‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனும் கருப்பொருளின்கீழ் இவ்வாண்டு நடைபெறவுள்ள வல்லினம் கலை இலக்கிய விழா 7, மூத்த படைப்பாளர்களை ஆவணப்படுத்துதல்; இளம் படைப்பாளர்களை அடையாளம் காணுதல் எனும் இரு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. அதையொட்டி வல்லினம் சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்புகள் ஜூன்மாதம் தொடங்கி அச்சு, மின் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்தது அனைவரும் அறிந்ததே. வெறும் போட்டிகள் வைப்பதும், பரிசுகள் வழங்குவதும் மட்டும் எழுத்தாளர்களை உருவாக்கிவிடுமா என்ற கேள்வியை மனதில் இறுத்திக்கொண்டே வல்லினம் இப்போட்டிக்கான முன்னெடுப்புகளைச் செய்யத் தொடங்கியது. மிகச் சடங்குபூர்வமாக நடத்தப்படும் போட்டியாக இல்லாமல் இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் வல்லினம் என இருதரப்புக்கும் இடையேயான உரையாடலைச் சாத்தியப்படுத்த இப்போட்டி ஒரு முக்கியத்தளமாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் நீட்சியாக எழுத்தாளர் ஜெயமோகனுடன் 11 செப்டம்பர் 2016 (ஞாயிறு) அன்று இப்போட்டியின் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடவும், சிறுகதை தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுறவும் ஓர் அரங்கு உருவாக்கித் தரப்பட்டது.
அதன் தொடக்ககட்டமாக ஆகஸ்டு 16ஆம் தேதி ‘சிறுகதை கலந்துரையாடல்’ எனும் புலனக்குழு உருவாக்கப்பட்டு மின்னஞ்சல் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் சிறுகதைப் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பியவர்களும் வல்லினம் குழுவிலிருந்து சில நண்பர்களும் அக்குழுவில் இணைக்கப்பட்டனர். ஒருமாத காலத்திற்குத் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட இப்புலனக்குழுவின் உருவாக்கம் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கான தளமாக மட்டும் இல்லாமல் எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பை மேலும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள ஒரு தயார் நிலையாகவும் இருந்தது. பெரும்பாலும் பங்கேற்பாளர்கள் போட்டியாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக்கூடாது போன்ற எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி ஆர்வமுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் இப்புலனக்குழுவில் இணைக்கப்பட்டனர். இப்புலனக்குழு உருவாக்கப்பட்டபோதே சில திட்டவட்டமான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
அவை முறையே, (1) காலையில் வணக்கம் சொல்லுதல், நலம் விசாரித்தல், வாழ்த்துகளைப் பரிமாறல் போன்றவை கூடாது; (2) அவசியமற்ற தகவல்கள் நிரப்பப்படக்கூடாது; (3) யாரும் அவரவர் சொந்தப்படைப்பைப் பகிரக்கூடாது; (4) போட்டி குறித்து யாரும் பேசக்கூடாது; (5) எந்த வலைத்தளத்தின் இணைப்பும் தரப்படக்கூடாது; (6) இங்கே நடக்கப் போவதெல்லாம் மிக முக்கியமான சிறுகதைகளின் பகிர்வும் அதை ஒட்டிய புரிதலுக்கான உரையாடல்கள் மட்டுமே; (7) ஓர் முக்கிய எழுத்தாளரைச் சந்திக்கும் முன் குறைந்தபட்சம் பத்து நல்ல சிறுகதைகளையும் அவரது எழுத்துகளையும் வாசித்திருக்க வேண்டும்; (8) சிறுகதைகளை ஒட்டி தாராளமாகக் கருத்துகளைப் பகிரலாம்; (9) ஒருவேளை யாரும் குறிப்பிட்ட ஒரு சிறுகதையைப் பகிர விரும்பினால் அதன் இணைப்பை புலனக்குழு ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புவது அவசியம், ஆகியவையே அவ்விதிகள்.
எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பு வெறும் கூடிக்கலையும் கூட்டமாக ஆகிவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்நிபந்தனைகள் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு தொடர்ந்து கொடுக்கப்பட்ட சிறுகதைகளுக்கான இணைப்புகளை வாசித்து கருத்துப் பகிர்வையும் தங்களது பார்வையையும் முன்வைக்க அனைவரும் வரவேற்கப்பட்டனர். அதைச்செய்ய இயலாதவர்கள் அவர்களது சம்மதத்துடனேயே புலனக்குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். எண்ணிக்கையில் வெற்றியைக் கணக்கிடும் பேதமையைக் கடந்து கணிசமானவர்கள் இப்புலனக்குழுவில் கொடுக்கப்பட்ட சிறுகதைகளை ஒட்டி தங்கள் கருத்துப் பகிர்வினையும் செய்திருந்தனர்.
தொடக்கமாக, எழுத்தாளர் ஜெயமோகனின் ‘சிறுகதை ஒரு சமையல் குறிப்பு’ எனும் இணைப்பு புலனக்குழுவில் பகிரப்பட்டது. இதை ஒரு பாடக்குறிப்புப் போல வாசிக்க அனைவரும் பரிந்துரைக்கப்பட்டனர். எல்லாக் கலைகளுக்கும் அதற்கே உரிய உத்திகள், அடிப்படைகள் இருப்பதைப் போல சிறுகதை எழுதவும் அடிப்படையான சில முறைகள் இருப்பதை விளக்கிச் சொல்லும் ஓர் பள்ளிக்கூட ஆசியரின் தொனியில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை தொடக்ககட்ட எழுத்தாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டியதாகவே இருந்தது. மொழி சாத்தியப்பட்டு விடுவதாலேயே ஒருவர் நல்ல சிறுகதை ஆசிரியராக ஆகிவிடமுடிவதில்லை. மொழி என்பது படைப்பாளனின் உள்ளக்கிடக்கையை, கற்பனையை கடத்திச் செல்லும் கருவியாக மட்டும் இருக்கும் பட்சத்தில் சிறுகதை போன்ற எழுத்து வடிவங்களுக்கு அதன் கூறுமுறை, இலக்கணம் போன்றவற்றின் புரிதல் அவசியமாகிறது. இதை ஓரளவு புரிந்துகொள்ளும்போதே மற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும்போது அதன் வடிவத்தைக் காட்சிப்படுத்திக் கொள்ளவும் தேர்ந்த சிறுகதை எழுதவும் வாசிப்பின்வழி அதனை மீட்டுணரவும் முடியும்.
இப்படியாக எழுத்தாளர் ஜெயமோகனின் ‘சிறுகதை ஒரு சமையல் குறிப்பு’ எனும் கட்டுரையோடு தொடங்கிய புலனக்குழு கலந்துரையாடலில், அடுத்து எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கதவு’ [http://azhiyasudargal.blogspot.my/2010/06/blog-post_03.html?m=1] சிறுகதை பகிரப்பட்டது. எழுத்தாளர் கி. ராஜநாராயணின் கதைகளை வாசிக்கும்போது தன்னிசையாகவே நம் தாத்தா நமக்குக் கதை சொல்லுவதைப்போலத் தோன்றும் என்பார்கள். தேர்ந்த கதைசொல்லியான அவர் சூழலையும் கதாபாத்திரங்களையும் வாசகனின் கண்முன் கொண்டு வந்து காட்சிப்படுத்துவதில் வல்லவராகக் கருதப்படுகிறார்.
இச்சிறுகதையை வாசித்த நண்பர்கள் பலரும் (நிலாப்ரியன், கலைசேகர்) அக்கதையில் வரும் குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவத்தை நினைவுறுத்துவதாகவும், தாங்கள் இனி எப்போதும் குழந்தையாகிவிட முடியாது என்கிற நிதர்சனத்தைச் சொல்வதாகவும் உணர்ச்சிவயமான புரிதலை முன்வைத்தனர். கி.ரா. போன்ற எழுத்தாளர்கள் மிக நுட்பமாக சில உணர்ச்சிகளை கதையின் உள்ளே வைக்கின்றனர். அதைப்பிடித்து இழுத்தவுடன் ஒட்டுமொத்தக் கதையும் நமக்காகத் திறக்கும் என்ற ம.நவீன் அக்கதை இன்னும்கூட ஆழமாக வாசித்துப் பார்க்க வேண்டியது என்பதைக் குறிப்பிட்டார். மேலும், சிறுகதை வாசிப்பது பலரும் நினைப்பது போல அத்தனை எளிமையானது அல்ல என விளக்கி அதற்கு பயிற்சி தேவைப்படுகிறது என்றும் தன் கருத்தைப் பதிவு செய்தார். எவ்வாறான சூழலிலும் குழந்தைகள் குழந்தைகள்தான் என்பதை, கதவு என்றொரு பொருள் மீது அவர்கள் கொண்ட பிணைப்பினை எதார்த்தமாக இக்கதை குறிப்பிடுவதாக கலைசேகர் குறிப்பிட, இக்கதையில் வரும் கதவானது வீட்டுக்குப் பாதுகாப்பு தருவதோடு, பிள்ளைகள் விளையாட, உணவையும் மானத்தையும் காப்பாற்ற பல்பரிமாணம் எடுக்கும் கருவியாக பயன்பட்டிருப்பதை டர்ஷினியும், ஒரு வீட்டில் கதவின் அவசியம் குறித்து இக்கதைப் பேசுவதாக ஷர்மிளாவும் தங்களது நேரடிப் பார்வையைப் முன்வைத்தனர்.
கதவு சிறுகதை குறித்து தன் பார்வையைப் பதிவு செய்த ஶ்ரீதர்ரங்கராஜ், அப்பா இல்லாத ஒரு வீட்டில் கதவு அப்பாவின் குறியீடாகக் காட்டப்பட்டுள்லதையும் அக்கதவு இல்லாதபோது கைக்குழந்தை இறந்துபோகிறது என்பதைச் சுட்டிக்காட்டி இப்படியான பார்வை இக்கதையை வேறொரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்வதையும் விளக்கினார். அப்பாதான் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி பாதுகாப்பு எல்லாம். அது அவர்களுக்கு இல்லாததால் குடும்பம் துயரப்படுகிறது. குழந்தைகள் அதை ’வேறு இடத்தில்’ பார்க்கிறார்கள் என்பதையும் அவ்வாறு பொருத்திப் பார்க்கலாம். மேலும், அக்கதவில் ஏற்கெனவே ஒட்டப்பட்ட படம் பழையதாக இருக்கிறது, அதாவது அப்பா காலத்தில் ஒட்டப்பட்டது, இது காலம்காலமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் கொள்ளலாம் என புதுப்புரிதலை நோக்கி புலனக்குழு நண்பர்களை ஶ்ரீதர்ரங்கராஜ் நகர்த்திச் சென்றார்.
அவரின் இப்பார்வையைச் சுட்டிக்காட்டிப் பேசிய ம.நவீன் ஒரு மிகச்சிறந்த கதை மேலோட்டமாக நமது உணர்வுடன் மட்டும் விளையாடுவதல்ல என்றும் அது தனக்குள் சொல்லாத சில விடயங்களை மறைத்து வைத்திருக்கும் என்றார். வாசகன் அதைக் கண்டடைய வேண்டும். அதுதான் ஒரு சிறுகதையில் வாசகனின் பங்களிப்பு என ம.நவீன் புலனக்குழு நண்பர்களை தீவிர வாசிப்புக்கு உற்சாகப்படுத்தினார். இக்கதையின் முடிவைத் தொட்டுப் பேசிய ஐஸ்வரி, எவ்வளவு சோதனைகள் வந்தாலும் குழந்தைகளின் இயற்கை குணம் அவர்களை விட்டு போகாது என்பதைக் கதை உணர்த்தியதாகப் பதிவிட்டார். இதுவரை கதவைத் திறக்கவும் மூடவும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, கதவைப் படிமமாக்கி அதற்குள்ளே ஆன்மாவை மறைத்து வைத்திருக்கும் எழுத்தாளரை மீண்டும் நினைவுறுத்தி கதவு குழந்தைகளுக்கு ரயில், சிறுமிக்கும் சிறுவனுக்கும் அப்பா, கைக்குழந்தைக்குக் பாதுகாப்பு, வீட்டிற்குக் கௌரவம் என குழந்தைகளால் மட்டுமே ஜடப்பொருள்கள் மீது தாங்கள் விரும்பும் ஒன்றை ஏற்றி வைத்துக் கொண்டாட முடிகிறது என்கிற குழந்தைகளின் உளவியல் சார்ந்து தயாஜி தனது வாசிப்பனுபவத்திலிருந்து பேசினார்.
தொடர்ந்து நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் ஒன்றான ‘பால்வண்ணம் பிள்ளை’ என்ற [http://azhiyasudargal.blogspot.my/2011/10/blog-post.html] சிறுகதை பகிரப்பட்டது. தொடக்கத்தில் இக்கதையையொட்டி, புதிய எழுத்தாளர்கள் எவரும் கருத்துப்பதிவிடாமலேயே இருந்தனர். ஒலிப்பதிவுவழி பகிரப்பட்ட இக்கதையை முதலில் கேட்கும்போது அன்றாட வாழ்வின் ஒருநாளை எழுத்தாளர் பதிவு செய்திருப்பதைப் போலவும், இது எல்லா வீட்டிலும்தான் நடக்கிறது என்பதுபோன்ற உணர்வும் வாசகர்களுக்கு உண்டாகியிருக்குமென உணர முடிந்தது. இதற்கு ஒத்திசைவதுபோலவே ஶ்ரீவிஜி தனது பார்வையைப் பகிர்ந்தார். குடும்பங்களில் காணப்படுகிற குடும்பத்தலைவனின் போக்கு, வாழ்தலுக்குத் தேவையான அவசியம் அவசியமின்மைகளைப் பற்றிய தெளிவின்மை இக்கதையில் சுட்டப்பட்டிருப்பதாக அவரது பார்வை அமைந்திருந்தது. படித்துப் புரிந்துகொள்ள சற்றுக் கடினமாகவும் ஒன்றும் இல்லை என்பது போலத் தோன்றினாலும் மிகப் பூடகமாக இக்கதை குடும்ப அரசியலைப் பேசுகிறது என ம.நவீன் விளக்கியது கதையை ஆழ்ந்து வாசிக்க (செவிமடுக்க) வழியமைத்தது.
உண்மையில் எனக்கும்கூட இக்கதையைக் கேட்கும்போது இக்கதை பாதியில் முடிந்துவிட்டதைப் போலவும் கேட்டவரை எதுவும் இல்லாதது போலவுமே தோன்றியது. மீண்டும் ஒருமுறை கேட்ட பின்பே கதையின் சாரம் அகப்பட்டது. இந்த உலகத்தில் தன் அதிகாரத்தை, கோபத்தை வெளிக்காட்ட தன்னைவிட பலவீனமான ஒருவர் எல்லாருக்கும் தேவைப்படுவதை பால்வண்ணம் பிள்ளையின் கதாபாத்திரம் நிறுவுகிறது. வேலையிடத்தில் பயந்தும் அடிபணிந்தும் இருக்கும் பால்வண்ணம் பிள்ளை வீட்டில் நாட்டாமையாகி அதட்டுவது கதைநெடுக ஆங்காங்கு சிறுசிறு வரிகளில் காண முடியும். ‘பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர்’, ‘பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணி, உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள்’, ‘கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம்’ போன்ற எளிய வரிகளில் புதுமைப்பித்தன் கதையின் முடிச்சுகளை உருவாக்கி வைத்திருப்பதைக் கவனிக்க முடிந்தது. இதையே கலைசேகரும் தனது பாணியில் ‘பணியிடத்தில் அதிகாரங்களுக்குப் பணிந்து செயலாற்றும் பால்வண்ணம் பிள்ளை, இல்லத்திலாவது மற்றவர் தன் அதிகாரத்துக்குப் பணிந்து தன்னை மதித்திட வேண்டும் எனக் கவனமாய் இருக்கிறான்’ என்பதாகப் பதிவிட்டார். ஓரிடத்தில் நசுக்கப்படும் அகங்காரம் மற்றொரு இடத்தில் ஆக்ரோசமாக வெடிக்கிறது என விளக்கிய கலைசேகர் ‘தான் மறுத்த பின்பும், பேச்சை மீறி வாங்கப்பட்ட மாடும் கன்றும் தன் கெளவரவத்துக்கு இழுக்காகக் கருதி நஷ்டத்திற்காவது அவைகளை விற்க வைக்கிறது’ எனக் கதையிலிருந்து உதாரணம் காட்டிப் பேசினார்.
ஒரு சிறுகதையை வாசிப்பதைவிட நாவலை வாசித்துப் புரிந்து கொள்வது எளிது எனக்கூற இதுவே காரணமாகின்றது. வாழ்வின் நீண்ட வெளியை, அல்லது அதன் ஒரு பகுதியை அப்படியே பதிவுசெய்து காட்டுவது நாவல். அது வாசகனின் சிந்தனைக்குப் பெரிதாக வேலை கொடுப்பதில்லை. ஆனால் சிறுகதைகள் வாசகனின் பங்களிப்பை, சிந்தனையைக் கோருபவை. எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வதுபோல குறைவான சொற்களில் போகிறபோக்கில் சொல்லிச் செல்வதும், ஓரிரு வரிகளில் கதைக்களம் சொல்லப்பட்டிருப்பதும், வாசகனை ஊகிக்க வைப்பதுமாக வடிவ நேர்த்திமிக்க சிறுகதைகள் வாசகனின் அங்கத்துவத்தைக் கோருபவை.
இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் சுஜாதாவின் ‘நகரம்’ [http://azhiyasudargal.blogspot.my/2011/03/blog-post_20.html?m=1] சிறுகதைப் பகிரப்பட்டது. கதைக்கான சுட்டியைப் பதிவிடும்போதே இக்கதை சுஜாதாவின் படைப்புகளில் முக்கியமான ஒன்று என்றும் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார் ம.நவீன். கதையின் நகர்ச்சியில் யாரையுமே குற்றம் சொல்லமுடியாத அளவுக்கு, கதாபாத்திரங்கள் வடிக்கப்பட்டதையும் மருத்துவமனைகளில் தரம் பிரித்து சேவை வழங்கும் போக்கு, தாயின் உளப்போராட்டம், மனித உரிமை மீறல், கல்லாமை அறியாமை புரியாமை, மூடத்தனம் எனப் பல கோணங்களில் புலனக்குழு நண்பர்கள் தங்களது பார்வையிலிருந்து கருத்துப் பதிவு செய்திருந்தனர். உலகின் எல்லாத் திக்குகளிலும் வளர்ச்சியடைந்த நகரங்களில் இக்கதையைப் போன்ற சம்பவங்கள் நித்தம் நடப்பதுண்டு. ஆனால் நாம் அவற்றை கவனிக்கத் தவறி விடுகிறோம். விளைவாக சீரியல்களில் பிரபலமாகக் காட்டப்படும் முதிர்கன்னி, வயதான தாய், அனாதைக் குழந்தை என வழக்கமான கதைக் கருவைத் தேடி எடுக்கிறோம் என ம.நவீன் சிறுகதைக்கான கருவைத் தேர்வு செய்யும் போக்கை சுட்டிக் காட்டினார்.
இக்கதையில் காட்டப்படும் நகரம் என்பது ‘மற்றுமொரு’ வாழ்விடமாக இல்லாமல் அங்கிருக்கும் சுவர், வாகனம், எழும் சத்தம், மனிதன் என அனைத்தும் இயந்திரமாகி புதிதாய் வரும் ஒருவனை அச்சுறுத்துகின்றன. நகரத்தின் வேகமும் பரபரப்பும் மனிதனை மனிதனாகப் பார்க்க மறுக்கிறது. சுஜாதாவால் ஒரு நகரத்தை அச்சு அசுலாக வாசகனின் கண்முன் கொண்டுவர முடிந்திருப்பது, கதைக்குள் வாசகனை உள்ளிழுத்துக்கொள்ளச் செய்கிறது. நகரம், ஒரு புறநகர்வாசிக்கு எப்படி அந்நியத்தன்மையைக் கொடுக்கிறது, அச்சுறுத்துகிறது என்பதை வள்ளியம்மாவின் குழப்பத்திலும் பரிதவிப்பிலும் கடைசியாக அவள் எடுக்கும் முடிவிலும் காண முடிகிறது. ஒன்றை இலகுவாக்க உருவாக்கப்படும் சட்டதிட்டங்களும் விதிமுறைகளும் இன்னொருவருக்குக் கடைசிவரை புரியாமல், பயன்படாமல், நிம்மதியிழக்க வைப்பதையும் பார்க்க முடிகிறது என்பது கலைசேகரின் பார்வையாக அமைந்தது.
ஒரு கதை, அக்கதையின் இயல்பை மட்டும் சொல்ல வருவதில்லை. கதையாசிரியனுக்கும் நமக்கும் ஒரு பிணைப்பை எற்படுத்திவிடக்கூடியது. கதையின் உரையாடல்கள், பாத்திரப் படைப்புகள் எற்கெனவே நாம் சென்று, கண்டு வந்த சில நிகழ்வுகளை நம் கண்முன் நிழலாட விட்டால் அதை அக்கதையின் வெற்றியாகப் பார்க்க முடியும் என்றும் இக்கதை அவ்வகையில் தன்னைப் பெரிதும் கவர்ந்ததாக எஸ்.கெ.மனோகரன் பதிவிட்டார். கதை கூறும் முறை குறித்துப் பதிவிட்ட ம.நவீன், ‘நகரம்’ கதை ஒருவிதத்தில் திருப்பத்தை அதன்வழி மெல்லிய அதிர்ச்சியையும் பரவவிடும் கதை என்றும் ஒருவகையில் ‘மரபான உத்தி. ஆனால் வெற்றிபெற்ற உத்தி’ என்பதாக விளக்கினார். பொதுவாக நாம் மக்களுக்குக் கருத்தைச் சொல்லப்போகிறோம் என முடிவு செய்து ஒரு கதை எழுதுகிறோம். ஆனால் சிறுகதையின் பணி கருத்தை நேரடியாகச் சொல்வதில் இல்லை. அதற்குச் சிறந்த உதாரணம் ‘நகரம்’. நகரம், ஒருவருக்கு எப்படி மனிதமற்ற அந்நியத்தன்மையைக் கொடுகிறது என கதாசிரியர் காட்டுகிறார். எங்குமே எதையுமே சொல்லவில்லை. உணர்த்துவதற்கும் சொல்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் அறியும்போது நல்ல கதைகள் பிறக்கும் என சிறுகதை எழுதும் உத்தியைத் தொட்டு ம.நவீனின் பதிவு அமைந்திருந்தது.
மேலும், கதையின் முடிவு ஒரு கதைக்கு எத்தனை முக்கியம் என்பதை இக்கதை முடிக்கப்பட்ட விதம்கொண்டு உதாரணம் காட்ட முடியும். ஒருவேளை, வள்ளியம்மா தொடர்ந்து மருத்துவமனைக்குள்ளேயே போராடுவதாக முடிந்திருந்தால் சாதாரண கதையாகியிருக்கக்கூடும். வள்ளியம்மா மீண்டும் கிராமத்தை நோக்கிப் புறப்படுவது இக்கதையின் திருப்பமாகவும் வாசகனுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணுவதாகவும் இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அ.பாண்டியன் நவீன சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவரான வண்ணநிலவனின் ‘பலாப்பழம்’ சிறுகதையைப் புலனக்குழுவினர் வாசிப்புக்குப் பதிவிட்டார். [http://azhiyasudargal.blogspot.my/2011/02/blog-post_20.html?m=1] முதல் வாசிப்பிலேயே வாசகனை கதைக்குள் இழுத்துச்சென்றுவிடும் அற்புதக் கதைசொல்லி என வண்ணநிலவனை அறிமுகம் செய்து வாசகர்களின் ஆர்வத்திற்கு திறவுகோல் இட்டார். ஆண்களின் இயலாமை, அக்கறையின்மை, சோற்றுக்குதவாத கொள்கைப்பிடிப்பு போன்றவற்றை இக்கதையில் சிறுகதையாசிரியர் காட்டியிருப்பதாக ஶ்ரீவிஜி விளக்க, ம.நவீன், சிறுகதையில் வடிவமைதி குறித்துப் புரிந்துகொள்ள இக்கதை உதவும் என்றும் வண்ணநிலவனின் பெரும்பாலான கதைகள் வடிவமைதி கொண்டவை என, தொடர் வாசிப்புக்கு வழிசெய்தார். வடிவமைதி என்பதை இக்கதை வாசிப்பில் உணர முடிந்தது. ஏழ்மையையும், மசக்கையையும், ஏக்கத்தையும் எவ்வித பதற்றமும் மிகைத்தன்மையும் வலிந்து திணித்த உணர்வெழுச்சியும் இன்றி அதேவேளை அத்தனை அழுத்தமாக சொல்லியிருப்பதுதான் வடிவமைதி எனப் புரிந்துகொள்ள முடிந்தது. ஶ்ரீவிஜி கூறுவதுபோல கணவனின் (ஆண்) எதிர்குணாதிசியங்களைச் சாடும் அதேவேளை செல்லப்பாப்பாவின் வழி வேறொரு கோணத்திலிருந்து பார்க்கவும் முடியும் என்பதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, செல்லப்பாப்பா, கணவனது இயலாமை, சூழலுக்குதவா கொள்கைப்பிடிப்பு, எதிர்பார்ப்பை நிறைவேற்றாமை என்ற எதற்கும் எதிர்வினை காட்டாதவளாய் மட்டுமே இருக்கிறாள். கூடுதலாக, கணவனது கதகதப்பில் லயிக்கிறாள். இது மரபான பெண்களின் குணத்தைக் (கணவனை எதிர்த்துப் பேசாமை, பொறுமையாக இருத்தல், கீழ்படிதல் போன்ற குணங்கள்) காட்டுகிறது.
இதனைப் பெண்ணியப் பார்வையாக வகைப்படுத்திய ஶ்ரீதர்ரங்கராஜ் மற்றுமொரு வித்தியாசமான கோணத்திலிருந்து இக்கதையை அணுகிப்பேசினார். பொருளாதாரச் சிக்கல்கள், துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் மனம் ஏதேனும் ஒரு இன்பத்தைத் தேடியெடுத்துக் கொள்கிறது, பலாப்பழம் போல. மேலே முள், தடித்த தோல், நார்ச்சக்கை தாண்டிச் சுளை. ஆனாலும் அதை முயன்று எடுத்துக்கொள்கிறது. கணவனின் வெம்மை, இறுக்கம் தரும் சுகம். வயிறு சிமிண்ட் தரையில் படும்போது உண்டாகும் குளிர்ச்சியை விரும்பும் மனதுதான் வெம்மையையும் விரும்புகிறது. மனம் அதுபோல முள்ளும் சுவையும் என்ற இருமை உடையதுதானே? அப்படியென்றால் யாருக்கு பலாப்பழ மனது? எல்லோருக்கும்தான். பலாப்பழம் சாப்பிட விரும்புவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதும் ஒன்றுதானே. மனம் எதிர்பார்க்கிறது. விரும்பியது கிடைத்தபோதும் கிடைக்காதபோதும் மனது அதைப் பங்கிடுகிறது. மனம் தனித்தில்லாமல் கூட்டாக இருக்க விரும்புகிறது. பலாப்பழம் என்பதன் அர்த்தம் இது எல்லாமுமேதான் என்பதாக அவரது பார்வை அமைந்தது.
இக்கதையை குழந்தைகளின் மனநிலையிலிருந்து அணுகிய ஷர்மிளா ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் பிள்ளைகளிடத்தில் தினமும் நடக்கும் சிறுசிறு போட்டி பொறாமை மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகப் பதிவிட்டார். மேலும், குடும்ப உறவில் விட்டுக் கொடுக்கும் போக்கு கதையின் மையத்தோடு பொருந்திப் போகும் தலைப்பு கிடைக்காத ஒன்றுக்காய் விடாமல் ஏங்கும் மனம் என்ற புரிதலின் பரப்பிலிருந்தும் நண்பர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்திருந்தனர்.
தொடர்ந்து, ம.நவீன் பரிந்துரையின் பேரில் அசோகமித்திரனின் top 10 கதைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ‘பிரயாணம்’ சிறுகதை கலந்துரையாடலுக்குக் கொண்டுவரப்பட்டது. [http://azhiyasudargal.blogspot.my/2010/06/blog-post_25.html?m=1]. இக்கதை குறித்து தனது பார்வையை முன்வைத்துப் பேசிய இளம்பூரணன் கதை கூறப்பட்ட முறை மற்றும் அதிலிருந்து வெளிப்படும் தத்துவார்த்தப் பார்வை ஆகியவற்றைத் தொட்டுப் பேசினார். தத்துவார்த்தப் பார்வைக்குள் செல்வதற்கு முன்னால் கதை கூறுமுறையைச் சிலாகித்துக் கூறி பிரயாணம் மிக தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மனித வாழ்க்கையில் இயற்கை வலியது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூரும் வகையில் இக்கதை நகர்த்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இயற்கையை எதிர்கொள்ளும் மனிதனின் போராட்டம் பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும் எனும் கருத்தையொட்டிப் பேசிய சுதந்திரன் எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் இருந்தாலும் தன்னுடல் குறித்த அக்கறை குருவுக்குச் சாகும்வரை இருக்கிறது என்பதை கதையின் வரிகளிலிருந்து சுட்டிக்காட்டி உண்மையில் சீடனைப்போலவே குருவின் பிரயாணமும் இன்னும் முடிவடையவில்லை என்றார்.
