம்ப்யூட்டர் சென்டரில் விட்டு வருதலும் அவற்றில் ஒன்று.
ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் இன்டெக்ஸர் வேலை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்தது. 4320 ரூபாய் சம்பளம். இதுவரை வாங்கியதிலேயே அதிக சம்பளம் இதுதான். இங்கு வேலை பார்த்த காலம் ஒரு வருடம் மூன்று மாதங்கள். என்னுடைய உற்ற சக – ஊழியர் ஒருவரை உதவி இயக்குநர் ஒருவர் அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் அந்த நல்ல வேலையைத் துறந்தேன். பொருளாதார பலகீனம் தற்போதும் நீடிக்கிறது. அடிக்கடி நண்பர்களின் உதவி தேவைப்படுகிற நிலை. இரண்டு மனநோய்க் குறிகள் இன்னும் இருக்கின்றன.
1. Obsessive ruminations 2. Obsessive Depression போன்ற பிரச்சினைகள் எனக்கிருந்தன.
முதலாவது தாறுமாறான எண்ணங்கள். நான் நினைக்காமலேயே தானாகவே எண்ணங்கள் வருகின்றன. மோசமான எண்ணங்கள் அதிகம் வரும். இது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த மோசமான எண்ணங்கள் என்னுள் அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இரண்டாவது, ஆட்டிப் படைக்கும் மனச்சோர்வு, இதற்கான சிகிச்சையை டாக்டர் சாரதா மேனனிடம் சமீபகாலம் வரை பெற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது ESIல் சிகிச்சை எடுத்துவருகிறேன். மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான் எழுதுவதில்லை. என் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான நிலையிலிருந்தது என் மகளின் திருமணத்தின்போதுதான்.
எப்படியிருந்தாலும் ஒரு நிரந்தர வேலைக்கான அவசியம் அதிகரித்து வந்தது. மனநிலை குன்றியவர்களுக்கான பள்ளி நடத்திய ஜலாலுதீன் எனும் நண்பரும், நந்தன் பத்திரிகையின் நண்பர் ஒருவரும் என்னை நக்கீரனில் சேர்த்துவிட்டார்கள். ப்ரூஃப்ரீடர் உத்தியோகம்.
11 மணிநேர வேலை. 2000 ரூபாய் சம்பளம். இடையிடையில் சில கிஃப்ட்ஸ் கிடைக்கும். போனஸ் உண்டு. இங்கே நான் காலந்தவறாமையை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. கோபால் மிகவும் தங்கமான மனிதர். கோபாலின் தம்பிதான் ஆர்ட் டைரக்டர். அவருடைய பிஹேவியர் சரியில்லை. எப்போதும் அதிகார தோரணை உண்டு. ஒத்துப்போக இயலவில்லை.
முதல் நாள் இரவு 9.30 வரை வேலை பார்த்துவிட்டுச் சென்றதால் அடுத்த நாள் 11.30க்கு தான் அலுவலகம் வர முடிந்தது. தாமதத்திற்காக முன்கூட்டியே என்னால் ஃபோன் செய்து சொல்ல இயலவில்லை. காலையில் கொஞ்சம் தூங்கிவிட்டேன். ‘ஏன் லேட்டா வர்றீங்க, ஃபோன் பண்ண முடியாதா?’ என்று கத்திப் பேசினார் ஆர்ட் டைரக்டர் பிறர் முன்னால், இரவுகளில் சில சமயம் அலுவலகத்திலேயே தங்க வேண்டியிருந்தது. நக்கீரனில் இருக்கும்போதுதான் என் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. (10 செப்டம்பர் 2000). ஒரு வருடம் 3 மாதம் நக்கீரன் வேலை. கோபாலிடம் நான் வாங்கிய கடன் 4060 ரூபாயை இன்னும் என்னால் திருப்பித்தர முடியவில்லை. எப்படியிருந்தாலும் அதைக் கொடுத்துவிடுவேன்.
