மிக அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது ‘காக்கா முட்டை’ திரைப்படம் எடுத்தப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அழைத்துச்சென்றனர். ஒருவகையில் இந்தப்பயணம் எனக்கு முக்கியமானது. ஒரு கலைப்படைப்பு எதை மக்களுக்குக் காட்ட விளைகிறது என்பதும் அதன் தேர்வு எதுவாக இருக்கிறது என்பதும் இந்தப்பயணம் சன்னஞ்சன்னமாக உணர்த்தியது. கலை என்ற பெயரில் அதன் உன்னதங்களை வாய் பிளந்து பார்க்கும் ஒருதரப்பும் உண்மைக்கு மிக அருகில் வாழ்வை அதன் உக்கிரத்தில் நின்று கொண்டு தினம் தினம் போராட்டம் நடத்தும் எளிய மக்கள் மற்றுமொரு தரப்பும் என கலையும் வாழ்வும் பிளவுப்பட்டிருப்பதை இந்தப் பயணம் உணர்த்தியது.
‘வினவு’ தளத்தில் இத்திரைப்படம் உருவான பகுதியில் எடுக்கப்பட்ட மக்களின் நேர்காணலும் ஒரு கலை எவ்வாறு ஏற்கனவே உருவாகியுள்ள நம்பிக்கையை வலுவாக்கி அதன் மூலம் விருதுபெற முயல்கிறது என்பதையும் மிக விரிவாகவே காட்டியது. (http://www.vinavu.com/2015/06/26/kakka-muttai-a-reality-check/)
காக்கா முட்டையின் கலை நேர்த்தி
எட்டு வருடங்களுக்கு முன் சுரேஷ்குமார இந்திரஜித் மலேசியாவுக்கு வந்திருந்தபோது ஒரு சந்திப்பில் பேசினார். “நகைச்சுவை கதை எழுத வாழ்வை நுட்பமாக அவதானித்து அதை அப்படியே எழுதினால் போதுமானது. நம்மைச் சுற்றி உள்ள அதிகார மையங்களின் செயல்பாடுகள் அத்தனை நகைச்சுவைக்குறியது. அதை சீரியஸாகப் பதிவு செய்தாலே மிகச்சிறந்த புனைவொன்று உருவாகிவிடும்.” எட்டு வருடங்களுக்கு முன்பு என்றாலும் முதன்முறையாக இந்தக் கருத்தைக் கேட்டதால் மனதில் பதிந்துவிட்டது. இலக்கியம் மட்டுமல்ல நல்லத்திரைப்படங்களும் இவ்வாறுதான் உருவாகின்றன. தமிழில் அவ்வாறான திரைப்படங்கள் உருவாவது அரிது.
‘காக்கா முட்டை’ கலை அமைதியுடன் உருவாகியுள்ள திரைப்படம். மிக நேர்த்தியாக மையத்தைவிட்டு பிசகாது நகரும் திரைக்கதை. தெளிவான அரசியல் அறிவு இல்லாமல் இத்தனை அழகியலோடு ஒரு திரைப்படம் உருவாவது சாத்தியமில்லை.
ரமேஷ், விக்னேஷ் அண்ணன் தம்பிகள். அம்மா அலுமினிய தொழிற்சாலையில் வேலை செய்து தன் பிள்ளைகளுடன் சொற்ப வருமானத்தில் வசிக்கின்றாள். உடன் அவளது நோயுற்ற மாமியார். கணவன் ஜெயிலில் விடுதலைக்காகக் காத்துக்கிடக்கிறான். தன் இரு மகன்களும் ரயில் தடங்களில் விழுந்து கிடக்கும் நிலக்கரிகளைப் பொறுக்கி எடுத்து திருட்டுத்தனமாக விற்று தரும் சொற்ப வருமானத்தில் சேரியில் வாழ்க்கையை அக்குடும்பத்தினால் ஓரளவுக்கு ஓட்ட முடிகிறது.
ஒரு மரத்தில் இருக்கும் காகத்தின் கூட்டில் இருக்கும் முட்டைகளைத் திருடிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் அண்ணன் தம்பிகள். அதனால் அவர்கள் தங்களைக் ‘காக்கா முட்டை’ என்றும் அழைத்துக்கொள்கின்றனர். சின்னவன் சின்ன காக்கா முட்டை. பெரியவன் பெரிய காக்கா முட்டை. கொஞ்ச நாளில் மரம் இருந்த நிலம் ஒரு பணக்காரரால் வாங்கப்பட்டு அங்கு பிட்சா நிறுவனம் அமைக்கப்படுகின்றது. மரம் வெட்டப்படுகிறது. அவ்விடம் அப்போதிருந்து சிறுவர்களுக்கு அந்நியமாகிறது. அதுவரை அவர்களுடையதாய் இருந்த மண் அவர்களை விட்டு விலகி வெகுதொலைவில் செல்கிறது.
அந்நியமாகிவிட்ட அந்நிலத்தில் உருவான பிட்சாவின் திறப்புவிழாவில் நடிகர் சிம்பு பிட்சா சாப்பிடுவதைப் பார்க்கின்றனர். அந்த நிமிடத்திலிருந்து அவர்களுக்கு பிட்சா சாப்பிடும் ஆர்வம் ஒட்டிக்கொள்கிறது. அதன் சுவையை அறிய ஆர்வம் கொள்கின்றனர். முன்னூறு ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு பிட்சாவை உண்ண அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைப் படத்தின் முதல் பகுதியைச் சொல்கிறதென்றால் அந்தச் சிறுவர்களின் மேல் திணிக்கப்படும் வன்முறை எவ்விதத்தில் அரசியலாகவும் வணிகமாகவும் மாற்றப்படுகிறது என இரண்டாம் பகுதி பேசுகிறது.
முதலாளியத்துவத்தின் வளர்ச்சி மனிதர்களிடையே மிகப்பெறும் தாக்கத்தையும் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு அந்நியத்தன்மையினை விட்டுச்சென்றுள்ளது. ‘பாரிஸ் கையெழுத்து’ (1844) என்றழைக்கப்படும் கார்ல் மார்க்ஸின் பொருளாதார மற்றும் தத்துவ கையெழுத்துப்பிரதியில், மார்க்ஸ் முதலாளியத்துவ சமூகத்தில் பரவி கிடக்கும் நான்கு வகையான அந்நியமாதலின் போக்குகளை அடையாளம் காண்கிறார். இப்படம் மனிதன் சக மனிதனிடமிருந்து அந்நியப்படுவதையும் தனது இயல்பிலிருந்து தானே அந்நியப்படுவதையும் மிகத்துல்லியமாக விவரிக்கிறது.
காக்கா முட்டையைக் காகத்தின் அனுமதியில்லாமலேயே திருடித்தின்ற சிறுவர்களுக்கு பிட்சாவினுள் நுழைவதற்கே தடைவிதிக்கப்படுகிறது. பிட்சாவைச் சாப்பிட சேமிப்பறையில் இருக்கும் நிலக்கரியைத் திருடி விற்கிறார்கள். போதுமான பணம் சேர்ந்த பின்னரும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படவே அதற்குக் காரணம் அவர்கள் உடைதான் என முடிவு செய்கிறார்கள். மீண்டும் திருட்டு தொடர்கிறது. புதிய உடையுடன் செல்லும் சிறுவர்களில் பெரிய காக்கா முட்டை நிர்வாகியால் அறையப்படுகிறான்.
பணம் இருந்தும் புதிய உடை இருந்தும் உள்ளே நுழைய மறுக்கப்படும் சிறுவர்களின் நிலை ஒரு கைத்தொலைப்பேசியில் எடுக்கப்படும் பதிவின் மூலம் பரவுகிறது. அதே சேரியில் வசிக்கும் லும்பன்கள், அரசியல்வாதிகள், ஊடகம் என அனைத்தும் எவ்வாறு அந்தச் சிறுவர்களின் நிலையை வணிகமாக்கப் பாடுபடுகிறது என நுட்பமாக விவரித்துள்ளார் இயக்குனர்.
படத்தின் இறுதியில் சிறுவர்களுக்கு உபசாரம் செய்வதன் மூலம் நிலையைக் கட்டுப்படுத்தலாம் என முடிவெடுக்கும் பிட்சா முதலாளி இரு சிறுவர்களையும் மரியாதையுடன் அழைத்து இலவசமாகப் பிட்சா வழங்குகிறார். அதை ஆவலுடன் உண்டுப்பார்க்கும் சிறுவர்கள் அது ருசி இல்லாமல் இருப்பதையும் எப்படி அவ்வளவையும் சாப்பிட்டு முடிப்பது என்றும் தங்களுக்குள் பேசிக்கொள்வதாகப் படம் முடிகிறது.
