தமிழ் எங்கள் உயிர் (பாகம் 2)

images‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

“உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ் ஆதலால் கூறுகிறோம் தமிழ் எங்கள் உயிர் என்று அழைக்கிறோம் இன்றே பட்டியலில் பெயர் போடுங்கள்”

என்ற வாசகத்தோடு தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக விளம்பரங்கள் வெளிவந்தன. அவ்விளம்பரங்களில் மாதம் இருநூறு வெள்ளிக்குக் குறையாது வருமானம் பெறும் தமிழ் குடும்பங்களில் உள்ள ஒருவர் பத்து வெள்ளி நிதி வழங்கி பட்டியலில் பெயர் போட முன்வந்தால் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்கள் இடம்பெற உறுதுணையாக அமைந்து அங்குத் தமிழ் முழங்கும் என்பதையும் தமிழ் முரசு பத்திரிகைக் குறிப்பிடத் தவறவில்லை. குடும்பத்தின் சார்பில் நிதி வழங்குபவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அதேவேளை அலுவலகம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டால் அலுவலகத்தார் அனைவரின் பெயரும் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதும் விளம்பரம் வழி அறிவிக்கப்பட்டிருந்தது. விளம்பர அறிக்கையில் சிலிகி ரேட் சிங்கப்பூர் என்ற முகவரிக்கு மக்கள் தங்கள் நிதியையும் பெயரையும் அனுப்ப முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. முதன் முதலில் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04-ஆம் திகதி வெளியிடப்பட்ட விளம்பர அறிக்கை தொடர்ந்து 15, 17, 18, 19, 22, 24, 29 ஆகிய தேதிகளில் மொத்தமாக ஒன்பது நாட்கள் தமிழ் முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 29, 1955, பக். 06).

 

தமிழ் எங்கள் உயிர்

எண்ணிற் சிறந்ததுந் தமிழ்;

எழுத்திற சிறந்ததுந் தமிழ்;

பண்ணிற் சிறந்ததுந் தமிழ்;

பாரிற் பரந்ததுந் தமிழ்;

மண்ணிற் பழையதுந் தமிழ்;

மாசற் றொளிர் வதுந் தமிழ்;

கண்ணிற் சிறந்ததுந் தமிழ்;

கன்னிமை சான்றதுந் தமிழ்;

தேனினு மினியது தமிழ்;

தெவிட்டாச் சுவையது தமிழ்;

இலக்கணஞ் சிறந்தது தமிழ்;

இயல் வளம் சிறந்தது தமிழ்;

ஒப்புயர் வற்றது தமிழ்;

ஒண்கலை நிறைந்தது தமிழ்;

தன்னே ரிலாதது தமிழ்;

தனிப்புகழ் வாய்ந்தது தமிழ்;

ஆதலால்

தமிழர்க்கெல்லாம் தமிழே உயிர்

மேலும், தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகக் கவிதை வடிவிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. 20 மார்ச் 1955ல் தமிழின் சிறப்புகளை வர்ணிக்கும் கவிதையைக் குறிப்பிட்டு அதற்குக்கீழ் எழுதப் படிக்க தெரிந்த அனைத்துத் தமிழர்களும் மலாயா பல்கலைக்கழகத்தில் கன்னித் தமிழை உயிர்ப்பிக்க தலா பத்து வெள்ளி நிதியை வழங்கி ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 20, 1955, பக். 06). இதே விளம்பரம் தொடர்ந்து ஐந்து நாட்கள் (மார்ச் மாதம் 20, 26, 30, 31 ஆகிய தேதிகளிலும் ஏப்ரல் மாதம் 05-ஆம் தேதியும்) வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 05, 1955, பக். 06).

மலாயா பல்கலைக்கழகத்தில் உருவாக இருக்கும் இந்தியப் பகுதியின் நூலகத்திற்காகத் தமிழ் புத்தங்களை வாங்க உதவும் பொருட்டுத் தமிழ் எங்கள் உயிர் நிதி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிதி திட்டத்தின் இலட்சியமானது இருநூறு வெள்ளிக்குக் குறையாமல் சம்பளம் பெரும் பத்தாயிரம் தமிழர்கள் ஆளுக்குப் பத்து வெள்ளி கொடுப்பதன் வழி முப்பது நாளில் ஒரு லட்சம் வெள்ளி திரட்டுவதே ஆகும். இதற்கு முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாயக் கடமையாக வலியுறுத்தப்பட்டுத் தமிழ் எங்கள் உயிர் என்ற பேரணிப் பட்டியலில் பெயர் தந்து தமிழ் முழங்கச் செய்யுமாறு பிப்ரவரி 25, 1955ல் தமிழ் முரசு பத்திரிகையின் தலையங்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி வெளிவந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் நிதி பட்டியலில் இருபத்து நான்கு பெயர்களே சேர்க்கப்பட்டிருந்ன. மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்க மீண்டும் 28.02.1955 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் மக்கள் முன்வந்து நிதியை நிரப்ப வேண்டி செய்தி வெளியானது (தமிழ் முரசு, பிப்ரவரி, 28, 1955, பக். 08).

தமிழ் முரசு பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த செய்திகளின் வழி குறுகிய காலத்தில் நிறைய பேரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இச்செய்தி அறிந்து மலாயா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்க நிதி கொடுத்து உதவிய முதல் எட்டுப் பேருடைய பெயர்கள் 25.02.1955-ல் தமிழ் முரசு பத்திரிகையின் முதல் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருந்ததன.

குன்றக்குடி அடிகளார்

330px-தவத்திரு_குன்றக்குடி_அடிகளார்தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு முதல் நபராகக் குன்றக்குடி அடிகளார் ஆதரவு வழங்கி 201 வெள்ளி மதிப்புள்ள சங்க இலக்கிய புத்தகங்களை வழங்கிய செய்தியோடு அவர் எழுதி அனுப்பியிருந்த வாழ்த்தும் தமிழ் முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. அவ்வாழ்த்துரையில் அவர் இந்நிதி திட்டம் தொடர்பான செய்தியைக் கண்டு மகிழ்ந்துள்ளதாகக் கூறியதோடு நூல்களை வாங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பண சேகரிப்புத் திட்டத்திற்குத் ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதி என்று பெயர் வழங்கியமை வரவேற்கத்தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழை வளர்ப்பதன்வழி தமிழினம் உயர முடியும் என்பதால் இதற்குத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து கைக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் உருவாகவுள்ள தமிழ்ப் பகுதியில் தமிழ் மொழியில் உள்ள அற்புதமான இலக்கண இலக்கியங்கள் இடம் பெற்றுத் தமிழருடைய பெருமையை உலக மக்கள் அனைவராலும் அறிந்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 25, 1955, பக். 01).

தமிழ் முரசு நாளிதழின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியப் பகுதிக்குத் தேவையான நல்ல பல தமிழ் நூல்களைத் தமிழர்கள் தங்களின் சுயமுயற்சியாலேயே வாங்கி உதவ முடியும் என்ற அரிய ஆலோசனையையும் முயற்சியையும் ஆதரித்துப் பல தமிழர்கள் நிதி வழங்கினார்கள். அவர்களுடைய பெயர்கள் 26.02.1955இல் வெளிவந்த தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன (தமிழ் முரசு, பிப்ரவரி, 26, 1955, பக். 08). பின், 70 வெள்ளி நிதி வழங்கிய ஏழு பேருடைய பெயர்களும் 01.05.1955 அன்று தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டன (தமிழ் முரசு, மார்ச், 01, 1955, பக். 08). கேமரன் மலையைச் சேர்ந்த திரு. கா. பெருமான் என்பவருடைய “மல நாட்டுச் சர்வகலாசாலையில் தமிழ் வளர்க்க மலைவாழ் எம்மீர்!” என்று தொடங்கும் பாடலைப் பாடி பொதுமக்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்ததில் பலர் முன் வந்து பட்டியலில் பெயரைச் சேர்த்ததாகத் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் நூறு வெள்ளி நிதி அனுப்பி வைத்த திரு. எம். ஆர். எஸ். முருகையா மற்றும் சிலருடைய பெயர்களும் 02.03.1955இல் பட்டியலில் சேர்க்கப்பட்டுத் தமிழ் முரசு நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 02, 1955, பக். 12). பினாங்கு, சிங்கப்பூர், ஈப்போ மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஏழு பேர் வழங்கிய 70 வெள்ளி 07.03.1955 -இல் தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் சேர்க்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 04, 1955, பக். 12). தமிழ் எங்கள் உயிர் நிதிக்குக் குளுவாங் தமிழர் சங்க  நிர்வாக உறுப்பினர்கள் ஏழு பேர் மற்றும் பதினெட்டுப் பொது மக்கள் கொடுத்த 260 வெள்ளி நிதியின் விவரம் 13.03.1955ல் தமிழ் முரசில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 13, 1955, பக். 12).

கர்மவீரர் காமராஜர்

photo.cmsமலாயா பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்ப் பகுதிக்கும் அதன் நூல்நிலையத்திற்கும் உரமாகத் திகழும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து பணம் அனுப்பி வைக்கும் செயலை எளிமையாக்க திரு. காமராஜர் அவர்கள் சென்னை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி காரியாலத்தில் ஒரு பகுதியை உருவாக்கி துணை நின்றுள்ளார். தஞ்சையில் புயலடித்தபோது வாடி வதங்கிய தமிழ் நாட்டு மக்களுக்கு மலாயாத் தமிழர் லட்சக்கணக்கான ரூபாய் தந்து உதவியமைக்குக் கைம்மாறு காட்ட வாய்த்த நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் பத்திரிகைக்கு வழங்கிய அறிக்கையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காகத் தமிழ் முரசு ஆசிரியரான திரு. கோ.சாரங்கபாணியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கான ஆக்கப் பணியில் இறங்கியிருக்கும் இம்முயற்சிக்குத் தமிழ் நாட்டவர்களின் ஆதரவும் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகத் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கப் பெறும் பணம் மற்றும் புத்தக உதவியினைச் சேகரித்துக் கோலாலம்பூர் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று நடத்த அப்போதைய தமிழ் நேசன் பத்திரிகையின் முன்னால் ஆசிரியரான திரு. ஆர். வேங்கடராஜூலு முன்வந்திருப்பதையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மொழியைப் பேணுபவர்களும் தமிழ் நூல்களை வெளியிடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உதவி புரிய முன்வர வேண்டினார். புத்தகமாக அல்லது பணமாகக் கொடுக்க நினைப்பவர்கள் தங்களுடைய உதவியை ‘மலாயா நூல்நிலைய நிதி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரியாலயம், மவுண்டு ரோடு, சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்மாறு அவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார் (தமிழ் முரசு, மார்ச், 15, 1955, பக். 01).

16.03.1955 அன்று வெளியிட்ட பத்திரிகையில் 25 பேர் அளித்த 265 வெள்ளி நன்கொடையின் விவரம் மற்றும் தமிழ் எங்கள் உயிர் நிதி பெயர் பட்டியலில் இன்னும் 9729 பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதைம் வலியுறுத்தி சொல்லப்பட்டிருந்தது. 10 வெள்ளிதான் வழங்க வேண்டும் என்பதில்லை அதற்கு மேலும் வழங்க விருப்பம் இருப்பவர்கள் ‘தமிழ் முரசு, 71, சிலிகி ரோட், சிங்கப்பூர்’ என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 16, 1955, பக். 12).

இந்தியப் பகுதி நிருவ மூன்று நியாயங்கள்

அதனைத் தொடர்ந்து, மலாயா பல்கலைக்கழகத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்தியப் பகுதிக்காக இந்திய கமிஷனர் திரு. ஆர். கே. தாண்டன் அவர்கள் இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள காசோலையைப் பல்கலைக்கழக வேந்தர் திரு. மாக் டொனல்டிடம் ஒப்படைத்துள்ளார். போனிக்ஸ் பாக்கில் நடைப்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சர் சிட்னி கேய்னும் வருகைப் புரிந்திருந்தார். இந்தக் காசோலையை இந்தியப் பகுதி நிறுவ மலாயா பல்கலைக்கழகத்திற்கு இந்தியா வழங்குகிற அடையாள உதவி என்பதை திரு. தாண்டன் அறிவித்திருந்தார். பல்கலைக்கழக வேந்தர் வழங்கப்பட்ட உதவி தொகைக்காகப் பாராட்டியதோடு விரைவில் இந்தியப் பகுதி அமைக்கப்படும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். மேலும், விரைவில் இந்திய பகுதியை அமைக்க வேண்டிய அவசியத்திற்கு ஆதரவாக இருக்கும் உறுதியான மூன்று நியாயங்களையும் அவர் இந்நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார். அவை :

 

  1. கிருஸ்துவ சகாப்தம் தொடங்கியதிலிருந்து இன்று வரை மலாயாவின் தென்கிழக்காசியாவின் கலாச்சார, நாகரிக மேம்பாட்டுக்கு இந்தியா அபரிமிதமான பணி புரிந்திருக்கிறது; அதே துறையில் இன்னும் பணியாற்றி வருகிறது. தென் கிழக்காசியாவைப் பற்றிய ஆராய்ச்சி மலாயா பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய பாடமாகும். அதன் ஆராச்சியைப் பொறுத்து அதே காலத்தில் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியும் பெரிதும் தெரிந்துக் கொள்வது அவசியமாக இருக்கும்.

 

  1. பல்வேறு இனமக்கள் வாழ்கின்ற புதிய ஐக்கிய சுதந்திர மலாயா தேசிய இனத்தை உருவாக்கப் பாடுபடுகிறது. நம் நாட்டு மக்களின் கலாச்சார அமைப்பு மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகியோர்களின் கலாச்சாரங்களையும் உலகின் இப்பகுதியில் வாழ்ந்த மற்ற சக்திகளின் கலாச்சாரங்களையும் தோற்றுவாயாகக் கொண்டதாகவே இருக்கும். எத்தனையோ சகாப்தங்களாகத் தழைத்து வந்திருக்கும் இந்தியக் கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய சரித்திர ரீதியான, உன்னத கலாச்சாரங்களின் குழைவாக அது அமையும்.

 

  1. மலாயாவில் இந்தியர்கள் எண்ணிக்கை ஜனத்தொகையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். அது தவிர மலாயா பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்திய மாணவர்களே மிகுந்த செல்வாக்குடையவர்களாக விளங்குவது மற்றொரு காரணம்.

இந்த நியாயங்கள் அனைத்தும் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி விரைவில் தொடங்குவதற்கான அவசியத்தை வலியுறுத்தி நிகழ்வில் உரையாற்றினார் (தமிழ் முரசு, மார்ச், 17, 1955, பக். 12).

 

நிதி வழங்கியோர் பட்டியல் (சுருக்கம்)

1 பினாங்குவாழ் மக்கள்
2 சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
3 தமிழர் பிரதிநிதித்துவ சபை
4 குன்றக்குடி அடிகளார்
5 கோலாலம்பூர்வாழ் மக்கள்
6 பட்டறை (ஓர்க்ஷாப்) தொழிலாளர்கள்
7 கோலாலம்பூர் மாணவ மணிமன்ற கிளை
8 காந்தி ஞாபகார்த்தப் பாட சாலை மாணவர்கள் கழகம்
9 மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம்
10 பேரா மருத்துவர் சங்க செயற்குழு
11 மலாக்கா மருத்துவ சங்கம்
12 எப்பிங்காம் தோட்ட மாணவர் மணிமன்றம், சிங்கப்பூர் மணியம் சொற்பயிற்சி மன்றம், பத்து செப்னாஸ் தோட்ட மக்கள், திருவிதாங்கோடு முஸ்லிம் கூட்டுறவு சங்கம்
13 டத்தோ இ. இ. ஸி. துரைசிங்கம்
14 அகில மலாயா திராவிடர் கழகம்
15 திரு கெ.ப. முகம்மது
16 குதிரைப்பந்தயத் திடல் ஊழியர்கள்; ரிக்ஷா ஓட்டுனர்கள்
17 கோத்தாதிங்கி தோட்ட மக்கள்; கொசு ஒழிப்பு இலாகா
18 ஈப்போ பாரி சொற்பயிற்சி மன்றம்
19 நயிணா முகம்மது கம்பெணி இயக்குனர்கள், சிப்பந்திகள்
20 ஏழைப் பாட்டாளிகள்
21 மலாக்கா ரீஜண்ட் தோட்ட மக்கள்
22 சைகோன்வாழ் தமிழர்கள்
23 அப்துல் அஜீஸ் நிறுவனம்
24 பாரதிதாசரின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
25 குரோ, பந்திங் தோட்டத் தொழிலாளர்கள்
26 மருத்துவர்கள் மற்றும் மலாயா திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் கிளை
27 தனிநாயகம் அடிகளார்
28 ரிவர்சைடு தோட்டம், போண்டோக் தஞ்சம் மக்கள்
29 இலங்கையில் சுதந்திரன் இதழ்
30 சிங்கப்பூர் வாசுகி தமிழ்ப்பாட சாலை மாணவர்கள்
31 சிகாமட் தோட்டத் திணாங்டிவிஷன் பாட்டாளிகள்
32 ‘டெலிகம்’ இலாகா ஊழியர்கள்; ஆசிரியர்கள்
33 பாலோ இந்தியர் சங்கத் தமிழ்ப் பாடசாலை; டெலிமோங் தோட்டத் தமிழர்கள்
34 சுங்கை பூலோ இந்தியர் சங்கம்; பேரா ஹைட்ரோ பவர் நிலையம்
35 தெலுக்கான்சன் மாவட்ட மருத்துவமனை
36 தமிழ்நாடு கும்பகோணம் தாலுக்கா பந்தநல்லூர் மக்கள்
37 சீர்காழித் தாலுக்கா தமிழர் முன்னேற்றக் கழகம்
38 பேராசிரியர் டாக்டர் சிதம்பரனார்
39 ஜோகூர் இந்தியப் பாடசாலை ஆசிரியர் ஐக்கியச் சங்கம்
40 சிங்கப்பூரில் தமிழர் திருநாள்
41 பிறை பவர் நிலையம், பினாங்கு இந்திய சுருட்டு நிலையம்
42 இலங்கை சுதந்திரன் இதழ், புருனை மக்கள்
43 கோலக்கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிம் மருத்தவமனை
44 சிங்கப்பூர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம் மற்றும் பொதுமக்கள்
45 ஶ்ரீ ஜெய காந்தன் புஷ்பகசாலை; போர்ட்டிக்சன் மக்கள்
46 பி.டபிள்.யூ.டி காரியாலயம்
47 பினாங்கு பரமக்குடி நாடார் நலவுரிமைச் சங்கம்
48 கிண்டாவேலி, செப்பராங் தோட்டத் தமிழர்கள்
49 ஜோகூர் லாயாங் லாயாங் ஓ. பி. எம். லிமிடெட், பேகடரி தொழிலாளர்கள்
50 இலங்கை தமிழர்கள்
51 போர்ட்டிக்ஷன் தனமேரா, பாடாங் ரெங்காஸ் கேப்பீஸ் தோட்டம்
52 ரெம்பவ் செம்போங் தோட்டம்
53 ஈப்போ தமிழர்கள்
54 சுங்கைபூலோ மக்கள்
55 சிங்கப்பூர் கைலிக் கடை பணியாளர்கள்
56 காரைக்குடி நகரசபையும் மேலும் பலரும்

‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்கு பண உதவி வழங்கியவர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய இதை அழுத்தவும்.

தமிழ்ப் பகுதி அமைப்பதற்குக் கால தாமதம்

இது ஒரு புறம் இருக்க, சீன, மலாய் பகுதிகள் அமைப்பதற்குச் சீனர்களும் மலாய்க்காரர்களும் கொடுத்த ஆதரவைக் காட்டிலும் தமிழ்ப் பகுதிக்குத் தமிழர்களின் ஆதரவு கிடைக்காதது காலத் தாமதம் ஆனதற்கான காரணங்களுள் ஒன்று என்பதால் யாரும் பாராமுகமாய் இல்லாமல் செயல்படுவோம் என்று தமிழ் முரசு பத்திரிகையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், 11.04.1955- இன் நிதி வரவாகிய 264 வெள்ளியினுடைய பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 11, 1955, பக். 04).

