செடியின் மகிழ்ச்சி

சாலையோரம் வளர்ந்திருந்த ஒற்றைச் செடியில்
பூ பூக்க வைக்க
பக்கத்துவீட்டுக்காரி நேற்று முடிவெடுத்தாள்

முதலில் செடியை
கையில் எடுத்துப்பார்த்தாள்

அதில் நிறம் போதவில்லையென
பச்சை ஸ்பிரேயால்
பளிச்சிட செய்தாள்

செடிக்கு நீர் தேவையென
நடுக்கிணற்றில் நட்டுவைத்தாள்

ஒளிப்படாமல் போகவே
தீயின் திரிகளை தின்னக்கொடுத்தாள்

காற்றின் தேவைக்கு
கரியமிலத்தை கக்கி வைத்தாள்

நான்
சாகப்போகும் அச்செடிக்காக
இன்றிரவு
இரண்டு சொட்டு ரத்தம் சிந்தினேன்

இரவில் பளிச்சிடும்
சிவப்பு சொட்டுகள்தான்
பூவென்று
அவள்
ஊருக்கெல்லாம் காட்டியிருக்கக் கூடும்.

(Visited 89 times, 1 visits today)

2 thoughts on “செடியின் மகிழ்ச்சி

Leave a Reply to ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

Your email address will not be published. Required fields are marked *