இன்னொரு கிளை முளைக்கிறது

tyaaஅது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும்.

முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு பெண்தானாம். அவளை தொடர்ந்து பலரும் மரக்கிளைகளில் ஆளுக்கு ஒன்றென தேர்ந்தெடுத்து தொங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்; முதல் நாள் சிரித்துப்பேசியவர்கள் கூட அந்த மரக்கிளையில் வெளியே வந்த நாக்குடன் நாண்டுகிட்டதும் உண்டு.

இன்னும் அந்த மரத்தை குறித்து பல கதைகள் எனக்குத் தெரியும்.  யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்கமாட்டேன். இக்கதைகளை எனக்கு சொன்னது அந்த மரம்தான். நம்புங்கள், கதைகளை சொன்னது அந்த மரமேதான். தன் கதைகளை என்னிடம் சொல்லும் அளவுக்கு மரமும் நானும் நெருங்க காரணமாக இருந்தவர் என் பாட்டிதான்.

பாட்டி.

பார்ப்பதற்கு பாட்டி மாதிரியே இருக்காது இளமையாக இருப்பார். ஆனால் பாட்டியை நாங்கள் யாரும் பாட்டி என்று கூப்பிடக்கூடாது . தாத்தாவின் உத்தரவு. நாங்கள் பாட்டியை காட்டுப்பூ எனதான் அழைப்போம்.  தாத்தாவும் அப்படித்தான் கூப்பிடுவார். இது எங்களுக்கு வேடிக்கையாகவே இருக்கும். வயதுக்கு ஏற்றார் போல கூன் வளைந்திருந்தாலும் தாத்தாவுக்கு என்னமோ இளமை ஊஞ்சலாடுவதாய் நினைப்பு. பாட்டிக்கு நிறைய கதைகள் தெரியும். தாத்தாவுக்கு தெரிந்தெல்லாம் ‘பாட்டி’, ‘பாட்டி’ மட்டும்தான். பாட்டியை இளமையாக வைத்திருப்பது அவர் வைத்திருக்கும் கதைகள்தான் என்று நினைத்துக்கொள்வேன்.

தாத்தாவுக்குப் போட்டி போடும் அளவுக்கு  பாட்டிக்கு நெருக்கமானது அந்த மரம். இன்னும் அந்த மரம் அப்படியே இருக்கிறது. கிளைகள் மட்டும் தூக்கில் தொங்குபவர்களுக்காக அவ்வபோது புதிது புதிதாக வந்துவிடும். தொங்கியவரை கீழே இறக்கும் போதே கிளையும் தானாக உடைந்துவிடும். அதுவரை தாங்கிய கிளை, முடிச்சினை அவிழ்க்கும் போது உடைவதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.

இரவுவிலும் , அதிகாலை நேரமும் பாட்டி அந்த மரத்திடம் தனியேச் செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைகளைப் பாட்டி சொல்வது அந்த மரத்திடம் இருந்து கேட்ட கதையாகத்தான் இருக்கும் என தோன்றியது எனக்கு. நான் புத்தகங்களில் கூட படித்திராத கதைகள் அவை.

பாட்டியின் கதைகளில், காடு, ஆதிவாசிகள், புலி, புல், மலை, மான் என பல கதாப்பாத்திரங்கள் இருக்கும். காடு மனிதர்களுடம் பேசும் .புலி இறகுகளுடன் பறந்துகொண்டே இரை தேடும். புல் நினைத்த நேரம் மரமாகும் ; பனி நேரம் புல்லாகும். மலை தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும். மான், பூமிக்கடியில் வாழ்ந்துக்கொண்டிருக்கும். இப்படி பல.

தாத்தா தூங்கிய பிறகே பாட்டி மரத்திடம் செல்வது வழக்கம். அன்றைய தினம் நானும் தாத்தாவும் ஒரு விளையாட்டு விளையாடினோம். பாட்டிக்குத் தெரியாமல் பின்னால் செல்லவேண்டும் என்பதே அந்த விளையாட்டு அந்த விளையாட்டைத் தாத்தாதான் முன்மொழிந்தார். ஏன் தாத்தாவுக்கு அப்படி ஒரு விளையாட்டு விளையாட தோன்றியது என தெரியவில்லை. இத்தனை நாளாய் ஏன் அந்த விளையாட்டை விளையாடவில்லை எனவும் தெரியவில்லை. எப்படியும் பாட்டிக்கும் மரத்திற்கும் இடையில் இருக்கும் ரகசியம் இன்று தெரியப்போகிறது என்ற நினைப்பே என்னை தூங்கவிடவில்லை. வழக்கத்துக்கு மாறாக தாத்தா அன்று அடிக்கடி சிரித்துகொண்டே இருந்தார். பாட்டியையும் கிண்டல் செய்துக்கொண்டே இருந்தார். பாட்டியிடமும் சதா பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

நாங்கள் படுக்கச் சென்றோம். நான் கால் முதல் கழுத்து வரை போர்வையால் என்னை மூடிக் கொண்டேன். தாத்தா எப்போதும் போல் சில கணைப்புகள் இருமல்களுக்குப் பின் கட்டிலில்  சாய்ந்து படுத்து தலைக்கு கைகளை அணையாக வைத்துக் கொண்டார். சற்று நேரத்தில் பாட்டி அறைக்குள் மெல்ல நுழைந்தார். நாங்கள் தூங்குவதை பாட்டி உறுதி செய்துகொண்டார். வீட்டின் பின்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பாட்டி வெளியேறிவிட்டார் என்பதை நாங்கள் யூகித்தோம்.. தாத்தா மெல்ல எழுந்து என்னை கவனித்தார்.

தாத்தா மெல்லியக்குரலில் “டேய் நீயும் தூங்கலையா..”

“பாட்டியை பாக்கலாம்னு சொன்னிங்க அதான் தூக்கமே வரல..”

“ச்சரி ச்சரி… சத்தம் போடாம என் பின்னாலயே வா…”

தாத்தாவை பின் தொடர்ந்தேன். திறந்திருந்த பின்வாசக்கதவில் இருந்து தாத்தா எட்டி பார்த்தார். அடுத்து அவர் என்னைக் கூப்பிடுவார் என காத்திருந்தேன். தாத்தா கூப்பிடவில்லை. மெல்ல நானும் தாத்தாவுக்கு அருகில் சென்றேன். தாத்தா சிலை போல நின்றுக்கொண்டிருந்தார். தாத்தாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. முதுமையினால் வந்த நடுக்கமல்ல அது. அது நடுக்கமா; பயமா.

நான்., மெதுவான குரலில் ‘தாத்தா..தாத்தா… என்ன பாக்கறிங்க.. நான் வரட்டா..?’

தத்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நடுக்கம் மட்டும் இருந்தது. இன்னும் அருகில்taya சென்றுவிட்டேன். தாத்தாவின் கையை பிடித்தேன். சுயநினைவு வந்தவராய் தாத்தா என்னைப் பார்த்தார். பார்த்தவர் திரும்ப மரத்தை பார்க்கவும். அவருக்கு எதிரில் பாட்டி நின்றுக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. அசாதாரண நடுக்கத்தை அவர் உடல் காட்டியது. அப்படியே என்னை பாட்டிக்கு தெரியாதது போல பக்கவாட்டு சுவரில் மறைத்தார்.

விடிந்தது. தாத்தா இன்னமும் என் கையைத்தான் பிடித்துக்கொண்டே படுத்திருக்கிறார். எப்போதும் எழுப்பும் பாட்டியின் குரல் இன்று பல எதிரொலிகளாகக் கேட்டது. தாத்தாவும் பாட்டியும் பேசத்தொடங்கினர்.

“நீங்க கொடுத்த சத்தியத்தை மீறிட்டிங்க..”

“இல்ல காட்டுப்பூ, சும்மா ஒரு  விளையாட்டுக்குத்தான்…”

“இதென்ன விளையாட்டு, சத்தியத்தை மீறிட்டு சாக்குபோக்கு சொல்றியா, நீ, விளையாட்டுன்னு…?”

முதன் முறையாக ஓர்மையில் அழைத்தார் பாட்டி.

“காட்டுப்பூ இதுவரைக்கும் நீ சொன்னதைதானே செய்தேன்..”

“போதும் போதும், நா அப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்…. இதெல்லாம் நடக்கும்ன்னு, நீதான் சத்தியம் செய்றேன்…சாதித்துக் காட்டறேன்னு என்னை சம்மதிக்கவச்ச..”

பாட்டியின் குரல் கரகரத்தது. தங்க நிற முகம் நீல வண்ணமாகியது. அவளில் கண்களில் இதுவரை நான் பார்த்திடாத வன்மம் அரங்கேறியது. கண்கள் சிவந்தன. வானவில்லின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து , சிவந்த நிற கோடாய் மாறியது அவளது புருவம். கன்னங்கள் அதிர்ந்தன. அவள் உடல் உதரத்தொடங்கியது. தலையை ஆட்டவும் கழுத்துவரையிருந்த முடி பூமியைத்  தொடுமளவு வளர்ந்து கரு அலையென கூந்தல் பொங்கியது. நகங்கள் கூர்மையாகின. அவளின் உடல் வழக்கத்தைவிட பன்மடங்காகியது. உடைகள் கிழிந்தன. எப்படி, இத்தனை கரு நீலமாக இருக்க முடியும் உடல். நாக்கை அவள் நீட்டவும் அது, தரைவரை வளைந்து நீண்டது. நாக்கிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் இரத்தம் அதன் வீச்சத்தை வீசியது.   கைகளை அகல நீட்டினாள். அவள் உஷ்ணமானாள். வெப்பம், பக்கத்திலிருப்பதையெல்லாம் பொசுக்கியது.

தாத்தா தன் தவறை ஒப்புக்கொள்ளும் விதமாக மண்டியிட்டார். கைகளை கட்டிக்கொண்டு தலையை கவிழ்த்தார். எங்கிருந்து வந்ததென தெரியாமல் ஒரு கத்தி. கத்திதான் என சொல்லிட முடியாது. மரத்தின் கிளை போலவும் இருந்தது. வலது கை உயர்ந்தது. மின்னலின் வேகமாய் தாத்தாவின் தலை துண்டிக்கப்பட்டது. தாத்தாவின் சுடு இரத்தம் என் முகத்தில் தெரித்தது.

கூச்சலும் ஆர்ப்பரிப்பும் திடுக்கிட வைத்தது.

வீட்டிற்கு வெளியில்தான் கூட்டம் கூடியிருந்தது. தாத்தாவும் நானும் வியர்வையின் நனைந்துதான் எழுந்தோம். தாத்தா கழுத்தை தடவிப்பார்த்துக்கொண்டே எழுந்தார். நாங்கள் வாசல் கதவை பதட்டத்துடன் திறந்தோம். கூட்டமாகத்தான் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கூச்சல் சத்தம் ஒப்பாரியாக மாறியது. அவர்களின் பார்வை மரத்தை நோக்கியே இருந்தது. எந்த சலனமுமின்றி தாத்தாவும் மரத்தை நோக்கி நடக்கலானார். நானும்.

மரத்தின் கிளையொன்றில் பாட்டி தொங்கிக்கொண்டிருந்தாள். அழகிய முகம் இன்னமும் அழகாக தெரிந்தது. சிரித்த முகமாய் செத்திருந்தாள் பாட்டி. எல்லோரும் பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா, பாட்டி தொங்கிகொண்டிருக்கும் கிளையையே வெரித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த கிளை அதுவரை அங்கு இருந்ததில்லை. ஒரே நாளில் எப்படி முளைத்தது. அதும் பாட்டியின் உடலை தாங்கும் அளவுக்கு ஒரே நாளில் வழுவான கிளை முளைத்ததா. தத்தாவின் கண்கள் இன்னும் அந்த கிளையிலேயே இருந்தது. அது காட்டுப்பூவில்ல … காட்டுப்பூவில்ல அது… என்று தாத்தா புலம்பத்தொடங்கினார். அவருக்கு பித்துபிடித்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். கைத்தாங்களாக தாத்தாவை சிலர் அப்படியே நாற்காலியில் அமரச் செய்தார்கள். பாட்டி இன்னும் தொங்கிகொண்டுதான் இருக்கிறாள். அது தற்கொலையா இல்லை, மரத்தின் ஊஞ்சலாட்டமா என தெரியாதவாரு காற்றில் பாட்டி கயிற்றுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நாள் , தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவ்வபோது,

“இந்த சத்தியத்தை நான் காப்பாத்தியிருக்கனும்…நான் காப்பாத்தியிருக்கனும்… என்ன மன்னிச்சிடு”

என்றே புலம்பலானார். தினம் இரவில் திடுக்கிட்டு எழுத்து தன் தலை, கழுத்தில் இன்னமும் இருக்கிறதாவென்று தடவிப்பார்ப்பதை அப்பாவும் கவனித்ததாய் சொல்லிக்கொண்டிருந்தார். பாட்டியின் இறப்புக்கு வந்திருந்த அம்மாவும் அப்பாவும், என்னை இனியும் அங்கு வைத்திருப்பது நல்லதல்லவென்று பள்ளி விடுமுறைக்கு முன்பே கூட்டிப்போவதாக சொல்லிக்கொண்டார்கள்.

தாத்தாதான் “நான் இருக்கபோறது என்னமோ கொஞ்ச நாள்தான்.. அதுக்குள்ள ஸ்கூலு லீவு முடிஞ்சிடாது… மொல்லமாவே பேரனைக் கூட்டிப்போங்க” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னார்.

தாத்தாக்கும் பாட்டிக்கும் இடையில் என்ன சத்தியம் இருந்திருக்கும். பாட்டிக்கும் மரத்திற்கும் என்ன சம்பந்தம். அன்று, தாத்தா எதை பார்த்து ஸ்தம்பித்து நின்றார். என் கனவில் வந்தது போலவே அவர் கனவில் தலை துண்டிக்கப்படுவது நிகழ்கிறதா..? பாட்டியின் இறப்பை விட, பாட்டி தொங்கிய மரக்கிளை தாத்தாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஏன். இப்படி கேள்விகளுக்கு மேல் கேள்விகள் உள்ளுக்குள் இருக்க. அப்பாவி முகத்துடன் தாத்தாவுடன் நேரத்தை கடத்தினேன்.

அப்பா தனியே அழைத்து, “அய்யா, தாத்தாக்கும் மனசு சரியில்ல… கொஞ்சம் பார்த்துக்கோ நாளைக்கு நானும் அம்மாவும் போகனும்… ஸ்கூலு லீவு வரைக்கும் இங்க இருந்துக்கோ… அப்பறம் தாத்தாக்கு ஒரு வழியை ஏற்பாடு செய்துடறோம். என்ன பார்த்துக்கறயா…? பயமா இருக்கா..?”

பதிலையும் அவராகவே நினைத்துக்கொண்டு; அம்மாவுடன் மறுநாள் புறப்பட்டார்.

                                                                                   ***

கார் புறப்பட்டது.

‘என்னங்க… இந்த வயசுல போய் உங்கம்மா தூக்குமாட்டிருக்காங்களே… பையனை வேற அந்த வீட்டுலயே விட்டுடு வந்திருக்கோம்… உங்க அப்பாவை   நினைச்சா… ’

“பைத்தியம் மாதிரி தோணுதா… மணிக்கு எதும் ஆகிடும்ன்னு நினைக்கறியா…?”

நாகலெட்சுமி தன் கணவனை கூர்மையாக பார்த்தால்

“தோ பாரு, அம்மா செத்துட்டாங்க… விதி முடிஞ்சிபோச்சி… அவங்களுக்கு ஏதோ மனக்குழப்பம், தற்கொலை பன்னிக்கிட்டாங்க அப்பாவ பார்த்தில… எப்படி ஓடஞ்சிபோயி இருக்காரு. மணி கூட இருந்தா அவருக்கும் கொஞ்ம் ஆறுதலா இருக்கும்ல… மணி ஒன்னும் சின்ன பையன் இல்ல… அப்படி ஒன்னும் மணிக்கு நடந்திடாது…”

“எனக்கு என்னமோ மனசே சரியில்லங்க… அந்த மரத்தை பார்த்தாலே பயமா இருக்கு… பேசாம அதை வெட்டிட வேண்டியதுதானே…?”

நாகலெட்சுமி சொல்லி முடிக்கவும், கார் எதையோ மோதித்தள்ளவும் சரியாக இருந்தது. கார் டயர் தேயும் அளவு சத்தம் கேட்டு, நிறுத்தப்பட்டது. அவளும் குமாரும் அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் காரைவிட்டு இறங்கவில்லை. அந்த சாலையும் சரியான விளக்கொளி இல்லாமல் அனாதையாகிக்கிடக்கிறது. எதை மோதினோம் யார்..என்ன.. போன்ற குழப்பத்தில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். தைரியத்தை வரவைத்துக்கொண்டு குமார், காரைவிட்டு இறங்கினான். பின், திரும்பி;

“பயப்படாம இரு, நான் என்னன்னு பார்த்து வந்திடறேன்… கதவை லாக் செய்துக்கோ… பயப்படாத”

குமார் சில நிமிடங்களில், வியர்த்த முகமாய் காரில் ஏறினான். காரின் குளிர்சாதன பட்டன் அதன் கடைசி எல்லையை தொட்டிருந்தாலும் இன்னமும் கழுத்தில் வியர்வை திட்டுகள் இருக்கின்றன.

