இரு கவிதைகள்

காலத்தின் டைரி47045710-death-pictures

மரணத்தை
இறுதியென நம்பி அழுதுக்கொண்டிருந்தவர்களை
துக்கம் கசிந்த அமாவாசையில்
சந்தித்தேன்

பதுக்கி எடுத்துச்சென்ற
ஒளிவீசும்
கால டைரிக்குள்
கையை நுழைத்து
ஒவ்வொன்றாக வெளியே எடுத்தேன்

அவர்கள் கடந்துவந்த அவமானங்களை
அவர்கள் கடந்துவந்த பிரிவுகளை
அவர்கள் கடந்துவந்த புறக்கணிப்புகளை
அவர்கள் கடந்துவந்த குற்றச்சாட்டுகளை
அவர்கள் கடந்துவந்த இழப்புகளை
நிராகரிக்கப்பட்ட வாக்குறுதிகளை
நிர்வாணமாக்கப்பட்ட அந்தரங்கங்களை
பலவீனத்தின்மீதான கேலிகளை

மரணத்தை இறுதியென நம்பிக்கொண்டிருந்தவர்கள்
கதறி அழுதார்கள்
வீதியில் சரிந்தார்கள்
விரல்களால் கண்களைக் குத்திக்கொண்டார்கள்

பெரும் ஓலங்களுக்கு மத்தியில்
நான்
பலகாலமாகவே அவர்கள் மரணித்துக்கொண்டிருந்த ரகசியம் கூறினேன்
இனியும் மரணிப்பார்கள் என்ற உண்மையைச் சொன்னேன்
மரணம் அவ்வளவு கொடுமையானதில்லை என நினைவுறுத்தினேன்

முக்கியமாக
கடந்து வந்த மரணத்தின் வலி
நம் நினைவில்
எப்போதும் இருப்பதே இல்லை
என்றேன்

***

 

கொலைBlack And White Print

ஒரு குழந்தையைக் கொல்ல
முடிவெடுத்த
வெயில் பொழுதில்
ஆயுதங்களைத் தேடிக்களைத்தோம்

நீ துப்பாக்கிகளைத் துடைத்துவைத்தாய்
நான் கூர்வாளை சானைப்பிடித்தேன்
இரண்டுமே குழந்தையை
அச்சுறுத்தலாம் என
கைகளால்
கொல்ல முடிவு செய்தோம்

ஒரு குழந்தையைக் கொல்லும் முன்
நீ தாலாட்டுப் பாடலொன்றை
தயார் செய்தாய்
கண்மூடும் சிசுவைக் கொல்வதில்
சங்கடம் இருக்காது என்றாய்

எனது விளையாட்டுத்தனங்களைச் சேகரித்து சிரிப்பு மூட்ட திட்டமிட்டேன்
சிரிக்கும் குழந்தையைக் கொல்வது அவ்வளவு கொடூரமாக இருக்காது என்றேன்

குழந்தையைக் கொல்லும் முன்
சில கோழிக்குஞ்சுகளையும் ஒரு பூனைக்குட்டியையும்
கொல்வதற்குக் கொடுத்தாய்
ஒரு சமயம் வௌவால் குஞ்சொன்றை
எடுத்துவந்து கழுத்தைத் திருகிப் பயிலச்சொன்னாய்

நீ தாலாட்டுகளையும் நான் விளையாட்டுகளையும் பயிற்சியெடுத்து களைத்த இரவுகளில்
கை கால்கள் வளர்ந்து
வெளிவரப்போகும்
சிசுவின் தலை
நம் பயிற்சிகளை மறக்கடிக்கக்கூடாது
என கட்டளையிட்டுக்கொள்ளும்
நிமிடம்
துளியும் அறைக்குள் ஒளியில்லாமல்
இருப்பது
நாம் இருவருமே அழவில்லை என நம்பவைத்து
கொலைக்கான உக்கிரத்தை
அவ்வளவு சூட்சுமமாகத் தூண்டுகிறது.

(Visited 236 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *