அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 4

1999இல் பாலச்சந்திரன் அவர்களால் தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் கண்ட ‘Seruling Di Persimpangan’ எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சி என்றாலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எனச் சொல்ல மாட்டேன். கோ. புண்ணியவான், பாவை, மு. அன்புச்செல்வன் போன்றவர்களின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் சிறுகதைகளின் அடிப்படை கூட அறியாதவர்களின் கதைகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகள் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பேரவைக் கதைகள்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ‘டேவான் பாஹாசா’ வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே மலேசியத் தமிழர்கள் மத்தியில் ‘டேவான் பாஹாசா’ வில் வெளியிடப்படும் நூல்கள் குறித்தும் பேரவைக் கதைகள் போட்டியில் வெற்றிபெறும் சிறுகதைகள் பற்றியும் பெரும் ஈர்ப்பு உள்ளது. டேவான் பாஹாசாவில் நூலை வெளியிடுவதை ஒரு கௌரவமாகக் கருதுவோரும் பேரவை கதைகளில் வெற்றிபெறுவதை இலக்கிய அந்தஸ்தாக முன்வைப்போரும் இன்றளவும் பலர் உள்ளனர்.

முதலில் பேரவைக் கதைகள் இலக்கியத்தில் கடுமையான கெடுபிடிகள் கொண்ட அமைப்பு. கல்வி புலத்தில் நடத்தப்படும் போட்டிகளின் இயல்பைக் கொண்டது. பேராசிரியர்களே அதன் நீதிபதிகள். எனவே, சமூக ஒழுக்கங்களை உடைக்கும் ஒரு புனைவுக்கு அங்கு இடமில்லை. சமூக யதார்த்தத்தைச் சித்தரிக்கும் வசனங்களுக்கோ புனிதங்களைக் கேள்விக்குறியாக்கும் வாழ்வியல் நெருக்கடிகளின் காட்சிகளுக்கோ, அதிகார மையங்களை அசைத்துப்பார்க்கும் கருவுக்கோ அது களமில்லை. ஒரு படைப்பாளி அங்குள்ள மாய வரையறைகளை மனதில் கொண்டே போட்டியில் கலந்துகொள்கிறான். அத்தனை கட்டுப்பாடுகளை மனதில் ஏந்திக்கொண்டு எழுதுவது இலக்கியத்தில் அவசியமற்றது. அதுபோலவே டேவான் பாஹாசா.

டேவான் பாஹாசா என்பது அரசாங்கத்தை சார்ந்த ஒரு மொழி அமைப்பு. எனவே அரசின் கட்டுப்பாட்டுக்குள் அது இயங்குகிறது. மலாய் மொழித்தூய்மையைப் பாதுகாக்கிறது. அரசுக்குப் பாதகம் விளைவிக்கும் கருத்துகள் எதையும் அது பிரசுரிப்பதில்லை. அரசு சார்ந்த பதிப்பகம் அப்படித்தான் இயங்க முடியும்; அதில் தவறும் இல்லை. ஆனால், நவீன எழுத்தாளனால் அங்கு நூல்களைப் பதிப்பிக்க இயலுமா என்பதையே ஆராய வேண்டியுள்ளது. இப்படி கற்பனை செய்வோம், தமிழகத்தில் மொழித்தூமையைப் பாதுகாக்கும் அரசு சார்புடைய தனித்தமிழ் பதிப்பகம் ஒன்றில் யாராவது ஒரு நவீனத் தமிழ் எழுத்தாளன் நூலைப் பதிப்பிக்க முன் வருவானா? இந்தக் கேள்வியின் சாரம் அறிந்தால் டேவான் பாஹாசாவில் ஒரு நவீன எழுத்தாளன் தன் நூலைப் பதிப்பிப்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கு பதில் கிடைத்துவிடும்.

2000குப் பின் மலேசியத் தமிழிலக்கியச் சூழலில், மொழிபெயர்ப்பு புத்தெழுச்சி காண வல்லினம் செயல்பாடுகளே காரணியாக அமைந்தன. 2009இல் பா. அ. சிவம் தமிழில் மொழியாக்கம் செய்த மலாய் கவிதைகள் வழியாக அது தொடங்கியது. பின்னர் சிங்கை இளங்கோவன் வழியாக ‘Sarvam Brahmasmi’ (2009) (ம. நவீன் கவிதைகள்), ‘Call Me Doggie’ (2012) (ரேணுகா கவிதைகள்) வழியாகத் தொடர்ந்தது.

2014இல் வல்லினம் இலக்கியக் குழு முன்னெடுத்த ‘பறை’ இதழ் மூலமாக ‘தமிழுக்கு அப்பால்’ எனும் சிறப்பிதழ் வெளியீடு கண்டது. இவ்விதழில்தான் தமிழைக்கு அப்பால் இருக்கின்ற கலை இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றன. அவற்றில் ஷாஹனுன் அமாட் குறித்து அ. பாண்டியன், கே. எஸ். மணியம் குறித்து விஜயலட்சுமி, சீன இலக்கியம் குறித்து க. கங்காதுரை என மலேசியாவில் இயங்கும் பிறமொழி இலக்கியங்கள் இலக்கியவாதிகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றன. இந்த இதழ் தொடர்ச்சியாக இரு பெருமுயற்சிகள் நிகழ காரணியாக அமைந்தது.

முதல் முயற்சி அ. பாண்டியனுடையது. தொடர்ச்சியாக பத்து மலாய் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளை எழுதி அதை ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ (2015) எனும் நூலின் வழியாகத் தொகுத்தளித்தார். இக்கட்டுரைகள் மலாய் இலக்கியம் குறித்த அடிப்படை புரிதல்களை வழங்கியது. இரண்டாவது போற்றத்தக்கப்பணி விஜயலட்சுமியுடையது. தென்கிழக்காசியா முழுவதும் அறியப்பட்ட கே. எஸ். மணியத்தின் படைப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். கே. எஸ். மணியம் படைப்புகள், மலேசியாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வைப் பேசினாலும் தமிழ்ச்சூழலில் அதிகமும் அறியப்படாதவராகவே இருந்தார். விஜயலட்சுமி மொழிபெயர்த்த ‘கே.எஸ்.மணியம் சிறுகதைகள்’ (2018) நூல்கள் வழியாக அவர் மலேசிய தமிழ் வாசகர்களிடம் மட்டுமல்லாது தமிழகத்திலும் கவனம் பெற்றார். இவ்விரு நூல்களுமே வல்லினம் பதிப்பகம் மூலம் வெளியீடு கண்டன. இந்த இரு நூல்கள் வெளிவருவதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் ‘Children of Darkness’ (2016) எனும் நூல் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமாக கொண்டு வெளிவந்தது.

இதற்கிடையில் வல்லினம் இணைய இதழிலும் தொடர்ச்சியாகச் சில மொழிபெயர்ப்பு படைப்புகள் இடம்பெற்றபடி இருந்தன. எம். பிரபு சில மலாய் சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வழங்கினார். சீ. முத்துசாமியின் மொழிபெயர்ப்பில் சீன மொழி எழுத்தாளரான கௌஜின் ஜியாங்கின் சிறுகதைகளும் வல்லினத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றன. அவை நூலாகத் தொகுக்கப்பட்டு ‘கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ (2021) எனும் நூலாகப் புலம் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

இவையன்றி தமிழ் படைப்புகளை மலாயில் மொழிபெயர்க்கும் முயற்சியை நான் 2019இல் மேற்கொண்டேன். நண்பர் ச. சரவணன் வாயிலாக அம்முயற்சி சாத்தியமானது. ‘பேய்ச்சி’ நாவலின் தடையைத் தொடர்ந்து என் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மலாய் வாசகர்களிடையே கவனம் பெற்றன. மலாய் வாசகர்கள் வாசிக்கும் இதழ்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ச. சரவணன் அவர்களால் மொழியாக்கம் கண்டு பிரசுரமும் ஆயின. ஓரளவு மலாய் வாசகர்களுக்கு அறிமுகமான எழுத்தாளரான பிறகு அக்கதைகள் தொகுக்கப்பட்ட மலாய் நூல்களின் பதிப்பகமான ‘The Biblio Press’ மூலம் வெளியீடு கண்டது. தொடர்ந்து ‘சிகண்டி’ நாவலும் மலாயில் மொழியாக்கம் கண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மொழிபெயர்ப்பு படைப்புகளை எடுத்துச்செல்லும் முறையான பாதையை ஒரு தோல்விக்குப்பின் நான் அறிந்து வைத்திருந்ததால் பொருத்தமான வழிமுறைகளைக் கையாண்டேன், மலேசியாவில் ஒரு தமிழ்ப் படைப்பாளியின் மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு கிடைக்கக்கூடிய அத்தனை கவனமும் ‘ஃபிக்ஸி’ பதிப்பகம் மூலம் வழங்கப்பட்டது. மொழிபெயர்ப்பாளரான ச. சரவணனுக்கு உரிய தொகை வழங்கப்பட்டது. நூல் வெளியீடு ‘ஜார்ச் டவுன் இலக்கிய விழா’வில் ஓர் அங்கமாக இடம்பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் எழுத்தாளாரான எனக்கும் ராயல்டி தொகை வழங்கப்படுகிறது. இதையெல்லாம் விட இந்த ஆக்கம் மலாய் வாசகர்களிடம் பரவலாகச் சென்று சேர்ந்ததே பெருமகிழ்ச்சியை வழங்கியது.

