லீனா மணிமேகலை மலேசிய வருகை

லீனா2.11.2014ல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கவிஞர் / இயக்குனர் லீனா மணிமேகலை கலந்துகொள்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் கலை ஊடகச் செயற்பாட்டாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. மஹாராஜபுரம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் தமிழாசிரியர்  இரகுபதி அவர்களுக்குப் பிறந்தவர்தான் லீனா. அவர் மிகச் சிறந்த  ஆவணப்படங்களையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழின் மிக முக்கியமான அரசியல் கதைப்படமான  செங்கடலையும்  இயக்கியுள்ளார். இதுவரை நான்கு கவிதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ள லீனா மணிமேகலை தன்னுடைய படங்களில் நடித்தும் இருக்கிறார். ‘கனவுப் பட்டறை’ எனும் தனது பதிப்பகத்தின் மூலம் இதுவரை 25 வகையிலான நூல்களையும் பதிப்பித்துள்ளார் .

இவருடைய “தேவதைகள்” மும்பை சர்வதேச திரைப்பட விழாவின்  உச்சபட்ச விருதான தங்கச் சங்கு விருது பெற்றுள்ளது. “செங்கடல்” இந்தியன்  பனோரமா வென்றதோடு, ஆசியாவின் சிறந்த பெண் திரைப்படத்திற்கான விருதை டோக்கியோவில் வென்றது.  சமீபத்தில் வெளிவந்த அவருடைய ‘வெள்ளை வேன் கதைகள்’ இலங்கையில் காணாமல் போன குடும்பங்களின் தொடர் போராட்டங்கள் குறித்த துணிச்சலான படைப்பு. சேனல் ஃபோரில் ஒளிபரப்பப்பட்ட வெள்ளை வேன்  கதைகள் சர்வதேச கவனம் பெற்றது. திரைப்படைப்புகளுக்கான தேசிய, உலக  திரைப்பட விழாக்களில்  பங்கேற்பு மற்றும் விருதுகள், நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம், இயல் கவிதை விருது – சிற்பி இலக்கிய விருது என எழுத்துக்கான அங்கீகாரம், லண்டன் பல்கலைகழகத்தின் கலைஞர்களுக்கான  சார்லஸ் வேலஸ் விருது, பெண்சினிமாவுக்கான காமன்வெல்த் விருது, எதிர்சினிமாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஊக்கத்தொகை என்று அவரின் தொடர் இயக்கம் உற்சாகம் நிரம்பியது. 

லீனா மணிமேகலையின் ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்துக்கும் அவருடனான கலந்துரையாடலுக்கும் இன்றே முன்பதிவு செய்துக்கொள்ளலாம். அதோடு அவரின் நூல்கள் மற்றும் ஆவணப்படங்களையும் வாங்கலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...