கர்ப்பப்பை

ycdoll-100cm-xiaohe-silicone-doll-toys-sex-sex-doll-happiistore-1902-14-happiistore@37“இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன்.

“இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத் தன் சுட்டு விரலால் நீட்டித் தொட்டு கேட்டாள். அவளின் கைகளை தட்டிவிட்டேன்.

“சொல்லு”

“ஓம்”

என் கண்களை வெறித்துப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்து சென்று தன் குளிரங்கியை அணிந்துகொண்டு புறப்பட்டாள். அவளைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான சமாதானத்தையும் என்னால் சொல்ல இயலவில்லை.

அந்தப் பொம்மையை அமேசன் இணைய தளத்திலிருந்து இருநூறு ஸ்ரேலிங் பவுண்டுக்கு வாங்கியிருந்தேன். பார்ப்பதற்கு ஏறக்குறைய மெய்யான பெண்போலவே தோற்றம் கொடுக்கும். பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட அதன் உடல் முற்றிலும் மானுடத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. நிஜமான பெண்ணின் தசைகளுக்குரிய மென்மையுடன் வடிவமைக்கப்பட்டவை. ஒரு பெண்ணைப் புணர்வது போல புணர இயலும். அலமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்ததை அமலா பார்த்துவிட்டாள்.

                                                                                              000

மறுநாள் பல்கலைக்கழக மதுச்சாலையின் வெளிப்புறம் அமர்ந்து பிரிட்டிஷ் நிலத்தின் இலையுதிர் காலத்து குளிரை அனுபவித்தவாறு பியர் அருந்திக் கொண்டிருக்கும்போது என் தோள் மூட்டை யாரோ தொட்டார்கள். திரும்பும் போதே என் உள்ளுணர்வு சொல்லிவிட்டது இது அமலாவின் கைதான் என்று.

“இங்கே என்ன செய்கிறாய்?”

“வகுப்புகள் முடிவடைந்துவிட்டன, வீடு செல்ல நேரம் இருக்கிறது”

“இரு எனக்கு ஒரு பாயின்ட் பியர் வாங்கி வருகிறேன்”

சற்று நேரத்தில் நுரைத்துத் ததும்பிய பியரைக் கிளாஸில் ஏந்திக்கொண்டு என் முன்னே வந்து அமர்ந்தாள். மெல்ல மெல்ல மாணவர்களால் மதுச்சாலை நிரம்பிக் கொண்டிருந்தது.

“நீ மிகவும் தனிமையில் இருக்கிறாயா?”

அவளை நிமிர்ந்து பார்த்தேன். எதை நோக்கி வருகிறாள் என்று புரிந்தது. என் உணர்வுகள் புறாவின் சிறகடிப்பு போல் பதற்றம் கொள்ளலாகின. முடிந்தவரை நிதானத்தை உருவாக்கி ஒரு புன்னகையை மட்டும் ஒளிர்வித்தேன். தன் நெற்றியில் புரண்ட கேசத்தை இடக்கையால் கோதி மேலே தள்ளிவிட்டாள்.

அமலாவைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் சந்தித்தபோது, அவளை ஒரு ஈழத்து தமிழ் பெண்ணாக நினைத்துப்பார்க்கவே இயலவில்லை. கழுத்துவரை ஒட்ட வெட்டிய முடிவெட்டு, உடல் மொழி என்பவற்றைத் தாண்டி இன்னும் ஏதோவொன்று அவளைத் தமிழ் பெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இடரச் செய்தது.

பல்கலைக்கழக உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்யச் செல்லும்போது தற்செயலாக அறிமுகமாகினாள். உச்சரிப்பையும், உடல் மொழியையும் பார்த்த பின்னர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இரண்டாவது ஆசிய தலைமுறையாக இருக்கும் என்றே முதலில் நினைத்திருந்தேன். அவள் அசட்டையாக, “நான் கிளிநொச்சி, இங்கு வந்து இரண்டு வருடங்கள்தான்,” என்று சொன்னபோது வியப்பால் நொறுங்கிப் போனேன். அந்த வியப்பு வளர்ந்து சுழித்து மெல்ல அவளை நோக்கி ஈர்த்தது.

கலைப்பிரிவு என்னுடைய வளாகத்திலிருந்து நீண்ட தூரம் தள்ளியிருந்ததால் நேரில் சந்திப்பது மிகக் குறைவாக இருந்தது. பின்னர் ஒருமுறை நான் தங்கியிருக்கும் வீட்டுக்குள் வந்தாள். அது அவளின் வளாகத்துக்கு அருகாமை என்பதால் அடிக்கடி என்னுடன் கேரம் போர்ட் விளையாட வருவாள். பின்னர் ஒரு நாள் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய கடந்தகாலக் கதையைச் சொன்னாள். மிக உருக்கம் நிறைந்த இந்தக் கதையை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது மலேசியாவிலிருந்து நவீன், வல்லினம் இதழுக்காக சிறுகதை கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

நிதானமாக பின்னேரப் பொழுதில் அவளின் உண்மைப் பெயரிலே கதை எழுத ஆரம்பிதேன்.

1

அமலா மயக்கத்தில் சுய பிரக்ஞை தவறிப்போய் வைத்தியசாலைப் படுக்கையில் வீழ்ந்திருந்தாள். அவளின் ஒற்றைக்கை படுக்கையிலிருந்து வெளியே நீட்டியவாறு இருந்தது. வயிற்றின் அடியே கட்டிய கட்டுத்துணி இரத்தத்தால் ஊறி கடுமையாகச் சிவந்து போயிருந்தது. அவளருகே நின்றிருந்த தாதி மிகுந்த படபடப்புடன் இருந்தார். வேகமாக வந்த வைத்தியசாலை சிப்பந்திகள் இருவர் அமலாவைப் படுக்கை விரிப்புடன் தூக்கி சக்கரங்கள் பூட்டப்பட்ட படுக்கையில் கிடத்தி சத்திர சிகிச்சைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

வெளியே எறிகணை சத்தங்கள் விட்டுவிட்டுக் கேட்டன. துப்பாக்கி ஒலிகளின் அதிர்வுகள் வைத்திய சாலையை உலுக்கிக் கொண்டிருந்தன. “இன்னும் கொஞ்ச நேரத்தில் இராணுவம் இங்கே வந்துவிடலாம்,” மருத்துவர் இருவர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

பதினாறு வயது நிரம்பிய அமலாவின் வயிற்றில் உதித்த சிசுவுக்கு அப்போதுதான் இரண்டு மாதங்களும் பதினெட்டு நாட்களும் முடிந்திருந்தன.

தலைமை வைத்தியர் அமலாவை பரிசோதித்துவிட்டு, தன்னுடைய மெல்லிய கைகளைக் கோர்த்து உரசியவண்ணம், “இவாவை கூட்டிட்டு வந்தவர்கள் எங்கே?” என்று சிப்பந்திகளிடம் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை மீறி துப்பாக்கி சத்தங்களும் குண்டுச் சத்தங்களும் இரைந்தன. தாதியொருவர் தன்னுடைய கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதுமாறு இடறுப்பட்டு ஓடிப்போய் அமலாவின் அப்பா சிவசங்கரத்தை அழைத்து வந்தார்.

சிவசங்கரத்தின் முகம் வற்றிப்போய், கண்கள் ஒளியிழந்து சிதறி இருந்தன. காய்ந்த நிலத்தின் வெடிப்புகள் போல் முகத்தின் தோல் உரிந்து வெடித்திருந்தது.

“நீங்க இவாவின் அப்பாவா?”

“ஓம் டொக்டர்”

“ஷெல் துண்டு, அடிவயிற்றைக் கிழித்து உள்ளே போயிருக்கு, கர்ப்பப்பையில் இருந்த குழந்தை சிதைந்துவிட்டது. முற்றாக வெட்டி எடுத்து அகற்ற வேண்டும்,” என்று வைத்தியர் வேகமாகச் சொன்னார். மூக்கு கண்ணாடிக்குள் அசைந்த அவரது விழிகளைப் பார்த்தவாறு சிவசங்கரம் அமைதியாக நின்றார். அவரது முகம் மேலும் விறைத்துக் கொண்டிருந்தது.

“இதையெல்லாம் செய்ய எங்களிடம் வசதியில்லை, சத்திர சிகிச்சைக்கு உபகரணங்களும் இல்லை,” சொல்லி முடித்தபோது மூக்குக் கண்ணாடிக்குள் அவர் விழிகள் அசையாமல் குத்தி நின்றன.

2

அமலா சிவசங்கரம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிறந்தபோது, இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே யாழ்ப்பாண நிலப்பரப்பைக் கைப்பற்றுவது சார்ந்து கடும் சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. குண்டு வீச்சு விமானங்கள் இரைச்சலுடன் தாழப் பறந்து குத்தி எழுந்து குண்டுகளை வீசின. இந்தக் கலவரங்கள் மத்தியில்தான் யோனியை உந்தித் தள்ளிக்கொண்டு அமலா தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தாள். மருத்துவர்களும், தாதிகளும் விரைவாகவும் அதேநேரம் பிழைகள் நேராமலும் பிரசவத்தை கவனித்து முடித்தார்கள். தொப்புள்கொடியை வெட்டிய நேரம், வாகன தரிப்பிடத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்தது. அதே சத்தத்தில் அரண்டு முதன்முதலாக வாயைத் திறந்து அமலா அழ ஆரம்பித்தாள்.

அமலா பிறந்த பின்னர் கிளிநொச்சி நிலப்பரப்புக்கு அவர்கள் குடிபெயர்ந்தார்கள். ‘வெல்லம்கட்டி’ என்ற ஊரில், சிறிய மண் வீட்டில் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பித்தபோது, இன்னும் யுத்தம் வலுக்க ஆரம்பித்தது. அந்த யுத்தத்திற்குள் அமலா மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தாலும், அவளது வளர்ச்சி வேகமாக நிகழ்ந்தது போல அப்பா சிவசங்கரத்திற்கு தோன்றியது.

அமலாவுக்கு மொழியைக் கற்றுக்கொள்ளுதல் வேகமாக வசப்பட்டது. தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கெட்டிக்காரியாகப் பிரகாசிக்கத் தொடங்கினாள். அவளது ஆங்கில அறிவு அங்கிருந்த பாடசாலை ஆசிரியரை ஆச்சரியம் கொள்ளச் செய்தது. கணிதம், விஞ்ஞானம் போன்றவற்றில் படு சுட்டிகையாக விளங்கும் மாணவர்கள்கூட ஆங்கிலத்திற்கு நூற்றுக்கு நாற்பதிற்கும் குறைவான புள்ளிகளே எடுத்தார்கள். ஆனால் அமலா எண்பதுக்கு மேற்பட்ட புள்ளிகளை தொடர்ந்து எடுத்து தனது கெட்டித்தனத்தால் மற்றவர்களை விழியொளிரப் பார்க்க வைத்தாள்.

