
ஒவ்வொரு மனிதனுக்குள் நிகழும் மனப்பிறழ்வுகளைக் காட்டியது ‘கீலாக்காரன்’ சிறுகதை. கதையில் சீத்தாராமன் அவன் தோற்றத்தினாலும் பேச்சினாலும் ஊரார் மத்தியில் கீலாக்காரன் என்றழைக்கப்படுகிறான். ஆனால், கதையை வாசித்த முடித்த பிறகு ஒருவரின் தோற்றமும் பேச்சும் மட்டும்தான் ஒருவனை மனப்பிறழ்ந்தவன் என்று கூறுவதற்கு வழிவகுக்கின்றதா என்ற கேள்வியே எழுகின்றது. இக்கதையில் நிராகரிக்கப்படும் கேலிக்குள்ளாக்கப்படும் உயிர்களின் பிரதிபலிப்பாகச் சீத்தாராமனும், தமது பலத்தைப் பலவீனமற்றவர்களிடம் காட்டி மகிழ்ச்சியடைபவர்களின் பிம்பமாக வேலுவும், தமது சுயநலமும் இயலாமையும் ஒன்றுசேர ஏதும் செய்ய முடியாமல் குற்றவுணர்வுடன் சிக்கித் தவிக்கும் சக மனிதனின் பிரதிபலிப்பாகக் கோபியும் திகழ்கின்றனர்.