
80களுக்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மொழியாக்க முயற்சிகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன எனக்கூறலாம். இதுவரை மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல்களிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த விரிவான கட்டுரைகள் இல்லை. இராம. சுப்பையா, ஜி. சூசை, விக்னேசன், எஸ். ராமச்சந்திரன், எஸ். சிங்காரவேலு ஆகியோரின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள் குறித்த தரவுகளோ தகவல்களோ கிடைப்பதும் மிக அரிதாகவே உள்ளது. நானறிந்து ஜி. சூசை அவர்களின் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 1996இல் மா. இராமையா அவர்களால் எழுதி தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தில்’ இடம்பெற்றுள்ளது. அந்நூலில் ஜி. சூசை அவர்களுக்குப் பின்னர் மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர் மலாக்கா ஜோசப் செல்வம் என மா. இராமையா ஒருவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார். யார் அந்த ஜோசப் செல்வம் எனத் தேடிச் சென்றபோது அவர் ஐந்து நூல்களை மலாய் மொழியிலிருந்து தமிழுக்கும் பாரதியின் பாடல்கள் உட்பட 3 நூல்களைத் தமிழிலிருந்து மலாய் மொழிக்கும் மொழியாக்கம் செய்துள்ளது தெரியவந்தது. 70களில் மலாய் இலக்கியத்துறையில் தீவிரமாக ஈடுபட்டவர். தமிழிலக்கியச் சூழலில் அதிகம் அறியப்படாதவர்.
2006இல் காதல் இதழுக்காக எழுத்தாளர் மா. இராமையா அவர்களை நேர்காணல் செய்தபோதுதான் அவர் தன் சிறுகதைகளை மலாய்க்கு மொழியாக்கம் செய்துள்ளது தெரியவந்தது. அவர் சொன்னார், ”மிகுந்த சிரமப்பட்டு அந்த நூலை நானே பதிப்பித்தேன். ஆனால் அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு மலாய்க்காரர்தான் வந்திருந்தார். அவரும் நான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைத்தவர்.”
கசப்பான உண்மைதான். ஆனால் கடந்த கட்டுரையில் சொன்னதைப் போல கடும் உழைப்பைச் செலுத்தி வெளியிடப்படும் மொழிபெயர்ப்பு நூல்கள் ஏன் தமிழ் இலக்கியத்தின் மீதான கவனத்தை பிற இன வாசகர்களிடம் அதிகரிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. என் பார்வையில் மூன்று காரணங்களைச் சொல்வேன்.

அ. சரியான பதிப்பகத்தை அணுகாமை
மா. இராமையா அவர்களின் முயற்சி மட்டுமல்ல; மொழிபெயர்ப்பு நூல்களைச் சுயமாகப் பதிப்பித்துக்கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஏற்படும் முதன்மையான சிக்கல் அதை பொருத்தமான வாசகர்கள் மத்தியில் சேர்க்க முடியாததுதான். மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை தாங்களே பதிப்பித்துக்கொண்டு அதை தாங்களே வெளியீட்டு விழாக்கள் வழி விற்பனை செய்யவும் முயல்வதுண்டு. வெளியீட்டு விழாக்கள் மட்டுமே மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் நூல்களை வாசகர்களிடம் சேர்க்கும் பிரதான வழி. ஆனால், மலேசியாவில் மலாய் பதிப்பகங்களுக்கு எனத் தனித்த வலைத்தொடர்பு உண்டு. அவர்களுக்கென புத்தகச் சந்தைகள் நடக்கின்றன. ஏராளமான புத்தகக் கடைகளில் அவர்களின் நூல்களுக்கான தனித்த நிரைகள் உள்ளன. கடைகளில் நூல்களைக் கொண்டுச் சேர்க்க தனி முகவர்களும் உள்ளனர். தமிழ் எழுத்தாளர்கள் சுயமாக நூலைப் பதிப்பித்து இந்த தொடர்பு வலைக்குள் நுழைவது சாத்தியமற்றது. எனவேதான் மா. இராமையா, சி. வடிவேல் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மாற்றி நூலாக்கியும் அது மலாய் வாசகர்கள் மத்தியில் சேரவில்லை; ஆனால் தமிழ் வாசிக்கத் தெரியாத தமிழர்களிடம் அவர்கள் கதைகள் வாசிக்கப்பட்டிருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நான் நேரடியாகவே அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு தோல்வியடைந்திருக்கிறேன். 2016 ஆம் ஆண்டு மலேசியாவின் நான்கு எழுத்தாளர்களின் தலா இரண்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வல்லினம் பதிப்பகம் வழியாக ‘Children of Darkness’ எனும் தலைப்பில் நூலாகப் பதிப்பிக்க முயற்சித்தபோதுதான் அந்த மாயத்திரையை உணரத் தொடங்கினேன். அந்த எட்டு சிறுகதைகளும் தரமான மொழியாக்கம் என ஆங்கிலத்தில் இலக்கியம் வாசிக்கும் பலரும் குறிப்பிட்டுப்பேசியுள்ளனர். எழுத்தாளர் திலிப்குமார் பட்டறையில் உருவான சிங்கப்பூரைச் சார்ந்த இரு மொழிபெயர்ப்பாளர்கள் வழியாகவே அம்மொழிபெயர்ப்புகள் நடந்தன. ஆனாலும் ஆங்கிலப் பதிப்பகத்தை அணுகி நூலைப் பதிப்பிப்பது அத்தனை எளிதானதாக அமையவில்லை. ஆனால் இணையம் வழியாகப் பதிப்பகத்தைத் தேடுகிறேன் என அறிந்துகொண்ட மோசடி குழு ஒன்று நூலைப் பதிப்பித்துத் தர முன் வந்தது. கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாதிருந்தால் சில ஆயிரங்களை இழந்திருக்கக்கூடும். வேறு வழியில்லாமல் வல்லினம் வழியாக நூலைப் பதிப்பித்து அதை பிரபலமான புத்தகக் கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது முகவர்கள் மூலமே தங்களை அணுக முடியும் எனக்கூறி விட்டனர். முகவர்களின் எண்களைப் பிடித்து அழைத்தால் குறிப்பிட்ட பதிப்பகத்தின் நூல்களையே தாங்கள் விற்பனை செய்ய முடியுமெனக் கைவிரித்தனர். இப்படி ஒரு பெரிய சுற்றுச் சுற்றி பின்வாங்கியதுதான் மிச்சம்.

ஆனால் இந்த ஏமாற்றம் திட்டவட்டமாகச் சொல்லிக்கொடுத்தது ஒன்றுதான். தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்படும் நூல்கள் அதற்குரிய முறையான பதிப்பகம் வழியாகவே நகர வேண்டும். அது மட்டுமே பொருத்தமான வாசகரை அடைய வழி. மற்றபடி அவரவர் தங்கள் ஆசைக்கு சொந்தப் பணத்தில் மொழிபெயர்த்து, அதைச் சொந்தக்காசில் அச்சடித்து, சொந்த முகநூலில் விளம்பரம் செய்துக்கொண்டு, சொந்தக்காரர்களின் பாராட்டுகளையும் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஆ. மொழிபெயர்ப்பின் தரம்
மொழிபெயர்ப்பின் தரம் ஒரு நூல் கவனம் பெற காரணமாக உள்ளது. மொழி புலமை இருப்பதால் மட்டுமே ஒருவர் மொழிபெயர்ப்பில் சிறந்தவராக இருந்துவிட முடியாது. 2016 ஆம் ஆண்டு ஓர் இலக்கியக் குழு மலேசியக் கவிதைகளை மலாய், ஆங்கிலம் என மொழியாக்கம் செய்து மும்மொழி தொகுப்பாக வெளியிட்டிருந்தது. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவைதான். ஆனால், கவிதையை மொழியாக்கம் செய்ய கவி மனம் அல்லாத மொழியியலாளர்களாலோ கல்வியாளர்களாலோ இயல்வதில்லை. இலக்கிய வடிவங்கள் மொழியால் உருவாகியிருந்தாலும் அது மொழியின் நேரடி பொருளைக் கொண்டிருப்பதில்லை. குறியீடுகளால் ஆன இலக்கிய வடிவத்தை உள்வாங்கி அதன் ஆன்மாவை மொழியாக்கம் செய்ய இலக்கியத்தை அறியும் மனம் அவசியமாக உள்ளது. அந்தத் தொகுப்பில் மொழியாக்கம் செய்யப்பட்ட மலாய் கவிதைகளை வாசித்தபோது வருத்தமாகவே இருந்தது. நேரடியான மொழியாக்கம். வார்த்தைக்கு வார்த்தை தமிழில் இருந்து மலாய்க்கு நகல் எடுத்திருந்தார்களே தவிர தமிழ் கவிதைகளில் குறைந்த பட்சம் தென்பட்ட மொழியழகுகூட காணப்படவில்லை. இதுபோன்ற முயற்சிகள் மிக எளிதாகவே இலக்கியவாசகர்களால் புறக்கணிக்கப்படும். மீண்டும் ஒரு சீரிய முயற்சி நடந்தாலும் கவனம் பெறாது. ஆனால் பொதுவாக தமிழ் வாசகர்களுக்கு அது குறித்து அக்கறை இல்லை என்பதால் ஒரு முயற்சி நடக்கும்போது அதை சாதனைப் பட்டியலில் இணைத்துவிடுகின்றனர். நிகழ்வுகள் இங்கு கவனம் பெறுகின்றனவே தவிர; அதன் தரம் குறித்த கேள்வியோ விமர்சனமோ பெரும்பாலும் இங்கு எழுவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் பொதுப்பலன் கருதி இயங்குபவர்கள் மிகக் குறைவு. தத்தம் சொந்த நூல்களை முனைப்புடன் விற்பனை செய்து அதை இலக்கியச் செயல்பாடாக முன்வைப்போர் மத்தியில் ‘மலேசிய இலக்கியம்’ எனும் நோக்கில் செயல்படுவோர் இலக்கியக் காப்பாளர்களாகி விடுகிறார்கள். அவர்கள் மேல் இயல்பாகக் கருணையும் ஒட்டிக்கொள்கிறது. அந்தக் கருணை அவர்களை விமர்சிக்க விடுவதில்லை. அப்படி விமர்சிப்பவரையும் சமூக விரோதியாகப் பாவிக்கும் மனம் உருவாகிவிடுகிறது, வேறு எந்த நாட்டின் இலக்கியச் சூழலிலும் இப்படி ஒரு நுட்பக்கோளாறு இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கண்மூடித்தனமான ஆதரவும் விமர்சனமற்ற போக்கும் எந்தக் கலைத்துறை வளர்ச்சிக்கும் கேடுதான்.
இ. மொழியாக்கம் செய்யப்படும் படைப்பின் தரம்
இதற்கு ‘புங்கா எமாஸ்’ தொகுப்பை ஒட்டி Andrew Ng கூறிய கருத்தையே மேற்கோளாகக் கொள்ளலாம். அத்தொகுப்பில் உள்ள மற்ற இருமொழி படைப்புகளைக் காட்டிலும் தமிழ் படைப்புகள் பின் தங்கி உள்ளதை அவர் குறிப்பிடுகிறார். அதன் உள்ளடக்கத்தில் உள்ள பலவீனங்களைச் சுட்டுகிறார்.
மலாயாவுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்கள் கல்வியறிவில்லாத எளிய மக்கள், இலக்கிய வாசிப்பு அறியாதவர்கள், தினசரி வாழ்வுக்கே அல்லாடியவர்கள் எனவே அவர்கள் எழுதியதை கரிசனத்துடன் அணுக வேண்டும் எனும் கூற்றெல்லாம் இலக்கிய விமர்சனத்திற்கு பொருந்திவராது என்பதே என் நிலைபாடு. ஒருவேளை நமக்குள் அப்படியான சலுகைகளை வழங்கிக்கொண்டாலும் அவை மொழியாக்கம் காணும்போது அந்தக் கவசங்கள் அனைத்தையும் கழற்றி வைக்க வேண்டியுள்ளது.
மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்பை வாசிக்கும் ஒருவர் படைப்பை மட்டுமே வாசிக்கிறார். அதன் கலை வடிவையும் அதன் வழியாக கருவையும் சென்று சேர்கிறார். மொழியாக்கத்தை வாசிப்பவன் உலக வாசகன். அந்தத் தராசின் முன் நமது மொழியாக்கம் செய்த படைப்பை வைக்கும்போது தரத்தில் சமரசம் செய்துக்கொள்ளாமல் இருப்பதே சிறந்த முன்னெடுப்பாக இருக்கும். ஓர் இலக்கியச் சூழலில் இடைவிடாமல் நிகழ்கின்ற விமர்சனப் போக்கே தரமான படைப்புகளை முன்னெடுத்து வைக்கிறது. விமர்சனச் சூழலற்ற நிலையே தவறான மொழிபெயர்ப்புத் தேர்வுகளுக்குக் காரணியாக அமைகின்றன.