“எதை மோதிட்டிங்க… நாயா..?”

“ஏன் மோதினது மனுசனா இருக்ககூடாதா..” என்று சர்வ சாதாரணமாய் கேட்டு தன் மனைவியை திக்குமுக்காட வைத்தான் குமார். சில சமயங்களில் இப்படி பேசி தன் பயத்தை மூடி மறைப்பதில் கைத்தேர்ந்தவன் அவன்.

“நாய் மாதிரிதான் தெரியுது”

என்றவன், வானொலியை திறந்து சத்ததை அதிகமாக வைத்தான். மனைவி எரிச்சலில் ஒரு முறை அவனைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு, கைகுட்டையை முகத்தில் போர்த்திக்கொண்டாள். வானொலி சத்ததை குறைத்தவன் மனதில் சில சம்வங்கள் நிழலாடத்தொடங்கின.

சற்று முன் என்ன நடந்தது… காரில் இருந்து இறங்கியதுமுதல் கண்ட காட்சிகள் மிண்டும் கண் முன்தெரிந்தன

முதலில் காரின் முன் சக்கரத்தைதான் கவனித்தான் சக்கரத்தின் அடியில் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு முறை மனைவியைப் பார்த்துவிட்டு பின்னாள் சென்றான். அங்குதான் நின்றுக்கொண்டிருந்தது அந்த மரம். அம்மா அடிக்கடி போய் பேசும் அதே மரம்தான். குமாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி அந்த மரம் இங்கு வந்திருக்கும். அம்மா தொங்கிய அதே கிளைதான் அவனைப் பார்த்து அசைந்தது. இல்லை அசைத்தது.

அந்த மரமே மாபெரும் மாயையாக தெரிந்தது. மாயையை எப்படி வகைப்படுத்துவது. மாயமா, மர்மமா, மாபெரும் உண்மையா, நிலைத்தன்மையா , புதிர் பிம்பமா.

இருட்டிலும் தெளிவாக தெரியும்படி அந்த மரம் நின்றுக்கொண்டிருந்தது. ஜொலிக்கவில்லை. ஆனால் மற்ற எதையும் தவிர தன்னை மட்டும் ஒளியால் சூழ்ந்திருந்தது அது மாய மரம்தான். அம்மா அப்படித்தான் சொல்லிச் சென்றாள்.

“அது மாய மரம் அதான்… போ போ போய் படிக்கற வேலையைப்பாரு… இனிமேலும் அந்த மரத்துகிட்ட போய் விளையாடாத…”

சிரித்துக் கொண்டே அம்மா சொன்னாள். அப்பா அந்த வழியே வந்தாலும். காது கேட்காதது போல வேறெங்கோ பார்த்துக் கொண்டுச் சென்றார். அம்மா அப்பா வெளியில் செல்லும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். பிறகு அம்மாவும் குசுனிக்குச் சென்றாள்.

இனிமேல் அந்த மரத்துக்கு அருகில் செல்வது என்ன.. அந்த மரத்தை பற்றி யாரிடமும் சொல்வதுமில்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.

விளையாடிக்கொண்டிருந்தோம். ஓடிப்பிடித்து விளையாடுவது. போலிஸ் திருடன் என்பது அதன் பெயர். எங்கள் குழுவில் யாரும் விளையாட்டில் கூட போலிஸாக விரும்புவதில்லை. காளிதாஸின் அப்பாவை போலிஸ்காரர்கள் கூட்டிச்சென்று, கொன்று விட்டார்கள் என்ற தகவலும் அதன் காரணங்களில் ஒன்று. இன்னொன்று, போலிஸ்தான் பிடிக்கவேண்டும். திருடர்கள் ஓட வேண்டும். எங்களுக்கு எப்போதும் ஓடத்தான் பிடிக்கும். விசுவின் அம்மாவும் இந்தோநேசியக்காரனுடன் ஓடியிருக்கிறார். பல ஆண்டுகள் ஆகியும் பிடிபடவில்லை.