போர் மீண்டும் உக்கிரமாக எழுந்தபோது, அமலா பாடசாலைக்குச் செல்வது தடைப்பட ஆரம்பித்தது. வீட்டுக்கு ஒருவர் கண்டிப்பாகப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற கோரிக்கை வரிச் சீருடை அணிந்த விடுதலைப்புலிப் போராளிகளால் வீடுவீடாகப் பிரச்சாரங்களாக ஆரம்பிக்கப்பட்டன. அமலா தனிப்பிள்ளை. அம்மாவும் அப்பாவும் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்தனர்.

“இளந்தாரிப் பொடியன்களைத்தான் கேட்கிறார்கள், அமலா சின்னப் பெட்டை, அவளுக்கு ஒன்றும் ஆகாது,” என்று பக்கத்து வீட்டு செல்லம்மா ஆச்சி அப்பாவைச் சமாதானப்படுத்தினார்.

சிறிது காலம் செல்ல, அதிகாலையில் கண் விழித்து துயில் எழும் பதின்ம வயது சிறுவர் சிறுமிகளை பிக்கப் வாகனத்தில் வந்து இயக்க உறுப்பினர்கள் அழைத்துச் சென்றனர். பள்ளிக்கூடம் செல்பவர்கள், வீடு திரும்புபவர்கள், விளையாடச் சென்றவர்கள் என்று பலவந்தமாகச் சிறார்கள் இயக்கத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அடர் காட்டுக்குள் இருக்கும் பயிற்சி முகாம்களில் தலைமயிர் ஒட்ட வெட்டப்பட்டு ஆயுதப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. பிள்ளைகளைப் பெற்றவர்கள் இயக்க அலுவலகங்களின் வாசல்களிலே தங்கள் பிள்ளைகளைத் தேடி அலைந்தனர். அவர்களது விழிகள் ஈரமாகித் தவித்திருந்தன.

அமலா வீட்டருகே குடியிருந்த தர்ஷிகாவை இயக்கத்தினர் இழுத்துச் சென்றபோது அவள் மாலையில் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கேற்றி தேவாரம் பாடிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தாள். பதினைந்து வயதுதான் அவளுக்கு அப்போது ஆகியிருந்தது. இரண்டு வயது இடைவெளியில் தம்பியும் நான்கு வயது இடைவெளியில் தங்கையும் தர்ஷிகாவுக்கு இருந்தனர். அவளது அப்பாவும், அம்மாவும் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அவர்கள் பொருட்படுத்தாமல் இழுத்துச் சென்றனர்.

“நமது தேசம் நாளுக்குநாள் சுருங்கி வருகிறது; எத்தனையோ இளம் குருத்துகள் போராட்டத்தை பலப்படுத்த நமக்காக களத்தில் போராடி இரத்தம் சிந்தி வருகிறார்கள். அவர்களுக்கான ஆதரவைக் கொடுப்பது உங்கள் கடமை அல்லவா!” என்று வரிச்சீருடை அணிந்த புலிவீரன் சொல்லி முடிக்க முதல் புகையைக் கக்கிக்கொண்டு அந்த பிக்கப் வாகனம் சீறிச் சென்றது.

அன்று இரவு முழுவதும் சிவசங்கரம் வெளி முற்றத்தில் ஓலைப் பாயில் படுத்திருந்து கடும் யோசனையில் தொலைந்து கொண்டிருந்தார். அவரது மனைவி “என்னப்பா யோசிக்கிறீயல்?” என்று கேட்டபோது, “பிள்ளையைப் பிடிச்சுக் கொண்டு போய் விடுவாங்களோ என்று பயமாய் கிடக்குது,” என்றார்.

வானம் பொத்தல் விழுந்த மிகப்பெரிய போர்வையாக பரவியிருந்தது. ஒளித் தீட்டுகளாக எறிகணைகளின் பாய்ச்சலில் கங்குகள் புள்ளிப்புள்ளியாகத் தோன்றின. “உள்ள வந்து படுங்கப்பா” என்று மனைவி சொன்னார்.

கல்யாணம் செய்து வைத்தால் புலிகள் பிடிக்க மாட்டார்கள் என்ற யோசனை அவருக்குள் மங்கலாக உதித்தது. காலையில் எழுந்து பக்கத்து வீட்டு செல்லம்மா கிழவியிடம் அதைச் சொன்னார். “அப்படியேதும் செய்யாத ராசா, அவள் வாழ்க்கை அநியாயமாகப் போயிடும்,” என்று சேலையை வாயில் பொத்தியவாறு அடைத்த குரலில் சொன்னார். “இல்லாவிட்டால் அவள் உயிரே போயிடும்”, என்று சொல்லிவிட்டு தலையை சாய்த்தவாறு படலையைத் தாண்டி நடந்தார்.

அவர் யோசிக்க அவ்வளவு அவகாசம் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் பல்வேறு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டவாறு இருந்தன. தினமும் எல்லைகள் சுருங்கிவந்தன. ‘ஆயுத தளவாடங்கள் நம்மிடம் உண்டு, போராட ஆட்பலம் மட்டுமே போதாது,’ என்று வீதி வழியே மக்கள் வாழும் இடங்களில் ஒலிபெருக்கியால் அறிவித்தவாறு இருந்தார்கள். இன்னுமொரு பக்கம் வேகவேகமாக வலுக்கட்டாயமாக போராட்டத்திற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர்.

அமலாவுக்கு விரைவில் திருமணம் செய்து வைப்போம் என்று மனைவியிடம் சொன்னபோது “மாப்பிள்ளைக்கு எங்கே போவது?” என்று மட்டுமே கேட்டார்.