நுகர்பொருள் கலாச்சாரத்தை முன்வைக்கும் இந்த முடிவுதான் இப்படம் முன்வைக்கும் மிக முக்கியமான விமர்சனம். நாம் ஒன்றை விரும்புவதாகச் சொல்வது எதன் பொருட்டு என ஆழமாகக் கேட்க வேண்டியுள்ளது. நாம் விரும்புவதாகச் சொல்வதும் நாம் ரசிப்பதாக நம்புவதும் நமது சுய ரசனை மட்டும்தானா? வேறு யாரேனும் அந்த ரசனையை உருவாக்குகிறார்களா? சேரியில் வாழும் இந்தச் சிறுவர்களுக்கு பிட்சாவின் மீது ஆர்வம் வருவது சிம்பு என்ற நடிகர் கொடுக்கும் விளம்பரத்தினால். விளம்பரம் என்பது மனிதனின் ரசனையை மாற்றுகிறது. தனக்கு உவப்பில்லாத தனது ரசனைக்கு ஒத்துவராத ஒன்றையும் பணம் செலவளித்து வாங்கத் தூண்டுகிறது. உண்மையில் நாம் இன்று ரசிப்பதாக நம்புவதெல்லாம் விளம்பரங்கள் நம்மீது திணித்த பொய்களின் எச்சங்கள்தான் என இரு காக்கா முட்டைகள் மூலம் முகத்தில் அறைவதுபோல சொல்கிறார் இயக்குனர்.
அப்படிச் சொன்னால்தான் விருது கிடைக்கும் என்பதில் அவருக்குக் குழப்பமே இல்லை. அதாவது விருது பெருவதற்கென்றே சில திட்டவட்டமான உத்திகள் உள்ளன. அந்தக் கட்டமைப்பை முறையாக உபயோகித்து வெற்றிப்பெற்றுள்ளார். கலை பல்வேறு சமயங்களில் எவ்வாறு உண்மையின் மீது மிக லாவகமாகப் படர்ந்து அதன் காத்திரத்தைக் குறைக்கிறது என்பதற்கு இந்தப் படத்தையே ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
காக்கா முட்டையில் சொல்லப்படாத அரசியல்
இத்திரைப்படம் கேள்விகளற்று உருவாகியுள்ள ஒரு மீடியக்கர் கலை வடிவம். தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாழ்வை எவ்வித கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகத்தை இதன் இயக்குனர் காட்டுகிறார். தாங்கள் பள்ளிக்குப் போகாவிட்டாலும் மகிழ்ச்சியடையும் குழந்தைகளைக் காட்டுவதன் மூலம் பார்வையாளர்களைப் பரவசம் கொள்ளச்செய்கிறார்கள்.
மலக்கூட வசதியற்ற, கொசு தொல்லை கொண்ட, நோய்மை படர்ந்த ஒரு பிரதேசத்தை பெரும் மனதுடன் ஏற்று வாழும் இம்மக்கள் எத்தனை பாக்கியத்திற்குறியவர்கள் என்பதாக இதன் இயக்குனர் கட்டமைக்க முயல்கிறார். அவ்வாறு காட்டுவதன் மூலமே இச்சமூகத்தின் மொத்த அவலத்தையும் இயக்குனர் சமன் செய்துவிடுகிறார். இவர்கள் இங்கு வாழவே விதிக்கப்பட்டவர்கள் எனச்சொல்வதன் மூலம் அவர்களைப் பார்த்து நாம் குற்ற உணர்வு அடைய வேண்டியதில்லை என்பதையும் மாறாக அவர்கள் தங்கள் தகுதிக்கு ஒவ்வாததின்மேல் ஆசைப்படுகிறார்கள் என்றும் பிட்சாவைத் தேடிச்செல்லும் சிறுவர்கள் மூலம் சொல்ல விளைகிறார்.
ஒருவகையில் இதுதான் மீடியக்கர் திரைப்படங்களின் உத்தி. அவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் சிக்கலைக் காட்டுவதாகப் பிரச்சினையைக் கையில் எடுக்கின்றனர். ஆனால் அவர்களால் விருதுகள் வழங்கும் நிறுவனங்களின் தேவைக்கு எற்பவே ஒரு திரைப்படத்தை உருவாக்க முடிகிறது. நடப்புச்சூழலை எவ்வித கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதும் அதை அனுமதிப்பதும் பின்னர் கலையாக்கப்படுகிறது. வாழ்வை தத்ரூபமாய் காட்டுவதாய் சூழலுக்குப் பின்னே உள்ளே எவ்வித நியாயங்களும் கேள்விக்குட்படுத்தப்படாமல் திட்டுத்திட்டான காட்சிகளாகத் தேங்கி இருக்கின்றன.
கலை என்பது வாழ்வை காட்டுவதுதான். ஆனால் அது யாராக இருந்து யாரின் பார்வையிலிருந்து வாழ்வை காட்டுகிறது என்பதே முக்கியமானது. ‘காக்கா முட்டை’ நுகர்பொருள் கலாச்சாரத்தை விமர்சனம் செய்யும் திரைப்படம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு பட்டுத்துணியால் கசிந்து நாற்றமெடுக்கும் நம்வீட்டுக் கழிவறையை மூடிவிட்டு தொலைவில் இருக்கும் நதி மாசாவதற்கு கோஷமிடுவதெல்லாம் சந்தேகத்திற்குறியது.
Navin u argument is logical ..politically correct.V.Arasu
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழர்