யாக்கை சிறுகதை – கடிதங்கள் 3

திருவாளர் நவீன் அவர்களுக்கு. போயாக் சிறுகதையின் மூலம் chewjettyஉங்களை அறிந்து உங்களது சிறுகதைகளையும் அறிந்தேன். ‘யாக்கை’ நல்லதொரு சிறுகதை.

ஈத்தனுடைய தந்தையார் ஈத்தனுக்காக தன் யாக்கையை சுறாமீனுக்குத் திண்ணக்கொடுக்கிறார். ஈத்தனுடைய மகளும் ஈத்தனால் தன் உடம்பை மனிதர்களுக்குத் திண்ணக்கொடுக்கிறாள். இப்படி இரு தலைமுறையினரை தனக்காகவும் தன்னாலும் திண்ணக்கொடுக்கவைத்த ஈத்தன் தன் யாக்கையையும் கடலுக்குத் திண்ணக்கொடுக்கிறார்.

ஈத்தனுக்கு இறுதி நிமிடம்வரை உடலின் மேல் பற்று இருக்கிறது. அதை பற்று என்று மட்டும் நான் கணிக்கவில்லை. மகளுக்காகவும் அவள் எதிர்க்காலத்திற்காகவும் தனது சேவை தேவை என கருதும் சாதாரண தந்தை அவர். அதற்காகவே அவர் இறுதி நிமிடம்வரை போராடுகிறார். ஆனால் அது முடியாமல் ஆகிவிட்டது என்பதை அறிந்தவுடன் இனி தனது உடலுக்கு அவசியம் இல்லை என சாகிறார்.

மூன்று தலைமுறைகள் (ஈத்தன் அப்பா, ஈத்தன், கெத்தரினா) உடலை மற்றவர் நலம் வேண்டி திண்ணக்கொடுப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞனுக்கு உடல் மேல் இருந்த எண்ணங்கள் மாறுகிறது.

திரு நவீன் அவர்களே, என் பார்வை சரிதானா? தங்களுக்கு வந்திருந்த வேறு கடிதங்களில் மகள் தந்தையால் கற்பழிக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. என்னால் அப்படி வாசிக்க முடியவில்லை. நீங்கள் தந்தை மகள் உறவை அன்பினால் காட்டியுள்ளீர்கள். இதை கடிதமாக எண்ணாமல் விளக்கம் தர இயலுமா?

ராம்

வணக்கம் ராம். என் கணிப்பு சரியென்றால் நீங்கள் போயாக் சிறுகதைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் கடிதம் எழுதினீர்கள். சரியா?

நண்பரே இலக்கிய வாசிப்பில் சரியான பார்வை தவறான பார்வை என இல்லை. வாசகப்பார்வை என்பது அவரவர் ஒரு சிறுகதையில் கண்டடையும் வெவ்வேறு கோணங்களே. ஆனால் கதை எழுதியவனாக ஒரு வாசகர் எனது மன ஓட்டத்தை வந்தடையும்போது மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வகையில் உங்கள் பார்வை. பெரும்பாலும் கதையின் மையத்தை சரியாகவே உள்வாங்கியுள்ளீர்கள்.

நன்றி
நவீன்

(Visited 133 times, 1 visits today)