3

அமலாவின் மச்சான் மயூரனுக்கு அவளைவிட பதினைந்து வயது அதிகமாக இருந்தது. அவனது அம்மா நவராணி எப்போதாவது வீட்டுக்கு வந்து செல்வார். அப்பா வழியில் ஒன்றுவிட்ட தங்கை; அவரது கணவர் பலகாலம் முன்னர் நவராணியுடன் ஏற்பட்ட சண்டையில் பூச்சிமருந்து குடித்து மரித்துப்போனார்.

மகனுடன் வந்த நவராணி அமலாவை அருகில் அமர்த்தி “என் ராசாத்தி, ஒன்றும் யோசியாத. எங்களுடன் வந்திரு. எதுவும் ஆகாது,” என்று கையைத் தடவினார்.

மயூரனின் தோற்றம் இருக்கும் வயதைவிட அதிகமாகக் கூட்டிக் காட்டியது. தடித்த புருவங்கள் கொண்ட இமையும், கொழுத்த கன்னங்களும் அமலாவை இன்னும் பயமுறுத்தின. இவனைத்தான் திருமணம் செய்யவேண்டும், இன்னும் இரண்டு நாட்களில் என்று சிவசங்கரம் சொன்னபோது, அமலாவின் கண்கள் அசையாமல் அரண்டு நின்றன.

அவளின் வகுப்பில் அவளுடன் கூடப் படித்த எல்லோரும் ஒருவர்பின் ஒருவராக பெரிய பிள்ளை ஆனபோது அமலா மட்டுமே தனித்திருந்தாள். அவளைத் தவிர எல்லோரும் பெரிய பிள்ளை ஆகிவிட்டது அவளை வருத்திப்போட்டது. பாடசாலையில் அடிக்கடி கைநகங்களை மறுகையால் பிடுங்கிக்கொண்டு யோசனையில் அமிழ்ந்து போனாள். அவளுக்கு ஒரு ராஜகுமாரன் மனதில் இருந்தான். அவனைச் சுற்றி கனவுகள் சிலந்தியின் வலைகள் என விரிந்து வளர்ந்தன. கனவில், அவனும் அவளுமாக நீர்வீழ்ச்சி ஒன்றை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள், சீறிப்பாயும் நீர்வீழ்ச்சியின் மேலே சூரியன் பொன்னிறத்தில் வீழ்த்து(வீழ்ந்து??) மறைந்து கொண்டிருந்தது. அதன் கதிர்கள் நீர்வீழ்ச்சியில் பட்டு அதில் வடியும் நீர் செந்நிறத்தில் ஒளிர்ந்தது. பாதங்களின் கீழே நெளிந்து ஓடும் நீரைக் கூர்ந்து பார்த்த அமலா திடுக்கிட்டுத் தொட கையெங்கும் பிசுபிசுப்பாக இரத்தம் என ஒட்டியது. நித்திரையிலிருந்து விழித்த அமலா அன்று முழுவதும் வயிற்று வலியால் அவதிப்பட்டாள். அந்தியில் கருப்பையிலிருந்து யோனி வழியாக முதலாவது உதிரப்போக்கு நிகழ்ந்து பூப்படைந்தாள்.

மயூரனை தன்னுடைய அந்தரங்க ராஜகுமாரனாக கற்பனை செய்து பார்க்க இயலவில்லை. அம்மாவிடம் சென்று எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்ல நினைந்து தடுமாறிச் சொன்னபோது “என்னவாக இருந்தாலும், அப்பாவிடம் சொல்லு,” என்று அம்மா கை விரித்தார்.

“அவன் நல்ல ஆம்பிளை பிள்ளை, வயல் வேலையில் உரமேறிய கைகளையும் நெஞ்சையும் பார், நல்ல வேலைக்காரன்,” என்று அப்பா சமாதானப்படுத்தினார். அவள் பயந்ததிற்கான பதில் அப்பாவிடம் இருந்து கிடைக்கவில்லை.

திருமணம் செய்யமாட்டேன் என்று அவள் அடம்பிடித்தாலும் தகப்பனின் ஏச்சு அவளை அம்புப் படுக்கையில் தூக்கியெறிந்தது. “திருமணமானவர்களுக்கு மட்டும்தான் இயக்கம் விலக்களித்துள்ளது, நீ உயிருடன் இருக்கணும் ராசாத்தி,” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

திருமணம் அவசர அவசரமாக நிகழ்ந்து முடிந்த கையோடு நவராணியும், மயூரனும் அமலாவை அங்கிருந்து எட்டு மைல் தொலைவிலிருக்கும் தங்களுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அந்த வீட்டில் அவளுக்கு பெரிதாக வேலை இருக்கவில்லை. மாமி நவராணிக்கு ஒத்தாசையாக சமைப்பதும், விறகுகள், சுள்ளிகள் பொறுக்கி வீட்டை துப்புறவு செய்வதுமே வேலைகளாக இருந்தன.

மயூரனுடன் இரவுகளில் இருக்க அவள் அஞ்சத் தொடங்கினாள். குருத்து போலிருந்த அவள் உடலை, மயூரனது தடித்த விரல்கள் கொண்ட கைகள் புரட்டிப் போட்டன. அவனது மூர்க்கம் அவளை துடியாய் துடிக்க வைத்தது. அவனது தாம்பத்திய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வலியால் அமலா அழத் தொடங்கினாள். அவள் விசும்பும்போது, மயூரனது கைகள் அவளது கன்னங்களைப் பதம் பார்க்கும். கண்களில் கண்ணீர் துளிக்கும்போது அமலாவின் தொண்டையை அவனது கைகள் அழுத்திப் பிடிக்கும். அவனது உடல் பாரமும், வேகமும் முற்களாகக் குத்தி உடலைச் சிதைய வைத்தன. படுக்கையில் துயிலில் இருக்கும் போது, அவளது சம்மதம் இல்லாமல் பின்புறமாக இருக்கும் ஆடையை விலக்கி குதப்புணர்ச்சிக்கு உட்படுத்தினான். தினமும் தொடரும் சித்திரவதையை வெளியே சொல்ல முடியாமல் அவளது மனமும், உடலும் வெந்து போயிருந்தன. இறுதியில் அவள் கர்ப்பமாகினாள். அது அவளுக்கு தெரிய முதலே அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டி ஏற்பட்டது.

அனோஜன்

முகில்களைக் கிழித்து இரைந்து சமாந்தரமாக மிதந்து வரும் முக்கோண வடிவிலான கிபீர் விமானங்கள் குண்டுகளைச் சரியான இலக்கில்லாமல் வீசிக் குத்தி எழுந்து செல்லலாயின. பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகள் வெடித்துச் சிதறின. தீப்பிழம்புகள் புகையுடன் எழுந்து பரவி வானைக் கருமையாக நிறைத்துக் கொண்டிருக்கும்போது தனக்குள் நிகழும் மாற்றத்தை உணரலாயினாள்.

அவர்கள் சென்று தங்கியிருந்த மாதா கோவிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் சேர்ந்த வண்ணம் இருந்தார்கள். ஒரு சுவர் மூலையை இடம் பிடிப்பது பெரும் பாடாக இருந்தது. அந்தத் துன்பத்தில்தான் கர்ப்பம் தரித்துவிட்டதை தெளிவாக உணர்ந்தாள். விறகு பொறுக்கி கல் அடுப்பு மூட்டிக்கொண்டிருக்கும் மாமியிடம் அதைச் சொன்னாள். மாமி கொஞ்ச நேரம் அவளது முகத்தை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் சனம் சமையல் வேலைக்கு குமிந்து கொண்டிருந்தது. அவளின் கையைப் பிடித்து தரதரவென்று உள்ளே இழுத்துச் சென்று, வெறுந்தரையில் சாரத்தை விரித்து படுத்திருந்த மகனை எழுப்பி காதுக்குள் அதைச் சொன்னார். அவன் தாயாரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க சங்கடப்பட்டான்.

அப்போது அந்த இரைச்சல் காதைக் கிழித்தது. விமானம் நெருங்கி வருகிறதற்கான அறிகுறி என்று வெளியே நின்ற சனங்கள் தேவாலயத்திற்குள் அள்ளுப்பட்டு புகுந்தனர்.

4

“இந்தக் கரு இப்போது வேண்டாம், கலைத்து விடுவோம்,” என்று அவளது கணவர் மயூரன் சொல்லிக் கொண்டிருந்தபோது மாமியார் நவராணி கையை எடுத்து தன் தலையில் அடிக்கத் தொடங்கினார்.

“இப்படி நாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதுதானா இந்த சனியன் கர்ப்பமாகித் தொலைக்க வேண்டும்!”

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது எல்லா நாட்களிலும் சாத்தியப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. காயப்பட்ட பொதுமக்களாலும் போராளிகளாலும் எப்போதும் வைத்தியசாலை நிரம்பி வழிந்தது. இரத்தமும் சகதியுமாக குருதி வீச்சுடன் அந்தப் பிரதேசம் எரிந்து கொண்டிருந்தது.

காயப்பட்ட புலிப் போராளிகளை டிரக் வாகனங்களில் ஏற்றி வந்து குமித்துக் கொண்டிருந்தனர். வலியால் முனகின குரல்கள் எப்போதும் அங்கே ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழலை அமலா அடியோடு வெறுத்தாள். அங்கிருக்கப் பிடிக்காமல் எப்போது வீடு செல்ல முடியும் என்று அவதிப்பட ஆரம்பித்தாள்.

தலைமைத் தாதியிடம் மாமியார் அதைச் சொன்னபோது “பதினெட்டு வயது இன்னும் ஆகவில்லை எங்களால் செய்ய முடியாது, தவிர எங்களிடம் அதற்கான மருத்துகளும் உபகரணங்களும் இல்லை,” என்று அதட்டலாகச் சொல்லிவிட்டு தன் விழிகளை திருப்பிக் கொண்டார்.

அழைத்து வந்த நவராணி சினம்கொண்டு மருமகளிடம் எரிந்து விழுந்தார். “உனக்கு இப்ப என்ன அவசரம் என்று அவனுடன் படுத்தாய் கழுதை?”

5

நாட்கள் செல்லச் செல்ல அவளின் உடம்பில் மாற்றம் தெரியத் தொடங்கியது. சத்தான உணவு இல்லாமல் அவளது உடம்பு இன்னும் வாடி வதங்கியது. நவராணி அதற்கும் சளைக்கவில்லை, நாட்டுவைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் கொடுத்த கஷாயம் சிவந்த நிறத்தில் தடிப்பாக இருந்தது. அதனைப் பார்க்கப் பார்க்க குருதியின் எண்ணமாக அவளுக்குள் விரிந்தது. நான் குடிக்கவே மாட்டேன், என்று அமலா அடம் பிடிக்கத் தொடங்கினாள்.

“சனியனே கத்தாமல் குடி, கருவைக் கலைத்துவிடு. சண்டை முடிந்த பின்னர் வேறு பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். பிள்ளைத்தாச்சியாக உன்னை அழைத்துக்கொண்டு அலைய முடியாது.”

