மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முக‌வ‌ரி’ எனும் மாத‌த்திற்கு இரு முறை வெளிவ‌ரும் இத‌ழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த‌ ஆண்டுத் தொட‌க்க‌த்தில் சிலாங்கூர் மாநில‌ அர‌சால் வழங்கப்ப‌ட்ட‌ தமிழ் மொழிக்கான ‘இள‌ம் க‌விஞ‌ர் விருது’ நவீனுக்குக் கிடைத்த‌து. ‘தாமான் மெலாவாத்தி’ த‌மிழ்ப்ப‌ள்ளியில் த‌மிழ் ஆசிரிய‌ராக‌ப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.

- ஷோபாசக்தி
18.07.2010

நான் பிற‌ந்த‌து மலேசியாவின் ‘கெடா’ மாநில‌த்தில். 4-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வ‌ரை கெடா மாநில‌த்தின் ஒரு ப‌குதியில் (க‌டார‌ம்) க‌ட‌ல் வ‌ழி வாணிப‌ம் ந‌ட‌ந்த‌தற்கான‌ சான்றுக‌ள் உள்ள‌ன. இந்து ம‌த‌ம், பௌத்த‌ம், ச‌ம‌ண‌ ம‌த‌ம் போன்ற‌வை அங்கு இருந்த‌த‌ற்கான‌ த‌ட‌ய‌ங்க‌ளும் சிலைக‌ளும் சிவ‌லிங்க‌ங்க‌ளும் இன்னும் அர‌சால் வேறு வ‌ழியில்லாம‌ல் ‘பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கு’ எனும் இட‌த்தில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. சோழ‌ ம‌ன்ன‌ன் ப‌டைக‌ள் அங்கு வ‌ந்த‌தாக‌வும் த‌க‌வ‌ல் உள்ள‌து. பண்டைக் காலத்தில் த‌மிழ் மொழி அங்கு புழக்க‌த்தில் இருந்த‌த‌ற்கும் சான்றுக‌ள் உண்டு. கெடா மாநில‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் பொதுவாக‌வே த‌மிழ்மொழியிலும் இல‌க்கிய‌த்திலும் ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌த‌ற்கு இம்ம‌ண்ணின் வ‌ர‌லாற்றுத் த‌ன்மையைக் கார‌ண‌மாக‌க் கூறுவ‌தால் ம‌ட்டுமே இத்த‌க‌வ‌லை இங்கு ப‌திவு செய்கிறேன். எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன், மா.ச‌ண்முக‌சிவா, சீ.முத்துசாமி, கோ.புண்ணிய‌வான், யுவ‌ராஜ‌ன், சிவா பெரிய‌ண்ணன் போன்ற பல எழுத்தாள‌ர்க‌ள் பிற‌ந்த‌ மாநில‌ம்.

அம்மாநில‌த்தில் ‘லுனாஸ்’ எனும் சிற்றூரில் இன்று முழுதுமாக‌ இல்லாம‌ல் போய்விட்ட‌ செட்டி க‌ம்ப‌த்தில் எங்க‌ள் வீடு. என‌க்கு விப‌ர‌ம் தெரிந்த‌ நாள்முத‌ல் அப்பா ப‌ல்வேறு வேலைக‌ளைச் செய்துள்ளார். அனைத்தும் சிறு சிறு வ‌ணிக‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வை.பொருளாதார‌ போதாமையால் சிங்க‌ப்பூருக்கு பிற‌கு கோலால‌ம்பூருக்கு என‌ அவ‌ர் வேலைக‌ள் தொட‌ர்ந்த‌ன‌. அப்பாவைப் பின்ப‌ற்றி நாங்க‌ளும் கோலால‌ம்பூர் சென்றோம்.ஆர‌ம்ப‌கால‌ம் தொட்டே க‌ல்வி குறித்து என‌க்கு எந்த‌ப் பிர‌க்ஞையும் இருந்த‌தில்லை. நாவ‌லும் சிறுக‌தையும் க‌விதையும் ப‌டிப்ப‌து போன்று பாட‌ புத்த‌க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து உவ‌ப்பான‌தாக‌ இருந்த‌தில்லை. வீட்டில் உள்ளோர் தூண்டுத‌லால் ஆசிரிய‌ர் வேலைக்குப் ப‌டித்தேன். க‌ல்லூரி என‌க்கு நிறைய‌ச் சொல்லிக் கொடுத்த‌து.அடிப்ப‌டையில் என‌க்கிருந்த‌ கோப‌மும் வ‌ன்முறை சார்ந்த‌ ம‌ன‌மும் இந்த‌ச் ச‌மூக‌த்தின் மேல் ஒட்டுமொத்த‌மாக‌த் திரும்பிய‌து. நான் எவ்வ‌ள‌வு சுர‌ணைய‌ற்ற‌ ஒரு ச‌மூக‌த்தில் வாழ்கிறேன் என்ப‌தை உண‌ர்ந்தேன். ஆரோக்கிய‌மான‌ அடுத்த‌த் த‌லைமுறையை உருவாக்க‌ வேண்டிய‌ ஆசிரிய‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கூட‌ ச‌மூக‌ அக்க‌றையும் மொழிப்ப‌ற்றும் இல்லாம‌ல் அர‌சாங்க‌ ச‌ம்ப‌ள‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டுமே இருந்தன‌ர்.க‌ல்லூரியில் த‌னிமையானேன். ஒரு ம‌னித‌ன் தீவிரமாக‌ச் சிந்திக்க‌ இந்த‌த் த‌னிமை போதும் என்று தோன்றுகிற‌து.

பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கை ‘வேறு வ‌ழியில்லாம‌ல் ப‌ராம‌ரிக்கின்ற‌ன‌ர்’ என்று சொல்வ‌தன் கார‌ண‌ம் என்ன‌?

நான் சிறுவ‌னாக‌ இருந்த‌போது அங்கு சென்றுள்ளேன். அத‌ன் பின்ன‌ர் மூன்று – நான்கு முறை அங்கு சென்ற‌போது தொட‌ர்ச்சியான‌ ஏதோ வெறுமை உருவாகி வ‌ருவ‌தை உண‌ர்கிறேன். ‘பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கு’ தொட‌ர்ச்சியான‌ ஆய்வுக்குட்ப‌டுத்த‌ வேண்டிய‌ ஒரு ப‌குதி. அத‌ற்கு ம‌லேசிய‌ அர‌சாங்க‌ம் நிச்ச‌ய‌ம் வாய்ப்ப‌ளிக்காது. ம‌லேசிய‌ வ‌ர‌லாறு இஸ்லாம் ம‌த‌த்திலிருந்தே தொட‌ங்க‌ வேண்டும் என்று அர‌சாங்க‌ம் விரும்புகின்ற‌து. அத‌ற்காக‌வே பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளில் ம‌லாக்காவின் முத‌ல் ம‌ன்ன‌னான‌ ப‌ர‌மேஸ்வ‌ரர் என்ற இந்து அரசனின் பெயரை வரலாற்றிலிருந்து இருட்டடித்து ப‌ர‌மேஸ்வ‌ர‌ர் இஸ்லாம் ம‌த‌த்திற்கு மாறிய‌பின் வைத்துக்கொண்ட இஸ்க‌ண்டார் ஷா எனும் பெயரையே வரலாறாக்குகிறது. வ‌ர‌லாற்றை த‌ன‌க்கு சாத‌கமாக‌ மாற்றும் ஒரு தேச‌த்தில் பூஜாங் ப‌ள்ள‌த்தாக்கு இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் தாக்குப் பிடிக்கும் என்ப‌து ச‌ந்தேக‌ம்தான். பூஜாங் ப‌ள்ள‌த்தாக்குக் குறித்து நான‌றிந்து முழுமையாக‌ ஆய்வு செய்த‌வ‌ர் டாக்ட‌ர் ஜெய‌பார‌தி. மூன்று முறை ந‌ட‌ந்த‌ உரையாட‌லில் அவ‌ரிட‌ம் நான் பெற்ற‌த் த‌க‌வ‌ல் சொற்பம்தான். ப‌ல்வேறு துறைக‌ளிலும் ஆழ்ந்த‌ ஆய்வுக‌ளைச் செய்துள்ள‌ அவ‌ர் பூஜாங் ப‌ள்ள‌த்தாக்குத் தொட‌ர்பான‌ ப‌ல‌ உண்மைக‌ளை சேக‌ரித்திருந்தும் இன்னும் வெளியிடாம‌ல் இருக்கிறார். அந்த ஆய்வுகள் வெளிவரும்போது பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என்றே நம்புகிறேன்.

உங்களுடைய முன்னோர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்து மலேசியா வந்தார்கள் எனத் தெரியுமா? தமிழகத்திலுள்ள உங்களது உறவுகளுடன் இப்போதும் தொடர்புள்ளதா?

அம்மாவின் த‌ந்தை த‌ஞ்சையில் ப‌ட்டுக்கோட்டைப் ப‌குதியைச் சேர்ந்தவர். அம்மாவின் தாயார் திருநெல்வேலிப்ப‌குதி. இருவ‌ரும் இங்குதான் -ம‌லேசியாவில் – திரும‌ண‌ம் செய்து கொண்ட‌ன‌ர். என் தாயார் ம‌லேசியாவில்தான் பிற‌ந்தார். என் அப்பாவின் பூர்வீக‌ம் தெரிய‌வில்லை.என் அப்பாவின் தாத்தாவும் பாட்டியும் ம‌லேசியாவில் பிற‌ந்த‌தால் அவ‌ருக்கு முந்தைய‌ த‌லைமுறை குறித்து எதுவும் தெரியவில்லை. இப்போது த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ உற‌வுக‌ளோடு எந்த‌த் தொட‌ர்பும் இல்லை.

எதன் வழியே யார் வழியே இலக்கியத்தை வந்தடைந்தீர்கள்?

16 வ‌ய‌தில் பெரும் தாழ்வு ம‌ன‌ப்பான்மையால் எழுத‌த் தொட‌ங்கினேன். அப்போது என‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மாண‌விக‌ளின் ம‌த்தியில் த‌ங்க‌ளை அடையாள‌ம் காட்ட‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ காற்ப‌ந்து விளையாட்டு என‌க்கு வ‌ராம‌ல் போன‌தால் ஏற்ப‌ட்ட‌ தாழ்வு ம‌ன‌ப்பான்மை அது. ஒழுங்காக‌ப் பேச‌வும் வ‌ராது. மூன்று வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்குவேன். அப்போதுதான் ம‌லேசியாவில் முக்கிய‌ எழுத்தாள‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் நான் ப‌யின்ற‌ த‌மிழ்ப் ப‌ள்ளிக்குத் த‌லைமையாசிரியாராக‌ வ‌ந்தார். என் ஆர்வ‌த்தை அறிந்து எனக்கு முறையான‌ வாசிப்புப் ப‌ழ‌க்க‌த்தை அறிமுக‌ம் செய்தார். யாரையெல்லாம் ப‌டிக்க‌லாம் என்று ஆலோச‌னைக் கூறி ஒரு புத்த‌க‌க் க‌டையிலும் வேலைக்குச் சேர்த்துவிட்டார். பின்னாளில் தீவிர‌மான‌ வாசிப்பும் சக‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌னான‌ உரையாட‌ல்க‌ள் மூல‌ம் எழுதும் நோக்க‌ம் மாற்ற‌ம் க‌ண்ட‌து. எல்லையில்லா உரிமை கொடுத்து விவாதிக்க‌வும் க‌ருத்து கூற‌வும் என‌க்கு வாய்ப்ப‌ளித்த‌வ‌ர் டாக்ட‌ர் சண்முக‌சிவா. அவ‌ர் என் வாசிப்பை மேலும் தீவிர‌ப்ப‌டுத்த‌ உத‌வினார். என் போதாமைக‌ளை உண‌ர‌ச்செய்தார். இவை குறித்தெல்லாம் ‘வ‌ல்லின‌ம்’ அக‌ப்ப‌க்க‌த்தில் ‘திற‌ந்தே கிட‌க்கும் டைரி’ எனும் தொட‌ரில் எந்த‌ ப‌ல‌வீன‌ங்க‌ளையும் ம‌றைக்காம‌ல் எழுதி வ‌ருகிறேன்.

இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து?

முன்னிலும் ஆரோக்கிய‌மாக‌ இருக்கிற‌து. முன்பு ஊட‌க‌ங்க‌ள் த‌னிப் பெரும் ச‌க்திக‌ளாக‌, வேண்டிய‌வ‌ர் – வேண்டாத‌வ‌ர் என்ற‌ பாகுபாடுட‌ன் ப‌டைப்புக‌ளை வெளியிட்டு வ‌ந்த‌ன.முற்போக்கான‌ அல்ல‌து மாற்றுச் சிந்தனை கொண்ட‌ எழுத்துக‌ளை அவை பொருட்ப‌டுத்திய‌தில்லை. பெரு.அ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ‘காத‌ல்’ இத‌ழ் இத‌ற்கு ஒரு நிவார‌ணியாக‌ இருந்த‌து. ப‌ழ‌ம் பெரும் ப‌த்திரிகையாள‌ரான அவ‌ர் ‘காத‌ல்’ இத‌ழை உருவாக்க‌ இளைஞ‌ர்க‌ளுக்கு வாய்ப்ப‌ளித்தார். நான், ம‌ணிமொழி, யுவ‌ராஜ‌ன், தோழி, ச‌ந்துரு என‌ப் புதிய‌ சிந்த‌னை கொண்ட‌ குழுவின‌ரால் ‘காத‌ல்’ இத‌ழ் உருவான‌து.மாற்றுச் சிந்த‌னைக‌ள் கொண்ட‌ இல‌க்கிய‌ப் பிர‌திக‌ள் இதில் வெளிவ‌ந்த‌ன‌. இதை தொட‌ர்ந்து ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழ் ம‌லேசியாவில் உள்ள‌ தீவிர‌ எழுத்தாள‌ர்க‌ள் ஒன்றிணைய‌ ஒரு க‌ள‌மாக‌ இருந்த‌து. அத‌ன் பின்ன‌ர் ‘அந‌ங்க‌ம்’ வ‌ந்த‌து. இதேபோல‌ ‘மௌன‌ம்’ எனும் க‌விதைக்கான‌ சிற்றித‌ழும் ம‌லேசியாவின் க‌விதை போக்கை மாற்றிய‌மைக்க‌ முனைப்புக் காட்டி வ‌ருகிற‌து. நான் இங்கு இல‌க்கிய‌ம் ப‌ற்றி கூறாம‌ல் இத‌ழிய‌ல் தொட‌ர்பாக‌க் கூற‌க் கார‌ண‌ம் ம‌லேசியாவில் ஒட்டுமொத்த‌மாக‌ ம‌லேசிய‌ இல‌க்கிய‌ப் போக்கை அடையாளம் காட்ட‌ இதுபோன்ற‌ இத‌ழ்க‌ள் துணை நிற்ப‌தால்தான்.

இன்று ம‌லேசியாவில் ம‌ர‌பான‌ சிந்த‌னையை உடைத்துக்கொண்டு ந‌வீன‌ப் போக்குக‌ள் கொண்ட‌, மாற்றுச்சிந்த‌னை கொண்ட‌ பிர‌திக‌ள் அதிக‌ம் வ‌ருகின்ற‌ன‌.அவை இன்னும் ஈழத்து எழுத்துக‌ள் போன்றோ த‌மிழ‌க‌ எழுத்துக‌ள் போன்றோ தீவிர‌மான‌ ஒரு த‌ள‌த்தில் இய‌ங்காவிட்டாலும் குறிப்பிட்ட‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ள் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தின் போதாமையை அறிந்து வைத்துள்ள‌ன‌ர். ந‌ம‌து போதாமையை அறிவ‌தே அடுத்தடுத்த‌ ந‌க‌ர்வுக்கு வ‌ழிவ‌குக்கும் என‌ ந‌ம்புகிறேன்.

தமிழ்நாட்டு இலக்கியப் போக்குகள் மலேசியத் தமிழ் இலக்கியத்தை எவ்விதம் பாதித்துள்ளன?

ம‌லேசியாவிற்கு வ‌ந்து சென்ற‌ பிற‌கு, சுந்த‌ர‌ ராம‌சாமி அகில‌ இந்திய‌ வானொலி நிலைய‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ஒரு நேர்காண‌லில் “ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் அதிக‌ம் உற்சாக‌ம் கொள்ளும்ப‌டி இல்லை. ந‌ம் ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ இத‌ழ்க‌ளில் ந‌ட‌க்கும் காரிய‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்குத் தெரிகின்ற‌து. சிற்றித‌ழ் சூழ‌லில் ந‌ட‌க்கும் காரிய‌ங்க‌ள் பெரும்பாலும் தெரிவ‌தில்லை” என்றார். இந்நிலை இன்றும் தொட‌ர்கிற‌து.

ஒரு வ‌ச‌திக்காக‌ நாம் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ப் போக்குக‌ளை மூன்றாக‌ப் பிரிக்க‌லாம். முத‌லாவ‌து ர‌க‌த்தின‌ர், சுந்த‌ர‌ ராம‌சாமி சொன்ன‌து போன்று இன்ன‌மும் த‌மிழ‌க‌ ஜ‌ன‌ர‌ங்ச‌க‌ இத‌ழ்க‌ளை அடியொட்டி வ‌ருப‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் இன்ன‌மும் குமுத‌ம், குங்கும‌ம், ஆன‌ந்த‌ விக‌ட‌ன் போன்ற‌ இத‌ழ்க‌ளில் வ‌ரும் ந‌கைச்சுவை துணுக்குக‌ளையும் ஒரு ப‌க்க‌க் க‌தைக‌ளைப் ப‌டித்தும் அது போன்று எழுதியும் த‌ங்க‌ள் ‘எழுத்தாற்ற‌லை’ நிரூபித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

இர‌ண்டாம் ர‌க‌த்தின‌ர், த‌மிழ‌க‌ச் சிற்றித‌ழ்க‌ளாக‌த் த‌ங்க‌ளை வருணித்துக் கொள்ளும் பிர‌திக‌ள் முன்வைக்கும் க‌ருத்தையும் த‌மிழ‌க‌ ந‌வீன‌ இல‌க்கிய‌த்தின் அடையாள‌மாக‌த் த‌ங்க‌ளை பிர‌திநிதித்துக்கொள்ளும் இல‌க்கிய‌வாதிக‌ளின் விவாதிப்பையுமே இறுதியான‌ இல‌க்கிய‌க் க‌ருத்தெனக் கொண்டு த‌ங்க‌ள் மூளையிலும் எழுத்திலும் வ‌லிந்து திணிப்ப‌வ‌ர்க‌ள்.த‌மிழ‌க‌ இல‌க்கிய‌வாதி விடும் குசுவிற்குக் கூட‌ தீவிர‌மான‌ அர்த்த‌ம் உண்டென‌ வாத‌டுப‌வ‌ர்க‌ள். எல்லா விவாத‌ங்க‌ளின் இறுதியிலும் தான் ந‌ம்பும் இல‌க்கிய‌வாதியின் கூற்றை முழுமுற்றான‌ தீர்ப்பாக‌ நிறுவ‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ள்.

மூன்றாம் ர‌க‌த்தின‌ர் ம‌லேசியாவில் எல்லாக் கால‌த்திலும் இருந்தே வ‌ருகின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ள் சிறு குழுவின‌ர். எல்லாப் பிர‌திக‌ளையும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளோடு அணுகுப‌வ‌ர்க‌ள். ஒருவேளை சுந்த‌ர‌ ராம‌சாமி க‌ண்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் அக‌ப்ப‌டிருக்க‌ மாட்டார்க‌ள். ம‌ற்ற‌ப‌டி இவ‌ர்க‌ள் ப‌டைக்கும் இல‌க்கிய‌ம் ம‌லேசிய‌ வாழ்வின் அச‌லான‌ த‌ன்மையை அத‌ன் அர‌சிய‌லோடு வெளிப்ப‌டுத்தியே வ‌ருகின்ற‌து.

அய‌ல‌க‌ த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளின் வ‌ருகை ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்திற்கு எவ்வித‌ம் ப‌ங்க‌ளிக்கிற‌து?

என்ன‌ள‌வில் நிறைய‌ ஆரோக்கிய‌மான‌ மாற்ற‌ங்க‌ளைக் கொண்டுவ‌ந்துள்ள‌ன‌. ‘காத‌ல்’ இத‌ழ் மூல‌மாக‌ 2006ல் ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ம‌லேசியாவிற்குக் அழைத்திருந்தோம். அப்போது ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் ஒரு க‌விஞ‌ராக‌ இருந்த‌தாலும் வியாபாரியாக‌ இல்லாத‌தாலும் அவ‌ருட‌னான‌ க‌ல‌ந்துரையாட‌ல்க‌ள் மிகுந்த‌ உற்சாக‌ம் ஊட்ட‌க்கூடிய‌வையாக‌ இருந்த‌ன‌. அவ‌ருட‌ன் க‌விதை குறித்தான‌ உரையாட‌ல்க‌ள் என‌க்குள் ப‌ல‌ திற‌ப்புக‌ளுக்குக் கார‌ண‌மாக‌ இருந்த‌ன‌. அதே போல‌ க‌விஞ‌ர் சேர‌னுட‌னான‌ உரையாட‌ல்க‌ளும் க‌விதை தொட‌ர்பான‌ புரித‌ல்க‌ளுக்கு வித்திட்ட‌ன‌. அண்ண‌ன் அறிவிம‌தியின் ந‌ட்பும் க‌விதை தொட‌ர்பான‌ சில‌ எளிய‌ அறிமுக‌ங்க‌ளை வ‌ழ‌ங்கிய‌து.

