2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
ஒரு வெற்றி அடைந்தபின் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமே மறுநாள்களில் மிஞ்சியது. தொலைக்காட்சி, நாளிதழ் என பலவற்றிலும் என் படங்கள் தொடர்ந்து வந்தாலும் நான் எழுதிய நாவல் குறித்து கேட்டபவர்களைக் காணக்கிடைக்கவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் யாருக்குமே நாவல் குறித்தோ அதில் பரிசு பெறும் எழுத்தாளன் எனும் வகையரா அவர்களுடந்தான் இந்த பூமியில் வாழ்வது குறித்தோ கொஞ்சமும் கேள்விகள் இல்லை. பள்ளியில் நான் மட்டுமே ‘ஈ…’ என பார்ப்பவர்களிடமெல்லாம் பல்லைக்காட்டிக் கொண்டிருந்தேன். எனது வெற்றி குறித்து அறியாதவர்கள்மேல் கடும் கோபம் வந்தது. பின்னர், ‘அவர்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும்’ என்ற எனக்குள் எழுந்த கேள்வியே சோர்வடையவும் வைத்தது.