அமோகமாக நடந்தது என் மகள் ராணிஸ்ரீயின் திருமணம். நண்பர்கள் உதவினார்கள். கேட்டதற்கு அதிகமாகவே பணம் கொடுத் தார்கள். 28,000 ரூபாய் செலவானது. பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூன்று தோழர் தோழியரின் பேருதவியால்தான் திருமணம் நடந்தது. அவர்கள் தர்மசங்கடமாக உணர்வார்கள் என்று கருதி, பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.
1993ஆம் ஆண்டு டேபிள் டென்னிஸை எழுதிக்கொண்டிருந்த போது எனது முன்னாள் மனைவி நான்ஸியை மீண்டும் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. சென்னையில்தான் அவர் இருந்தார். சந்தித்தேன். இரண்டு குழந்தைகளுடனும் கணவருடனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார். கணவர் புள்ளிவிவரவியல் அதிகாரி. அந்தக் குழந்தைகள் மீது கொண்ட பிரியத்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினேன். நான்ஸி நெகிழ்ந்து போனார். நல்ல நிலை மையில் இருப்பதால்தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டார். அவர் பெயர் அப்போதும் நான்ஸி கார்ல்ராஜன் என்றே இருந்தது. அவரது பழைய பெயருக்கே மீண்டும் மாறிக்கொள்வதற்காக விடுதலைப் பத்திரம் ஒன்று எழுதிக்கொடுத்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த சந்திப்பு அது. விடைபெறும்போது, இப்போதாவது கடவுளை நம்பு கிறீர்களா என்றார் நான்ஸி. இல்லை என்றேன்.
எந்தப் படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் எழுதுவதில்லை. பிறர் எழுதுவதையும் விரும்புவதில்லை.
எழுத்து ஒரு உழைப்பு. அதற்கான மதிப்பென்று நிச்சயம் உண்டு. எந்த ரூபத்திலிருந்தாலும் குரூரத்தை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை. விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்பிராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது.
1993 பிப்ரவரியிலிருந்து மே வரை ஒரு வினோத மனநிலையிலிருந்தேன். அது மிகவும் பிரகாசமான நிலை. அந்த மனநிலையில் எழுதப்பட்டது தான் ‘டேபிள் டென்னிஸ்.’ அது ஒரு பறத்தல் போன்ற உணர்வு. அந்தப் பறத்தல் மனநிலையில் அறிவு பாதிக்கப்பட்டு விடவில்லை. B.A நான்கு பேப்பர் பரீட்சை எழுதி மூன்றில் தேர்ச்சி பெற்றேன். வேறு எந்தப் படைப்பையும் பாதிப்பான மனநிலையில் எழுதியதில்லை.
என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி… என்பது போலத்தான். என் சில கதைகளில் அக்கிரமங்களையும் முறைகேடுகளையும் வெளிப்படுத்தி யிருக்கிறேன்.
உதாரணமாக உளவியல் துறை, சமூகப் பணித் துறை போன்ற தொண்டு நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை எழுதியிருக்கிறேன். மனநிலை மாறுபாடு என்றால் என்ன என்று மக்களுக்கு தெரியப்படுத்து வதற்காக 59 மனநோயாளிகளை பேட்டி எடுத்து ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ எனுந் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன்.
நான் வாசித்த எதிர் உளவியல் தொடர்பான எட்டு புத்தகங்களி லிருந்து முக்கியமான சில விஷயங்களை அதில் ‘சில செய்திகள் சில சிந்தனைகள்’ எனும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். முஸ்லீம் ஹஸ்ரத்துகள், மலையாள மாந்திரீகர்கள், இந்து சுவாமிஜிகள், பாதிரியார்களைச் சந்தித்து பேட்டி எடுத்து மனநோய்க்கான சிகிச்சையாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் ‘இன்னும் தொடரும் பழமை’ எனும் தலைப்பில் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து எழுதினால் பிரச்சினையாகிவிடும் என்று ஒரு நண்பர் கூறியதால் கோவையை மையமாக வைத்து அந்தப் புத்தகத்தை எழுதினேன்.
