வாசகனுக்கு குறிப்பாக பாமரனுக்கு நீங்கள் கூறும் படிமம், குறியீடு பற்றிய பிரக்ஞையே இல்லாதபோது அவர்கள் தங்கள் சிந்தனைக்குட்பட்டுதானே ஒரு கவிதையை வாசிப்பார்கள். அப்படியென்றால் உங்கள் கவிதை பாரமனை முழுமையாகச் சென்றடையாமல் பாதியிலேயே தேங்கி நிற்குமே?
விஜயா இலக்கியம் ஒரு கலை வடிவம். ஓவியம், இசை, சிற்பம், நடனம் போல இதுவும் ஒரு கலை வடிவம். மேற்சொன்ன கலை வடிவங்களுக்கு வெவ்வேறான மூலப்பொருள்கள் இருக்க இலக்கியத்துக்கு மொழியே மூலப்பொருள். அந்த மூலப்பொருள்தான் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் என பயன்பாட்டில் உள்ளன. இந்த மூலப்பொருள்தான் சக மனிதனுடனான உரையாடலுக்கு ஊடகமாக உள்ளது. எளிய மனிதனிலிருந்து அசாதாரண ஆளுமை கொண்ட மனிதர்கள் வரை மொழி பொது பயன்பாட்டில் உள்ளது.
எனவே எல்லோரும் அறிந்த மொழியில் ஒரு கலை உருவாக, அதை வாசிப்பு அறிமுகம் இல்லாத ஒருவன் அணுகும் போது பதற்றம் அடைகிறான். தான் வாழ்நாள் முழுக்கவும் பயன்படுத்திய ஒரு மொழி தனக்கு புரியாமல் இருப்பதில் கோபம் அடைகிறான். இந்தக் கோபத்தை நீங்கள் குறிப்பிடும் பாமரர்கள் அல்ல… பல்கலைக்கழக பேராசிரியர்களிடமே கண்டுள்ளேன் . இவர்கள் ஒரு நவீன ஓவியம் புரியாதது பற்றியோ, கர்நாடக இசையை ரசிக்க முடியாதது பற்றியோ, நவீன சிற்பங்கள் வடிவம் சிதைந்திருப்பதன் மர்மம் பற்றியோ, பரத அசைவுகளில் இருக்கும் புரியாத முத்திரைகள் பற்றியோ எவ்வித அசூயை உணர்வையும் அடைவதில்லை. காரணம் அவர்கள் அக்கலை குறித்த நுட்பங்கள் தங்களுக்குத் தெரியாது என அறிவர். அதை அறிய பயிற்சி தேவை என உணர்வர். ஆனால் இலக்கியம் என வந்துவிட்டால் மட்டும் இந்த சிந்தனை அவர்கள் யாருக்கும் எழுவதே இல்லை. காரணம் இலக்கியம் எனும் கலை மொழியோடு தொடர்பு பட்டிருக்கிறது.
எளிய மக்களுக்குப் புரியாத மேற்சொன்ன பிற கலைகள் குறித்து நாம் கவலை படுவதில்லை. வருத்தம் தெரிவிப்பதில்லை. ஆனால் இலக்கியம் எனும் கலை வடிவத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறோம். எம்.ஏ.நுஃமான் 1996 ல் எழுதிய ஒரு கட்டுரையில் தான் மேற்கொண்ட ஒரு ஆய்வைக் குறிப்பிட்டிருப்பார். மஹாகவியின் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி ‘ என்ற கவிதையை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து அதன் பொருளைக் கேட்டிருப்பார். மாணவர்கள் கூறிய பொருள்களை அந்தக் கட்டுரையில் கொடுத்திருப்பார். தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயிலும் அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்த வெவ்வேறு பொருளை கொடுத்திருப்பர். இத்தனைக்கும் எளிதாக அர்த்தம் கொள்ளக்கூடிய கவிதை அது.
விஜயா, உண்மையில் கவிதை சிலருக்குதான் புரியும்; சிலருக்குப் புரியாது என்பது முற்றிலும் தவறு . இன்னாருக்குப் புரியும் படி நான் எழுதப்போகிறேன் என்பது அபத்தம். பத்திரிகையில் தலைப்புச் செய்தியைக் கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் சூழலில், கவிதை எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்றோ பாமரனுக்கும் புரிய வேண்டும் என்றோ திட்டமிடுவதெல்லாம் நடவாத காரியம். நான் இங்கு கவிதை எளிய மனிதர்களுக்குப் புரியக்கூடாது என சொல்லவரவில்லை. ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பு சகல நிலைகளிலும் உள்ள மக்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சிதானே. அதைவிட அவனுக்கு வேறென்ன ஆனந்தம்.
ஆனால் அது வாசிப்புப் பயிற்சி மூலமே சாத்தியம் என்கிறேன். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் குறிப்பிடும் ‘பாமரர்களுக்கும்’ கவிதை சென்று சேறும். அதை அறிய படிமம், குறியீடெல்லாம் முக்கியமே இல்லை. கவிதையை உள்வாங்கும் மனம் மட்டுமே தேவை.