கணவரும் வற்புறுத்தி அவளின் தொண்டைக்குள் அதனை வார்த்தார். தொண்டை முழுவதும் கசந்து எரிந்து கொண்டு சென்றது.

அவளின் தோல் நாளுக்கு நாள் தடிப்பாகிச் சென்றது. சிவந்து தடித்துப்போய் கொப்புளம் உருவாகத் தொடங்கின. அதனை பிறாண்டி பிறாண்டி உடலை புண்ணாக்கி வைத்திருந்தாள். உடல் சோர்ந்து படுத்த படுக்கையாக இருக்கும்போது அமலாவை அப்பா பார்க்க வந்தார்.

மகளைப் பார்த்த கோலம் அவர் தேகத்தை விதிர்க்கச் செய்து சுழற்றிப் போட்டது. “அய்யோ என்ர மகளை என்ன செய்து வைச்சுட்டியல்?” என்று அவர் கூக்குரல் இட்டது அந்த மண்டபத்தை நிறைத்தது. அதை செவிகொள்ளும் நிலையில் மற்றவர்கள் இருக்கவில்லை. படுத்திருந்த மகளை தன் கைகளால் நெஞ்சுடன் அள்ளியணைத்துக் கொண்டார். வெளியே கிபீர் விமானத்தின் வருகைக்கான அதிர்வு ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

முதலாவது குண்டு தேவாலயத்தின் அருகில் வீழ்ந்தது. மக்கள் தரையோடு தரையாகப் படுத்தார்கள். மேற்கூரை அதிர்ந்து ஒடிந்து கீழே சரிந்தது.

அமலாவின் விழிகளுக்குள் வெளிச்சம் படர்ந்தது. நிமிர்ந்து பார்க்கத் தலை முன்பக்கமாக சுழற்றிப் போட்டது. அவளின் வயிற்றிலிருந்து வடிந்த குருதி ஒழுகிச் சென்று புரண்டிருந்த அவளின் கையை நனைத்தது. இமைகள் மெலிதாக ஆடிக்கொண்டிருந்தன.

காயப்பட்டவர்கள் எல்லோரையும் ட்ராக்டரில் ஏற்றி வைத்தியசாலை நோக்கி ஓடத் தொடங்கினர். அமலாவின் கையைப் பிடித்தவாறு தந்தையும் அவளுடன் இருந்தார்.

6

“இதையெல்லாம் செய்ய எங்களிடம் வசதியில்லை, சத்திர சிகிச்சைக்கு உபகரணங்களும் இல்லை,” சொல்லி முடித்தபோது மூக்குக் கண்ணாடிக்குள் அவர் விழிகள் அசையாமல் குத்தி நின்றன.

“என்ன தான் செய்ய முடியும்?”

அமலாவின் இரண்டு கால்களையும் விரித்துவைத்து பிறப்புறுப்புக்குள் கையைவிட்டு சிசுவை பிடுங்கி எடுத்தபோது, பெண்ணுறுப்பு குருதியால் நிரம்பி தொடைகளின் இருபுறமும் நிறைந்து வழிந்து ஒழுகியது. தொடையில் வழிந்த குருதியை சுத்தம் செய்து பண்டேஜால் கட்டியபோது, வெளியே எறிகணை வீச்சு அதிகமாகத் தொடங்கியது. மருத்துவர்கள் அமலாவை விட்டுவிட்டு ஓடிப்போய் பங்கருக்குள் பாய்ந்து படுத்தனர்.

0

இதற்குப்பின் எப்படி எழுதுவது என்று தெரியாமல் அப்படியே மூடி வைத்தேன். ஒவ்வொரு முறையும் எழுத ஆரம்பிக்கும்போது அமலாவின் பெண் உறுப்பைப் பற்றி கற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதற்குள்ளிருந்து குருதி நிரம்பி வழிவது போல தோன்ற ஆரம்பித்தது.

அமலாவின் கர்ப்பப்பைக்குள்ளிருந்த சிசு அகற்றப்பட்டு சரியாக ஒருWholesale-Male-Masturbate-Toy-Masturbation-Tool-Full-Silicone-Vagina-Pussy-Big-Ass-Japanese-Sex-Doll-Adult-Silicone-Sex-Doll-Sex-Products மணித்தியாலத்தில் அந்தப் பிரதேசம் முழுவதும் இராணுவத்தினரின் கட்டுப்பாடுக்குள் வந்திருந்தது. “கிளிநொச்சி நகரம் ஸ்ரீலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து கொண்டிருக்கிறது, இதுவரை பயங்கரவாதிகளின் கர்ப்பப்பையாக இருந்த கிளிநொச்சி மாநகரம், நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இராணுவத்தினர் முன்னேறி நுழைந்து கொண்டிருக்கிறார்கள், இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. விரைவில் நாடு முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்,” என்று ஜனாதிபதி மக்கள் முன்னர் தோன்றிப் பேச ஆரம்பித்ததை தொலைக்காட்சிகள் நாடு முழுவதும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஹெலிகாப்டரில் உடனடியாக பறந்துவந்து இறங்கினார். வைத்திய சாலைக்குள் நுழைந்த படையினர், காயம்பட்ட போராளிகளை விரைவாக அகற்றினர். அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இறுதிவரை தெரியாமலே போயின.

  • அமலா உட்பட அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை, ‘பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட மக்கள்’ என்ற குறிப்புடன் ‘ரூபாவாஹினி’ தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகின.
  • கொழும்பு வந்து நலமடைந்த அமலாவை அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது போன்ற செய்திகளும், புகைப்படங்களும் சிங்கள ஊடகங்களில் மாதம் ஒருமுறை தவறாமல் வெளியாகின.
  • கொழும்பில் அரசாங்க பாடசாலையில் உயர்தரம் வரை படித்து சித்தியடைந்த அமலா, பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் கிடைத்த புலமைப்பரிசு வாய்ப்பை வென்று இங்கிலாந்துக்குப் படிக்க வந்திருந்தாள்.
  • பெற்றோரும், மயூரனுயும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது இறுதிவரை தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் அமலா விரும்பவில்லை.

இந்தக் குறிப்பை விரிவாக்கி எழுதிவிட்டால் கதை முடிந்துவிடும். இருப்பினும் அகத்தில் ஒரு தடங்கள் நெருட எழுதாமல் கிடப்பிலே போட்டு வைத்திருந்தேன்.

அமலா நாடியில் கைவைத்துக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தாள். தயக்கத்துடன் எஞ்சிய பியரை எனக்குள் வார்த்தேன். குளிர்ந்த காற்று சிலுசிலுப்பாக காதுமடல்களை உரசியவண்ணம் சென்றன.

“நீ இதுவரை எந்தப் பெண்ணுடனும் உடலுறவு வைத்திருக்கிறாயா?” அமலா கேட்டவுடன் முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல், ஒரு கணம் அவளைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது சொல்ல வார்த்தைகள் தேடி பின்னர் வெறுமே “இல்லை” என்றுவிட்டு மதுவால் நுரைபட்டிருந்த என் மேலுதட்டை கையால் அழுத்தித் துடைத்தேன். அமலா மீண்டும் இரண்டு பியர் நிரம்பிய கிளாசுடன் வந்தாள். என்னிடம் ஒன்றை கொடுத்துவிட்டு “சியர்ஸ்” என்றாள். நானும் “சியர்ஸ்” என்றேன். உடனே அமலா சிரிக்க ஆரம்பித்தாள். தனது நெற்றியை வலது உள்ளங்கையால் அடித்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“எதற்கு இந்தச் சிரிப்பு?”

“ஒன்றுமே கிடைக்காமால் தானா பிளாஸ்டிக் பொம்மைகளுடன் உடலுறவு கொள்கிறாய்?” நான் புண்பட்டமை என் கண்கள் அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது. என் வலது கரத்தை, மிருதுவான தன் கரங்களால் அள்ளிப் பற்றினாள்.

0

நாங்கள் இருவரும் நடைபாதையால் நடந்து வீட்டுக்கு வரும்வரை அதிகமாகக் கதைத்துக் கொள்ளவில்லை. குளிராடையை மீறி உள்ளே நுழையும் குளிர் உடலை விறைப்படையச் செய்து கொண்டிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்து அறைக்குச் சென்றவுடன் என் பிரக்ஞை இன்னும் தெளிவாக இருந்தது.

“சரி ஆரம்பி” என்றாள்.

அமலாவைத் தழுவிக் கொள்வதில் சங்கடம் இருந்து கொண்டே இருந்தது. அதை கரைக்கும் முகமாக அவளாகவே என்னைத் தழுவிக் கொண்டாள். அவசரமாக எனது மேலாடையைக் கழற்றி தரையில் போட்டுவிட்டு அவளது டீஷர்டை கழற்றி எடுக்க உதவிசெய்தேன். இப்போது எங்களுக்குள் இருந்த வெளிச்சம் குன்றிக் கொண்டிருந்தது.

நேரம் செல்லச்செல்ல எனக்குள் பதட்டம் அதிகரித்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. இதயத்தின் துடிப்பின் சத்தத்தை துல்லியமாகக் கேட்க ஆரம்பித்தேன். எனது கரங்கள் அவளது தேகத்தை படுக்கையில் வீழ்த்தி தழுவியன. வாயில் சுரந்த எச்சிலை உள்ளே விழுங்கினேன். அவளது தேகம் விறைப்பு கொண்டதை மெல்ல உணர, அது எனக்குள் சலனத்தை உருவாக்கியது. அது விரிந்துவிரிந்து பாரிய அலையாக வளர்ந்து சென்றது. அமலாவின் வலது காலைத் தூக்கி என் தோள் மூட்டில் வைத்தபோது, அவளது விழிகள் செருகி இமைக்குள் ஆடியது. சிறிது நேரத்தில் அவள் கண்களைத் திறந்து “என்ன ஆச்சு?” என்றாள்.

நான் களைப்புடன் “முடியவில்லை” என்றேன்.

என் கைகளை பிடித்து தன்னருகில் இழுத்து, “ஏன் வியர்த்துப் போய் உள்ளாய்?” என்றாள். என் மௌனத்தைப் பார்த்து “பயமா?” என்றாள்.

நான் “இல்லை” என்றுவிட்டு, “தெரியவில்லை முடியவில்லை” என்றேன்.

“என் உடலில் உள்ள தழும்புகள் உன்னை தொந்தரவுக்கு உள்ளாக்குகிறதா?” அவளின் அடிவயிற்றில் தெரிந்த தழும்புகள் மீது என் கரத்தை வைத்து தடவிக் கொடுத்தேன். தொப்புளில் இருந்து யோனிவரை இரண்டு தழும்புகள் ரேகை என படர்ந்திருந்தன.

“எனக்கு ஒருபோதும் நல்ல உடலுறவு கிடைத்ததில்லை; இறுதிவரை என் மீது நிகழ்த்தப்பட்டது எல்லாமே வன்புணர்வும் வன்முறையும்தான்” அமலா அதைச் சொல்லிவிட்டு, தன் தலையை சாய்த்து, கரத்தால் ஏந்திப் பிடித்தவண்ணம் என்னை உற்றுப் பார்த்தாள். சாதுவான இருட்டில் அவளது காதின் இருபுறம் இருந்த தோடுகள் நீல நிறத்தில் ஒளிவிட்டன.

“உனக்கு என் மீது பயம் இருக்கு, பயப்படாதே நான் கர்ப்பம் கொள்ள மாட்டேன். உனது விந்துகள் எனக்குள் பிரவேகித்தாலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. உன் இஷ்டம் போல் செய்”.

எனக்குள் அப்போது காமம் வளர்ந்து சுழன்று பிரவேகம் எடுத்தது. நான் அவளது உடலைப் புரட்டிப் போட்டேன். பின்னர் சட்டென்று சலித்து விலகினேன். எனக்குள் எரிச்சல் கசிந்து பின்னர் தன்னிரக்கமாக மாறியது. “என்னால் முடியவில்லை”, என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துக் கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தேன். அவளது கை என்னை ஆதரவாகப் பற்றிக் கொண்டது. கழுத்துக்குள் புதைந்து கொண்டேன்.

ஒரு மெழுகுத்திரியை எரியூட்டி, அறையை அழகாக்கினாள். மெல்லிய ஒளி அறையை நிறைத்தது. என் கைகளை அன்பாகத் தடவினாள். நான் அசையாமல் அப்படியே மரத்துப் போய் படுத்தபடியே இருந்தேன்.

“உன்னால் பொம்மையைப் புணர முடிகிறது. அதற்கு உயிர் இல்லை, வெற்றுச் சடம். உன் விந்தால் பிளாஸ்டிக் செயற்கை யோனியை நிறைப்பதும், என்னுடன் நீ உறவு கொள்வதும் ஒன்றுதான். பிற்பாடு ஏன் உன்னால் முடியவில்லை?”

நான் சீண்டப்பட்டு படுக்கையிலிருந்து அவளது கரங்களைத் தள்ளிவிட்டு எழ போர்வைக்குள் என் காலை தன் காலால் இடறுப்பட்டு தரையில் மூக்கு பட விழச் செய்தாள். நான் எழும்பி சினம் துளிர்க்க அவளது இடையில் அடித்தேன். என்னை இழுத்து சாய்த்து காலால் என் கன்னத்தை தாக்கினாள். கால் நகம் என் இமையில் குத்தி வலிக்கச் செய்தது. பதிலுக்கு நான் கன்னத்தை அறைய வன்முறை அதிகமாக எனக்கு காமம் மறுபடியும் வீரியம் கொண்டது. மிக மூர்க்கமாக கிடையாக அவளை வீழ்த்தி அவளுக்குள் நுழைந்தேன். வேகமாக இயங்கி முடிக்க என் விந்து அவளை நிறைத்தது.

பதற்றத்துடன் அமலாவைப் பார்த்தேன். அவளது முகம் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. காதருகே முகத்தை பதித்து “என்னாச்சு?” என்றேன்.

“பயப்படாதே. எனக்கு கர்ப்பப்பை இல்லை. எதுவும் ஆகப்போவதில்லை” என்றாள். நான் சோர்வுற்று ரகசியமாக “உனக்கு திருப்தியா?” என்றேன்.

அவளது மௌனம் என்னை நிம்மதியிழக்கச் செய்தது.

“நான் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டபோது மயக்கமாகவே இருந்தேன். இராணுவ வைத்தியசாலையில் விழிப்பு வந்தபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ‘கர்ப்பப்பை சிதைவுற்று உள்ளது, மேலதிக சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும். அல்லது இங்கேயே நீக்க வேண்டும். எதை விரும்புகிறீர்கள்’ என்று, நான் நீக்கச் சொன்னேன்” என்றாள்.

நான் அகம் திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன். இரண்டு நுரையீரல்களும் ஒன்றுடன் ஒன்று உரசியதுபோல நெஞ்சில் உணர்ந்தேன்.

“சரி எனக்கு நேரம் ஆகிறது. நான் கிளம்புகிறேன்” என்றுவிட்டு என் முன்னே ஆடையை நிதானமாக அணிந்து கொண்டு ஓசையில்லாமல் எழுந்து புறப்பட்டுச் சென்றாள். அவள் விட்டுச் சென்ற வாசத்தால் என் படுக்கையறை நிறைந்திருந்தது. அதை நுகர்ந்தபோது இந்தக் கதையை மீதி எழுதினால் எப்படி முடிக்க வேண்டும் என்பது மங்கலாகத் தெரிந்தது.

 

2 comments for “கர்ப்பப்பை

  1. March 3, 2020 at 3:29 am

    போரின் தாக்கஙள் பற்றி எழுதுவது பற்றி சிந்திக்க வைத்தது.

  2. Viji
    March 9, 2020 at 5:12 pm

    பெண்ணின் சிதைந்த உடல் சொல்லும் பரிதாபமான கதை. வாசிப்பு அனுபவத்தில் பதைபதைக்க வைத்தது. புதிய வகை தமிழ்ச்சொற்களை உள்வாங்க முடிந்தது. ஒரு பெண்ணிற்கு கர்பப்பை அகற்றப்பட்டால், செயற்கை களிம்புகள் தடவிக்கொண்டாலேயொழிய வழவழப்பு கொடுக்கின்ற இயற்கை சுரப்பிகள் இருக்காது. உறவுகொள்ள உடல் ஒத்துழைக்காது.

    ஸ்ரீவிஜி

Leave a Reply to sabes sugunasabesan Cancel reply