தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.

தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து வந்துள்ளன.

இன்று பன்முக வாசிப்பும் அறிவு விசாலிப்பும் தாராளமாக உருவாகிய பின்னும் பினோக்கிய பார்வைகள் இருப்பது கொஞ்சம் நெருடலாதே தவிர, புதியதல்ல. தமிழ்ச்சமூகத்தின் மனதில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் புனிதப்பிம்பங்களின் மீது தயாஜின் கதை உடைப்புகளை நிகழ்த்துகிறது. புனித பிம்பங்களை தமது நம்பிக்கைகளாகக் கொண்டிருப்போருக்கு இது பேரதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இலக்கியத்திலும் சமூகத்திலும் புனிதங்களுக்கெதிரான நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. கடவுளைக் காமுறுவதிலிருந்து இந்தக் கட்டுடைப்பைக் காணலாம்.

எம்.வி. வெங்கட்ராம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் தாய் மிகக் கொடுமைக்காரியாகச் சித்திரிக்கிறார். இந்தக் கதை வந்த காலத்தில் இப்பொழுது தயாஜி எதிர்கொள்ளும் நெருக்கடியைப்போல, கண்டனங்களைப் போல எம்.வி. வியும் நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்க முன்னர் ஓவியர் ஹசேய்னுக்கு நடந்தது. தஸ்லிமா நஸ்ரீன். சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு நிகழ்ந்ததும் இதுதான். அந்தந்தச் சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அது கட்டமைத்திருக்கும் புனிதத்துக்கும் எதிராக கலைப்பைச் செய்யும்போதும் கேள்விகளை உருவாக்கும்போதும் அவற்றின் நம்பிக்கையாளர்கள் கொதிப்புறுகிறார்கள். நம் சமூகத்தில் கடவுளும் மத நம்பிக்கைகளும் மட்டுமல்ல, ஆசிரியர்கள், மதகுருக்கள், தாய், தந்தையர் போன்றவர்களும் மதிப்புக்குரியவர்களே. சமூக யதார்த்தத்தில் எத்தனை ஆசிரியர்கள் மன்னிக்கவே முடியாத தவறுகளைச் செய்கிறார்கள். தங்களில் மதிப்பும் பற்றும் வைத்திருக்கும் மாணவர்களையே பாலியல் ரீதியாக மீறல் செய்திருக்கும் சம்பவங்கள் பலதுண்டு. ஒருவருக்குத் தாயாக இருப்பவர் இன்னொருவரின் வைப்பாட்டியாக இருப்பதுண்டு. நமக்கு அக்காவாக இருப்பவள், இன்னொருத்தரால் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவளாக இருக்கிறாள். தந்தையரால் வன்புணர்வுக்கும் அறியாப்பருவப்புணர்வுக்கும் உள்ளாக்கப்படும் சிறுமிகளின் கதைகள் இன்னும் நீள்கின்றன.

இப்படி புனிதப் பாத்திரங்களின் நிஜச் சீரழிவுகள் ஏராளமுண்டு. எனவே எது புனிதம்? என்ற யதார்த்தமான கேள்வியே எப்பொழுதும் ஒவ்வொன்றின் மீதும் எழுப்பப்படுகிறது. எல்லாப் புனிதங்களையும் உருவாக்கிய மனிதர்களாலேயே புனித மீறல்களும் நிகழ்கின்றன. இவற்றைத் தன்பார்வையில் தயாஜி முன்வைக்கிறார். ஆனால், என்னதான் யதார்த்த நிலைமைகள் இருந்தாலும் இந்த மாதிரியான புனிதக்கட்டுடைப்புகளை நிகழ்த்துவது எளியகாரியமில்லை. அதுதான் இங்கே தயாஜிக்கும் அவருடைய கதைக்கும் வல்லினத்திற்கும் நடந்திருக்கிறது. ஆனால், அதை மீறி தயாஜியின் கதை நிற்கும். இந்தக் கதை கலாச்சார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றாக உள்ளது – அது சுட்ட முனையும் வேறுபட்டதன்மைகைளினூடாக.

2 comments for “தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.

  1. ஸ்ரீவிஜி
    January 16, 2014 at 11:38 am

    சிறிய கட்டுரை.. இருப்பினும் பொருள் பொதிந்த கட்டுரை

  2. Raj Sathya
    January 16, 2014 at 6:25 pm

    To read Salman Rushdi or Taslima Nazin one need to have the quality of thoughts;the failure of quality is certainly allows one to carry the cross to Calvary! Tayagis write up came to the right people at the very wrong time.In Malaysian context, literature is for their convenient.It has to favor them,it shouldnt hurt them.Tomorrow is Thaipusam in Malaysia,one could see the wonder works in Batu Caves!our culture will go for a price!the young bloods will be in trance with latest cinema songs! Arogara!

Leave a Reply to Raj Sathya Cancel reply