இந்தப் புத்தகம் மீதான ஒரு நல்ல மதிப்புரையைப் பாவண்ணன் தினமணியில் எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாதீன நிலைக்கும் சுவாதீனமில்லாத நிலைக்கும் இடையே உள்ள மெலிதான இழையை நீங்கள் அறுத்து விட்டீர்கள் என்றார் யுவன்.
எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவதில்லை. முழுமையான பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரையில் நான் எழுதியவை எனக்கு திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி நான் எழுதமாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. நான் எழுதிய எல்லாக் கதைகளும் (சில கதைகளைத் தவிர) யதார்த்தக் கதைகள்தான். கற்பனையும் நிஜமும் கலந்தவை. ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை’ என்ற கதை மட்டும்தான் சர்ரியலிஸக் கதை. இது சோதனை முயற்சி. ‘வார்த்தை உறவு’ எனும் கதையும்
ஒரு சோதனை முயற்சி. ‘மிகவும் பச்சையான வாழ்க்கை’ எனக்கு மிகவும் பிடித்த கதை. ‘காணி நிலம் வேண்டும்’ செண்டிமெண்ட் கதை. எனக்கு ஆதவன் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்க அவரால் முடிகிறது. நகுலன், சுந்தர ராமசாமியையும் பிடிக்கும்.
என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. எனக்கு வாழ்க்கையே முக்கியப் பிரச்சினையாக இருப்பதால் படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது. நண்பர்களிடமிருந்து புத்தகங்களை இரவல் பெற்றே படிப்பேன். என் சேகரிப்பில் ஏற்கெனவே ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
கோணங்கியின் கதையில் உள்ள ஓட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் புரியவில்லை. அந்த ஓட்டம் தடைபடாமல் நீண்டுகொண்டே போகும். ஒரு கதை முடிந்த பிறகும்கூட அதை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றும்.
சுந்தரராமசாமி தங்கு தடையற்று நன்றாகப் பேசக்கூடியவர். அது பெரிய பலம் அவருக்கு. சாமர்செட் மாம், ஆல்டஸ் ஹக்ஸ்லெ என் விருப்பத்திற்குரிய வர்கள். சாமர்செட்மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன். எரிக்க யாங். பேர்ல் எஸ் பக், மேரி கோரல்லி, ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர், தாஸ்தாயெவெஸ்கி, மார்க்குவெஸ் ஆகியவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள்.
நான் இலக்கியத்திற்கு இதுவரை எந்தப் பரிசும் பெற்றதில்லை. பிரசுரிக்கத் தகுந்தவை என்றளவில் கணையாழியில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இதுவரை மூன்றே மூன்று தடவைகள் இலக்கிய வாதியாக இருப்பதற்காக கௌரவிக்கப்பட்டிருக்கிறேன்.
1. நண்பர் வே.மு. பொதியவெற்பன் அவர்கள் தன் பொன்விழாவில் ‘பொதிகை’ பொன்விழா மலரை என்னை வெளியிடச் சொன்னார். நானும் இதற்கென்றே குடந்தை சென்றிருந்தேன். இது 30-4-2000 அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி. மிகவும் மனநெகிழ்வு தந்த ஒன்று.
2. திருப்பூர் தமிழ்ச் சங்கம் 20-1-2002 அன்று எனக்கு நன்கொடையாக ரூ. 4000 கொடுத்தது.
3. National Folklore Support Centre நடத்திய விழாவில் 9-3-2002 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் கவுரவிக்கப்பட்டேன். இது M.D.M. எனக்குச் செய்த மறக்கவியலாத சிறப்பு.
இலக்கியக் கூட்டங்களுக்கு நான் அதிகம் போவதில்லை. தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்துவிடலாம். Will Durant எழுதிய தி ஸ்டோரி ஆப் ஃபிலாசபி எனும் புத்தகம் மேற்கத்திய தத்துவங்கள் எல்லாவற்றையும் சொல்கிறது.
சுதந்திரக் கலாசாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக் கொள்ளத் தீர்மானித்தால் சமூக பாதிப்புகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. அது பாதுகாப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும் வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயது வரை வாழ்கிறான் என்றால் நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு. இதைத்தான் சுதந்திரக் கலாசாரம் என்று சொல்கிறேன். கற்பை எப்படிப் புரிந்துகொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தேவையற்றது. திருமணத்தை மீறிய உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன!
