
அதிகாலை ஆதவன் ஒளிப்பட்டு சட்டென மறைந்திடும் வெண்பனிபோல் சில நாவல்கள் வாசித்த மாத்திரத்தில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தா வண்ணம் வாசிப்பவர் அகம் விட்டு மறைந்து விடுவது உண்டு. சிற்சில படைப்புகள் மட்டுமே அகத்தினை அணுகி காலவோட்டத்தின் மாறுதலால் அல்லது கால மாற்றத்தால் நினைவடுக்குகளில் புதைந்திருக்கும் / மற(றை)க்கடிக்கப்பட்டிருக்கும் கடந்தகால நினைவலைகளினை அகக்கண் முன்னே காட்சிபடுத்துவது மட்டுமல்லாது நிசப்தமானதொரு தாக்கத்திற்குள் அமிழ்த்தி செல்லும். அத்தகைய தாக்கமானது மீட்டெடுக்க இயலாத கால பெருவெளி சமுத்திரத்தில் வெறும் ஞாபக சின்னங்களாக மட்டுமே நிலைத்திருக்கும். ஆழ்கடலின் உள்ளே அமிழ்ந்திருந்த நீர்குமிழி மேலெழும்புவது போல் பேய்ச்சி நாவல் நினைவடுக்குகளிலிருந்து மறக்கடிக்கப்பட்டிருந்த எனது கம்பத்து வாழ்வனுபவத்தினை தூசு தட்டி எழுப்பியது என்றே கூறலாம்.








