கறுப்பனாக இருப்பதின் பிரச்சனைகள்: கோ.முனியாண்டி

இலங்கையிலிருந்து திரும்பிய களைப்பு இன்னமும் தீரவில்லை. காலம் தாழ்த்தியே கோ.முனியாண்டியின் எதிர்வினைகள் கண்ணில் பட்டன. பொதுவாகவே எதிர்வினைகளையும் மாற்று கருத்துகளையும் வரவேற்பவன் நான். தொடர்ந்த உரையாடல்கள் மூலமாக மட்டுமே ஒரு சமகால அரசியல் சூழ்நிலையை பல்வேறு கோணங்களில் காண முடியும்; முடிந்திருக்கிறது. துரதஷ்டவசமாக மலேசியாவில் மாற்று கருத்துகளை பலரும் விரும்புவதில்லை. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கோ.முனியாண்டி.

அவர் அண்மையில் வெளியிட்ட ‘ராமனின் நிறங்கள்’ என்ற நூலை ஒரு நாவலாக ஏற்க முடியாது என்று கூறியிருந்தேன். இப்போழுதும் அந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. சாண்டில்யனிலிருந்து என் நாவல் வாசிப்பு தொடங்குகிறது. அதற்குப் பின் படிப்படியாக மு.வ, ஜெயகாந்தன் என வந்து இன்றைக்குத் தமிழில் வருகின்ற மிக முக்கியமான படைப்பிலக்கியங்களை வாசிப்பதை வழக்கமாக்கியுள்ளேன். வாசிப்பு இயல்பாக வாசகனின் மனதில் ஒரு தர அளவை உருவாக்கிவிடும். ஒரு நாவலை வாசிக்கும்போதே தேர்ந்த வாசகனால் மொழி ரீதியாக, வடிவ ரீதியாக, உணர்த்த வரும் விசயம் ரீதியாக ஒரு தர அளவீட்டைச் செய்துவிட முடிகிறது. சில நாவல்களின் முதல் பகுதியை வாசித்த உடனேயே அதன் ஒட்டுமொத்த கதைப்போக்கும் புரிந்துவிடுகிறது. அதற்குமேல் அதனை வாசிக்க ஒன்றும் இல்லாமலாகிவிடுகிறது. கோ.முனியாண்டியின் எழுத்து தொகுப்பை (அதை நாவல் என்று அழைக்க முடியாது) ஒரு தரமற்ற இலக்கியப் பிரதியாக நிரூபிக்க பெரிதாக மெனக்கெடவோ ஆழ்ந்து விவாதிக்கவோ வேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தவறான வாக்கிய அமைப்பும், தேவையற்ற குறிகளும், மிகையான வர்ணனைகளும், வலுவற்ற கதையும், கதை சொல்லும் முறையுமே போதுமானது. அதாவது கதைக்குச் செல்லும் முன்பு இந்த எழுத்துத் தொகுதியின் புற அமைப்பே தவறுகள் நிரம்பியனவாக உள்ளன. மொழியைப் பயன்படுத்துவதில் அவருக்குள்ள பிரச்சனையே ஒரு வாசகன் பிரதியினுள் நுழைய பெரும் தடையாகிவிடும்.

அவர் எழுத்து தொகுப்பை இவ்வாறான காரணங்களால் விமர்சித்ததை அடுத்து முனியாண்டியும் இரண்டாவது முறையாக ஒரு எதிர்வினை அனுப்பியபோதுதான் அவரது உண்மையான இலக்கிய தரம் தெரிந்தது. ஐம்பது ஆண்டுகாலமாக இலக்கியத்தில் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் முனியாண்டி தன் நிலையை விளக்க பயன்படுத்தியுள்ள வார்த்தைகளும் சொல்லாடல்களும் ஏறக்குறைய அரைமயக்கத்தில் சௌவ்கிட் பகுதியில் சண்டை போடுபவர்களிடம் கேட்கலாம்.  கோ.முனியாண்டி தன் எதிர்வினையை டைப் செய்து அனுப்பவில்லை. மாறாக எழுதியதை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்துள்ளார். அதை நான் டைப் செய்து போட வேண்டுமாம்.

