
நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன்.














