பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்

BavaChelladurai-1465876660-34671.pngசாயங்கால வேளைகளில் நரிக்குறவர்கள் ஏரிக்கரைகளில் கொக்கு சுட்டு ஊர்த்தெருக்கள் வழியாக விற்றுச்செல்வார்கள். வாணலியில் வறுக்கப்பட்ட கொக்கு, நாரைகளுக்கு தனித்த சுவையுண்டு. அம்மா வாணல் சோறு என்று அடி தீய்ந்த வாணலில் துளி சோறு போட்டு பிறட்டித்தருவார்கள். எச்சுவைக்கும் ஈடானதல்ல அது. அப்படி ஒருநாள் தெருவழியாக குறவர்கள் கொக்கு விற்றுக்கொண்டு சென்றார்கள். இரண்டு முழ சணலை கொக்கின் மூக்கு வழியாக கோர்த்து தோளில் போட்டவண்ணம் வந்துகொண்டிருந்தனர்.

நான் என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். உடனே குறவனைக் கூப்பிட்டு பேரம் பேசி ஐந்து எண்ணம் கொக்கும் இனாமாக ஒரு நாரையும் வாங்கினாள். அருவாமனையை எடுத்து வரச்சொல்லி வீட்டின் வாசலிலேயே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். நான் குத்துக்காலிதட்டு உரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தலையணை உறையை கழத்துவது போல கழுத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கீறு கீறி உரிக்கத்தொடங்கினர். பால் நிறத்தில் இருந்தன இறகுகள். உரத்தபின்பு கொக்கு குருவி அளைவிற்குதான் இருந்தது.

அதன் கழுத்தில் கடலை உருண்டை அளவில்புடைத்திருந்தது. அதில் கத்தி முனையால் லேசாக கீறியதும் தட்டில் மல்லாட்டைகள் கொட்டியது. பச்சை மல்லாட்டை. எங்கோ தொலைதூர கடலைக்கொல்லையில் அவை தின்றிருக்கலாம். அவ்விதமே அவை கொக்கின் வயிற்றுக்குள் செரிமானமாகாமல் குறவனின் வயிற்றுக்குள் செரிமானமாக எழுதியிருக்கிறது. அந்த பச்சை மல்லாட்டையை அப்படியே எடுத்து நீரில் கழுவி வாயிலிட்டு மென்றபடி அடுத்தடுத்த கொக்குகளை உரிக்கத்தொடங்கினார்கள். நான் ஆச்சரியம் விலகாமல் அவர் தின்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்பழுக்கற்ற அந்தக் காட்சி எளிதில் மறக்கக் கூடியதல்ல. குழந்தை தன் வாயிலிதட்டுத் தருவதை எவ்வித சுழிப்புமின்றி தாய் உண்பதைப் போன்ற காட்சி. அவைகளை விற்றுத் தொழில் நடத்தினாலும் அவற்றின் மேல் குறவர்கள் வைத்திருக்கும் அன்பைப் போல வெறொருவர்  வைத்திருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக அன்றைய கொக்குக்கறி மிகுந்த சுவையுடன் இருந்தது. குறவர்கள் பணம் பெற்றுச்செல்லும்போது அவரின் துப்பாக்கியின் மேலே கண்ணை வைத்துக்கொண்டே கேட்டேன். என்னையும் அடுத்த வேட்டைக்கு அழைத்துச் செல்வீர்களா என்று. சிரித்தபடி சென்றுவிட்டனர். பிறகு அரசு அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டது. வேலைக்குச் சென்று பொருளீட்டும் குடியான வாழ்வை வாழச்சொன்னது. கொக்கும், வெள்ளை எலியும், முயலும் விற்றபடி தெருவில் செல்லும் மனிதர்கள் இல்லாமல் போனார்கள். நிரந்தரமாக அவர்களை ஓரிடத்தில் தங்கச்சொல்லி ஒதுக்குப்புறமாக வாழச்சொன்னது. பிறகெப்போதும் நான் கொக்குக்கறி சாப்பிடவில்லை. பவா செல்லத்துரை அவர்களை சந்திக்கும் வரை.

சில நட்புகள் எப்படி உருவாகும் என்பதை அறிய முடியாது. தானாக நிகழ்ந்துவிடும்.  நம் வாழும் காலம் வரை தொடர்ந்து அந்த நட்பும் நம்முடனே வந்துவிடும். முன்பின் அறிமுகமில்லாதவர் பவா, அவர் எழுத்துக்களை வாசித்ததுமில்லை, அவரை அறிந்ததுமில்லை. எனக்கும் பவாவுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அந்த நட்பு ஏற்பட்டது. அய்யனார் விஸ்வநாத் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். அமீரகத்தில் வலைப்பூவில் எழுதும் காலத்தில் நண்பர்களானோம்.  அமீரகத்திலிருந்து திரும்பி ஊரில் வெட்டியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது அய்யனாரிடமிருந்து போன். “எங்கூர்ல ஒரு கிரகப்பிரவேசம் நாளைக்கு வந்துடு” என்றார். கிரகப்பிரவேசத்தில் நமக்கென்ன வேலை? மூதலில் கோமாதாவை அல்லவா உள்ளே அழைத்துச் செல்வார்கள். நம்மை மாடு என விடைக்கிறாரோ என்றொரு சம்சயம் வந்தது. வரமுடியாது என்றேன். நீ கண்டிப்பா வரணும். உனக்கு இந்த வீடு பிடிக்கும். சும்மாதான இருக்க வந்துட்டு போ என்று உரிமையோடு சொன்னார். வருவதாக வாக்களித்தேன. மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதில் உள்ளூர ஒரு தயக்கம் என்னிடமிருந்தது. வருவதாக சொன்னேனே ஒழிய போகும் எண்ணமெல்லாம் இல்லை. யாரோ குடிபோகிறார்கள் அங்கே நாம் போய் என்ன செய்வது என்ற தயக்கம் தடுத்தது. இருந்தாலும் பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டேன்.

திருவண்ணாமலையை எல்லோரும் அக்கோயிலுக்காகவும், ஆசிரமங்களுக்காகவும், கிரிவலத்துக்காகவும் மட்டுமே பெரும்பாலானவர்கள் அறிவார்கள். நானும் அவ்வண்ணமே அறிந்திருக்கிறேன். அக்கா திருமணத்திற்குப் பிறகு புதுமணத்தம்பதிகளுடன் மாப்பிள்ளைத் தோழனாக கிரிவலம் சுற்ற நானும் போக நிர்பந்திக்கப்பட்டேன். வெறும் கால்களுடன் தார் ரோட்டில் பல மைல்கள் நடந்து மலை சுற்றியதால் மறுநாள் கால்களில் கொப்புளம் வெடித்து நடக்க முடியாத நாட்கள் நினைவுக்கு வந்தது. அந்த ஒரு காரணத்திற்காகவே மனதில் ஓரத்தில் திருவண்ணாமலையை வெறுத்தேன்.

சும்மாதானே இருக்கிறோம் எனக் கிளம்பி பேருந்தில் அமர்ந்துவிட்டேன். அங்கே இறங்கியதும் அய்யனாருடன் சேர்ந்து பவாவின் இல்லம் சென்றோம். கிரகப்பிரவேசத்திற்கான எவ்வித அறிகுறியும் அவ்வீட்டில் இல்லை. தோரணம், பந்தல், வாழைக்குலை, நாயனம், மேளம்

எதுவுமே இல்லை. நிறைய ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவ்வீட்டைக் கட்டிய கொத்தனார்களும், சித்தாள்களும் வீட்டைத் திறக்க பக்கபலமாக இருந்தார்கள். கருப்புக் கண்ணாடி அணிந்த தொப்பி போட்ட வயதான ஒருவர் ரிப்பன் கத்தரித்தார். எல்லோரும் உள்ளே சென்றோம். அவ்வீட்டில் நிறைய ஆச்சரியங்கள் இருந்தது. மற்ற வீடுகளைப்பொல அல்ல அந்த வீடு. மொத்த வீடும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. கதவுகள் கண்ணாடிகளால் செய்யப்பட்டிருந்தது. உபயோகமில்லாத ஆட்டுக்கல்லை வாஷ்பேசினாக வைத்திருந்தார்கள்.

சுவர்களில் சதுர சதுரமாக தெரியும் கற்கள் எதோ கிணற்றுக்குள் இருப்பதைப்போன்ற உணர்வைத் தந்தது. நீரில்லாத கிணற்றின் உள்ளே இருப்பதைப்போன்ற நிழல் குளுமை. திடிரென ஒருவர் குரலெடுத்து நாட்டுப்புற பாடல் ஒன்றைப் பாடினார். சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் மிக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். கண்கள் மூடியதும் நான் எதோ வயல்வெளி ஒன்றில் அமர்ந்திருப்பதைபோல நினைத்துக்கொண்டேன். சுவர்ப்புறம் சாய்ந்து ஒருக்காலை மடக்கி மற்றொரு காலை சப்பணமிட்டு கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தவரை தூரத்திலிருந்து அடையாளம் காட்டினார் அய்யனார். உன் பக்கத்துல யார்னு தெரிதாடா என்றார். அப்போதுதான் கவனித்தேன். என்னருகில் அமர்ந்திருந்தது இயக்குனர் பாலுமகேந்திரா.

அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம் போன்ற காலத்தால் அழியாத படங்களைத் தந்த ஒரு மாபெரும் படைப்பாளியின் அருகில் அமர்ந்திருக்கிறேன் என நம்பமுடியவில்லை. சட்டனெ ஒரு பயம் கவ்விக்கொண்டது. பொருத்தமற்ற இடத்தில் அமர்ந்து விட்டதைப்போன்ற பதட்டம். சாப்பிட அமர்ந்தபோது அருகில் இருந்தவரைக்கூர்ந்து கவனித்ததில் அவர்தான் கா.சீ. சிவக்குமார் என்று அறிந்துகொண்டேன். சிரிப்புக்கு பஞ்சமில்லாத பேச்சு. கன்னிவாடி அப்போதுதான் படித்திருந்தேன். சீனமுகம் போல சிரிக்கும்போது அவரின் கண்கள் மறைந்துவிட்டிருந்தது. அன்றைய விருந்தில் ஒரு ஆட்டின் அத்தனை  பாகங்களையும் விதம் விதமாக சமைத்திருந்தார்கள். ஷைலஜா அக்கா அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டிருந்தார்.

ஒரு வழிப்போக்கன் திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்து அக்குடும்பத்தில் ஒருவனாகிவிட்ட ஆச்சரியம் போல அவ்வீட்டில் இருந்தவர்கள் என்னை ஏந்திக்கொண்டனர். கடைசிப் பந்திவரை என் வீட்டு விசேஷம் போல நான் ஓடியாடி பரிமாறிக்கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்து ஆசுவாசமாக பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வழக்கம்போல க.சீ. சிவாதான் அங்கே நடுநாயகமாக பேசிக்கொண்டிருந்தார்.

புதிதாக நுழையும் எவரும் ஒரு நொடி குழம்பி அதிசயித்துப்போகவே சாத்தியம் உள்ள வீடு அது. தன்னம்பிக்கையின் உச்சம் பவா. கலைஞர்களின் மனதே அப்படி உருவானதுதான். இயக்குனர் மிஷ்கின் பரிசளித்த புரொஜெக்டரில் வம்சி (அப்போது சிறுவன்) வீட்டின் மொட்டைமாடியில் சினிமா கிளப் ஒன்று தொடங்கினான். அத்தெரு சிறுவர்களை அழைத்து இரானிய இயக்குனரின் படம் ஒன்றை திரையிட்டான். அப்படத்தைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த இயக்குனரை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அழைத்து வந்து திருவண்ணாமலையில் பாராட்டு விழா நடத்தியே ஆகவேண்டும் என எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். எப்படி அவரை தொடர்புகொள்வது எனபதுதான் சிக்கல்.

வீடு திரும்பும்போது அவரின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” என்ற சிறுகதைத் தொகுப்பை எடுத்து வந்திருந்தேன். தமிழ் இலக்கியத்தில் பிராந்திய மண் சார்ந்த கதைகள் எப்போதும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எல்லா பக்கங்களிலும் மண்சார்ந்த கதைகள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நடுநாட்டுக்கு என்று வரும்போது மிகச்சிலரே அதில் முகம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். கண்மணி குணசேகரன், இமயம், அஷ்வகோஷ் என்றழைக்கப்படும் ராசேந்திரசோழன். எனஇவர்களுக்கு சற்றும் குறையாத தரத்துடன் எழுதப்பட்ட கதைகள் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறைத் தொகுப்பில் உள்ளது. மிக மிக அற்புதமான கதைகள் அவை. சில கதைகள் அதன் தலைப்புகளுக்காகவே மிக அதிக வாசகர்களால் நினைவுகூரப்படுவதுண்டு.

உதாரணமாக ராசேந்திர சோழனின் “தனபாக்கியத்தோட ரவ நேரம்” அதே போல இத்தொகுப்பில் ஒரு கதை உள்ளது. என்றென்றும் நினைவில் நிற்கும்படியாத தலைப்பு. “ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள்” எத்தனை அற்புதமாக தலைப்பு. ஒரு சிறுவன் தன் பாட்டியோடு கடலைக்கொல்லைக்கு கடலை புடுங்கச்சென்று திரும்பி வருவதுதான் கதை. பால் தேர்ந்த மல்லாட்டை உரித்தபின் உள்தோன்றும் ரோஸ்நிற பச்சை மல்லாட்டைகள்தான் ராஜாம்பாளின் நினைவுகள். “இருளப்புள்ளயோட என்னடா வெளயாட்டு” என அவனின் ப்ரிய தோழியை விட்டு பிரித்துவிடுகிறார்கள். பின் அவன் பார்க்கும் எல்லா சிறுமிகளும் ராஜாம்பாளாக தெரிகிறார்கள். மல்லாட்டையின் ரோஸ்நிறம் கூட ராஜாம்பாளின் நினைவுதான்.

வேட்டை என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லோருமே கதை எழுதியிருக்கிறார்கள். இத்தொகுப்பிலும் வேட்டை என்றொரு சிறுகதை உண்டு. இத்தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று. மிக எளிமையான நேர்க்கோட்டுக் கதை. கதையின் நாயகன்  ஜப்பான் கிழவன். அந்தக்காட்டை அவன் நேசித்தான். “வேட்டைன்றது எனக்கும் காட்டுக்குமான சண்டை” என்று தொடங்கும் கதை. பிறந்ததிலிருந்து காட்டோடு வாழும் ஒருவனை மெல்ல மெல்ல நகர வாழ்க்கைக்குள் இழுத்து வந்துவிடுகிறது. ஆனால் அவன் காட்டுக்குச் செல்வதை நிறுத்துவதில்லை. ஒரு முயல்குட்டியாவது கிடைத்துவிடும். அவன் எப்போதும் வெறும் கையோடு திரும்பியதே இல்லை. குறைந்தபட்சம் ஒரு அணிலாவாது கிடைத்துவிடும். இப்படிதான் அவன் எப்போதும் காட்டை வென்று வருகிறான்.

எல்லாவற்றுக்கும் முடிவு உண்டென்பதைப்போல ஒருநாள் காட்டிடம் தோற்றுப்போவதுதான் கதை. எப்போதும் எடுத்து வாசித்துப்பார்க்கதோன்றும் வகையான கதை.

பொதுவாக எப்பேர்ப்பட்ட எழுத்தாளராக இருந்தாலும் ஒரு தொகுப்பில் பத்து கதைகள் இருந்தாலும் காலத்திற்கும் நினைவுகொள்ளக்கூடியாத ஒரே ஒரு கதைதான் அமையும். மிகப்பெரும்பாலான வாசகர்களின் ரசனை அடிப்படையில் அக்கதையை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

மிக நுட்பமாக அதை நினைவிலும் வைத்திருப்பார்கள். எல்லா தொகுப்புக்கும் இப்படிப்பட்ட ஒரு கதை உண்டு.  “சத்ரு” என்ற கதையை அப்படி ஒரு கதையாக எனக்குள் உருவகப்படுத்தி இருக்கிறேன். மழை பொய்த்த பஞ்சமாபஞ்சம் நிகழும் ஊரில் விதைநெல்லைத் திருடி ஒருவன் பிடிபடுகிறான். அவனை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுத்து மரணதண்டனை விதிக்கிறார்கள். அவன் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்டு பாறையில் கிடத்தபடுகிறான். அவனைக்கொல்வதற்காக விஷ இலைகளைப்பறிக்க ஒரு குழு மலைக்குச் செல்கிறது. ஒட்ட ஒட்ட அரைத்து வாயில் ஊற்றினால் ஒரு மணி நேரத்தில் உடல் விரைத்துச் செத்துவிடப்போகிறவனை ஊர்மக்களே ஒன்று சேர்ந்து விடுவிப்பதுபோல மழையொன்று அடித்து ஊற்றுகிறது.

வெடித்த பூமியெங்கும் பரவும் ஈரம் மனித மனங்களுக்கும் பரவ விடுதலை செய்கின்றனர். ஒரு பேண்டசி கதைக்குண்டான சுவாரசியம் இதில் உண்டு. இக்கதையை வாசிக்கும்போது மெல்கிப்சனின் அபொகலிப்டோ படம் நினைவுக்கு வந்துபோனது.  மீடியா வாய்ஸ் இதழில் ஒரு தொடர் ஒன்றை எழுதினார். ஆளுமைகளுடனான நட்பைப் பற்றி அதில் ஒவ்வொரு வாரமும் பகிர்ந்துகொண்டார். மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத்தொடர் புத்தகமாக “எல்லா நாளும் கார்த்திகை” என்ற பெயரில் வம்சி வெளியீடாகவே வந்தது. பாலுமகேந்திரா, இயக்குனர் பாலா, மிஷ்கின், மம்முட்டி, பிரபஞ்சன், பாரதிராஜா, கந்தர்வன், எழுத்துலக, திரையுலக நண்பர்களைப் பற்றி எழுதப்பட்ட தொடர். எல்லோருக்கும் பிடித்த ஒரு புத்தகமாக இன்றுவரை அது உள்ளது. பவாவிற்குள் சுறுசுறுப்பாக  அங்குமிங்கும் ஓடியாடி பரபரப்பாக இருக்கும் ஒரு சிறுவனை எப்போதும் பார்க்க முடியும். அது எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி

உடனடித்தீர்வு அவரிடம் இருந்து வந்துவிடும். விமர்சனப்பார்வையில் சொல்லவேண்டும் என்றால் எல்லா வடிவங்களிலும் அவரின் ஆளுமை வெளிப்பட்டே இருக்கிறது.  சிறுகதையாகட்டும், பத்தி எழுத்தின் பாணியில் அமைந்த கட்டுரைகளாகட்டும், கதைசொல்லியாகட்டும். எல்லா தளத்திலும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால் ஒரு எளிய வாசக மனம் இன்னும் அவரிடமிருந்து கதைகளைத்தான் எதிர்பார்த்துக்கிடக்கிறது.

எழுத்தாளன் என்பவன் எப்போதும் மக்கள் முன்பாக நின்று மைக் பிடித்து பேசக்கூடாது என்பார் சுந்தரராமசாமி. எழுத்தாளன் வெறும் எழுதுகிறவன் மட்டுமே. எழுத்தின் வழியாக மட்டுமே உச்சமடைய வேண்டியவன் அவன். உடனடி எதிர்வினைகளை, பாராட்டுதல்களை எழுத்தாளன் ருசிகண்டுவிட்டால் எழுத்தின் தீவிரம் குறைந்துவிடக்கூடும். பின்பு அவன் மனம் உடனடி உற்சாகமூட்டுதல்களை எதிர்ப்பார்க்கப்பழகிவிடும். பின்பு ஒருநாளும் என்றாவது ஒருநாள் வாசித்துப் பரவசமடைந்து பேசக்கூடிய வாசகனை அவன் இழந்து விடுவான். இக்கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகவே உணரத்தோன்றுகிறது.

மிகச்சிறந்த எழுத்தாளனை ஒரு சமூகம் பேச்சாளனாகவும் கதை சொல்பவனாகவும் மாற்றிவிடுகிறது. அப்படித்தான் பவாவும் ஒரு மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறி அவருக்குள் இருந் கதாசிரியனை இழந்து நிற்கிறதாக ஒரு வாசகனாக உணர்கிறேன். இதில் சுவாரசியம் என்னவென்றால் கதைசொல்வதிலும் கூட நிகரற்ற கதைசொல்லியாக அவர் இருக்கிறார் என்பதுதான். எழுத்தாளன் என்ற இடத்திலிருந்து கட்டுரையாளர் என்ற இடத்துக்கு நகர்ந்து மெல்ல மெல்ல கதைசொல்லியாக மாறிவிட்ட பவா செல்லதுரை அவர்களை மறுபடி எழுத்தாளராகவே காண ஆசைகொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவேண்டிய நேரம் இது என்றே கருதுகிறேன். வாசகர்கள் இதை ஒரு கோரிக்கையாக வைக்க முடியாது. எழுத்து எழுதுபவனை எழுதிச்செல்லும். அந்த கணத்துக்காக காத்திருக்கவேண்டும். வாசகனின் கோரிக்கையால் பெறப்படல் ஆகாது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பு உலவுவதை உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதை அறியத்தரலாம்.

2 comments for “பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்

  1. Supremaniam -wilayahmaniam
    September 13, 2018 at 5:58 pm

    என்ன எழுதுவது என்று தெரியவில்லை .மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  2. MK குமார்
    November 9, 2018 at 4:49 pm

    அண்மையில் படித்தவைகளில் நினைவில் நிற்கும் அருமையான கட்டுரை. வாழ்த்துகள் கதிர்.

Leave a Reply to MK குமார் Cancel reply