சரி, கோ.முனியாண்டியின் எதிர்வினை இவ்வாறு தொடங்குகிறது.

‘மனித குரங்கிற்கும் (நெஜத்திலும் நெறத்திலும்) நாய்ங்க புணர்வதற்கும் உள்ள நெருக்கம் பத்தியும் இறுக்கம் பத்தியும் உமக்கு உள்ள தொடர்பு பத்தி ஊருக்கே நல்லா தெரியும்’.

முதலில் என்னை இந்த வரிகள் குழப்பின. பின்னர்தான் அவர் நான் கறுப்பன் என்பதையும் நாய்கள் புணர்வதற்கு நிகரானவன் எனவுன் சொல்வதாகப் புரிந்தது. (என்ன ஒரு மொழி ஆளுமை) பின்னர் நான் கறுப்பனாக இருப்பது பற்றி நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கறுப்பாக உள்ளவர்கள் எதிர்வினை ஆற்றக்கூடாதா என்ன…அல்லது கறுப்பாக இருப்பது சமூக விரோதமா? சரி ஏதோ அவசரத்தில் அவர் நாவலைப் போல தப்பாக பிறந்த வரிகள் என நினைத்தால் மீண்டும் ஒரு இடத்தில் ‘உன் நிறத்தைப் பார்த்தாலே உன் அழுக்கு தெரிகிறதே’ என்றிருந்தார். எனக்கு சட்டென ஒரு அச்சம் தொற்றிக்கொண்டது. கறுப்பனாக இருப்பதெல்லாம் பெரியவிசயமில்லை. ஃபௌடர் பூசி மறைத்துவிடலாம். அதையும் தாண்டி எனக்கு இருக்கும் சில அங்கவீனங்கள் தெரிந்தால் என்னாவது. குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பின் பயன்படுத்த இயலாத என் விரல்களைப் பார்த்தால் கோ.முனியாண்டியின் அறிவுபூர்வமான விமர்சனம் இவ்வாறு தொடங்கலாம்…’ஒடிந்த விரல் கொண்ட குரங்கே…!’

முனியாண்டியின் எதிர்வினை இவ்வாறான வசைகளை மட்டுமே கொண்டவை. அவரால் அதுதான் முடியும் பாவம். அறிவு தளத்தில் நின்று உரையாட சக்தியற்றவர். ஓரிருமுறை அறிவு சார்ந்த விவாதத்திற்கு ஏதும் தட்டுப்படுகிறதா என வாசித்துப்பார்த்தேன். அதில் அவர் 50 வருட மொழி ஆளுமையில் உதிர்த்த சில அரும்பெரும் கருத்துகள் இவ்வாறு இருந்தன.

  • நாவல் எழுதும்போது பாட்டம் முப்பாட்டன்னு தலைமுறையையே எழுதியிருக்கனும். இல்லனா நாவல்னு ஒத்துக்க மாட்டிங்களா?
  • பூனைகள் புணர்வது பற்றியும் உன்னால நவீன கவிதை எழுத முடியும் அதற்கு தகுதியானவன் நீ!
  • வல்லினத்துக்குப் பணம் வேணுமுன்னு நீ கேட்டப்ப அனுப்புனது யாரு…கோ.முனியாண்டி இல்லையா?

கோ.முனியாண்டியின் மூன்று பக்க கடிதத்தில் எஞ்சியவையெல்லாம் வசைகள். அதிலும் குழப்படி. வாக்கியங்கள் எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகின்றன. இங்கு பிரசுரமான வாக்கியத்தையே நான் திருத்திதான் டைப் செய்தேன். தேவையில்லாத இடத்தில் ஆச்சரியக்குறிகளும் இரட்டை மேற்கோள்குறிகளும் நிரைந்திருக்கின்றன. கோ.முனியாண்டியின் குறியை வெட்டியப்பின்தான் பார்க்க அழகாக இருந்தது வாக்கியம்.

முனியாண்டியின் இந்த ‘கருத்துகளுக்கு!’ பதில் சொல்லத்தான் வேண்டும்.

முதலாவது, நாவலின் கதாநாயகனாக வரும் (ஆம்! கதாநாயகன்தான். இதில் கதாநாயகி அவனைப் பார்த்து பாடலெல்லாம் கூட பாடுகிறாள். பாடலும் இடம்பெற்றுள்ளது) பாத்திரத்தின் பாட்டனையோ முப்பாட்டனையோ யாரும் கேட்கவில்லை. பாத்திரத்தின் பின்புலம் என்பது பாட்டனும் முப்பாட்டனும் அல்ல. முனியாண்டி நீங்கள் யார்? என்று கேட்டால் பாட்டன் முப்பாட்டன் பெயரை சொல்வார் போல. அது அவர் பிரச்சனை. இங்கு ரகுநாதன் என்பவன் யார்? அவன் நாவல் முழுதும் வருகிறான். ஆனால் நாவலில் இறுதிவரை அவன் குறித்த தெளிவான சித்திரங்கள் எதுவும் இல்லை.

அடுத்து, வல்லினத்துக்குப் பணத்தை கோ.முனியாண்டியிடம் மட்டும் கேட்கவில்லை. இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் கேட்டு பெற்றுள்ளேன். அதுவும் அவரவர் தரும் பணத்துக்கு அப்பணத்தில் அச்சாகும் நூல்களை திரும்ப இலவசமாகவே கொடுத்து விற்று மீண்டும் பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லியுள்ளேன். நீங்களும் அவ்வாறுதான் செய்துள்ளீர்கள். ஏதோ என் குடும்ப தேவைக்கு உதவியது போலல்லவா இருக்கிறது கதை.

இதில் நீங்கள் சொல்லியுள்ள ஒன்றுதான் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பூனைகள் புணர்வது குறித்து எழுதுவது. அடடா. எழுதலாம்தான். முனியாண்டி சொன்னது போல அதை என்னால் மட்டும்தான் எழுதமுடியும்.

முனியாண்டி அளவுக்கு தரம் தாழ்ந்து தனிப்பட்ட தாக்குதல் நடத்த வெகுநேரமாகதுதான். ஆனால் உச்சமான ஒரு இலக்கிய விவாதங்களையும் படைப்புகளையும் சாத்தியமாக்கும் ஒரு காலக்கட்டத்தில் அது என்னை கீழ் இழுக்கும் என தெரியும். எனவே ஒன்றை மட்டும் இங்குச் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் முனியாண்டி தன் எதிர்வினையில் சை.பீர் முகம்மது பெயரையும், சீ.முத்துசாமி பெயரையும் பயன்படுத்தியுள்ளார். அவர்களில் யாராவது ஒருவர் ‘இராமனின் நிறங்கள்’ ஒரு தரமான நாவல் என்று சொல்லட்டும். அல்லது எப்படி அது தரமானது எனக் கூறட்டும். அவர்களுக்கு வல்லினம் ஒரு தகுந்த தளமாக இல்லாது போனால் வேறு பத்திரிகையிலாவது பதிவு செய்யட்டும். அங்கிருந்து இந்த உரையாடலைத் தொடங்கலாம். ஆனால் அவர்கள் எழுத மாட்டார்கள். மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் உங்களைப் போல அல்ல முனியாண்டி…அவர்களுக்கு நல்ல இலக்கியம் தெரியும்.

பி.குறிப்பு : முனியாண்டி தொடர்ந்தார்போல எழுத்து தொகுப்பை முழுதுமாக வாசித்து விவாதிக்க வேண்டும் என்றதால் மூன்றாவது முறையாக அதை வாசித்து அதன் ஒவ்வொரு பகுதியின் பலவீனத்தையும் பறையில் நானும் நண்பர்களும் பிரசுரிக்க உள்ளோம். இனி இவ்விவாதம் பறையில் தொடரும்…

http://parai.vallinam.com.my/

(Visited 102 times, 1 visits today)

5 thoughts on “கறுப்பனாக இருப்பதின் பிரச்சனைகள்: கோ.முனியாண்டி

  1. திரு நவீன் அவர்களுக்கு,

    நான் ராமனின் நிறங்கள் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து படித்து கொண்டு வருகின்றேன், அது தற்பொழுது வாக்கு வாதத்தில் வந்து முடிந்து இருக்கின்றது, நமது தொடர்புகள் மிக நீளம் என்றாலும் எனக்குள் நாம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும், அந்த உணர்வில்தான் இப்பொழுது இதை எழுதுகிறேன், எனக்கு தெரிந்த வரை நமது தமிழர் வரலாற்றில் தமிழ் புலவர்கள் எத்தனையோ பேர் நமது வாழ்கை முறைமைகளையும் நமது மரபுகளையும்,பண்பாடுகள் பழக்க வழக்கங்கள்,மருத்துவ முறைகள்,இல்லற நெறிகள்,நமக்கு சொல்லி விட்டு தமிழுக்காக வாழ்ந்து மறைந்தார்கள், அந்த காலத்தில் ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது மன ஓட்டத்தை அவர்களது தமிழ் புலமையில் படைத்தார்கள், அவர்கள் பயணிக்கும் இடம் வேறாக இருந்தாலும் முடியும் இடம் ஒன்றாகத்தான் இருந்துள்ளது, தமிழுக்காக ஒரு நல்ல பணியை செய்கின்றோம் என்பதுவே அது. தற்காலதில் தமிழ் பற்றாளர்கள் என்று உங்களை போன்றவர்களை நினைத்து பெருமை படும் இந்த நேரத்தில் இது போல போன்று வாக்கு வாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்றே தோன்றுகின்றது.சம்பந்தமே இல்லாமல் இதில் எங்கு வந்தது இந்த கருப்பு பிரச்சினை, நான் உங்கள் எதிமரையாலரை பார்த்தது இல்லை, அனால் அவரும் கருப்பு கலந்த நிறமாகத்தான் இருப்பார் என்பது எனது கற்பனை,அவர் உருவாக்கிய மண் பொம்மை நன்றாக உள்ளது என்று அவருக்கு தோன்றும் ஆனால் அதை வாங்கி உபயோகபடுத்த நினைபவனுக்கு அதன் உண்மையான தன்மை இந்த பொம்மையில் கை கொஞ்சம் நீளமாக உள்ளது வடிவம் சரி இல்லை, இதை பார்க்கும்பொழுது எனக்கு பொம்மையாகவே தெரியவில்லை என்பது புரியும் என்று அவருக்கு புரியவில்லை.நீங்கள் இந்த விவாதத்தை இனியும் தொடராமல் நமக்கே உரிய பெருந்தன்மையுடன் இதை இத்துடன் நிறுத்தி விட்டு வேறு எதாவது ஆரோக்கியமான் தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்று வேண்டுகின்றேன்.

  2. No any point to Ko.Muniyandy to talk about our personal appearence and personal Characteristic and attitudes. Who gave him rights to talk about the colour? He is simply try to make fool with this kind of sensetive comparing. The fellow just want to prove that he is a wonderful novelist of malaysia. So for that he could do anything. Bull shit!

    “whoever talk about individual personal appearence(colour decrimination) please hit him by our old slippers” – Janham Mahid(in a speech)

  3. நவின் என்னைக் கேட்டால் நீங்கள்
    பதில் கொடுக்க வேண்டிய
    அவசியமே இல்லை…..
    நம் தராதரத்திற்கேற்றவர்களிடம்
    நாம் வாதிடுவதே நமக்கும்
    நம் அறிவிற்கும் மரியாதை….
    இலக்கிய விவாதத்தில்
    ஒருவரின் தோற்றத்தை
    விமர்சிக்கும் கீழ்தரமானவர்களிடம்
    உங்களுக்கென்ன உரையாடல்?

  4. நவின் என்னைக் கேட்டால் நீங்கள்
    பதில் கொடுக்க வேண்டிய
    அவசியமே இல்லை…..
    நம் தராதரத்திற்கேற்றவர்களிடம்
    நாம் வாதிடுவதே நமக்கும்
    நம் அறிவிற்கும் மரியாதை….
    இலக்கிய விவாதத்தில்
    ஒருவரின் தோற்றத்தை
    விமர்சிக்கும் கீழ்தரமானவர்களிடம்
    உங்களுக்கென்ன உரையாடல்???

  5. நவீன் உங்களின் பதற்றமில்லாத பதில், பக்குவத்தைக்காட்டுகிறது.

Leave a Reply to balamurugan from Penang, Pulau Pinang, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *