(அண்மையில் பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ளத் தமிழ்ப்பள்ளிகள் மத்தியில் கவிதை தொடர்பான ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். கவிதை குறித்து பேச என்னை அழைத்திருந்தனர். அங்கு நான் பேசிய உரை இது. கொஞ்சம் செரிவு செய்து பதிவிடுகிறேன்.)
நண்பர்களே,
நவீன கவிதை குறித்து பேசுவதற்கு முன்பாக நான் உங்களிடம் இருக்கும் சில முன்முடிவுகளை களைத்துப்போட விரும்புகிறேன். அதன் மூலமே நீங்கள் என்னையும் கவிதை குறித்த என் கருத்துகளையும் எதிர்க்கொள்ள தயாராக முடியும் என நம்புகிறேன். காரணம் நாம் அனைவருமே நமது கடந்த காலங்களில் ‘கவிதை’ எனும் கலை வடிவம் குறித்து ஏதோ ஒரு வகையில் அறிந்து வைத்திருப்போம். நமது கல்லூரி காலங்களில் கவிதை நமக்கு அறிமுகமானவிதம் மிக அபத்தமானது.







