“சுயகற்பனையும் சிந்தனையும் வாசிப்பும் மட்டுமே இலக்கியவாதிகளை உருவாக்க முடியும்” – இராம.கண்ணபிரான்

_MG_15471943ல் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் பிறந்த திரு.இராம. கண்ணபிரான் தனது பத்தாவது வயதில் சிஙகப்பூரில் குடியேறியவர். ஆசிரியராக முப்பத்தியேழு ஆண்டுப்பணியோடு எழுதுவதையும் வாசிப்பதையும் தன் வாழ்க்கையின் சாரமாக்கிக்கொண்டவர்.  “இருபத்தைந்து ஆண்டுகள்” (1980), ”பீடம்” (1992) இவரது முக்கியத்தொகுப்புகள். புத்தக மேம்பாட்டு வாரியத்தின் தேசியவிருது, தென்கிழக்காசிய விருது, கலாசார விருது, தமிழவேள் விருது போன்றவற்றைப் பெற்றவர். மாறிவரும் சிங்கப்பூர் இலக்கியச்சூழலுக்கும், சிங்கப்பூர் வாழ்வியல் முறைக்கும், கட்டொழுங்கு மிக்க வாழ்க்கைக்கும், உதாரணமாக இவரைச் சொல்லலாம். நேர்ப்பேச்சில் தெறித்துவிழும் கோபங்களையும் ஆதங்கங்களையும், எழுத்துமன ஒழுங்கால் சமாதானமாக்கிச் செல்வது ஒரு பண்பட்ட மனத்தைக் காட்டுகின்றபோதும், சொல்லவேண்டிய விஷயங்களைச் சொல்லாமல் செல்வதில்லை இவர்.

எம்.கே.குமார்: சிங்கப்பூருக்கு எப்போது, எப்படி வந்தீர்கள்? எங்கு தங்கியிருந்தீர்கள், ஞாபகம் இருக்கிறதா?

இராம.கண்ணபிரான்: நான் என் தந்தை திரு.அ.இராமசாமி அவர்களுடன், 1953ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தமிழகம் நாகப்பட்டினத் துறைமுகத்திலிருந்து, ஜலகோபால் என்ற கப்பலில் பயணம்செய்து, சிங்கப்பூருக்கு வந்தேன். சிங்கையில் லிட்டில் இந்தியா என்ற தேக்கா வட்டாரத்தில் இருந்த என் தந்தையின் ஜவுளிக்கடையில் தங்கி, என் தொடக்கக் கல்வியைத் தொடர்ந்தேன்.

எம் கே குமார்: ஏன் இன்னும் கையாலே எழுதிப் பிரதியெடுக்கிறீர்கள்?  கணினியைப் பயன்படுத்துவதில்லை என்று ஏதும் சபதமா?

இராம கண்ணபிரான்: ஆசிரியர் தொழிலில் இருந்தபோது, நான் கணினியைப் பயன்படுத்தினேன். மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அனைத்தையும் நானே தட்டச்சுசெய்து தயாரித்தேன்.

படைப்பிலக்கிய எழுத்தைமட்டும், என் இளமைப் பருவத்திலிருந்து இன்றைய என் முதிய பருவம்வரை, என் கையாலேயே எழுதிவருகிறேன். ஒவ்வொரு படைப்பையும் நான் முழுமையாக்குவதற்கு, அதை ஒன்பதுமுறை திருத்தித் திருத்தி நான் எழுத வேண்டியிருக்கிறது. இயந்திரக் கணினியைவிட, இயற்கை அளித்திருக்கும் என் கைகளே என் ஆத்மார்த்த எழுத்தை உருவாக்குவதற்கு, கூடுதல் வல்லமையைப் பெற்றுள்ளன என்பது என் நம்பிக்கை.

எம்.கே.குமார்: அரசாங்கம் தமிழ்/தாய்மொழி வளர்ச்சிக்காக நிறைய நிதி உதவி செய்கிறது. இவையெல்லாம் எந்த வகையில் அதற்கு உதவுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூரில் தமிழும் ஓர் அதிகாரத்துவ மொழியாக வாழ்ந்துவருகிறது. அதனால் , தமிழ்மொழிப் பள்ளிகளில் ஒரு தாய்மொழியாக,  அரசாங்க நிதியில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. சிங்கப்பூர்ப் படைப்பிலக்கிய நூல்களைப் பதிப்பிக்கவும், தேசிய, ஆசியான் வட்டார நிலைகளில் தமிழ் எழுத்தாளர்கள் பரிசுகள், விருதுகள் பெறுவதற்கும், அரசாங்கப் பணம் உதவுகின்றது.

எம்.கே குமார்: ஏறக்குறைய 32 அமைப்புகள் உள்ள சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில், நீங்கள் எந்த அமைப்பு சார்ந்து இயங்கினீர்கள் அல்லது இப்போது இயங்குகிறீர்கள்? அமைப்புச் சார்ந்து / சாராது இயங்குவதின் நன்மை, தீமை என்ன?

இராம.கண்ணபிரான்: என் ஆசிரியர் தொழிலின் அடிப்படையில், சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்திலும், சிங்கை ஆசிரியர் கூட்டுறவுச் சங்கத்திலும், நான் உறுப்பினராக இருந்தேன். இலக்கியச் சூழலில், நான் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தொடக்ககால உறுப்பினராக இருந்து அதன் முதல் செயலவையிலும் பணியாற்றி இருக்கிறேன். தொழில்சார்ந்த அமைப்புகளில் நான் உறுப்பியம் பெற்றிருந்தபோது, என் வேலைக்கும், என் பொருளாதார வசதிக்கும், அவை பாதுகாப்பாக இருந்தன. இலக்கிய அமைப்பில் நான் உறுப்பியம் பெற்றிருப்பது, இலக்கியவாதியான எனக்குத் தார்மீகப் பெருமிதத்தைத்  தந்துகொண்டிருக்கிறது.

எம்.கே..குமார்: சிங்கப்பூர்த் தமிழ் மின்மரபுடமை அமைப்பு உருவாக்கிய மின்னுடமைப் பணிக்கு, மூத்த எழுத்தாளராகிய நீங்கள் உங்கள் படைப்புகளை அளிக்காததின் பின்னணி என்ன?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூர்த் தமிழ் மின்மரபுடமை அமைப்பு உருவாக்கிய மின்னுடமைப் பணிக்கு, என்னுடைய ஆறு கதை நூல்களையும் இதுவரை நான் அளிக்காமைக்கு, இலக்கியம் சார்ந்த என் நூல்தொகுப்புகள் இன்னும் ஒரு முழுமை நிலையை அடையவில்லை என்பதுதான், முக்கியக் காரணமாகும். என் அ – புனைவு இலக்கியத்தில் அடங்கியுள்ள நூறு கட்டுரைகளைச் சில தொகுதிகளாகத் தொகுத்து, அவற்றை இப்போது செப்பம் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வேலை முடிய, காலம் பிடிக்கும். புனைவு அல்லாத நூலாக்கம் பூரணத்தைத் தொடும்போது மின்னுடமைத் திட்டம்பற்றி நான் கவனம் கொள்வேன்.

