
என்னுடைய அப்பாவழித் தாத்தாக்கள், அப்பாவின் அப்பாவும் சித்தப்பாவும், பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே எந்த வேலையையும் சொந்தமாகக் கற்றுக்கொள்வதில் தேட்டையாக இருந்தனர். பதின்மவயதிலேயே எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு செக்குக் கட்டையும் ஒருஜோடி மாடும் போதும். குலத்தொழில்தான் என்றாலும் அவர்கள் தொழிலுக்குப் புதிது.