பாடாங் செராயில் உள்ள‌ விக்டோரியா தோட்ட‌த்தில் த‌லைமையாசிரிய‌ராக‌ இருந்தார் கோ.புண்ணிய‌வான். சிறுக‌தைக‌ளைவிட‌ அவ‌ரிட‌ம் க‌விதைக‌ள் குறித்து அதிக‌ம் உரையாடிய‌துண்டு. அவ‌ர் அப்போது அப்துல் ர‌குமானின் க‌விதைக‌ளை அதிக‌ம் நேசிப்ப‌வ‌ராக‌ இருந்தார். வைர‌முத்துவின் மேல் என‌க்கு இருந்த‌ பிடிப்பை மெல்ல‌ முத‌லில் அசைத்த‌வ‌ர் புண்ணிய‌வான். வைர‌முத்துவின் போலியான‌ உண‌ர்ச்சிக‌ளையும் க‌விதைக‌ளையும் அவ‌ர் கூறும்போது ம‌ன‌துக்குக் க‌ஷ்ட‌மாக‌ இருக்கும். என் ஆத‌ர்ச‌ க‌விஞ‌ரைத் த‌ர்காக்க‌த் தெரியாம‌ல் விழிப்பேன். அவ‌ரின் ‘நிஜ‌ம்’ தொகுதியில் இருந்த‌ சிறுக‌தைக‌ள் ஆர‌ம்ப‌ வாச‌க‌னான‌ என‌க்கு சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து.

த‌மிழில் நான் டைப் செய்ய‌ முத‌ல் தூண்டுத‌ல் அவ‌ரிட‌மிருந்தே கிடைத்த‌து. ஒருமுறை ப‌ள்ளி விடும் நேர‌ம் ‘த‌மிழில் டைப் செய்ய‌த் தெரியுமா?’ என்று கேட்டார்.எனது க‌ணினியில் த‌மிழ் எழுத்துருக்க‌ள் உள்ள‌து என‌ அறிவேன்.ஓரிரு முறை முய‌ன்று பார்த்து அலுத்த‌வுட‌ன் அம்முய‌ற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவ‌ர் கேட்ட‌தும் ‘தெரியாது’ என‌ சொல்ல‌த் தோன்றாம‌ல் மௌன‌மாக‌ப் பார்த்தேன். என்னிட‌ம் ஒரு பெய‌ர்ப்பட்டிய‌லை நீட்டிய‌வ‌ர், அதில் உள்ள‌ப் பெய‌ர்க‌ளை த‌மிழில் டைப் செய்து த‌ர‌வேண்டும் என‌ப் ப‌ணித்தார்.நானும் ம‌றுப்பு சொல்லாம‌ல் வாங்கிக்கொண்டேன்.அது கெடா மாநில‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ளின் பெய‌ர்ப்ப‌ட்டிய‌ல்.கோ.புண்ணிய‌வான் கெடா மாநில‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்த‌லைவ‌ர் என்ப‌தை அப்போதுதான் அறிந்தேன்

அன்றைய‌ இர‌வு என‌க்கு ச‌வாலாக‌ இருந்த‌து. விசைப்ப‌ல‌கையில் த‌மிழ் எழுத்துக‌ளை அடையாள‌ம் காண்ப‌து தொட‌ங்கி ஒவ்வொரு பெய‌ரையும் டைப் செய்து முடிக்க‌ ப‌ல‌ம‌ணி நேர‌ங்க‌ள் ஆன‌து. அவ‌ரிட‌ம் சேவை அடிப்ப‌டையில் வேலை செய்ய‌ போன‌ ஒரு வார‌த்தில் என‌க்கு இட‌ப்ப‌ட்ட‌ முத‌ல் ப‌ணி அது என்ப‌தால் முழுமூச்சாக‌ காரிய‌த்தில் இற‌ங்கினேன்.

எஸ்.பி.எம் முடித்து தேர்வு முடிவுக்குக் காத்திருந்த‌ நான் விக்டோரியா த‌மிழ்ப்ப‌ள்ளிக்குப் போன‌து வேலை செய்ய‌வோ ச‌ம்பாதிக்க‌வோ அல்ல‌. கோ.புண்ணிய‌வானைக் காண‌ ம‌ட்டுமே.ஓர் எழுத்தாள‌ரோடு இருப்ப‌து ம‌ன‌திற்குப் பெரும் தெம்பினைக்கொடுத்த‌து. வேலைக்குச் சேர்ந்தேனே த‌விர‌ செய்வ‌த‌ற்கு வேலையென்று பெரிதாக‌ ஒன்றும் இல்லை.அவ்வப்போது சில‌ க‌டித‌ங்க‌ள் த‌ட்ட‌ச்சு செய்ய‌ ப‌ணிக்க‌ப்ப‌டும்.சில‌ ச‌ம‌ய‌ம் க‌ணினியில் ‘ஸ்கேன்’ செய்ய‌ ப‌ணிக்க‌ப்ப‌டும் அவ்வ‌ள‌வே.ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் அவ‌ருட‌ன் இல‌க்கிய‌ம் பேசுவ‌துதான் என‌க்கு வேலை.எங்க‌ள் உரையாட‌ல் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இல‌க்கிய‌த்திலிருந்து ச‌மய‌ம் தொட‌ர்பாக‌வும் தாவிச் சென்ற‌துண்டு. என‌து ச‌ம‌ய‌ம் ம‌ற்றும் இந்தும‌த‌ம் தொட‌ர்பான‌ கேள்விக‌ளுக்கு அவ‌ரிட‌ம் ப‌தில்க‌ள் இருந்த‌ன‌.

ஆனால் அப்ப‌ள்ளியில் வேலை செய்த‌த‌ன் ப‌ல‌னாக‌ க‌ணினியை ஓர‌ள‌வு இய‌க்க‌க் க‌ற்றுக் கொண்டேன்.புண்ணிய‌வான் நான் எழுத்தில் ம‌ட்டும‌ல்லாம‌ல் வாழ்விலும் சிற‌ந்து விழ‌ங்க‌வேண்டுமென‌ அடிக்க‌டிக்கூறுவார். என‌து எஸ்.பி.எம் தேர்வு முடிவு வ‌ந்த‌வுட‌ன் நான் என‌து க‌ல்வியைத் தொட‌ர‌வேண்டும் என்ப‌தில் அவ‌ர் அக்க‌றையாக‌ இருந்தார்.

நான் எப்ப‌டி பெரிய‌ எழுத்தாள‌னாவ‌து எனும் க‌ன‌வில் ம‌ட்டுமே இருந்தேன்.

தொட‌ரும்.

இள‌ஞ்செல்வ‌ன் இல்லாத‌ வெறுமையை போக‌ போக‌த்தான் என்னால் உண‌ர‌ முடிந்த‌து. சிறுக‌தை ப‌ற்றியோ க‌விதை ப‌ற்றியோ இல‌க்கிய‌ம் ப‌ற்றியோ பேச ஆளில்லாம‌ல் த‌வித்தேன். சுற்றியிருந்த‌ அனைவ‌ருமே இல‌க்கிய‌ வாச‌ம் இல்லாம‌ல்தான் இருந்த‌ன‌ர். அம்மா தொட‌ர்க‌தைக‌ள் ப‌ற்றி பேச‌ ம‌ட்டுமே ஆர்வ‌மாக‌ இருந்தார்.அதுவ‌ரையில் என்னுட‌ன் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பேசிக்கொண்டிருந்த‌ கும‌ர‌ன் அண்ண‌ன் க‌ல்லூரி ப‌டிப்பில் தீவிர‌மாக‌ இருந்தார்.நான் உரையாட‌ ம‌னித‌ர்க‌ளைத் தீவிர‌மாக‌த் தேடிக்கொண்டிருக்கும் போது கோ.புண்ணிய‌வானின் நினைவு வ‌ந்த‌து.

கோ.புண்ணிய‌வான் ப‌ல‌ராலும் அறிய‌ப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ராக‌ இருந்தார். அம்மா அவ‌ரின் சில‌ க‌தைக‌ளை வாசித்திருந்தார்.அவ‌ரின் தொலைபேசி எண்க‌ள் எப்ப‌டி கிடைத்த‌து என‌ நினைவில் இல்லை. ஓர் இர‌வில்தான் அவ‌ரைத் தொலைபேசியில் அழைத்தேன். அப்போதெல்லாம் வீட்டுத்தொலைப்பேசிதான்.க‌ட்ட‌ண‌ம் அதிக‌ம் வ‌ந்தால் அம்மாவிட‌ம் திட்டுக் கிடைக்கும்.என‌வே அதிக‌ம் ஒன்றும் பேச‌க்கூடாது என்ற‌ ஜாக்கிர‌தை உண‌ர்வில்தான் அவ‌ரை அழைத்தேன்.

எதிர்முனையில் ச‌ற்று அத‌ட்ட‌ல் போன்ற‌ தொனியில் ‘ஹ‌லோ’ எனும் குர‌ல் கேட்ட‌து. நெற்றிச்சுருங்கி க‌ண்க‌ளைக் கூர்மையாக்கிச் சொல்ல‌க்கூடிய‌ ஹ்லோ அது.நானும் த‌டுமாறி ஹ‌லோ என்றேன்.மீண்டும் உய‌ர்ந்த‌ குர‌லில் விசாரிப்பு ந‌ட‌ந்த‌து.பெய‌ரைச் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் அடையாள‌ம் க‌ண்டுகொண்ட‌வ‌ராக‌ கோ.புண்ணிய‌வான் பேச‌த்தொட‌ங்கினார்.ந‌ட‌க்க‌விருக்கும் புதுக்க‌விதை திற‌னாய்வில் என்னுடைய‌ ஒரு க‌விதை குறித்தும் எழுதியிருப்ப‌தாக‌க் கூறினார்.என‌க்கு பெருமை பிடிப்ப‌ட‌வில்லை.கோ.புண்ணிய‌வான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய‌ அங்கீகார‌ம் போல‌ உண‌ர்ந்தேன்.

அத‌ற்கு பின்பு அவ‌ரின் தொலைபேசிக்கு அழைக்கும் போதெல்லாம் அதே போன்ற‌ ‘ஹ‌லோ’வே வெளிப்ப‌டும். அந்த‌க் க‌ன‌மான‌ ஹ‌லோவைத் தாங்கிக்கொண்டு பேசினால் நாம் நினைக்காத‌ த‌ருண‌ம் குபீரென்ற‌ சிரிப்பு அவ‌ரிட‌மிருந்து வெளிப்ப‌டும்.அந்த‌ச் சிரிப்பு வித்தியாச‌மான‌து.அந்த‌ச் சிரிப்பு உருவாகும் முன், அத‌ன்  முத‌ல் வினாடி வ‌ரை அப்ப‌டி ஒரு சிரிப்பு அவ‌ரிட‌ம் இருந்து வ‌ர‌ப்போவ‌தை யாருமே அனுமானிக்க‌ முடியாது.முடிந்த‌ பின்பு சிரிப்பு க‌ண்களில் இருக்கும்.
கோ.புண்ணிய‌வான் என‌க்குக் காட்டிய‌ க‌விதை உல‌கு இன்னும் தீவிர‌மான‌து. பேசுவ‌தை கேட்டுக்கொண்டிருந்த‌ என்னைப் பேச‌ வைத்து கேட்ட‌வ‌ர் கோ.புண்ணிய‌வான். அவ‌ருட‌ன் இருந்த‌ ப‌ணிபுரிந்த‌ கால‌ங்க‌ள் இன்றும் நினைவில் ப‌திந்துள்ள‌ன‌.

தொட‌ரும்

இள‌ஞ்செல்வ‌னின் ம‌ர‌ண‌ம் குறித்து பேசுவ‌து பெரும் த‌டையாக‌வே இன்னும் ம‌ன‌தில் இருக்கிற‌து.ஒவ்வொரு முறை அவ‌ர் ப‌ற்றி பேசும் பொழுதும் அவ‌ர‌து ம‌ர‌ண‌த்தில் வ‌ந்து முடியும் உரையாட‌ல்க‌ள் அமைதியிழ‌க்க‌ வைக்கிற‌து. அவ‌ர‌து இல‌க்கிய‌ம் குறித்து விம‌ர்சிக்க‌வோ இன்றைய‌ வாசிப்பில் த‌ர‌ம் பார்க்க‌வோ வாச‌க‌ர்க‌ளுக்கு எல்லா உரிமையும் உண்டு.ஆனால் நான் வெறும் இல‌க்கிய‌வாதியாக‌ ம‌ட்டும் இள‌ஞ்செல்வ‌னைப் பார்க்க‌வில்லை.கையில் ஒரு வெள்ளிக்காப்போடும் , க‌ழுத்தில் அரை இஞ்ச் த‌டிப்புக்கு ஒரு வெள்ளிச்ச‌ங்கிலியும் எந்நேர‌மும் க‌றுப்பு ப‌னிய‌னோடும்  க‌ண்ணில் திமிர் பிடித்து சுற்றிக்கொண்டிருந்த‌ என்னை இள‌ஞ்செல்வ‌‌னைப் போல் அணுகிய‌வ‌ர் அப்போது யாரும் இல்லை.என‌க்குள் இல‌க்கிய‌ம் உள்ள‌து என‌ காட்டிய‌வ‌ர் இள‌ஞ்செல்வ‌ன்.அதையும் மீறி ந‌வீன‌ இல‌க்கிய‌த்தின் ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ப‌ங்க‌ளிப்பு க‌ணிச‌மான‌து என்ப‌தை யாராளும் ம‌றுக்க‌ இய‌லாது.

இந்த‌ச் சூழ‌லில் மீண்டும் இள‌ஞ்செல்வ‌னின் ம‌ர‌ண‌ம் குறித்து நான் துள்ளிய‌மாக‌ நினைவுகூற‌ விரும்ப‌வில்லை. ஆனால் அக்கால‌க்க‌ட்ட‌த்தில் என் ம‌ன‌ம் இல‌கிய‌த்தின் மீது எப்ப‌டி வெறி கொண்டு அழைந்த‌து என்ப‌து ம‌ட்டும் தெளிவாக‌ நினைவில் உள்ள‌து.வெறிதான்!வெறி வ‌ரும்போது அறிவு வேலை செய்வ‌தில்லை.ஒருவ‌கையான‌ ப‌த‌ற்ற‌ நிலையிலேயே இருப்போம்.நானும் அப்ப‌டித்தான். ப‌த்திரிகையில் பெய‌ர் பார்த்த‌ கிள‌ர்ச்சி எந்த‌ நேர‌மும் என்னைச் சுற்றி வ‌ந்த‌ ப‌டியே இருந்த‌து.அப்போது என்னுடைய‌ நோக்க‌மெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.எப்ப‌டியும் ‘ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன்’ ப‌த்திரிகையில் என‌து சிறுக‌தை இட‌ம் பிடித்துவிடவேண்டும். அப்போதெல்லாம் ‘ந‌ண்ப‌ன்’ ப‌த்திரிக்கை ம‌ட்டும்தான் அதிக‌ விற்ப‌னையில் இருந்த‌து.இப்போது போல‌ அப்போதும் ‘த‌மிழ் நேச‌னை’ சாமியும் அவ‌ர் ச‌காக்க‌ளுமே ஆக்கிர‌மித்து வ‌ந்த‌ன‌ர்.

ம‌லேசிய‌ ந‌ண்ப‌னில் சிறுக‌தை வ‌ந்தால் ப‌ல‌ருக்கும் என் பெய‌ர் அறிமுக‌மாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்ட‌வ‌ச‌மாக‌ ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் ஆசிரிய‌ர் ஆதி.கும‌ண‌னே இள‌ஞ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு வ‌ந்திருந்தார்.இள‌ஞ்செல்வ‌ன் த‌ன‌து ம‌ர‌ண‌த்திலும் என‌க்கு ந‌ன்மைசெய்துவிட்ட‌தாக‌ க‌ருதினேன். ஆதிகும‌ண‌ன் க‌ருப்பு நிற‌‌த்திலான‌ ‘பாத்தேக்’ர‌க‌ துணி அணிந்திருந்தார் என‌ ஞாப‌க‌ம்.அவ‌ர் ப‌க்க‌த்தில் சில‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர்.நாடு முழுவ‌தும் ப‌ல‌ ல‌ட்ச‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்ட‌வராக‌ ஆதி.கும‌ண‌ன் அப்போது இருந்தார்.அவ‌ர் சொல்லுக்குக் க‌ட்டுப்ப‌டும் ம‌க்க‌ள் திர‌ளை த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ச‌ம்பாதித்து வைத்திருந்தார்.ம‌லேசியாவில் இத்த‌கைய‌ ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ள் குறைவு.த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னின் ம‌ர‌ண‌ம் அவ‌ரை மிக‌வும் பாதித்திருக்க‌ வேண்டும்.கைக‌ளைக் க‌ட்டிய‌ப் ப‌டி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.ம‌க்க‌ள் கூட்ட‌ம் இன்னும் வ‌ந்து சேராத‌ நேர‌ம‌து.

நான் ஆதி.கும‌ண‌னை நோக்கி ஓடினேன்.அவ‌ர் என்னை ஏற‌ இற‌ங்க‌ ஒருத‌ர‌ம் பார்த்தார். நான் ச‌ற்றும் தாம‌திக்காம‌ல்.”நான் ந‌வீன்.உங்க‌ள் ப‌த்திரிகைக்கு சிறுக‌தை அனுப்பியிருக்கிறேன் நினைவுண்டா?” என்றேன். என்னைப்போல் ப‌ல‌ கோமாளிக‌ளைப் பார்த்திருப்பார் போல‌. தாம‌திக்காம‌ல் ‘ஆம்’ என்ப‌துபோல‌ த‌லையை ஆட்டினார்.அவ‌ர் ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ள் என்னை அந்நிய‌மாய் பார்த்த‌ன‌ர்.என் தோற்ற‌ம்  அவ‌ர்க‌ளைக் குழ‌ப்ப‌ம் அடைய‌ச் செய்திருக்க வேண்டும். நான் விடாம‌ல் “நான் ப‌ல‌ சிறுக‌தைக‌ள் அனுப்பியும் உங்க‌ள் ப‌த்திரிகையில் இட‌ம்பெற‌வே இல்லை.அடுத்த‌ வார‌ம் போட்டுவிடுங்க‌ள் சார்” என்றே.’க‌ண்டிப்பாக‌’என்ப‌து போல‌ த‌லையை ம‌ட்டும் ஆட்டினார்.

ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் என்பது எவ்வ‌ள‌வு பெரிய‌ நிர்வாக‌ம்;அதில் ஞாயிறு ப‌திப்பிற்கென்று யார் பொறுப்பாள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர் என்று எதுவுமே தெரியாம‌ல் நான் ஆதி.கும‌ண‌னிட‌ம் சொன்ன‌ப‌டி சிறுக‌தை ப‌த்திரிகையில் வ‌ந்துவிடும் என்ற‌ பெரிய‌ ந‌ம்பிக்கையில் அடுத்த‌  ஞாயிறு ந‌ண்ப‌னுக்குக் காத்திருந்தேன்.
தொட‌ரும்

புத்த‌க‌ வெளியீடு முடிந்த‌தும் இள‌ஞ்செல்வ‌னிட‌ம் என‌து புத்த‌க‌த்தையும் கையெழுத்து வாங்க‌ நீட்டினேன். புன்ன‌கைத்த‌வ‌ர் கையெழுத்திட்டு என் க‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றினார். ‘உன்ன‌ நான் சில‌ருக்கு அறிமுக‌ம் செஞ்சி வைக்கிறேன்’ என்றார். ப‌ற்றிய‌ கையை விடாம‌ல் மேடையிலிருந்து கீழே இற‌ங்கினார். என‌க்குப் ப‌த‌ற்ற‌மாக‌வே இருந்த‌து. நேராக‌ என்னை அக்கினியிட‌ம் அழைத்துச் சென்றார்.

‘இவ‌ர்… நான் அடுத்த‌த் த‌லைமுறையாக‌ ந‌ம்பும் இளைஞ‌ன். நீங்க‌ள் உங்க‌ள் ப‌த்திரிகையில் இவ‌ர் எழுத்துக்கு ந‌ன்கு வாய்ப்ப‌ளிக்க‌ வேண்டும்’ என‌ பேச்சினூடே என்னை அறிமுக‌ம் செய்துவைத்தார். ‘ம‌க்க‌ள் ஓசையில்’ ஏற்க‌ன‌வே என‌து சில‌ க‌விதைக‌ள் வ‌ந்திருந்த‌தால் அக்கினி என்னை அடையாள‌ம் க‌ண்டுக்கொண்டார். ‘ம‌.ந‌வீன் க‌விதைக‌ள்னு த‌னியாவே போட்டுடுவோம் என்றார்’. அத‌ன் பின் ப‌த்மினி என்‍ப‌வ‌ரை அறிமுக‌ம் செய்து வைத்தார். (ப‌த்மினி அக்கினியின் ம‌னைவி என்ப‌தும், அவ‌ர்தான் அப்போதைய‌ ஞாயிறு ந‌ண்ப‌ன் பொறுப்பாசிரிய‌ர் போன்ற‌ விவ‌ர‌மெல்லாம் என‌க்கு  அப்போது தெரியாது) என‌க்கு ம‌கிழ்ச்சி தாங்க‌வில்லை. இனி வ‌ண்ண‌ப்ப‌ட‌ங்க‌ளுட‌ன் என‌து க‌விதைக‌ள் ப‌த்திரிகையில் விடாம‌ல் அர‌ங்கேர‌ப்போகும் தின‌ங்க‌ளுக்காக‌க் காத்திருந்தேன்.

அறிமுக‌ங்க‌ள் முடியும்வ‌ரை இள‌ஞ்செல்வ‌ன் என் கையைப் ப‌ற்றியே இருந்தார். வ‌ழ‌க்க‌த்தைவிட‌ அன்று ம‌கிழ்ச்சியாக‌வும் உற்சாக‌மாக‌வும் காண‌ப்பட்டார். ச‌ற்று நேர‌த்திற்குப்பின் அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ட்ட‌ம் சூழ்ந்துகொள்ள‌ அவ‌ர் க‌ர‌ம் என்னை மெதுவாக‌ விடுவித்த‌து. நான் இருப்ப‌தா செல்வ‌தா என‌த் தெரிய‌வில்லை. அங்கேயே விழித்த‌ப்ப‌டி சிறிது நேர‌ம் நின்று கொண்டிருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் இள‌ஞ்செல்வ‌னின் உருவ‌ம் திட்டுத் திட்ட‌க‌த் தெரிந்த‌து. நான் இறுதியாய் இள‌ஞ்செல்வ‌னைப் பார்த்த‌து அன்றுதான்.

மேடையில் இள‌ஞ்செல்வ‌னின் ஆளுமையை அறிந்த‌பின் அவ‌ரிட‌ம் மீண்டும் ச‌க‌ஜ‌மாக‌ச் சென்று பேசுவ‌து ம‌ன‌த்த‌டையாக‌ இருந்த‌து. ஒரு ந‌ல்ல‌ சிறுக‌தையாவ‌து எழுதிய‌ப்பின் அவ‌ரைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என‌ எண்ணியிருந்தேன். அத‌ற்கும் வ‌ழிவிடாம‌ல் அப்புத்த‌க‌ வெளியீட்டிற்குப் பின் இர‌ண்டு மாத‌ இடைவெளியில் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் இற‌ந்துவிட்ட‌தாக‌த் த‌க‌வ‌ல் வ‌ந்த‌து.

என்னை வ‌ர‌வேண்டாம் என்ற‌ அவ‌ர் வீட்டிற்கு அவ‌ர் அனும‌தியின்றியே சென்றேன்.

-தொட‌ரும்

மீண்டும் நான் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னைச் ச‌ந்திப்பேன் என‌ நினைக்க‌வில்லை. உற‌வின‌ர் ஒருவ‌ர் வெல்ல‌ஸிலி தோட்ட‌த் த‌மிழ்ப்ப‌ள்ளிக்கு அருகில் இருந்த‌ மாரிய‌ம்ம‌ன் ஆல‌ய‌த்தில் ஒரு ம‌திய‌ம் க‌ஞ்சி ஊற்றினார். கோயில் க‌ஞ்சி என்ப‌து அப்போது மிக‌ப் பிர‌ய‌சித்த‌ம்.நான் அதே த‌மிழ்ப்பள்ளியில் ப‌டிக்கும் போது கூட‌ மாத‌த்திற்கு ஒருவ‌ர் கோயிலில் க‌ஞ்சிக்காய்ச்சி ஊற்றுவார்க‌ள். அப்போதெல்லாம் எங்க‌ளுக்கு ஒரே கொண்டாட்ட‌ம்.அது போன்ற‌ நாட்க‌ளில் க‌ஞ்சி குடிப்ப‌தற்கென்றே ப‌ள்ளியைச் சீக்கிர‌ம் முடித்துவிடுவார்க‌ள். அதுபோன்ற‌ ஒரு ப‌ள்ளி நாளில்தான் என‌து உற‌வின‌ரும் க‌ஞ்சி ஊற்றிக்கொண்டிருந்தார். எதேசையாய் அப்ப‌க்க‌ம் போன‌ என்னைப் பார்த்த‌ இள‌ஞ்செல்வ‌ன் கைய‌சைத்து அழைத்தார்.

‘ஏன் இப்ப‌வெல்லாம் வ‌ருவ‌தில்லை…’ என‌ச் சாதார‌ண‌மாக‌க் கேட்டார். அவ‌ர‌து முந்தைய‌ப் பேச்சு என்னை ம‌ட்டுமே பாதித்த‌தையும் அவ‌ருக்கு அது அறுதியாக‌ ஞாப‌க‌த்தில் இல்லாத‌தையும் அவ‌ர‌து பார்வையிலேயே உண‌ர்ந்துகொள்ள‌ முடிந்த‌து. பின்ன‌ர் அவ‌ரே தொட‌ர்ந்தார் ‘உன்னை தேடி க‌ண்டுபிடிக்கிற‌தே க‌ஷ்ட‌மா போச்சி…கொஞ்ச‌ம் இரு…’ என‌ அவ‌ர் அறைக்குச் சென்று ஓர் அழைப்பித‌ழோடு வெளிவ‌ந்தார். அது அவ‌ர‌து புத்த‌க‌ வெளியீட்டின் அழைப்பித‌ழ்.மௌன‌மாக‌ப் பெற்றுக்கொண்டேன். நான் எதிராளியாய் நினைக்கும் ஒருவ‌ர் திடீரென‌ என்முன் தோன்றி அன்பு செலுத்தும்போது அட‌ங்கிப்போகும் ஆண‌வ‌த்தின் அல‌ர‌ல் ஒருவ‌கையான‌ அவ‌ஸ்தையைக் கொடுத்த‌து. அதுவும் நான் அவ‌ரை எதிராளியாய் நினைப்ப‌து கூட‌ அவ‌ருக்குத் தெரியாத‌து என்னை அவ‌ரிட‌ம் பேச‌ விடாம‌ல் மௌன‌த்தில் ஆழ்த்திய‌து. எல்லாவ‌ற்றுக்கும் ‘ச‌ரி’ சொல்லிவிட்டு விடைப்பெற்றேன்.

குறிப்பிட்ட‌ தின‌த்தில் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் புத்த‌க‌வெளியீட்டு விழாவிற்குச் சென்றேன். ‘எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் சிறுக‌தைக‌ள், வான‌ம் காணாத‌ விமான‌ங்க‌ள் (குறுநாவ‌ல் தொகுதி)’ என்ற‌ இரு புத்த‌க‌ங்க‌ளின் வெளியீட்டு நிக‌ழ்வு அது. அப்போது மிக‌த் தீவிர‌மாக‌ எழுதிக்கொண்டிருந்த‌ அக்கினி, சை.பீர்முக‌ம்ம‌து, கோ.புண்ணிய‌வான் போன்றோரை முத‌ன்முத‌லாக‌ அந்த‌ நிக‌ழ்வில்தான் பார்த்தேன். நான் பார்த்த‌ முத‌ல் புத்த‌க‌ வெளியீடும் அதுதான். பாயா பெசாரில் இருக்கும் ச‌ர‌ஸ்வ‌தி பூஜா தியான‌ ஆசிர‌ம‌த்தில் ந‌ட‌ந்த‌ அந்நிக‌ழ்வில் இறுதி இருக்கையில் அம‌ர்ந்து கொண்டேன்.

நிக‌ழ்வு தொட‌ங்கிய‌தும் ஒவ்வொரு எழுத்தாள‌ர்க‌ளும் பேசினார்க‌ள். எஸ்.பொ வின் எழுத்து ப‌ற்றி சை.பீர் பேசிய‌து ம‌ட்டும் இப்போது நினைவில் த‌ட்டுப்ப‌டுகிற‌து. ப‌ல‌ர் பேசிய‌து எதுவும் என‌க்கு விள‌ங்க‌வில்லை. ஆனால் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் எழுத்து சார்ந்த‌ செய‌ல்பாடுக‌ளையும் புத்தில‌க்கிய‌ ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ஆற்றிய‌ ப‌ங்கையும் செவிம‌டுத்த‌ப் போது அதிர்ச்சிய‌டைந்தேன். ஒரு இல‌க்கிய‌ ஆளுமையின் முழு வ‌டிவ‌ம் தெரியாம‌ல் ப‌த்திரிகையில் அவ‌ர் பெய‌ரைத் தேடிய‌ சிறுபிள்ளைத் த‌ன‌த்தை நொந்து கொண்டேன். அவ‌ருட‌ன் அம‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்கில் பேசிய‌தும் அவ‌ரிட‌ம் குருட்டுத்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்ட‌தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப் பார்த்தேன்.வெட்க‌மாக‌ இருந்த‌து.

புத்த‌க‌ வெளியீட்டிற்குப் பிற‌கு இள‌ஞ்செல்வ‌னிட‌ம் புத்த‌க‌ம் பெற்றுக்கொள்ள‌ச் சென்றேன். என்னிட‌ம் இருப‌து வெள்ளிதான் இருந்த‌து. இர‌ண்டு புத்த‌க‌த்தின் விலை முப்ப‌து ரிங்கிட். நான் ஒரு புத்த‌க‌ம் ம‌ட்டும் வாங்கி கொள்ள‌லாம் என‌ நினைத்து இள‌ஞ்செல்வ‌னை அனுகினேன். இர‌ண்டு புத்த‌க‌த்தையும் என் கையில் திணித்த‌வ‌ர் ‘எங்கும் போயிடாத‌ இங்க‌யே நில்லு’ என‌ மேடைக்க‌ருகில் நிறுத்தினார்.

-தொட‌ரும்

காத‌லின் ஏக்க‌த்தையும் காத‌ல் தோல்வியின் துக்க‌த்தையும் சும‌ந்திருக்கும் வ‌ரிக‌ள் கொண்ட‌ இசை என்னேர‌மும் ம‌ன‌தில் ஒலித்துக்கொண்டே இருந்த‌து. காத‌ல் தோல்வியைச் சொல்லும் பாட‌ல்வ‌ரிக‌ளை முணுமுணுத்த‌ப்ப‌டி இருந்தேன். ப‌ள்ளியின் மூன்றாவ‌து மாடியின் மூலையிலும் திட‌லின் ஓர‌த்தின் ம‌ர‌ நாற்காலியிலும் த‌னிமையில் அம‌ர்ந்திருப்ப‌தைக் க‌ட‌மையாக்கிக் கொண்டேன். இதெல்லாம் காத‌ல் தோல்வி அடைந்த‌வ‌னின் அடையாள‌மாக‌ நான் க‌ண்ட‌டைந்திருந்த‌ செய‌ல்க‌ள். சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இத‌னால் அவ‌ள் மீது கோப‌ம் வ‌ந்த‌து போல‌வே சில‌ பேருக்குக் காத‌லும் வ‌ந்திருந்த‌து. க‌ரிய‌ உருவ‌மும் திக்குவாயும் கொண்ட‌ என்னை அவ‌ள் காதலிக்கும் போது த‌ன்னை ஏன் காத‌லிக்க‌ மாட்டார்க‌ள் என்ற ந‌ம்பிக்கை ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளுக்கு வ‌ந்திருந்த‌து.

மாண‌விக‌ளுட‌னான‌ நெருக்க‌ம் என‌க்கு ப‌டிப்பின் வாச‌னையையும் கொஞ்ச‌ம் இணைத்தே கொடுத்த‌து. பொதுவாக‌வே மாண‌விக‌ளுக்குக் க‌ல்வியின் மேல் ஒரு வ‌கையான‌ ப‌ய‌ம் இருந்த‌து. வீட்டுப்பாட‌ம் செய்து வ‌ராத‌ ஒருவ‌னை பார்வையாலேயே திகிலும் ப‌ரிதாப‌மும் இணைந்தார்போல் ப‌ய‌முறுத்தும‌ள‌வுக்கு ப‌ள்ளியும் அத‌ன் க‌ட்ட‌மைப்பும் அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌து. ச‌ர‌வ‌ண‌னும் என்னுட‌ன் இணைந்து ப‌டிப்ப‌தில் தீவிர‌மானான். இய‌ல்பாக‌வே ச‌ர‌வ‌ணனுக்கு க‌ணித‌ப் பாட‌த்தின் மேல் ஈடுபாடு இருந்த‌து. எவ்வ‌ள‌வு சிர‌மமான‌ க‌ணித‌த்திற்கும் அவ‌னிட‌ம் ஒரு தீர்வு இருந்த‌து. த‌மிழ்ப்பாட‌த்திற்கு நானும் க‌ணித‌த்திற்கு அவ‌னும் என‌ ஒருவ‌ருக்கொருவ‌ர் ஆசிரியரானோம். தோழிக‌ளின் உத‌விக‌ளும் எங்க‌ளுக்குக் கிட்டிய‌து. பாடப் புத்த‌க‌த்தை ஒவ்வொரு முறை திருப்பும் போதும் மிக‌வும் பின்த‌ங்கி விட்ட‌தாக‌ என‌க்குத் தோன்றும். ச‌ர‌வ‌ண‌ன் ‘டே…இதெல்லாம் க‌ச்சாங். முட்டாளுங்க‌தான் விழுந்து விழுந்து ப‌டிச்சி ப‌ரீட்ச‌ எழுதுவானுங்க‌’ என‌ ப‌டிக்க‌ ஆர‌ம்பித்துவிடுவான்.

ச‌ர‌வ‌ணனின் ஞாப‌க‌ ச‌க்தி அபார‌மான‌து. ஒரு முறை ப‌ய‌ணித்த‌ப் பாதை அடுத்த‌ முறை அவ‌னுக்கு மிக‌த்துள்ளிய‌மாக‌ நினைவில் இருக்கும். அது போல‌வே ஒருத‌ர‌ம் வ‌குப்பில் ப‌டிக்கும் பாட‌த்தை ம‌றுமுறை மீள்பார்வையெல்லாம் செய்யாம‌லேயே நினைவில் வைத்திருப்பான். என‌க்கு ப‌த்து முறை போனாலும் பாதை ம‌ற‌ந்துவிடுவ‌து போல‌வே பாட‌ புத்த‌க‌ங்க‌ளை வாசிப்ப‌தும் நினைவில் அவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் அட‌ங்காம‌ல் இருந்த‌து. வ‌குப்ப‌றையிலும் பாட‌ப்புத்த‌க‌த்திலும் ப‌தினைந்து நிமிட‌ங்க‌ளுக்கு மேல் என்னால் க‌வ‌ன‌ம் வைக்க‌ முடிவ‌தில்லை. ச‌ர‌வ‌ணனிட‌ம் அபார‌மான‌ ஒரு ச‌க்தி இருப்ப‌தாக‌வே நான் உண‌ர்ந்தேன். அத‌ற்கு மிக‌ முக்கிய‌க் கார‌ணம் அவ‌ன் ச‌ண்டையிடும் உத்தி.

நான‌றிந்து ஒரே சமயத்தில் ஆறு பேரை ச‌மாளிக்கும் ஆற்ற‌ல் அவ‌னிட‌ம் இருந்த‌து. அப்படிச் ச‌ண்டை முடிந்த‌பின் ச‌ட்டை ந‌னைந்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய‌ப‌டி நானிருக்கும் போது அவ‌ன் எந்த‌ அலுப்பும் இல்லாம‌ல் அம‌ர்ந்திருப்பான். ச‌ர‌வ‌ணனுக்கு நான் ச‌ண்டையிடும் உக்தியின் மேல் அவ்வ‌ள‌வு ந‌ம்பிக்கை இருக்காது. அதை கீரை வெட்ட‌ வெட்டுக்க‌த்தியைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ என்பான். அவ‌ன் த‌ன‌க்கே உரிய‌ ஒரு தோர‌ணையை வைத்திருந்தான். கூட்ட‌மாக‌ நிற்கும் எதிராளியில் யாரை முத‌லில் தேர்வு செய்து தாக்குவ‌து என்ப‌து அதில் முக்கிய‌மான‌து. கூட்ட‌த்தில் உள்ள‌ எதிராளியில் யார் முத‌லில் தாக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என க‌ண்ட‌டைவ‌தில் ச‌ர‌வ‌ணனுக்கு நுண்ணிய‌ ஒரு வாச‌னை இருந்த‌து. அந்த‌ ஒருவ‌னை ந‌ம்பிதான் அந்த‌க்கூட்ட‌மே இருக்கும் என‌ ச‌ர‌வ‌ண‌ன் அறிந்து வைத்திருந்தான்.

இந்த‌ நுட்பான‌ உண‌ர்வு நிலை ச‌ர‌வ‌ண‌னுக்குப் பாட‌த்திலும் எளிதில் உத‌விய‌து. என‌க்கு க‌விதைக‌ளும் க‌தைக‌ளும் வாசிப்ப‌தில் உள்ள‌ ஈடுபாடு பாட‌ம் ப‌டிப்ப‌தில் இல்லாமல் இருந்த‌து. என‌து காத‌ல் தோல்வி நம‌த்துப்போன‌தாக‌ இருந்தாலும், மேத்தா, வைர‌முத்துவின் க‌விதைக‌ளை மீள்வாசிப்பு செய்யும் போது அது மேலும் புதிய‌ அர்த்த‌ங்க‌ளை என‌க்குக் க‌ற்பித்த‌து. என‌க்குள் எந்த‌ நேர‌மும் உற‌ங்காம‌ல் ஒரு க‌விஞ‌ன் உல‌கை க‌வ‌னித்த‌ப்ப‌டியே இருந்தான்.

-தொட‌ரும்

பெண்க‌ளுட‌ன் இருப்ப‌தும், அவ‌ர்க‌ளின் உல‌க‌த்திற்குள் ச‌ஞ்ச‌ரிப்ப‌தும் இன்ப‌ம் த‌ரும் ஒன்றாக‌ இருந்த‌து. பெண்க‌ள் சிந்திப்ப‌து… முடிவுக‌ள் செய்வ‌து… கோப‌ம் கொள்வ‌து என‌ அனைத்துமே ஆண்க‌ளின் உல‌க‌த்தோடு ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌தாக‌ப் ப‌ட்ட‌து. ஆயினும் அது பாதுகாப்பான‌து. அவ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு நிறைய‌ செய்திக‌ள் இருந்த‌ன‌. நான் க‌வ‌னிக்காத‌, க‌வ‌னிக்க‌த் த‌வ‌றிய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு முக்கிய‌ச் செய்திக‌ளாக‌ இருந்த‌ன‌. உண்மையில் பெண்க‌ள் பேசுவார்க‌ள் என‌ நான் ந‌ம்பிய‌ எதையுமே அவ‌ர்க‌ள் பேசாத‌வ‌ர்க‌ளாக‌வும் அவ‌ர்க‌ளுக்கான‌ பேச்சு சிறு சிறு கிளைக‌ள் விட்டு பிரிந்து கூர்மை கொள்வ‌தாக‌வும் இருந்த‌ன‌. அந்த‌ப் பேச்சுக‌ள் த‌ரும் இன்ப‌த்தை விட்டு ந‌க‌ர‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ளுட‌னேயே சில‌ கால‌ம் திரிந்தேன். அவ‌ளின் தோழிக‌ள் எல்லாம் என‌க்கும் தோழிக‌ளாக‌ மாறின‌ர்.

க‌விதைக்குத் தேவையான‌ துல்லிய‌ உண‌ர்வ‌லைக‌ளை எந்த‌ நூலும் ம‌னித‌னுக்குத் த‌ருவ‌தில்லை. மாறாக‌ அவை நினைவின் ம‌றைவிட‌த்தில் ப‌திந்துள்ள‌ ஏதோ ஒரு நுண்ணிய‌ உண‌ர்வின் அதிர்வை அவ்வ‌ப்போது மீட்டுக்கொண்டுவ‌ர‌ உத‌வுகிற‌து. இது போன்ற‌ நுண்ணிய‌ உண‌ர்வுக‌ள் பெண்க‌ளுட‌ன் ப‌ழ‌கும் போதுதான் என‌க்குள் உசுப்பிவிட‌ப்ப‌ட்ட‌து. மிக‌க் குறைந்த‌ ப‌ழ‌க்க‌முள்ள‌ ஒரு தோழியால் கூட‌, கால‌த்திற்கும் அழிக்க‌ இய‌லாத‌ சில‌ ப‌திய‌ன்க‌ளை ம‌ன‌தில் ஏற்ற‌ முடிந்திருந்த‌து. ப‌ழ‌காத‌வ‌ரை பெண்க‌ள் என்னுட‌ன் பேச‌ விரும்புவார்க‌ள் என‌ நான் ச‌ற்றும் எதிர்ப்பார்க்க‌வில்லை.

பெண்க‌ளுட‌ன் பேச‌த் தொட‌ங்கிய‌ போது என‌க்குத் திக்குவாய் குறைந்த‌து. நான் தூய்மையாக‌ உடுத்த‌ ஆர‌ம்பித்தேன். கூடுத‌லாக‌ என‌க்கு ஏதேனும் இருக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வம் மேலோங்கி இருந்த‌து. அதிக‌ம் ஜோக் புத்த‌க‌மெல்லாம் ப‌டித்து அவ‌ர்க‌ளை அடிக்க‌டி சிரிக்க‌ வைத்த‌ப‌டி இருப்பேன். அந்த‌ ந‌கைச்சுவை துணுக்குக‌ளை பேச்சின் இடையில் எப்ப‌டி நுழைக்க‌லாம் என‌ காத்திருந்து, ச‌ரியான‌ த‌ருண‌த்தில் ‘இப்ப‌டிதான் ஒரு நாள்…’ ஆர‌ம்பித்துவிடுவேன். சில‌ நாட்க‌ளிலேயே ஏராள‌மான‌ பெண்க‌ள் என‌க்குத் தோழிக‌ளாயின‌ர். அத்தனை நாள் நான் எழுதிய‌ க‌விதை அட‌ங்கிய‌ நோட்டு புத்த‌க‌ம் மாண‌விக‌ளின் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மான‌து. ‘ஒரு க‌விதை சொல்லேன்…’ என‌ ஒரு நாளைக்கு ஒரு தோழியாவ‌து கேட்கும் நிலை வ‌ந்த‌தும் மீண்டும் க‌விதை என‌க்குள் சுர‌க்க‌த்தொட‌ங்கிய‌து.

அவ‌ளுக்கு இதெல்லாம் அதிக‌ம் பிடிக்காம‌ல் இருந்த‌து. என் க‌வ‌ன‌ம் அவ‌ள் மீது இல்லை எனும் குற்ற‌ச்சாட்டுக‌ள் வெவ்வேறு தொனியில் அவ‌ளிட‌மிருந்து வ‌ர‌த்தொட‌ங்கின‌. நான் எந்த‌க் குற்ற‌ச்சாட்டுக்கும் ப‌தில் சொல்ல‌த் தேவையில்லாத‌ ஒரு ப‌ர‌ந்த‌ வெளியில் சுத‌ந்திர‌மாக‌ச் சுற்றித்திரிந்தேன். யாருக்கும் ப‌தில் சொல்ல‌த் தேவையில்லாம‌ல் இருப்ப‌தின் சுத‌ந்திரம் என்னை முழுதுமாக‌ப் ப‌ற்றிக் கொண்டிருந்த‌து. ஒரு சுப‌யோக‌ சுப‌ தின‌த்தில் என் காத‌ல் தோல்வியில் முடிந்த‌து.

இனி… ஒரு நாளைக்கு ஒருமுறையாவ‌து சாப்பிட்டுவிட்டாயா என‌க் கேட்க‌த் தேவையில்லை, அவ‌ள் விருப்ப‌ப்ப‌டுவ‌தை வாங்கித்த‌ர‌த் தேவையில்லை, ‘தெம்மே’ என‌ உட்கார்ந்துகொண்டு அவ‌ள் பேசுவ‌தைக் செவிம‌டுக்க‌த் தேவையில்லை, ப‌ள்ளி முடிந்த‌ பின் அவ‌ள் சைக்கிள் வேக‌த்துக்கு என் மோட்டார்வ‌ண்டியையும் உருட்டிச்சொல்ல‌த் தேவையில்லை, எந்த‌க் குற்ற‌த்துக்கும் அவ‌ளிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புக் கேட்க‌த் தேவையில்லை. தேவையே இல்லை.

ஆனாலும் நான் ஒரு நாட‌க‌த்திற்குத் த‌யாரானேன். சோர்ந்த‌ முக‌த்தோடு உட‌ல் பொருள் ஆவி இழ‌ந்த‌வ‌னாக‌த் சுற்றிவ‌ர‌த் த‌யாரானேன். சுற்றியிருப்போரின் க‌ழிவிர‌க்க‌ம் என‌க்கு அப்போது தேவைப்ப‌ட்ட‌து. அது ஆண‌வ‌த்தின் வேறொரு ப‌ரிணாம‌ம்.

-தொடரும்

ப‌ள்ளி எரிந்த‌தால் கிடைத்த‌ இர‌ண்டு நாட்க‌ள் ப‌ள்ளிவிடுமுறையில் அனைவ‌ரும் சித‌றி கிட‌ந்தோம். நேரில் ம‌ட்டும‌ல்லாம‌ல் தொலைபேசியிலும் பேசிக்கொள்வ‌தைத் த‌விர்த்தோம். அனைவ‌ர் ம‌ன‌திலும் (சுமார் 4 பேர்) ஒரு வ‌கையான‌ இறுக்க‌ம் குடிக்கொண்டிருந்த‌து. எங்க‌ளுட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்குக் கூட‌ எங்க‌ளின் த‌னிமைக்குக் கார‌ண‌ம் தெரியாம‌ல் இருந்த‌து. ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அவ‌ர‌வ‌ர் வீட்டின் அறை ஒருவ‌கை பாதுகாப்புண‌ர்வை கொடுத்திருக்க‌ வேண்டும்.

விடுமுறைக்குப் பிற‌கு போலிஸ்கார‌ர்க‌ள் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌ன‌ர். எங்க‌ளைவிட‌ வ‌ய‌தில் குறைந்த‌ ஓர் ந‌ண்ப‌னை கைது செய்த‌ன‌ர். அந்த‌ மாண‌வ‌ன் அடிக்க‌டி சில்ல‌ரை திருட்டின் கார‌ண‌மாக‌ச் சிறைக்குச் செல்ப‌வ‌னாக‌ இருந்த‌தாலும் ப‌ள்ளிக்கூட‌ம் தீப்பிடித்த‌ அன்று அவ‌னை ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் பார்த்த‌தாக‌க் கிடைத்த‌ சாட்சிய‌த்தாலும் அவ‌ன் குற்ற‌வாளியாக்க‌ப்ப‌ட்டான். நாங்க‌ள் செய்வ‌த‌றியாது ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டிருந்தோம். பய‌ உண‌ர்ச்சியின் கார‌ண‌மாக‌ மௌனித்திருந்த‌ வேறு இரு கிருஸ்த‌வ‌ ந‌ண்ப‌ர்க‌ள் முற்றிலுமாக‌ என்னுட‌னும் ச‌ர‌வ‌ண‌னுட‌னும் பேசுவ‌தை நிறுத்திக்கொண்ட‌ன‌ர். (இன்றுவ‌ரையும் பேசுவ‌தில்லை)

அடுத்த‌டுத்து வ‌ந்த‌ நாட்க‌ளில் ப‌ள்ளியில் ஒரு வ‌கையான‌ அமைதி நில‌வுவ‌தைக் காண‌ முடிந்த‌து. மாண‌வர்க‌ளிடையே எந்த‌ வ‌கையான‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளும் இல்லை. ப‌ள்ளி எரிப்புச் ச‌ம்ப‌வ‌ம் எல்லோர் ம‌ன‌திலும் வெவ்வேறு வ‌கையான‌ பாதிப்புக‌ளை ஏற்ப‌டுத்தியே இருந்த‌து. இர‌ண்டு மோட்டாரில் வ‌ராம‌ல் நானும் ச‌ர‌வ‌ணனும் ஒரே மோட்ட‌ரில் வ‌ர‌த் தொட‌ங்கியிருந்தோம். ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்க்க‌ முடியாது என்ப‌தால் மோட்டாரில் வ‌ரும்போது பேசிக்கொள்வ‌தோடு ச‌ரி… வ‌குப்ப‌றையிலும் ப‌ள்ளி வ‌ளாக‌த்திலும் அமைதியைக் க‌டைப்பிடித்தோம். முக‌த்தைப் பார்ப்ப‌தைத் த‌விர்த்துக்கொண்டோம். ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொள்வ‌து உண்மையைப் பார்த்துக்கொள்வ‌த‌ற்கு நிக‌ரான‌து. உண்மையைச் ச‌ந்திப்ப‌தை நாங்க‌ள் விரும்ப‌வில்லை.

அப்போது என‌க்கு அவ‌ள் தேவைப்ப‌ட்டாள். அவ‌ளிட‌ம் நிச்ச‌ய‌ம் ஒரு பாதுகாப்பான‌ கூடு இருக்கும். அதில் ப‌த்திர‌மாக‌ இருக்க‌லாம் என‌த் தோன்றிய‌து. பெண்க‌ளின் உல‌க‌ம் வெம்மையான‌து. அத‌ற்குள் முழுதுமாக‌ச் ச‌ர‌ணாக‌தியாகும்போது புதிய‌ உடைக‌ளைத் த‌ரித்துக்கொள்வ‌தாக‌வும் புதிய‌ காற்றைச் சுவாசிப்ப‌தாக‌வும் தோன்றும். அங்கு வெளியில் நாம் காணும் பிர‌ச்ச‌னைக‌ள் இல்லை… மாறாக‌ அவ‌ர்க‌ளுக்கே உண்டான‌ சில‌ பிர‌ச்ச‌னைக‌ளை க‌ண்க‌ளுக்குத் தெரியாம‌ல் சும‌ந்திருப்பார்க‌ள். நான் மீண்டும் அவ‌ளை நாடிச் சென்ற‌ போதுதான் நான் எத்த‌னை பெரிய‌ கோழை என்ப‌தை உண‌ர்ந்தேன். அத்த‌னை நாள் நான் ந‌ம்பிய‌ என‌து கால்க‌ளும் கைக‌ளும் உட‌லும் ஒன்றும் செய்ய‌ வலுவ‌ற்ற‌வையாக‌ என்னைக் கேலி செய்த‌ன‌.