எம் கே குமார்: சிங்கப்பூர்ப் படைப்புகள் என்றதும், கருத்தியல் ரீதியாக உங்களது மனதில் தோன்றுவது என்ன? சிங்கப்பூரின் அடையாளம் குறித்த படைப்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூர்ப் படைப்புகள் என்றதும், நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவற்றின் பரிணாம வளர்ச்சியும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை சிங்கப்பூர் மக்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் பிரதிநிதித்து உள்ளன என்பதும், அவை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட படைப்பாளர்களால் எங்ஙனம் பற்பல உத்திகளைக்கொண்டு எழுதப்பட்டுள்ளன என்பதும், என் மனத்தில் தோன்றி அலையாடுகின்றன.

1965ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திரச் சிங்கப்பூரில், அதன் அடையாளம் என்பது, பல்லின, பலமொழி, பலசமய மக்களை உடைய சமுதாயம், தன்னுடைய ஒரே தேசிய இலக்கை நோக்கிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அடையாளம்தான்.  நாட்டு நிர்மாணம், பொருளியல் உற்பத்தியில் உழைக்கும் எல்லாத்தரப்பு மக்கள், அவர்கள் அடையும் கல்வி மேம்பாடு, வேலைத்திறன்கள் சிங்கப்பூரியப் பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டு, அவற்றைத் தீர்க்கும் விதங்கள் முதலியன சிங்கப்பூரின் நான்குமொழி இலக்கியங்களில், புனைகதைகளாக , நவீனக் கவிதைகளாக, நாடக நிகழ்கலைகளாக, நாட்டின் ஐம்பது ஆண்டு அடையாளமாய் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் , என் வாசிப்புவழி நான் பெற்றிருக்கும் கவனிப்பாகும்.

எம்.கே குமார்: உலக இலக்கியப்போக்கை உன்னிப்பாகக் கவனித்துவரும் தாங்கள் சிங்கப்பூரில் அந்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

இராம.கண்ணபிரான்: உலகத் தமிழ் இலக்கியத்தை பெருநிலத்துத் தமிழ்நாட்டு இலக்கியம், தாயகம் கடந்த மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள், ஈழத் தமிழ் இலக்கியம், ஈழப் புலம்பெயர் இலக்கியங்கள் எனத் தொகுத்துச் சொல்லலாம்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை, சுதந்திரத்திற்கு முற்பட்ட இலக்கியம், சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலக்கியம் என்று வகைப்படுத்த முடியும். தொண்ணூறுகளுக்குப் பின்னர், தமிழ் மாநிலத்திலிருந்து  சிங்கை வந்து, தற்காலிகமாக வசிக்கும் அல்லது நிரந்தரமாய் வாழும் அண்மைய இலக்கியவாதிகள் படைக்கின்ற ஆக்கங்கள், சிங்கப்பூர் இலக்கியத்தை இன்னொரு நிலைக்கு இட்டுச்செல்வதாய் அமைந்துள்ளன எனலாம்.

உலகத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு பெரும் தேரை, அந்தந்தத் தேசத்துத் தமிழ் இலக்கியங்கள், அந்தந்தப் பிரத்தியேகத் திணைகளைச் சக்கரங்களாகக் கொண்டு, முன் நகர்த்திச் செல்கின்றன, இந்தத் தேரோட்ட இயக்கப் போக்கிற்கு சிங்கைத் தமிழ் இலக்கியமும் தன் ஆற்றலைத் தொடர்ந்து நல்கி வருகிறது.

எம்.கே குமார்: இதுவரையான சிங்கப்பூர் படைப்புகளில் உலகத்தமிழ் இலக்கியத்தின் பங்கிற்கு, சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகள் ஒருசிலவற்றை முன்வைக்க முடியுமா?

இராம.கண்ணபிரான்: உலகத்தமிழ் இலக்கியத்தின் பங்கிற்கு, சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகளை, இந்திய சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கும் இரண்டு தொகை நூல்களிலும், ஆசியான் வட்டாரத்துக் கதை, கவிதை, நாடக நூல்களிலும், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக் கழகம் பதிப்பித்திருக்கும் ஒரு தொகுப்பு நூலிலும் நாம் இனம் காணமுடியும்.

எம்.கே குமார்: இன்னும் எவையெல்லாம் எழுதப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?

இராம.கண்ணபிரான்: இன்னும் எவையெல்லாம் எழுதப்படல் வேண்டும் என்று, இலக்கியப் படைப்பாளிகளுக்கு, நான் கோடிட்டுச் சொல்வது பீடு அன்று. அவரவர் அனுபவத்தை அவரவர் பார்வையை, அவரவர் சிந்தனையை, சிங்கப்பூர்ச் சூழலில், சிங்கப்பூரின் காலகட்டத்திற்கு ஏற்ப எழுதுவதே, இந்நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு உகந்தது என்பேன்.

எம்.கே குமார்: சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் என்றதும், உங்கள் நினைவுக்கு வருபவர்கள் யாவர்? சிங்கப்பூர் இளைய படைப்பாளிகளில் இன்னும் சிறப்பாகப் படைப்பார்கள் என்று உங்களது நம்பிக்கை நட்சத்திரம் யாரும் இருக்கிறார்களா?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் என்று, அவர்களை நான் காலரீதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

தொடக்கக்காலத்தில், மகதூம் சாயபு, நடேச முதலியார், முப்பதுகளில் ந.பழனிவேலு, வே.சின்னையாப்பிள்ளை, ஐம்பதுகளில் பி கிருஷ்ணன், சே.வெ.சண்முகம், அறுபது-எழுபதுகளில் இளங்கோவன், நா,கோவிந்தசாமி, கமலாதேவி அரவிந்தன், மா. இளங்கண்ணன், செ.ப.பன்னீர்செல்வம், பொன் சுந்தரராசு, இரா.துரைமாணிக்கம், ஜே.எம் சாலி, எண்பதுகளில் லதா, சூர்ய ரத்னா, இந்திரஜித், தொண்ணூறுகளுக்குப் பிறகு, ஜெயந்தி சங்கர், மாதங்கி, சித்ரா ரமேஷ், பாலு மணிமாறன், எம்.கே குமார், ஷாநவாஸ், இராம வயிரவன், நெப்போலியன், மா.அன்பழகன், பிச்சினிக்காடு இளங்கோ, பாண்டித்துரை போன்ற பலரைச் சொல்லலாம்.

