
குறிப்பு : மலேசியத் தமிழர்கள் நெடுங்காலமாகவே மிகச் சமத்தாக ஒளித்துவைத்து வளர்த்தெடுக்கும் பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடையாளங்களின் கறைகளை நெம்பிக்காட்ட பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடுக்குகளையே கட்டுரையில் சில இடங்களில் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
நமது நாட்டில் அவ்வப்போது தமிழர்களிடம் ஏதாவது பிரச்சனையை ஒட்டி மிகப்பெரிய கொதிப்பலை வேகமாக எழுந்து அதன் அதிர்வு நாடு முழுதும் பற்றிப் படர்வதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த எழுச்சி போராட்டங்கள் பல்வேறு சமயங்களில் சாதகமான விளைவுகளை நமது சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்கப்பட்டது முதல், மிக அண்மையில் எஸ்.பி.எம் பாட விவகாரத்தில் தமிழிலக்கியத்தை நீக்கியதில் ஏற்பட்ட கொந்தளிப்பு வரை சட்டென மலேசியத் தமிழர் போராட்ட வரலாறு ஒரு பட்டியலாக மனதில் உருவாகிறது.


