சை.பீர்முகம்மதுவுக்கு அஞ்சலி

சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.

அதன் பின்னர் இன்று மரணச்செய்தியைக் கேள்விப் பட்டதும் பள்ளிக்கூடம் முடிந்து விரைவாக அவர் வீட்டுக்குச் சென்றேன். நான் சென்று சேர்வதற்கும் அவரை அடக்கம் செய்திருந்தார்கள். இடுகாட்டுக்குச் சென்று பூக்களால் நிறைந்திருந்த சமாதியின் அருகில் சற்று நேரம் நின்றேன்.

மறுபடியும் புறப்பட்டபோது காரிலிருந்தபடியே அவர் வீட்டைப் பார்த்தேன். உறவினர்கள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாமே ஓய்ந்திருந்தது. சுயமாக இயங்க முடியாத துணையற்ற வயோதிகர்கள் உண்மையில் எப்போதோ மனதளவில் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் உடலை அடக்கம் செய்யப்பட மட்டுமே காத்திருக்கிறார்கள்.

வீட்டுக்கு வரும்வரை சை.பீர்முகம்மது குறித்த பல்வேறு சிந்தனைகள் அலைக்கழித்தன.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் நட்சத்திர எழுத்தாளர் எனும் தகுதியை எம். ஏ. இளஞ்செல்வனுக்குப் பிறகு தாராளமாகச் சை. பீர்முகம்மதுவுக்கு வழங்கலாம். நான் இடைநிலைப்பள்ளி பயின்று கொண்டிருந்த காலத்தில், நாளிதழில் கடந்து செல்ல முடியாத பகுதியாக அவரது பெயர் இருந்தது. கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் ஊரில் இன்று முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்ட கம்போங் செட்டியில் வசித்த எனக்கு சை. பீர்முகம்மதுவின் ஆளுமை மலேசிய நண்பன் நாளிதழ் வழியாகவே உருவானது.

அப்போது ஒவ்வொரு வாரமும் வீட்டில் தமிழ் நேசனும் மலேசிய நண்பனும் வாங்கிவிடுவார்கள். அதில் மலேசிய நண்பனில் சை. பீர்முகம்மதுவின் இலக்கியச் செயல்பாடுகள் நன்கு கவனப்படுத்தப்பட்டன. குறிப்பாக 1997இல் வெளிவந்த அவரது ‘பெண் குதிரை’ தொடர்கதை குறித்த பேச்சுகளும் விவாதங்களும் அவர் மேல் கவனத்தைக் குவிய வைத்தது. அப்போது எனக்கு வயது 15. ஒரு மலேசிய எழுத்தாளர் அவ்வளவு பிரபலமாகப் பேசப்பட்டதை நான் அறிந்தது அதுவே முதன்முறை. எழுத்தென்பது பிரபலத்திற்கான ஒரு வழி என மட்டுமே நம்பியிருந்த வயதில் அந்நிகழ்வு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது.

சை. பீர்முகம்மதுவை எப்படியும் சந்திக்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். அந்த எண்ணம் 1999இல் ஈடேறியது. எம். ஏ. இளஞ்செல்வன் தனது சிறுகதைகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாகவும் குறுநாவல்களை ஒரு தொகுப்பாகவும் வெளியீடு செய்யத் திட்டமிட்டிருந்தார். இரு நூல்களின் பதிப்பாசிரியர் என்ற முறையில் லூனாஸ் வந்திருந்தார் சை.பீர். இளஞ்செல்வன் அவர் வருகையை முன்னமே என்னிடம் கூறியிருந்ததால் ஆவலாக அந்நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

சை. பீர்முகம்மது நல்ல உயரம். தடிமனான மீசை. அவரைப் பற்றி அறிமுகம் செய்யும்போது  “நோன்பு மாதம் மட்டுமே நல்ல முஸ்லிமாக இருக்கும் சை. பீர்முகம்மது” என எம். ஏ. இளஞ்செல்வன் சொல்லவும் அரங்கில் சிரிப்பொலி கேட்டது. எம். ஏ. இளஞ்செல்வன் சை. பீர்முகம்மது என்ற பெயரில் பீர், மது என எல்லாம் இருப்பதாகவும் கொஞ்சம் மரியாதையாக விளித்தால் ‘அவர்கள்’ என்பதில் கள்ளும் வந்துவிடும்; எனவே அவர் எப்போதும் தனக்கு நெருக்கமானவர் என்று கூறினார்.  சை. பீர்முகம்மது குதூகலமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். சை. பீர்முகம்மது அடிப்படையில் வினு சக்கரவர்த்தி போல கரடு முரடான தோற்றத்தைக் கொண்டவராக இருந்தார். அவர் குழந்தை போல சிரித்து மகிழ்வதை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

உண்மையில் நான் வியப்புகள் சூழ்ந்தே இருந்தேன். அது நான் கலந்துகொண்ட முதல் புத்தக வெளியீடு என்பதால் எல்லாமே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் என்ன மேடையில் குடியைப் பற்றி பேசுகிறார்கள் எனக் குழம்பிப் போனேன். எம். ஏ. இளஞ்செல்வன் படைப்புலகை முன்வைத்து அன்று சை. பீர்முகம்மது இலக்கியத்தில் உள்ள ஒழுக்க மீறல்கள் பற்றிப் பேசினார். எஸ். பொவினுடைய சில புனைவுகளை மேற்கோள்காட்டி இளஞ்செல்வன் எழுத்துகளில் உள்ள பாலியல் தெறிப்புகள் இலக்கிய வாசகன் மட்டுமே அறியக் கூடியவை என்றும்; இலக்கியத்தின் தன்மை அறியாதவர்கள் அவை கொடுக்கும் அதிர்ச்சியைப் பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் அவர் பேச்சு அமைந்தது. எழுத்தாளன் சமூகம் கட்டமைத்த ஒழுங்கை ஒப்புவிப்பவன் அல்ல என்ற அவரது சிந்தனை ஆரம்பநிலை வாசகனாக இருந்த எனக்குப் பெரும் மன எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தனது உரையில் சை. பீர்முகம்மது பட்டியலிட்ட எழுத்தாளர்களின் பெயர்களை அதுவரை நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அப்போது நான் வாசித்தவர்களெல்லாம் மு.வ, சுஜாதா, ராஜேஷ்குமார், சிவசங்கரி, தமிழ்வாணன், வைரமுத்து வகையறாதான். ஜெயகாந்தனை அப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அன்று நிகழ்ச்சியில் சை. பீர்முகம்மதுவின் பேச்சும் செயலும் ஜெயகாந்தனின் நிழலுருவை உருவாக்குவதாகவே அமைந்தது. அவரை நெருங்கி பேசத் தயக்கமாக இருந்தது. ஆனால் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய நிமிர்வையும் கம்பீரத்தையும் நான் முதன்முதலாக சை. பீர்முகம்மதுவிடம் அறிந்து கொண்டேன்.

படிவம் ஐந்து முடித்தவுடன் முதன்முதலாகக் கெடாவிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் கெடாவிலிருந்து கோலாலம்பூர் செல்வது வேறு நாட்டுக்குச் செல்வது போன்றது. ஓவியர் ராஜாவின் துணையுடன் அனைத்து நாளிதழ் அலுவலகங்களுக்கும் சென்று பத்திரிகை ஆசிரியர்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வதைப் பயணத்தில் ஓர் அங்கமாகவே ஆக்கியிருந்தேன், அப்போதுதான் ஒரு சாலையோரக் கடையில் ‘பெண் குதிரை’ எனும் நாவலைப் பார்த்தேன். அது சை. பீரின் நாவல். நாளிதழ்களில் வந்த விமர்சனங்களால் அந்த நாவலின் பெயர் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் அப்பாவிடம் பத்து ரிங்கிட் பெற்று அந்நாவலை வாங்கினேன். உடனடியாக வாசித்தும் முடித்தேன். அந்நாவல் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியையும் கிளுகிளுப்பையும் கொடுத்தது. கமலவேணி என்ற பெண்ணின் பாலியல் வேட்கையை மையப்படுத்தியிருந்த நாவல் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. ‘இப்படியெல்லாம் மலேசியாவில் எழுதிவிட முடியுமா’ என்று ஆச்சரியத்தையும் ‘எழுதலாம்’ என்ற துணிச்சலையும் ஒருங்கே உருவாக்கினார்  சை.பீர். நான் அவரது தீவிரமான வாசகன் ஆகியிருந்தேன்.

27.1.2001இல் மீண்டும் சை. பீர்முகம்மதுவைக் கெடாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது ரெ. கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல’ நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி. சை. பீர்தான் அந்நாவலின் பதிப்பாளர். அப்போது படிவம் 6 படித்துக் கொண்டிருந்தேன். சை. பீர்முகம்மது அன்றைய பேச்சிலும் சில எழுத்தாளர்களின் பெயரைக் குறிப்பிட்டார். பலரும் அறிமுகம் இல்லாதவர்கள். அப்போது நயனம், மன்னன் ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக என் கவிதைகள் வந்து கொண்டிருந்ததால் என்னையும் ஒரு பிரபலம் என்றே நம்பியிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சை. பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும்’ நூலை வாங்கினேன். அவரை நெருங்கிச் சென்று நூலில் கையொப்பம் வாங்கினேன், என் பெயரைச் சொன்னேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை. அதற்குமேல் என்னை அறிமுகம் செய்து கொள்ள சங்கடமாக இருந்தது. அவரது ஆளுமைக்கு முன் நான் மிகச் சிறியவன் எனச் சட்டெனத் தோன்றியது. நெரித்துக் கொண்டே இருந்த புருவம் அவரைக் கோபக்காரராகக் காட்டியது. மெல்லிய புன்னகையுடன் விடைபெற்றேன். நாளிதழில் சஞ்சிகையில் வரும் எல்லாவற்றையும் எல்லா எழுத்தாளர்களும் வாசித்திருப்பார்கள் என நானாக நம்பியிருந்தேன். என்னை அவர் வாசித்திருக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது.

எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கவும் படிப்பெல்லாம் ஒன்றும் வேண்டாம் எனப் படிவம் ஆறைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அதே ஆண்டில் கோலாலம்பூரில் குடியேறினேன். படிவம் ஆறு படிக்கும் வாய்ப்புக் கிடைப்பது அரிதென்பதால் நான் அதைத் தொடராதது குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது. நாங்கள் வாடகைக்கு இருந்த குடியிருப்பில்தான் பெ. ராஜேந்திரனின் வீடும் இருந்தது. இலக்கியம் பேச ஒருவர் கிடைத்தார் என நிம்மதியாக இருந்தது.  அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அவர் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்.

அப்படி ஒரு தரம் சென்றபோது அவர் வீட்டின் வாசலில் சிகரெட்டை ஊதியபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். நெருங்கிச் சென்றபோது அவர் சை. பீர்முகம்மது எனத் தெரிந்தது. நான் முதன்முதலாக அவரிடம் பேசியது அங்குதான். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் தயங்கியபடி மன்னன் மாத இதழில் ‘பருவகாலப் பறவைகள்’ எனும் தலைப்பில் என் தொடர்கதை வெளிவருவதைச் சொன்னேன். அது போன்ற இதழ்களையெல்லாம் தான் படிப்பதில்லை என்று கூறியவர் தமிழகத்திலிருந்து வரும் நல்ல இலக்கிய இதழ்களை வாசிக்கச் சொன்னார். “எது நல்ல இதழ்?” என்றேன். “காலச்சுவடு தெரியுமா?” என்று கேட்டார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நிச்சயம் தான் மன்னன் மாத இதழை வாசிப்பதாகச் சொன்னார். என்னையும் சிவகுரு எனும் கடையில் விற்கும் சிற்றிதழ்களை வாங்கி வாசிக்கச் சொன்னார்.

ஒரு வகையில் சிற்றிதழ்கள் பக்கம் என் கவனம் செல்ல சை. பீர்முகம்மது ஒரு காரணம். பேச்சிலும் எழுத்திலும் தீவிர எழுத்தாளர்களின் பெயர்களையும் சிற்றிதழ்கள் குறித்த அறிமுகத்தையும் செய்தபடியே இருந்தார். நானும் காலச்சுவடு, தீராநதி போன்ற இதழ்களைச் சிவகுரு எனும் கடையில் தேடி வாங்கி படிக்க ஆரம்பித்திருந்தேன்.

சை. பீர்முகம்மதுவை நான் மீண்டும் சந்தித்தது 2003இல். அப்போது நான் தீவிர கவிதை வாசகனாக இருந்தேன். பிரமிள், ஆத்மாநாம், பசுவைய்யா, தேவதச்சன், தேவதேவன் தொடங்கி அப்போது பிரபலமாக இருந்த மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், மாலதிமைத்ரி, சல்மா என இடைவிடாத வாசிப்பைக் கொண்டிருந்தேன். பல கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவிக்கவும் மூளை பழகியிருந்தது. 

1.5.2003இல் தொடங்கப்பட்ட தென்றல் வார இதழ் ‘விருட்சம் மாலை’ எனும் இலக்கியச் சந்திப்புகளை மாதம் ஒருமுறை நடத்தத் தொடங்கியிருந்தது. அந்தக் கூட்டத்தை முன்னின்று வழி நடத்துபவராகச் சை. பீர்முகம்மது இருந்தார். சை. பீர்முகம்மது என்னை ஓர் எழுத்தாளனாக அங்கீகரித்தது இந்தச் சந்திப்பில்தான்.

அன்றைய சூழலில் தமிழ் இலக்கியத்தின் போக்குக் குறித்து அவரால் எளிமையாக விளக்க முடிந்தது. பல நல்ல கவிதைகளை நகல் எடுத்துப் பகிர்ந்து; வாசித்து அதன் கவித்துவத்தை விளக்குவார். அவ்விளக்கம் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். நானும் பா. அ. சிவமும் அவருக்குச் சிற்சில மறுப்புகளை அவ்வப்போது வழங்குவோம். அது புதிய தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வந்த காலக்கட்டம். சை. பீர்முகம்மது எங்களை உற்சாகத்துடன் வரவேற்றார். தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் பலருடன் அவருக்கு நல்ல தொடர்ப்பு இருந்தது. அவர்களில் யாரையெல்லாம் வாசிக்கலாம் எனப் பரிந்துரைப்பவராக இருந்தார். தொடர்ந்து பல பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம் எனது படைப்புகள் ஏதாவது ஒன்றைக் குறித்துப் பாராட்டுவார். அவரால் என் எழுத்துலகம் உற்சாகம் அடைந்தது.

‘காதல்’ இதழை 2006இல் தொடங்கியபோது முதலில் சை. பீர்முகம்மதுவின் நேர்காணல் வர வேண்டுமென விரும்பினேன். அவரிடம் விரிவான உரையாடல் நடத்த அது ஒரு வாய்ப்பாக அமையக்கூடுமென நினைத்தேன். காதலில் இடம்பெற்ற சை. பீர்முகம்மதுவின் நேர்காணல் அவ்விதழுக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. அவரது இலக்கியத் தொடர்புகள் விரிவாக இருந்ததால் காதல் இதழுக்கும் தொடக்கத்திலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.

காதல் நின்று ‘வல்லினம்’ அச்சிதழ் தொடங்கியபோது மீண்டும் சை. பீர்முகம்மதுவின் பங்களிப்பை அதில் எதிர்பார்த்தேன். முதலில் படைப்பு ரீதியானது; அடுத்து பொருளாதார ரீதியானது. 30 எழுத்தாளர்களிடம் 100 ரிங்கிட் பெற்று வல்லினம் அச்சிதழைக் கொண்டு வருவதாகத் திட்டம். சை. பீர்முகம்மதுவின் குத்தகைத் தொழிலை அவரது பிள்ளைகள் கையிலெடுத்துத் தொடர்ந்ததால் பணம் கொடுப்பது சிரமம் எனச் சொல்லிவிட்டார். முதல் இதழ் வெளிவந்த பிறகு மீண்டும் சென்று பார்த்தேன்.  இதழைப் பார்த்த பிறகு வல்லினத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்க வேண்டும். மூன்றாவது இதழ் தொடங்கி நூறு ரிங்கிட் வழங்கும் நண்பர்கள் பட்டியலில் அவரும் இணைந்து கொண்டார். அவ்வகையில் ஒவ்வொரு இதழும் அவருக்கு 25 பிரதிகள் வழங்கப்பட்டன. அது பல மூத்த எழுத்தாளர்கள் கைகளில் கிடைக்க சை. பீர்முகம்மதுவின் தொடர்புகள் உதவின.

ஐந்தாவது இதழில் (2008) தமிழகத்தில் அவர் பார்த்த நாடகம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினார். நான் பார்த்து ரசித்த ஓர் எழுத்தாளரின் படைப்பை வல்லினத்தில் பிரசுரிக்க கிடைத்தது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.  அதன் பிறகு வல்லினம் எட்டாவது இதழில் (இறுதி அச்சிதழ்) சை. பீர்முகம்மதுவின் படைப்பு பிரசுமானது.

வல்லினத்துடன் அவருக்கு இருந்த உறவில் கசப்பு ஏற்பட்டதும் அந்த இதழுக்குப் பிறகுதான்.

***

வல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதல், திட்டவட்டமாக சில நிபந்தனைகளை எங்களுக்குள் விதித்துக் கொண்டோம். இலக்கிய மேடைகளில் இலக்கியவாதியே பிரதானமானவன். தனவந்தர்களும் அரசியல்வாதிகளும் ஓர் இலக்கிய இயக்கம் நகர பொருளாதார ரீதியில் உதவுதல் என்பது அவர்கள் கடமை. ஒரு சமூகத்தில் அறிவுலகம் வளர அவர்கள் நிதி உதவி செய்து பிறரைப் போல பங்களிக்கின்றனர். அதனாலேயே அவர்களுக்கு இலக்கிய மேடையில் முதல் மரியாதை செலுத்த அவசியம் இல்லை. அப்படி ஓர் அரசியல்வாதியோ கொடையாளரோ எதிர்ப்பார்த்தால் அவரிடம் உதவி பெற வேண்டியதில்லை; அழைக்க வேண்டியதும் இல்லை.

இந்தச் சூழலில்தான் 29.7.09இல் சை. பீர்முகம்மதுவின் ‘பயோஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. நிகழ்ச்சியில் வல்லினம் குழுவினரைக் கண்ட அவர் மகிழ்ந்து போனார். அது உண்மையான மகிழ்ச்சி. யார் தனது வாசகன் என அவர் அறிந்தே வைத்திருந்தார்.

நிகழ்ச்சிக்கு  ம.இ.கா கட்சியின் அப்போதைய தலைவர் சாமிவேலு தலைமை தாங்கினார். சை. பீர்முகம்மது அந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் “சாமிவேலுவிற்கு எழுத்தாளர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறியது எங்களுக்குக் கடும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் அதுவே மன உளைச்சலாகவும் ஆனது. ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்தவர், பாரதியைத் தன் ஞான ஆசானாகச் சொல்பவர் உதிர்க்கும் வார்த்தைகளா அவை எனச் சங்கடம் ஏற்பட்டது. ஏன் எழுத்தாளர்கள் ஓர் அரசியல்வாதிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனும் கேள்வி பின்னர் விமர்சனமாகவும் வெளிபட்டது.

சை. பீர்முகம்மதுவுக்கு வல்லினத்தில் வந்த எதிர்வினை கடுமையான கோபத்தை மூட்டியது. தொலைப்பேசியில் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்தார். சில மேடைகளில் திட்டினார். லண்டன் தீபம் தொலைக்காட்சி நேர்காணலில் வல்லினம் இணைய இதழாக வந்த பிறகு சரிவை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். வல்லினத்துக்கும் அவருக்குமான விலகல் விரிந்துகொண்டே சென்றது.

எங்களிடம் மாறுபட்ட கருத்திருந்தன.

ஒரு நவீன படைப்பாளி எப்போதும் அதிகாரத்துக்கு கடமைப்பட்டவனல்ல. மதம்/அரசு அதிகாரம் போன்ற சமூக நிறுவனங்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மக்கள் அல்லது ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துவிட்ட, நவீன இலக்கியச் சூழலை அறிந்து கொண்ட ஒருவர் ஒருபோதும் அந்த வார்த்தையைச் சொல்லமாட்டார் என்றே எண்ணினோம்.

படைப்பாளனைப் பாதுகாப்பதும் அவனுக்கான தேவைகளை நிறைவேற்றுவதும் முதிர்ந்த சிந்தனை கொண்ட அரசின் கடமை. அதற்கு அரசியல்வாதிகளின் வரம் தேவையில்லை. மலேசியாவில் தமிழ் இலக்கியத்துக்கு அத்தகைய சூழல் இல்லாதபட்சத்தில் அவர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் அரசின் மானியத்தைப் பெற்று தர முன்வர வேண்டும்.  அம்மானியத்தை வழங்க நிபுணத்துவமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு தேவை. அப்படி இருந்தால் அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் கடமையை உதவியாகவோ சேவையாகவோ உருமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. இதன் காரணமாகவே அப்பெரும் பணியை யாரும் அமைக்கப்போவதில்லை. இங்கு அரசியல்வாதிகளுக்குத் தங்களை மொழி, இலக்கிய உலகைக் காக்கும் ஹீரோக்களாகக் காட்ட வேண்டிய தேவை உள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அது அரசியல் நோக்கத்துக்கானது.

இப்படிக் கடமையைச் செய்வதற்காக அரசியல்வாதிகள் இலக்கிய மேடையைப் பயன்படுத்தி மொழிக்காப்பாளர்கள் தோரணையில் உலாவுவதும்; அந்தத் தோரணைக்கு எழுத்தாளர்கள் சாமரம் வீசுவதும் எனக்கு உவப்பானதாக இல்லை. நவீன கலைஞர்களாகத் தன்னை நிறுவிக்கொள்பவர்கள் எந்த அதிகாரப் பீடங்களுக்கும் நன்றியுடையவனாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதே எங்கள் வாதமாக இருந்தது.

வாதம் முற்றி பிரிவு நிகழ்ந்தது.

காலம் செல்லச் செல்ல சை. பீர்முகம்மது இலக்கியச் செயல்பாடுகள் மீது எனக்கு முற்றும் முரணான கருத்துகளே மிகுந்திருந்தன. மலேசிய இலக்கியத்தை யார் முன்னெடுக்க வந்தாலும் அவர்களுக்குத் துணை நிற்கலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. முன்னெடுக்க வருபவர்களுக்கு உள்ள மறைமுக அரசியல், வணிக தேவைகள் குறித்து நான் சிந்திப்பவனாக இருந்தேன். சை. பீர்முகம்மது போன்ற ஒரு மூத்த படைப்பாளி தனது எதிர்வினையை இலக்கியச் சுரண்டல்களுக்கு எதிராக வலுவாக வைப்பவராக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது. தங்கள் சுய லாபத்துக்காக மொழி, இலக்கியம் என வருபவர்களை ஆதரிப்பது இலக்கியச் சூழல் அழிய வழிவகுக்கும் மறைமுக ஆதரவே எனத் தோன்றியது.

சை. பீர்முகம்மது பல ஆண்டுகளாக உழைத்து, மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தான் உருவாக்கிய அலையைத் தானே நிறுத்துவதாகத் தோன்றியது. உண்மையில் அவர் மலேசிய நவீன இலக்கியத்தின் எழுச்சிக்கு ஆற்றிய பங்கு சாதாரணமானதல்ல.

***

மலேசிய இலக்கிய வளர்ச்சிக்குத் தொடக்கக்காலத்தில் உறுதுணையாக இருந்த முத்தமிழ்ப் படிப்பகம், தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எனப் பல இயக்கங்கள் தொடங்கப்பட்ட காலத்திலேயே அவற்றில் இணைந்து செயல்பட்ட மூத்த உறுப்பினர்களில் ஒருவர் சை. பீர். தரமான இலக்கியங்களைக் கவனப்படுத்த ‘முகில்’ எனும் பதிப்பகத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி பல நூல்களைப் பதிப்பித்துக் கவனப்படுத்தியுள்ளார். பல எழுத்தாளர்கள் நூல் வெளியிடத் துணை நின்றுள்ளார். ஏதோ ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் பயணம் தீவிரமடைய ஓயாமல் நகர்ந்த கால்கள் அவருடையவை.