இளைய படைப்பாளிகளில், சுபாஷினி, அழகுநிலா, பிரேமா மகாலிங்கம், சித்துராஜ் பொன்ராஜ் போன்றவர்கள், வருங்காலத்தில் எழுத்துத்துறையில் சிறந்து விளங்குவர் என்று எதிர்பார்க்கிறேன்.

எம்.கே குமார்: சிங்கப்பூரின் தற்போதைய படைப்பாளிகள் பலரும் விருதுகளுக்குப் பின், ஆங்கிலத்தில் படைப்பது அவசியம் என்ற நோக்கில் நகர்வது போலத் தெரிவது உண்மையா?

இராம.கண்ணபிரான் : தற்போதைய சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் ஆங்கிலத்தில் தம் படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் முனைப்புக் காட்டுவது உண்மையே. ஆங்கிலம், மலாய், மண்டரீன், தமிழ் ஆகிய நான்கு மொழி இலக்கியங்களை உடையதுதானே, நம் சிங்கப்பூர்த் தேசிய இலக்கியம். ஆங்கிலம்வழி நம் தமிழ்ப் படைப்புகள், சீன, மலாய்மொழி வாசகர்களுக்குச் செல்ல, இந்த ஆங்கில மொழி மாற்றம் அவசியமே. பத்து நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் வட்டார நாடுகளுக்கும், நம் தமிழ் இலக்கியம் ஆங்கிலம் மூலமாகக் கடந்துசெல்வது, நல்ல அறிகுறியாகும்.

எம்.கே.குமார் : ஒரு இலக்கியவாதியாய். சிங்கப்பூர் என்றதும், தங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இரண்டு விஷயங்களைச் சொல்லமுடியுமா?

இராம.கண்ணபிரான்: நம் தமிழ்மொழி இலக்கியம், சிங்கப்பூர்த் தேசிய இலக்கியத்தில் ஓர் அங்கமாகத் திகழ்ந்து வருவது, எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பேன். நம் தமிழ்ப் படைப்புகள், இன்னும் பரவலாகச் சிங்கைத் தமிழ் மாணவ மாணவிகளுக்கு, இலக்கியப் பாடப்பொருளாய்ப் போய்ச் சேரவில்லையே என்ற ஓர் ஆதங்கம் என் மனத்தை வருத்தும் இன்னொரு விஷயம்.

எம்.கே.குமார்: மறைந்த பிரதமர் திரு லீ குவான் இயூவை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

இராம.கண்ணபிரான்: திரு லீ குவான் இயூவை, நான் இருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். பிராஸ் பசா சாலையில் இருந்த இராபிள்ஸ் கல்வி நிலையத்தில், உயர்நிலை மாணவனாக நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில், 1958ல் அப்பள்ளியின் வரலாற்றுக் கழகத்தின் அழைப்பின்பேரில், அவர் சொற்பொழிவு ஆற்ற அங்கு வந்தபோது, அவரை நான் முதன்முதலில் சந்தித்தேன்.

பிரதமர் லீ குவான் இயூவின் 80வது பிறந்த நாள் நிகழ்ச்சி ஷாங் ரீலா ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றபோது, சிங்கப்பூர்த் தேசிய கலைமன்றத்தின் ஓர் இலக்கிய விருந்தினனாக, அங்குச் சென்று, அவருடன் கைகுலுக்கிச் சில வார்த்தைகள் பேசினேன். ’ரைட்டர்’ என்றேன். ’ரைட்டர்?’ என்று மேலும் கீழும் இழுத்தார். எனக்கு உதறிவிட்டது.

எம்.கே.குமார்: ஒரு மூத்தோராய், சிங்கப்பூரின் தற்போதைய சமூக வாழ்வுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இராம கண்ணபிரான்: ஒரு மூத்த குடிமகனாக, சிங்கப்பூரின் தற்போதை சமூக வாழ்வுகுறித்து, நான் நிறைவாகவே எண்ணிப் பூரிக்கிறேன்.

சிங்கப்பூருக்கு நான் வந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில், இத்தீவு மூன்றாம் உலக நாடுகளுள் ஒன்றாகவே இருந்தது, நாடு வளர வளர, என் போன்ற முன்னோடித் தலைமுறையினரும், பொருளாதாரத்தில் வளரத்தொடங்கினோம், இப்போது, சிங்கப்பூர் முதலாம் உலக நாடுகளுள் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.  முதிய தலைமுறையினருக்குத் தரப்படும் எல்லா அரசாங்கச் சலுகைகளையும் நானும் பெற்று, பொன்விழா அறுவடைக் காலத்தின் மேன்மைகளைச் சுகித்துவருகிறேன்.  என் மூன்று பேரப்பிள்ளைகளும், சிங்கையின் சுபிட்சத்தில் சிறந்த கல்வியை, சத்தான உணவை, ஆரோக்கியப் பராமரிப்பை, உற்ற பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு இம்மண்ணில் வேரூன்றி வாழ்கிறார்கள்.

எம்.கே.குமார்: சிங்கப்பூருக்கு வரும் அனைத்து முக்கிய எழுத்தாளர்களையும் சந்தித்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரைப்பற்றியும் ஓர் அபிப்பிராயம் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு அதிர்ச்சி அளித்த அல்லது விதிவிலக்கான சிலரின் அம்சங்களைச் சொல்லமுடியுமா?

இராம கண்ணபிரான்: சிங்கப்பூர் எழுத்தாளர் விழாக்களுக்கு வந்துகொண்டிருக்கும் பிரபல எழுத்தாளர்கள் பலரை, எண்பதுகளிருந்து நான் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவர்களுள் பலர், நம் எழுத்துக்கு உரிய அபிமானத்தைக் காட்டுவதில்லை; தமிழகம் சென்றும், நமக்கு உரிய இலக்கிய மரியாதையைத் தருவதில்லை. இது மிகவும் வேதனையான அம்சம். ஆனால், அவர்களுள்ளும் திரு சா.கந்தசாமி, மாலன் போன்ற  கொண்ட சில விதிவிலக்குகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும், சிங்கப்பூர்ப் படைப்புகளைப் போற்றி, இந்தியச் சாகித்திய அகாதெமி மூலம், இரு தொகைநூல்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எம்.கே குமார்: இளையர்கள், எழுத்துகளைத் தவிர்த்து, காட்சி ஊடகம் நோக்கிச் செல்வதைக் காணமுடிகிறது. உங்கள் கருத்து என்ன?

