ம. நவீனின் ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ கவிதைகள் இன்றைய உலகயலின் அக புறத் தாக்கத்தின் ஆதாரங்கள் – மேமன்கவி

ம. நவீன் ! மலேசிய மண்ணிலிருந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. ‘வல்லினம்’ எனும் சிறுசஞ்சிகையின் ஆசிரியர். இன்று அவ்விதழ் இணையச் சஞ்சிகையாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

மலேசியா – சிங்கப்பூர் மண்ணிலிருந்து நவீன தமிழ் கலை இலக்கியத் துறைக்கு காத்திரமானதும், கணிசமானதுமான பங்களிப்பு வந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த காலங்களில் நவீன தமிழ் கலை இலக்கியத் துறை சார்ந்த ஆய்வுகளில் இந்த நாடுகளின் இலங்கை உட்பட கலை இலக்கிய பங்களிப்பைப் பற்றி அவ்வாய்வுகளில் கடைசி யாக சிறு பகுதியாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முயற்சிகள் என மிகச் சுருக்கமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பிற்கால காட்டத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சமூக, அரசியல் பொருளாதார மற்றங்களின் காரணமாக நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சிக்கு காத்திர மானதும், கணிசமான அளவுக்கு அந்த நாடுகளிலிருந்து நவீன கலை இலக்கியப் பங்களிப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது அன்று சுருக்கமாக அம்மூன்று நாடுகளின் நவீன தமிழ் கலை இலக்கிய முயற்சிகளை பற்றி பேசிக்கொண்டிருந்த நிலையை மாற்றி விட்டது எனலாம்.

அந்த வகையில் இலங்கையில் நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியைப் பற்றி நாம் அறிந்த ஒன்று. ஆனால், இன்னும் நம்மிடையே மலேசியா – சிங்கப்பூர் மண்ணில் நடந்தேறும்; நவீன கலை இலக்கிய முயற்சிகள் பற்றி பரவலான அறிதல் இல்லை என்றே சொல்ல வேண் டும். பீர்முஹம்மது, ஜெயந்தி சங்கர், ரெ.கார்த்திகேசு, இளங்கோவன், அக்கினி என்போர் மலேசியா – சிங்கப்பூர் நவீன தமிழ் கலை பங்களிப்பாளர்களாக உடனடியாக எனக்கு நினைவுக்கு வருகிறார் கள். (இவர்களை போல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். உடனடியாக நினைவுக்கு வந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.) அத்தோடு கணினியில் தமிழைக் கொண்டு வந்தவர்களில் முதன்மையான வரான சிங்கப்பூரில் வாழ்ந்த அமரர் நா.கோவிந்தசாமி அவர்கள் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டிய ஒருவர்.

இவ்வாறாக மலேசிய மண்ணிலிருந்து நவீன தமிழ் கலை இலக்கிய செயற்பட் டாளர்களாக இயங்கி கொண்டிருப்பர்தான் ம.நவீன் . ‘வல்லினம்’ எனும் சிறு சஞ்சிகை மூலமும், தனது படைப்புகளின் மூலமும் நவீன கலை இலக்கிய உலகின் கவனத்தை கவர்ந்தவர். அவரது முதலாவது கவிதைத் தொகுதி வல்லினம் வெளி யீடாக 2009ஆம் ஆண்டு ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பின் முதல் விசேடம் என்று சொல்வது என்றால் நவீனின் கவிதைகள் நாம் மேலே குறிப்பிட்ட சிங்கப்பூர் படைப்பாளியான இளங்கோளவன் (இவர் ஒரு சிறந்த நவீன நாடக ஆசிரியர்) அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இடம் பெற்றியிருப்பதுதான்.

இனி நவீனின் கவிதைகளைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

ஒரு படைப்பாளியின் படைப்புகளை அங்காங்கே படிக்கின்ற பொழுது அப் படைப்பாளியை பற்றிய ஒரு முழுமையான கருத்து நிலைக்கு வருவதற்கு சாத்தியமில்லாது போய் விடுகிறது. ஆனால், ஒரு படைப்பாளியைப் பற்றிய ஒரு முழுமை யான கருத்து நிலையை ஏற்படுத்தித் தருவது என்றால், அப்படைப்பாளியின் படைப்புகளை ஒரு சேர படிக்க வாய்ப்பைத் தருகின்ற அவர் தம் நூல் வடிவம்தான்.

இத்தொகுப்பில் அமைந்துள்ள நவீனின் கவிதைகளை ஒரே மூச்சிலும், பின் இக்கருத்தாடலுக்காக மீண்டும் படித்த பொழுது, அவரது கவிதைகளில் தொடர்ச் சியான போராட்டக் குரல் ஒன்று கேட்டுக் கொண்டே இருப்பதாக எனக்குப் பட்டது.

போராட்டம் எனும் பொழுது இயக்கம், திரளான மக்கள் கூட்டத்தின் செயற்பாடு என்பதாக நமக்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய உலகியல் நிலையிலே ஒவ்வொரு மனிதனும் போராடிக் கொண்டுதான் இருக்கிறான். அந்தப் போராட்டக் குரல் இயக்க வடிவம் பெறாத தன் காரணமாக நமக்குக் கேட்பதில்லை. ஆனால் அக்குரல் கலை இலக்கிய வடி வத்தினூடாக பதிவாகும் பொழுதுதான், அவதானத்திற்கு ஆட்படுகிறது. ஏனெனில் கலை இலக்கிய வடிவம் என்பதுகூட, போராட்டத்திற்கான ஒரு வன்மையான ஆயுதம் என்பது நாம் அறிந்த ஓர் உண்மை. ஆனாலும் அவ்வாறான ஊடகத்தின் வழியாக ஒலிக்கும் அக்குரல் எந்த அளவுக்கு சமூக மயப்பட்டது அல்லது தனிமனித மயப்பட்டது என்ற விசாரணை தவிர்க்க முடியாமல் எழுகிறது.

இன்றைய உலகியல் நிலையில் ஆதிக்க சக்திகள், அரசியல், பண்பாடு, கலாசாரம், மதம் இப்படியான பெரும் கதையாடல்களின் காரணமாக எழுகின்ற கண்காணிப்பு அரசியல், சுய அடை யாளத்தை அழிக்க முனைதல், தொலைந்து போன அடையாளத்தை தேடுகின்ற ஒரு தீராதத் தேடல் (இத்தேடல் நிலம் முதற் கொண்டு உடல் வரை நீளுகிறது) இவை தம்மை சித்திரிக்கின்ற தன்மையே இன்றைய உலக முழுவதற்குமான கலை இலக்கிய படைப்புகளின் பண்பாக இருக்கிறது. அத்தகைய பண்பு களை ஒரு படைப்பாளி தன் படைப்புகளில் பேசி இருக்கிறாரா? என்பதே நாம் மேலே குறிப்பிட்ட விசாரணையின் விரி வாக்கம் ஆகிறது.

அவ்வாறான விசாரணையின் தேடலுடன் நவீனின் கவிதைகளுக்குள் முதல் வாசிப்புக்காக உள் நுழைக்கின்ற பொழுது, நாம் மேலே குறிப்பிட்ட இன்றைய படைப்புகளின் பண்பை ஒரு தனி மனித நிலையில் நின்று பேசி இருக்கிறார் என்பதை தெரிய வரும். இதற்கு அவரது பெரும்பலான கவிதைகள் தன்னிலை தளத்தில் நின்று பேசுவதே காரணமாகுகிறது. ஆனால் ஆழ்ந்த வாசிப் புக்குப் பின் அவை தம்மில் ஒரு சில கவிதைகள் தவிர வெறுமனே தனி மனித புலம்பல்களாக எஞ்சி விடாது, மேற்குறித்த உலகியல் பண்பானது மனித சமூகத்தின் மீது ஏற்படுத்தி இருக்கின்ற விளைவுகளை, தாக்கங்களை எதிர்க்கொண்ட மனிதர்களின் பிரதிநிதியாக அக்கவிதைகளில் செயற்படுகிறார் எனத் தெரிய வருகிறது.

அக்கூற்றை நிரூபிக்கும் வகையிலான சில கவிதைகளை உதாரணங்களாகப் பார்ப்போம். ‘ஒரு மலர் பறப்பதைப் பற்றி’ (பக் -13) எனும் கவிதை முதல் வாசிப்பில் வண்ணாத்துப்பூச்சி ஒன்றின் மீதான வன்முறையாக தெரிந்தாலும், இயற்கையின் மீது மனிதன் செலுத்துகின்ற வன்முறையும், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிக்க முனைகின்ற ஆதிக்க சக்தி செயற்பாட்டின் குறியீடாகவும் வெளிப்படுகிறது.

‘அதன் கால்கள் ஒவ்வொன்றையும்.
பிய்த்தெறிந்தேன்’ என வரிகளில் நகர்ந்து
‘உடலைப் பிதுக்கி
திரவங்களை வெளியேற்றினேன்’
என தொடரும் அக்கவிதை
‘ஒரு பூ வண்ணத்துப்பூச்சியானது பற்றி
இனி யாருக்கும் தெரியாது’

என முடிக்கின்ற பொழுது அக்குறியீடு உறுதியாகிறது.

அதே வன்முறையின் தொடர்ச்சியையும் விளைவையையும் பழைய பானையை குறியீடாக்கி ‘பழைய பானை’ (பக் – 21) எனும் கவிதையை இப்படி முடிக்கிறார்.

‘மனிதம் புசிக்கும் ஒற்றைக் கரம்
இறந்து கிடந்ததைப் பற்றியும்
அதை எங்கள் ஜிம்மி
தூக்கிச் சென்றது பற்றியும்
மக்கள் பலவாறகப் பேசிக்கொண்டனர்.’

இவ்வரிகளில் ‘அதை எங்கள் ஜிம்மி’ என்ற சொல்லாடல் அதாவது அவர்களின் ஏவல் நாயை பற்றிய அச்சொல்லாடல் யாரைக் குறிக்கிறது என்பது எல்லோருக்கும் புரிகின்ற ஒன்று.

நான் ஏலவே குறிப்பிட்டது போல் இன்றைய போரட்டத்தின் குரலாக மட்டும் நவீனின் கவிதைகள் பேசாது அதற்கு அப்பால் அந்தப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளின் இருப்பிலிருந்தும் பேசுகிறார். இப்பேச்சு அச்சக்திகளுக்கு சார்பானது அல்ல. மாறாக அவர்களைச் சரியாகக் காட்டி கொடுக்கும் ஒரு தந்திரமாக இருக்கிறது.

அதேவேளை இவ்வாறாக போரட்டத் தில் சுழலும் மனிதன் கலகக்காரனாக மாறுகின்ற இயங்கியலை இவர் தவற விட்டாரோ என்ற கேள்வி ஒன்று எழுகிறது. இத்தொகுப்பின் இரண்டு கவிதைகள் அந்த எனது கேள்வியை இல்லாமல் செய்து விடுகின்றன.

‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ எனும் இத்தொகுப்பின் தலைப்பு, அடுத்து தலைப் பில்லா கவிதை ஒன்று.

‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ என்ற இக்கவிதையின் தலைப்பைப் பற்றி நவீன் அவர் களிடம் கேட்டேன் அதற்கு அவர்,

‘சர்வம் பிரமம்’ என்பது என்பது சமஸ்கிருதத்தில் முக்கிய சுலோகம். ‘அஹம் பிரமாஸ்மி’ என்பதும் அவ்வாறே சர்வம் பிரமாஸ்மி எனும் தொடர் இலக்கண பிழை கொண்டது. அதை வேண்டு மென்றேதான் செய்தேன். அஹம் பிரமம் என்றால் ‘நான் கடவுள்’ என்றார்.

இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பில் எல்லாமே சந்தை பொருளாதாரத்தில் சிக்கி கொண்டன என்பது நம்மைச் சுற்றி இருக்கும் நிஜம். அதில் மதம் என்ற பெரும் கதையாடலும் ஒன்று.

அத்தகைய பெரும் கதையாடலானது இன்று எப்படி விலை போகிறது என்பதை ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ என்ற அக் கவிதையில்,

‘ஒவ்வொரு கடவுளும்
ஒவ்வொரு விலை….’

என்ற வரிகளில் சொல்லுகிறார் ‘பாகி செப்புலோ ரிங்கிட்லா பாங் (எனக்கு பத்து வெள்ளி கொடு)| எனக் கடவுளே யாசிக்கும் நிலையைக் காட்டி, அக்கடவுளுக்கு அதற்காகக் கொடுக்கின்ற பதிலில் கலகம் தெரிகிறது. அதாவது நாம் மேற் குறித்த நிலையை போராட்டம் என்று சொல்கிறோமே, அப்படியானால் அப்போராட் டத்திற்கான ஆயுதம் எது எனப் பார்த்தோமானால், மனித உடல்தான் இப்போராட் டத்தின் ஆயுதமான மனித உடலால் கொடுக்கப்படும் பதில் அந்த உடலுக் குரியவனை – உடலுக்குரியவளை கலகக்காரனாக – கலகக்காரியாக மாற்றி விடுகிறது.

‘எனக்கு பத்து வெள்ளி கொடு’ (பாகி செப்புலோ ரிங்கிட்லா பாங்) என யாசிக்கும் கடவுளுக்கு மனித உடல் மொழியால் கொடுக்கப்படும்; பதிலில் தெறிக்கும் கலகத்தன்மை அதைப் பிரகடனப்படுத்துகிறது.

தலைப்பில்லாத இறுதிக் கவிதை யும், கலகத்தன்மை கொண்ட ஒன்றுதான். கடவுளின் இன்றைய நிலையை அவனின் இருப்பைப் பற்றிய பார்வை கொண்ட வெளிப்பாடானது முகத்தில் அறைத்தாற் போல் வெளிப்பட்டு அக்கவிதையை ஒரு கலகத்தன்மை கொண்ட கவிதையாக நமக்குக் காட்டுகிறது.

மொத்தத்தில், இன்றைய உலகியலின் பண்புகள் – தன்மைகளானது ஒவ்வொரு மனிதனின் அக யதார்த்ததில் ஏற்படுத்துகின்ற தாக்கங்களைப் பேசு கின்ற அதேவேளை, அத்தாக்கங்களின் காரணமாக அந்த மனிதன் புற யதார்த்தத்தில் எந்த அளவுக்கு கலகத்தன்மையுடன் வெளிப்படுகிறான் – வெளிப்படு கிறாள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு நவீனின் கவிதைகள் மிக பொருத்தமான கவிதைகள் என்பதே நவீனின் தனித்துவம் எனலாம்.

நன்றி : மல்லிகை (மே 2012)

(Visited 191 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *