2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
மீண்டும் 2005லேயே பேரவைக் கதை போட்டியில் பொதுப்பிரிவில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருந்தது. அந்த ஆண்டின் இரண்டாவது வெற்றி. நான் முதன்முதலாக அந்த ஆண்டுதான் பேரவை கதைப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். உடன் சிவம் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவருடன்தான் மோட்டாரின் வீடு திரும்பினேன். இன்னும் நாட்டில் என்னென்ன போட்டிகள் நடக்கிறதோ அதிலெல்லாம் பங்குபெற்று வெற்றி வாகைச்சூடுவதென்ற உற்சாகம் இருவரிடத்திலும் இருந்தது. எப்படியாவது எங்கள் அடையாளத்தை மலேசிய இலக்கியத்தில் ஆழப் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாவது வெற்றியில் வேரூன்றியது.