இராம கண்ணபிரான்: இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கையில், அதிவேகம் கொண்ட தொழில்நுட்ப வளர்ச்சி, அச்சு ஊடகத்தைப் பின்னுக்குத் தள்ளி, காட்சி ஊடகத்தை முன்னெடுத்துச் செல்கிறது.  எனவேதான், இளைஞர்கள் ஆடல், பாடல், பேச்சாடல், நாடகம் என மின்னிலக்கத் திரைகளில் இலயித்துக் கிடக்கிறார்கள்.

சிந்திப்பைக் கோரும் இரசனை நுகர்வுக்கும், நீடித்த ஆவணப்படுத்தலுக்கும், காட்சி ஊடகத்தைப் போலவே, எழுத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய அச்சு ஊடகத்துக்கும் இன்னும் இடம் இருந்துகொண்டே இருக்கும் என்பதே என் கருத்தாகும்.

எம்கே குமார்: சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்குமா? இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் எப்படி இருக்கும்?

இராம கண்ணபிரான்: சிங்கப்பூரில் தாய்மொழிப்பிடிப்புள்ள தமிழர்கள் உள்ளளவும் தமிழும் தொடர்ந்து இங்கு ஆட்சிமொழியாக வாழும். மொழிசார்ந்த இந்த உறுதிப்பாடு, நம் ஆட்சியமைப்புச் சட்டத்திலும் பதிவாகியிருக்கிறது.

மலாயர்களையும் சீனர்களையும் தவிர மற்ற அனைவரும் “மற்றவர்கள்” என்றுதான் முதலில் இருந்தது. சீனத்திலும் மலாயிலும் மட்டுமே இளநிலைகலைப் பட்டக்கல்வி இருந்தது. அவற்றையெல்லாம் தாண்டி மலாய், சீனர், இந்தியர் என்ற இனத்தை மூன்றாவதாய்ச் சேர்த்து போராடிக் கொண்டுவந்துள்ளோம். தமிழிலும் பட்டக்கல்வி ஆரம்பித்து சிலவருடங்கள் ஆகிவிட்டன. இதோ இன்னொரு முயற்சியாக தமிழ் முழுநேர தமிழ்ப் பட்டப்படிப்பு சிங்கப்பூர்த் தேசியக் கல்விக் கழகத்தில் சில மாதங்களில் தொடங்கப்போகிறது.

இப்படியாக, இன்னும் ஐம்பது ஆண்டுகளில், இங்குள்ள தமிழ்மொழியின் புழக்கம், எழுத்துத்தமிழில் மட்டும் அல்லாமல், பேச்சுத் தமிழிலும் அதிகக் கொள்ளளவைக் கொண்டிருக்கும் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்.

எம்.கே.குமார்:  தனிப்பட்ட முறையில் மிகவும் கட்டொழுங்கு அல்லது திருத்தமான வேலை என்பதை என்பதை உங்களிடம் பார்த்திருக்கிறேன். இந்த ஒழுங்கு எங்கிருந்து வந்தது?

இராம கண்ணபிரான்: கட்டொழுங்கு இரண்டு நிலையில் வருகிறது. அவை சுயத்தால்_MG_1785-002 வருவதும் வெளியில் இருந்து வருவதும் ஆகும்.  சுருக்கமாக, அகமும் புறமும் கலந்தது. சிறுவயதில் என்னுடைய பெரிய தாயாருடைய தாயார் (பெரியபாட்டி) ஜெகதாம்பாள்,  குடும்பத்தில் அனைவரையும் ஆட்டிப்படைப்பார். உண்மையில் ஒரு பெண்சக்தி என்றால் என்ன.. என்பதை அவரிடம் கண்டிருக்கிறேன். என் அம்மா, “அப்பாவைப் போல இருக்காதே” என்று அடிக்கடி என் காதில் ஓதியிருக்கிறார். சிறுவயதிலிருந்தே நான் என் தகப்பனாருக்கு எதிரானவன். அவருடைய தனிவாழ்வின் ஒழுக்கமற்ற செயல்களை நான் வெறுத்திருக்கிறேன். கடைசி காலத்தில் அவருடைய சமூக அந்தஸ்துக்காக என்வாழ்வில் சாய்ந்து சிலவிஷயங்களை அவர் செய்தார் எனினும் பின்னாளில் அவரை நான் மிகவும் நேசித்தேன். பத்தாண்டுகள் நான் ஜவுளிக்கடையின் மாடியில் தங்கி இருக்கும்பொழுது ’பிக் பிரதர்ஸ்’போல என்னைக் கவனித்துக்கொண்டே இருந்தார்கள் அவருடைய கடைஆட்கள். மு.வரதராசனுடைய தனிமனித ஒழுக்கம், சமுதாய் ஒழுக்கம் என்பவையும் என்னுள் வேரூன்றியிருக்கவேண்டும்.

ஒழுக்கம், கட்டுக்கோப்பு என்ற பீடத்திலிருந்து நான் எழுதியவன். அதற்குப்பிறகு கட்டுக்கோப்பு என்ற மனநிலையிலிருந்து பரந்த கொள்கையுடையவனாக மாற்றியதில் ஐயோவா பல்கலைகழகத்தின் 100 நாட்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அதன்பிறகு ஒரு தனி மனிதனை, அவனுடைய சாதனைகளை அடிப்படையாகக்கொண்டே அவனை அளக்கவேண்டும், அவனுடைய ஆண்-பெண்ணின் தனிமனித ஒழுக்கத்தை வைத்து அவனை எடைபோடவேண்டாம் என்று முடிவுசெய்துகொண்டேன்.

அம்மாவின் கலங்கலான வேண்டுகோள், பாட்டியின் ஆளுமை, மு.வரதராசன், திருக்குறளின் அறத்துப்பால். அப்பாவின் கண்காணிப்பு போன்றவை என்னை சுத்தமான ஆள் என்று சொல்லும்படி ஆக்கிவிட்டன என நினைக்கிறேன்.

இலக்கிய அறம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒருவகைக்கற்பிதம்தான், ஆனாலும் அதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. போலியான ஒன்றை இலக்கியத்தின்மீது வைத்தால் அது உங்களைத் துவம்சம் செய்துவிடும் என்பதை நான் உணர்கிறேன். மனிதர்கள் என்னை நம்புகிறார்கள். கண்ணபிரானிடம் எதனையும் கொடுத்தால் அதை ஒழுங்காகச் செய்வார் என்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இதுநாள் வரையான வாழ்க்கையில், அது மிகவும் எனக்கு மனநிறைவாக இருக்கிறது.

ஒழுங்கிலிருந்து தவறினால் தவறு என்று மட்டும் அறிகிறேன். வாழ்வில் எனக்கு மெய்கீர்த்தி தேவையில்லை. எல்லாமே ஒரு மாயை என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

எம்.கே.குமார்: சிங்கப்பூரின் மூத்த இலக்கியவாதிகளில் பலர் வாசிப்பிலிருந்தும் எழுத்திலிருந்தும் ஓய்வு பெற்றாலும் இன்றுவரை இளைஞர்களுக்குப் போட்டிபோடக்கூடிய வகையில் இயங்கி வருகிறீர்களே, இது எப்படி சாத்தியமாகிறது?

இராம. கண்ணபிரான்: உண்மையைச் சொல்லவேண்டுமானால் உங்களைப்போன்ற இளைஞர்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் நான் ஒரு மர்மமான தந்திரம் (சிரிக்கிறார்) வைத்திருக்கிறேன்.  வாசிப்புத்தான் அது. இளங்கோவன், நா.கோவிந்தசாமி, நான் மூவரும் ஒரு கூட்டணி போல இயங்கினோம். மூவரும் வெவ்வேறு தனிப்பட்ட குணங்களைக் கொண்டவர்கள். ஆனால் இலக்கியம் என்று வரும்பொழுது ஒன்றுபடக்கூடியது எங்களுடைய வாசிப்புத்தான். நா.கோவும் நானும் ஆறு ஆண்டுகளாக, அவர் இறக்கும்வரை பேசிக்கொள்ளவில்லை, அவர் மனைவி உஷாகூடச் சொல்வார். அவருடைய நண்பர்களிலே மிகவும் நம்பிக்கைக்குரியவர் நான்தான் என்று. வாசிப்பில் நாங்கள் ஒன்றுபட்டிருந்தோம்.

கட்டுக்கோப்பிலிருந்து தாராள சிந்தனைப்போக்கிற்கு மாறிய மனநிலையில், வாசிப்பின்மூலமே அடுத்த நிலையை அடையமுடியும் என்று நம்பினேன். சிறுபத்திரிக்கை சார்ந்து வாசிக்கப் பேரார்வம் கொண்டேன். கணையாழி, தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, யுகமாயினி என்று நான் வாசிக்க ஆரம்பித்தேன். அது எனது சிந்தனை வெளிகளை விரித்து என்னை இன்றுவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் எல்லாப் பத்திரிகைகளையும் வாசிப்பேன். அண்மையில் ரஜினி ஸ்பெஷல் என்று ஒரு குமுதம் இதழ் வந்தது. உடனே வாங்கிப்படித்தேன். அதுவும் ஒருவகை ஆர்வமே. ஆக, ஒரு மனிதனை ஓரிடத்தில் freeze ஆக நின்றுவிடாமல் வைத்திருப்பதில், வாசிப்பு முதன்மையானது என்பேன்.

இங்குள்ள மூத்த படைப்பாளிகளில், அது தொடராததுகூட ஒருவகை தேக்கநிலைக்குக் காரணம் ஆகும். மேலும் வகுத்தலும் தொகுத்தலும் மட்டுமே இலக்கியவாதிகளை உருவாக்காது. சுயகற்பனையும் சிந்தனையும் வாசிப்பும் மட்டுமே இலக்கியவாதிகளை உருவாக்க முடியும். பழமையையும் புதுமையையும் இணைக்கும் ஒரு மூத்தவனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

பாண்டித்துரை: சிங்கப்பூரில் நவீனக்கவிதைகள் எழுதுபவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள்?

இராம.கண்ணபிரான்: 1990க்குப் பிறகு தமிழகத்திலிருந்து வந்தவர்களைச் சொல்லலாம். அவர்களுள் குறிப்பிடக்கூடியவர்களாக, கனகலதா, எம்.கே.குமார், மாதங்கி போன்றவர்களைச் சொல்லமுடியும்.

பாண்டித்துரை: சிங்கப்பூரில் நீங்கள் வாசித்த கவிதைகளின் வழியே, உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் என்று யாரைக் குறிப்பிடலாம்?

இராம.கண்ணபிரான்: மரபுக்கவிதைகளில் ஐ.உலகநாதன், அமலதாசன் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. கடையநல்லூர் ஜமீலாவின் வரிகளும் நன்றாக இருக்கும். வே.கலியபெருமாள் என்ற முல்லைவாணனையும் குறிப்பிட்டுச் சொல்வேன். பரணனுடய அக்னிக்கவிதைகள் எனக்கு விருப்பமானவை. கவிஞர் முகிலன் எளிமையாக எழுதக்கூடியவர். ந.பழனிவேலுவின் கவிதைகள் நாட்டுப்பற்றைப்பாடும். புதுக்கவிதைகள் என்று வரும்போது அங்கதத்திற்கும் படிமத்திற்கும் இளங்கோவனுடைய கவிதைகளைக் குறிப்பிடலாம். நவீனக்கவிதைகள் என்று சொன்னால்,  ரெ.பாண்டியனையும், பகடி முறையில் எழுதும் இந்திரஜித்தையும் கூறலாம்.

பாண்டித்துரை: இன்றைய சிங்கப்பூர், மலேசியப் படைப்புகளை விமர்சிப்பதன் வழியே, நீங்கள் அவர்களை ஊக்குவிப்பதாகக் கருதலாமா?

இராம.கண்ணபிரான்: ஆமாம். “சிங்கப்பூர் மலேசிய இலக்கியங்களில் என்ன இருக்கு?” என்று கேட்பவர்களுக்கான பதிலாகவும்கூட அதைக் கருதலாம். அவர்களின் படைப்புகளைப் படித்துவிட்டுத்தான், நான் எழுதுகிறேன், படைப்புகுறித்த கடுமையான கருத்துகளை வாய்மொழியாக மட்டும் சொல்லிவிட்டு, ஆக்ககரமான நல்ல கருத்துக்களை விமர்சனக்கட்டுரையாகப் பதிவுசெய்கிறேன். ஒரு நல்ல நோக்கத்திற்காக, நம்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்காக, பாராட்டு மிகுந்த விமர்சனக்கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன்.

பாண்டித்துரை: மலேசிய நவீன எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் யார் யார்?

இராம.கண்ணபிரான்: ம.நவீன், சு.யுவராஜன், (மறைந்த) பா.அ.சிவம், ஜாசின் தேவராஜன், கே.பாலமுருகன் சமீபத்தில் ஒரு சர்ச்சைச் சிறுகதையை எழுதிய  தயாஜி போன்றவர்களைக் குறிப்பிடுவேன்.

பாண்டித்துரை: கவிஞர்கள், கவிதைகள் என மலிந்துபோய்விட்ட இந்தக் காலத்தில் கவிதைத்துறையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இராம.கண்ணபிரான்: மேலை நாட்டினரின் காலனித்துவ வருகையாலும், அவர்களின் அச்சு இயந்திர வருகைக்குப் பின்னாலும்தான் தமிழத்தில் உரைநடைப்புழக்கம் அதிகமாகியது. ஆயிரமாண்டுத் தமிழக இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், கவிதையின் பூரணம்தான் நமக்குச் சங்கப்பாடல்களையும், காப்பியப் பெருங்கதைகளையும் தந்து செம்மாந்துள்ளது.

பாண்டித்துரை: சிங்கப்பூர் இலக்கியத்தின் முன்னோடி என்று யாரைச் சொல்லலாம் (நான் சிரித்துக்கொண்டே) உங்களையும் சேர்த்து?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூர் எழுத்தாளர்க் கழகம், ஒரு நூலின்வழி, 41 படைப்பாளிகளை அடையாளப்படுத்தியுள்ளது. அதில் இன்னும் பத்து நபர்கள் சேர்க்கப்படவேண்டும் என்று பி.கிருஷ்ணன் குறிப்பிட்டார். அந்த 50பேர்களில் நீங்கள் கேட்கும் சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள் இருக்கிறார்கள்.

பாண்டித்துரை: அந்த 50 எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகக்கவர்களாக யாரையெல்லாம் சொல்லலாம்?

இராம.கண்ணபிரான்: வயது அடிப்படையில்தான் நான் குறிப்பிடுவேன். இக்குவனம், பி.கிருஷ்ணன், ஏ.பி.இராமன், கவிஞர் முத்துமாணிக்கம், எஸ்.எஸ்.சர்மா, சுதர்மன்,மொழிபெயர்ப்பு செய்த பி.பி.காந்தம், பார்வதி பூபாலன், ஜோசப்பின் ஜோசப், பெ.திருவேங்கடம், பா.கேசவன், பெ.த.ராஜன், வரதன், ராம்.நாராயணசாமி, செ.ப. பன்னீர்செல்வம்,ரெ.சோமசுந்தரம், மா.இளங்கண்ணன், நா.கோவிந்தசாமி, இளங்கோவன் முதலியோர்.

பாண்டித்துரை: உங்களுடைய படைப்புகள்குறித்து உங்கள் மனைவி தம் கருத்துக்களைப் பகிர்வதுண்டா?

இராம.கண்ணபிரான்: என் படைப்புகளின் முதல் வாசகியே அவர்தான். நான் அவரை என் எழுத்தைப் ”படி, படி” என்று வற்புறுத்திக் கஷ்டப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய எல்லா படைப்புகளையும் படிப்பதுடன், கதையில் இது வேண்டும் இது வேண்டாம் என்று கருத்தும் சொல்வார். என்னுடைய 60 சிறுகதைகளில், 20சிறுகதைகளுக்கான கருத்துக்களைத் தந்ததே என்னுடைய மனைவிதான்.

எம்.கே.குமார்: அவர்களிடம் கருவை வாங்கி நீங்கள் எழுத்தாளாராகிவிட்டீர்கள்! (சிரிக்கிறார்) அவர்கள் கதை, கவிதை என ஏதும் எழுதியிருக்கிறார்களா?

இராம.கண்ணபிரான்: அவர் நிறைய இசைவடிவக்கவிதைகளை எழுதியிருக்கிறார், ஒரு 64பக்க நோட்டு முழுவதும் அவருடைய கவிதைகள் உள்ளன. நான் கவிதைகள் எழுதாத குறையை, அவர் தீர்க்கிறார். அவருடைய கவிதைகளின் ரகசிய ரசிகன் நான்.

எம்.கே.குமார்: கோயிலுக்குச் செல்வதுண்டா? உங்களது குலதெய்வம் என்ன? கோ.சாரங்கபாணி உள்ளிட்ட சிங்கப்பூர்த்தமிழர்களின் மூத்த முக்கியத்தலைவர்கள் எல்லாம் திராவிடக்கொள்கையின் பாரம்பரியமும் விருப்பமும் கொண்டவர்களாகவே தங்களை முன்வைத்தனர். நீங்களும் திராவிடக் கொள்கைகள் சார்ந்தவரா? பெரியாரைப் பிடிக்குமா?

_MG_1657இராம.கண்ணபிரான்: கோ.சா என்றதும் ஒரு ஞாபகம் வந்துவிட்டது. அண்மையில் நடந்த ’முரசு’ நாடகத்தில் காட்டப்பட்ட அளவுக்கு செல்வகணபதி மோசமானவர் அல்லர். அந்த நாடகத்தின் இயக்குனர் கணேஷிடம்கூட இதைச்சொன்னேன். நீங்கள்கூட நாடகவிமர்சனம் எழுதியிருந்தீர்கள். இப்போது கேள்விக்கு வருவோம். சுயமரியாதைக் கட்சிக்காரன் என்பதை சு.ம கட்சிக்காரன் என்றுதான் என் தகப்பனார் சொல்வார். அவர் காங்கிரஸ்காரர். ’நாமெல்லாம் ஏற்கெனவே கருப்பு, இதில் இந்த ராமசாமி நம்மையெல்லாம், கருப்புக்கலர் சட்டைப்போடச்சொல்லி இன்னும் கேவலமாக்குறார்’ என்றும் அவர், பெரியாரைக் கிண்டல் செய்வார் என்றாலும் எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். முதுமைக்கால அண்ணாவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது எளிமையே அதற்குக் காரணம்.

எம்.கே.குமார்: நீங்கள் நெருங்கிப்பழகிய எழுத்தாளர்கள் யாவர்?

இராம.கண்ணபிரான்: சுந்தரராமசாமியுடன் நெருங்கிப்பழகியிருக்கிறேன். டெல்லியில் என்னைச் சந்தித்த காலச்சுவடு கண்ணன்கூட, ”இவர் என் அப்பாவின் நண்பர்” என்றுதான் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அண்மையில் சிங்கப்பூருக்கு வந்த கலாப்ரியா, பழைய அன்போடு மிகவும் உற்சாகமாப் பேசினார். அகிலன், நா.பார்த்தசாரதி இருவரும் சிங்கை வந்தபோது என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். நீல பத்மநாபன், ஞானக்கூத்தன் போன்றோரும் பழக்கம். ஆர் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் (இருவரையும் என் மனைவிக்குப் பிடிக்கும்) ஆகியோரைத் தமிழகத்தில் சென்று சந்தித்திருக்கிறேன். வேறு யாரையும் தமிழ்நாட்டில் சென்று சந்தித்ததில்லை. இங்கு எழுத்தாளர்கள் வரும்போது சந்திப்பதுதான். இப்போது கடைசியாக ஓர் ஆசை முளைத்திருக்கிறது. இறப்பதற்குமுன் ஒருமுறை தமிழகம் சென்று, அந்த மண்ணையும், மரங்களையும், நிலாவையும், பிடித்த எழுத்தாளர்களையும் மீண்டும் பார்த்துவிட்டுவரவேண்டும். பார்க்கலாம்.

எம்.கே.குமார்: நீங்கள் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டீர்களா?

இராம கண்ணபிரான்: ”அகிலன், நா.பா போன்றோர் இரண்டு மணி நேரத்தில் ஒரு கதை எழுதிவிடுவார்களாம், நீங்கள் எட்டுமுறை உங்கள் கதைகளைத் திருத்துகிறீர்களே” என்று என் மனைவி சொல்வார். எழுத்தைவிடப் பேச்சே எனக்கு இயல்பாக வருகிறது. கவிஞர் சுப்ரமணியன் ரமேஷ் சிங்கப்பூரை விட்டுச்சென்றபோது ஒரு டேப்ரெக்கார்டரை வாங்கிக்கொடுத்து, ’பேசிப்பேசி எனக்கு அனுப்புங்கள்’ என்று சொன்னார். நான் பேசும்பொழுதே மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பதாக அவர் சொல்வார். அவரிடம் பதிவுப்பெட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னைப்பொறுத்தவரை, நான் இன்னும் நிறைய எழுதியிருக்கவேண்டும். ஆனால் அது சித்தியாகவில்லை.

எம்.கே குமார்: வகுத்தலும் தொகுத்தலும் மட்டும் ஆய்வில்லை, அது இலக்கியமாகாது என்று நீங்கள் சொல்லியிருந்தீர்களே; சிங்கப்பூரில் நிறைய முனைவர்கள் அவ்வாறுதானே தங்கள் ஆய்வுகளைச் செய்வதாகப் பேசப்படுகிறது?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூரில் பல முனைவர்கள் அவ்வாறுதான் செய்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், எனக்குப்பிடித்த சிறந்த ஆய்வாளர் யார் என்று கேட்டால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை திரு பாலபாஸ்கரனைச் சொல்வேன்.

எம்.கே.குமார்: உங்கள் குறுநாவலான “வாழ்வு” படைப்பில் பெரியவர் காத்தலிங்கம் வருவதுபோல, சிங்கப்பூர்த் தமிழர்களது இலக்கியமும் பண்பாடும் இந்தியாவிலிருந்து வந்தவர்களால், வருபவர்களால் பங்களிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ’வந்தேறிகள்’ என்பது போன்ற வார்த்தையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இராம.கண்ணபிரான்: சிங்கப்பூரில் இளையர்கள் சிலர் மட்டுமில்லாது என்போன்ற சில மூத்தவர்களும் இதில் தவறான கண்ணோட்டம் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஆறு வயசுல வந்தாங்க; சிலர் இருபது வயசுல வந்தாங்க; நான் பத்து வயசுல வந்தேன். உண்மையில் எல்லாருமே வந்தேறிகள்தான். சிலர் முன்னாள் வந்தேறிகள். சிலர் இந்நாள் வந்தேறிகள். இவர்களின் வழித்தோன்றல்களே இத்தீவின் மக்கள்.

’சிங்கப்பூர் இலக்கியம் என்பது பெரும்பாலும் வந்தேறிகள் என்று சொல்லப்படும் குடியேறிகளாலும் அவர்களின் வம்சாவளியினராலும் எழுதப்பட்டது’ என்பதே கணையாழியில் சிங்கப்பூர் இலக்கியம்பற்றி நான் எழுதிய கட்டுரையின் முதல்வாக்கியம். உண்மையில் சிங்கப்பூரில் சி.மகுதூம் சாயபு அவர்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் முதல் சிறுகதையே ஒரு சிங்கப்பூரருக்கும் ஊரிலிருந்து பிழைக்க வந்தவருக்குமான உரையாடலே ஆகும். இங்கு எப்படிப் பிழைப்பது என்ற வழிமுறைகளே அந்த உரையாடலின் சாராம்சம். முதல் உலகப்போருக்கு முன்-பின் குடியேறியவர்கள் ஒருவகையினர், இரண்டாவது மகாயுத்தத்திற்குப் பிறகு குடியேறி இங்கேயே வேரூன்றிய தமிழர்கள் இரண்டாவது வகையினர். இப்போது இங்கு வந்து தங்கியிருப்பவர்கள் மூன்றாவது வகையினர். 1970, 1980, 1990களுக்குப்பிறகு குடியேறியவர்கள் என்ற வகையில், இலக்கியத்திற்கான பெரும் பங்களிப்பு இந்தக்காலக்கட்ட புதுக்குடியேறிகளாலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. இவர்களின் அதிக எண்ணிக்கையிலான பங்களிப்புகளால்தான், தமிழுக்கென்று அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் தமிழ்மொழியினருக்குத் தொடர்ந்து கிடைக்கின்றன, இல்லையேல் தமிழுக்கான இலக்கிய அங்கீகாரம் இல்லாமல் போகும்.

சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையில், தமிழர்கள் அல்லாத இந்தியர்களது எண்ணிக்கை, எண்பதுகளிலிருந்து கூடிக்கொண்டே வருவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்திய மரபுடமைக் கட்டிட நிதிக்குத் தமிழரல்லாத வட இந்தியர்கள் அளித்த தொகைதான் அதிகமாக உள்ளது. கருத்துவேறுபாடு, கண்ணோட்டம் மாறுபடினும், தமிழ் இங்குத்தொடர்ந்து வாழ புதுக்குடியேறிகளும் பங்களிக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

நீர்க்கொழும்பில் பிறந்து சிங்கப்பூர்வாசியாகிவிட்ட கனகலதாவின் சிங்கப்பூர் சார்ந்த இலக்கியப்படைப்புகள், சிங்கப்பூரில் பல்லினச்சமூக இரண்டறக் கலத்தலுக்கு, புதுக்குடியேறிகளுக்கான அண்மைய முன்மாதிரியாக உள்ளன. என் நெருங்கிய நண்பர்கள் சிலர்கூட, வந்தேறிகளால் இங்குள்ள தமிழ் இலக்கியத்திற்கு எந்தப்பங்களிப்பும் இல்லை என்று சொல்வதை நான் அறிவேன். அது அவர்களுடைய கருத்து.

’சிங்கப்பூரில் பிறந்தவர்கள்-மற்றவர்கள்’ என்ற பேச்சு வந்தபோது, ‘கோ கெங் சுவீ மலாயாவில் பிறந்தவர், ராஜரத்தினம் இலங்கையில் பிறந்தவர், என் மந்திரிசபையில் எத்தனை பேர் சிங்கப்பூரில் பிறந்த அமைச்சர்கள்? அந்நிலை வரும்வரை சிங்கப்பூர் நலனுக்கு உழைக்கும் மூளையே எனக்கு முக்கியம்’, என்று ஒருமுறை லீ குவான் இயூ பதிலுரைத்தார்.
‘Not Born In Singapore: Fifty Personalities who Shaped the Nation – Tng Ying Hui” என்று கடந்த ஆண்டு வெளிவந்த புத்தகம் மிகவும் முக்கியமானது. சிங்கப்பூர் நாட்டு நிர்மாணத்துக்குச் சமுதாயப்பங்களிப்பு செய்த, சிங்கப்பூரில் பிறக்காத ஐம்பது பேர்களைப் பற்றிய தொகுப்பு அது. அவர்களையெல்லாம் வந்தேறிகள் என்றோ புதுக்குடியேறிகள் என்றோ ஒதுக்கவில்லை இந்நாட்டு அரசாங்கம்.

எம்.கே குமார்: வாழ்வை நிறைவாக வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?

இராம.கண்ணபிரான்: ஜலகோபால், ஜலதுர்க்கா, ரஜுலா ஆகிய 3கப்பல்கள்தான் இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் கடற்போக்குவரத்துச்சேவையில் இருந்தன. நாகைக்கரையிலிருந்து 3கிமீட்டருக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூர் கப்பலுக்கு கைத்துடுப்புப் படகைக் கொண்டுதான் பயணிகளைச் சேர்ப்பார்கள். படகிலிருந்து கயிறு ஏணிவழியாகக் கப்பலில் ஏறவேண்டும். நாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் கப்பல், அங்கிருந்து சென்னை சென்று வெங்காயம் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி மலாயாவின் பினாங், போர்ட்கிளாங் வழியாகச் சிங்கப்பூருக்கு ஏழுநாள் பயணம் செய்யும். புறமலை என்பது தற்போதைய செயிண்ட் ஜான் தீவு. அங்கு இறங்கித் தொற்றுநோய் தடுப்பு முகாமில் மூன்றுநாட்கள் காத்திருந்து, ஆரோக்கிய அத்தாட்சி பெற்று சிங்கப்பூருக்குள் வருவார்கள். பத்து வயதில் அப்படி வந்தவன்தான் நான். என் தந்தையாரின் கடையில் தங்கிக்கொண்டே படிப்பு, அதனுடனான தனிமையை அனுபவித்தேன். படிப்புக்குப்பின்னர், திருமணம் செய்துகொண்டு, 14ஆண்டுகள் என் இருபிள்ளைகளுடன், குறைந்த வருவாயில் ‘தோப்பாயா’வில் வீடமைப்புக் கழகத்தின் ஈரறை வாடகை வீட்டில் இருந்தேன். அதற்குமுன் கல்நார் கூரைபோட்ட ஒரு பலகை வீட்டில் வசித்தேன்.

You lead the life as it comes எப்படி வருதோ அப்படி எடுத்துக்கொள்வது ஒரு வாழ்க்கை முறை, இன்னொன்று திட்டமிட்ட வாழ்க்கை முறை. எனது மனைவி பணக்காரவீட்டு வாழ்க்கையிருந்து வந்தவள். நானோ, எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதற்கேற்றாற்போல, என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் மனத்தைப்  பெற்றவன். என் மனைவியும் காலப்போக்கில் இயைந்துபோனார்.

இலக்கியத்தில் நான் இவ்வளவு அறியப்பட்டவனாக வாழும் அளவிற்கு, பெரிய அளவில் நான் எழுதவில்லை. ”நீங்கள் எழுத்தாளன் ஆகவில்லையென்றால், உங்களை இந்த அளவுக்கு யாரும் இங்கு மதிக்கமாட்டார்கள், நீங்கள் வெறும் கட்டுரையாளர்தான், கதையாசிரியர் இல்லை” என்று என் மனைவி வெளிப்படையாகச் சொல்வார். இருப்பதிலிருந்து மகிழ்வையும் நிறைவையும் ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையை நான் எப்படிக் கொண்டாடுகிறேனோ, அப்படியே படைப்புகளின் மீதான appreciative விமர்சனத்தையும் முன்வைக்கிறேன். வேலையிலிருந்து ஓய்வுபெற்றபின் கடந்த 15ஆண்டுகளாக எல்லோருக்கும் பிடித்த ஒருபாராட்டுவகை விமர்சகனாக இருந்துவருகிறேன். சினிமா பார்த்ததும் எழுத்துத்துறையில் ஈடுபட்டதும் அன்பான ஒரு குடும்பம் அமைந்ததும் பொருளாதாரத்தில் பெரிதாக வசதியடையாவிட்டாலும் என்னுடைய இந்த 72 ஆண்டுகளில், ஒருவேளைகூட நான் பட்டினி கிடந்ததில்லை. நடுத்தர வாழ்க்கை, அதுவும் நிறைவான வாழ்க்கை. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்?

நேர்காணல்: எம்.கே.குமார் & பாண்டித்துரை
புகைப்படம்: பாலசுந்தர்

2 comments for ““சுயகற்பனையும் சிந்தனையும் வாசிப்பும் மட்டுமே இலக்கியவாதிகளை உருவாக்க முடியும்” – இராம.கண்ணபிரான்

  1. சை.பீர்முகம்மது
    May 31, 2016 at 1:04 am

    இந்த நேர்காணல் நான் அறிந்த கொஞ்சம் அறியாத கண்ணபிரானை
    எனக்குக் காட்டியுள்ளது.இன்னும்கூட
    இலக்கியதின் ஆழமான கேள்விகள்
    வழி அவரின் உள்மனத்தில் உள்ள படைப்பாளரை வெளிக்கொண்டு வந்திருக்களாமென்று நினைக்கத்தோன்கிறது..க.து.மு.இக்பால்,செ.வே. சண்முகம், போன்ற பழையவர்கள் சிங்கை தமிழ் இலக்கியத்தை அடையாளப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கேள்வி கேட்பவர்களுக்கு பழைய விஷயங்கள்
    தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.
    அவர்கள் சிங்கைக்கு புதியதாக வந்தவர்கள் தானே? சை.பீர்முகம்மது

  2. Sirashthra Sindhal
    September 11, 2017 at 8:16 am

    Good interview! It would be good it was kept short and sweet. More people will have time to read. Thank you for the effort.

Leave a Reply to Sirashthra Sindhal Cancel reply