போலிஸில் பிடிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ன் காலுடைந்து ஜாமினில் வ‌ந்திருந்தான். காலின் மூட்டுப் ப‌குதி உடைந்து விட்ட‌தாக‌க் கூறினான். அவ‌ன் குடும்ப‌த்தார் வ‌ழ‌க்க‌றிஞர் (க‌ர்பால் சிங் என‌ நினைவு) மூல‌மாக‌ காலை உடைத்த‌ போலிஸார் மீது வ‌ழ‌க்குத் தொடுத்த‌ன‌ர். குற்ற‌த்தை ஊர்ஜித‌ப்ப‌டுத்தாம‌ல் ப‌ள்ளி உடையில் அவ‌ன் சிறையில் அடைத்த‌ அராஜ‌க‌ம் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ப் ப‌த்திரிகைகளில் பேச‌ப்ப‌ட்ட‌ன‌. அவ‌ன் காலுடைந்து கைதாங்க‌லாக‌ வ‌ரும் ப‌ட‌ம் ப‌ல‌ரையும் சின‌ம் கொள்ள‌ச்செய்த‌து. உற‌க்க‌ம் வ‌ராம‌ல் நான் க‌ண்ணீர் விட்ட‌ தின‌ங்க‌ள் அவை.

முக்கிய‌ அறிவிப்பு:

(இந்த‌ வார‌ டைரி இன்னும் நீண்டிருக்க‌ வேண்டும். எஸ்.பி.எம்.மில் (SPM) த‌மிழ்ப் பாட‌த்தின் நிலை ஒரு வ‌கை ம‌ன‌ உளைச்ச‌லைக் கொடுத்துக் கொண்டிருக்கிற‌து. ‘எஸ்.பி.எம்மில் ப‌த்துப்பாட‌ங்க‌ளை ம‌ட்டுமே எடுக்க‌ முடியும் என்ற‌ அமைச்ச‌ர‌வையின் முடிவில் மாற்ற‌ம்… இனி 12 பாட‌ங்க‌ள் எடுக்க‌லாம்’ என‌ ஆய்வு ம‌ன‌ப்போக்கும் இல்லாத‌ப் ப‌த்திரிகைக‌ள் முத‌ல் ப‌க்க‌த்தில் செய்தி வெளியிட்டிருக்கின்ற‌ன‌. இதில் நாம் கொண்டாட‌ எந்த‌ ம‌கிழ்ச்சியும் இல்லை என்ப‌தை பிற‌மொழி ப‌த்திரிக்கைக‌ளைப் ப‌டித்த‌ப் பின்பே உண‌ர‌ வேண்டியுள்ள‌து.

“Pokoknya 10 subjek utama itu kekal tetapi memberi kelonggaran bahawa pelajar boleh membuat pilihan untuk mengambil mata pelajaran bahasa Cina atau Tamil dan sastera Cina atau sastera Tamil,” katanya kepada pemberita selepas mempengerusikan mesyuarat Majlis Tanah Negara Ke-65 di sini hari ini.

Beliau berkata keputusan mata pelajaran tambahan itu tidak akan diambil kira dalam pemberian biasiswa dan sebagainya.

“Mereka boleh mengambil 12 atau 11 subjek tetapi itu tidak mengambil kira dalam perkara 10 subjek asas dan elektif.

“Sebelum ini, mereka tidak boleh mengambil, jadi kita tidak mahu sekat dan memberi mereka kelonggaran,” katanya.

ந‌ன்றி : Malaysiakini

அதாவ‌து:

1. தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளப‌டி அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.

3. தமிழாசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ந‌ன்கு ஆராய்ந்து பார்க்க‌ வேண்டிய‌ கூற்று இது. வெறும் இடைநிலை ப‌ள்ளி ம‌ட்டும‌ல்லாது நாளை த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ளின் வேரைக் கூட‌ அசைத்துப்பார்க்கும் ப‌டியான‌ முடிவாக‌ இது உள்ள‌து. இத‌ன் தொட‌ர்பான‌ விள‌க்க‌க் கூட்ட‌ம் தோட்ட மாளிகையில் வருகின்ற 12.12.2009 நடப்பதாக அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். காலை 10 ம‌ணிக்குத் தொட‌ங்கும் இதில் அனைவ‌ரும் வ‌ந்து க‌ல‌ந்துகொள்வ‌த‌ன் வ‌ழி சில‌ தீர்க்க‌மான‌ முடிவுக‌ளை எடுக்க‌ முடியும் என‌ ந‌ம்ப‌லாம்.

போலிஸ்கார‌ர்க‌ளின் வ‌ருகையும் த‌ண்ட‌னைக‌ளும் எங்க‌ளை ப‌ள்ளியில் இன்னும் ந‌ன்கு அடையாள‌ப்ப‌டுத்திக்காட்ட‌ உத‌விய‌து. த‌மிழ் ஆசிரியையைத்த‌விர‌ ம‌ற்ற‌ அனைவ‌ருமே எங்க‌ளை அப்ப‌ள்ளியின் குப்பைக‌ள் போல‌வே பார்த்த‌ன‌ர். குறிப்பாக‌ க‌ட்டொழுங்கு ஆசிரிய‌ர் எங்க‌ள் பெய‌ர் ‘ப்ளேக் ரெக்கோட்டில்’ ப‌திவாகிவிட்ட‌து என்றும் அத‌னால் எங்க‌ளுக்கு அர‌சாங்க‌ வேலை இனி கிடைக்காது என‌வும் ப‌ய‌முறுத்திய‌ப‌டி இருந்தார்.

அர‌சாங்க‌ வேலை எங்க‌ளுக்குக் கிடைக்காத‌து ப‌ற்றியெல்லாம் அப்போது க‌வ‌லை இல்லை. ஆனால் ‘ப்ளேக் ரெக்கோட்’ என்ற‌ வார்த்தை ம‌ட்டும் எங்க‌ளை அமைதி இழ‌க்க‌ செய்த‌து. ‘ப்ளேக்’ என்றால் க‌றுப்பு. எங்க‌ள் பெய‌ர் க‌றுப்பு ப‌திவேட்டில் ப‌திக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌ தென்றும், க‌றுப்பு ப‌திவேடு எப்ப‌டி இருக்கும் என்றும் க‌ற்ப‌னையில் ஆழ்ந்தோம். மிக‌ப்பெரிய‌ ஒரு க‌றுப்பு புத்த‌க‌த்தில் உட்புற‌மும் க‌றுப்பு ஏடுக‌ள் ப‌ட‌ப‌ட‌க்க‌ எங்க‌ள் பெய‌ர்க‌ள் ப‌ளிச்சென‌ அதில் எழுதிவைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாய் தோன்றி ப‌ய‌முறுத்திய‌து. அந்த‌க் க‌றுப்பு புத்த‌க‌த்தை எப்ப‌டியும் திருடிவிட‌ வேண்டும் என‌ முடிவெடுத்தோம். பின்ன‌ர் விசாரித்துப்பார்த்த‌தில் அப்படியொரு புத்த‌க‌ம் இல்லை என்றும் பெய‌ர்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ க‌ணினியில்தான் செலுத்த‌ப்ப‌ட்டிருக்கும் என்றும் கூறினார்க‌ள்.

இப்போது க‌ணினியை எப்ப‌டி திருடுவ‌து என்ற‌ குழ‌ப்ப‌ம் வ‌ந்த‌து. க‌ணினிக்கும் என‌க்குமான‌ தொட‌ர்பு ஒரு திருடும் முய‌ற்சியிலிருந்து தொட‌ங்கியிருந்த‌து. க‌ணினியைப் ப‌ற்றிய‌ எந்த‌ அறிவும் அப்போது இல்லை. திருடுவ‌த‌ற்கு அந்த‌ அறிவும் தேவையில்லாம‌ல் இருந்த‌து. எவ்வ‌ளவு திட்ட‌மிட்டும் அலுவ‌ல‌க‌க் க‌ணினியை எங்க‌ளால் நெருங்க‌ முடியாம‌ல் இருந்த‌து. அலுவ‌ல‌க‌ ஊழிய‌ர் எங்க‌ள் ந‌ண்ப‌ரான‌தால் அவ‌ர் உத‌வியோடு ஒரு த‌ர‌ம் அலுவ‌ல‌க‌த்தினுள் யாரும் இல்லாத‌ போது நுழைந்தோம். அலுவ‌ல‌க‌த்தில் குமிந்துகிட‌ந்த‌ க‌ணினிக‌ளைக் க‌ண்டு உண்மையில் நாங்க‌ள் திருட‌வேண்டிய‌ க‌ணினி எது என்ற‌ புதிய‌ குழ‌ப்ப‌ம் அப்போதுதான் எழுந்த‌து.

அன்று இர‌வு நாங்க‌ள் ஒன்று கூடினோம். ‘ப்ளேக் ரெக்கோட்’ என்ற‌ வார்த்தை கொடுத்த‌ ப‌யம் எங்க‌ளுக்குக் குறைந்திருந்தாலும் க‌ணினியில் அட‌ங்கியுள்ள‌ எங்க‌ள் பெய‌ரை அழிப்ப‌து ஒரு ச‌ட‌ங்குபோல‌ ஒட்டிக்கொண்டிருந்த‌து. எந்த‌க் கார‌ண‌மும் எழுப்பாம‌ல் செய்தே தீர‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் ச‌ட‌ங்குக்கு ம‌ட்டும்தான் வாய்த்திருக்கிற‌து. நாங்க‌ளும் ச‌ட‌ங்கு செய்ய‌ முடிவெடுத்தோம்.

ம‌றுநாள் இர‌வு எங்க‌ள் ப‌ள்ளி தீப்பிடித்துக்கொண்ட‌து. அலுவ‌ல‌க‌த்தோடு சேர்த்து அதை ஒட்டியிருந்த‌ ஆசிரிய‌ர் அறைக‌ளும் வ‌குப்ப‌றைக‌ளும் பெரும் தீயில் பொசுங்கி கொண்டிருந்த‌ன‌. த‌ங்க‌ளின் ப‌ல‌ நாள் உழைப்பு க‌ருகி விட்ட‌தாக‌வும்… வைத்திருந்த‌ பொருள் பொசுங்கிவிட்ட‌தாக‌வும்… ஆசிரிய‌ர்க‌ள் விட்ட‌ க‌ண்ணீர் ப‌ற்றி அறியாம‌ல் மூன்று மாடி க‌ட்ட‌ட‌த்தை முழுதுமாய் விழுங்கிய‌ப‌டி பெரும் தீ எழுந்து நின்ற‌து. என் வாழ்வில் நான் இறுதியாய் பார்த்த‌ பெரும் யாக‌த் தீ அது.

த‌த்த‌ரிகிட‌ த‌த்த‌ரிகிட‌ தித்தோம்…

சமாதான‌ம் செய்வ‌து உயிரை வ‌தைக்க‌க்கூடிய‌து. மௌனித்திருக்கும் ஓர் உயிரிட‌ம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் நான் கோப‌ம் அடைந்துவிடும் அபாய‌ம் நிக‌ழும். என‌க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு க‌டிகார‌ம் சமாதான‌ம் செய்வ‌த‌ற்கான‌ நிமிட‌ங்க‌ளைச் ச‌ரியாக‌க் காட்டிய‌ப‌டியே இருக்கும். அந்த‌ நிமிட‌ முள் அத‌ன் எல்லைக‌ளுக்குப் பின், ந‌க‌ர்ந்த‌தே இல்லை. ப‌ணிவாக‌, தொனி குறைந்து, துக்க‌த்தின் க‌ர‌ க‌ர‌த்த‌ குர‌லில் வாடியிருக்கும் என‌து ஆன்மாவில் பேய்க‌ளின் நிழ‌ல் ப‌டிய‌ தொட‌ங்கும். கோப‌ம் கொண்டு என்னைப் பிரியும் ஒவ்வொருவ‌ருக்கும் என் ஆழ்ம‌ன‌ம் முழுச்ச‌ம்ம‌த‌த்தோடுதான் விடைக்கொடுக்கிற‌து. பிரித‌ல் என்ப‌து சுத‌ந்திர‌ம்.

இந்த‌ வ‌ரியை எழுதும்போது எப்போதும் ம‌ன‌தில் தோன்றும் யாரும‌ற்ற‌ வெறுமையின் சூன்ய‌ ஒலி காதை அடைத்துக் கொள்கிற‌து. பிரிவுக்குக்கான‌ துக்க‌ முக‌ங்க‌ளோடு அறிவும் ம‌ன‌மும் என்னை நாட‌க‌மாட‌வைத்த‌ நிமிட‌ங்க‌ளில் ஆன்மா மிக‌ அமைதியாக‌ அந்த‌ப் பிரிவை எதிர்ப்பார்த்து நிழ‌லாடுகிற‌து. என் மீது ப‌திந்திருக்கும் எல்லா அடையாள‌த்தையும் வீசி எரிந்துவிட்டு யாருக்கும் தெரியாத‌ ஓர் ஊரில் மீண்டும் ஆடுக‌ளோடு திரியும் ஒரு காட்சி எப்போதும் போல் இப்போதும் தோன்றுகிற‌து. அப்ப‌டி என்னை செய்ய‌விடாத‌து எது?

ஆண‌வ‌ம்தான்.

அவ‌ளை நான் சாமாதான‌ம் செய்வ‌த‌ற்கு ச‌கித்துக் கொண்டு போவ‌த‌ற்கும் கார‌ண‌மாய் இருந்த‌தும் இதே ஆண‌வ‌ம்தான். ஆண‌வ‌ம் ஒரு ப‌ச்சோந்திபோல‌. எத‌ன்மீது நிற்கிற‌தோ அத‌ன் வ‌ர்ணம் பெற்றுவிடும். இறுதியில் ஆண‌வ‌த்தை அடையாள‌ம் காண்ப‌து அவ்வ‌ள‌வு எளிதாக‌ இருக்காது. ப‌தினேழு வ‌ய‌தில் நான் தேடி வைத்துக்கொண்ட‌ அவ‌ளின் சுமையை இற‌க்க‌ முடியாம‌ல் திரிந்த‌ தின‌ங்க‌ளில் என் அடையாள‌த்தைத் தொலைப்பதாக‌ உண‌ர்ந்தேன்.

ஒரு நாளைக்கு ஒருமுறையாவ‌து சாப்பிட்டுவிட்டாயா என‌க் கேட்ப‌து, அவ‌ள் விருப்ப‌ப்ப‌டுவ‌தை வாங்கித்த‌ருவ‌து, ‘தெம்மே’ என‌ உட்கார்ந்துகொண்டு அவ‌ள் பேசுவ‌தைக் செவிம‌டுப்ப‌து, ப‌ள்ளி முடிந்த‌ பின் அவ‌ள் சைக்கிள் வேக‌த்துக்கு என் மோட்டார்வ‌ண்டியையும் உருட்டிச்சொல்வ‌து என‌த்தொட‌ங்கி நான் ச‌ண்டையிட்ட‌த‌ற்கு அவ‌ளிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புக் கேட்ப‌தில் வ‌ந்து நின்ற‌து. ஒவ்வொரு முறையும் ச‌ண்டையிட்ட‌ப்பின் அவ‌ளிட‌ம் என் நியாய‌ங்க‌ளை விள‌க்கிக்கொண்டிருப்ப‌து என் முக‌த்தில் நானே காரி உமிழ்வ‌தற்கு நிக‌ராக‌ப் ப‌ட்ட‌து. ‘ந‌வீனோட‌ ச‌ர‌க்கு செம்ம‌ அழ‌குடா’ என்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளின் போற்றுத‌லை இழ‌க்க‌ விரும்பாம‌ல் என் காத‌ல் தொட‌ர்ந்து கொண்டிருந்த‌து. என‌க்கு ந‌ண்ப‌ர்க‌ளின் அந்த‌ வார்த்தைத் தேவைப்ப‌ட்ட‌து. யாரிட‌மும் இல்லாத‌ ஒன்று என்னிட‌ம் இருப்ப‌து போன்று பாவ‌னை செய்வ‌த‌ற்கும், ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌யிற்றெரிச்ச‌லை உசுப்பிவிடுவத‌ற்கும் அவ‌ள் என‌க்குத் தேவைப்ப‌ட்டாள்.

அவ‌ளைச் ச‌மாதான‌ம் செய்துகொண்டிருக்கும் அதே த‌ருண‌த்தில் ம‌ன‌ம் அவ‌ளைப் பிரிவ‌த‌ற்கான‌ எல்லா ஆய‌த்த‌ங்க‌ளையும் செய்துக்கொண்டிருக்கும். பிரிவு எப்ப‌டி நேர்த்தியாக‌ அமைய‌ வேண்டும் என்றும் யோசிக்க‌த்தொட‌ங்கும். நான் அந்த‌ப் பிரிவை ஏற்ப‌டுத்திய‌தாக இருக்க‌க் கூடாது. அவ‌ளாக‌ விரும்பி ஏற்ப‌டுத்திய‌தாக‌ இருக்க‌ வேண்டும். ஒரு காத‌ல் தோல்வியின் மென்மையான‌ போர்வை என் உட‌ல் முழுதும் ப‌டிய‌ வேண்டும் என‌ எதிர்ப்பார்த்தேன். அந்த‌ப் போர்வை ஒருவ‌கை பாதுகாப்பைத் த‌ர‌க்கூடிய‌து. மீண்டும் வேறொரு காத‌லையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து.

-தொட‌ரும்