இக்கதையை, இந்திய ஞான மரபின் சாரங்களை உள்ளடக்கிய படைப்பாக வர்ணித்த அ.பாண்டியன், யாக்கை நிலையாமை மற்றும் ஞான உச்சங்களைச் சென்றடைதல் தொடர்பான அலசலை முன்வைக்கும் கதையாக பிரயாணத்தைக் குறிப்பிட்டார். இதில் முக்கியமான கவனிக்க வேண்டியது குரு, சீடன், ஓநாய்கள் என்கிற முத்தரப்பும் அவற்றிற்கு இடையேயான போராட்டமும்தான் எனக்கூறி ‘குரு ஞானத்தின் குறியீடு. சீடன் (கதைசொல்லி) ஞானத்தேடலில் உள்ள மனித மனம். ஓநாய்கள் உலகியல் சார்ந்த ஈர்ப்புகள். இந்த மூன்று தரப்புகளின் ஓயாத போராட்டம் காலமெல்லாம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ஞானம் அடுத்த நிலைக்கு கடத்தப்பட்ட பிறகு உடல் சுமையாகி எந்த சிறப்பும் அற்று அழிகின்றது. மேலும் உடல் ஞானத்தைத் தாங்கி இருந்தபோது நெருங்காத உலகியல் ஈர்ப்புகள் அது இல்லாதபோது இயற்கைக்கு ஏற்ப இயங்கத் தொடங்குகிறது. ஞானத்தேடல் என்பது இயற்கைக்கு எதிரியக்கமாக போராடிப் போராடியே முன்நகர்கிறது. உடல் இயற்கையின் விதிக்குட்பட்டு அழிந்தாலும் கதையின் முடிவு போல ஞானமானது தன் போராட்டத்தைத் தொடர்கிறது’ என தன் கருத்துக்கு மேலும் வலு சேர்த்தார்.
இக்கதையில் மேலும் ஒரு சுவாரசியமான அம்சம் உள்ளதாக விளக்கிய ம.நவீன், தொடர்ந்து ஒரு எழுத்தாளனை வாசித்தலே அவர் மனம் இயங்கும் விதத்தை அறிந்துகொள்ள முடியும் எனக்கூறி மனித மனதின் ஆதிகுணம் குறித்த வெளிப்பாட்டை இக்கதை மிகப் பூடகமாகக் காட்டியுள்ளதாக விளக்கினார். தேடலில் உள்ள சீடன் அத்தனை ஆசாபாசங்களையும் கடந்த ஞானியைப் பிணமாகச் சுமந்து செல்லும்போது எதிர்ப்படுகிறது ஓநாய். அந்த ஓநாய் முன் போராடும்போது சீடனும் ஒரு ஓநாயாக மாறும் இடம் முக்கியமானது. அவன் தான் அவ்வாறு மாறியதை நினைத்துத் தன்னைத்தானே வியக்கிறான். அத்தனைநாள் கற்ற ஆன்மீகமெல்லாம் கடந்து அவன் மரணத்தின் முன் ஒரு மிருகமாகி நிற்கிறான். குருவிடம் கற்றதில் பலனேதும் இல்லை. ஆனால் மறுநாள் அவனுக்கு ஒரு உண்மை புரிகிறது. குரு தன்னைக்காட்டிலும் பெரிய மிருகமாகி இருக்கிறார். உயிர் வாழ்ந்தே ஆகவேண்டும் எனும் சூழலில் மனிதன் தான் கற்ற அத்தனை போதனைகளையும் மறந்து தனது ஆதிகுணத்துடன் வெளிப்படுகிறான். ஒருவகையில் குருவின் இறுதி போதனை அதுதான். மனிதன் கட்டுப்படுத்தப்பட்ட விலங்கு.
வேறொன்றை நோக்கித் தொடங்கும் பயணம், குரு இறந்த மறுகணம் வேறொன்றாக மாறிவிடுவதை சுட்டிக்காட்டிப் பேசிய தயாஜி, ‘தனக்கு போதிக்கப்படும் போதனைகளை எந்தப் பரிசீலனையும் இன்றி எந்தக் கேள்வியும் இன்றிப் பின்தொடரும் மனிதன் கிடைக்கவேண்டிய ஞானத்தை தவறான புரிந்துணர்வின் மூலம் கேள்விகளற்று ஏற்கும்போது எதற்கோ இரையாகிவிடுகிறான்’ எனத் தன் பார்வையை முன்வைத்தார்.