மாத்தளை சோமு தொகுத்த ‘Selected Short Stories of Malaysian Tamil Writers’ எனும் தொகுப்பையும் இங்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மலேசியச் சிறுகதை உலகில் ஒருவர் அறியப்பட்டதாலேயே அவரது சிறுகதையை இதுபோன்ற தொகுப்புகளில் இணைப்பதென்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இத்தொகுப்பில் இணைக்கப்பட்ட சில கதைகளை நான் தமிழிலேயே வாசித்துள்ளேன். சிறுகதைக்கான எந்த அம்சமும் இல்லாத இக்கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் காண்பதெல்லாம் மலேசியாவில் சிறுகதை இலக்கியம் இன்னும் வளரவில்லை என உலக வாசகர்களிடம் அறிவிப்பதற்கா என்றும் புரியவில்லை.
இன்று அடிப்படையான ஆங்கில அறிவு பெரும்பாலோருக்கு உண்டு. தமிழில் முறையாகச் சிறுகதை எழுத முடியாதவர்கள் கூட முதல் சிறுகதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இருமொழி நூலாக வெளியிட்டுக்கொள்வதெல்லாம் அவரவர் மகிழ்ச்சிக்குதான். நண்பர்கள் சிலர் அதை கேலியாகவும் என்னிடம் கூறினர். அண்மையில் சமூக வலைத்தளத்தில் டி. திவாகர் எனும் ஒருவர் நடிகர் சூரியா, விக்ரம் போலவெல்லாம் நடித்துக்காட்டி தானும் சிறந்த நடிகர் எனப் பேட்டியெல்லாம் கொடுக்கிறார். அவரது அபத்தமான நடிப்பைப் பலரும் திட்டித் தீர்க்கின்றனர். ஏன் அப்படித் திட்டுகிறார்கள் எனப் புரியவில்லை. அவருக்கு மகிழ்ச்சியாக இருக்க இந்த உலகில் முழு உரிமை உண்டு. யாரையும் தொந்தரவு செய்யாமல் தனது அபோதத்தைக் கொண்டாட இங்கு யாருக்கு என்ன தடை? அவர் தான் மிகப்பெரிய சாதனையாளன் என்றும் ‘நடிப்பு அரக்கன்’ என்றும் அழைத்துக்கொள்கிறார். அப்படித்தான் தன்னை மற்றவர்கள் அழைக்க வேண்டுமென அவர் யாரையும் வற்புறுத்தாத சூழலில் அவர் அவ்வாறு எண்ணிக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. அந்த வகையில் எழுத்துத் துறையில் ஒருவர் சாதித்துவிட்டதாக நம்புவது அவரவர் உரிமை. தன் வசதிக்கேற்ப உலக மொழிகளுக்கெல்லாம் அதைக் கொண்டுச் செல்வது அவர் திறமை. இதனால் மலேசிய இலக்கியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் மலேசிய இலக்கியத்தைப் பிரதிநிதிக்கும் பெரு முயற்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
Andrew Ng கூறியதை இங்கு மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. ‘சுதந்திரத்திற்குப் பிறகு மலாய் அல்லாத மொழிகளில் மலேசிய இலக்கியப் படைப்புகள் நீண்ட தூரம் வந்துள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை உலகளாவிய பாராட்டையும் அனைத்துலக புத்தகப் பரிசுகளையும் வெல்கின்றன. சீன மொழியில் எழுதப்படுபவை 2015 க்குப் பிறகு சீன இலக்கியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.’ என்கிறார். மலாய் மொழிக்கு இயல்பாகவே தேசிய அங்கீகாரம் உள்ளது. இவற்றோடு ஒப்பிடும்போது மலேசியத் தமிழ் இலக்கியத்தின் நிலை என்ன என்பதை ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இந்த இடைவெளியைப் போக்க பல வழிகள் இருக்கலாம், ஆனால் நம் கையில் இருக்கும் ஒரே கருவி மொழிபெயர்ப்பு. அதை கவனமாகவும் பொறுப்புடனும் கையால்வதால் மட்டுமே மலேசிய வாசகர்கள்; உலக வாசகர்கள் கவனத்தை எட்ட முடியும்.
- தொடரும்