‘Kultus Kata’ எனும் மலாய் வாசகர் அமைப்பு மொழிபெயர்க்கப்பட்ட ‘சிகண்டி’ நாவலை மையப்படுத்தி உரையாடலை ஏற்படுத்தியதும் ‘Kuala Lumpur Alternative Bookfest’ நிகழ்ச்சியில் என் மொழியாக்கம் செய்யப்பட்ட மலாய் சிறுகதைகள் குறித்த உரையாடலை ஏற்படுத்தியதும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் யாருக்கும் இதுவரை கிடைக்காத கவனம்தான். இதற்கு முதன்மையான காரணி மொழிபெயர்ப்பாளர் ச. சரவணன். ஒரு படைப்பை தரமான மலாய் வாசகர்கள் உணரும்படியாக அவர் மொழியாக்கம் செய்திருந்தார். அவரது இந்த ஆற்றல் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்கும் பங்களிக்க வேண்டுமென முடிவெடுத்து முன்னெடுத்த முயற்சிதான் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் மலாய் மொழிபெயர்ப்பு.

எப்போதுமே ஓர் இலக்கியவாதி நடந்து செல்லும் பாதை யானை நடந்து செல்லும் தடம்போல இருக்க வேண்டும். அவன் அடையும் பலன்கள் யாவும் பிற இலக்கியவாதிகளும் பெற வேண்டும். அப்போதுதான் ஓர் இலக்கியச் சூழல் வளமாக இருக்கும். ‘Dunia di Kaki Lima’ (2025) எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள பத்து சிறுகதைகள் வழியாக மலாய் வாசகர்கள் தமிழ் எழுத்தாளர்களைக் கூடுதலாக அறிவார்கள் என்பது திண்ணம். அக்கதைகள் வழியாக தமிழர்களின் வாழ்வை அறிவது வாசகர்களின் பணி என்றால் அவ்வெழுத்தாளர்களின் பிற படைப்புகளை மலாய் மொழிக்கு மாற்றும் ஆர்வத்தை உருவாக்குவது இலக்கியவாதிகளின் பணி.

இயக்கவாதியின் பணி, அத்துறை சார்ந்த புதியவர்களை உருவாக்குவது. அவ்வகையில் ‘செல்சி நீலம்’ எனும் தொகுப்பில் ஏழு எழுத்தாளர்கள் பங்களித்துனர். என்னுடன் சேர்த்து, கி. இளம்பூரணன், விஸ்வநாதன், சல்மா தினேசுவரி, அரவின் குமார், சாலினி, ஆசிர் லாவண்யா என ஆகியோர் ஆளுக்கு தலா ஒன்று என சீன சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளோம். இவர்களில் விஸ்வநாதனைத் தவிர மற்ற அறுவரும் மொழிபெயர்ப்புக்குப் புதியவர்கள். எனவே மொழிபெயர்ப்பின் தரத்தை கடுமையான உழைப்பில் உறுதி செய்ய வேண்டியிருந்தது. அதற்கு முழு பங்களிப்பை வழங்கியவர் அ. பாண்டியன்.

ச. சரவணன்

‘முக்கோண கதைகள்’ எனும் இந்த நிகழ்ச்சியின் மையம் என அ. பாண்டியனையே சொல்வேன். இவ்விழாவுக்குத் தலைப்பை உருவாக்கியது முதல், சீன சிறுகதைகளின் மொழியாக்கத் தரம், தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதைகளின் மேம்படுத்தும் பணி என கடுமையான உழைப்பை வழங்கினார். கிட்டத்தட்ட அத்தனை சிறுகதைகளையுமே கவனமாக செறிவு செய்தார். இப்பணிகளோடு அவருமே எஸ்.எம்.ஷாகீரின் எட்டு சிறுகதைகளை மொழியாக்கம் செய்து தொகுத்தளித்தார். நிச்சயமாக இந்த முக்கோணத்துக்கு மையத்தில் அரூபமாக நிற்பவர் அ. பாண்டியன்தான். அவரது பங்களிப்பு இல்லாமல் இது ஒரு நிகழ்வாக இருந்திருக்குமே தவிர; தரம் குறித்த குழப்பங்கள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கலாம்.

அ. பாண்டியன்

ஜூன் 1 ஆம் திகதி (நாளை) நடைபெற உள்ள ‘முக்கோண கதைகள்’ எனும் மும்மொழி இலக்கியத்திற்கான விழா பெருமுயற்சியில் நிகழ்வது. மூன்று இன எழுத்தாளர்களும் இணைவதற்கான ஒரு விழா. இந்த விழாவை முன்னெடுப்பது மலேசியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இம்முயற்சிகள் வெவ்வேறு தரப்பின் மூலம் விரிவடையும்போது வரலாறு இப்படித்தான் இதை நினைவுக்கூற வேண்டுமென விரும்புகிறேன்.    

  • முற்றும்

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 2

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 3

(Visited 80 times, 1 visits today)