இதற்கிடையில் நயனத்திற்கு நான் அனுப்பியிருந்த கவிதையும் பிரசுரம் கண்டிருந்தது. கோ.புண்ணியவானின் சொல்லுக்குக் கிடைத்த மரியாதை அது. நயனத்திற்குச் சென்று அதன் ஆசிரியரைக் காண இந்த ஒரு கவிதை போதுமென கருதி ஓவியர் ராஜாவை அழைத்தேன். ‘நயனம்’ என்று சொன்னவுடன் ஓவியர் ராஜா சட்டென மறுத்தார். நயனம் ஆசிரியர் இராஜகுமாரனின் இலக்கிய ஆளுமையைப் பற்றி சிலாகித்துக் கூறியவர் ,அவர் தனிமையில் இருக்க விரும்புபவர் என்றும் புதியவர்களைச் சந்திக்க மாட்டார் என்றும் கூறினார். இராஜகுமாரன்தான் ‘புதுநிலவு’ என அறிந்த போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. Continue reading
திறந்தே கிடக்கும் டைரி…41
ஒரு பள்ளி விடுமுறையில் கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்வில் முதல் நீண்ட பயணம் அது. கோலாலம்பூரின் மேல் பெரும்பலோர் போல் எனக்கும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கு கட்டடங்கள் பரபரப்பான வாழ்வு என எல்லாமே லுனாஸில் ஒரு கம்பத்தில் இருந்த எனக்கு ஒரு அந்நிய நாட்டின் கவர்ச்சியைக் கொடுத்தப்படி இருக்கும். இவற்றையெல்லாம் மீறி நான் கோலாலம்பூருக்குச் செல்ல வேறொரு விஷயமும் காரணமாக இருந்தது. அது பத்திரிக்கை அலுவலகம்.
திறந்தே கிடக்கும் டைரி…40
ஓரளவு இதழ்களின் செயல்பாடு புரிந்தபோது கவிதை எழுதுவதில் மிகுந்த தீவிரமடையத் தொடங்கினேன். ஏறக்குறைய எல்லா பத்திரிகைகளில் படைப்புகள் வந்துவிட்டாலும் ‘நயனம்’ இதழில் எனது கவிதைகள் வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தபடியே இருந்தது.
எல்லா பத்திரிகைகள் படைப்புகளைப் பிரசுரித்தாலும் ‘நயனம்’ மட்டுமே கவிதையை மிகச் சிறப்பாகப் பிரசுரித்து வந்தது. கவிதைக்கு மிகப் பொருத்தமான படங்களோடு முழுப்பக்கத்தில் வெளிவரும் நயனம் இளம் வாசகர்களிடையே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தது. அக்காலக் கட்டத்தில் ஜாசின் தேவராஜன், பெ.ச.சூரியமூர்த்தி, பா.ராமு போன்றோரின் கவிதைகள் அதிகம் இடம்பெற்று வந்தன. பல முறை அனுப்பியும் கவிதை வெளிவராமல் இருந்த நான் கோ.புண்ணியவானின் உதவியை நாடினேன்.
திறந்தே கிடக்கும் டைரி…39
பாடாங் செராயில் உள்ள விக்டோரியா தோட்டத்தில் தலைமையாசிரியராக இருந்தார் கோ.புண்ணியவான். சிறுகதைகளைவிட அவரிடம் கவிதைகள் குறித்து அதிகம் உரையாடியதுண்டு. அவர் அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகளை அதிகம் நேசிப்பவராக இருந்தார். வைரமுத்துவின் மேல் எனக்கு இருந்த பிடிப்பை மெல்ல முதலில் அசைத்தவர் புண்ணியவான். வைரமுத்துவின் போலியான உணர்ச்சிகளையும் கவிதைகளையும் அவர் கூறும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். என் ஆதர்ச கவிஞரைத் தர்காக்கத் தெரியாமல் விழிப்பேன். அவரின் ‘நிஜம்’ தொகுதியில் இருந்த சிறுகதைகள் ஆரம்ப வாசகனான எனக்கு சுவாரசியமாக இருந்தது. Continue reading
திறந்தே கிடக்கும் டைரி…38
இளஞ்செல்வன் இல்லாத வெறுமையை போக போகத்தான் என்னால் உணர முடிந்தது. சிறுகதை பற்றியோ கவிதை பற்றியோ இலக்கியம் பற்றியோ பேச ஆளில்லாமல் தவித்தேன். சுற்றியிருந்த அனைவருமே இலக்கிய வாசம் இல்லாமல்தான் இருந்தனர். அம்மா தொடர்கதைகள் பற்றி பேச மட்டுமே ஆர்வமாக இருந்தார்.அதுவரையில் என்னுடன் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த குமரன் அண்ணன் கல்லூரி படிப்பில் தீவிரமாக இருந்தார்.நான் உரையாட மனிதர்களைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் போது கோ.புண்ணியவானின் நினைவு வந்தது. Continue reading
திறந்தே கிடக்கும் டைரி – 37