‘காத‌ல்’ இத‌ழ் மூல‌மாக அழைத்துவ‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌ற்றுமொருவ‌ர் ஜெய‌மோக‌ன். ஜெய‌மோக‌னுட‌னான‌ உரையாட‌ல்க‌ள் எந்த‌ திசையில் வேண்டுமானாலும் ப‌ய‌ணிக்கும் சுத‌ந்திர‌ம் கொண்ட‌து. ப‌ய‌ண‌ம் தோறும் ஜெய‌மோக‌ன் ஒரு வ‌ழிகாட்டியாக‌ பாதைக‌ளை முன் நின்று விள‌க்கிய‌ப‌டி செல்வார். இல‌ங்கையிலிருந்து ம‌லேசியாவிற்கு வ‌ந்து ஒரு வ‌ருட‌ங்க‌ள் பேராசிரிய‌ராக‌ப் ப‌ணியாற்றிய‌ எம்.ஏ.நுஃமானின் ஆளுமை என்னைப் பெரிதும் க‌வ‌ர்ந்த‌து. அவ‌ர‌து அத்த‌னை ஆளுமைக‌ளை விட‌வும் ஆழ்ந்த‌ அன்பும் பிரிய‌மும் அடிக்க‌டி அவ‌ரைச் ச‌ந்திப்ப‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளைக் கொடுத்த‌து.அவ‌ரிட‌ம் நான் க‌ற்றுக்கொண்ட‌து நிறைய‌. ச‌ட்டென‌ யோசிக்கையில் அவையெல்லாம் நினைவுக்கு வ‌ராம‌ல் அவ‌ரும் அவ‌ர் துணைவியாரும் வ‌ழ‌ங்கிய‌ பிரிய‌த்தின் க‌ண‌ங்க‌ள் ம‌ட்டும் நினைவுக்கு வ‌ருகிற‌து.

இதேபோல‌ சிங்கை இள‌ங்கோவ‌னின் வ‌ருகை கொழுந்து விட்டெரியும் தீ ஜுவாலை போல‌ உஷ்ண‌ங்க‌ளை ஏற்றிய‌து. ஒரு ப‌டைப்பாளியினுடைய‌ ரௌத்திர‌த்திட‌னும் ஆயுத‌ங்க‌ளுட‌னும் த‌ன்ன‌ந்த‌னியாக‌ அதிகார‌த்தை எத்தி உதைக்கும் அவ‌ர் ப‌டைப்பின் வீரிய‌ம், எழுத்தின் ப‌டைப்பின் ப‌டைப்பாளியின் அச‌ல் த‌ன்மையை அத‌ன் ர‌த்த‌க்க‌வுச்சி மாறாம‌ல் க‌ண்முன் கொண்டு வ‌ந்த‌து.

சோர்ந்து போயிருக்கும் ம‌ன‌ நிலையில் புதிய‌ சிந்த‌னையும் பார்வையும் கொண்ட‌ அய‌ல‌க‌ எழுத்தாள‌ர்களின் வ‌ருகை என்ன‌ள‌வில் உற்சாக‌ம் கொள்ள‌க்கூடிய‌தே. இவையெல்லாம் என‌க்கும‌ட்டும‌ல்ல‌ ஒவ்வொரு கால‌க்க‌ட்ட‌த்திலும் இணைந்திருந்த‌ எழுத்துல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ட‌ந்திருக்கும். அவ‌ர்க‌ளின் ம‌ன‌நிலை மாற்ற‌ங்க‌ளை நான் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்காதென்ப‌தால் என் க‌ருத்தை ம‌ட்டும் ப‌திவு செய்துள்ளேன்.

மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் எழுத்துகளின் வீச்சுக் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

ம‌லேசியாவில் பெண் எழுத்து என‌ எதை அடையாள‌ப்ப‌டுத்துவ‌தென‌ தெரிய‌வில்லை. ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் இருந்தே ம‌லேசியாவில் உள்ள‌ பெண் ப‌டைப்பாளிக‌ளின் நாவ‌ல்க‌ளைச் சிறுக‌தைக‌ளை வாசித்திருக்கிறேன். பாவை, க.பாக்கிய‌ம், நா.ம‌கேஸ்வ‌ரி, நிர்ம‌லா பெருமாள், நிர்ம‌லா ராக‌வ‌ன், க‌ல்யாணி ம‌ணிய‌ம், பாமா, சு.க‌ம‌லா, வே.ராஜேஸ்வ‌ரி என‌ இன்னும் சில‌ர் ம‌லேசியாவில் ப‌ல‌ கால‌மாக‌ எழுதிவ‌ருகிறார்க‌ள். இவ‌ர்க‌ளில் சில‌ரை ப‌ல‌கால‌மாக‌ எழுதுவ‌தால் ம‌ட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன். ம‌ற்ற‌ப‌டி இவ‌ர்க‌ளின் ப‌டைப்பில‌க்கிய‌த்தில் எந்த‌ வ‌கையான‌ ஈர்ப்பும் என‌க்கு இருந்த‌தில்லை. இவ‌ர்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் பெண்க‌ளின் குர‌ல் ச‌மைய‌ல் அறையிலிருந்து ஒலிப்ப‌தும் ஆண்க‌ளின் குர‌ல் வ‌ர‌வேற்ப‌றையிலிருந்து ஒலிப்ப‌துமே கால‌ம் கால‌மாக‌ ந‌ட‌ந்து வ‌ருகிற‌து.

இது போன்ற‌ பார்வை ஒருபுற‌ம் இருக்க‌, எழுத‌ப்ப‌ட்ட‌க் கால‌த்தைக் க‌ண‌க்கில் கொண்டு எழுத்தாள‌ர் பாவையின் எழுத்துக‌ளை முக்கிய‌மான‌வையாக‌க் க‌ருதுகிறேன். அவ‌ருக்கு சுவார‌சிய‌மாக‌க் க‌தை சொல்ல‌ தெரியும். க‌.பாக்கிய‌ம் போன்று எழுத்து ம‌ட்டும் அல்லாது இய‌க்க‌வாதிக‌ளாக‌வும் உற்சாக‌மாக‌ச் செய‌ல்ப‌டும் ஆளுமைமிக்க‌வ‌ர்க‌ளும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ உல‌க‌த்துக்கு கிடைத்திருப்ப‌து உற்சாக‌ம் அளிக்க‌க்கூடிய‌து. இதும‌ட்டும் அல்லாது என‌து த‌னிப்ப‌ட்ட‌ உரையாட‌ல்க‌ளில் க‌ண‌வ‌னிட‌ம் கொடுமை அனுப‌வித்து எழுதுவ‌த‌ற்குப் ப‌ல‌ த‌டைக‌ள் வ‌ந்த‌போதும் ப‌ல‌ நாவ‌ல்க‌ளை எழுதி வெளியிட்ட‌ ஒரு சில‌ மூத்த‌ப் ப‌டைப்பாளிக‌ளையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.

இவ‌ர்க‌ளோடு ஒப்பிடும்போது இன்றைக்கு எழுதுப‌வ‌ர்க‌ளின் நிலை க‌வ‌லை அளிப்ப‌தாக‌வே உள்ள‌து. எளிய‌ உண‌ர்வுக‌ளையும் எளிய‌ அனுப‌வ‌ங்க‌ளையும் சின்ன‌ச் சின்ன‌ சிலிர்ப்புக‌ளையும் க‌விதைக‌ளில் ம‌ட்டுமே இன்றைய‌ பெரும்பாலான‌ பெண் ப‌டைப்பாளிக‌ள் ப‌கிர்கிறார்க‌ள். தோழி, ம‌ணிமொழி,யோகி, தினேசுவ‌ரி, பூங்குழ‌லி,சித‌னா, ராஜ‌ம் ர‌ஞ்ச‌னி என‌ ம‌லேசியாவில் எழுதும் ஒரு சில‌ருக்கு ந‌ல்ல‌ வாசிப்பும் க‌ருத்துக‌ளும் இருந்தாலும் அவ‌ற்றை எழுத்தில் கொண்டுவ‌ர‌ தீவிர‌ம் இல்லை என்றே சொல்ல‌த் தோன்றுகிற‌து. எழுதுவ‌தற்கான‌ விரிந்த‌ க‌ள‌மும் வாசிப்புக்கான‌ நிறைய‌ மூல‌ங்க‌ளும் உள்ள‌ இச்சூழ‌லை அவ‌ர்க‌ள் த‌வ‌றவிடுவ‌து வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து. வாசிப்புக்கான‌, எழுதுவ‌த‌ற்கான‌ இவ‌ர்க‌ள் கொண்டிருக்கும் சோம்ப‌லுக்கு அவ்வ‌ப்போது த‌ரும் த‌த்துவ‌ப்பூர்வ‌மான‌ கார‌ண‌ங்க‌ள் ம‌ட்டும் எப்போதும் என்னை எரிச்ச‌ல‌டைய‌ச்செய்யும்.

க‌விதைக‌ளின் போக்கு எவ்வாறு உள்ள‌து ?

ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌து. அகில‌ன் ம‌ற்றும் சிவ‌த்தின் க‌விதைக‌ள் த‌னித்துவ‌மான‌வை.ஆர‌ம்ப‌த்தில் அகில‌னிட‌ம் இருந்த‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ளின் பாதிப்பு இப்போது இல்லாத‌தை உண‌ர்கிறேன். ப‌ர‌ந்த‌ வாசிப்பு ப‌ல‌ர‌து க‌விதை சொல்லும் மொழியை மாற்ற‌ம‌டைய‌ வைத்துள்ள‌து. அதில் முக்கிய‌மாக‌ ஏ.தேவ‌ராஜ‌ன் ம‌ற்றும் ப‌ச்சைபால‌னைக் குறிப்பிட‌லாம்.சிவ‌த்தின் க‌விதைக‌ள் என்னைப் பெரிதும் க‌வ‌ர்ந்த‌வை. தோட்ட‌ வாழ்வு சார்ந்த அவ‌ர‌து க‌விதைக‌ள் அதில் முக்கிய‌மான‌து. ஆனால் க‌ட‌ந்த‌ தீபாவ‌ளிக்கு அவ‌ரும் ‘தீபாவ‌ளி க‌விதை’ எழுதிய‌துதான் என‌க்கு அச்ச‌த்தை அளித்த‌து. பெரும்பாலும் என‌க்கு விழாக்கால‌ க‌விஞ‌ர்க‌ளைக் க‌ண்டால் ஏற்ப‌டும் அச்ச‌ம் அது. அதே ப‌த்திரிகையில் அவ‌ர் ம‌.இ.கா க‌ட்சியில் இளைஞ‌ர் பிரிவில் முக்கிய‌ப் பொறுப்பில் ப‌ட‌த்துட‌ன் வெளிப்ப‌ட்ட‌போது ந‌டுந‌டுங்கிப் போனேன். என‌க்கு ம‌ட்ட‌மாக‌த் தெரியும் ம‌.இ.கா அவ‌ருக்கு ம‌க‌த்தான‌தாக‌த் தெரிவ‌தில் த‌வ‌றில்லை.அதே போல‌ என‌க்கு ம‌க‌த்தான‌தாக‌த் தெரியும் ஒன்று ச‌க‌ இல‌க்கிய‌வாதிக‌ளுக்கு ம‌ட்டமாக‌த் தெரிய‌லாம்.ஆனால் ஒரு க‌விஞ‌ன் தான் கொண்டிருக்கும் க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌த்தை ம‌த‌மும், க‌ட்சிக‌ளும், அமைப்புக‌ளும், இய‌க்க‌ங்க‌ளும் ப‌றித்துக்கொள்ளும் என‌ தீர்க்க‌மாக‌ ந‌ம்புகிறேன். நான் வாழும் கால‌த்தில் ஒரு ந‌ல்ல‌ க‌விஞ‌ன் இவ்வாறு சிறைப‌டுவ‌தால் ஏற்ப‌டும் ந‌டுக்க‌மாக‌ அது இருக்கலாம்.

ம‌ணிமொழி , தோழி, தினேஸ்வ‌ரி, யோகி, போன்ற‌வ‌ர்க‌ளும் ந‌ல்ல‌ க‌விதைக‌ளைத் தொட‌ர்ந்து ப‌டைத்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் க‌விதை குறித்தான‌ பார்வை இன்னும் தீவிர‌ம‌டைந்தால் மேலும் ந‌ல்ல‌ க‌விதைக‌ள் பிற‌க்கும். ரேணுகா என்ப‌வ‌ரும் இப்போது அதிக‌ம் எழுதிவ‌ருகிறார். க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ க‌விஞ‌ராக‌ இருக்கிறார்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் தனி அடையாளமாக எதைக் கருதுவீர்கள்?

கால‌ம் கால‌மாக‌ த‌மிழ‌க‌ இல‌க்கிய‌ங்க‌ளையும் எழுத்துக‌ளையும் ப‌டித்துப் ப‌ழ‌கிவிட்ட‌வ‌ர்க‌ள் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள். ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளிலும் த‌மிழ‌க‌ இல‌க்கிய‌ங்க‌ள்தான் பாட‌ங்க‌ளாக‌ உள்ள‌ன.அதுவும் மு.வ‌, ந.பா, அகில‌ன் இப்ப‌டி. இந்த‌ச் சூழ‌லில் தனித்துவமான இலக்கிய மொழிரீதியான‌ மாற்ற‌ம் உட‌ன‌டியாக‌ நிக‌ழாது. சில‌ர் முய‌ன்றுள்ள‌ன‌ர். சீ.முத்துசாமியும் கோ.முனியாண்டியும் அதில் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள். சு.யுவ‌ராஜ‌னின் க‌தைக‌ளில் அச‌லான‌ தோட்ட‌ வாழ்வின் உயிர் இருக்கும். அவ‌ரின் ம‌ற்றெல்லா ப‌டைப்புக‌ளை விட‌வும் தோட்ட‌ வாழ்வு சார்ந்த‌ சிறுக‌தைக‌ள் என் வாசிப்புக்கு நெருக்க‌மான‌வை. தோட்ட‌ வாழ்வை த‌விர‌ ந‌க‌ர‌ நெருக்க‌டியால் சித‌றுண்ட‌ ந‌வீன‌ ம‌னித‌னின் ம‌ன‌தை ம‌ஹாத்ம‌னின் சிறுக‌தைக‌ள் வெளிப்ப‌டுத்துகின்ற‌ன‌. அவ‌ர் அனுப‌வ‌மே அவ‌ர் க‌தைக‌ளின் அடையாள‌ம். இதே போல‌ ந‌வீன‌ ம‌னித‌னின் அக‌ம் சார்ந்த‌ சிக்க‌ல்க‌ளைப் பேசும் ச‌ண்முக‌சிவாவின் க‌தைக‌ளும் த‌னி அடையாள‌த்தைக் கொண்டுள்ள‌ன. ம‌லேசிய‌ இல‌க்கிய‌வாதிக‌ள் உண்மையான‌ த‌ங்கள் வாழ்வை எழுதுவ‌து ம‌ட்டுமே ம‌லேசிய‌த் த‌மிழ் இல‌க்கிய‌த்துக்கு த‌னி அடையாள‌ம் த‌ர‌ முத‌ற்ப‌டி என‌ நினைக்கிறேன்.

தமிழகத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகப் சை.பீர்முகமது போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்களே?

‘ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ளின் சிறுக‌தைக‌ளைத் தொகுத்து ‘வேரும் வாழ்வும்’எனும் தொகுதியைச் சொந்த‌ செல‌வில் போட்டார்; ஜெய‌காந்த‌னை அழைத்து வ‌ந்தார்; த‌மிழ‌க‌ மேடைக‌ளில் ம‌லேசிய‌ எழுத்துக‌ளைப் ப‌ற்றி உர‌க்க‌ச் சொல்கிறார்’ இது போன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ சை.பீர்முக‌ம‌து அப்ப‌டி அடையாள‌ம் காட்ட‌ப்ப‌டுகிறார் என்றால் க‌ருணாநிதியையும் க‌லைஞ‌ர் என்று கூறுவ‌திலும் எந்த‌க் கூச்ச‌மும் நாம் அடைய‌ வேண்டியிருக்காது. பொதுவாக‌வே த‌மிழ‌ர்க‌ள் ஓர் இல‌க்கிய‌வாதியையும் இய‌க்க‌வாதியையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பதால் ஏற்ப‌டும் கோளாறுக‌ள் இவை. சை.பீர்முக‌ம‌துவின் இல‌க்கிய‌த் த‌ர‌ம் என்ன‌? எனும் கேள்விக்கு சாத‌க‌மான‌ ப‌தில் சொல்ல‌ முனையும் ஒருவ‌ர் க‌ட‌க்க‌ வேண்டிய‌ அவ‌மான‌ங்க‌ள் ஏராள‌ம்.

இங்கே இன்னுமொரு பிர‌ச்ச‌னையும் உண்டு. இன்றைய‌ த‌மிழ‌க‌ச் சிற்றித‌ழ்க‌ளாக‌த் த‌ங்க‌ளை அடையாள‌ம் காட்டிக்கொண்டு வெளிவ‌ரும் ஏடுக‌ளுக்கு க‌மிஷ‌ன் வாங்காம‌ல் ம‌லேசியாவில் இத‌ழ்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்த‌வும் ச‌ந்தா வாங்கி அனுப்ப‌வும் ப‌டைப்புக‌ளை சேக‌ரித்துத் த‌ர‌வும் மொத்த‌த்தில் அவ‌ர்க‌ளது இத‌ழ் த‌மிழ‌ர்க‌ள் வாழும் இத‌ர‌ நாடுக‌ளில் விற்றுத்த‌ரும் புரோக்க‌ர்க‌ளாக‌ச் செய‌ல்ப‌ட‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ள் த‌மிழ‌க‌ப் ப‌திப்ப‌க‌ங்க‌ளுக்குத் தேவை.எழுத்தாள‌ர்க‌ளுக்குக் க‌மிஷ‌ன் த‌ர‌ அவ‌சிய‌ம் இருக்காது. வாயார‌ நாலு வார்த்தைப் புக‌ழ்ந்தால் போதும்.கூடுத‌லாக‌ ந‌ன்மை செய்கிறேன் என்று போகிற‌ போக்கில் அவ‌ர்க‌ள் ப‌திப்ப‌க‌த்திலேயே இந்த‌ எழுத்தாள‌ர்க‌ளின் புத்த‌க‌த்தையும் அடித்துக் கொடுத்தால் புள‌ங்காகித‌ம் அடைந்துவிடுவார்க‌ள். அதில் சில‌ நூறு புத்த‌க‌த்தை அதே எழுத்தாள‌ர் த‌லையில் கட்டி விற்றுவிட்டால் ப‌திப்ப‌க‌ங்க‌ளின் பிர‌ச்சனை தீர்ந்த‌து.

த‌மிழ‌க‌ப் ப‌திப்ப‌க‌ங்க‌ளால் கொண்டாட‌ப்ப‌டும் வெளிநாட்டு த‌மிழ‌ர்க‌ளைக் கொஞ்ச‌ம் உற்றுப் பார்த்தாலும் அவ‌ர்க‌ள் மேல் இந்த‌ ஏஜெண்ட் க‌றை ப‌டிந்திருப்ப‌தைக் காண‌லாம். என்ன‌… சை.பீர்முகமது ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ ஏஜ‌ண்டாக‌ இருப்ப‌தால் க‌றை கொஞ்ச‌ம் அதிக‌ம்.

கருணாநிதியைக் கலைஞராக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, அவரை ஒரு திரைப்பட, நாடகக் கலைஞராகக் கூட ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா?

ஏன் ஏற்றுக்கொள்ள‌ முடியாது. தாராள‌மாக‌ ஏற்றுக்கொள்ள‌லாம். அத‌ற்கு முன் ‘கால‌ச்சுவ‌டு’ க‌ண்ண‌னை ஓர் எழுத்தாள‌ர் என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வ‌ரும்…அவ‌ரும் புத்த‌கம் வெளியிட்டுள்ளார் அல்ல‌வா! சுந்த‌ர‌ ராம‌சாமியை ந‌வீன‌ மொழி ந‌டையின் த‌ந்தை என‌ ஏற்றுக்கொள்ள‌வேண்டி வ‌ரும்; வைகோவை ஒரு போர‌ளி என‌ ஏற்றுக்கொள்ள‌வேண்டி வ‌ரும்; எங்க‌ ஊர் கார்த்திகேசுவின் நாவ‌ல்க‌ள் தீவிர‌மான‌வை என‌ ந‌ம்ப‌வேண்டிவ‌ரும், ம‌லேசிய‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ரை ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தைக் காக்க‌ வேண்டி அவ‌தார‌ம் எடுத்த‌வ‌ர் என‌ வ‌ண‌ங்க‌ வேண்டி வ‌ரும்; இப்ப‌டி நிறைய‌ ‘வ‌ரும்’க‌ள் வ‌ரும். க‌லை என்ப‌தை அது உருவாகும் நோக்க‌ம், அத‌ன் அர‌சிய‌ல், அத‌ன் உள் அடுக்குக‌ளை ஆராயாம‌ல் காற்ற‌ழுத்தத்தில் குபீரென‌ உப்பும் ப‌லூனை க‌ண்டு எழும் விய‌ப்போடு ம‌ட்டுமே அவ‌தானிப்போமேயானால் மேற்க‌ண்ட‌ எல்லோரையுமே த‌ங்குத்த‌டையின்றி அவ‌ர‌வ‌ர் இருக்கும் பிம்ப‌ங்க‌ளுட‌ன் கொண்டாட‌லாம்.

ஓர் இலக்கியவாதி கூர்மையான அரசியல் உணர்வுள்ளவராக இருக்கவேண்டும் எனக் கருதுகிறீர்களா?

அப்ப‌டி இல்லாம‌ல் போனால் அவ‌ன் இல‌க்கிய‌வாதியாக‌ இருப்ப‌த‌ற்கான‌ பொருள்தான் என்ன‌? அதிகார‌ வ‌ர்க்க‌ங்க‌ளிட‌மிருந்து ந‌ம‌க்குக் கிடைக்கும் எதிர்ப்பைவிட‌ ந‌ட்புக‌ர‌த்தையே ச‌ந்தேக‌ம் கொண்டு பார்க்க‌வேண்டியுள்ள‌து. நான் பார்த்த‌வ‌ரையில் எந்த‌ ஒரு ச‌ட்ட‌த் திருத்த‌மோ அமுலாக்க‌மோ அதிகார‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கே இறுதி ப‌ல‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌தே த‌விர‌ சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு அல்ல‌. எந்த‌ நேர‌மும் பாதுகாப்ப‌ற்ற‌ ஓர் உண‌ர்வில்தான் சிறுபான்மை ம‌க்க‌ளுட‌ன் க‌ல‌ந்துள்ள‌ ஓர் இல‌க்கிய‌வாதி இருக்க‌ வேண்டியுள்ள‌து. கால‌ங்கால‌மாக‌ அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எழுத்தாள‌ர்க‌ளையே த‌ங்க‌ளுக்குச் சாத‌க‌மான‌வ‌ர்க‌ளாக்கிக் கொள்ள‌வும் விரும்புகிறார்க‌ள். எழுத்தே அதிகார‌ வ‌ர்க்க‌ங்க‌ளின் நாடித்துடிப்பை ம‌க்க‌ளிட‌ம் முத‌ல் அறிமுக‌ம் செய்வ‌தால் எழுத்தாள‌னை சுற்றிலும் வித‌வித‌மான‌ க‌ண்ணிக‌ள் அவ‌ன் ப‌ய‌ண‌ம் தோறும் விரிக்க‌ப்ப‌டுகின்ற‌து. க‌ண்ணியில் சிக்குவ‌தா இல்லையா என்ப‌து எழுத்தாள‌னின் தேர்வுதான்.

இன்று மலேசியாவில் தமிழ் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு எவ்விதமுள்ளது?

அர‌சிய‌லில் ஈடுப‌ட‌ ஆர்வ‌ம் செலுத்துகின்ற‌ன‌ர். ஆளுங்க‌ட்சி – எதிர்க்க‌ட்சி என‌ அனைத்திலும் அவ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு உள்ள‌து. ஆனால் அர‌சிய‌லில் அவ‌ர்க‌ளுக்கான‌ இட‌ம் கிடைத்த‌வுட‌ன் நீங்க‌ள் கூறிய‌ ‘த‌மிழ் இளைஞ‌ர்க‌ளாய்’ அவ‌ர்க‌ள் இருப்பதில்லை.அவ‌ர்க‌ள் இர‌த்த‌ங்க‌ளில் ஏதோ ஒரு அசுத்த‌மான‌ இர‌சாய‌ன‌ம் க‌ல‌ந்துவிட்ட‌துபோல‌ ச‌ராச‌ரி த‌மிழ‌ர் வாழ்விலிருந்து வில‌கிவிடுகின்ற‌ன‌ர். தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ஓட்டுக‌ளைப் பெற‌ தாங்க‌ள் சார்ந்த‌ க‌ட்சிக்கு ஆத‌ர‌வாக‌ப் பிர‌ச்சார‌ம் செய்வ‌தோடு ச‌ரி. தேசிய வளர்ச்சியில் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் விடுபட்டுள்ளதை அறிந்தும் அத‌ற்காக‌ எந்த‌ ஆரோக்கிய‌மான‌ செய‌ல்திட்ட‌ங்க‌ளையும் இவ‌ர்க‌ள் முன்னெடுப்பதாக‌ இல்லை. த‌ங்க‌ளுக்கு மேல் இருக்கும் த‌லைமையின் தாள‌ங்க‌ளுக்குத் த‌ப்பாம‌ல் அபிந‌ய‌ம் பிடிக்கும் இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ ச‌மூக‌ சிந்த‌னையும் இவ‌ர்க‌ள் த‌லைமை பீட‌ங்க‌ளுக்கு வ‌ரும்போது முற்றிலும் இற‌ந்திருக்கும். இதில் சில‌ர் குண்ட‌ர் கும்ப‌ல்க‌ளை வ‌ழிந‌ட‌த்தியும் வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌து நான் நேரில் அறிந்த‌ உண்மை. இந்த‌ நிலையில் சுய‌ சிந்த‌னை கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் ப‌ல‌ரும் அர‌சிய‌ல் ஈடுப‌ட்டு தானாக‌ விலகிக் கொள்வ‌து விலக்க‌ப்ப‌டுவ‌தும் தொட‌ர்ந்து ந‌ட‌ந்து வ‌ருகின்ற‌து.

‘ம‌.இ.கா’ டத்தோ சாமிவேலுவின் அரசியல் குறித்துச் சொல்லுங்கள்…

நான் சின்ன‌ வ‌ய‌தாக‌ இருக்கும் போதிலிருந்தே அவ‌ரை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளும் ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ளும் இருந்தே வ‌ருகின்ற‌ன‌ர். இதில் விசேஷ‌ம் என்ன‌வென்றால் நான் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ அவ‌ரை எதிர்த்த‌ ப‌ல‌ரும் அவ‌ருட‌ன் ஏதோ ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் இணைந்து கொள்வ‌தைக் காண்கிறேன். ப‌க்கா அர‌சிய‌ல் சந்தர்ப்பவாதம் உள்ள‌வ‌ர்க‌ளால்தான் இவ்வாறு எளிதில் எவ‌ரையும் ஏற்றுக்கொள்ள‌முடியும். வாழ்க்கை முழுதும் ஒரு வில்ல‌னாக‌வே வாழ்ந்து எதிரிக‌ளை வெல்வ‌து இவ்வ‌ள‌வு சாத்திய‌மா என‌ ஆச்ச‌ரிய‌மாக‌ உள்ள‌து. அமைச்ச‌ர் ப‌த‌வியில் அவ‌ர் இருந்த‌ கால‌த்தில் இந்திய‌ர்க‌ளுக்கு அவ‌ர் செய்ய‌வேண்டிய‌தை முறையாக‌ச் செய்யாம‌ல் விட்ட‌தோடு அர‌சாங்க‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்குக் கொடுத்த‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ ச‌லுகைக‌ளையும் சுய‌லாப‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தை இன்ற‌ள‌வும் எந்த‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌னும் ம‌ற‌ந்திருக்க‌மாட்டான். ம‌லேசிய‌ இந்திய‌ காங்கிர‌ஸ் எனும் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் இருந்துவிட்டார். எந்த‌ அர‌சு ப‌தவியிலும் இப்போது இல்லாத‌ அவ‌ர் இன்னும் ம‌.இ.கா க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ ஆவ‌ல் கொண்டுள்ளார்.இவை ஒரு புற‌ம் இருக்க‌ அவ‌ருக்கு ச‌ற்றும் ச‌ளைக்காத‌ வேறொரு கூட்ட‌த்தின‌ர் அவ‌ர் ம‌.இ.காவில் த‌லைவ‌ர் ப‌த‌வியில் இருப்ப‌தையும் எதிர்க்கின்ற‌ன‌ர். எதிர்க்கும் கூட்ட‌த்தின‌ரையும் அவ‌ர்க‌ளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஒத்து ஊதும் ட‌த்தோ சுப்ர‌ம‌ணிய‌த்தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப் பார்க்கும் போது சாமிவேலு ப‌ர‌வாயில்லையோ என‌த் தோன்றுகிற‌து.

மலேசியாவில் தமிழர்கள் சமஉரிமைகளுடன் மலேசிய அரசால் நடத்தப்படுவதாகக் கருதுகிறீர்களா?

எப்போது ‘பூமி புத்ரா’ என்ற‌ அந்த‌ஸ்தை ம‌லாய்க்கார‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் வ‌ழ‌ங்கி அந்த‌ உரிமையைக் கேள்வி கேட்ப‌து ச‌ட்ட‌ விரோத‌ம் எனும் ச‌ட்ட‌த்தை அர‌சாங்க‌ம் அம‌ல்ப‌டுத்திய‌தோ பின்ன‌ர் எங்கிருந்து வ‌ரும் ச‌ம‌ உரிமை. ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌டிப்ப‌த‌ற்கு வாய்ப்புக் கிடைப்ப‌தில் தொட‌ங்கி , க‌ல்விக் க‌ட‌னுத‌வித் திட்ட‌ம், அர‌சாங்க‌ வேலை வாய்ப்பு என‌ எல்லாவ‌ற்றிலும் த‌மிழ‌ர்க‌ளுக்கு இருட்ட‌டிப்பே நிக‌ழ்கிற‌து.

தொலைவிலிருந்து பார்ப்பவ‌ர்க‌ள் ம‌லேசியாவின் அக‌ன்ற‌ சாலைக‌ளும் உய‌ர்ந்த‌ க‌ட்ட‌ட‌ங்க‌ளும் த‌ரும் பிர‌மிப்போடுதான் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்களையும் அணுகுகின்ற‌ன‌ர். உண்மையில் ம‌லேசிய‌த் த‌மிழ‌னுக்கும் அந்தப் போலி அல‌ங்கார‌ங்க‌ளுக்கும் எந்த‌த் தொட‌ர்பும் இல்லை. இப்போது புதிதாக‌ வ‌ந்த‌ பிர‌த‌ம‌ரும் இந்த‌ வேற்றுமைக‌ளில் எதையும் மாற்ற‌ம் செய்யாம‌ல் ‘ஒரே ம‌லேசியா’ எனும் கோட்பாட்டை நாடு முழுதும் போஸ்ட‌ர் அடித்து பிர‌ச்சார‌ம் செய்கிறார்.பாவ‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆதிக்க‌ வ‌ர்க்க‌த்தின‌ரின் போலி அர‌சிய‌ல் குறித்து விள‌க்க‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் ப‌ல‌ரும் த‌யார் இல்லை. ச‌மூக‌த்திற்கு ச‌ம‌ உரிமை கிடைக்க‌ புற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ரும் அர‌சின் கைக் கூலிக‌ளாக‌ மாறிவிடும் சூழ‌லில் உங்க‌ள் கேள்வி ஓர் அற்புத‌மான‌ க‌ன‌வு த‌ரும் சுக‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.

மலேசியத் தமிழர்கள் புலம்பெயர்ந்து இரண்டு நூற்றாண்டுகளாகிவிட்டன. இன்னும் சமூகத்தில் சாதியம் உள்ளதா?

இர‌ண்டு நூற்றாண்டுக‌ளாக‌ எதை பாதுகாத்தார்க‌ளோ இல்லையோ சாதியை ம‌ட்டும் ப‌த்திர‌மாக‌ப் பாதுகாத்து வைத்திருக்கும் ச‌மூக‌மாக‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். நான் சிறுபிள்ளையாக‌ இருக்கும் போது சாதி குறித்தான‌ பேச்சுக‌ள் ஒரு கொச்சை வார்த்தைக்கு நிக‌ராக‌ மிக‌ ர‌க‌சிய‌மாக‌வும் குசுகுசுப்பாக‌வுமே ப‌ல‌ராலும் பேச‌ப்ப‌ட்ட‌து. இப்போது ப‌கிர‌ங்க‌மாக‌வே சாதிச் சங்க‌ங்க‌ள் ம‌லேசியாவில் உருவாகி வ‌ருகின்ற‌ன‌. அதில் பெரும் வ‌ணிக‌ர்க‌ளும் அர‌சிய‌ல்வாதிக‌ளும் ம‌றைமுக‌மாக‌வும் வெளிப்ப‌டையாக‌வும் ஈடுபட்டு வ‌ருகின்ற‌ன‌ர். ம‌.இ.கா எனும் இந்திய‌ர்க‌ளின் அர‌சிய‌ல் க‌ட்சியிலும் இந்த‌ சாதி அடையாள‌ம் பெரும் ப‌ங்கு வ‌கிக்கிற‌து. 200 ஆண்டுக‌ளுக்கு முன் ச‌ஞ்சிக்கூலிக‌ளாக‌ வ‌ந்து ஒருவேளைச் சாப்பாட்டுக்கு ஆங்கிலேய‌னிட‌மும் ஜ‌ப்பானிய‌னிட‌மும் கூழைக்கும்பிடு போட்ட‌ ஒரு ச‌மூக‌த்தின‌ர், கொஞ்ச‌ம் த‌லையெடுக்க‌த் தொட‌ங்கிய‌தும் எங்கிருந்துதான் இந்த‌ ம‌யிரு ஜாதியைத் தேடி அடைகிறார்க‌ளோ என்று தெரிய‌வில்லை. த‌மிழ‌க‌ம் போன்று இங்கு தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் பெரும்பாலும் திரும‌ண‌ங்க‌ளின் போது ஜாதி த‌லை நீட்டிவிடுகிற‌து. ப‌த்திரிகைக‌ள் ஜாதி ச‌ங்க‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இப்போதெல்லாம் தாராள‌மாக‌ப் பிர‌சுரிக்கின்ற‌ன‌. எக்கேடு கெட்டால் ந‌ம‌க்கென்ன‌ என்று இருக்க‌வும் முடியாது. ஏதாவ‌து செய்தாக‌த்தான் வேண்டும்.

ஹிண்ட்ராப் அமைப்புக் குறித்து?

ஆர‌ம்ப‌த்தில் என‌க்கு அவ்வ‌மைப்பின் மீது நிறைய‌ ச‌ந்தேக‌ங்க‌ளும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளும் இருந்த‌ன‌‌. அது ஆர். எஸ். எஸ்சுட‌ன் தொட‌ர்புடைய‌ அமைப்பு என்ப‌து அதில் முக்கிய‌மான‌து. மேலும் அந்த‌ அமைப்பில் ஏற்ப‌ட்டிருந்த‌ பிள‌வுபாடுக‌ளும் என்னைப் பெரும் ச‌ந்தேக‌ம் கொள்ள‌ச் செய்த‌து. இவ‌ற்றையெல்லாம் மீறி அவ்வ‌மைப்பு ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் உண்மையான‌ ம‌ன‌ உண‌ர்வை வெளிப்ப‌டுத்தும் வித‌மாக‌ 25 நவம்பர் 2007ல் ஏற்பாடு செய்திருந்த‌ பேர‌ணி, ம‌லேசிய‌ அர‌சாங்க‌ம் ‘அர‌சிய‌ல்’ ந‌ட‌த்த‌ அதுவ‌ரை வெளிதோற்ற‌த்தில் க‌ட்ட‌மைத்திருந்த‌ ச‌முதாய‌ ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கிய‌து. ம‌லேசியாவில் ந‌ட‌ந்துவ‌ரும் பாரப‌ட்ச‌மிக்க‌ ஆட்சிமுறையை அப்போதுதான் அறிந்துகொண்ட‌ உல‌க‌ நாடுக‌ள் அனேக‌ம். தொட‌ர்ந்த‌ எச்ச‌ரிக்கைக‌ளுக்குப் பிற‌கும் ப‌ல‌த்த‌ பாதுகாப்புக்குப் பிற‌கும் 25 நவம்பர் 2007ல் குழுமிய‌ ப‌ல‌ ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்கு உண்மையில் ஹிண்ட்ராப் குறித்த‌ எந்த‌க் கேள்வியோ ச‌ந்தேக‌மோ விம‌ர்ச‌ன‌மோ இருந்திருக்காது. ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் அழுத்த‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ சாம‌ன்ய‌ ம‌க்க‌ளின் வெடிப்பு அது. அந்த‌ உண‌ர்ச்சி வெளிப்ப‌ட‌ வ‌ழிய‌மைத்த‌ ஹிண்ட்ராப் த‌லைவ‌ர் உத‌ய‌குமார் மீது என‌க்கு நிர‌ம்பிய‌ ம‌ரியாதை இருந்த‌து. அந்த‌ ம‌ரியாதையுட‌னும் ம‌ன‌தில் தேங்கிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளுட‌னுமே அவ‌ரைக் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் ந‌ண்ப‌ர்க‌ளோடு இணைந்து ஒரு நேர்காண‌ல் செய்தேன்.

ம‌ற்றெல்லா ஊட‌க‌ங்க‌ளையும் விட‌ ஹிண்ட்ராப் ம‌ற்றும் அத‌ன் இன்றைய‌ நிலை குறித்து ‘வ‌ல்லின‌ம்’ நேர்காண‌லில் விரிவாக‌ வாசிக்க‌லாம். ம‌ற்றொரு விசய‌த்தையும் இங்கு சொல்ல‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் உண்டு. ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ம் மொழியைவிட‌ ம‌த‌த்திற்கு அதிக‌ம் முக்கிய‌த்துவ‌ம் அளிக்க‌க்கூடிய‌து. அத‌ற்கு முக்கிய‌க் காரண‌ம் இன்றைய‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பாதிக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் த‌மிழைப் பின்புல‌மாக‌க் கொள்ளாத‌வ‌ர்க‌ள். ம‌லாய் ப‌ள்ளிக‌ளில் க‌ல்வி க‌ற்ற‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ள் இன‌த்தின் அடையாள‌மாக‌ ந‌ம்புவ‌து கோயிலையும் ம‌தத்தையும் ம‌ட்டுமே. என் அனுமான‌த்தில் ஒருவேளை மொழியை மைய‌மாக‌ வைத்து ஹிண்ட்ராப் ந‌க‌ர்ந்திருந்தால் அத‌ற்கு ப‌ர‌வ‌லான‌ ஆத‌ர‌வு கிடைத்திருக்காது. அண்மையில் ந‌டந்த‌ ‘எஸ்.பி.எம் பாட‌ விவ‌கார‌ பேர‌ணியே’ அத‌ற்கு ஒரு சான்று. ஹிண்ட்ராப் பேர‌ணி கோயில் உடைப்பு ம‌ற்றும் சிறையில் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌தை முன்வைத்து ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. ஹிண்ட்ராப் போர‌ட்ட‌த்தை வெறும் இந்துத்துவ‌ பின்புல‌த்தைக் கொண்டு ம‌ட்டும் பார்ப்ப‌து ச‌ரியாகாது என‌ அந்த‌ நேர்காண‌லுக்குப் பின் உண‌ர்ந்தேன். ஹிண்ட்ராப் பேர‌ணியால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஓர‌ள‌வேனும் விழிப்புண‌ர்வு ஏற்ப‌ட்டுள்ள‌து என்றே க‌ருதுகிறேன். த‌மிழ‌க‌த்தோடு ஒப்பிடுகையில் ம‌லேசியாவில் ம‌த‌ம் ப‌ங்காற்றும் வித‌ம் வேறாக‌ உள்ள‌து. வெறும் இன‌க் க‌ட்சிக்குள் ந‌ட‌க்கும் ச‌ர்ச்சைக‌ளை ம‌ட்டுமே பேசித் திரிந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ஹிண்ட்ராப் நேராக‌ அர‌சாங்க‌த்திட‌மே எம் உரிமைக்காக‌ வாதாடுகிற‌து. ‌ ஒரு அதிகார‌ ச‌க்தியை எதிர்க்க‌ அத‌ற்கு ஆயுத‌ம் ஒன்று தேவைப்ப‌டுகிற‌து. அது ம‌த‌மாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் தற்காலிக‌மாக‌க் கையில் எடுப்ப‌து த‌வ‌றில்லை என்றே நினைக்கிறேன்.

மலேசியாவைப் பொறுத்தவரை இந்துமதம் அரசால் ஒடுக்கப்படும் மதம் என்பது உண்மைதான் என்றாலும் இந்து மதம் தனக்குள்ளேயே சாதி போன்ற ஒடுக்குமுறைகளைக்கொண்ட மதமாகவும்தானே உள்ளது. தவிரவும் தமிழர்கள் இந்து மதத்தால் இணைகிறார்களெனில் தமிழ்மொழியைப் பேசும் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அந்த இணைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர்கள் ஆகிவிடமாட்டார்களா?

நீங்க‌ள் கேட்ப‌தில் நியாய‌ம் உண்டு. ஆனால் நான் ந‌டைமுறைச் சிக்க‌ல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். த‌மிழ்மொழி அல்ல‌து த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ள் தொட‌ர்பான‌ சிக்க‌ல்க‌ள் ம‌லேசியாவில் எழும்போதெல்லாம் அத‌ற்காக‌க் குர‌ல் கொடுக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை ப‌ரிதாப‌மான‌து. அப்ப‌டியே வ‌ருப‌வ‌ர்க‌ளின் பின்ன‌ணியை ஆராய்ந்தால் அவ‌ர்க‌ள் பிள்ளைக‌ளுக்கே த‌மிழ் தெரியாம‌ல் இருக்கும். இங்கு மொழியை வைத்துப் பிழைப்ப‌வ‌ர்க‌ளில் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள் த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள், த‌மிழ் வானொலி – தொலைக்காட்சியில் ப‌ணியாற்றுப‌வ‌ர்க‌ள், த‌மிழ்ப் ப‌த்திரிகை ந‌ட‌த்துப‌ர்க‌ள், த‌மிழ் பேராசிரிய‌ர்க‌ள், த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள்,அர‌சிய‌ல்வாதிக‌ள் என‌ அடுக்க‌லாம். இவ‌ர்க‌ளில் எத்த‌னைப் பேர் த‌ங்க‌ள் பிள்ளைக‌ளைத் த‌மிழ்ப்ப‌ள்ளிக்கு அனுப்பியுள்ள‌ன‌ர்?; எத்த‌னை பேரின் பிள்ளைக‌ளுக்குத் த‌மிழ் ப‌டிக்க‌த் தெரியும்?; எத்த‌னை பேரின் பிள்ளைக‌ளுக்குத் த‌மிழ் பேசினால் புரியும்? என்ப‌து என் கேள்வி. மிக‌ எளிதாக‌ என்னால் பேராசிரிய‌ர்க‌ள் தொட‌ங்கி த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ள் வ‌ரை அவ‌ர‌வ‌ர் பிள்ளைக‌ளின் நிலை குறித்துக் கூற‌ முடியும்.

இதை நான் சொல்ல‌வ‌ந்த‌த‌ற்குக் கார‌ண‌ம், ச‌மூக‌த்திற்கும் மொழிக்கும் ந‌ன்றியுட‌ன் இருக்க‌வேண்டிய‌வ‌ர்க‌ளின் நிலை மிக‌க் கேவ‌ல‌மாக‌ இருக்க‌ சாமானிய‌ர்க‌ளின் ம‌ன‌ நிலையின் இய‌க்க‌ம் எப்ப‌டி இருக்கும்? மாண‌வ‌ர்க‌ள் போதாமையால் 1200லிருந்து 800 ஆகி இப்போது 523 என்றளவுக்கு தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.. இது இன்னும் குறையும். இது தொட‌ர்பான‌ அபாய‌ம் குறித்து விழிப்புண‌ர்வு ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டாலும் பெரிதாக‌ எந்த‌ மாற்ற‌மும் இல்லை. இதில் நான் இந்து, முஸ்லிம், கிறித்துவ‌ர்க‌ள் என்ற‌ அடிப்ப‌டையில் பேச‌வில்லை.பொதுவாக‌வே த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ப்போக்கு அப்ப‌டிதான் உள்ள‌து.

இந்து ம‌த‌ம் த‌ன்னுள் சாதி ஒடுக்குமுறைக‌ளைக் கொண்டிருப்ப‌து உண்மைதான். அது சாதி ஒடுக்குமுறையை ம‌ட்டுமே கொன்டிருக்கிற‌து என்ப‌து உண்மைய‌ல்ல‌வே. ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முத‌லில் ஒன்றிணைய‌ ஒரு த‌ள‌ம் தேவைப்ப‌டுகிற‌து.இதில் உள்ளே புகுந்து ம‌த‌ ஒழிப்பு பிர‌ச்சார‌மெல்லாம் செய்ய‌ முடியாது. ஹிண்ட்ராப் கூட்ட‌த்தில் க‌லந்துகொண்டவ‌ர்க‌ள் எந்த‌ சாதியையும் ம‌ன‌தில் கொண்டு க‌ள‌த்தில் இற‌ங்கியிருக்க‌ மாட்டார்க‌ள்.

மலேசியாவில் தமிழர்களுக்கான ஒரு தமிழ்த் தேசியவாதக் கட்சி உருவாகுவதற்கு வாய்ப்புகளுள்ளனவா?

உருவாகி என்ன‌ செய்வ‌து? ம‌லேசியாவில் அத்த‌கைய‌தொரு க‌ட்சியை உருவாக்குவ‌த‌ற்கு பெரிய‌ த‌டை இருக்காது. ஆனால் செய‌ல‌ற்று கிட‌க்கின்ற‌ எக்க‌ச்ச‌க்க‌மான‌ க‌ட்சிக‌ளோடு அதுவும் இணைந்துகொள்ளும்.1.8 மில்லியன் மக்களைக் கொண்ட ம‌லேசிய‌ இந்திய சமூகம் பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுள்ளது. இச்சிறுபான்மையின‌ர் தேர்வு செய்வதற்கு குறைந்தது ஆறு அரசியல் கட்சிகளாவது உள்ளன.மஇகா (மலேசிய இந்தியர் காங்கிரஸ்), பிபிபி (பல இனக் கட்சியாக இருந்தாலும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்), ஐபிஎப் (இந்தியர் முன்னேற்ற முன்னணி), மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள மலேசிய மக்கள் சக்திக் கட்சி, ஹிண்ட்ராப் குழுவின‌ரின் எச்.ஆர்.பி என‌ப்ப‌டும் ம‌னித‌ உரிமை க‌ட்சி என‌ இருக்கும் இவ‌ற்றால் எளிய‌ த‌மிழ் ம‌க்க‌ள் ச‌ந்திக்கும் நிராக‌ரிப்புக்கு முழுதுமாக‌த் தீர்வு பிற‌க்க‌வில்லை. இதில் த‌மிழ்த் தேசிய‌வாத‌ம் எனப் பேசும்போது இருக்கின்ற‌வ‌ர்களும் ப‌ய‌ந்து ஓடிவிடுவ‌ர். த‌லைமையேற்று ந‌ட‌த்த‌த் த‌மிழ் தெரிந்த‌ த‌லைவ‌ர் யாரும் இருக்க‌ மாட்டார்க‌ள். த‌லைவ‌ரின் ம‌க‌ன் ஆங்கில‌ப் ப‌ள்ளியில் ப‌யின்றுகொண்டு மேட்டுக்குடி ம‌ன‌துட‌ன் இருப்பான். த‌மிழ் தெரிந்த‌ த‌மிழ‌ருக்கு இன்றைய‌ அர‌சிய‌ல் சித்து புரியுமா என்ப‌தும் ச‌ந்தேக‌ம்தான். இதில் சாதி அடையாள‌ங்க‌ள் வேறு புகுந்துகொள்ளும். இப்ப‌டி ஒரு க‌ட்சி ம‌லேசியாவில் உண்டு என‌ கூற‌ ம‌ட்டும் அது ப‌ய‌ன்ப‌ட‌லாம்.ம‌ற்ற‌ப‌டி ஆக்க‌க‌ர‌மான‌ ஒரு ந‌க‌ர்வுக்கு க‌ட்சி ப‌ய‌ன்ப‌டும் என‌ என‌க்குத் தோன்ற‌வில்லை.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸட் இயக்கத்தைக் கொண்டிருந்த மலேசியாவில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிலையென்ன? சிறியளவிலாவது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இயங்குகின்றனவா?

ம‌லேசிய‌ சோசலிச‌க் க‌ட்சி என்று ஒரு க‌ட்சி உள்ள‌து. 1998ல் உருவாக்க‌ம் க‌ண்ட‌து. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த‌ல் த‌ரும் என‌ ப‌ல‌ கால‌மாக‌ அர‌சாங்க‌ப் ப‌திவு நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு 2008ல் ப‌திவு பெற்ற‌து. அத‌ன் செய‌ற்பாடுக‌ள் வீரிய‌மாக‌ இல்லை. நிச்ச‌ய‌ம் அக்க‌ட்சி ம‌லேசியாவில் முழு சுத‌ந்திர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட‌ முடியும் என‌ நான் ந‌ம்ப‌வில்லை.

மலேசியாவில் வாழும் இலங்கை வம்சாவளித் தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குமிடையேயான உறவுகள் எவ்விதமுள்ளன?

எந்த‌வித‌மான‌ தொட‌ர்பும் இல்லையென்றுதான் சொல்ல‌வேண்டும். இங்கு ந‌டைபெரும் எவ்வ‌கையான‌ மொழி, இல‌க்கிய‌, அர‌சிய‌ல் கூட்ட‌ங்க‌ளிலும் அவ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பை நான் பார்த்த‌தில்லை. பெரும்பாலோர் செல்வ‌ந்த‌ர்க‌ள்தான். இய‌ல்பாக‌வே அவ‌ர்க‌ள் மேட்டுக்குடி ம‌ன‌ நிலையில்தான் உள்ள‌ன‌ர். பெரும் ப‌ண‌ம் செல‌வு செய்து கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் செய்வ‌தை தூர‌த்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ‌ர்க‌ளுக்கென்று ச‌ங்க‌ம்கூட‌ உள்ள‌து. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளைத் த‌னித்து அடையாள‌ம் காட்ட‌ எண்ணுகிறார்க‌ள் என‌ நினைக்கிறேன். இருந்துவிட்டுப்போக‌ட்டுமே.

நீங்கள் பத்திரிகையாளராகவுமிருக்கிறீர்கள், உங்கள் பத்திரிகை அனுபவங்கள் குறித்து?

என‌து இத‌ழிய‌ல் செய‌ல்பாடுக‌ள் ‘ம‌ன்ன‌ன்’ எனும் சனரஞ்சக இத‌ழிலிருந்து தொட‌ங்கிய‌து. மாத‌ இத‌ழான‌ அதில் ப‌ணியாற்ற‌ அத‌ன் ஆசிரிய‌ர் எஸ்.பி.அருண் எல்லா சுத‌ந்திர‌ங்க‌ளையும் கொடுத்திருந்தார். ச‌ம்ப‌ள‌ம் என்று எதுவும் இல்லை. ம‌திய‌ வேளை உண‌வு கிடைக்கும். எந்த‌ ச‌ம்பள‌மும் இல்லாம‌ல் முழு நேர‌மாக‌ப் ப‌ணியாற்றும் அள‌விற்கு என‌க்கு ஆர்வ‌மும் வீட்டில் எந்த‌ப் பொறுப்பும் இல்லாம‌லும் இருந்த‌து. சில‌ க‌ருத்து வேறுபாடுக‌ளால் அவ்வித‌ழிலிருந்து வில‌கினேன்.

அத‌ன் பிற‌கு ‘காத‌ல்’ எனும் இல‌க்கிய‌ இத‌ழ் ம‌லேசியாவில் முத‌ன்முத‌லாக‌ உருவான‌து. ப‌த்திரிகையாள‌ர் பெரு.அ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்களோடு ஏற்ப‌ட்டிருந்த‌ ந‌ட்பில் அவ‌ர் நிர்வாக‌ ஆசிரிய‌ராக‌ இருக்க‌ நானும் ம‌ணிமொழியும் இணைந்து இத‌ழை ந‌ட‌த்தினோம். ந‌வீன‌ சிந்த‌னை கொண்ட‌ ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ள் ஒன்றிணைந்த‌து அவ்வித‌ழ் மூல‌ம்தான். சுமார் ப‌த்து இத‌ழ்க‌ள் வெளிவ‌ந்த‌ பின்ன‌ர் பொருளாதார‌ப் பிர‌ச்ச‌னையால் இத‌ழ் நின்ற‌து. ம‌லேசியாவில் ந‌வீன‌ சிந்த‌னை கொண்ட‌ எழுத்தாள‌ர்க‌ள் ப‌ல‌ரும் இருப்ப‌தை அறிந்த‌பின் நான் ‘வ‌ல்லின‌ம்’ எனும் இத‌ழை அர‌சாங்க‌த்திட‌ம் ப‌திவு செய்து தொட‌க்கினேன்.

முத‌ல் இத‌ழ் வெளிவ‌ர‌ த‌மிழ‌க‌த்திலிருந்து ம‌னுஷ்ய‌ புத்திர‌னும், சிங்கையிலிருந்து ல‌தாவும், ல‌ண்ட‌னிலிருந்து என்.செல்வ‌ராஜாவுமே கார‌ண‌ம் என்பதை நினைவு கூற‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளேன்.சுமார் எட்டு இத‌ழ்க‌ள் வெளிவ‌ந்த‌ பின்ன‌ர் வ‌ல்லின‌த்தை இணைய‌ இத‌ழாக‌ மாற்றினோம். இணைய‌ இத‌ழாக‌ உருவாக‌ ந‌ண்ப‌ர் சிவா பெரிய‌ண்ண‌ன் துணைப்புரிந்த‌து போல‌வே வ‌ல்லின‌த்தின் த‌ள‌த்தை மேலும் விரிவாக்க‌ ந‌ண்ப‌ர் யுவ‌ராஜ‌னின் ஆலோச‌னைக‌ள் துணைபுரிந்த‌ன‌. உண்மையில் வ‌ல்லின‌ம் எங்க‌ள் மூவ‌ரின் கூட்ட‌ணியில் புதிதான‌ ஒரு ப‌ரிமாண‌த்தை எடுத்த‌து என்றுதான் சொல்ல‌வேண்டும்.

வ‌ல்லின‌ம் ஒரு குறிப்பிட்ட‌ வாச‌க‌ர்களையே சென்ற‌டைவ‌தாக‌ இருந்த‌து. தீவிர‌ இல‌க்கிய‌ முத்திரை விழுந்துவிட்ட‌து அத‌ற்குக் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம். இல‌க்கிய‌ம் த‌விர்த்து நாங்க‌ள் – இங்கு நாங்க‌ள் என்ப‌து இள‌ம் த‌லைமுறை எழுத்தாள‌ர்க‌ளைக் குறிக்கிற‌து -ச‌ம‌கால‌ ம‌லேசிய‌ அர‌சிய‌ல் குறித்தும் எழுத‌த் தொட‌ங்கியிருந்த‌ ஒருநிலையில் எங்க‌ள் எழுத்தை ம‌லேசிய‌ த‌மிழ் ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்ல‌ ஓர் அச்சு ஊட‌க‌த்திற்குக் காத்திருந்தோம்.’முக‌வ‌ரி’ உருவான‌து. மாத‌ம் இருமுறை வெளிவ‌ரும் அதில் என்னோடு யுவ‌ராஜ‌ன், ம‌ணிமொழி, தோழி என‌ இளம் த‌லைமுறை எழுத்தாள‌ர்க‌ள் இணைந்துள்ள‌ன‌ர்.

இதைத‌விர‌ யுவ‌ராஜ‌ன் ஆசிரிய‌ராக‌ இருக்கும் தும்பி எனும் ‘அறிவிய‌ல்’ இத‌ழில் ஆசிரிய‌ர் குழுவில் என் பெய‌ரையும் ‘சும்மா’ இணைத்திருக்கிறார்க‌ள். ஒவ்வொரு இத‌ழுக்கும் ஒரு அறிவிய‌ல் க‌தை எழுதிக்கொடுப்ப‌தோடு ச‌ரி. ம‌ற்றெல்லாவ‌ற்றை விட‌வும் இத‌ழிய‌ல் என் ஆன்மாவோடு மிக‌ நெருங்கி இருப்ப‌தாகப்ப‌டுகிற‌து. ஒரு வேளை நான் ஒரு த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌ராக இல்லாம‌ல் இருந்திருந்தால் எப்போதோ முழுநேர‌ப் ப‌த்திரிகையாள‌னாகியிருப்பேன். ப‌த்திரிகையைவிட‌ என் ச‌மூக‌த்தை மிக‌ நெருங்கிப் பார்க்கும் ப‌ர‌ப்பை த‌மிழ்ப்ப‌ள்ளிகள் என‌க்குத் த‌ருகின்ற‌ன‌.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

எழுதுவ‌து குறித்து நிறைய‌ கேள்விக‌ள் எழுந்த‌ப‌டி உள்ள‌ன‌. மொழி, தீவிர‌ இல‌க்கிய‌ம், த‌மிழ் என‌ப் பேசிக்கொண்டு அதிகார‌த்திட‌ம் கூனிக்குறுகி இருக்கும் ஏதாவ‌து ஓர் எழுத்தாள‌னைச் செருப்பைக் க‌ழற்றி அடித்துவிட்டு பிற‌கு எழுதுவ‌துதான் ச‌ரி என்றும் ப‌டுகிற‌து. ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு கிடைக்க வேண்டிய‌ உரிமைக‌ளைத் த‌ராம‌ல் தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ம‌ட்டும் வாக்குறுதி அளிக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு எதிராக‌ வ‌ன்முறை ஒன்றுதான் ச‌ரியான‌ தீர்வோ என்றுகூட‌ அவ்வ‌ப்போது தோன்றுகிற‌து. க‌ச‌க‌ச‌ப்பான‌ இந்த‌ அர‌சிய‌ல் இல‌க்கிய‌ச் சூழ‌லில் அவ்வ‌ப்போது சில‌ க‌ட்டுரைக‌ளையும் க‌விதைக‌ளையும் எழுதி ப‌டைப்பு ம‌ன‌த்தை உயிர்ப்பித்துக் கொள்கிறேன்.

ஒரு ச‌ம‌ய‌ம் ஒரு தோழியிட‌ம் கூறினேன். “நான் ஒரு பென்சில் போல‌வோ என‌ ஆழ் நிலையில் சிந்திக்கும் போது தோன்றுகிற‌து. ஒரு ப‌க்க‌ம் இருக்கும் அழிப்பான் ச‌தா எதையாவ‌து அழிக்க‌வே முற்ப‌டுகிற‌து; கூறிய‌ க‌ரிமுனையும் த‌ன் ப‌ங்குக்குக் வ‌ன்முறையோடே காகிக‌த்தைக் கிழிக்கிற‌து…ஆக‌ மொத்த‌த்தில் என்னில் இர‌ண்டு ப‌க்க‌மும் அழிக்கும் ச‌க்திதான்” என்றேன் . அத‌ற்கு அவ‌ர் நிதான‌மாக‌ “இர‌ண்டுமே விரைவில் தேய்ந்து அழிந்து இல்லாம‌ல் போய்விடும்” என‌க்கூறிச் சிரித்தார். ந‌ட‌க்க‌ப்போகும் உண்மைக‌ளைப் பெண்க‌ள் எப்ப‌டியோ தெரிந்தே வைத்திருக்கிறார்க‌ள்.

ந‌ன்றி : http://www.lumpini.in

மாற்றுப்பிர‌தி எனும் த‌ள‌த்தில் ந‌ண்ப‌ர் றியாஸ் குரானா நேர்காண‌ல் ஒன்று செய்தார். என‌து சில‌ க‌ருத்துக‌ளைப் ப‌கிர‌ அப்பேட்டி வாய்ப்பாக‌ இருந்த‌து.

ந‌ன்றி,
ம‌.ந‌வீன்

01. உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்…

த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌னாக‌க் க‌ட‌ந்த‌ 5 ஆண்டுக‌ளாக‌ப் ப‌ணியாற்றுகிறேன். ஆசிரிய‌ர் தொழிலைப் பிடித்துத் தேர்வு செய்ய‌வில்லை. எதிர்கால‌ ம‌லேசிய‌ ச‌ந்த‌தியின‌ரையும் இந்த‌க் க‌ல்வித் திட்ட‌ம் சிந்திக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ உருவாக்கும் வ‌கையில் அமைக்க‌ப்ப‌ட‌வில்லை. உய‌ர்ர‌க‌க் கூலிக‌ளை வேண்டுமானால் உருவாக்க‌லாம்.இந்நிலையில் ம‌லேசிய‌ அடித்த‌ட்டுத் த‌மிழ் ம‌க்க‌ளின் ம‌ன‌ம் செய‌ல்ப‌டும் வித‌த்தை அறிந்து கொள்ளும் க‌ட‌மை ஓர் எழுத்தாள‌னாக‌ என‌க்கு உண்டு என‌ ந‌ம்புகிறேன். தீவிர‌மாக‌ச் சிந்திக்கும் போக்கு உள்ள‌ ஓர் ச‌முதாய‌த்தை உருவாக்க‌த் த‌மிழ்ப்ப‌ள்ளி என‌க்கு ஓர் க‌ள‌மாக‌ உள்ள‌து. ஏற‌க்குறைய‌ நான் செய‌ல்ப‌டும் இல‌க்கிய‌ம், இத‌ழ், அக‌ப்ப‌க்க‌ம் என‌ அனைத்துமே இந்த‌ச் சிந்த‌னையை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌தே.

02. எழுத்துச் செயற்பாட்டுக்குள் எப்போது வந்தீர்கள்?

16 வ‌ய‌தில். பெரும் தாழ்வு ம‌ன‌ப்பான்மையால் எழுத‌த் தொட‌ங்கினேன். அப்போது என‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மாண‌விக‌ளின் ம‌த்தியில் த‌ன்னை அடையாள‌ம் காட்ட‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ காற்ப‌ந்து விளையாட்டு என‌க்கு வ‌ராம‌ல் போன‌தால் ஏற்ப‌ட்ட‌ தாழ்வும‌ன‌ப்பான்மை அது. ஒழுங்காக‌ பேச‌வும் வ‌ராது. மூன்று வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்குவேன். பின்னாலில் தீவிர‌மான‌ வாசிப்பு உரையாட‌ல்க‌ள் மூல‌ம் எழுதும் நோக்க‌ம் மாற்ற‌ம் க‌ண்ட‌து. அதுவும் ப‌ல‌ ப‌டிநிலைக‌ளைக் கொண்ட‌து.இந்த‌ ந‌க‌ர்ச்சி குறித்தெல்லாம் ‘திற‌ந்தே கிட‌க்கும் டைரி’ எனும் தொட‌ரில் ‘வ‌ல்லின‌ம்’ அக‌ப்ப‌க்க‌த்தில் எந்த‌ ப‌ல‌வீன‌ங்க‌ளையும் ம‌றைக்காம‌ல் எழுதி வ‌ருகிறேன்.

03. தமிழ் இலக்கியம் என்று விரிந்த பரப்பை முன்வைத்து பேசும்போது மலேசிய மற்றும் சிங்கப்பூர் எழுத்துக்கள் பற்றி எவரும் கவனம் கொள்வதில்லை அது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஆனால் இப்போது நவீன எழுத்துக்கள் என்று பேசும்படியாக அங்கு இலக்கியம் இருக்கிறது அல்லவா?

முத‌லில் இந்நிலைக்கு ம‌லேசிய‌ப் ப‌டைப்பாளிக‌ளும் முக்கிய‌க்கார‌ண‌ம். என் வாசிப்பில் ஒவ்வொரு கால‌க்க‌ட்ட‌த்திலும் ந‌ல்ல‌ ப‌ல‌ ப‌டைப்பாளிக‌ள் ம‌லேசியாவில் இய‌ங்கியே வ‌ந்துள்ள‌ன‌ர். ஆயினும் ம‌லேசிய‌ ஆய்வாள‌ர்க‌ள் த‌மிழ‌க‌ எழுத்தாள‌ர்க‌ளின் வாலைப்பிடிப்ப‌தில்தான் அதிக‌ சுக‌ம் காண்கின்ற‌ன‌ர். இந்த‌ அவ‌ல‌ நிலை இன்றும் தொட‌ர்கிற‌து. ம‌லேசிய‌ இல‌க்கிய‌ வ‌ள‌ர்ச்சிக்கு உறுதுணையாக‌ இருக்க‌ வேண்டிய‌ த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌மும் வைர‌முத்துவின் நாவ‌லை இங்கு வெளியீடு செய்து பெரும் ப‌ண‌ம் திர‌ட்டிக்கொடுப்ப‌தில்தான் குறியாக‌ உள்ள‌து. இதில் இல‌க்கிய‌ சுற்றுலா என‌ வேறு ஏற்பாடு செய்து க‌ருணாநிதியையும் வைர‌முத்துவையும் சிவ‌ச‌ங்க‌ரியையும் கொண்டுவ‌ருவ‌தில் குறியாக‌ உள்ள‌ன‌ர். எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு,இல‌க்கிய‌ம் தொட‌ர்பான‌ எளிய‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில் இல்லாம‌ல் இருப்ப‌தும் இல‌க்கிய‌ம் ஓர் பொழுது போக்கு அம்ச‌மாக‌வே இவ‌ர்க‌ளுக்கு இருப்ப‌தும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தின் சாப‌ம். இது போன்ற‌ போலிக‌ளுக்கு ம‌த்தியில் ஒரு சில‌ரால் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் கால‌ம் கால‌மாக அத‌ன் தீவிர‌த்தோடு ந‌க‌ர்ந்து இன்ற‌ள‌வும் வ‌ந்துள்ள‌து. இன்று ப‌ல‌ இள‌ம் த‌லைமுறை எழுத்தாள‌ர்க‌ள் இய‌ங்கும் க‌ள‌மும் அதுதான்.


04. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் ஆரம்பம் எப்போது தொடங்குகிறது ? அதன் வரலாற்றை சற்று விரிவாக பேசலாமா?

இல‌க்கிய‌த்தின் குறிப்பிட்ட‌ ஒரு முக‌த்தை அத‌ன் கால‌க்க‌ட்ட‌த்தை ,வ‌லுவான‌ நிலைத்த‌ன்மையை இத‌ழ்க‌ள்தான் மூல‌மாக‌ நாம் வ‌ரைய‌றுக்க‌ இய‌லும். நான் முன்பே கூறிய‌து போல‌ எல்லாக் கால‌க் க‌ட்ட‌த்திலும் ம‌லேசியாவில் ந‌வீன‌ச் சிந்த‌னை போக்கு உள்ள‌ எழுத்தாள‌ர்க‌ள் இருந்த‌ன‌ர். குறிப்பாக ‘ந‌வீன‌ இல‌க்கிய‌ச் சிந்த்னை’ எனும் அமைப்பைக் கூற‌லாம். ஆனால் இவ‌ர்க‌ள் ஓர் இய‌க்க‌மாக‌த் தொட‌ர்ந்து செய‌ல்ப‌ட‌வும் த‌ங்க‌ள் க‌ருத்துக‌ளை ப‌ர‌வ‌லாக‌க் கொண்டுச் செல்ல‌வும் இத‌ழ்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌ன‌. இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு ‘காத‌ல்’ எனும் இத‌ழ் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ழ‌ம்பெரும் ப‌த்திகையாள‌ரான‌ பெரு.அ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ளின் ஆத‌ர‌வில் வெளியான‌ அவ்வித‌ழில் க‌விஞ‌ர் ம‌ணிமொழி ஆசிரிய‌ராக‌வும் நான் இணையாசிரிய‌ராக‌வும் இருந்து செய‌ல்ப‌ட்டோம்.எங்க‌ளோடு ப‌ல‌ இள‌ம் எழுத்தாள‌ர்க‌ளும் இத‌ழ் உருவாக‌ உழைத்தன‌ர். சுமார் 10 இத‌ழ்க‌ளோடு அவ்வித‌ழ் பொருளாதார போதாமையில் நின்ற‌து. ஆனால் ‘காத‌ல்’ ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ளிடையே பெரும் மாற்ற‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து. ப‌ல‌ ந‌ல்ல‌ இல‌க்கிய‌ங்க‌ளை ‘காத‌ல்’ மூல‌ம் அறிமுக‌ம் செய்தோம். ஒத்த‌ சிந்த‌னை உள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் எழுத்தாள‌ர்க‌ளையும் அடையாளாம் காண‌ அவ்வித‌ழ் பெரும் துணையாக‌ இருந்த‌து. ம‌லேசியாவில் ந‌வீன‌ இல‌க்கிய‌ம் என்று இக்கால‌க்க‌ட்ட‌த்தில் ப‌ர‌வ‌லாக‌ப் பேச‌ப்ப‌ட்ட‌து. ம‌லேசியாவில் இல‌க்கிய‌ம் குறித்தான‌ பார்வையும் மொழியும் மாற‌ ‘காத‌ல்’ இத‌ழ் ஒரு ந‌ல்ல‌த் தொட‌க்க‌ம் என‌ உறுதியாக‌ கூறுவேன். ‘காத‌ல்’ நிறுத்த‌ப்ப‌ட்ட‌ப் பிற‌கு நான் ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழை வெளியிட்டேன். ‘காத‌ல்’ ஏற்க‌ன‌வே தீவிர‌மான‌ வாச‌க‌ர்க‌ளைத் த‌யார்ப்ப‌டுத்தி இருந்த‌தால் ‘வ‌ல்லின‌ம்’ எளிதாக‌ அவ‌ர்க‌ளைச் சென்று சேர்வ‌தில் பெரிய‌ ச‌வால்க‌ளை எதிர்நோக்க‌வில்லை.

05. பெண் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தின் அரசியலாக அங்கு எதை முன்வைக்கிறார்கள்?

எதையும் முன்வைக்க‌வில்லை. முத‌லில் ம‌லேசியாவில் பெண் எழுத்து என‌ எதை அடையாள‌ப்ப‌டுத்துவ‌தென‌ தெரிய‌வில்லை. ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் இருந்தே ம‌லேசியாவில் உள்ள‌ பெண் ப‌டைப்பாளிக‌ளின் நாவ‌ல்க‌ளைச் சிறுக‌தைக‌ளை வாசித்திருக்கிறேன். பாவை, க.பாக்கிய‌ம், நா.ம‌கேஸ்வ‌ரி, நிர்ம‌லா பெருமாள், நிர்ம‌லா ராக‌வ‌ன்,பாமா,சு.க‌ம‌லா, வே.ராஜேஸ்வ‌ரி என‌ இன்னும் சில‌ர் ம‌லேசியாவில் ப‌ல‌ கால‌மாக‌ எழுதிவ‌ருகிறார்க‌ள். இவ‌ர்க‌ளில் சில‌ரை ப‌ல‌கால‌மாக‌ எழுதுவ‌தால் ம‌ட்டுமே இங்குக் குறிப்பிடுகிறேன். ம‌ற்ற‌ப‌டி இவ‌ர்க‌ளின் ப‌டைப்பில‌க்கிய‌த்தில் எந்த‌ வ‌கையான‌ ஈர்ப்பும் என‌க்கு இருந்த‌தில்லை. இவ‌ர்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் பெண்க‌ளின் குர‌ல் ச‌மைய‌ல் அறையிலிருந்து ஒலிப்ப‌தும் ஆண்க‌ளின் குர‌ல் வ‌ர‌வேற்ப‌றையிலிருந்து ஒலிப்ப‌துமே கால‌ம் கால‌மாக‌ ந‌ட‌ந்து வ‌ருகிற‌து. இன்னும் சில‌ர் அதீதமாக‌ பெண் விடுத‌லை பேசுகிறேன் என்று ஆழ‌மான‌ கேள்விக‌ளும் பார்வையும் இல்லாம‌ல் அதிர்ச்சி எழுத்துக‌ளை த‌ர‌வே முய‌ல்கிறார்க‌ள்.

இது போன்ற‌ ஒட்டுமொத்த‌மான‌ பார்வை ஒரு புற‌ம் இருக்க‌, எழுத‌ப்ப‌ட்ட‌க் கால‌த்தைக் க‌ண‌க்கில் கொண்டு எழுத்தாள‌ர் பாவையின் எழுத்துக‌ளை முக்கிய‌மான‌வையாக‌க் க‌ருதுகிறேன். அவ‌ருக்கு சுவார‌சிய‌மாக‌க் க‌தை சொல்ல‌ தெரியும். க‌.பாக்கிய‌ம் போன்று எழுத்து ம‌ட்டும் அல்லாது இய‌க்க‌வாதிக‌ளாக‌வும் உற்சாக‌மாக‌ச் செய‌ல்ப‌டும் ஆளுமைமிக்க‌வ‌ர்க‌ளும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ உல‌க‌த்துக்கு கிடைத்திருப்ப‌து உற்சாக‌ம் அளிக்க‌க்கூடிய‌து. இதும‌ட்டும் அல்லாது என‌து த‌னிப்ப‌ட்ட‌ உரையாட‌ல்க‌ளில் க‌ண‌வ‌னிட‌ம் கொடுமை அனுப‌வித்து எழுதுவ‌த‌ற்குப் ப‌ல‌ த‌டைக‌ள் வ‌ந்த‌போதும் ப‌ல‌ நாவ‌ல்க‌ளை எழுதி வெளியிட்ட‌ ஒரு சில‌ மூத்த‌ப் ப‌டைப்பாளிக‌ளையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். இவ‌ர்க‌ளோடு ஒப்பிடும்போது இன்றைக்கு எழுதுப‌வ‌ர்க‌ளின் நிலை க‌வ‌லை அளிப்ப‌தாக‌வே உள்ள‌து. எளிய‌ உண‌ர்வுக‌ளையும் எளிய‌ அனுப‌வ‌ங்க‌ளையும் சின்ன‌ச் சின்ன‌ சிலிர்ப்புக‌ளையும் க‌விதைக‌ளில் ம‌ட்டுமே இன்றைய‌ பெரும்பாலான‌ பெண் ப‌டைப்பாளிக‌ள் ப‌கிர்கிறார்க‌ள். தோழி, ம‌ணிமொழி,யோகி, தினேசுவ‌ரி, பூங்குழ‌லி என‌ ம‌லேசியாவில் எழுதும் ஒரு சில‌ருக்கு ந‌ல்ல‌ வாசிப்பும் க‌ருத்துக‌ளும் இருந்தாலும் அவ‌ற்றை எழுத்தில் கொண்டுவ‌ர‌ தீவிர‌ம் இல்லை என்றே சொல்ல‌த் தோன்றுகிற‌து. எழுதுவ‌தற்கான‌ விரிந்த‌ க‌ள‌மும் வாசிப்புக்கான‌ நிறைய‌ மூல‌ங்க‌ளும் உள்ள‌ இச்சூழ‌லை அவ‌ர்க‌ள் த‌வ‌ர‌விடுவ‌து வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து. மாற்று க‌ருத்துக‌ள் கொண்ட‌ பெண் ப‌டைப்பாளிக‌ளின் எழுத்துக்கு ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழில் எப்போதும் இட‌ம் உண்டு என்ப‌தை ம‌ட்டும் இவ்வேளையில் சொல்லிக்கொள்கிறேன்.

06. தமிழ் இலக்கியத்தில் தனித்துத் தெரியும்படியாக மலேசிய தமிழ் இலக்கியம் என்ன வகையான இலக்கிய அரசியல் மற்றும் அழகியலைக் கொண்டு எழுத்துக்களை நிகழ்த்திக்காட்டுகின்றன?

ஒவ்வொரு கால‌க்க‌ட்ட‌த்திலும் ப‌ல‌ ந‌ல்ல‌ப் ப‌டைப்பாளிக‌ள் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்திற்கென‌ த‌னித்த‌தொரு அடையாள‌த்தை அவ‌ர‌வ‌ர் ப‌டைப்பில‌க்கிய‌ங்க‌ளில் ஏற்றிய‌வாறு உள்ள‌ன‌ர். நீங்க‌ள் கேட்டுள்ள‌ கேள்விக்கு ப‌தில் கொடுப்ப‌த‌ற்குத் த‌னிக் க‌ட்டுரை எழுத‌ வேண்டிவ‌ர‌லாம். குறிப்பாக‌ 1786 ல் பினாங்கு தீவு ஆங்கிலேய‌ர் ஆட்சியின் கீழ் வ‌ந்த‌திலிருந்து தொட‌ங்கி 1929 ல் த‌ந்தை பெரியாரின் ம‌லாயா வ‌ருகைக்குப் பிற‌கு ஏற்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளின் சிந்த‌னை மாற்ற‌ம் , திராவிட‌ க‌ழ‌க‌ங்க‌ளின் தாக்க‌ம், சினிமா வ‌ச‌ன‌ங்க‌ள்க‌ளின் தாக்க‌ம் , அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி (மலாயா கணபதி) (1925 – மே 4, 1949) தூக்கிலிட‌ப்ப‌ட்ட‌ச் ச‌ம்ப‌வ‌ம் என‌ அத்த‌னை அனுப‌வ‌ங்க‌ளும் பிண்ணிப் பிண்ணிப் பெரிதாக‌ விரிந்த‌ வாழ்வு இன்ற‌ள‌வும் த‌மிழ‌ர்க‌ள் மொழியையும் இல‌க்கிய‌த்தையும் மிக‌ கெட்டியாக‌ப் ப‌ற்றியிருக்க‌க் கார‌ண‌ங்க‌ளாக‌ உள்ள‌ன‌. கால‌ம்தோரும் ம‌லேசியாவில் த‌மிழ‌ர்க‌ள் த‌ம் மொழியைக் காப்ப‌த‌ற்கு ந‌ட‌த்தும் போராட்ட‌த்தில் அவ‌ர்க‌ளின் ஆர‌ம்ப‌கால‌ எழுத்துக‌ளில் எவ்வ‌கையான‌ அழ‌கிய‌லையும் காண‌முடியாத‌து உண்மையே. க‌ல்வி அறிவே குறைந்த‌ கால‌த்தில் அழ‌கிய‌ல் அல்ல‌து க‌லைத்த‌ன்மை எங்கிருந்து கிடைக்கும்? அதோடு த‌மிழ்நாட்டு க‌ல்வியைப் பின்புல‌மாக‌க் கொண்டு எழுந்த‌ இல‌க்கிய‌ங்க‌ள் (1917 _ 1930) ம‌லேசிய‌ வாழ்வை பேச‌ ம‌றுத்த‌ன‌.

அத‌ன் பின்ன‌ர் 1924 ல் த‌மிழ் நேச‌ன் என்ற‌ ப‌த்திரிகை தொட‌க்க‌மும் 1930ல் த‌மிழ் முர‌சு ப‌த்திரிகை தொட‌க்க‌மும் ப‌ல‌ அச‌லான‌ ம‌லேசிய‌ சிறுக‌தைக‌ள் வ‌ர‌ கார‌ணிக‌ளாக‌ இருந்த‌ன‌. அங்கிருந்து தொடங்கி ப‌ல‌ரின் உழைப்பாலும் தியாக‌த்தாலும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் இன்ற‌ள‌வும் நிலைத்து நிற்கிற‌து. இந்த‌ நெடிய‌ வ‌ர‌லாற்றில் (ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் விடுப‌ட்ட‌) ம‌லேசிய‌த் த‌மிழ‌ர் வாழ்வைச் சொல்லும் நாவ‌ல்க‌ள் ப‌ல‌ இய‌ற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. துயரப்பாதை (கா.பெருமாள்), மரவள்ளிக்கிழங்கு (சா.அன்பானந்தன்), இலட்சியப் பயணம் (ஐ.இளவழகு), செம்மண்ணும் நீல மலர்களும் (எம்.குமரன்), புதியதோர் உலகம் (அ.ரெங்கசாமி), சயாம் மரண ரயில் (ஆர்.சண்முகம்) போன்ற‌வை அவ‌ற்றில் ச‌ட்டென நினைவுக்கு வ‌ருப‌வை.

ஆங்கிலேய‌ர்க‌ளால் இர‌ப்ப‌ர் தோட்ட‌ங்க‌ளுக்குக் குடியேற்ற‌ப்ப‌ட்ட‌தால் , எங்க‌ள் வாழ்வை சொல்லும் க‌தைக‌ள் இர‌ப்ப‌ர் தோட்ட‌த்திலேயே இன்னும் அதிக‌ம் இருக்கின்ற‌ன‌. தோட்ட‌ வாழ்வை மீறி ப‌ல்லின‌ம் ம‌க்க‌ளுட‌ன் வாழும் ஒரு சூழ‌லைக் கொண்டுள்ள‌ எங்க‌ள் வாழ்வையும் ப‌ல‌ர் சிறுக‌தைக‌ளாக‌ எழுதியுள்ள‌ன‌ர். என் வாசிப்பில் உள்ள‌ சில‌ எழுத்தாள‌ர்க‌ளை இங்குக் குறிப்பிடுவ‌து அவ‌சிய‌ம் என‌ நின‌க்கிறேன். அவ்வ‌கையில் மா.இராமையா,சா.ஆ.அன்பான‌ந்த‌ன், பாவை, பாரி,அரு.சு.ஜீவான‌ந்த‌ன், மு.அன்புச்செல்வ‌ன், கோ.முனியாண்டி, கோ.புண்ணிய‌வான், சை.பீர்முக‌ம்ம‌து போன்ற‌வ‌ர்க‌ள் ம‌லேசிய‌ வாழ்வை சொல்லும் ப‌ல‌ சிறுக‌தைக‌ளைப் ப‌டைத்துள்ள‌ன‌ர். இன்னும் அ.கி.அறிவான‌ந்த‌ன், சி.க‌ம‌ல‌நாத‌ன், மெ.அறிவான‌ந்த‌ன், இராஜ‌குமார‌ன், நிலாவ‌ண்ண‌ன் என‌ நீண்ட‌ ப‌ட்டிய‌லும் உள்ள‌து. இவ‌ர்க‌ளின் முழுத் தொகுப்புக‌ள் இல்லை. அல்ல‌து என‌க்குக் கிடைத்த‌தில்லை. இன்னும் ப‌ல‌ரின் சிறுக‌தைகளை அங்கொன்றும் இங்கொன்றும் ப‌டித்த‌தோடு ச‌ரி. இவ‌ர்க‌ளின் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் சிறுக‌தைக‌ள் ச‌ற்றுத்த‌னித்துத் தெரிப‌வை. சீ.முத்துசாமியின் சிறுக‌தைக‌ளுக்குத் த‌னித்த‌ர‌ம் உண்டு. அவ‌ரின் ‘ம‌ண்புழுக்க‌ள்’ எனும் நாவ‌ல் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தில் மிக‌ முக்கிய‌மான‌து. செப்ப‌னிட‌ப்ப‌ட்ட‌ அவ‌ர‌து சிறுக‌தை தொகுப்பைக் கொண்டுவ‌ருவ‌து ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்திற்கு ந‌ல்ல‌ அடையாள‌மாக‌த் திக‌ழும். இதேபோல் ம‌ற்றுமொரு பெரிய‌ ஆளுமை மா.ச‌ண்முக‌சிவா. ம‌லேசிய‌ க‌தைக‌ளில் இவ‌ர‌து சிறுக‌தைக‌ள் க‌லை நேர்த்திமிக்க‌வை. ம‌னித‌ வாழ்வின் சிக்க‌லான‌ ப‌குதியை எடுத்திய‌ம்புப‌வை.

ரெ.கார்த்திகேசு போன்ற‌ எழுத்தாள‌ர்க‌ள் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்திற்குத் த‌னித்துவ‌ம் இல்லாத‌து போன்றே ப‌ல‌ கால‌மாக‌ப் பேசியும் எழுதியும் வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளை த‌மிழ‌க‌ எழுத்தாள‌ர்க‌ளின் நக‌ல்காள‌ச் சித்த‌ரிக்க‌வே அதிக‌ம் விருப்ப‌ம் கொண்டுள்ள‌ன‌ர். ப‌ல‌ கால‌மாக‌வே ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ எழுத்துக‌ள் மூல‌மாக‌ த‌ங்க‌ளுக்கிருக்கும் த‌மிழ‌க‌த்தொட‌ர்பால் பெரிய‌ எழுத்தாள‌ர்க‌ளாக‌ப் பெய‌ர் எடுத்துவிட்ட‌ இவ‌ர்க‌ள் குறித்து பேச‌ ஒன்றும் இல்லை. இவ‌ர்க‌ள் நாவ‌ல்க‌ளில் வ‌ரும் நாய‌க‌ர்க‌ள் விஜ‌யையும் அஜீத்தையும் ஞாப‌க‌ப் ப‌டுத்துகிறார்க‌ள் என்ப‌தைத் த‌விர‌.

இள‌ம் த‌லைமுறை எழுத்தாள‌ரான‌ ம‌ஹாத்ம‌னின் சிறுக‌தைக‌ள் வேறுவ‌கையில் முக்கிய‌ம‌னாது. அவை ம‌லேசியாவின் ம‌ற்றுமொரு இருண்ட‌ முக‌த்தை அத‌ன் அச‌ல் த‌ன்மையோடு காட்டுப‌வை. நான‌றிந்து எந்த‌ ஒரு ம‌லேசிய‌த் த‌மிழ் எழுத்தாள‌னுக்கும் ம‌ஹாத்ம‌னின் வாழ்வ‌னுப‌வ‌ங்க‌ள் இருக்க‌ச் சாத்திய‌ம் இல்லை. ஓர் அச‌லான‌ தோட்ட‌ வாழ்வை நுண்ணிய‌ க‌லை நேர்த்தியோடு பேசுப‌வை யுவ‌ராஜ‌னின் சிறுக‌தைக‌ள். இவ‌ரும் இள‌ம் எழுத்தாள‌ர்தான். ஒரு வாச‌க‌னாக‌ ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளின் வாழ்வோடும் க‌லைத்த‌ன்மையோடும் மிக‌ அணுகி வெளிப‌டுவ‌து யுவ‌ராஜ‌னின் சிறுக‌தைக‌ள் என்பேன். இன்னும் சொல்வ‌தான‌ல் யுவ‌ராஜ‌னின் தோட்ட‌ வாழ்வு சார்ந்த‌ சிறுக‌தைக‌ள் ம‌லேசிய‌த் த‌மிழ்ச் சிறுக‌தை உல‌கை மெல்ல‌ திசை திருப்பும். இதை மிக‌ உறுதியாக‌வே நான் சொல்வேன். உங்க‌ள் கேள்விக்கு நான் ப‌தில் கொடுத்தேனா என‌த் தெரிய‌வில்லை. ஒருவேளை சீ.முத்துசாமி, மா.ச‌ண்முக‌சிவா,சு.யுவ‌ராஜ‌ன், ம‌ஹாத்ம‌ன் போன்றோரின் சிறுக‌தைக‌ளைப் ப‌டிப்ப‌தன் மூல‌ம் அத‌ற்கான‌ ப‌தில்க‌ளை அடைய‌லாம்.

07. இஸ்லாமிய அரசு சிறுகதையாடல் சமூகமான தமிழ் பேசும் மக்களை மோசமான
அதிகாரத்திற்குட்படுத்தி வினையாற்ற முயற்சிக்கிறது. இதை எப்படி நீங்கள்
புரிந்துகொண்டு செயலாற்றுகிறீர்கள்? மலேசிய தமிழ் இலக்கியம் அதிகாரத்தின்
முன் எதிர்க்குரலாக பேசுவதாகத் தெரியவில்லையே ஏன்?

த‌ங்க‌ள் பார்வைக்குக் கிடைத்த‌ பிர‌திக‌ளைக்கொண்டு தாங்க‌ள் இவ்வாறு க‌ருத்து கொண்டிருக்கிறீர்க‌ள் என‌ நினைக்கிறேன். நான் இதை ம‌த‌ம் சார்ந்த‌ விட‌ய‌மாக‌ ம‌ட்டும் பார்க்க‌வில்லை. இங்கு நாங்க‌ள் எதிர்நோக்குவ‌தில் மொழி சார்ந்த‌ பிர‌ச்ச‌னையே பிர‌தான‌மான‌து. மொழி அழிந்தால் இன‌ம் அழியும் என்ப‌தை நாங்க‌ள் ந‌ன்றாக‌ப் புரிந்து வைத்துள்ளோம். கோயில்க‌ள் உடைப்பு குறித்து இரு வேறு க‌ருத்துக‌ள் நில‌வுகின்ற‌ன‌. அதில் ப‌ல‌ கோயில்க‌ள் முறையான‌ ப‌திவு இல்லாம‌ல் நிறுவ‌ப்ப‌ட்ட‌வை எனும் உண்மையும் அட‌ங்கும். பொதுவாக‌வே இங்குள்ள‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு எதையும் முறையான‌ ப‌திவிடுவ‌தில் மெத்த‌ன‌ப்போக்கு உள்ள‌தை ஏற்றுக்கொள்ள‌வே வேண்டும். கோயில்க‌ளை உடைப்ப‌தும் த‌க‌ர்ப்ப‌தும் க‌ண்க‌ளுக்குத் தெரிந்த‌ அதிகார‌த் துஷ்பிர‌யோக‌ம்தான். ஆனால் க‌ண்க‌ளுக்குத் தெரியாம‌ல் மிக‌ நூத‌ன‌மாக‌ மொழியை அழிக்கும் செய‌ல் ந‌ட‌ந்தேறி வ‌ருவ‌தை ப‌ல‌ர் இங்குக் க‌ண்டுகொள்வ‌தில்லை. குறிப்பாக‌த் த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ளின் எண்ணிக்கை மிக‌ விரைவாக‌க் குறைந்து வ‌ருகிற‌து. 200 மேற்ப‌ட்ட‌ ப‌ள்ளிக‌ள் எப்போது வேண்டுமானாலும் மூட‌ப்ப‌ட‌லாம் எனும் நிலை உள்ள‌து. புற‌ந‌க‌ர‌ங்க‌ளும் தோட்ட‌ங்க‌ளும் அழிக்க‌ப்ப‌டும்போது அங்கு இருக்கின்ற‌ த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ளுக்கு மாற்று நில‌ங்க‌ள் போக்குவ‌ர‌த்து வ‌ச‌திய‌ற்ற‌ ம‌ற்றைய‌ இட‌ங்க‌ளில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. கோயில்க‌ளுக்கும் இந்த‌ நிலைதான். இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ ம‌லாயா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் த‌மிழ்ப்ப‌குதிக்கு அந்நிய‌ இன‌த்த‌வ‌ர் த‌லைவ‌ராக‌ அம‌ர்த்த‌ப்ப‌ட்டிருப்ப‌தும், எஸ்.பி.எம் எனும் இடைநிலைப்ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ இறுதிச்சோத‌னையில் த‌மிழ் மொழிக்கு அங்கீகார‌ம் இல்லாம‌ல் போயிருப்ப‌தும் ப‌ல‌ரின் க‌ண்ட‌ன‌க்குர‌லுக்கு ஆளான‌து. இல‌க்கிய‌வாதிக‌ள் ம‌ட்டும‌ல்லாது நாளித‌ழ்க‌ளும் ச‌ஞ்சிகைக‌ளும் இதுபோன்ற‌ விட‌ய‌ங்க‌ளுக்குக் க‌வ‌ன‌ம் அளித்து வ‌ருகின்ற‌ன‌. ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழிலும் இந்த‌ப் பிர‌ச்ச‌னைக‌ள் தொட்டு எழுந்துள்ள‌ க‌ட்டுரைக‌ளை நீங்க‌ள் காண‌லாம். ஒவ்வொரு முறை எம் மொழிக்கு எதிரான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் எடுக்க‌ப்ப‌டும் போதும் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நிலையை உண‌ர்ந்து த‌ங்க‌ள் பிள்ளைக‌ளை த‌மிழ்ப்ப‌ள்ளியில் சேர்க்கும் எண்ணிக்கை அதிக‌ரிக்கிற‌து. (மொழி, இல‌க்கிய‌ம் என‌ பேசிவிட்டு த‌ம் பிள்ளைகளைத் த‌மிழ்ப்ப‌ள்ளிக்கு அனுப்பாத‌ மேல்த்த‌ட்டு ம‌னித‌ர்க‌ள் குறித்து நான் இங்கு பேச‌வில்லை)கால‌ம் கால‌மாக‌ அதிகார‌த்தின் குர‌லுக்குக் க‌ட்டுப்ப‌டாம‌ல் ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளி முத‌ல் இடைநிலை ம‌ற்றும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் வ‌ரை த‌மிழை ஒரு பாட‌மாக‌ நாங்க‌ள் கொண்டிருப்ப‌து அர‌சாங்க‌ம் போட்ட‌ பிச்சையினால் அல்ல‌. அதிகார‌த்துக்கு எதிராக‌ எழுந்த‌ எங்க‌ளின் குர‌லால்தான்.

08. ஹிண்ட்ராப் போன்ற அமைப்புக்களும் அரசுக்கெதிரான ஒரு இந்துத்துவ
கட்டமைப்பை உருவாக்கவே முயற்ச்சி செய்கிறது. சிறு கதையாடல் சமூகத்திற்கான
அரசியல் உரிமை என்றவகையில் அனுகுவதை விட்டுவிட்டு இந்துத்துவத்திற்கு
எதிரான புறமொதுக்கலாக புரிந்துகொள்வதை எப்படி நோக்குகிறீர்கள்?

ம‌ற்றெல்லா ஊட‌க‌ங்க‌ளையும் விட‌ ஹிண்ட்ராப் ம‌ற்றும் அத‌ன் இன்றைய‌ நிலை குறித்து ‘வ‌ல்லின‌ம்’ நேர்காண‌லில் விரிவாக‌ வாசித்திருக்க‌லாம். உங்க‌ளுக்கு இருக்கின்ற‌ கேள்விக‌ள் எங்க‌ளுக்கும் இருந்த‌ன‌. ஆனால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ம் மொழியைவிட‌ ம‌த‌த்திற்கு அதிக‌ம் முக்கிய‌த்துவ‌ம் அளிக்க‌க்கூடிய‌து. அத‌ற்கு முக்கிய‌க் காரண‌ம் இன்றைய‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பாதிக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் த‌மிழைப் பின்புல‌மாக‌க் கொள்ளாத‌வ‌ர்க‌ள். ம‌லாய் ப‌ள்ளிக‌ளில் க‌ல்வி க‌ற்ற‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ள் இன‌த்தின் அடையாள‌மாக‌ ந‌ம்புவ‌து கோயிலையும் ம‌தத்தையும் ம‌ட்டுமே. என் அணுமான‌த்தில் ஒரு வேளை மொழியை மைய‌மாக‌ வைத்து ஹிண்ட்ராப் ந‌க‌ர்ந்திருந்தால் அத‌ற்கு ப‌ர‌வ‌லான‌ ஆத‌ர‌வு கிடைத்திருக்காது. அண்மையில் ந‌டந்த‌ ‘எஸ்.பி.எம் பாட‌ விவ‌கார‌ பேர‌ணியே’ அத‌ற்கு ஒரு சான்று. ஹிண்ட்ராப் பேர‌ணி கோயில் உடைப்பு ம‌ற்றும் சிறையில் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌தை முன்வைத்து ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. ஹிண்ட்ராப் போர‌ட்ட‌த்தை வெறும் இந்துத்துவ‌ பின்புல‌த்தைக் கொண்டு ம‌ட்டும் பார்ப்ப‌து ச‌ரியாகாது என‌ நினைக்கிறேன். ஹிண்ட்ராப் பேர‌ணியால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஓர‌ள‌வேனும் விளிப்புண‌ர்வு ஏற்ப‌ட்டுள்ள‌து என்றே க‌ருதுகிறேன். எல்லா விட‌ய‌ங்க‌ளையும் நுணுகி அதில் உள்ள‌ கோளாறுக‌ளைக் க‌ண்ட‌டைந்து த‌ங்க‌ள் மேதாவி த‌ன‌த்தை காட்டும் கூட்ட‌த்தின‌ர் ஹிண்ட்ராப் குறித்து மாறுப‌ட்ட‌ அபிப்பிராய‌ம் கொண்டிருக்க‌லாம். அது குறித்தெல்லாம் என‌க்கு ஒரு பொறுட்டும் கிடையாது. த‌மிழ‌க‌த்தோடு ஒப்பிடுகையில் இங்கு ம‌த‌ம் ப‌ங்காற்றும் வித‌ம் வேறாக‌ உள்ள‌து. வெறும் இன‌க்க‌ட்சிக்குள் ந‌ட‌க்கும் ச‌ர்ச்சைக‌ளை ம‌ட்டுமே பேசித்திரிந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ஹிண்ட்ராப் நேராக‌ அர‌சாங்க‌த்திட‌மே எம் உரிமைக்காக‌ வாதாடுகிற‌து. ‌ ஒரு அதிகார‌ ச‌க்தியை எதிர்க்க‌ அத‌ற்கு ஆயுத‌ம் ஒன்று தேவைப்ப‌டுகிற‌து. அது ம‌த‌மாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் தற்காலிக‌மாக‌க் கையில் எடுப்ப‌து த‌வ‌றில்லை என்றே நினைக்கிறேன்.

09. மலேசிய இலக்கியம் எதை நோக்கி நகர்கிறது என்று அவதானிக்கிறீர்கள்.?
எத்தனை சிறுபத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன? எத்தனை
தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன?

குறிப்பிட்டு அப்ப‌டி எதையும் சொல்ல இய‌ல‌வில்லை. ஆனால் முன்னையிலும் அது தீவிர‌ம் அடைந்துள்ள‌து என‌ ம‌ட்டும் தாராள‌மாக‌க் கூற‌லாம். இன்னும் இங்கு ந‌வீன‌த்துவ‌ம் பின் ந‌வீன‌த்துவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு எதிர்ப்பான‌ க‌ருத்துக‌ள் உள்ள‌ன‌. அவ்வாறு இருப்ப‌து இய‌ல்பென்றே ப‌டுகிற‌து. மேலும் சில‌ர் இது போன்ற‌ இச‌ங்க‌ளை முழுமையாக‌ அறியாம‌ல் ஆழ‌ம‌ற்ற‌ மொண்ணையான‌ க‌ருத்துக‌ள் மூல‌மும் தெளிவ‌ற்ற‌ மொழியின் மூல‌மும் தங்க‌ளை புத்திஜீவிக‌ள் போல‌ காட்டும் அபாய‌மும் எழுந்துள்ள‌து. பொதுவாக‌வே நான் இதுபோன்ற‌வ‌ர்க‌ளுக்கு எதிர்வினை ஆற்ற‌வோ அவ‌ர்க‌ள் க‌ருத்துக‌ளில் உள்ள‌ அப‌த்த‌ங்க‌ளை சுட்டிக்காட்ட‌வோ விரும்ப‌வில்லை(முன்பு அவ்வ‌ப்போது இருந்த‌து). ந‌ல்ல‌ இல‌க்கிய‌ சூழ‌ல் வ‌ள‌ரும் கால‌த்தில் இது போன்ற‌ கோமாளிக‌ள் பெரும் வ‌ர்ண‌ ஜால‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளை முன்நிறுத்த‌ அங்கும் இங்கும் எம்பிக் குதிப்ப‌து இய‌ல்பென்றே ப‌டுகிற‌து. என்னை பொருத்த‌வ‌ரை ந‌ல்ல‌ வாச‌க‌ன் த‌ன‌து இறுதி அம‌ர்வில் எழுத்தில் உள்ள‌ நேர்மையை ம‌ட்டுமே விரும்புவான்.

சிறுப‌த்திரிகை என‌ எதை நாம் அடையாள‌ப் ப‌டுத்துகிறோம் என்ப‌திலிருந்து உங்க‌ள் கேள்விக்கான‌ விடையை நான் தேடுகிறேன். அது அள‌வில் சிறிதாக‌வும் வ‌ணிக‌ நோக்க‌ம‌ற்றும் இருந்தால் ம‌ட்டும் போதாது என்ப‌து என் எண்ண‌ம். அது அதிகார‌த்தை நோக்கி த‌ன‌து உண்மை குர‌லை எழுப்ப‌வேண்டுமே த‌விர‌ அத‌ற்கு துணைப் போக‌க் கூடாது. எதிர்ப்புக் குர‌லை வெளிப்ப‌டுத்துவ‌தில் பாராப‌ட்ச‌ம் இருக்க‌க்கூடாது. குறிப்பாக‌ த‌ன‌து பெய‌ரையும் இத‌ழ் பெய‌ரையும் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்த‌ எதிர்வினை என்று க‌ண்ட‌ குப்பைக‌ளையும் பிர‌சுரிக்க‌க் கூடாது. இது போன்ற‌ அம்ச‌த்தில் வைத்து என்னால் ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழை சிற்றிதழ் த‌ன்மையோடு ஒப்பிட்டு பார்க்க‌ முடிகிற‌து. ம‌ற்ற‌ப‌டி ‘மௌன‌ம்’ ந‌ல்ல‌ இல‌க்கிய‌ இத‌ழாக‌ வ‌ருகிற‌து. அத‌ன் தீவிர‌ம் இன்னும் அதிக‌ரிக்க‌ வேண்டும். தொகுப்புக‌ள் நிறைய‌வே வ‌ந்துள்ள‌ன‌. அண்மையில் வ‌ல்லின‌ம் ப‌திப்ப‌க‌த்தின் மூல‌ம் மூன்று தொகுப்புக‌ள் வெளிவ‌ந்த‌ன‌.

10. உங்கள் கவிதைகளைப் படித்தேன் பெரும்பாலும் அன்பின் அயரச்சி, புதிர்
போன்றவற்றை புனைவதினூடாகவும் எதிர் நிலையில் பெண்ணுடல்களை உருவாக்கியும் அதிகம் பேசுகின்றன. அந்தப்பேச்சினூடாக தொலைக்கப்படாத அன்பின் மௌனங்களை பரிந்துரைப்பதினூடாக கவிதையாக தன்னை நிலை நிறுத்துகின்றன. உண்மையில் நீங்கள் கவிதைப்பிரதிகளினுடாக செய்ய விரும்புவது என்ன?

எதையும் இல்லை. என் வாழ்வின் மிக‌ நுண்ணிய‌ உண‌ர்வுக‌ளை சொல்ல‌ முய‌ல்கிரேன். அதில் காத‌ல், அன்பு, ஏக்க‌ம், ரௌத்திர‌ம் என‌ எல்லாமே உண்டு. நான் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை விவ‌ரிக்க‌ விரும்புவ‌தில்லை.என் க‌விதையினூடாக‌ ஒருவ‌ர் என்னை வ‌ந்து அடைய‌ நினைத்தால் தோல்வியையே த‌ழுவுவார். கார‌ண‌ம் க‌விதையில் உள்ள‌ காட்சிக்கும் என‌க்கும் எந்த‌ச் ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. ஆனால் அந்த‌க் காட்சி த‌ரும் ஒட்டுமொத்த‌ உண‌ர்விலும் நான் இருக்கிறேன். ஒருவேளை ஒருவ‌ர் அந்த‌ உண‌ர்வுக‌ளை முழுமையாக‌ வாசித்து அறிந்து கொள்ளும் த‌ருண‌ம் என்னைவிட்டு மிக‌ இய‌ல்பாக‌ப் பிரிந்துவிட‌லாம். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் என் ம‌ன‌ ஓட்ட‌ங்க‌ளைக் க‌ண்டு நானே என்னிலிருந்து த‌ப்பி ஓட‌ நினைப்ப‌துண்டு.அவை அவ்வ‌ள‌வு ப‌ய‌ங்க‌ர‌மான‌து. அவ்வாறு முடியாம‌ல் போகும் த‌ருண‌ங்க‌ளில் என்னால் மிகுந்த‌ வ‌லியுட‌ன் ஒரு க‌விதையைப் பிற‌ப்பிக்க‌ முடிகின்ற‌து.

இத‌ற்கிடையில் ந‌ய‌ன‌த்திற்கு நான் அனுப்பியிருந்த‌ க‌விதையும் பிர‌சுர‌ம் க‌ண்டிருந்த‌து. கோ.புண்ணிய‌வானின் சொல்லுக்குக் கிடைத்த‌ ம‌ரியாதை அது. ந‌ய‌ன‌த்திற்குச் சென்று அத‌ன் ஆசிரிய‌ரைக் காண‌ இந்த‌ ஒரு க‌விதை போதுமென‌ க‌ருதி ஓவிய‌ர் ராஜாவை அழைத்தேன். ‘ந‌ய‌ன‌ம்’ என்று சொன்ன‌வுட‌ன் ஓவிய‌ர் ராஜா ச‌ட்டென‌ ம‌றுத்தார். ந‌ய‌ன‌ம் ஆசிரிய‌ர் இராஜ‌குமார‌னின் இல‌க்கிய‌ ஆளுமையைப் ப‌ற்றி சிலாகித்துக் கூறிய‌வ‌ர் ,அவ‌ர் த‌னிமையில் இருக்க‌ விரும்புப‌வ‌ர் என்றும் புதிய‌வ‌ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ மாட்டார் என்றும் கூறினார். இராஜ‌குமார‌ன்தான் ‘புதுநில‌வு’ என‌ அறிந்த‌ போது என‌க்கு பெரும் அதிர்ச்சியாக‌ இருந்த‌து.

ந‌ய‌ன‌த்தின் மிக‌வும் இர‌சித்துப் ப‌டித்த‌வை புதுநில‌வின் க‌விதைக‌ள். ஒரு வ‌கையான‌ ஏக்க‌ம் த‌தும்பும் சொற்க‌ளோடு வெளிப்ப‌ட்ட‌ அக்க‌விதைக‌ள் இள‌ம் வாச‌க‌ர்க‌ளை க‌வ‌ர்வ‌தாய் இருந்த‌ன‌. இராஜ‌குமார‌ந்தான் புதுநில‌வு என‌த் தெரிந்த‌போது அவ‌ரைச் ச‌ந்திக்க‌ மேலும் என் தீவிர‌ம் அதிக‌ரித்த‌து. ஓவிய‌ர் ராஜா பிடிவாத‌மாக‌ ம‌றுக்க‌வே அவ‌ர் ச‌கோத‌ர‌ர் ஆதி.கும‌ண‌னைப் பார்க்க‌ வேண்டும் என்றேன். ஓவிய‌ர் ராஜாவுக்கு த‌ர்ம‌ ச‌ங்க‌ட‌மாகியிருக்க‌ வேண்டும். வேறு வ‌ழியில்லாம‌ல் ம‌லேசிய‌ ந‌ண்ப‌னுக்கு அழைத்துச் சென்றார்.

நாங்க‌ள் போன‌ நேர‌ம் ஆதி.கும‌ண‌ன் அங்கு இல்லை என்ற‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து. ஆனால் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ ஒருவ‌ர் வெளிப்ப‌ட்டார். எங்க‌ளை ஏறிட்டுப் பார்த்த‌வ‌ர் “என்ன‌ விச‌ய‌ம்?” என்றார். அவ‌ர் பேச்சே உஷ்ண‌மாக‌ இருந்த‌து. ஓவிய‌ர் ராஜாவும் ச‌ற்று த‌டுமாறி “ஆதி.கும‌ண‌னைப் பார்த்து குஜ‌ராத் நிதி கொடுக்க‌லாம் என‌ வ‌ந்தோம்” என்றார். “எங்கிட்ட‌யும் கொடுக்க‌லாம்” என்ற‌வ‌ர் ச‌ட்டென‌ ந‌ன்கொடை கொடுக்கும் புத்த‌க‌த்தின் என் பெய‌ரைப் ப‌திந்து கொண்டார். நான் ஐம்ப‌து ரிங்கிட்டை ம‌ன‌தில் அழுதுகொண்டே கொடுத்தேன். ஓவிய‌ர் ராஜா அந்த‌ ந‌ப‌ரோடு புகைப்ப‌ட‌ம் எடுத்துக் கொள்ள‌ச் சொன்னார். அவ‌ர் ம‌லேசிய‌ ந‌ண்ப‌னுக்குத் தூண் போன்ற‌வ‌ர்… த‌லைமை நிருப‌ர் என்றெல்லாம் கூற‌ அவ‌ருட‌ன் ஒரு புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டேன்.

வெளியில் வ‌ந்த‌தும் “ஏன் அவ‌ரிட‌மெல்லாம் பேசி நேர‌த்தை வீண‌டிக்க‌ வேண்டும்” என‌ ராஜாவிட‌ம் கூறினேன். அத‌ற்கு ஓவிய‌ர் ராஜா “அப்ப‌டி சொல்லாதே அவ‌ர் முக்கிய‌மான‌ ஆள்” என்றார். “யாராக‌ இருந்தால் என்ன‌ க‌னிவாக‌ப் பேச‌வில்லையே” என்றேன். பின்பு அவ‌ர் பெய‌ரை விசாரித்து பெ.இராஜேந்திர‌ன் என‌ அறிந்து கொண்டேன். அப்போது அவ‌ர் ம‌லேசிய‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌ செய‌லாள‌ராக‌ இருந்தார்.

பின் நாட்க‌ளில் என‌து ப‌ல‌ ம‌ணி நேர‌ங்க‌ளையும் பல‌ நாட்க‌ளையும் இதே பெ.இராஜேந்திர‌ னோடுதான் க‌ழிப்பேன் என்று அப்போது நான் உண‌ர்ந்திருக்க‌வில்லை.

தொட‌ரும்

ஒரு ப‌ள்ளி விடுமுறையில் கோலால‌ம்பூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்த‌து. என் வாழ்வில் முத‌ல் நீண்ட‌ ப‌ய‌ணம் அது. கோலால‌ம்பூரின் மேல் பெரும்ப‌லோர் போல் என‌க்கும் ஓர் ஈர்ப்பு இருந்த‌து. அடிக்க‌டி தொலைக்காட்சியில் பார்க்கு க‌ட்ட‌ட‌ங்க‌ள் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ வாழ்வு என‌ எல்லாமே லுனாஸில் ஒரு க‌ம்ப‌த்தில் இருந்த‌ என‌க்கு ஒரு அந்நிய‌ நாட்டின் க‌வ‌ர்ச்சியைக் கொடுத்த‌ப்ப‌டி இருக்கும். இவ‌ற்றையெல்லாம் மீறி நான் கோலால‌ம்பூருக்குச் செல்ல‌ வேறொரு விஷய‌மும் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அது ப‌த்திரிக்கை அலுவ‌ல‌க‌ம்.

அப்பா கோலால‌ம்பூரில் வேலை செய்து கொண்டிருந்த‌ த‌ருண‌ம் அது. ம‌கிழுந்து வ‌ச‌தியெல்லாம் இல்லை. பேருந்திலும் வாட‌கை வ‌ண்டியிலுமே பாதி கோலால‌ம்பூரைச் சுற்றிக்காட்டிய‌ப் ப‌டி இருந்தார். இர‌ண்டு நாட்க‌ளுக்குப் பிற‌கு ஓர் உற‌வின‌ரை அறிமுக‌ம் செய்து வைத்தார். அவ‌ர் ஓவிய‌ர் ராஜா. ச‌ட்டென‌ பார்ப்ப‌த‌ற்கு ர‌ஜினி போல் காட்சிய‌ளித்தார். நாங்க‌ள் குடும்ப‌த்தோடு சென்றிருந்தாலும் என்னையே கூர்ந்து பார்த்த‌படி இருந்தார். அவ‌ர் வ‌ரைந்து வெளியிட்ட‌ கேலிச்சித்திர‌ புத்த‌க‌த்தை நான் ஏற்க‌ன‌வே வாசித்த‌துண்டு. அது குறித்து கொஞ்ச‌ நேர‌ம் பேசினேன். அத‌ன் பிற‌கு அவ்வ‌ப்போது நெடிய‌ மௌன‌ம் ப‌ற்றிய‌ப‌டி இருந்த‌து.

ஓவிய‌ர் ராஜா அப்பாவின் தாய்மாம‌ன். த‌மிழ் நேச‌ம் நாளித‌ழில் ஒவிய‌ராக‌ப் ப‌ணியாற்றி வ‌ந்தார். ஆர‌ம்ப‌க் கால‌ங்க‌ளில் ‘ம‌யில்’, பின்ன‌ர் ம‌ல‌பார் கும‌ர‌னால் உருவான‌ ‘கோமாளி’ எனும் கேலிச் சித்திர‌ இத‌ழில் ப‌க்க‌ வ‌டிவ‌மைப்பாள‌ராக‌வும் ப‌ணியாற்றிய‌வ‌ர். அக்கால‌ அனுப‌வ‌ங்க‌ளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவை என‌க்கு ம‌ட்டும் சொல்வ‌து போல‌ ஒவ்வொரு முற்றுப்புள்ளியிலும் என்னையே அவ‌ர் பார்வை இருக்கும். பின்னாலின் என் குடும்ப‌த்தில் அவ‌ர் என்னுட‌ன் ம‌ட்டும் அதிக‌ நெருக்க‌ம் கொண்டிருந்த‌த‌ற்கு இவையெல்லாம் அறிகுறிபோல் இருந்த‌து.
ஓவிய‌ர் ராஜாவிட‌ம் ஒரு சிவ‌ப்பு நிற‌ க‌ஞ்சில் கார் இருந்த‌து. அந்த‌க் காரில்தான் எங்க‌ள் கோலால‌ம்பூர் சுற்றுப்ப‌ய‌ணம் தொட‌ர்ந்த‌து. ஓவிய‌ர் ராஜாவுக்கு எல்லா ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌ங்க‌ளிலும் ந‌ல்ல‌ ம‌ரியாதை இருந்த‌தால் அவ‌ருட‌னே ப‌த்திரிகைக‌ளுக்குச் சென்று அத‌ன் ஆசிரிய‌ர்க‌ளைச் ச‌ந்திப்ப‌தென‌ முடிவாகிய‌து.

முத‌லில் நாங்க‌ள் சென்ற‌ அலுவ‌ல‌க‌ம் ‘செம்ப‌ருத்தி’. அப்போது செம்ப‌ருத்தியின் ஆசிரிய‌ராக‌ க‌ண‌ப‌தி க‌ணேச‌ன் இருந்தார். இல‌ங்கை த‌மிழ‌ர். அவ‌ருட‌ன் ஓவிய‌ர் ர‌ஜினியும் இருந்தார். க‌ண‌ப‌தி க‌ணேச‌னைக் க‌ண்ட‌து பெரும் திருப்தியாக‌ இருந்த‌து. அப்போது நான் மிக‌வும் விரும்பி வாசித்த‌ இத‌ழ் செம்ப‌ருத்தி. க‌ண‌ப‌தி க‌ணேச‌னுக்குள் இத‌ழாசிரிய‌ன் ம‌ட்டும் அல்லாது ந‌ல்ல‌ வாச‌க‌னும் எழுத்தாள‌னும் இருந்தான். செம்ப‌ருத்தியின் நோக்க‌ம் குறித்து பேசினார். விடைப்பெறும் போது அவ‌ரிட‌ம் ஒரு கேள்வி கேட்டேன். “செம்ப‌ருத்தியில் வேலைக்கு வ‌ருவ‌தென்றால், என்ன‌ த‌குதி வேண்டும்?” அவ‌ர் மெல்ல‌ சிரித்த‌ப்ப‌டி “ஆர்வ‌ம் ம‌ட்டும் போது ” என்றார்.

ம‌கிழ்ச்சியோடு என‌து ப‌ய‌ண‌ம் அடுத்த‌ ப‌த்திரிகைக்குத் தொட‌ர்ந்த‌து…
தொட‌ரும்

ஓர‌ள‌வு இத‌ழ்க‌ளின் செய‌ல்பாடு புரிந்த‌போது க‌விதை எழுதுவதில் மிகுந்த‌ தீவிர‌ம‌டைய‌த் தொட‌ங்கினேன். ஏற‌க்குறைய‌ எல்லா ப‌த்திரிகைக‌ளில் ப‌டைப்புக‌ள் வ‌ந்துவிட்டாலும் ‘ந‌ய‌ன‌ம்’ இத‌ழில் என‌து க‌விதைக‌ள் வ‌ர‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் அதிக‌ரித்த‌ப‌டியே இருந்த‌து.

எல்லா ப‌த்திரிகைக‌ள் ப‌டைப்புக‌ளைப் பிர‌சுரித்தாலும் ‘ந‌ய‌ன‌ம்’ ம‌ட்டுமே க‌விதையை மிக‌ச் சிற‌ப்பாக‌ப் பிர‌சுரித்து வ‌ந்த‌து. க‌விதைக்கு மிக‌ப் பொருத்த‌மான‌ ப‌ட‌ங்க‌ளோடு முழுப்ப‌க்க‌த்தில் வெளிவ‌ரும் ந‌ய‌ன‌ம் இள‌ம் வாச‌க‌ர்க‌ளிடையே ப‌ர‌வ‌லான‌ அறிமுக‌த்தைப் பெற்றிருந்த‌து. அக்கால‌க் க‌ட்ட‌த்தில் ஜாசின் தேவ‌ராஜ‌ன், பெ.ச.சூரிய‌மூர்த்தி, பா.ராமு போன்றோரின் க‌விதைக‌ள் அதிக‌ம் இட‌ம்பெற்று வ‌ந்த‌ன‌. ப‌ல‌ முறை அனுப்பியும் க‌விதை வெளிவராம‌ல் இருந்த‌ நான் கோ.புண்ணிய‌வானின் உத‌வியை நாடினேன்.

ந‌ய‌ன‌ம் இத‌ழுக்கு நான் எழுதிய‌க் க‌விதையை ஒருத‌ர‌ம் வாசித்த‌ அவ‌ர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகித‌த்தில் ‘இவ‌ர் புதிதாக‌ எழுதும் இளைஞ‌ர். இவ‌ர் க‌விதையைப் பிர‌சுத்து வ‌ள‌ர‌விட‌வேண்டும்.’ என‌ த‌ன் ந‌ண்ப‌ர் வித்யாசாக‌ருக்கு (அப்போதைய‌ ந‌ய‌ன‌ம் துணை ஆசிரிய‌ர்)ஒரு சிறு குறிப்பு எழுதி க‌டித‌த்தை அனுப்ப‌க் கூறினார்.அன்று முழுதும் க‌டித‌த்தை த‌பால் பெட்டியில் போட்ட‌ நினைவிலேயே இருந்தேன்.க‌டித‌ம் ஒழுங்காக‌ப் பெட்டியில் விழுந்திருக்குமா என்ற‌ ச‌ந்தேக‌ம் கூட‌ எழுந்த‌து.

ம‌றுவார‌ம் எப்போது வ‌ரும் என‌க்காத்திருந்தேன். முத‌ல் ஆளாக‌ க‌டையில் நின்று, க‌ட்டுப் பிரித்த‌வுட‌ன் ந‌ய‌ன‌ம் இத‌ழைப் பெற்றுக்கொண்டு க‌டை வ‌ளாக‌த்திலேயே திற‌ந்து பார்த்த‌போது ஏமாற்ற‌ம். அத‌ன் எந்த‌ப் ப‌க்க‌த்திலும் என் க‌விதை இல்லை. இதே நிலைதான் ம‌றுவார‌மும்.இனி ‘ந‌ய‌ன‌ம்’ இத‌ழுக்கு எழுதுவ‌தில்லை என‌ முடிவெடுத்துக் கொண்டேன்.ந‌ய‌ன‌ம் இத‌ழை வாங்க‌வும் கூடாது என‌ நினைத்தேன்.

அழ‌கான‌ப் ப‌ட‌ங்க‌ளோடு என் க‌விதைக‌ள் இட‌ம்பெற‌ப்போகும் க‌ன‌வு மெல்ல‌ அழிந்த‌ப‌டி வ‌ந்த‌து.

தொட‌ரும்.

பாடாங் செராயில் உள்ள‌ விக்டோரியா தோட்ட‌த்தில் த‌லைமையாசிரிய‌ராக‌ இருந்தார் கோ.புண்ணிய‌வான். சிறுக‌தைக‌ளைவிட‌ அவ‌ரிட‌ம் க‌விதைக‌ள் குறித்து அதிக‌ம் உரையாடிய‌துண்டு. அவ‌ர் அப்போது அப்துல் ர‌குமானின் க‌விதைக‌ளை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ராக‌ இருந்தார். வைர‌முத்துவின் மேல் என‌க்கு இருந்த‌ பிடிப்பை மெல்ல‌ முத‌லில் அசைத்த‌வ‌ர் புண்ணிய‌வான். வைர‌முத்துவின் போலியான‌ உண‌ர்ச்சிக‌ளையும் க‌விதைக‌ளையும் அவ‌ர் கூறும்போது ம‌ன‌துக்குக் க‌ஷ்ட‌மாக‌ இருக்கும். என் ஆத‌ர்ச‌ க‌விஞ‌ரைத் த‌ர்காக்க‌த் தெரியாம‌ல் விழிப்பேன். அவ‌ரின் ‘நிஜ‌ம்’ தொகுதியில் இருந்த‌ சிறுக‌தைக‌ள் ஆர‌ம்ப‌ வாச‌க‌னான‌ என‌க்கு சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து.

த‌மிழில் நான் டைப் செய்ய‌ முத‌ல் தூண்டுத‌ல் அவ‌ரிட‌மிருந்தே கிடைத்த‌து. ஒருமுறை ப‌ள்ளி விடும் நேர‌ம் ‘த‌மிழில் டைப் செய்ய‌த் தெரியுமா?’ என்று கேட்டார்.எனது க‌ணினியில் த‌மிழ் எழுத்துருக்க‌ள் உள்ள‌து என‌ அறிவேன்.ஓரிரு முறை முய‌ன்று பார்த்து அலுத்த‌வுட‌ன் அம்முய‌ற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவ‌ர் கேட்ட‌தும் ‘தெரியாது’ என‌ சொல்ல‌த் தோன்றாம‌ல் மௌன‌மாக‌ப் பார்த்தேன். என்னிட‌ம் ஒரு பெய‌ர்ப்பட்டிய‌லை நீட்டிய‌வ‌ர், அதில் உள்ள‌ப் பெய‌ர்க‌ளை த‌மிழில் டைப் செய்து த‌ர‌வேண்டும் என‌ப் ப‌ணித்தார்.நானும் ம‌றுப்பு சொல்லாம‌ல் வாங்கிக்கொண்டேன்.அது கெடா மாநில‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ளின் பெய‌ர்ப்ப‌ட்டிய‌ல்.கோ.புண்ணிய‌வான் கெடா மாநில‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்த‌லைவ‌ர் என்ப‌தை அப்போதுதான் அறிந்தேன்

அன்றைய‌ இர‌வு என‌க்கு ச‌வாலாக‌ இருந்த‌து. விசைப்ப‌ல‌கையில் த‌மிழ் எழுத்துக‌ளை அடையாள‌ம் காண்ப‌து தொட‌ங்கி ஒவ்வொரு பெய‌ரையும் டைப் செய்து முடிக்க‌ ப‌ல‌ம‌ணி நேர‌ங்க‌ள் ஆன‌து. அவ‌ரிட‌ம் சேவை அடிப்ப‌டையில் வேலை செய்ய‌ போன‌ ஒரு வார‌த்தில் என‌க்கு இட‌ப்ப‌ட்ட‌ முத‌ல் ப‌ணி அது என்ப‌தால் முழுமூச்சாக‌ காரிய‌த்தில் இற‌ங்கினேன்.

எஸ்.பி.எம் முடித்து தேர்வு முடிவுக்குக் காத்திருந்த‌ நான் விக்டோரியா த‌மிழ்ப்ப‌ள்ளிக்குப் போன‌து வேலை செய்ய‌வோ ச‌ம்பாதிக்க‌வோ அல்ல‌. கோ.புண்ணிய‌வானைக் காண‌ ம‌ட்டுமே.ஓர் எழுத்தாள‌ரோடு இருப்ப‌து ம‌ன‌திற்குப் பெரும் தெம்பினைக்கொடுத்த‌து. வேலைக்குச் சேர்ந்தேனே த‌விர‌ செய்வ‌த‌ற்கு வேலையென்று பெரிதாக‌ ஒன்றும் இல்லை.அவ்வப்போது சில‌ க‌டித‌ங்க‌ள் த‌ட்ட‌ச்சு செய்ய‌ ப‌ணிக்க‌ப்ப‌டும்.சில‌ ச‌ம‌ய‌ம் க‌ணினியில் ‘ஸ்கேன்’ செய்ய‌ ப‌ணிக்க‌ப்ப‌டும் அவ்வ‌ள‌வே.ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் அவ‌ருட‌ன் இல‌க்கிய‌ம் பேசுவ‌துதான் என‌க்கு வேலை.எங்க‌ள் உரையாட‌ல் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இல‌க்கிய‌த்திலிருந்து ச‌மய‌ம் தொட‌ர்பாக‌வும் தாவிச் சென்ற‌துண்டு. என‌து ச‌ம‌ய‌ம் ம‌ற்றும் இந்தும‌த‌ம் தொட‌ர்பான‌ கேள்விக‌ளுக்கு அவ‌ரிட‌ம் ப‌தில்க‌ள் இருந்த‌ன‌.

ஆனால் அப்ப‌ள்ளியில் வேலை செய்த‌த‌ன் ப‌ல‌னாக‌ க‌ணினியை ஓர‌ள‌வு இய‌க்க‌க் க‌ற்றுக் கொண்டேன்.புண்ணிய‌வான் நான் எழுத்தில் ம‌ட்டும‌ல்லாம‌ல் வாழ்விலும் சிற‌ந்து விழ‌ங்க‌வேண்டுமென‌ அடிக்க‌டிக்கூறுவார். என‌து எஸ்.பி.எம் தேர்வு முடிவு வ‌ந்த‌வுட‌ன் நான் என‌து க‌ல்வியைத் தொட‌ர‌வேண்டும் என்ப‌தில் அவ‌ர் அக்க‌றையாக‌ இருந்தார்.

நான் எப்ப‌டி பெரிய‌ எழுத்தாள‌னாவ‌து எனும் க‌ன‌வில் ம‌ட்டுமே இருந்தேன்.

தொட‌ரும்.

இள‌ஞ்செல்வ‌ன் இல்லாத‌ வெறுமையை போக‌ போக‌த்தான் என்னால் உண‌ர‌ முடிந்த‌து. சிறுக‌தை ப‌ற்றியோ க‌விதை ப‌ற்றியோ இல‌க்கிய‌ம் ப‌ற்றியோ பேச ஆளில்லாம‌ல் த‌வித்தேன். சுற்றியிருந்த‌ அனைவ‌ருமே இல‌க்கிய‌ வாச‌ம் இல்லாம‌ல்தான் இருந்த‌ன‌ர். அம்மா தொட‌ர்க‌தைக‌ள் ப‌ற்றி பேச‌ ம‌ட்டுமே ஆர்வ‌மாக‌ இருந்தார்.அதுவ‌ரையில் என்னுட‌ன் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பேசிக்கொண்டிருந்த‌ கும‌ர‌ன் அண்ண‌ன் க‌ல்லூரி ப‌டிப்பில் தீவிர‌மாக‌ இருந்தார்.நான் உரையாட‌ ம‌னித‌ர்க‌ளைத் தீவிர‌மாக‌த் தேடிக்கொண்டிருக்கும் போது கோ.புண்ணிய‌வானின் நினைவு வ‌ந்த‌து.

கோ.புண்ணிய‌வான் ப‌ல‌ராலும் அறிய‌ப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ராக‌ இருந்தார். அம்மா அவ‌ரின் சில‌ க‌தைக‌ளை வாசித்திருந்தார்.அவ‌ரின் தொலைபேசி எண்க‌ள் எப்ப‌டி கிடைத்த‌து என‌ நினைவில் இல்லை. ஓர் இர‌வில்தான் அவ‌ரைத் தொலைபேசியில் அழைத்தேன். அப்போதெல்லாம் வீட்டுத்தொலைப்பேசிதான்.க‌ட்ட‌ண‌ம் அதிக‌ம் வ‌ந்தால் அம்மாவிட‌ம் திட்டுக் கிடைக்கும்.என‌வே அதிக‌ம் ஒன்றும் பேச‌க்கூடாது என்ற‌ ஜாக்கிர‌தை உண‌ர்வில்தான் அவ‌ரை அழைத்தேன்.

