வல்லினம் குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ‘கலை இலக்கிய விழா’வின் உற்சாகம் இவ்வருடமும் தொடங்கிவிட்டது. வழக்கமான நூல் வெளியீடுகளோடு செப்டம்பர் மாதம் முழுக்கவே இலக்கிய கலந்துரையாடல்களாக நிகழ்த்த இவ்வருடம் வல்லினம் திட்டமிட்டுள்ளது.
வல்லினம் பட்டறை
‘செம்பருத்தி’ இதழ் ஆதரவுடன் ‘வல்லினம்’ தொடர்ச்சியாக நடத்திவரும் பட்டறையுடன் இவ்வருட கலை இலக்கிய
விழா தொடங்குகிறது. பேராசிரியர் அ. மார்க்ஸ் இம்முறை பட்டறையை வழி நடத்துகிறார். ‘நவீனத்துவம் பின்நவீனத்துவம்’ என்ற தலைப்பில் இம்முறை பட்டறை (14.9.2013 – 15.9.2013) நடைபெரும்.
அதன் விபரம் பின்வருமாறு:
அமர்வு ஒன்று: நவீனத்துவத்துக்கு முன்பான தமிழ் இலக்கியம்
அமர்வு இரண்டு : நவீனத்துவம்
அமர்வு நான்கு : பின்நவீனத்துவம்அமர்வு மூன்று : நவீன இலக்கியம்
அமர்வு ஐந்து : பின்நவீன இலக்கியம்
கலை இலக்கிய விழா
15.9.2013 (ஞாயிறு) மதியம் 2.00க்கு கலை இலக்கிய விழா பொது மக்களுக்காக திறந்துவிடப்படும். கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் (ம.இ.கா கட்டடம் எதிர்ப்புறம்) இந்நிகழ்வு சுமார் மூன்று மணி நேரம் நடைபெரும். இந்நிகழ்வில் ம.நவீனின் ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ என்ற நாவல் தொடர்பான விமர்சன நூல், கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவு’ என்ற தேர்த்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பும், பூங்குழலில் வீரனின் ‘நிகழ்த்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்ற கவிதை தொகுப்பும் வெளியிடப்படும்.
இந்நிகழ்வில் வெளியிடப்போகும் 3 நூல்கள் தொடர்பாகவும் ம.சண்முகசிவா, சுவாமி பிரமானந்தா, அ.பாண்டியன் மற்றும் கா.ஆறுமுகம் விமர்சனம் செய்வார்கள். இதே நிகழ்வில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் அவர் வாசிப்பில் அவதாணித்த மலேசிய இலக்கியங்கள் தொடர்பாக உரையாற்றுவார்.
இதையடுத்து ‘இலக்கியச் சந்திப்பு’ குழுவினரால் வெளியிடப்பட்ட ‘குவர்னிகா’ எனும் நூலும் வெளியீடு காணும். கருணாகரன் (இலங்கை), பானுமதி, ம.நவீன் (மலேசியா) போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு எழுத்தாளர் ஷோபா சக்தி தொகுத்த இந்நூலில் 12 நாடுகளிலிருந்து எழுதப்பட்ட 75க்கும் மேற்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. மலேசியாவிலிருந்து அ.பாண்டியனின் கட்டுரையும், கே.பாலமுருகன், மஹாத்மன், ம.நவீன் ஆகியோரின் சிறுகதைகளும், பூங்குழலி, யோகி, ம.நவீன் ஆகியோரின் கவிதைகளும் மற்றும் மா.சண்முகசிவாவின் நேர்காணல் ஒன்றும் மிக விரிவாக எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர்களுக்கு ராயல்டியும் பயிற்சி ஆசிரியர்களுக்கு இலவச நூல்களும்
எழுத்தாளர்களின் உரிமை குறித்து தொடர்ந்து குரல் கொடுக்கும் வல்லினம், இந்நிகழ்வில் வெளியிடப்படும் மூன்று நூல் எழுத்தாளர்களுக்கும் வழக்கம் போல ராயல்டியாக சுமார் 1000 ரிங்கிட்டை வழங்கும். இத்தொகை சுமார் 500 நூலுக்கான ராயல்டி தொகையாகும்.
இவற்றோடு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் சுமார் 400 நூல்கள் வரை இலவசமாக வழங்க வல்லினம் கடந்த ஆண்டுகள் போலவே முடிவெடுத்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு இலக்கியத்தை கொண்டு சேர்ப்பதில் இத்திட்டம் உதவும் என நம்புகிறது. ஒவ்வொரு கல்லூரியின் விரிவுரையாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்ள பணிக்கப்படுகிறது.
கவிதை கலந்துரையாடல்
வல்லினம் இம்முறை தனது இலக்கிய விழாவினை அடுத்தடுத்த வாரங்களுக்கும் தொடர உள்ளது. 21.9.2013 (சனிக்கிழமை) மாலையில் தமிழக கவிஞர் யவனிகா ஶ்ரீராமுடன் கவிதை தொடர்பான ஓர் இலக்கிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது. 50 பேருக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம். யாவனிகா ஶ்ரீ ராம் தமிழ்க்கவிதை சூழலில் முக்கியமான ஆளுமை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அத்தோடு விமர்சகராகவும், கட்டுரை மற்றும் சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். தமிழில் அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர். தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார். இதுவரை, இரவு என்பது உறங்க அல்ல (1998), கடவுளின் நிறுவனம் (2005), சொற்கள் உறங்கும் நூலகம் (2007), திருடர்களின் சந்தை (2009), காலத்தில் வராதவன் (2010) எனும் தலைப்புகளில் கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
ஷோபா சக்தியுடன் ஓர் கலந்துரையாடல்
‘குவர்னிகா’ நூலின் தொகுப்பாசிரியர் எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் 29.9.2013 ல் ஓர் கலந்துரையாடலையும் இம்முறை வல்லினம் ஏற்பாடு செய்துள்ளது. குவர்னிகா நூல் தொடர்பான வெளிப்படையான விவாதங்கள் இவ்வமர்வில் நடத்தப்படும். ஷோபா சக்தி தற்காலத் தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமானவர். இந்தக் கலந்துரையாடலில் இலக்கியம் மட்டுமல்லாமல் சமகால ஈழ அரசியல், புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் என பல்வேறு விடயங்களை விவாதம் செய்யலாம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே இந்நிகழ்வுக்கு அழைக்கப்படுவர்.
கொரில்லா (நாவல்), ம் (நாவல்), தேசத்துரோகி (சிறுகதைத் தொகுப்பு) ,எம்ஜிஆர் கொலைவழக்கு (சிறுகதைத் தொகுதி), வேலைக்காரிகளின் புத்தகம் (கட்டுரைகள், கொலைநிலம் – தியாகு ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல், போர் இன்னும் ஓயவில்லை (நேர்காணல்கள்), நான் எப்போது அடிமையாயிருந்தேன் (நேர்காணல்கள், பஞ்சத்துக்குப் புலி (விமர்சனம்) என பல நூல்களை வெளியிட்டுள்ள ஷோபா சக்தி பதிப்பாசிரியராகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
வல்லினம் அச்சு இதழ்
அனைத்திற்கும் உச்சமாக வல்லினம் அச்சு இதழாக மீண்டும் அடுத்த ஆண்டு வெளிவருவது இந்தக் கலை இலக்கிய விழா மூலமே சாத்தியமாக்கப்படவுள்ளது. மூன்று நூல்களையும் வாங்கும் நபர்களுக்கு தொடர்ச்சியாக 6 இதழ்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
வல்லினத்தில் இலக்கிய செயல்பாடுகளுக்கு உடன்வர விரும்பும் நண்பர்கள் அதன் ஆசிரியர் ம.நவீனைத் தொடர்புக்கொள்ளலாம்.
தொடர்புக்கு : 0163194522
அழைப்பிற்கு நன்றி நவீன். இப்பகுதியை முதலிலேயே வாசிக்காமல் விட்டதால்தான் இன்று நீங்கள் அழைத்தபோது எனக்குக் குழப்பமாக இருந்தது. இப்போது இல்லை. சந்திப்போம், மூன்று நிகழ்விலும்.
vizha sirappaga nadaipera vaalthukiren naveen
வல்லினம் விழா சிறப்பாக நடைப்பெற என் வாழ்த்துகள்
Vaalthugal. Todaradum Taangalin ilakkiaya pani