இளஞ்செல்வனின் மரணம் குறித்து பேசுவது பெரும் தடையாகவே இன்னும் மனதில் இருக்கிறது.ஒவ்வொரு முறை அவர் பற்றி பேசும் பொழுதும் அவரது மரணத்தில் வந்து முடியும் உரையாடல்கள் அமைதியிழக்க வைக்கிறது. அவரது இலக்கியம் குறித்து விமர்சிக்கவோ இன்றைய வாசிப்பில் தரம் பார்க்கவோ வாசகர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.ஆனால் நான் வெறும் இலக்கியவாதியாக மட்டும் இளஞ்செல்வனைப் பார்க்கவில்லை.கையில் ஒரு வெள்ளிக்காப்போடும் , கழுத்தில் அரை இஞ்ச் தடிப்புக்கு ஒரு வெள்ளிச்சங்கிலியும் எந்நேரமும் கறுப்பு பனியனோடும் கண்ணில் திமிர் பிடித்து சுற்றிக்கொண்டிருந்த என்னை இளஞ்செல்வனைப் போல் அணுகியவர் அப்போது யாரும் இல்லை.எனக்குள் இலக்கியம் உள்ளது என காட்டியவர் இளஞ்செல்வன்.அதையும் மீறி நவீன இலக்கியத்தின் நகர்ச்சிக்கு அவர் பங்களிப்பு கணிசமானது என்பதை யாராளும் மறுக்க இயலாது.
திறந்தே கிடக்கும் டைரி … 36
புத்தக வெளியீடு முடிந்ததும் இளஞ்செல்வனிடம் எனது புத்தகத்தையும் கையெழுத்து வாங்க நீட்டினேன். புன்னகைத்தவர் கையெழுத்திட்டு என் கரங்களைப் பற்றினார். ‘உன்ன நான் சிலருக்கு அறிமுகம் செஞ்சி வைக்கிறேன்’ என்றார். பற்றிய கையை விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கினார். எனக்குப் பதற்றமாகவே இருந்தது. நேராக என்னை அக்கினியிடம் அழைத்துச் சென்றார். Continue reading
திறந்தே கிடக்கும் டைரி … 35
மீண்டும் நான் எம்.ஏ.இளஞ்செல்வனைச் சந்திப்பேன் என நினைக்கவில்லை. உறவினர் ஒருவர் வெல்லஸிலி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் இருந்த மாரியம்மன் ஆலயத்தில் ஒரு மதியம் கஞ்சி ஊற்றினார். கோயில் கஞ்சி என்பது அப்போது மிகப் பிரயசித்தம்.நான் அதே தமிழ்ப்பள்ளியில் படிக்கும் போது கூட மாதத்திற்கு ஒருவர் கோயிலில் கஞ்சிக்காய்ச்சி ஊற்றுவார்கள். அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்.அது போன்ற நாட்களில் கஞ்சி குடிப்பதற்கென்றே பள்ளியைச் சீக்கிரம் முடித்துவிடுவார்கள். அதுபோன்ற ஒரு பள்ளி நாளில்தான் எனது உறவினரும் கஞ்சி ஊற்றிக்கொண்டிருந்தார். எதேசையாய் அப்பக்கம் போன என்னைப் பார்த்த இளஞ்செல்வன் கையசைத்து அழைத்தார். Continue reading
திறந்தே கிடக்கும் டைரி … 34
காதலின் ஏக்கத்தையும் காதல் தோல்வியின் துக்கத்தையும் சுமந்திருக்கும் வரிகள் கொண்ட இசை என்னேரமும் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. காதல் தோல்வியைச் சொல்லும் பாடல்வரிகளை முணுமுணுத்தப்படி இருந்தேன். பள்ளியின் மூன்றாவது மாடியின் மூலையிலும் திடலின் ஓரத்தின் மர நாற்காலியிலும் தனிமையில் அமர்ந்திருப்பதைக் கடமையாக்கிக் கொண்டேன். இதெல்லாம் காதல் தோல்வி அடைந்தவனின் அடையாளமாக நான் கண்டடைந்திருந்த செயல்கள். சில நண்பர்களுக்கு இதனால் அவள் மீது கோபம் வந்தது போலவே சில பேருக்குக் காதலும் வந்திருந்தது. கரிய உருவமும் திக்குவாயும் கொண்ட என்னை அவள் காதலிக்கும் போது தன்னை ஏன் காதலிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பல இளைஞர்களுக்கு வந்திருந்தது. Continue reading
திறந்தே கிடக்கும் டைரி … 33
பெண்களுடன் இருப்பதும், அவர்களின் உலகத்திற்குள் சஞ்சரிப்பதும் இன்பம் தரும் ஒன்றாக இருந்தது. பெண்கள் சிந்திப்பது… முடிவுகள் செய்வது… கோபம் கொள்வது என அனைத்துமே ஆண்களின் உலகத்தோடு சற்றும் சம்பந்தம் இல்லாததாகப் பட்டது. ஆயினும் அது பாதுகாப்பானது. அவர்கள் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருந்தன. நான் கவனிக்காத, கவனிக்கத் தவறிய பல விடயங்கள் அவர்களுக்கு முக்கியச் செய்திகளாக இருந்தன. உண்மையில் பெண்கள் பேசுவார்கள் என நான் நம்பிய எதையுமே அவர்கள் பேசாதவர்களாகவும் அவர்களுக்கான பேச்சு சிறு சிறு கிளைகள் விட்டு பிரிந்து கூர்மை கொள்வதாகவும் இருந்தன. அந்தப் பேச்சுகள் தரும் இன்பத்தை விட்டு நகர முடியாமல் அவர்களுடனேயே சில காலம் திரிந்தேன். அவளின் தோழிகள் எல்லாம் எனக்கும் தோழிகளாக மாறினர்.
கவிதைக்குத் தேவையான துல்லிய உணர்வலைகளை எந்த நூலும் மனிதனுக்குத் தருவதில்லை. மாறாக அவை நினைவின் மறைவிடத்தில் பதிந்துள்ள ஏதோ ஒரு நுண்ணிய உணர்வின் அதிர்வை அவ்வப்போது மீட்டுக்கொண்டுவர உதவுகிறது. இது போன்ற நுண்ணிய உணர்வுகள் பெண்களுடன் பழகும் போதுதான் எனக்குள் உசுப்பிவிடப்பட்டது. மிகக் குறைந்த பழக்கமுள்ள ஒரு தோழியால் கூட, காலத்திற்கும் அழிக்க இயலாத சில பதியன்களை மனதில் ஏற்ற முடிந்திருந்தது. பழகாதவரை பெண்கள் என்னுடன் பேச விரும்புவார்கள் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
பெண்களுடன் பேசத் தொடங்கிய போது எனக்குத் திக்குவாய் குறைந்தது. நான் தூய்மையாக உடுத்த ஆரம்பித்தேன். கூடுதலாக எனக்கு ஏதேனும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது. அதிகம் ஜோக் புத்தகமெல்லாம் படித்து அவர்களை அடிக்கடி சிரிக்க வைத்தபடி இருப்பேன். அந்த நகைச்சுவை துணுக்குகளை பேச்சின் இடையில் எப்படி நுழைக்கலாம் என காத்திருந்து, சரியான தருணத்தில் ‘இப்படிதான் ஒரு நாள்…’ ஆரம்பித்துவிடுவேன். சில நாட்களிலேயே ஏராளமான பெண்கள் எனக்குத் தோழிகளாயினர். அத்தனை நாள் நான் எழுதிய கவிதை அடங்கிய நோட்டு புத்தகம் மாணவிகளின் மத்தியில் பிரபலமானது. ‘ஒரு கவிதை சொல்லேன்…’ என ஒரு நாளைக்கு ஒரு தோழியாவது கேட்கும் நிலை வந்ததும் மீண்டும் கவிதை எனக்குள் சுரக்கத்தொடங்கியது.
அவளுக்கு இதெல்லாம் அதிகம் பிடிக்காமல் இருந்தது. என் கவனம் அவள் மீது இல்லை எனும் குற்றச்சாட்டுகள் வெவ்வேறு தொனியில் அவளிடமிருந்து வரத்தொடங்கின. நான் எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத ஒரு பரந்த வெளியில் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தேன். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாமல் இருப்பதின் சுதந்திரம் என்னை முழுதுமாகப் பற்றிக் கொண்டிருந்தது. ஒரு சுபயோக சுப தினத்தில் என் காதல் தோல்வியில் முடிந்தது.
இனி… ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சாப்பிட்டுவிட்டாயா எனக் கேட்கத் தேவையில்லை, அவள் விருப்பப்படுவதை வாங்கித்தரத் தேவையில்லை, ‘தெம்மே’ என உட்கார்ந்துகொண்டு அவள் பேசுவதைக் செவிமடுக்கத் தேவையில்லை, பள்ளி முடிந்த பின் அவள் சைக்கிள் வேகத்துக்கு என் மோட்டார்வண்டியையும் உருட்டிச்சொல்லத் தேவையில்லை, எந்தக் குற்றத்துக்கும் அவளிடம் பாவமன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. தேவையே இல்லை.
ஆனாலும் நான் ஒரு நாடகத்திற்குத் தயாரானேன். சோர்ந்த முகத்தோடு உடல் பொருள் ஆவி இழந்தவனாகத் சுற்றிவரத் தயாரானேன். சுற்றியிருப்போரின் கழிவிரக்கம் எனக்கு அப்போது தேவைப்பட்டது. அது ஆணவத்தின் வேறொரு பரிணாமம்.
-தொடரும்