தொடரும்…..
ஒரு கதையை பற்றியும், அக்கதாசிரியர் பற்றியும் விமர்சனங்களை நிறைய படித்ததுண்டு. அவ்விமர்சங்களை நுணுக்கமாய் நோக்கி, உள்வாங்கி அதனை ஒரு கண்ணோட்ட கோர்வையாய் பகிரப்பட்டதை இதுவே முதல் முறையாக காண்கிறேன்.
இதை ஏன் செய்ய வேண்டும்? இதை செய்பவருக்கு என்ன பலன்? இதை செய்யாவிடில் என்ன நட்டம்? போன்ற கேள்விகள் எழுந்தன.
இதுவும் ஒரு ஆளுமை. பலர் கருத்துக்களை/பார்வைகளை ஒரு படைப்பாளி, ஒரே கட்டுரையில் விமர்சிப்பது ஒரு சுலபமான காரியமல்ல. அனுபவமும் ஆற்றலும் இல்லையேல், இவ்வகை கட்டுரைகள் யாரையும் கவராது, மாறாக காட்டங்களை உண்டாக்கும். சகோதரியிடம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, என பதில் கிடைத்தது.
தங்கள் முயற்சிக்கு வாழ்துக்கள்??????.
தொடர்ச்சியை படிக்க ஆர்வப்படுகிறேன்.
நன்றி,
கலைசேகர்
இந்த முயற்சி இப்படி ஒரு தொகுப்பாக வரும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. நாம் உள்வாங்கி பதியப்பட்ட பார்வை எழுத்துவடிவம் பெறுகிறது என்கிறபோது மனது குதூகலிக்கவே செய்கிறது. மேலும் இந்த பாணி சில வளரும் இலக்கிய குழுக்களுக்கு வழிகாட்டுதலாகவும் திகழலாம். தொடருங்கள் விஜி. வாழ்த்துகள்
அன்பான நண்பர்களுக்கு. உண்மையில் எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இன்று பூச்சோங்கில் நடந்த சிறுகதை கலந்துரையாடலில் கலந்துகொண்டு இங்கும் வந்த நண்பர்களின் ஆர்வம் பாராட்டுக்குறியது. பலர் இந்த whatsapp குழுவைத் தொடரச்சொன்னாலும் தொடர வேண்டாம் என நினைக்க ஒரே காரணம் நமது எழுத்து இன்னும் விரிவான தளத்தில் இயங்க வேண்டும் என்ற அக்கறையினால்தான். Whatsappல் எழுதும் போது அதன் தன்மைக்கு ஏற்ப எழுதுகிறோம். ஆனால் புதிதாக எழுத வந்த கலைச்செல்வன், ஐஸ்வரி, எழுத்தாளர்கள் உதயகுமாரி, ஸ்ரீவிஜி போன்றோரின் கருத்துகள்/ விமர்சனங்கள். ஆச்சரியப்படுத்துகின்றன. அவை நீளமான கட்டுரைகளாக வரும்போது இன்னும் வலுவாக இருக்கும். அதுவே நமது இன்றைய தேவை. உங்கள் எழுத்துகள் புலனத்தின் வடிவத்துக்கு ஏற்ப சுருங்கிவிடக்கூடாது. நாளடைவில் மனம் நாம் ஏதோ எழுதிவிட்டதாக நம்பத்தொடங்கும். ஆனால் விரிவான முயற்சிகள் எதையும் செய்திருக்க மாட்டோம். பத்திரிகைகள், இயக்கங்கள் என பலவும் இப்படித்தான் சில எழுத்தாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு அவர்கள் வளர்ச்சி விரிவாகாமல் தடுக்கிறது. வல்லினம் அந்த தவறை செய்யக்கூடாது என நினைக்கிறேன். உங்களின் முழு ஆற்றல் வெளிவர புலனக்குழு சரியான தளமல்ல. ஆனால் வல்லினத்தில் உங்கள் ஆக்கங்கள் இதுபோன்ற சிறுகதையை ஒட்டிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. தாராளமாக மாதம் ஒரு கதையை விரிவான பார்வையில் விமர்சிக்கலாம். நல்ல பயிற்சியாக இருக்கும். புலனத்திலோ நேரிலோ ஏதும் மனம் நோகும் படி பேசியிருந்தால் அது இலக்கியத்தின் நன்மைக்காக மட்டுமே. உங்கள் ஒவ்வொருவரின் ஆளுமையும் எனக்கு முக்கியம். நண்பர்களாகத் தொடர்பில் இருப்போம். இப்போது விடைபெறுவோம். நன்றி.
இறுதி நாளில் நவீன் சொன்ன கருத்து இது. சிந்திக்கக்கூடியதே.