பல்கலைக்கழக துணைவேந்தரும் தமிழ் மக்களின் வாக்குறுதியும்

மலாயா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வெறும் உறுதி மொழியளவில் நின்ற தமிழ்ப் பகுதியை 1956-ஆம் ஆண்டு தொடங்கச் செய்த பெருமை தமிழ் மக்களையே சாரும். தமிழ்ப் பகுதி தொடங்கப் பட வேண்டும் என்ற துடிப்பு மக்களிடையே நிறைந்திருக்கிறது என்பதைத் தமிழ் முரசு துவங்கிய தமிழ் எங்கள் உயிர் நிதியைத் நிரப்பியதன் மூலம் நிறுபித்தனர். தை முதலாம் நாள் தமிழர் திருநாள் கொண்டாட்டத்திற்குக் குழுமிய மக்கள் முன் தமிழ் எங்கள் உயிர் நிதியின் ஒரு பகுதி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சேர்க்கப்பட்டது. தமிழ்த் துறை இயங்கத் தொடங்கும் வேளையில் லட்சியத் தொகையான ஒரு லட்சம் வெள்ளியின் மற்ற பகுதியும் விரைவில் கொடுப்பதாக அந்நிகழ்வில் உறுதி கூறப்பட்டது (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 01).

நிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்வுகள்

மலாக்கா தமிழ் இளைஞர்கள் ஏற்பாட்டில் தமிழர் பிரதிநிதித்துவ சபை ஆதரவில் தமிழ் வருடப் பிறப்பன்று (14.04.1955) மலாக்கா ஹைஸ்கூல் மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக ‘சந்திரோதயம்’ நாடகம் அரங்கேறியது (தமிழ் முரசு, ஏப்ரல், 13, 1955, பக். 06). தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்பும் எண்ணத்தில் அலோர் காஜா தமிழர் சார்பில் அலோர் காஜா தமிழ்ப் பள்ளிக்கூடக் கட்டிடத்தில் 11.06.1955 சனிக்கிழமை அன்று இரவு 7.20 முதல் 9.30 வரை தமிழ்ப்படம் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காட்சி தொடங்குவதற்கு முன் கூட்டரசு செய்தி இலாகா தமிழ்ப் பகுதி அதிபர் திரு. வி. டி. பிச்சைப்பிள்ளை ‘பிரஜாவுரிமை’ பற்றி விரிவுரையாற்றுவார் எனவும் மக்கள் 1.00 வெள்ளி கட்டணம் கொடுத்து இக்காட்சியில் கலந்துக் கொண்டு நிதியுதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர் (தமிழ் முரசு, ஜூன், 04, 1955, பக். 05).

ஈப்போவில் தமிழ் எங்கள் உயிர் நாடக மன்றத்தின் இலட்சியச் சுடர் நாடகம் நடத்தி செலவு போக மீதம் இருந்த 1255.60 வெள்ளியைத் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தந்துள்ளனர். அதனோடு இலட்சியச் சுடர் நாடக வரவு செலவும் தமிழ் முரசு நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, ஜூன், 23, 1955, பக். 05). 10.09.1955 அன்று சனிக்கிழமை சிங்கப்பூர் நியூ வோர்ல்ட் நியூ ஸ்டார் மண்டபத்தில் நடைப்பெறவிருப்பதாக அறிவித்த பகுத்தறிவு நாடக மன்றத்தார், ‘நச்சுக் கோப்பை’ எனும் நாடகத்தில் கிடைக்கும் பணத்தில் செலவு நீக்கி மிகுதிப்படும் தொகையைத் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், நாடகத்தின் கட்டணம் 3 வெள்ளியைக் கொடுத்து ஆதரவு புரியுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் (தமிழ் முரசு, செப்டம்பர், 02, 1955, பக். 05). 10.09.1955 அன்று சிங்கப்பூர் பகுத்தறிவு நாடக மன்றம் நடத்திய ‘நச்சுக்கோப்பை’ நாடகம் வழி கிடைத்த பணத்தில் செலவு போக மீதப்பட்ட 603.45 வெள்ளி தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்கப்பட்டது. அதனுடைய வரவு செலவு கணக்கும் தமிழ் முரசில் வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, அக்டோபர், 19, 1955, பக். 06).

தமிழ் இளைஞர் மணிமன்றமும் தமிழர் பிரதிநிதித்துவ சபையும் இணைந்து மலாயா வானொலி புகழ்பெற்ற நாடக நடிகர்கள் “வாழ்க்கை மேடை” என்ற நாடகத்தைப் பினாங்கு முனிசிபல் டவுன் மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குப் பணம் திரட்ட ஜூலை மாதம் 7ஆம் தேதி முதற்காட்சி மாலை 5.30க்கும் இரண்டாம் காட்சி இரவு ஒன்பதுக்கும் நடைபெறும் என்று தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. முதல் வகுப்புக்கு 2 வெள்ளியும் 2ஆம் வகுப்புக்கு 1 வெள்ளியும் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 21, 1956 முதல் தொடர்ந்து 24, 27, 30 தேதிகளில் இந்த நாடகம் தொடர்பான விளம்பரங்கள் தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்த வண்ணம் இருந்தன (தமிழ் முரசு, ஜூன், 07, 1956, பக். 07). தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக 29.07.1956 அன்று இரவு 7.30 மணிக்குச் சிங்கப்பூர் பீட்டி பள்ளி மண்டபத்தில் இந்திய சங்கீத சபா ஆதரவில் ஆனந்த கலா மன்றத் தயாரிப்பான கதம்பக் கச்சேரி நடைபெற உள்ளதாகவும் கலந்துக் கொள்ள விரும்பும் மக்கள் நுழைவு சீட்டு கட்டணமான 3, 2, 1 வெள்ளியைக் கொடுத்து இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம் என்றும் தமிழ் முரசு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது (தமிழ் முரசு, ஜூலை, 02, 1956, பக். 07).

மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதிக்குத் தமிழ் முரசு திரட்டி வரும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு அலோர்ஸ்டாரில் கதம்ப கலை நிகழ்ச்சியொன்று நடத்த 19.08.1956 ஆம் நாள் அன்று திரு. வி. சு. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற முஸ்லிம் வீக்கில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டது. கதம்ப நிகழ்ச்சி நடத்த 16 அங்கத்தினர்களைக் கொண்ட செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது (தமிழ் முரசு, செப்டம்பர், 04, 1956, பக். 11). தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக அலோர்ஸ்டாரில் நடைப்பெறவிருக்கும் கதம்பக் கலை நிகழ்ச்சிக்கு மக்கள் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதனோடு இந்நிகழ்வுக்குத் தமிழ்ப் பிரமுகரும் சமூகச் சேவையாளருமான உயர்திரு சி. நாசு. நாகப்பச் செட்டியார் தலைமை வகிப்பார் என்றும் இந்நிகழ்வு அலோர்ஸ்டார், ஜாலான் பாரு, கிரேட் ஓர்ஸ்டு பார்க்கில் 29.09.1956 அன்று இரவு 8 மணிக்கு நடைப்பெறும் என்ற தகவலையும் தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சி நிரல், நுழைவு சீட்டுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் அதன் கட்டணம் 5, 3, 2, 1 வெள்ளி என்பதையும் நாளிதழில் குறிப்பிட்டிருந்தனர். இது பற்றி தொடர்ந்து 25.09.1956 அன்றும் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது (தமிழ் முரசு, செப்டம்பர், 21, 1956, பக். 10).

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக மற்றுமொரு கதம்பக் கச்சேரி 27.101956 அன்று இரவு 8 மணிக்குத் திரு. கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் சிங்கப்பூர் பீட்டி பள்ளி மண்டபத்தில் வெண்ணிலா கலை அரங்கத்தின் ஆதரவில் ஆனந்த கலா மன்றத் தயாரிப்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நுழைவு சீட்டுகள் கிடைக்கும் இடங்களையும், அதனுடைய விலை 3, 2, 1 வெள்ளி என்பதையும் அறிவித்திருந்தனர். இதைப் பற்றி தொடர்ந்து 21.10.1956 அன்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது (தமிழ் முரசு, அக்டோபர், 17, 1956, பக். 05).

29.05.1956 ஆம் நாள் அன்று தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக அலோர் ஸ்டாரில் நடைபெற்ற கதம்ப நிகழ்ச்சி வரவு செலவு விவரம் 23.10.1956 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. மொத்த வரவு 1,730 வெள்ளி, செலவு போக மீதமுள்ள 1,080.90 வெள்ளி 17.10.1956 அன்று திரு. கோ. சாரங்கபாணி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது (தமிழ் முரசு, அக்டோபர், 23, 1956, பக். 11).

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக ஈப்போ நாடக மன்றம் நடத்திய ‘ஒரே ஆசை’ நாடகத்தின் வருமானம் 769 வெள்ளி, பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றம் 425 வெள்ளி, கோலக்கிள்ளான் அகில மலாயா திராவிடக் கழகம் 240 வெள்ளி, சிங்கப்பூர் நகரசபை ஆறாவது பிரிவுத் தொழிலாளர்கள் 22 வெள்ளி மற்றும் இன்னும் பல தரப்பினர் கொடுத்த நன்கொடையின் மொத்த தொகையான 3742.41 வெள்ளியின் விவரம் 06.12.1956 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்தது (தமிழ் முரசு, டிசம்பர், 06, 1956, பக். 02). தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு இதுவரை நாடகங்கள், சங்கங்கள், மன்றங்கள் மற்றும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் ஒரு பிரதிநிதி மூலம் திரட்டப்பட்ட நன்கொடை மொத்தம் 1298.51 வெள்ளியுடைய விவரங்களும் 22.12.1956 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் வெளியிடப்பட்டன (தமிழ் முரசு, டிசம்பர், 22, 1956, பக். 05).

 

தமிழ்ப் பகுதி தொடக்கம்

umமலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி 1956-ஆம் ஆண்டு நிறுவப்படும் என்றும் 1956-1957-ஆம் ஆண்டில் போதனை ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பகுதிக்குத் தலைவர் நியமிப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையைப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கீகரித்துவிட்டது என்றும் 1956இல் தமிழ்ப்பகுதித் தலைவர்  பொறுப்பேற்றுக் கொண்டு போதனை ஆரம்பிப்பதற்கு முன்பு பகுதி அமைப்புக்காக அவர் உதவியும் புரிவார் என்று தமிழ் முரசில் குறிப்பிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 07, 1955, பக். 11). தமிழ்ப் பகுதியை நிறுவும் முயற்சி துரிதப்படுத்தப்படுமென சிங்கப்பூர் முதல்மந்திரி டேவிட் மார்ஷல் 05.10.1955-ல் உறுதி கூறியுள்ளார் (தமிழ் முரசு, அக்டோபர், 07, 1955, பக். 05).

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதிக்குச் சீனியர் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று பல்கலைக்கழகத் துணை வேந்தர் சர் சிட்னி கெயின் 16.04.1956-ல் காலையில் தமிழ் முரசு நிருபரிடம் அறிவித்துள்ளார். இந்தப் பதவிக்கு இந்தியா, இலங்கை, மலாயா மற்றும் வேறு நாடுகளிலிருந்தும் 50 பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்றும் விண்ணப்பதாரிகள் தொடர்பான முழு விவரங்களையும் பல்கலைக்கழகம் சேர்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் ஜூலை மாதத்திற்குள் தமது வேலையைத் தொடங்கிவிட வேண்டியிருக்கும், காரணம் அப்போதுதான் அக்டோபர் மாதத்தில் இந்தியப் பகுதி சிறிய அளவில் இயங்குவது சாத்தியமாகும் என்றார். சிங்கப்பூர் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட 5500 தமிழ் புத்தகங்கள் என்னவாயின என்று தமிழ் முரசு நிருபர் கேட்டதற்கு அவை ஒழுங்கு படுத்தி வைக்கப்பட்டுவிட்டன என்றும் தமிழ் நூல் நிலையத்திற்காகத் தனியாகச் சிப்பந்திகளை நியமிக்க உத்தேசித்திருப்பதையும் துணைவேந்தர் அறிவித்துள்ளார் (தமிழ் முரசு, ஏப்ரல், 16, 1956, பக். 01).

அக்டோபர் மாதத்தில் மலாயா பல்கலைக்கழகம் திறக்கப்படும் போது தமிழ்ப் பகுதியும் தொடங்குகிறது என்பதுடன் தலைசிறந்த தமிழறிஞர் ஒருவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் 06.07.1956 அன்று பல்கலைக்கழக துணை வேந்தர் சர் சிட்னி கெயின் அறிவித்தார். சென்னை அரசாங்கக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும் கிளை மொழிகள் பகுதித் தலைவருமான திரு. எம்.  இராசாக்கண்ணு மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதிக்கு முதல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் அவர் தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைமைக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இலங்கையிலிருந்தும் மலாயாவிலிருந்தும் பலர் விண்ணப்பித்திருந்தனர். பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கின்ற திரு. இராசாகண்ணு அடுத்த மாதமே பதவி ஏற்க சிங்கப்பூர் வருவார் என்றார்.

பல்கலைக்கழக வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில்தான் தொடங்குகின்றன என்ற போதிலும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். நாற்பத்தொரு வயதான திரு. இராசாக்கண்ணு இருபது ஆண்டுகளாக ஆசிரியர் தொழிலில் இருப்பதுடன் பதினைந்து ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டின் புகழ்மிக்க கல்லூரிகள் பலவற்றில் விரிவுரையாளராகவும் இருந்துள்ளார். குடந்தைக் கோவை கல்லூரியில் தமிழ்த்துறையில் புதிய பகுதிகளைச் சேர்த்த புகழ்கொண்டவர் திரு. இராசாக்கண்ணு அவர்கள். தமிழறிவில் ஈடு இணையற்று விளங்கிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் மாணாக்கராயிருந்து முறையாகத் தமிழ் கற்றவர். பிறகு, வித்துவான், பி. ஓ. எல். (ஆனர்ஸ்), எம். ஏ. ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கிறார். பி. ஓ. எல். (ஆனர்ஸ்) பட்டத் தேர்வில் மாகாணத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவர். ‘டாக்டர்’ பட்டம் பெற சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தவர். அரசங்கண்ணனார் என்றும் தமிழ் நாட்டாரால் அழைக்கப்பட்ட திரு. இராசாக்கண்ணு அவர்கள் ஒரு சிறந்த சொற்பொழிவாளரும் கூட. இத்தகைய நல்லறிஞரைத் தேர்ந்தெடுத்த மலாயா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் மக்கள் மிகக்கடமைப் பட்டிருக்கிறார்கள் என தமிழ் முரசு பத்திரிகைக் குறிப்பிட்டிருந்தது (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 01).

மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி 1956-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என்றும் அப்பகுதிக்குத் தலைவராகச் சென்னை அரசாங்க ஆர்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரான திரு. எம்.இராசாக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பகுதியானது இந்தியக் கலாச்சாரத்திலும் மொழிகளிலும் விரிவான பாடத் திட்டங்களை உடையதாக அபிவிருத்தி செய்யப்படுமென்றும், ஆனால், ஆரம்பத்தில் தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுமென்றும் அவர் கூறினார். சென்னை அரசாங்க ஆர்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரான திரு. எம். இராசாக்கண்ணு சென்னை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாட்டின்பேரில் மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி உருவாக்கப்படுவது மலாயாவிலுள்ள இந்திய சமூகத்தினரால் வரவேற்கப்பட்டது. இந்தியப் பகுதியின் தலைவரை நியமிப்பதில் உயர்தர மலாயா தமிழ்ப் பண்டிதர்களின் ஆலோசனைப் பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்ததென்று சார் சிட்னி கேயின் கூறினார் (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 05). தமிழர்கள் பிரதிநிதித்துவ சபை சிபாரிசு செய்திருந்த மூவரில் ஒருவரை பல்கலைக்கழகம் நியமித்துள்ளதைத் தமிழர் பிரதிநிதித்துவ சபையின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் திரு. கோ.சாரங்கபாணி மக்களிடம் தெரிவித்தார். அக்டோபர் மாதத்திற்குள் தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்பி பல்கலைக்கழகத்திடம் சேர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் அவ்வுரையில் வலியுறுத்தினார் (தமிழ் முரசு, ஜூலை, 10, 1956, பக். 02).

பேராசிரியர் முத்து இராசாக்கண்ணுவுக்கும், பேராசிரியர் சி. எஸ். பிச்சமுத்துவுக்கும் சிங்கப்பூர் உதவி முதல் மந்திரி இஞ்சே அப்துல் ஹமீது பின் ஹாஜி ஜுமாட் தலைமையில் தமிழர் பிரதிநிதித்துவ சபை 23.10.1956 அன்று வரவேற்பு நிகழ்வு நடத்தியது. திரு. இராசாக்கண்ணு இந்நிகழ்வில் பேசுகையில் மலாய் மொழியில் விரவிக் கிடக்கும் தமிழ்ச் சொற்களை வெளிக்கொணர தனி ஆய்வு ஒன்றைச் சரிவர நடத்தினால் அது இங்கு பரவிக் கிடக்கும், ஆனால் இருளடைந்து கிடக்கும் இந்திய மலாயா பண்பாட்டிற்குப் புது ஒளி தரும் என்றார். தமிழர் பிரதிநிதித்துவ சபையில் அங்கம் வகிக்கும் 42 சங்கங்களின் சார்பிலும் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் சங்கச் சார்பிலும் மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி தலைவர், பேராசிரியர் மு. இராசாக்கண்ணு அவர்களுக்கும், மண்ணியல் (Soil science) பகுதி தலைவர் பேராசிரியர் சி. எஸ். ஹாலில் அவர்களுக்கும் வரவேற்பளிக்கப்பட்டது. சிங்கப்பூர் உதவி முதல் மந்திரியும் ஸ்தாலஸ்தாபன மந்திரியுமான இஞ்சே அப்துல் ஹமீது பின் ஹாஜி ஜுமாட் வரவேற்புக்குத் தலைமை தாங்கினார். பேராசிரியர்களுக்குத் தனித் தனி வரவேற்பு பத்திரம் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், சட்டசபை அங்கத்தினர்களும் மற்றும் சங்கப் பிரதிநிதிகளுமாக 700 பேருக்கு மேல் கூடி இருந்தார்கள். தமிழர் பிரதிநிதித்துவ சபையின் உதவிக் காரியதரிசி திரு. செல்வக்கணபதி கூட்டத்தினருக்கு வரவேற்புரை அளித்தார். த. பி. சபைத் தலைவர் திரு. கோ. சாரங்கபாணி மந்திரிக்கும், பேராசிரியர்களுக்கும் மாலையணிவித்தார். மலாயாவின் கலாச்சார, பொருளியல் வளர்ச்சிக்கு அவசியமான முறையே இந்தியப் பகுதி, மண்ணியல் (Soil science) பகுதி ஆகிய இரு பகுதிகளையும் துவங்கிய மலாயா பல்கலைக்கழகத்தாரை மந்திரி இஞ்சே அப்துல் ஹமீது பின் ஹாஜி ஜுமாட் தன் தலைமையுரையில் பாராட்டினார். இந்தியப் பகுதியில் தமிழ் போதனையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கார் சாண்டரஸ் தயாரித்த பல்கலைக்கழக அறிக்கையின் சிபாரிசுகளுள் ஒன்று; மேலும் இங்குள்ள இந்தியர்களின் உடனடித் தேவையும் அதுவே என்பதில் சந்தேகமில்லை என்றார். தேவை ஏற்படுகிற போது பிற இந்திய மொழிகள் போதிக்கவும் வசதி செய்யப்படும் என்றார். இந்தியப் பகுதி வெற்றிகரமாக, திறம்பட நடைபெற வேண்டுமானால் தொடர்ந்தாற் போல் மாணவர்கள் தேவை என்றும், அதற்கு மலாயாவில் உள்ள இந்திய சமுதாயம் புதுப்பகுதியின் வளர்ந்து வரும் மாணவர் தேவையை நிரப்ப முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பிறகு, திரு. இராசாக்கண்ணு தன் உரையில் இந்தியப் பகுதி உருவாக்குவதற்குக் கோ. சாரங்கபாணி, மலாயாத் தமிழ் மக்கள் மற்றும் துணை வேந்தர் சர் சிட்னி கெயின் இவர்களின் பங்கு மிகவும் அளப்பரியது என்று பாராட்டினார். தமிழ் பகுதிக்காக மலாயாத் தமிழர்கள் தமிழ் எங்கள் உயிர் நிதி மூலம் 30,000 வெள்ளியைத் தந்தமையைப் பாராட்டியதோடு இந்திய அரசாங்கம் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு அடையாள உதவியாக 16,000 ரூபாய்களைத் தந்ததையும் புகழ்ந்து பேசினார் (தமிழ் முரசு, அக்டோபர், 24, 1956, பக். 12).

மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதிக்குத் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்தியப் பகுதி தலைவர் திரு. இராசக்கண்ணுக்கு உதவியாகப் புதிய விரிவுரையாளர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. தமிழில் ஆனர்சு அல்லது எம்.ஏ. பட்டம் பெற்றுக் கல்லூரிகளில் தமிழ் படிப்பித்த பயிற்சியும் உள்ளவர்களே இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. மலாயா பல்கலைக்கழகம் அக்டோபர் மாதம் முதல் தமிழ் வகுப்புகளைத் தொடங்கும் என்பதால் அதற்கு முன்பே புதிய விரிவுரையாளர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது என அறிவிக்கப்பட்டது (தமிழ் முரசு, மே, 03, 1957, பக். 01).

மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ், மலாய், நிலவியல் (Geology) ஆகிய பகுதிகள் பல்கலைக்கழகத்தின் புதிய அமைப்புத் திட்டப்படி விரைவில் கோலாலம்பூருக்கு மாற்றப்படும் என பல்கலைக்கழக பதிவதிகாரி திரு. எச். டி. லெவிஸ் 17.12.1958இல் அறிவித்துள்ளார். தமிழ், மலாய் மொழிப் பகுதிகளில் படிக்கிற மாணவர்களில் பெரும்பாலோர் பெடெரேஷனைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்தான் இவ்விருபகுதிகளும் கோலாலம்பூருக்கு மாற்றப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தனர் (தமிழ் முரசு, டிசம்பர், 18, 1958, பக். 01). ஏப்ரல் 1960 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தோடு இந்தியப் பகுதியும் முழுமையாகக் கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது (தமிழ் முரசு, ஜூலை, 26, 1959, பக். 06).

மலாயாப் பல்கலைக்கழகத்தின் கலை பீடம் 1959-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தமிழ் மொழியை முதன்மையாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தார்கள். மேலும், மாணவர்கள் நான்கு வருடங்கள் படிக்க வேண்டியப் பட்டப்படிப்பை மூன்று ஆண்டுகளில் முடிக்க முடியும். இந்தியத் துறையின் கற்பித்தல் செப்டம்பர் 1957இல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் மொழிக்கான இடைநிலை மற்றும் துணைநிலை முதல் பாடத்திட்டங்களுக்கும் மலாயா பல்கலைக்கழகக் கலை பீடம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 3, 4).

இந்திய ஆய்வுத் துறை செப்டம்பர் 1956இல் நடைமுறைக்கு வந்தது. திரு. எம். இராசாக்கண்ணு மூத்த விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் செப்டம்பர் 12, 1956 இல் பொறுப்பேற்றார். டிசம்பர்  மாதம் சுருக்கெழுத்தாளர் ஒருவரும், பிப்ரவரி 1957இல் கற்றல் கற்பித்தல் தரவுகளைச் சேகரிக்க மூன்று பகுதிநேர ஆராய்ச்சி உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டார்கள் (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 58).

இந்தியப் பகுதி நூல்நிலையம்

IMG-20200831-WA0084தமிழ் முரசு பத்திரிகையில் கோ. சாரங்கபாணி அவர்கள் இந்தியப் பகுதி மட்டுமில்லாமல், மலாயா பல்கலைக்கழகத்தில் மகாத்மா கந்தியின் பெயரில் நூல் நிலையம் அமைப்பது அவசியம் என்று தொடக்கம் முதலே முழங்கி வந்தார் என்பது அறிந்த செய்திதான். அச்சமயம் வெளிவந்த பத்திரிகை செய்திகளில் மாணவர்கள் மகாத்மா காந்தியின் போதனைகளையும், வாழ்க்கை முறைகளையும் படித்துத் தெரிந்துக் கொள்ள இந்த நூலகம் பிரதான ஒன்றாக அமையும் என்றும் இந்தியப் பகுதி அமைக்கப்படுவதற்கு முன்னே மலாயா இந்தியர்கள் இதைச் செய்ய முற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இச்செயல் இந்தியப் பகுதி அமைப்பைத் துரிதப்படுத்த தூண்டுகோலாக இருப்பது மட்டுமல்லாமல் மலாயா இந்தியர்களுக்கு கௌரவமளிப்பதாகவும் அமையும் என்று குறிப்பிட்டிருந்தார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1953, பக். 04).

மலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பகுதி நூலகத்திற்குச் சமஸ்கிருத புத்தகங்கள் வந்ததைத் தொடர்ந்து தமிழ் மொழி புத்தகங்களைச் சுயமாக வாங்கி நூலகத்தில் வைக்க வேண்டும் என்று கோ. சாரங்கபாணி தமிழ் முரசு பத்திரிகை மூலம் நிதி திரட்டும் முயற்சியை அமல்படுத்தினார். சமஸ்கிருத புத்தகங்களை வழங்கியதைக் கண்டு சினம் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. மலாயாத் தமிழர்கள் தங்களுடைய முக்கியமான கடமையைச் செய்ய வேண்டும் என்று தமிழ் முரசு பத்திரிகையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ் புத்தகங்களும், தமிழ் மொழிக்கும் தமிழ் கலைக்கும் உறுதுணையாக இருக்கும் ஆங்கில புத்தகங்களும் மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்தில் இடம் பெற வேண்டும் எனப்பட்டது. ஆளுக்கொரு புத்தகங்கள் கொடுத்தாலும் பதினாராயிரம் புத்தகமாகிவிடும். ஆனால், பல்கலைக்கழக நூல்நிலையத்தில் இடம் பெறும் புத்தகங்களுக்கு என ஒரு வரைமுறை உண்டு எனப்பட்டது. நூலகத்திற்குத் தகுந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் தகுதியும் உடையவர்கள் பண்பட்ட தமிழ் அறிஞர்களே ஆவர். தனிநாயகம் அடிகளின் பெரும் முயற்சியால் உருவான தமிழ்க் கலை மன்றத்தில் உள்ள தமிழ் அறிஞர்களை மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்திற்குத் தகுந்த புத்தகங்களை வாங்கி அனுப்பச் சொன்னால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் தவிர மறுக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களையே தங்களுடைய பணம் போட்டு பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் புத்தகங்களை வாங்கி அனுப்பும்படி கேட்கலாம் ஆனால் அது மலாயாத் தமிழர்களின் கடமையாகாது என்றும் கூறப்பட்டிருந்தது. மலாயாவில் வாழுகின்ற ஆறு லட்சம் தமிழர்கள் சார்பில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தகங்கள் இடம்பெற பத்தாயிரம் தமிழர்கள் ஆளுக்குப் பத்து வெள்ளி வீதம் நன்கொடை கொடுத்து ஒரே மாதத்தில் ஒரு லட்சம் வெள்ளியைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ் எங்கள் உயிர் என்று சொல்லும் பத்தாயிரம் தமிழர்கள் யார் என்பதைப் பட்டியல் போடுகின்ற இந்த நிதிக்குத் தலைவராய் இருக்க தமிழ்ச் செல்வர் திரு. வே. பக்கிரி சாமி, அவர்களும் நிதியாளராக இருக்கப் பெரும் வணிகர் திரு. பொ. கோவிந்தசாமி அவர்களும் மறுக்கவே மாட்டார்கள் என நம்பிக்கையாகத் தமிழ் முரசு பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடமையை இன்றே தொடங்குங்கள் என தமிழ் முரசு பத்திரிகை வேண்டுகோள் சமர்ப்பித்தது. தமிழ் எங்கள் உயிர் என்ற பட்டியலைத் தொடங்குவோரின் பெயர்கள் 25.02.1955 முதல் தொடங்கி தினமும் பத்திரிகையில் பட்டியலிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது (தமிழ் முரசு, பிப்ரவரி, 24, 1955, பக். 04).

தமிழ்ப் பகுதி நூல்நிலையத்திற்காக ஏற்கனவே சென்னை அரசாங்கம் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபை மூலம் 5250 தமிழ்ப் புத்தகங்களையும், அண்ணாப்பல்கலைக்கழகம் தான் வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் வழங்கியுள்ளதையும், இந்திய அரசாங்கம் இங்குள்ள கமிஷனர் வழி சில சமஸ்கிருத புத்தகங்களை வழங்கியுள்ளதையும் தமிழ் முரசு பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 01).

1959-ஆம் ஆண்டு இந்தியப் பகுதி நூல் நிலையத்தில் பத்தாயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றுள் சில புத்தங்கள் எளிதில் கிடைக்காதவை என்று குறிப்பிட்டிருந்தனர். இவற்றுள் பெரும்பான்மையான புத்தகங்கள் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபையால் வழங்கப்பட்டவை. வேறு பல புத்தகங்கள் இந்திய அரசாகத்தாலும் பிற நிறுவனங்களாலும் தனிப்பட்டவர்களாலும் கொடுக்கப்பட்டன. கிடைப்பதற்கரிய சில புத்தகங்கள் தமிழர் பிரதிநிதித்துவ சபை வழங்கிய நிதி கொண்டு வாங்கப்பட்டவை ஆகும். இப்பகுதியின் தலைவர் பேராசிரியர் இராசாக்கண்ணு இந்தியப் பகுதியைத் தொடங்க ஆரம்ப நிலையில் இருந்தே அதிகமான வேலைகளை இனிதே செய்து முடித்ததோடு பழைய தமிழ் இலக்கிய ஆராய்ச்சித்துறையில் மூன்று புத்தங்களை அவர் வெளியிட்டிருக்கிறார் (தமிழ் முரசு, ஜூலை, 26, 1959, பக். 06). மலாயா பல்கலைக்கழக நூல்நிலையம் புத்தகங்களைக் கோலாலம்பூர் பகுதிக்கு மாற்றும் போது முதலில் 10,000 புத்தகங்களை மட்டும் கொண்டு வந்துள்ளனர். அதில் இந்தியப் பகுதி நூலகத்தின் புத்தகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது (தமிழ் முரசு, டிசம்பர், 28, 1959, பக். 06).

நூலகத்தின் இந்திய ஆய்வியல் பிரிவில் 1957-ஆம் ஆண்டு சுமார் 5,400 புத்தகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் எழுபத்திரண்டு புத்தகங்கள் மெஸ்ஸ்ரஸ். பழனியப்ப பிரோஸ். ஒஃப் மெட்ராஸ், தென்னிந்தியா (Messrs. Palaniappa Bros. of Madras, South India) அவர்களால் துறைக்கு வழங்கப்பட்டதாகும் (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 58).

 

உபகாரச் சம்பளம்

மே மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபையின் துணைத் தலைவர் திரு. வயி. சண்முகம் செட்டியார், இந்திய மொழிப் பகுதி தலைவர் பேராசிரியர் மு. இராசாக்கண்ணு ஆகியோருடன் பல்கலைக்கழக இந்திய மொழிப் பகுதி, தமிழ் நூல்நிலையம் ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்துள்ளார்கள். இவர்களோடு சேர்ந்து சுற்றிப் பார்த்த சுங்கை சிப்புட் திரு. ஏ. எம். எஸ். பெரியசாமி இந்தியப் பகுதி மென்மேலும் வளர வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழக இந்திய மொழிப் பகுதியில் பயில விரும்பும் மாணவர்களில் ஒருவருக்கு உபகாரச் சம்பளம் கொடுக்க முன் வந்தார். இவ்வுபகாரச் சம்பளம் அவருடைய தகப்பனார் திரு. அமுசு சுப்பையா பிள்ளையின் பெயரால் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் படிக்க ஆர்வம் இருந்தும் பண வசதியின்மையால் முடியாமல் போகும் மாணவர்களுக்கு இவ்வுதவி துணைபுரியும் என்றார்.

பின், பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உள்ள சீன மொழி நூல் நிலையப் பகுதி அளவுக்குத் தமிழ் நூல் நிலையமும் வளர வேண்டும் என்றும் சீன மொழி நூல் நிலையத்தில் ஒன்றே கால் லட்சம் நூல்கள் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சண்முகம் செட்டியார் பெரியசாமி அவர்களைப் பாராட்டியதோடு இந்தியப் பகுதிக்கு இவரைப் போன்று 10 பேராவது முன் வந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின், பேராசிரியர் இராசாக்கண்ணு அவர்கள் இவ்வாறு உபகாரச் சம்பளம் கொடுத்து உதவுவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பல்கலைக்கழகம் அனுப்பி தமிழ் படிக்க வைக்க அதரவாக இருக்கும் என்பதோடு மற்றவர்களும் இவரைப் போல் முன்வருவார்கள் என்று நம்பிக்கை கொள்வதாகக் கூறினார். இறுதியாக, திரு. பெரியசாமி வாக்களித்த உபகாரச் சம்பளம் பெடரெஷனில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது (தமிழ் முரசு, மே, 08, 1957, பக். 02).

கல்வி வளர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் தயங்காது பொருளுதவி செய்யும் திரு. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள், மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதிக்கு 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற செய்தியைக் காண மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைவதாகத் தெரிவித்ததோடு தமிழ் படிக்க இருக்கும் இரு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் தருவதாக வாக்களித்தார். பெருமுயற்சியினால் வெகு சிரமப்பட்டு அமைக்கப் பெற்ற இத்தமிழ்ப் பகுதியை வளர்ப்பது தமிழர் கடமை என்றும் அப்பகுதியில் சேர்ந்து பயில விரும்பும் பொருளாதார வசதியற்ற, மாணவர்களை ஊக்குவிப்பது வசதியுள்ளோர் பொறுப்பாகும்  .என்றும் கூறினார்  ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு உபகாரச் சம்பளம் சுமார் 2000 வெள்ளியாகிறது என்றும் அம்மாணவன் பல்கலைக்கழகப் படிப்பு முடியும் வரையில் அவ்வுபகாரச் சம்பளத்தைப் பெறலாம் என்றும் கூறினார். இந்த உபகாரச் சம்பளத்தில், பல்கலைக்கழக கட்டணம், உணவு விடுதிச் செலவு ஆகிய இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன என்றார். (தமிழ் முரசு, மே, 25, 1957, பக். 06).

மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘மலாயா தமிழ் மொழிச் சம்பள உதவிச் சங்கம்’ நடப்புப் படிப்பு ஆண்டுக்காக ஏழு மாணவ, மாணவிகளுக்கு உதவிச் சம்பளம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏழு பேரில் இருவர் மாணவர்கள் ஐவர் மாணவிகள் என அறிவிக்கப்பட்டது. எழுவருக்கும் படிப்புக் காலமான சுமார் 4 ஆண்டுகள் வரை அவரவர்  படிப்புத் தேர்ச்சியைப் பொறுத்து ஒரு ஆண்டுக்கு 2000 வெள்ளி வீதம் உதவிச் சம்பளம் வழங்கப்படும் எனப்பட்டது. இவ்விவரங்கள் மலாயா தமிழ் மொழிச் சம்பள உதவிச் சங்கத்தின் செயலாளரான திரு. எம். எம். மாலை 08.11.1958 அன்று தமிழ் முரசு நிருபரிடம் தெரிவித்தார். இந்த உதவிச் சம்பளத்தைப் பெறத்தக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவானது, உதவி பெற விண்ணப்பம் செய்த மாணவர்களைச் சோதித்து ஏழு மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்தது எனத் திரு. மாலை கூறினார். இவர்களுக்கு உரிய உதவிச் சம்பளத்தொகை பல்கலைக்கழக அதிகாரிகள் மூலம் மூன்று தவணையாகக் கொடுக்கப்படும் என்றும் முதல் தவணையில் 650 வெள்ளியும் இரண்டாவது தவணையில் 650 வெள்ளியும் முன்றாம் தவணையில் 700 வெள்ளியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் இரு தவணைகளுக்குரிய மொத்தத் தொகையான 9,100 வெள்ளி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக ஏற்கனவே பல்கலைக்கழகத்தாரிடம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. மலாயா நாட்டில் தமிழ் மாணவர்கள் உயர்நிலைத் தமிழ்ப் பயிற்சி பெற உதவுவதற்காக ஏழு தமிழ்ப் பிரமுகர்களும் இரு நிறுவனமும் மொத்தம் 83,000 வெள்ளி மதிப்புள்ள 11 உதவிச் சம்பளத்தை வழங்க முன் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மலாயா தமிழ் மொழிச் சம்பள உதவிச் சங்கம் குறித்த தகவல்களும் வழங்கப்பட்டது. இச்சங்கத்தின் அலுவலகம் மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியில் இருக்கின்றது என்றும் சிங்கப்பூர் முதல் மந்திரி டுன் லிம் இயூ ஹாக், கல்வி மந்திரி திரு. சியூ ஸ்வீ கீ, மலாயாப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. ஆப்பன்ஹிம் ஆகிய மூவரும் இச்சங்கத்தின் போஷகர்களாவர் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டன. மேலும், திரு. கோ. சாரங்கபாணி இச்சங்கத்தின் தலைவராகவும், மலாயா பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதித் தலைவரான பேராசிரியர் முத்து இராசாக்கண்ணுவும், திரு. ந. இரங்கசாமிப்பிள்ளையும் துணைத் தலைவர்களாகவும், திரு. பொ. கோவிந்தசாமி பிள்ளை ஜே. பி. பொருளாளராகவும், திரு. எம். முத்துமாலை கவுரவ செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் (தமிழ் முரசு, நவம்பர், 08, 1958, பக். 05).

பாட முறை

தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டம் பெறவிரும்புகிற மாணவர்கள் செப்டம்பர் மாதம் முதல் மலாயா பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 17.05.1957-ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தலைமைப் பாடமாகவும் தமிழே தெரியாதவர்களுக்குத் துணைப்பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1957-ஆம் ஆண்டு புதிதாகச் சேருகிற மாணவர்கள் மட்டுமல்லாது முதல் வருட தேர்வில் வெற்றிபெற்று ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் தமிழ்ப் பகுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் எனப்பட்டது. புதிதாகப் பல்கலைக்கழகத்தின் இடைநிலை வகுப்பில் சேரும் மாணவர்கள் தமிழைத் தலைமைப் பாடமாகவும், இடைநிலை வகுப்புத் தேர்வில் 1957-ஆம் வருடம் வெற்றி பெறும் மாணவர்கள் தமிழைத் துணைப்பாடமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழைத் துணைப் பாடமாக எடுத்துக்கொள்கிறவர்கள் இருவகையினராகப் பிரிக்கப்பட்டனர்.

தமிழில் பயிற்சி ஏதுமில்லாதவர்கள் ஒரு வகையினர், தமிழில் பயிற்சியுடையவர்கள் மற்றொரு வகையினர். தமிழைத் துணைப்பாடமாக எடுத்துக் கொள்கிற மாணவருக்குத் தமிழே தெரியாது என்றால் அவருக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும் என்றும் அத்துடன் தமிழில் பேசவும் எழுதவும் கற்பிக்கப்படும். தமிழில் பேசவும் எழுதவும் கொஞ்சமாவது தெரிந்திருந்து தமிழைத் துணைப்பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குத் தமிழ் மொழி, இலக்கியம் பற்றிய பாடங்கள், இலக்கிய, கலாச்சார, பொருள்கள் பற்றி கட்டுரைகள் எழுதுதல் ஆகியவை கற்பிக்கப்படும். 1957-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழக வகுப்பில் சேர்ந்து தமிழைத் தலைமைப் பாடமாக எடுக்கிற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களைப் படித்தல், கட்டுரை எழுதுதல், தமிழ் மொழிப் பயிற்சி ஆகியவை பாடங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சையில் தமிழில் சிறப்புத் தகுதி பெற்ற மாணவர்களும் தமிழில் வேறு சிறந்த தகுதி கொண்டுள்ள மாணவர்களுமே தமிழைத் தலைமைப் பாடமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 17.05.1957இல் பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் வகுப்பில் சேரும் மாணவர்கள் பட்டியலில் கலைத் துறைப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாணவர்ளில் தமிழர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களில் பலர் தமிழ் படிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என வும்எதிர்பார்க்கப்பட்டது (தமிழ் முரசு, மே, 17, 1957, பக். 01,08).

மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி 1956-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு 55 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் என இப்பகுதி வளர்ந்தது. 1959-ஆம் ஆண்டு இந்தியப் பகுதியிலிருந்து ஐந்து மாணவர்கள் ஆனர்ஸ் பரீட்சை எழுதினார்கள். மலாயா பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி ஆரம்பித்த போதே தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்களைப் போதிப்பதோடு இந்திய கலைகளையும் பொதுவாய் அபிவிருத்தி செய்வதெனக் குறிப்பிடப்பட்டது.

ஆயினும், இப்பகுதிக்கு மாணவர்கள் 1957 செப்டம்பரில் சேர்க்கப்பட்டனர். இண்டர்மீடியட், பி. ஏ. வகுப்பிற்குச் சேர்ந்த 27 மாணவர்களுள் இருவர் மலாய் மாணவர்கள். 1959-ஆம் ஆண்டு எல்லாப் பாடங்களையும் எடுத்த மொத்த மாணவர்கள் 55 பேர். இதில் ஆனர்ஸ் வகுப்பில் 5 மாணவர்களும், 18 பேர் முதல் தரத்திலும் 20 பேர் இடைத் தரத்திலும் பயின்றனர். மேலும், 12 பேர் பட்டமில்லாத பயிற்சியை மேற்கொண்டனர். தமிழ் மொழியும் இலக்கியமும், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு, இயல் இசை இலக்கணம், திராவிடக் குழு மொழிகளின் ஒப்பிலக்கணம், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆராய்ச்சி, பொதுவான இந்தியக் கலைகள், சிறப்பாக மலாயாவுடன் ஒட்டி வளர்ந்துள்ள இந்தியக் கலைகள் ஆகிய இப்பாடங்கள் அனைத்தும் ஆனர்ஸ், முதல் தரம், இடைத்தரம் என்ற பிரிவுகளில் அவற்றுக்கு ஏற்ற முறையில் சொல்லித் தரப்பட்டன. இடைத்தரப் படிப்பு ஆரம்ப நிலை, உயர்நிலை என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மைத்தரம் பி. ஏ. ஆண்டுகளில் படிக்கப்பட்டது. இந்தப் பாடங்களில் பட்டமில்லாத தமிழ் படிப்புப் படிப்பவர்களும் இருந்தனர். இவர்கள் தங்கள் பட்டப்படிப்பிற்குச் சில பாடங்களையே எடுத்துப் படித்துள்ளனர் (தமிழ் முரசு, ஜூலை, 26, 1959, பக். 06).

1957-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுதும் திரு. இராசாக்கண்ணு அவர்கள் மலாயாவிற்கும் சிங்கப்பூருக்கும் சுற்றுப்பணயம் செய்து இந்திய மொழிப் பள்ளிகளைப் பார்வையிட்டு அம்மொழிகளின் கற்பித்தலின் தன்மையையும் நோக்கத்தையும் குறித்து பூர்வாங்க கணக்கெடுப்பு நிகழ்த்தியதோடு கல்வி மற்றும் பள்ளி அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் செய்தார். திரு. இராசாக்கண்ணு 1956-ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கி மலாயா வானொலியில் ‘பரிபாடல்’ என்ற தலைப்பில் ஆறு வார சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மலாயா தமிழர்களுக்குத் தமிழ் கிளாசிக் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் இளையவர்களை ஊக்குவிக்கவும் இந்த விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் ஆதரவுடன் அவர் தொடர்ந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொற்பொழிவுகளை நடத்தினார். திரு. இராசாக்கண்ணு மலாயா கல்வி அமைச்சு கொள்கையில் மலாய், சீன, இந்திய மொழிகளுக்கும் கலாச்சாரத்திற்கும் சமவுரிமை கொடுத்ததற்குப் பாராட்டியுள்ளார் (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 58).

தொடக்க காலத்தில் வெறும் கல்வியைப் போதிக்கும் பாடத்திட்டமாகவே இருந்த நிலையில் சில வருடங்கள் கழித்து இந்திய ஆய்வியல் துறையிலும் மாணவர்கள் ஆய்வுகள் செய்யத் தொடங்கினர். இறுதியாண்டு மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை முழுமையாக முடிப்பதற்கு ஆய்வினை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இளங்கலை பட்டங்களுக்கான ஆய்வுகள் தமிழ் மொழியிலும், முதுகலை, முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகள் மலாய் அல்லது ஆங்கில மொழியிலும் எழுதப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது (பிரியா, 2012, பக். 35). 2019-ஆம் ஆண்டுவரை இளங்கலை பட்டப்படிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் எண்ணிக்கை 457 ஆகும்.

முதல் பாகம் : மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

மேற்கோள் பட்டியல்

Annual Report of University of Malaya (1956-1957). (1957). University of Malaya: Singapore.

Caine, S. (1958). The University Of Malaya. Journal of the Royal Society of Arts, 106(5022), 442-454. Retrieved from, www.jstor.org/stable/41368645

இதோ எங்கள் பங்கு என கல்லாலைத் தொழிலாளர் ஈந்தனர். (1955, 02 செப்டம்பர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550902-5&nid=tamilmurasu

இந்தோசீனா ஈந்தது எண்ணாயிரம் வெள்ளி தமிழ் எங்கள் நிதிக்கு தமிழர் காடிய பேருணர்ச்சி இந்தோ சீனா வெள்ளிப்படி பார்த்தால் அது ஆகிறது ஒன்றரை லட்சம் வெள்ளி. (1955, 28 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550428-7&nid=tamilmurasu

ஈப்போ தமிழ் எங்கள் உயிர் நாடக மன்றம் இலட்சிய சுடர் நாடக வரவு செலவு. (1955, 23 ஜூலை). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550723-5&nid=tamilmurasu

உயிர் நிதி திரட்ட உண்டியல் எடுத்தார். (1956, 03 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561203-3&nid=tamilmurasu சமஸ்கிருத புத்தகங்கள் கொடுத்தது சரிதான்’ சப்பைக் கட்டு கட்டிப் பேசுகிறார் தாண்டன் இந்தியாவிலேயே மிகமிகப் பழையமொழி சமஸ்கிருதம் தானாம் ‘இந்திய தேசக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதும் சமஸ்கிருதம் தாமே’ – திரு.தாண்டம். (1955, 21 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550221-7&nid=tamilmurasu

தமிழுக்கு உயிராட வள்ளுவர் பாரதிதாசன் விழாவினிலே அலோர் ஸ்டார்  அன்பர்கள் உயிர் நிதிக்கு அளித்தனர். (1956, 11 செப்டம்பர்). தமிழ் முரசு, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560904-11&nid=tamilmurasu

தமிழ் ஆசிரியர்கள் எதிர்காலம் இந்த நிதி நிரப்புவதில் இருக்கிறது. (1955, 29 ஜூலை). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550729-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் இன்றே பட்டியலில் பெயர் போடுங்கள். (1955, 02 மார்ச்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550302-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் என சொன்ன கவிஞர் தினம் அந்த நாளில் நிதியை நினைத்து பார்க்க மலாயாத் தமிழருக்கு அறைகூவல். (1955, 17 மே). தமிழ் முரசு, பக். 10. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550517-10&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் என்றோம் வென்றோம் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்ப்பகுதி தலைவர் நியமனம். (1956, 07 ஜூலை). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560707-1&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் தமிழருக்கு உயிர் எங்கள் தாய்மொழி தமிழ். (1955, 27 மார்ச்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550327-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நல்வழி காட்டுகின்றனர் பத்துபகாட் அன்பர்கள். (1955, 09 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550409-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதி ஆசிரியர்கள் எல்லாம் பணம் அனுப்புக. (1956, 17 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561017-11&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதி இலட்சியத் தொகையை எட்ட உதவி புரிவீர்! இலங்கையும் போர்னியோவும் நிதிக்குப் பணம் அனுப்பின. (1956, 03 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560403-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதி ஈழத்துத் தமிழன்பர்கள் இதயத்தையும் தொட்டது!. (1955, 16 ஜூன்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550616-4&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதி நிரப்பினர். (1956, 07 டிசம்பர்). தமிழ் முரசு, 1956, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561207-3&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதி பெருக காணிக்கை தருவீர். (1955, 01 ஜூன்). தமிழ் முரசு, 01, ஜூன். பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550601-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதி. (1955, 02 செப்டம்பர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550902-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக அலோர் ஸ்டாரில் கதம்ப நிகழ்ச்சி. (1956, 04 செப்டம்பர்). தமிழ் முரசு, பக். 10. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560921-10&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக நடந்த கதம்ப கச்சேரி. (1956, 02 நவம்பர்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561102-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக நடந்த கதம்ப கச்சேரி. (1956, 02 நவம்பர்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561102-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக. (1956, 02 ஜூலை). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560702-7&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக. (1956, 17 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561017-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு  101 வெள்ளி நன்கொடை காரைக்குடி நகரசபைத் தலைவர் வழங்கினார். (1956, 12 ஜூலை). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560712-7&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு அலோர் ஸ்டாரில் கதம்ப நிகழச்சி. (1956, 04 செப்டம்பர்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560904-11&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு அலோர் ஸ்டார் அளித்த நன்கொடை $1030-09. (1956, 23 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561023-11&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு இலங்கையர் இந்தியர் ஒவ்வொரு தமிழரும்  உதவுக பெடரேஷன் முன்னாள் கல்வியமைச்சர் டத்தோ துரைசிங்கம் அறைகூவல் ‘பல்கலைக்கழக தமிழ்ப்பகுதிக்கு உத்வேகம் நல்கும் முயற்சி இது’ தமிழ்ப்பகுதிக்கு ஆதரவளிக்க இந்திய, இலங்கை அரசினருக்கு வேண்டுகோள். (1955, 01 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550401-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு கோலக்கிள்ளான் துறைமுக தொழிலாளர்களின் அன்பளிப்பு. (1956, 04 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560404-3&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு சீர்காழி தாலுக்கா தமிழர் முன்னேற்ற கழகம் பணம் திரட்டும். (1956, 07 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560207-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு நாடகமாடிய இளைஞருக்கு மலாக்கா த.பி.ச பாராட்டு தமிழ் எங்கள் உயிர். (1955, 26 மே). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550526-4&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு நிதி திரட்ட தி.க முயற்சி. (1955, 05 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 10. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550405-10&nid=tamilmurasu

 தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு நிதி திரட்ட முந்துகின்றனர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்க நிர்வாகிகளின் முயற்சி. (1955, 30 மார்ச்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550330-8&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு பண முடிப்பு தர முடிவு. (1958, 17 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19590217-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு பண முடிப்பு தர முடிவுபல்கலைக்கழகத்தில் வளரும் தமிழ்ப்பகுதி 10000 நூல்கள் கொண்ட நூல் நிலையம். (1959, 26 ஜூலை) தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19590726-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு பணந்திரட்ட தாப்பா தமிழர் சங்கம் முயற்சி. (1956, 31 ஜூலை). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560731-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு பேரா மருத்துவர்கள் உதவி. (1955, 31 மார்ச்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550331-8&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வாரி தந்து தடை போக்குவோம் வாரீர்! பல்கலைக்கழகத்தில் தமிழ் பகுதி தோன்றும் : மலாயாவில் தமிழ் வாழும் தமிழ் மக்களை மதிப்பர். (1955, 07 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19551007-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதிக்குக் கை கொடுகிறது தமிழ்நாடு தமிழக மக்கள் வாரி வழங்குக காமரரஜ் அறைகூவல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பகுதியே நிறுவப்பட்டது. (1955, 15 மார்ச்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550315-1&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்புங்கள் தமிழர் பிரதிநிதித்துவ சவை அறைகூவல். (1955, 24 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550324-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் பட்டியலை நிரப்ப வருக ஈப்போ பாரிமன்றம் அழைப்பு. (1955, 15 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550415-8&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் பினாங்கு பெருமக்களுக்கோர் பெருவிருந்து. (1956, 07 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560607-7&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் பெயர் போடுங்கள். (1955, 24 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550224-4&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர் மாணவர் கூட்டத்தில் முழக்கம். (1955, 28 மார்ச்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550328-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்! பட்டியலில் முதல் பெயர் குன்றக்குடி அடிகளார். (1955, 25 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550225-1&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 01 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550401-4&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 01 மே). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550501-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 03 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550403-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 06 மே). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550506-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 07 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19551007-5&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 13 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550313-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 14 ஜூலை). தமிழ் முரசு, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550714-3&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 15 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550415-7&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 16 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550316-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 17 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550417-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 18 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550318-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 20 மார்ச்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550320-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 26 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550426-11&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 29 மே). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550529-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1955, 29 ஜூலை). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550729-4&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர். (1956, 06 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561206-2&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்’ க.மு.லீக் ஆதரவு. (1955, 21 மார்ச்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550321-6&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்கு நிதி திரட்ட தி.க முயற்சிதமிழ்ப் பகுதி அடுத்த ஆண்டு ஆரம்பமாகும். (1955, 07 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550407-11&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்’….பட்டியலில். (1955, 02 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550302-12&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்’….பட்டியலில். (1955, 26 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550226-8&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்’….பட்டியலில். (1955, 28 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550226-8&nid=tamilmurasu

தமிழ் எங்கள் உயிர்’….பட்டியலில்.(1955, 01 மார்ச்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550301-8&nid=tamilmurasu

தமிழ் எங்கள் பட்டியலுக்கு நிதி உதவுங்கள். (1955, 04 ஜூன்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550604-5&nid=tamilmurasu

தமிழ் நாட்டவரே! தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு தாராளமாக தருக பணம்’ சென்னையில் தமக்களிக்கப்பட்ட வரவேற்பில் குன்றக்குடி அடிகளார் (நமது நிருபர் தந்தி). (1955, 27 மார்ச்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550327-1&nid=tamilmurasu

பகுத்தறிவு நாடக மன்றம் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு $603-45 வழங்கியது. (1955, 19 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19551019-6&nid=tamilmurasu

பராமுகமாயிருக்கும் தமிழர்கள் மனத்தைத் தொடுமா? பூச்சி அரித்த எலும்பு – என்றாலும் எந்த பூச்சியும் தின்ன முடியாத தமிழ் உணர்ச்சி! தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு எலும்புருகி நோயாளிகள் காணிக்கை தந்த தகைமை. தைப்பிங் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களும் இதோ எங்கள் பங்கு என்று நீட்டுகின்றனர். (1955, 11 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550411-4&nid=tamilmurasu

பல்கலைகழகத்தில் தமிழ் படிக்க உபகாரச் சம்பளம் கோவிந்தசாமி பிள்ளை இரு மாணவருக்குத் தருவார். (1957, 25 மே). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19570525-6&nid=tamilmurasu

பல்கலைக்கழக தமிழ்ப் பகுதி கோலாலம்பூரில் மாணவரில் பெரும்பாலோர் பெடெரேஷன் சேர்ந்தவர்களாக இருப்பதே முக்கியக் காரணம். (1958, 18 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19581218-1&nid=tamilmurasu

பல்கலைக்கழக தமிழ்ப்பகுதி துணைவேந்தர் அறிவிப்பு. (1956, 16 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560416-1&nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பகுதி 1959 இறுதிக்குள் அமைக்கப்படுமாம். (1955, 20 ஜனவரி). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550120-1&nid=tamilmurasu

பல்கலைக்கழகத்திற்கு நன்றியும் பாராட்டும். (1956, 10 ஜூலை). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560710-2&nid=tamilmurasu

பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் பகுதியிலிருந்து கொலாலம்பூருக்கு 10,000 புத்தகங்கள். (1959, 28 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19591228-6&nid=tamilmurasu

பி.டபிள்யூ.காரியாலய நண்பர்களின் கணிசமான உதவி. (1956, 05 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560405-4&nid=tamilmurasu

புதிய தமிழ் விரிவுரையாளர் மலாயாப் பல்கலைக்கழகம் நியமிக்கும். (1957, 03 மே) தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19570503-1&nid=tamilmurasu

மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி அக்டோபரில் துவங்கும் ஆரம்பத்தில் தமிழ் மொழி, இலக்கியத்தில் அதிக கவனம் பகுதியின் முதலாவது தலைவராக திரு.எம் ராஜகண்ணு நியமணம் சர் சிட்னி கேன் அறிவிப்பு. (1956, 07 ஜூலை). தமிழ் முரசு, பக். 05 Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560707-5&nid=tamilmurasu

மலாயாத் தமிழருக்கு இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் நீட்டுகிற அன்புக் கரம் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 300 ரூபாய். (1956, 06 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560406-4&nid=tamilmurasu

மலாயாத் தமிழர்களின் மொழி பற்று, ஒற்றுமை அண்ணாமலை பல்கலைகழக விழாவில் பேராசிரியர்கள் பேச்சு. (1956, 14 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 10. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560214-10&nid=tamilmurasu

மலாயாத் தமிழ் பெருமக்களுக்கு சிற்வர், சிறுமியர் விடுக்கும் வேண்டுகோள் எங்கள் வாழ்வு செழிக்க, நாங்கள் உயர தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்புங்கள்! எதிரொலி!. (1955, 26 ஜூன்). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550626-7&nid=tamilmurasu

மலாயாப் பலகைக்கழகத்தில் தமிழ்ப்பகுதி விரைவில் தொடங்கப்படும் இந்திய அரசாங்க நன்கொடையை ஏற்று மாக்டொனுல்டு உறுதிமொழி தென்கிழக்காசிய நாகரீக வளர்ச்சியில் இந்தியரின் பங்கை எடுத்துரைத்தார். (1955, 17 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550317-12&nid=tamilmurasu

மலாயாப் பல்கலைகழக பேராசிரியர்கட்கு தமிழர் பிரதிநிதித்துவ சபை வரவேற்பு ‘ஐக்கிய மலாயா தேசியம் உருவாக இந்திய பகுதி உதவ வேண்டும்’. (1956, 24 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19561024-12&nid=tamilmurasu

மலாயாப் பல்கலைகழகத்தில் தமிழில் பட்டபடிப்பு : செப்டம்பரில் மாணவர் சேர்த்துக் கொள்ளப்படுவர் புதிதாக சேருகிறவர் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் படிப்போர் இருவருக்கும் வசதி உண்டு தமிழே தெரியாதவர்களும் சேரலாம். (1957, 17 மே). தமிழ் முரசு, பக். 01, 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19570517-1&nid=tamilmurasu

மலாயாப் பல்கலைகழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர் ஒருவருக்கு உபகாரச் சம்பளம். (1957, 08 மே). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19570508-2&nid=tamilmurasu

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப்பகுதிக்கு சமஸ்கிருத புத்தகங்கள் நன்கொடை! இந்திய சர்கார் சார்பில் தாண்டன் பல்கலைக்கழகத்தினரிடம் கொடுத்தார் ஒன்றல்ல, பத்தல்ல : 70 சமஸ்கிருத நூல்கள்! பெயர்க்கூடப் படிப்பாரில்லை!. (1955, 17 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19550217-7&nid=tamilmurasu

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் ஏழு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம். (1957, 08 நவம்பர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19581108-5&nid=tamilmurasu

வயது சென்ற அம்மையார் முந்திக் கொண்டு தந்தார்! எட்வர்டு எஸ்டேட் மக்கள் எழுச்சி. (1955, 08 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19551008-8&nid=tamilmurasu

ஜோகூர் இந்தியப் பாடசாலை ஆசிரியர்கள் ஐக்கிய சங்கம். (1956, 24 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent?pid=tamilmurasu19560224-11&nid=tamilmurasu

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...