பெண் தான் விரும்புகிறபடி உறவு வைத்துக்கொள்ளக் கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும். பாலியல் சுதந்திரம் மிகவும் அவசியமானது. 9ஆம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்தவேண்டும்.
சக மனிதனை விரோதியாகக் கருதுவது மிகக் கொடூரமான விஷயம். தனக்கும் சக மனிதனுக்குமான சமூக இடைவெளிதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். அலுவலகங்களில் ஊழியரென்றும் அதிகாரி என்றும் வேறுபாடு இருக்கக்கூடாது. அப்போதுதான் சுமூகமாக இருக்கும். இந்திய நிலையை முதலாளிகள் புரிந்து கொள்ளவில்லை யென்று தெரிகிறது. உதாரணமாக சரியான நேரத்திற்கு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இது நிச்சயம் நடைமுறையில் பலன் தராது. பஸ் சீக்கிரம் வராது. சில வேளைகளில் பஸ்ஸே இருக்காது. குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது. இதுபோன்ற காரணங்களால்தான் மிகவும் தாமதமாகிவிடும். இந்த விஷயம் நிறைய சிக்கல்களுக்கு கொண்டுபோகும். இதையெல்லாம் கடந்து அலுவலகம் சென்றடைந்த ஊழியரை ‘ஏன் தாமதம்’ என்று அதிகாரி கூச்சல் போட்டால் ஊழியர் அப்செட் ஆகி விடுகிறார். அவரால் அன்று முழுதும் சரியாக வேலை செய்ய இயலாதபடியாகிறது. இதனால் அலுவலகத்திற்குதான் நஷ்டம். இதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணமாகச் சொன்னேன். இதைப் போன்ற அனேக விஷயங்கள் உண்டு. இந்த நடவடிக்கைகளால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுவரை 17 நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணி அனுபவத்தில் நான் மூன்று நல்ல உயர் அதிகாரிகளைத்தான் பார்த்திருக்கிறேன்.
A.S. Kalyanaraman, Sr. Field Manager, IMRB.
2. Cre-A:S. Ramakrishnan
3. Dr. M. Saradha Menon
எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போது தான் அதில் நேர்மையிருக்கும். எழுத்தை மிக உணர்ந்துதான் எழுதுகிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது.
என் மனைவி என் கதைகளைப் படிக்கமாட்டாள். அவளுக்கு இலக்கியப் பழக்கம் குறைவு. பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலில் கதாகாலட்சேபம் நடந்தால் போவாள். சுகி சுப்பிரமணியம் பேச்சிலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு.
நான் தனியன். எந்த அமைப்பையும் குழுவையும் சார்ந்து இயங்குபவன் அல்ல.
நிறுவனங்களில் வேலை பார்ப்பது இதுவரை சிக்கலாகவே இருந்திருக்கிறது. இதனால் நான் ஒரு எதிர் நிறுவன ஆளுமை என்று என்னைப் பற்றி நினைக்கிறேன். இதைப் பற்றி ‘தூயோன்’ தொகுப்பில் ‘பரிணாமம்’ என்ற கதையில் சொல்லியிருக்கிறேன். அனேக சிரமங்கள் இருந்தாலும் மன நிறைவான தருணங்களும் உண்டு. நண்பர்களாலும் தோழியராலும் நிறைந்தது என் வாழ்க்கை.
வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை எப்படி மாற்ற வேண்டுமென்று தெரியவில்லை.
ஒன்பது மாதம் முன்பு, தொடர்ந்து மூன்று வாரங்கள் சுய நினைவில்லாமல் இயங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். டாக்டர் சாரதா மேனன் ‘மூன்று வாரங்கள் உங்கள் மெமரி இரரேஸ் ஆகியிருந்தது’ என்றார்கள். இது எப்படி நடந்தது, என்ன காரணமென்று தெரிய வில்லை.
தற்சமயம் சில மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது உடனடித் தேவை – ஒரு வேலை.