எதிர்முனையில் ச‌ற்று அத‌ட்ட‌ல் போன்ற‌ தொனியில் ‘ஹ‌லோ’ எனும் குர‌ல் கேட்ட‌து. நெற்றிச்சுருங்கி க‌ண்க‌ளைக் கூர்மையாக்கிச் சொல்ல‌க்கூடிய‌ ஹ்லோ அது.நானும் த‌டுமாறி ஹ‌லோ என்றேன்.மீண்டும் உய‌ர்ந்த‌ குர‌லில் விசாரிப்பு ந‌ட‌ந்த‌து.பெய‌ரைச் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் அடையாள‌ம் க‌ண்டுகொண்ட‌வ‌ராக‌ கோ.புண்ணிய‌வான் பேச‌த்தொட‌ங்கினார்.ந‌ட‌க்க‌விருக்கும் புதுக்க‌விதை திற‌னாய்வில் என்னுடைய‌ ஒரு க‌விதை குறித்தும் எழுதியிருப்ப‌தாக‌க் கூறினார்.என‌க்கு பெருமை பிடிப்ப‌ட‌வில்லை.கோ.புண்ணிய‌வான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய‌ அங்கீகார‌ம் போல‌ உண‌ர்ந்தேன்.

அத‌ற்கு பின்பு அவ‌ரின் தொலைபேசிக்கு அழைக்கும் போதெல்லாம் அதே போன்ற‌ ‘ஹ‌லோ’வே வெளிப்ப‌டும். அந்த‌க் க‌ன‌மான‌ ஹ‌லோவைத் தாங்கிக்கொண்டு பேசினால் நாம் நினைக்காத‌ த‌ருண‌ம் குபீரென்ற‌ சிரிப்பு அவ‌ரிட‌மிருந்து வெளிப்ப‌டும்.அந்த‌ச் சிரிப்பு வித்தியாச‌மான‌து.அந்த‌ச் சிரிப்பு உருவாகும் முன், அத‌ன்  முத‌ல் வினாடி வ‌ரை அப்ப‌டி ஒரு சிரிப்பு அவ‌ரிட‌ம் இருந்து வ‌ர‌ப்போவ‌தை யாருமே அனுமானிக்க‌ முடியாது.முடிந்த‌ பின்பு சிரிப்பு க‌ண்களில் இருக்கும்.
கோ.புண்ணிய‌வான் என‌க்குக் காட்டிய‌ க‌விதை உல‌கு இன்னும் தீவிர‌மான‌து. பேசுவ‌தை கேட்டுக்கொண்டிருந்த‌ என்னைப் பேச‌ வைத்து கேட்ட‌வ‌ர் கோ.புண்ணிய‌வான். அவ‌ருட‌ன் இருந்த‌ ப‌ணிபுரிந்த‌ கால‌ங்க‌ள் இன்றும் நினைவில் ப‌திந்துள்ள‌ன‌.

தொட‌ரும்

இள‌ஞ்செல்வ‌னின் ம‌ர‌ண‌ம் குறித்து பேசுவ‌து பெரும் த‌டையாக‌வே இன்னும் ம‌ன‌தில் இருக்கிற‌து.ஒவ்வொரு முறை அவ‌ர் ப‌ற்றி பேசும் பொழுதும் அவ‌ர‌து ம‌ர‌ண‌த்தில் வ‌ந்து முடியும் உரையாட‌ல்க‌ள் அமைதியிழ‌க்க‌ வைக்கிற‌து. அவ‌ர‌து இல‌க்கிய‌ம் குறித்து விம‌ர்சிக்க‌வோ இன்றைய‌ வாசிப்பில் த‌ர‌ம் பார்க்க‌வோ வாச‌க‌ர்க‌ளுக்கு எல்லா உரிமையும் உண்டு.ஆனால் நான் வெறும் இல‌க்கிய‌வாதியாக‌ ம‌ட்டும் இள‌ஞ்செல்வ‌னைப் பார்க்க‌வில்லை.கையில் ஒரு வெள்ளிக்காப்போடும் , க‌ழுத்தில் அரை இஞ்ச் த‌டிப்புக்கு ஒரு வெள்ளிச்ச‌ங்கிலியும் எந்நேர‌மும் க‌றுப்பு ப‌னிய‌னோடும்  க‌ண்ணில் திமிர் பிடித்து சுற்றிக்கொண்டிருந்த‌ என்னை இள‌ஞ்செல்வ‌‌னைப் போல் அணுகிய‌வ‌ர் அப்போது யாரும் இல்லை.என‌க்குள் இல‌க்கிய‌ம் உள்ள‌து என‌ காட்டிய‌வ‌ர் இள‌ஞ்செல்வ‌ன்.அதையும் மீறி ந‌வீன‌ இல‌க்கிய‌த்தின் ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ப‌ங்க‌ளிப்பு க‌ணிச‌மான‌து என்ப‌தை யாராளும் ம‌றுக்க‌ இய‌லாது.

இந்த‌ச் சூழ‌லில் மீண்டும் இள‌ஞ்செல்வ‌னின் ம‌ர‌ண‌ம் குறித்து நான் துள்ளிய‌மாக‌ நினைவுகூற‌ விரும்ப‌வில்லை. ஆனால் அக்கால‌க்க‌ட்ட‌த்தில் என் ம‌ன‌ம் இல‌கிய‌த்தின் மீது எப்ப‌டி வெறி கொண்டு அழைந்த‌து என்ப‌து ம‌ட்டும் தெளிவாக‌ நினைவில் உள்ள‌து.வெறிதான்!வெறி வ‌ரும்போது அறிவு வேலை செய்வ‌தில்லை.ஒருவ‌கையான‌ ப‌த‌ற்ற‌ நிலையிலேயே இருப்போம்.நானும் அப்ப‌டித்தான். ப‌த்திரிகையில் பெய‌ர் பார்த்த‌ கிள‌ர்ச்சி எந்த‌ நேர‌மும் என்னைச் சுற்றி வ‌ந்த‌ ப‌டியே இருந்த‌து.அப்போது என்னுடைய‌ நோக்க‌மெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.எப்ப‌டியும் ‘ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன்’ ப‌த்திரிகையில் என‌து சிறுக‌தை இட‌ம் பிடித்துவிடவேண்டும். அப்போதெல்லாம் ‘ந‌ண்ப‌ன்’ ப‌த்திரிக்கை ம‌ட்டும்தான் அதிக‌ விற்ப‌னையில் இருந்த‌து.இப்போது போல‌ அப்போதும் ‘த‌மிழ் நேச‌னை’ சாமியும் அவ‌ர் ச‌காக்க‌ளுமே ஆக்கிர‌மித்து வ‌ந்த‌ன‌ர்.

ம‌லேசிய‌ ந‌ண்ப‌னில் சிறுக‌தை வ‌ந்தால் ப‌ல‌ருக்கும் என் பெய‌ர் அறிமுக‌மாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்ட‌வ‌ச‌மாக‌ ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் ஆசிரிய‌ர் ஆதி.கும‌ண‌னே இள‌ஞ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு வ‌ந்திருந்தார்.இள‌ஞ்செல்வ‌ன் த‌ன‌து ம‌ர‌ண‌த்திலும் என‌க்கு ந‌ன்மைசெய்துவிட்ட‌தாக‌ க‌ருதினேன். ஆதிகும‌ண‌ன் க‌ருப்பு நிற‌‌த்திலான‌ ‘பாத்தேக்’ர‌க‌ துணி அணிந்திருந்தார் என‌ ஞாப‌க‌ம்.அவ‌ர் ப‌க்க‌த்தில் சில‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர்.நாடு முழுவ‌தும் ப‌ல‌ ல‌ட்ச‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்ட‌வராக‌ ஆதி.கும‌ண‌ன் அப்போது இருந்தார்.அவ‌ர் சொல்லுக்குக் க‌ட்டுப்ப‌டும் ம‌க்க‌ள் திர‌ளை த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ச‌ம்பாதித்து வைத்திருந்தார்.ம‌லேசியாவில் இத்த‌கைய‌ ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ள் குறைவு.த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னின் ம‌ர‌ண‌ம் அவ‌ரை மிக‌வும் பாதித்திருக்க‌ வேண்டும்.கைக‌ளைக் க‌ட்டிய‌ப் ப‌டி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.ம‌க்க‌ள் கூட்ட‌ம் இன்னும் வ‌ந்து சேராத‌ நேர‌ம‌து.

நான் ஆதி.கும‌ண‌னை நோக்கி ஓடினேன்.அவ‌ர் என்னை ஏற‌ இற‌ங்க‌ ஒருத‌ர‌ம் பார்த்தார். நான் ச‌ற்றும் தாம‌திக்காம‌ல்.”நான் ந‌வீன்.உங்க‌ள் ப‌த்திரிகைக்கு சிறுக‌தை அனுப்பியிருக்கிறேன் நினைவுண்டா?” என்றேன். என்னைப்போல் ப‌ல‌ கோமாளிக‌ளைப் பார்த்திருப்பார் போல‌. தாம‌திக்காம‌ல் ‘ஆம்’ என்ப‌துபோல‌ த‌லையை ஆட்டினார்.அவ‌ர் ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ள் என்னை அந்நிய‌மாய் பார்த்த‌ன‌ர்.என் தோற்ற‌ம்  அவ‌ர்க‌ளைக் குழ‌ப்ப‌ம் அடைய‌ச் செய்திருக்க வேண்டும். நான் விடாம‌ல் “நான் ப‌ல‌ சிறுக‌தைக‌ள் அனுப்பியும் உங்க‌ள் ப‌த்திரிகையில் இட‌ம்பெற‌வே இல்லை.அடுத்த‌ வார‌ம் போட்டுவிடுங்க‌ள் சார்” என்றே.’க‌ண்டிப்பாக‌’என்ப‌து போல‌ த‌லையை ம‌ட்டும் ஆட்டினார்.

ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் என்பது எவ்வ‌ள‌வு பெரிய‌ நிர்வாக‌ம்;அதில் ஞாயிறு ப‌திப்பிற்கென்று யார் பொறுப்பாள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர் என்று எதுவுமே தெரியாம‌ல் நான் ஆதி.கும‌ண‌னிட‌ம் சொன்ன‌ப‌டி சிறுக‌தை ப‌த்திரிகையில் வ‌ந்துவிடும் என்ற‌ பெரிய‌ ந‌ம்பிக்கையில் அடுத்த‌  ஞாயிறு ந‌ண்ப‌னுக்குக் காத்திருந்தேன்.
தொட‌ரும்

புத்த‌க‌ வெளியீடு முடிந்த‌தும் இள‌ஞ்செல்வ‌னிட‌ம் என‌து புத்த‌க‌த்தையும் கையெழுத்து வாங்க‌ நீட்டினேன். புன்ன‌கைத்த‌வ‌ர் கையெழுத்திட்டு என் க‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றினார். ‘உன்ன‌ நான் சில‌ருக்கு அறிமுக‌ம் செஞ்சி வைக்கிறேன்’ என்றார். ப‌ற்றிய‌ கையை விடாம‌ல் மேடையிலிருந்து கீழே இற‌ங்கினார். என‌க்குப் ப‌த‌ற்ற‌மாக‌வே இருந்த‌து. நேராக‌ என்னை அக்கினியிட‌ம் அழைத்துச் சென்றார்.

‘இவ‌ர்… நான் அடுத்த‌த் த‌லைமுறையாக‌ ந‌ம்பும் இளைஞ‌ன். நீங்க‌ள் உங்க‌ள் ப‌த்திரிகையில் இவ‌ர் எழுத்துக்கு ந‌ன்கு வாய்ப்ப‌ளிக்க‌ வேண்டும்’ என‌ பேச்சினூடே என்னை அறிமுக‌ம் செய்துவைத்தார். ‘ம‌க்க‌ள் ஓசையில்’ ஏற்க‌ன‌வே என‌து சில‌ க‌விதைக‌ள் வ‌ந்திருந்த‌தால் அக்கினி என்னை அடையாள‌ம் க‌ண்டுக்கொண்டார். ‘ம‌.ந‌வீன் க‌விதைக‌ள்னு த‌னியாவே போட்டுடுவோம் என்றார்’. அத‌ன் பின் ப‌த்மினி என்‍ப‌வ‌ரை அறிமுக‌ம் செய்து வைத்தார். (ப‌த்மினி அக்கினியின் ம‌னைவி என்ப‌தும், அவ‌ர்தான் அப்போதைய‌ ஞாயிறு ந‌ண்ப‌ன் பொறுப்பாசிரிய‌ர் போன்ற‌ விவ‌ர‌மெல்லாம் என‌க்கு  அப்போது தெரியாது) என‌க்கு ம‌கிழ்ச்சி தாங்க‌வில்லை. இனி வ‌ண்ண‌ப்ப‌ட‌ங்க‌ளுட‌ன் என‌து க‌விதைக‌ள் ப‌த்திரிகையில் விடாம‌ல் அர‌ங்கேர‌ப்போகும் தின‌ங்க‌ளுக்காக‌க் காத்திருந்தேன்.

அறிமுக‌ங்க‌ள் முடியும்வ‌ரை இள‌ஞ்செல்வ‌ன் என் கையைப் ப‌ற்றியே இருந்தார். வ‌ழ‌க்க‌த்தைவிட‌ அன்று ம‌கிழ்ச்சியாக‌வும் உற்சாக‌மாக‌வும் காண‌ப்பட்டார். ச‌ற்று நேர‌த்திற்குப்பின் அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ட்ட‌ம் சூழ்ந்துகொள்ள‌ அவ‌ர் க‌ர‌ம் என்னை மெதுவாக‌ விடுவித்த‌து. நான் இருப்ப‌தா செல்வ‌தா என‌த் தெரிய‌வில்லை. அங்கேயே விழித்த‌ப்ப‌டி சிறிது நேர‌ம் நின்று கொண்டிருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் இள‌ஞ்செல்வ‌னின் உருவ‌ம் திட்டுத் திட்ட‌க‌த் தெரிந்த‌து. நான் இறுதியாய் இள‌ஞ்செல்வ‌னைப் பார்த்த‌து அன்றுதான்.

மேடையில் இள‌ஞ்செல்வ‌னின் ஆளுமையை அறிந்த‌பின் அவ‌ரிட‌ம் மீண்டும் ச‌க‌ஜ‌மாக‌ச் சென்று பேசுவ‌து ம‌ன‌த்த‌டையாக‌ இருந்த‌து. ஒரு ந‌ல்ல‌ சிறுக‌தையாவ‌து எழுதிய‌ப்பின் அவ‌ரைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என‌ எண்ணியிருந்தேன். அத‌ற்கும் வ‌ழிவிடாம‌ல் அப்புத்த‌க‌ வெளியீட்டிற்குப் பின் இர‌ண்டு மாத‌ இடைவெளியில் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் இற‌ந்துவிட்ட‌தாக‌த் த‌க‌வ‌ல் வ‌ந்த‌து.

என்னை வ‌ர‌வேண்டாம் என்ற‌ அவ‌ர் வீட்டிற்கு அவ‌ர் அனும‌தியின்றியே சென்றேன்.

-தொட‌ரும்

மீண்டும் நான் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னைச் ச‌ந்திப்பேன் என‌ நினைக்க‌வில்லை. உற‌வின‌ர் ஒருவ‌ர் வெல்ல‌ஸிலி தோட்ட‌த் த‌மிழ்ப்ப‌ள்ளிக்கு அருகில் இருந்த‌ மாரிய‌ம்ம‌ன் ஆல‌ய‌த்தில் ஒரு ம‌திய‌ம் க‌ஞ்சி ஊற்றினார். கோயில் க‌ஞ்சி என்ப‌து அப்போது மிக‌ப் பிர‌ய‌சித்த‌ம்.நான் அதே த‌மிழ்ப்பள்ளியில் ப‌டிக்கும் போது கூட‌ மாத‌த்திற்கு ஒருவ‌ர் கோயிலில் க‌ஞ்சிக்காய்ச்சி ஊற்றுவார்க‌ள். அப்போதெல்லாம் எங்க‌ளுக்கு ஒரே கொண்டாட்ட‌ம்.அது போன்ற‌ நாட்க‌ளில் க‌ஞ்சி குடிப்ப‌தற்கென்றே ப‌ள்ளியைச் சீக்கிர‌ம் முடித்துவிடுவார்க‌ள். அதுபோன்ற‌ ஒரு ப‌ள்ளி நாளில்தான் என‌து உற‌வின‌ரும் க‌ஞ்சி ஊற்றிக்கொண்டிருந்தார். எதேசையாய் அப்ப‌க்க‌ம் போன‌ என்னைப் பார்த்த‌ இள‌ஞ்செல்வ‌ன் கைய‌சைத்து அழைத்தார்.

‘ஏன் இப்ப‌வெல்லாம் வ‌ருவ‌தில்லை…’ என‌ச் சாதார‌ண‌மாக‌க் கேட்டார். அவ‌ர‌து முந்தைய‌ப் பேச்சு என்னை ம‌ட்டுமே பாதித்த‌தையும் அவ‌ருக்கு அது அறுதியாக‌ ஞாப‌க‌த்தில் இல்லாத‌தையும் அவ‌ர‌து பார்வையிலேயே உண‌ர்ந்துகொள்ள‌ முடிந்த‌து. பின்ன‌ர் அவ‌ரே தொட‌ர்ந்தார் ‘உன்னை தேடி க‌ண்டுபிடிக்கிற‌தே க‌ஷ்ட‌மா போச்சி…கொஞ்ச‌ம் இரு…’ என‌ அவ‌ர் அறைக்குச் சென்று ஓர் அழைப்பித‌ழோடு வெளிவ‌ந்தார். அது அவ‌ர‌து புத்த‌க‌ வெளியீட்டின் அழைப்பித‌ழ்.மௌன‌மாக‌ப் பெற்றுக்கொண்டேன். நான் எதிராளியாய் நினைக்கும் ஒருவ‌ர் திடீரென‌ என்முன் தோன்றி அன்பு செலுத்தும்போது அட‌ங்கிப்போகும் ஆண‌வ‌த்தின் அல‌ர‌ல் ஒருவ‌கையான‌ அவ‌ஸ்தையைக் கொடுத்த‌து. அதுவும் நான் அவ‌ரை எதிராளியாய் நினைப்ப‌து கூட‌ அவ‌ருக்குத் தெரியாத‌து என்னை அவ‌ரிட‌ம் பேச‌ விடாம‌ல் மௌன‌த்தில் ஆழ்த்திய‌து. எல்லாவ‌ற்றுக்கும் ‘ச‌ரி’ சொல்லிவிட்டு விடைப்பெற்றேன்.

குறிப்பிட்ட‌ தின‌த்தில் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் புத்த‌க‌வெளியீட்டு விழாவிற்குச் சென்றேன். ‘எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் சிறுக‌தைக‌ள், வான‌ம் காணாத‌ விமான‌ங்க‌ள் (குறுநாவ‌ல் தொகுதி)’ என்ற‌ இரு புத்த‌க‌ங்க‌ளின் வெளியீட்டு நிக‌ழ்வு அது. அப்போது மிக‌த் தீவிர‌மாக‌ எழுதிக்கொண்டிருந்த‌ அக்கினி, சை.பீர்முக‌ம்ம‌து, கோ.புண்ணிய‌வான் போன்றோரை முத‌ன்முத‌லாக‌ அந்த‌ நிக‌ழ்வில்தான் பார்த்தேன். நான் பார்த்த‌ முத‌ல் புத்த‌க‌ வெளியீடும் அதுதான். பாயா பெசாரில் இருக்கும் ச‌ர‌ஸ்வ‌தி பூஜா தியான‌ ஆசிர‌ம‌த்தில் ந‌ட‌ந்த‌ அந்நிக‌ழ்வில் இறுதி இருக்கையில் அம‌ர்ந்து கொண்டேன்.

நிக‌ழ்வு தொட‌ங்கிய‌தும் ஒவ்வொரு எழுத்தாள‌ர்க‌ளும் பேசினார்க‌ள். எஸ்.பொ வின் எழுத்து ப‌ற்றி சை.பீர் பேசிய‌து ம‌ட்டும் இப்போது நினைவில் த‌ட்டுப்ப‌டுகிற‌து. ப‌ல‌ர் பேசிய‌து எதுவும் என‌க்கு விள‌ங்க‌வில்லை. ஆனால் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் எழுத்து சார்ந்த‌ செய‌ல்பாடுக‌ளையும் புத்தில‌க்கிய‌ ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ஆற்றிய‌ ப‌ங்கையும் செவிம‌டுத்த‌ப் போது அதிர்ச்சிய‌டைந்தேன். ஒரு இல‌க்கிய‌ ஆளுமையின் முழு வ‌டிவ‌ம் தெரியாம‌ல் ப‌த்திரிகையில் அவ‌ர் பெய‌ரைத் தேடிய‌ சிறுபிள்ளைத் த‌ன‌த்தை நொந்து கொண்டேன். அவ‌ருட‌ன் அம‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்கில் பேசிய‌தும் அவ‌ரிட‌ம் குருட்டுத்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்ட‌தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப் பார்த்தேன்.வெட்க‌மாக‌ இருந்த‌து.

புத்த‌க‌ வெளியீட்டிற்குப் பிற‌கு இள‌ஞ்செல்வ‌னிட‌ம் புத்த‌க‌ம் பெற்றுக்கொள்ள‌ச் சென்றேன். என்னிட‌ம் இருப‌து வெள்ளிதான் இருந்த‌து. இர‌ண்டு புத்த‌க‌த்தின் விலை முப்ப‌து ரிங்கிட். நான் ஒரு புத்த‌க‌ம் ம‌ட்டும் வாங்கி கொள்ள‌லாம் என‌ நினைத்து இள‌ஞ்செல்வ‌னை அனுகினேன். இர‌ண்டு புத்த‌க‌த்தையும் என் கையில் திணித்த‌வ‌ர் ‘எங்கும் போயிடாத‌ இங்க‌யே நில்லு’ என‌ மேடைக்க‌ருகில் நிறுத்தினார்.

-தொட‌ரும்