தைப்பிங் சந்திப்பின் வழி வாழ்வை இன்னும் கற்றுக்கொண்டேன் என்றுதான் கூற வேண்டும். வல்லினம் குழுவுக்குள் சின்ன சின்ன பிளவுகள் ஏற்பட்டதும் அங்குதான்.
கடைசிநாள் இரவில் அனைவரும், ஒரு சீனர் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்வில் நான் அழைக்காமலேயே வந்திருந்த நண்பனின் நண்பன் ஏற்பாடுகளில் உள்ள குறைகள் குறித்து பேசத்தொடங்கினார். அதில் ஒரு நையாண்டி இருந்தது. உண்மையில் தங்கியிருந்த பங்களாவில் சில குறைகள் இருக்கவே செய்தது. குளிக்க நீர் வர தாமதமானது. முதல் சந்திப்பு என்பதால் கேளிக்கைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிவிட்டிருந்தோம். யாரையும் கட்டுப்படுத்தும் திறனும் என்னிடம் இல்லாமல் இருந்தது. மகிழ்ச்சியான ஒரு சூழலில் யாரையும் இலக்கிய உரையாடல் என்ற பெயரில் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.