ஆளுக்கொரு இடத்தில் மறைந்துக்கொண்டார்கள். எப்படியோ பேசிப்பேசி பாலாவை போலிஸாக்கிவிட்டோம். சீக்கிரத்தில் அவன் கையில் மாட்டி போலிஸாக விரும்பவில்லை. ஆகவேதான் அவன் யோசிக்காத இடமாக இருக்கும் மரத்திடம் சென்றேன். இயல்பாகவே எங்களுக்கு அந்த மரத்திடம் பயமிருப்பதால். நான் அங்குதான் மறைவேன் என பாலா யோசித்திருக்கமாட்டான். எனக்கே ஆச்சர்யமாக தோன்றிய ஐடியா அது.

என்னைப்போல இரண்டு மூன்று பேர் ஒரு புறம் நின்றால், மறுபுறம் தெரியாது. அவ்வளவு அடர்த்தி அந்த மரம். அப்படியிருந்தும், மறைந்தது போதாதென்று. மரத்தில் ஏறலாம் என நினைத்தேன். ஏறினேன். கடினமாகவேத் தெரியவில்லை. யாரும் பின்னால் இருந்து தள்ளினார்களா.. யாரும் முன்னால் இருந்து இழுத்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை.. ஏறுவது அவ்வளவு  சுலபமாக இருந்தது.

இலைகளுக்கு நடுவில், பெருத்த கிளையொன்றின் வளைவில் அமர்ந்துக்கொண்டேன். கை சும்மா இருக்கவில்லை. கிளையின் காய்ந்த மட்டைகளை பிய்த்துக்கொண்டிருந்தது. மரம் சமபந்தம் இல்லாமல் குலுங்கும்போதே எச்சரிக்கையாகியிருக்கலாம். அமர்ந்திருந்த கிளை சட்டென முன்னோக்கி உருண்டது. நான் தடுமாறிப் போனேன். மரக்கிளையில் இருந்த என் பிடி சுயமாக தளர்ந்தது. பூமியை நோக்கி என் உடல் சரிந்தது. தரையை என் உடல் நெருங்கிய நொடியில். இதயம் ஸ்தம்பிக்கும்படி இலைகளால் சூழப்பட்டேன். இறகு  முளைத்த இலைகள் அவை. அப்படியே என்னை தாங்கின. மேலே கிளைவரை கொண்டு போயின. நான் பிய்த்து போட்ட காய்ந்த மரப்பட்டைகள். நெளிந்துக்கொண்டு மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொண்டன. பாலாவின் குரல் கேட்டது. சிறகு முளைத்த இலைகள் என்னை எந்த சேதமுமில்லாமல் கீழே இறக்கிவிட்டன.

அதற்கு பின் என்னால் விளையாட முடியாமல் போனது. மனம் முழுவதும் சற்றுமுன் நிகழ்ந்த அமானுஷ்யம் மட்டுமே நிரம்பியிருந்தது . வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் சொன்ன போதுதான், அம்மா அப்படியொரு பதிலும் அப்பா கண்டுக்கொள்ளாமலும் சென்றதும் நிகழ்ந்தது.. அந்த மரம் எங்களைக் காக்கும் தெய்வம் போல நினைத்தாலும். அதன் அருகில் செல்வதை தவிர்த்தேன்.

அந்த நம்பிக்கையை அம்மாவின் தற்கொலை கொலை செய்தது.

திடுக்கிட்டு கண்விழித்தவனுக்கு விடிந்து விட்டது அப்போதுதான் தெரிந்தது. எப்போது வந்தோம் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டு வாசலிலிருந்த காரிலிருந்து மனைவி பொருட்களை எழுத்துக் கொண்டிருந்தாள்

“ஆமா மணி எங்க…”

“என்ன விளையாடறிங்களா… நீங்கதானே மணி லீவு முடியர வரைக்கும் உங்க அப்பாகூட இருக்கட்டும்ன்னு சொன்னிங்க…”

“நானா சொன்னேன்..?”

நாகலெட்சுமி தன் கணவனை ஒருமுறை வெரித்துப் பார்த்துவிட்டு விருட்டென வீட்டுக்குள் போனாள்.

குமாருக்கு குழப்பமாகவே இருந்தது. சட்டென மாய மரம் கண்முன் தோன்றி மறைந்தது.

அம்மா தொங்கிகொண்டிருக்கிறாள். மீண்டும் ஒரு கிளை முளைக்கிறது. அதிலிருந்து இலைகளே கயிறாக ஒன்றினைகிறது. அதன் நுனி மரத்தை ஒரு சுற்று சுற்றிய பிறகு வீட்டினுள் சென்றது.

“என்னங்க.. என்ன செய்றிங்க.. சாமான்களை எடுத்துட்டு வரிங்களா..”

                                                                                  ***

“நீங்க இனிமேல என்ன காட்டுப்பூன்னுதான்  கூப்பிடனும் சரியா..?”

“எனக்காக நீ வந்திருக்கும் போது உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்…”

“ஏன்னு கேட்க மாட்டிங்களா…”

“ஏன் கேட்கனும்… நீ யாரு… இந்த காட்டுக்கு ராணி. நீ மட்டுமில்லன்னா என்னை இதே இடத்துல கொன்னு, உங்க ஆளுங்க சாப்பிட்டிருப்பாங்க…”

“வேணாம் அதை பத்தியும் இனிமேல பேச வேண்டாம். நாம் உடனே இங்கிருந்து போகனும். சொன்ன வாக்கை காப்பாத்துவிங்களா…?”

“என்னோட தலை என் கழுத்துல இருக்கிற வரைக்கும்… எதைப்பத்தியும் உன்கிட்ட கேட்க மாட்டேன்..”

காட்டுப்பூ, கையை நீட்டினாள். அவன் கையை பற்ற முயற்சிக்கும்போது. பக்கத்திலிருந்த மரம் தன் கிளையை அவள் கையுடன் வைத்து பற்றியது. அவள் அந்த கையை இறுக பற்றினாள். அந்த கிளை கொஞ்சம் கொஞ்சமாக அவள் கைப்பிடியளவு கிளையை விட்டு பாதியை தானே முறித்து, உடைத்து மீண்டும் மரத்துக்கே திரும்பியது.

அவள் , தன்  மார்பை மறைந்திருந்த தடித்த இலையை கழுத்து வழியே வெளியே எடுத்தாள். மார்புக்கு மத்தியில் கையில் இருந்த கிளையை வைக்கிறாள். மரத்துண்டு வைரம்போல் ஒளிபரப்பியது. பின் சதை பிளந்து கிளை மார்புக்கூண்டுக்குள் புதைந்தது.

                                                                                ***

தாத்தா கூண் விழுந்த முதுகை லேசாக நிமிர்த்தி மரத்தை அன்னாந்து பார்த்தார். அவர் மரத்துக்கு மிக அருகில் நின்றிருந்தார். மர இலைகள் அமாவாசை இருளில் மின்னும் நட்சத்திரமாக மினுங்கிக் கொண்டிருந்தன. அமைதியான நள்ளிரவில் இலகைகள் கிளைகளோடு உரசி சலசலத்த ஓசை ரகசிய குரலில் யாரோ பேசுவதை ஞாபகப்படுத்தியது. மிக சன்னமான அந்த குரல் பின் மெல்ல திரட்சி பெற்று ஒரு வயோதிக குரலானது. தாத்தா அசையாமல் நின்றார். அது காட்டுப்பூவின் குரல். தாத்தாவின் உடல் குலுங்குவதை  பின்னால் இருந்து பார்க்கும் போது தெளிவால தெரிந்தது. இப்போது தாத்தாவின் குரல் கேட்டது.

“காட்டுப்பூ…… காட்டுப்பூ…” தாத்தாவின் குரல் பெரும் அழுகையின் ஊடே வெடித்துக் கிளம்பியது

தன்னை ஒரு முறை சிலிப்பிக் கொண்ட அந்த மாய மரத்தின் ஒரு முனையில் புதிதாய் ஒரு கிளை புறப்பட்டுக் கிளம்பியது.

ஓவியம் : தீர்த்த பாதா

3 comments for “இன்னொரு கிளை முளைக்கிறது

  1. கங்காதுரை கணேசன்
    June 15, 2017 at 4:42 pm

    நண்பா…. இக்கதையைப் புரிந்துகொள்வது எனக்கு மிகச் சவாலாக அமைந்தது. தொடர்ந்து உன் எழுத்துக்களை வாசிக்கும் எனக்கு உமது எழுத்தில் இருக்கும் புதிய பரிமாணத்தை நன்றாக அறியமுடிகிறது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்

  2. Venkat
    October 12, 2022 at 11:14 pm

    அருமை. காட்டருவி போன்ற நடை. மாய உலகம் கண் முன் விரிகிறது. கவிதையாய் வந்து விழும் வார்த்தைகள்.👌

    • November 15, 2022 at 12:02 pm

      அன்பும் நன்றியும்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...