மலேசிய இலக்கியத்தில் 1990கள் சை. பீர்முகமதுவின் இரண்டாவது பிரவேசம் நிகழ்ந்த காலம். சோம்பிக் கிடந்த மலேசிய நவீன இலக்கியச் சூழலைத் தனி மனிதனாக இழுத்துச் செல்லும் பெரும் வீரியத்துடன் அவரது நுழைவு இருந்தது.  தொழில் காரணமாக 14 ஆண்டுகள் எழுதாமல் இருந்தவர், மீண்டும் தொடையைத் தட்டிக்கொண்டு ஒரு மல்யுத்தவீரனைப் போல மலேசிய இலக்கியச் சூழலில் குதித்தார்.  1997 முதல் 1999 வரை அவரது பெயர் கவனப்படுத்தப்பட்டு நாளிதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

2000இல் ‘வேரும் வாழ்வும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியீடு செய்ய ஜெயகாந்தனை அழைத்து வந்து நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் சை. பீர்முகம்மது.  ஜெயகாந்தனே எனக்கு அப்போது முதன்மை நாயகன். அதனாலேயே சை. பீர்முகம்மதுவை  எனக்கு மேலும் பிடித்துப்போனது. ஒரு பெரும் ஆளுமையை முன்னிறுத்தி, தனது நூலை வெளியிடாமல் மலேசிய எழுத்தாளர்களின் பெருந்தொகுப்பான ‘வேரும் வாழ்வும்’ நூலை வெளியிடுவது ஆச்சரியமாக இருந்தது. 

அதன் பின்னர் தனது ‘மண்ணும் மனிதர்களும்’ நூல் வெளியீட்டுக்காக எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, வாசந்தி போன்றவர்களைத் தமிழகத்திலிருந்து அழைத்து வந்தார். நாட்டின் சில இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த சிற்பி பாலசுப்பிரமணியம், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றவர்களையும் மலேசியாவுக்கு அழைத்து வந்து இலக்கியக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தார். 

இன்று யோசிக்கும்போது வல்லினம் செயல்பாட்டுக்கான முன்னோடி என அவரை முன்வைக்க முடிகிறது, அவர் செயல்பட்ட தளத்தின் தொடர்ச்சியிலேயே நாங்கள் பின் தொடர்வதை உணர முடிகிறது. அவரது இந்தச் செயலூக்கம் கடைசி வரை இருந்தது ஆச்சரியம்.

2018இல் ‘சடக்கு’ தளத்தில் புகைப்படம் தொகுக்கும் பணியைத் தொடங்கியபோதுதான் அவரிடம் அந்தத் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. பல மூத்த எழுத்தாளர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் சேமிப்பில் உள்ள படங்களைக் கேட்டுப் பெறுவதில் சிக்கல் இருந்தது. மூத்த எழுத்தாளர்களுடன் அணுக்கமாகத் தொடர்புள்ள ஒருவரால்தான் இச்சிக்கலைக் களைய முடியுமென முடிவெடுத்தோம். சை. பீர்முகம்மதுவை அணுகியபோது அது தன் பணி போலவே எண்ணி எங்களுடன் பயணப்பட்டுச் சிலர் வீடுகளில் படங்களைப் பெற உறுதுணையாக இருந்தார். படத்தில் உள்ளவர்களை அடையாளம் காட்டவும் படம் குறித்த தகவல்களைத் துல்லியமாகக் கூறவும் அவரால் முடிந்திருந்தது. மலேசிய இலக்கியம் என்றால் தன் உடல் நலனைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாது ஓர் இளைஞனுடைய வேகத்துடன் இயங்கும் அவரது தீவிரம் என்னை வசீகரித்தது.

சை. பீர்முகம்மதுவின் எழுத்துலகம் பல தளங்களில் சஞ்சரிப்பது. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், பயணக்கட்டுரை, நாவல், வரலாறு எனப் பலவற்றிலும் கவனம் கொள்ளும் அளவில் பங்களிப்புச் செய்துள்ளார்.  மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் பலரிடம் இல்லாத உழைப்பை வழங்கி வந்தவர் அவர். மார்க்ஸியம், பெண்ணியம் தொடங்கி 1990களில் அதிகம் பேசப்பட்ட மாய எதார்த்தம், பின் நவீனத்துவம் வரை பல கூட்டங்களில் அவர் பேசவும் அவற்றை உள்வாங்கி புனைவாக்கவும் முயன்றுள்ளார்.

புனைவுலகைப் பொறுத்தவரை சை. பீர்முகம்மது ஒரு சிறுகதையாசிரியர் மட்டுமே என்பது அவரது ‘அக்கினி வளையங்கள்’ வரும் வரையில் நான் கொண்டிருந்த அபிப்பிராயம். அதுவரையில் அவரது கவிதைகளோ, பெண் குதிரை நாவலோ மறுவாசிப்பில் என்னை ஈர்க்கவில்லை. கட்டுரைகளில் அவர் ஆளுமை தனித்து வெளிப்பட்டது.  

என் முன்னோடியாக அவரது நாவல்கள் குறித்தும், சிறுகதைகள் குறித்தும் நான் விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். விரிவான ஆவணப்படமும் இயக்கியுள்ளேன். அதையே நான் அவருக்குச் செய்துள்ள மரியாதை எனக் கருதுகிறேன்.

***

சை. பீர்முகம்மதுவிடம் பிணக்குகள் இருந்தாலும் அது வெறுப்பையோ விரோதத்தையோ கொண்டிருக்கவில்லை. அது கருத்தியல் சார்ந்தது. ஒருவேளை கருத்தை வெளிபடுத்தும் முதிர்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம். ஒருமுறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கேள்விப்பட்டவும் எதையும் யோசிக்காமல் நேராக அவரைக் காணச்சென்றேன்.

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நான் பார்த்த சை. பீர்முகம்மது மிகவும் தளர்ந்திருந்தார். வயோதிகம் எப்போதும் புலி போல பதுங்கி ஒருவரைத் தாவிக் கௌவுகிறது என அவரைக் கண்டவுடன் தோன்றியது. வீட்டில் சோற்றுப் பானை வெடித்தபோது சத்தம் கேட்டு ஓடியவர் வெந்த அரிசியில் கால் வைத்து வழுக்கி விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டிருந்தார். மருத்துவமனை வார்டில் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார். அது சின் பெங் குறித்த ஆங்கில நூல். இராணுவத்தில் பணிபுரிந்த அவருக்கு சின் பெங் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் பிடிப்பு இருந்தது தெரியவந்தபோது ஆச்சரியமாக இருந்தது. எந்தப் பகைமையும் இல்லாமல் பேசினார். உண்மையில் அவரிடம் பகை உணர்ச்சி தங்குவதே இல்லை. கோபத்திற்குப் பின் குழந்தையாகி விடுவார். கொஞ்ச நேரம் சின் பெங் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். எல்லா நிலையிலும் உரையாடுவதிலும் வாசிப்பதிலும் வற்றாத ஆர்வத்துடன் இருந்த அவரை நோகச் செய்தது சங்கடமாக இருந்தது. ஆனால் நான் எக்கருத்தையும் மீட்டுக்கொள்ள விரும்பவில்லை.

குணமான பின் சை. பீருக்கு இணையத்தில் வாசிக்க வேண்டுமென்றும் எழுத வேண்டுமென்றும் ஆர்வம் வந்திருந்தது. அதற்குத் தேவையான சாதனங்களை என்னிடம் கேட்டு வீட்டில் தயார் செய்தார். அப்போதெல்லாம் திறன் கைத்தொலைபேசி அறிமுகமாகியிருக்கவில்லை. அழைப்பின் பேரில் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று அவருக்கான மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொடுத்தேன். தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும் தமிழ் இணைய இதழ்களைத் தேடி வாசிப்பது குறித்தும் ஓரளவு சொல்லிக் கொடுத்தேன். அவர் ஒரு மாணவனைப் போல எலியனை நகர்த்தி இணைய இதழ்களின் ஆச்சரியங்களை உள்வாங்கத் தொடங்கினார்.

சை. பீர்முகம்மதுவிடம் தொடர் தேடல் இருந்தது. யாரிடமும் எதையும் தேடிக் கற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தார். தொடர்ந்து வாசிப்பதை விடாத பழக்கமாகக் கொண்டிருந்தார்.  அவர் வயதை ஒத்த பலர் எழுதுவதில் சலிப்படைந்தபோதும் அவர் எழுத்தியக்கத்தில் தன்னை இணைத்தே வைத்திருந்தார்.

மீண்டும் அவருடன் இணக்கமான போக்கு உருவாகி வளர்ந்தது.

***

வல்லினம் விருது வழங்கப்பட்டபோது

2019இல் சை. பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டபோது நிறைவாக உணர்ந்தேன். மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்காகப் பங்களித்த ஆளுமை கௌரவப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தேன். அந்த விழாவில் அவரது ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியிடப்பட்டதும் முதன்மையான முயற்சி. சை. பீர்முகம்மதுவின் இலக்கியப் பங்களிப்பு என அந்நாவலை தாராளமாகக் கூறலாம்.

வல்லினம் விருதுக்குப்பிறகு சக்கரை வியாதியால் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. மனைவி இழந்து வாடிய அவர் கொரோனாவினால் மகனையும் இழந்தார். அடுக்கடுக்கான இழப்புகள், துயரங்கள். ஆனாலும் சந்திக்கும்போதெல்லாம் இலக்கியம், எழுத்து என்றே அவரது பேச்சு இருந்தது.

அப்படித்தான் ஒருமுறை ‘அக்கினி வளையங்கள்’ நாவலை மீண்டும் தலைநகரில் வெளியிட வேண்டுமென்ற தன் ஆசையைக் கூறினார். அவருக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் தலைமையில் அதனை வெளியிட முடிவு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நான் பேச வேண்டும் என அவர் விரும்பியபோது என்னுடைய மறுப்பைக் கூறினேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்குள் இருந்த மன விலகல் குறித்து தெளிவு படுத்த அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. அதை முறையாக, அதீத உணர்ச்சிகளற்று சொல்வதற்கு என்னிடம் அப்போது போதுமான சொற்கள் இருந்தன.

“ஒரு இலக்கிய மேடையில் யாரும் இடம்பெறலாம். அவர்கள் செய்யும் பணியை வைத்து நான் சார்பெடுக்கவில்லை. தமிழகத்தில் சு. வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார், சல்மா, மனுஷ்ய புத்திரன், கனிமொழி போன்ற இலக்கியவாதிகள் அரசியலில் இயங்கினர்; இயங்குகின்றனர். அவர்களுக்குக் கட்சி அரசியல் ஒரு முகம். நான் ஆசிரியராக இருப்பதும் நீங்கள் குத்தகையாளராகவும் இருந்ததும் ஒரு முகம் போல. எனவே அவர்கள் ஓர் இலக்கிய மேடையில் அங்கம் வகுப்பதில் யாருக்கு என்ன மாற்றுக்கருத்து இருக்க முடியும்? அவர்களை அரசியல்வாதிகள் என யார் வகைப்படுத்த முடியும்? ஆனால் நீங்கள் சொல்பவர்கள் பதவிக்காகவும் ஓட்டுக்காகவும் மொழியையும் இலக்கியத்தையும் கையில் எடுப்பவர்கள். இவர்கள் பேசும் மரபிலக்கியத்தையும் சொல்லடுக்குகளையும் நன்கு பயிற்சி பெற்ற என் மாணவன் கூட பேசுவான். அதற்கு பின்னணியில் தனிந்த சிந்தனை வேண்டாம்; ஒப்புவிக்கும் திறன் போதும். ஆனாலும் இவர்களுக்கும் தங்களின் இலக்கிய வாசிப்பை ஓர் இலக்கிய மேடையில் பகிர முழு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் குறிப்பிடும் ஒரு அரசியல் தலைவர் ஒரு வாசகனமாக மட்டுமே மேடைக்கு வந்து தங்கள் வாசிப்பைப் பகிர்ந்து செல்வார்களா? அந்த எளிமை அவர்களிம் உண்டா? ஒரு நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்க பதவியும் பணமும் மட்டும் போதுமா? எவ்வளவு அரசியல் ஞானம் இருந்தாலும் ஒரு அரசியல் கட்சி மாநாட்டில் எழுத்தாளன் ஒருவன் தலைமை தாங்க முடியுமா என்ன?”

அநேகமாக நான் கடைசியாகச் சை. பீர்முகம்மதுவிடம் அதிக நேரம் பேசியது அன்றுதான். “நீங்கள் ஓர் இலக்கியச் சூழலை இயக்கமாக முன்னெடுத்துச் செல்கிறீர்கள் என்றால் அதற்கு எவ்வகையான பிரபலத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக வேரும் வாழும் போன்ற பெரும் முயற்சியை பொதுமக்களிடம் விரிவாகச் சேர்க்க சினிமா நடிகரை நீங்கள் பயன்படுத்தினால் கூட எனக்குச் சம்மதம்தான். ஓர் அறிவியக்கம் நிகழும்போது அது குறித்து அனைவருமே தங்கள் தரப்பில் இருந்து பேச வேண்டும்தான். ஆனால் அங்கு ஜெயகாந்தன் இருந்தால் அவரே அங்கு முதன்மையானவர் எனும் எண்ணம் இருக்க வேண்டும்.” என முடித்தேன்.

அவருக்கு என்னிடம் மாற்றுக்கருத்து இருந்திருக்கலாம் ஆனால் அதிகம் பேசவில்லை. இந்த உரையாடலில் சை. பீர்முகம்மது அவர்களின் கருத்துகளை அவர் இன்று இல்லாத சூழலில் எழுதுவது அறமல்ல. ஆனால் எல்லா மாற்றுக் கருத்துகளுக்குப் பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. உண்மையில் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு கருத்தை ஒட்டி இருவருமே ஒருவரை ஒருவர் புண்படுத்தாமல் பேசிக்கொள்ள முடிந்தது.

எப்படியும் அவர் நடத்தும் நூல் வெளியீட்டுக்கு நான் வருவேன் எனும் நம்பிக்கையில் இருந்தார். அதை எப்படித் தவிர்ப்பது என நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.

எது குறித்தும் குழப்பம் அடையாத காலம் தன் பணியை இன்று அதிகாலை செய்து முடித்திருந்தது. நான் அவரது புத்தக வெளியீட்டுக்குதான் வரமாட்டேன் எனக்கூறியிருந்தேன், அவர் அதை தன் மரணத்துக்கு எனத் தவறாக நினைத்திருக்கலாம்.  சென்று காண்பதற்குள் பூக்களால் தன்னை மூடிக்கொண்டு இனிய மணத்தை மட்டும் படரவிட்டார்.

சை. பீர்முகம்மது நாவல்கள் – ம.நவீன்

சை.பீர்முகம்மது சிறுகதைகள் – ம.நவீன்

சை.பீர்முகம்மது ஆவணப்படம் – வல்லினம்

(Visited 283 times, 1 visits today)