கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன்.

இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய விஷயம். அடுத்து இதுவொரு பலான – ஆபாசம் நிறைந்த கதையோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலாத ஒன்றுதான்.

என் 20-23 வயது வரை கிள்ளான் பட்டணத்தின் மத்தியில் குளிரூட்டி உணவகத்தில் வேலைசெய்யும்போது ‘கண்டதையும் படிக்க வேண்டும்’ என்று முற்பட்டதினால் எதிர்ப்புற பெட்டிக்கடையில் ‘மஞ்சள்’ புத்தகக் கதைகளை வாங்கிப் படித்தேன். ஆங்கிலம் கலந்த தமிழ் நடையோடு இருக்கும் இச்சிறுகதையானது ஏறக்குறைய அந்தப் புத்தகங்களின் சாயலைக் கொண்டிருக்கின்றது.

கவனிக்க: சாயல் மட்டும் தான்.

மிகவும் வெளிப்படையானத் தன்மை, மிகச் சாதாரணமான சொல்லாடல், உத்திகளுக்கும் வாக்கிய இறுக்கங்களுக்கும் மெனக்கெடல் இல்லாத கதையமைப்பு ஆகியவை இக்கதையானது ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற முத்திரையை பெற்றுவிட்டது.

சரி,போகட்டும்.

மனப்பிறழ்வு அல்லது மனநோய் என்பது பலவகையானது. நமது அன்றாட வாழ்க்கையில் லூசு என்று அரை லூசு என்றும் முழு லூசு என்றும் ஒரு நட்டு கழன்றுவிட்டது என்றும் ஒருவருக்கொருவர் சொல்வதைப் பார்க்கின்றோம். பில்லி சூனியம்,செய்வினை, ஏவுதல் என்பது மந்திர தந்திரங்களிலும் நடு ஜாம சுடுகாடு பூசையிலும் கல்லறைகளின் மீதும் மண்டையோடு-நரபலி –செத்த ஆவிகளோடு செய்யபடுவதின் மூலம் உண்டாகும் மனப்பிறழ்வு ஒரு வகை
*தஞ்சோங் ரம்புத்தான் மனநல காப்பகத்தில் இவ்வகையான மன நோயாளிகளே 1987 வரை அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதன் பிறகு மனநல பாதிப்பின் தடம் மாறியது. கணக்கு வழக்கில்லாமல் விகிதாச்சாரம் எகிறியது.

குடும்பத்தால் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் மனநல சிகிச்சைப் பெற்றுக்கொண்டவர்கள் வெகு சிலரே.பெரும்பான்மையோர் வீட்டில் உள்ளோரை ஏமாற்றி அல்லது ஒருவித நாடகமாடி வீட்டை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்கு மாற்றலாகி {குறிப்பாக தலைநகருக்கு}வந்து தங்களின் மனப்பாதிப்பினால் நிலையான ஒரு வேலையில் இருக்க முடியாமலும் கீழ்ப்படிந்திருக்க இயலாமையினாலும் வீடற்றவர்களாக நாதியற்றவர்களாக கடைவீதி ஐந்தடிகளிலும் ‘மேபெங்க்’ படிக்கட்டுகளிலும் டத்தாரன் மெர்டெக்கா சதுக்கத்திலும் இரவு நேரத்தை கழிக்கும் இவர்களில் சிலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாவதால் வாழ்வு சிதிலமடைந்திருக்கின்றது.

ஒரு காரியத்தை குறித்தும் தீவிரமாய் ஈடுப்படுகிறார்கள். இதனால் பல முக்கியக் காரியங்களை கவனிக்க முடிவதில்லை. ஈர்ப்பில் வந்த இலயிப்பும் திளைப்பும் அதிகமாகி மாற்றம் ஏற்படுகிறது. மனத்தடுமாற்றம் தீவிரமாகி ஒரு கட்டத்தில் மனப்பிறழ்வை உண்டாக்கி விடுகின்றது.
இந்த மனப்பிறழ்வை தாங்கிக்கொள்ள முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றார்கள். சிலர் தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள். ஒரு லாபத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ அவமானத்திற்குள்ளாவோம் என்ற பயத்தினாலோ அடிஉதை கிடைக்க நேரிடும் என்பதாலோ மவுனிகளாகிவிடுவோரும் உண்டு.சொந்த வீட்டில் உள்ளோரே சமயத்தின் பேரில் ஒருவரை நிர்ப்பந்தித்து செய்யச் சொன்ன காரியங்கள் நிமித்தம் மனப்பிறழ்வுக்குள்ளான கதை எனக்குத் தெரியும்.அவர் ஒரு பெண்.

தயாஜியின் கதையில் வரும் கதாநாயகனின் மனப்பிறழ்வு யாரும் அறியாதது.இது ஒரு விதம்.இந்த விதம் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இனமத வேறுப்பாடின்றி எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது. பத்திரிகை செய்திகளே இதற்கு ஆதாரம்.ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். ‘என் வீட்டில் இப்படி கிடையாது’ என்று அடித்துப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ‘உவே?’ என்று வாந்தியெடுத்த நபரின் வீட்டிலும் அவருக்குத் தெரியாமல் இது நடக்கலாம்.நாம் நமது பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியுமா என்ன? மகாத்மா காந்தியே தன் பிள்ளை விஷயத்தில் இடறியிருக்க நாம் எம்மாத்திரம்?
எல்லா மத வேதங்களிலும் இந்த இடறல்கள் உண்டு .ஆழமான விவரிப்பு இல்லையெனும் ஒரு வரி அல்லது ஒரு வாக்கியம் போதுமே,யூகித்தறிய.

இணையத்தளம் வழி ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஆபாச அவலங்களுக்குள்ளாகி சிக்கி வெளிவரத் தெரியாமல் தடுமாறி தடம் மாறிபோய் தங்களத் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம்/கடவுள் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது.
ஒரு வெளிப்படையான,அப்பட்டமான கதை இது என்ற போதிலும் கதாநாயகனின் மனப்பிறழ்வுக்கான முதன்மை காரணமாக பாலியல் சினிமா திகழ்கிறது.சிறுவயது முதலே இதிலேயே நாட்டம் கொண்டி இலயித்து திளைக்கிறான்.அடிக்கடி கழிவறைக்குப் போகிறான். கழிவறையே கதியென ஆகிறான். மனதளவில் கழிவறை இவனை சிறைப்படுத்தி விடுகிறது. இதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.கழிவறையின் அசுத்தங்கள், துர்நாற்றம் இவன் மனதிற்குள் புகுந்து மனப்பிரம்மையின் முரண்பட்ட வெளிப்பாடுகளை இவனுக்கு காட்டுகின்றன. விடுபட முடியாத கருந்துளை இருளுக்குள் அகப்பட்டவனின் இயலாமை அடையாளமாக தன்னை மீறி சிறுநீர் கழித்து நொந்துக்கொள்கிறான். மனநோயாளிகள் இடம் பொருள் ஏவல் என்று எதனையும் பார்க்கமால் நடந்துக்கொண்டிருக்கும் போதே சிறுநீரை கழித்துவிடுவார்கள்.

தன்னை விடுவிப்பதற்கு எட்டுபேரை அடையாளங்கண்டு அழைக்கின்றான். கதை முழுக்க தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ஒரு மனநோயாளியின் வாக்குமூலங்கள் ஆகும். முதலில் அழைத்த நபர் அம்மா. அம்மாவிடம் தனது தப்பிதங்களுக்காக மனதார மன்னிப்பு கேட்கிறான்.பிறகு வரிசையாய் நண்பர்கள், ஆசிரியர், நண்பனின் தங்கை, நண்பனின் காதலி என்று போய் காளியிடம் வந்து நிற்கிறது.

நான் எதிர்ப்பார்க்காதது. மனம் திக்கென்றது.

தமிழ் சினிமாவையும் மலேசிய சிறுகதையும் உள்வாங்கிய மனம் இப்போதெல்லாம் கதையோட்டத்தையும் முடிவையும் சுலபமாக யூகிக்க முடிந்ததினால் காளி வந்தவுடன் திக்பிரமை உண்டானது.வேறு தெய்வங்கள் என்றால் பரவாயில்லை. ஏன் காளி? யோசித்தது மனம். எல்லா தெய்வங்களும் கைவிட்ட பிறகு இறுதியாய் போய் நிற்பது காளியிடம். காளிக்கு ‘மாயா’ என்றொரு பெயரும் உண்டு. எல்லா மாய கிரியைகளையும் நிர்மூலமாக்கும் வல்லமை படைத்தவள். மனப்பிறழ்வு என்பது ஒரு மாயை உலகம்.

வீட்டிற்கு அருகில் இருந்த ஒரே கோயில் காளி கோயில். விபரம் தெரிந்த நாற்முதற்கொண்டு அத்தெய்வத்தை வணங்கிய பக்தன். வளர்ந்து மீசை முளைத்த காலத்தில் காளியை காதலியாக பார்த்தவன். பக்தி கசிந்துருகி காதலாகியிருக்கிறது. எல்லாம் சரிதான். இடையில் வந்த பாலியல் சினிமா பழக்கம் பக்தனுக்கு காமக்கண்களைக் கொடுத்துவிட்டதால் காமவிகாரமாகிவிட்டது. காளி கொல்லுவாள் என்ற பய உணர்ச்சியே இல்லாத பக்தன். அல்லது, பாலியல் சினிமாவில் தீவிரமாய் இருக்கும் போது குற்றவுணர்ச்சியின் கரணமாக கோயிலுக்குச் செல்லுவதை நிறுத்திவிட்டிருக்கிறான். மனப்பிறழ்விலிருந்து காப்பாற்றப்பட தன்னுடைய தெய்வமான காளியை நினைந்து வேண்டும்போது காளியை மயான சூலியாகப் பார்க்காமல் தனக்கே முழு உரிமையும் உண்டென்ற உறுதிமனப்பான்மையில் “காளி !என் காதலி!…இங்கே வாடி” என்கின்ற அழைப்பு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பெண் பக்தைகளான ஆண்டாளுக்கும் ராதைக்கும் ஓர் ஆண் தெய்வம் காதலனாக எப்படி அமைந்ததோ அப்படியே இவனுக்கும் பெண் தெய்வமான காளி காதலியாகிறாள்.

“உன்னை நான் உனக்கே வேறுமாதிரி காட்டுகிறேன்” என்ற இவனின் துடிப்பு எனக்கு பிரமிப்பை கொடுத்தது. ஆங்காரி,பயங்கரப் பார்வை ,நாக்கை வெளியே நீட்டி சூலத்தை ஆத்திரத்தோடு ஏந்தியிருப்பவள், மண்டையோடுகளை கழுத்தில் அணிந்திருப்பவள் காளி என்ற உருவகத்தை மாற்றி அன்பே வடிவமாய் அன்பைப் பொழியும் காதலியாய் மாற்றும் முயற்சியில் மனம் ஏங்கித் தவிக்கிறது. இவன் தன்னுடைய பலவீனங்களை, மனத்தடுமாற்றத்தை, மனப்பிறழ்வை ஏந்திக்கொண்டு காளியிடம் சரண் அடைகிறான். என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. மனம் நடுங்குகிறது. அதன் விளைவாக சிறுநீர் வெளியேறுகிறது.

பிரமாதம்!!

இறுதியில் யார் யாரை பழிவாங்கியது என்ற கேள்வி தனியாய் கேட்டு நிற்கிறது. காளி அருகில் வருகிறாள் என்றதோடு கதை முடிகிறது. காளி பழிவாங்குவதற்கு வருகிறாளா அல்லது காதலியாக வருகிறாளா என்பது தெரியாமல் போகிறது. சிறுகதை இலக்கணத்திற்கேற்ப முடிக்கப்படுகிறது கதை.

இறுதியாக, இப்படி அப்பட்டமான – வெளிப்படையான – எதிர்மறையான – முகஞ்சுளிக்க வைக்கும் சிறுகதை நமக்குத் தேவைதானா என்பது தான்.சமூகத்தில் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இதைவிட மிக மிக மோசமான சம்பவங்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. பாலியல் ரீதியான வக்கிரம் ,வன்கொடுமைகள் நம் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் நடக்கின்றன. பத்திரிகை செய்திகளோடு நாம் நம்மை கோடு தாண்டாதவர்களாக தமிழ் இலக்கியத்தில் இருத்திக் கொள்ளப் போகிறோமா என்ற கேள்வியை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

தயாஜி செய்த மூன்று தவறுகள்:

1} புத்தக உரிமத்திற்காக எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியது.
2}ஆர்.டி.எம்- யில் இருந்து கொண்டு இப்படிப்பட்டக் கதையை எழுதியது
3}மலேசியா நாட்டில் இக்கதையை வெளியிட்டது.

2 comments for “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

  1. thina
    January 20, 2014 at 7:47 pm

    MAHATMANIN PADAIPUKAL INAYATILUM VARUVATHU MAKILCI. TODARNTU ELUTAVEENDUM..

  2. ராஜம்
    March 29, 2017 at 1:49 am

    எழுதாற்றல் உள்ளவர்கள் தொடர்ந்து பணியைச் செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்

Leave a Reply to thina Cancel reply