‘வண்டி’ சிறுகதையை வாசித்தேன். அருமை! ஈப்போ வாசகி ராஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அத்தனை கருத்துக்கும் உணர்வுக்கும் நானும் உடன்படுகிறேன்! நிறைய இடங்களில்,’வார்த்தைக்குள் வாக்கியம்’ வைத்துள்ளீர்கள்! வாசகனின் ஊகத்துக்கும் சிந்தனைக்கும் – சொல்லாமலே உணர்ந்து கொள்வதற்கும் நிறையவே இடம் கொடுத்துள்ளீர்கள்.
‘சொல்லப்பட்ட வார்த்தைகளைவிட சொல்லாமல்விட்ட வார்த்தைகளுக்கே வலிமை அதிகம்’ என எங்கேயோ படித்ததாக ஞாபகம். சொல்லாமலேயே நிறைய சொல்லி இருந்த இடங்கள் ஏராளம். அந்த இடைவெளியும் வாசகனுடைய சுய சிந்தனைக்கும் முடிவுக்கும் இடங்கொடுக்கும் கதைகள்தானே சிறந்த கதைகளாக அமையும்.








